Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Diary’ Category

Rajaji’s predictions on Independent Indian Politics & Indo-Pak relations: Dr. HV Hande

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

நினைவலைகள்: அன்று சொன்னது… இன்று நடக்கிறது!

டாக்டர் எச்.வி. ஹண்டே

வரலாற்று நூல் ஆசிரியர்களும், அரசியல் மேதைகளும், பல அரசியல்வாதிகளும், ராஜாஜி பற்றி கூறுகின்ற ஒரு கருத்து இது:

“”இந்திய சுதந்திரத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக (1942 – ல்), நாட்டுப் பிரிவினை குறித்த ராஜாஜியின் கொள்கைத் திட்டம் (Rajaji Formula) ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாவது உலக யுத்தத்தில், தோல்வி பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, மகாத்மா காந்திக்கு அன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கும். ஜின்னாவுக்கு அவர்களுக்கு அரசியலில் பிடியே கிடைத்திருக்காது. உக்ரேனும், ரஷ்யாவும், பிரிந்த பிறகும் நட்புமிக்க அண்டைநாடுகளாக வளர்ந்திருக்கின்றன. அது மாதிரி இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த பிறகும் நட்புடன் இருந்திருக்கும். இந்திய நாடு இன்னும் வலிமையுள்ள நாடாக ஆகியிருக்கும். பல இரத்த ஆறுகள் ஓடிய நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.”

இந்த ஒருமித்த கருத்தைப் பலர் தெரிவிக்கிறார்கள். கடைசியாக ராஜாஜியின் அதே கொள்கைத் திட்டம்தான், மெüண்ட்பேட்டன் திட்டம் என்ற பெயரில், 1947 ஜூன் மாதத்தில் அனைவராலும் ஏற்றுக் கொண்டு, இந்தியா இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.

இதே கருத்தினை ஸ்ரீபிரகாசாவும் கூறுகிறார். ஸ்ரீபிரகாசா சென்னை மாகாணத்தின் கவர்னராக 1952 – 54-ல் இருந்தவர். ராஜாஜி மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டம் அப்போது. அதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜாஜியின் 89 வது பிறந்த நாளில், அவரைப் பற்றி ஸ்ரீபிரகாசா இவ்வாறு கூறினார்:

“”ராஜாஜி தொலை நோக்கு படைத்தவர். எந்தப் பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டு கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக் கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது. ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்த வேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்க முடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானைப் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழி வகுத்தோம்.”

இதே போல பொருளாதார வல்லுநர்கள், ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச் சந்தைப் பொருளாதாரத்தையும் (Market Economy) தனியார்மயமாக்குதலையும் 35 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

1992 இல் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறு வழியின்றி நாட்டுப் பொருளாதாரம் ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பி விடப்பட்டது.

35 ஆண்டுகள் முன்னதாக 1957 – ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பர்மிட் – லைசென்ஸ் – கோட்டா ராஜை ஒழித்துக் கட்டவேண்டுமென்றும் அறைகூவல் விட்டார்! யாரும் கேட்கவில்லை.

அப்போதே ராஜாஜியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைய இந்தியா வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

தென்கொரியாவை விட , மலேசியாவை விட, நம்முடைய நாடு பொருளாதாரரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும் என்று வேதனை அடைகிறார்கள் பலர்.

ராஜாஜியின் பல்வேறு உன்னதமான கருத்துக்களும் தீர்வுகளும் அவரது காலத்து மக்களில் பலரால் புறக்கணிக்கப்பட்டன. அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. ஆனால் பிற்கால நிகழ்ச்சிகள் ராஜாஜியின் கருத்துக்களின் உயர்வை உறுதி செய்யும் வகையிலேதான் அமைந்தன.

எடுத்துக்காட்டாக, ராஜாஜி தன்னுடைய சிறைவாசத்தின் போது 1921 ஆம் ஆண்டில் எழுதிய நாட்குறிப்பிலிருந்து , ஒரு பகுதியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

“”நாம் ஒருவிஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்துவிட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்டகாலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டி ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் நமது வாழ்க்கையை நரகமாக்கும்.

நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகெüரவம், அடிமைத்தனம் ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றுவிட்டது என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும்.

அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு இவற்றைக் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக் கூடிய கல்வி ஒன்றுதான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால்தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிடில் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும் அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஒவ்வொருவரும் நேர்மையானவராகவும், கடவுளுக்குப் பயப்படுகிறவராகவும், மற்றவரிடம் அன்பு காட்டுவதில் கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவப்பூர்வமாக அறிந்தவராகவும் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்.

ஆனால் ஒன்று. இந்த இலட்சியத்தை முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வருவதானால், அதற்கு, வேறெந்த இடத்தையும் விட, இந்தியாவைத்தான் நம்ப வேண்டும்.”

நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுத முடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நாட்டு மக்களின் மனப்பான்மை, செயல்திறன் மற்றும் பலஹீனங்களையும் அவர் எவ்வளவு துல்லியமாகப் புரிந்து கொண்டிருந்தார் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

எது எப்படியிருப்பினும், நம்நாட்டு மக்களிடம் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை இறுதிவரி தெளிவாக்குகிறது. அவரது அச்சங்கள் முழுதும் உண்மை ஆகிவிட்ட நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால் இறுதிவரிகளில் அவர் வெளியிட்டிருக்கும் நம்பிக்கையை உண்மையாக்குவது இக்காலத்து இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, எதிர்காலத் தொலை நோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தை முழுவதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார்.

எழுபத்தைந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதராக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு. அது நாட்டு மக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும் கூட.

“வருங்கால இந்தியா வளமான இந்தியாவாக வளர வேண்டுமென்றால், மக்கள் மனதில் பதிய வேண்டிய மாமனிதரின் வரலாறாக ராஜாஜியின் வரலாறு இருக்கிறது’

Posted in Anjali, Bribery, Bribes, Cong, Congress, Congress Party, Corruption, Diary, Forecasting, forecasts, Freedom, Gandhi, Hande, Handey, History, HV Hande, Independence, Independent, India, Indo-Pak, Jinna, Jinnah, kickbacks, Memoirs, MK, Notes, PAK, Pakistan, Politics, Predictions, Rajagopalachari, Rajagopalachariaar, Rajagopalachariar, Rajagopalachariyar, Rajaji, Relations, SAARC, Vision, Voices | Leave a Comment »

S Gopalakrishnan – Banking services in Rural Areas

Posted by Snapjudge மேல் ஜூலை 23, 2007

கிராமங்களில் வங்கிச் சேவை

எஸ். கோபாலகிருஷ்ணன்

பாரத ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோராட் அண்மையில் தெரிவித்துள்ள தகவல் ஒன்று கவனிக்கத்தக்கது. இந்தியாவில் இப்போது மொபைல் தொலைபேசி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 30 லட்சம். அதேசமயம், அனைத்து வங்கிகளிலிருந்தும் கடன் வசதி பெறுபவர்களின் எண்ணிக்கை மொபைல் தொலைபேசி வைத்திருப்பவர்களைவிட குறைவு என்பதே அது.

இதை சற்று கூர்ந்து கவனிப்போம்: நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் வெறும் 9 கோடி பேருக்குத்தான் வங்கிக் கடன் கிடைக்கிறது. இதில் பெரும் தொழில், சிறு தொழில் மற்றும் விவசாயக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என எல்லா வகை வங்கிக் கடன்களும் அடங்கும்.

மேலும், 2006ஆம் ஆண்டில் வங்கிகளின் கடன் வசதி பெற்றவர்களில் 93 சதவிகிதத்தினர் தலா ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையே கடனாகப் பெற்றுள்ளனர். இது மொத்த வங்கிக் கடன் தொகையில் 18 சதவிகிதமே.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் வசதி ரத்தநாளம் போன்றது என்பார்கள். அந்த வகையில் பெரும் நகரங்கள், சிற்றூர்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களுக்கு பரவலாக இந்தக் கடனுதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். ஒட்டுமொத்த வங்கிக் கடன் தொகையில் 56 சதவிகிதம் தொகையை மும்பை, தில்லி, சென்னை, கோல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்கள் பெற்று விடுகின்றன. மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வங்கிகள் வழங்கிய கடனுதவி 10.4 சதவிகிதத்திலிருந்து 8.3 சதவிகிதமாக வீழ்ச்சி அடைந்துவிட்டது என்பதுதான்.

இந்தச் சரிவுக்கு என்ன காரணம் என்றால், கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2001 டிசம்பரில் 32,496 வங்கிக் கிளைகள் செயல்பட்டன. ஆனால், 2006 டிசம்பரில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 30,586 ஆக குறைந்துவிட்டன. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் 1910 கிளைகள் மூடப்பட்டுள்ளன. பாரத ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தகவல் அறிக்கை (டிசம்பர் 2006)யில் இந்த விவரங்கள் உள்ளன.

ஒருபக்கம், தேசிய வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் ஒன்றோடொன்று போட்டிபோட்டுக் கொண்டு பெரும் நகரங்களிலும், வணிக மையங்களிலும் புதிய கிளைகளை அமைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், தேசிய வங்கிகள் வெளிநாடுகளில் அன்றாடம் புதிய கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை தவிர்த்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கூட இந்திய வங்கிகள் கிளைகளைத் தொடங்குகின்றன. ஆனால், உள்நாட்டில் கிராமக்கிளைகளை இழுத்து மூடுகின்றன. ஓரிரு பெரிய வங்கிகளில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்: “”லாபம் ஈட்டாத சிறிய கிளைகளை அருகில் உள்ள பெரிய கிளைகளோடு இணைத்து விட்டோம். நாங்கள் ஒன்றும் கிளைகளை மூடவிடவில்லை.” என்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயத் தேவையில்லை. வங்கிகளின் லாபநோக்கம்தான் முக்கியக் காரணம்.

1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை அடுத்து, கிராமங்களில் கிளைகளைத் தொடங்குவதற்கு முழுமூச்சுடன் களம் இறங்கின. அஞ்சல் அலுவலகம், காவல் நிலையம் இல்லாத கிராமங்களில்கூட வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அந்த நிலை நீடித்தது. அதன் பின்னரே இதில் சுணக்கம் ஏற்பட்டது மட்டுமல்ல; வணிகரீதியில் லாபம் தராத கிளைகள் மூடப்பட்டன.

கிராமங்களில் வாழும் மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், அவர்களிடம் வைப்புத்தொகைகளைத் திரட்டுதல் மற்றும் அவர்களுக்குப் பயிர்க்கடன், கால்நடைக் கடன் போன்ற விவசாயக் கடன் உதவி வழங்குதல், அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கும் தனியார் வட்டிக் கடைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவையே அந்த காலகட்டத்தில் அரசின் நோக்கமாக இருந்தது.

1991-ல் அறிமுகமான பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப்பின்னர், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் வணிக ரீதியில் செயல்பட்டு லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒரு வங்கியின் செயல்திறனுக்கு அடையாளம் அது ஈட்டும் லாபமே என்று கருதப்பட்டது. இப்புதிய சூழலில், கிராமக்கிளைகள் ஒரு சுமையாகக் கருதப்பட்டன.

நல்லவேளையாக, காலம் தாழ்ந்தேனும், மீண்டும் அரசின் எண்ண ஓட்டம் மாறத் தொடங்கியுள்ளது. பாரதப் பிரதமருக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் உயர்மட்டக் குழுவின் தலைவரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான சி. ரங்கராஜன் அண்மையில் வெளியிட்டுள்ள யோசனை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. கிராமங்களில் மீண்டும் வங்கிக்கிளைகளை பெரிய அளவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் அவர்.

வங்கிகள் தங்கள் கிளைகளைக் கிராமங்களில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கிராமங்களில் புதிய கிளைகளை அமைக்கும் வங்கிகளுக்கே பெரிய நகரங்களில் கிளைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார் ரங்கராஜன். பார்க்கப்போனால், இப்படி ஒரு திட்டம் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ரிசர்வ் வங்கியும் அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகளும் கிராமக்கிளைகளை அமைப்பதில் முனைப்பு காட்டத் தவறிவிட்டன என்பதே உண்மை.

தற்போது, பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது குறித்து பெருமிதம் அடைகிறோம். ஆனால், வேளாண்துறை, தொழில்துறை மற்றும் சேவைத்துறை ஆகிய மூன்று துறைகளிலும் பரவலாக, ஒரே சீராக வளர்ச்சி ஏற்படவில்லை. மாறாக, ஒருபக்கம், தொழில் உற்பத்தித் துறையும், இன்னொருபக்கம், தகவல்தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், சுற்றுலாத் தொழில் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அண்மைக்காலமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளன. இதன் பயனாகவே 9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இதில் வேளாண் துறையின் பங்கு குறைவே. எனவேதான், கிராமப்புறங்களில் வளர்ச்சியின் பலன் தென்படவில்லை. வறுமை ஒழிப்பு கைகூடவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

இதை உணர்ந்துதான், மத்திய அரசு வேளாண் துறையில் ரூ. 25,000 கோடி வேளாண் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கு அரசின் புதிய முதலீடுகள் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டும் போதாது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில், சரியான அளவில் விவசாயக் கடன் தங்குதடையின்றி கிடைக்கச் செய்வதும் அவசியம். அதேபோல், கிராம மக்களிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை உருவாக்குதல், அவர்களது வைப்புத்தொகைகளைத் திரட்டி நியாயமான வட்டி வழங்குதல் போன்ற பணிகளைச் செம்மையாக மேற்கொள்வதற்கு, கிராமங்களில் வங்கிகள் இயங்க வேண்டும்.

கிராமக் கிளைகளில் பணிபுரிய, ஊழியர்களைத் தேர்வு செய்வதிலும் கவனம் தேவை. நகர வாழ்க்கை முறைகளில் ஊறிப்போன ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி கிராமங்களுக்கு அனுப்பினால், உரிய பலன் கிடைக்காது என்பதைக் கடந்தகால அனுபவம் உணர்த்தியுள்ளது. கிராமச்சூழலில் பணிபுரிய, விருப்ப அடிப்படையில் ஊழியர்களைத் தேர்வு செய்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வளர்ச்சியின் பலன் கிராமங்களில் வாழும் மக்களுக்கும் விரைவில் வந்து சேரும் என்பதற்கான அறிகுறியாக புதிய வங்கிக் கிளைகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

——————————————————————————————————————————
சீரழியும் சிறுதொழில்கள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற நிலையில் சிறு தொழில்கள், குடிசைத் தொழில்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் ஈடுபடுகின்ற தொழில்கள் யாவும் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

கைதயாரிப்பு தீப்பெட்டித் தொழிலில்

  • சிவகாசி,
  • ராஜபாளையம்,
  • கோவில்பட்டி,
  • எட்டயபுரம்,
  • கழுகுமலை,
  • சங்கரன்கோவில்,
  • வாசுதேவநல்லூர்,
  • குடியாத்தம்,
  • செய்யாறு

போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். முதலில், சிவகாசி அய்ய நாடார் குடும்பத்தினர் கோல்கத்தா சென்று தொழில்நுட்பத்தை அறிந்து வந்து சிவகாசியில் முதன்முதலாக தீப்பெட்டித் தொழிலைத் தொடங்கினர். இத்தொழிலில் சி, டி என்ற இரண்டு பிரிவுகள் உண்டு.
வானம் பார்த்த பூமியில் பல குடும்பங்களுக்கு இத்தொழில் விளக்கேற்றியது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரண்டு பிரிவுகளும் நலிந்து வருகின்றன. தமிழகம் வந்து தீப்பெட்டியைக் கொள்முதல் செய்த வட மாநில வியாபாரிகள் உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் தற்பொழுது தொழிலைத் தொடங்கிவிட்டனர். இதனால் இங்கு உற்பத்தி அளவு குறைந்துவிட்டது.

இந்தியாவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேவைப்படுகின்றன. விம்கோ தீப்பெட்டி நிறுவனம் 13 சதவிகிதம் மற்ற இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள் 18 சதவிகிதம், மீதமுள்ள 69 சதவிகிதம் கைதயாரிப்புப் பிரிவுகளாக இருந்தன. ஆனால், தற்பொழுது, விம்கோ, ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில தனியாரும் இயந்திரம் மூலமாகத் தேவையான தீப்பெட்டிகளை உற்பத்தி செய்து விடுகின்றனர்.

ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகள் இயந்திரங்களிலேயே செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இரண்டு லட்சம் பண்டல்கள் உற்பத்தி செய்ய இரண்டு லட்சத்து 45 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. இதனால் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இயந்திரமயம் காரணமாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. தீப்பெட்டி ஆலை அதிபர்கள் தங்களுக்கு லாபம் என்று கருதி இயந்திரங்களின் மூலம் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமல்லாமல், தீப்பெட்டிக்கான மூலப்பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. கைதயாரிப்பு தீப்பெட்டி உற்பத்திச் செலவு அதிகரிப்பதனால் தீப்பெட்டி விலையும் அதிகரிக்கிறது. ஐ.டி.சி. போன்ற பெரிய நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கே தீப்பெட்டிகளை வழங்கக்கூடிய நிலையில் உள்ளன.

விலை அதிகரிப்பால் குடிசைத்தொழில் தீப்பெட்டி பண்டல்கள் விற்பனை ஆகாமல் கிடங்குகளில் முடங்கியுள்ளன. குளோரேட் என்ற மூலப்பொருள் பற்றாக்குறையால் சிறு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதால், ஏழை மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். பன்னெடுங்காலமாக தெற்கேயுள்ள கரிசல் பூமியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த அட்சயப் பாத்திரமாக விளங்கிய தொழில் தற்போது படிப்படியாகச் சிதைந்துள்ளது.

இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கத்தொகையும் வங்கிக் கடன்களும் கிடைக்க வேண்டும். கூட்டுறவு சங்க தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அரசே உதவ வேண்டும். ஐ.டி.சி. போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்ற தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்ய மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெறாமல் இயங்கும் இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகளை அனுமதிக்கக்கூடாது.

நெடுங்காலமாக இன்னொரு சிறுதொழில் – சாத்தூரில் நடந்து வந்த பேனா நிப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மட்டுமல்லாமல் மேலை நாடுகளுக்கும் நிப்புகள் இங்கிருந்து அனுப்பப்பட்டன. அலுமினியக் கழிவுகளிலிருந்து செய்யப்படும் இந்த நிப்பு குடிசைத் தொழிலாக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. பால்பாயிண்ட் பேனா வந்ததிலிருந்து இந்தத் தொழில் நசித்துவிட்டது. அதை நம்பியிருந்த குடும்பங்கள் இன்றைக்கு வறுமையில் வாடுகின்றன.

சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு, காலண்டர் மற்றும் அச்சகத் தொழில்களில் பணியாற்றிய பலர், இயந்திரங்கள் வந்ததால் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். முக்கூடலில் பீடித்தொழிலும் நசித்து வருகின்றது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், வேம்பார் போன்ற பகுதிகளில் உப்பளத் தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் செய்யும் உப்பளத் தொழில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி நின்றுவிட்டது. மழைக்காலத்தில் இத் தொழிலுக்கு பாதுகாப்பின்மை, ரயிலில் அனுப்பத் தடை, மின் கட்டண உயர்வு, நிலத்தடி நீர் குறைவு ஆகிய காரணங்களால் இத் தொழில் நசிந்துள்ளது.

  • திண்டுக்கல் பூட்டு,
  • சுருட்டுத் தொழில்,
  • கும்பகோணம் பாத்திரத்தொழில்,
  • நெசவுத் தொழில் மற்றும்
  • உடன்குடி பகுதியில் பனைத்தொழில் –
  • சில்லுகருப்பட்டி,
  • பவானி ஜமுக்காளம்,
  • மதுரை சுங்கடி,
  • கூறைப்புடவை போன்றவற்றோடு
  • மீன்பிடித் தொழில்,
  • கருவாடு தொழில் என
  • நடுத்தர,
  • கீழ்த்தட்டு மக்கள் ஈடுபட்ட தொழில்கள் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டன.

மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தீப்பெட்டி தொழில் பிரச்னையை மத்திய அரசின் கவனத்துக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளார். ஆனால் தீர்வு இல்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களால் இத்தொழில்கள் சீரழிந்தாலும், இந்த மண்ணின் அன்றாட அடையாளங்களாக

  • நெல்லை அல்வா,
  • கடம்பூர் போளி,
  • உடன்குடி சில்லுக்கருப்பட்டி,
  • குற்றாலம் முறுக்கு,
  • திருவில்லிபுத்தூர் பால்கோவா,
  • கல்லிடைக்குறிச்சி அப்பளம்,
  • தூத்துக்குடி மக்ரோன்,
  • கோவில்பட்டி கடலை மிட்டாய்,
  • சாத்தூர் சேவு,
  • திண்டுக்கல் மலைப்பழம்,
  • குடந்தை வெற்றிலை சீவல்

போன்ற தின்பண்டங்கள் இன்றைக்கும் மீதமுள்ள எச்சங்களாகும்.
இத் தொழில்களை நம்பிய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து திருப்பூர் பனியன் ஆலையில் வேலை கிடைக்கும் என்று அங்கு செல்லத் தொடங்கினர். அங்கும் வேலை இன்றி, பலர் துயருறுகின்றனர்.

ஒரு சில ஆதிக்க சக்திகள்தான் இயந்திரமயமாக்கலில் பயனடைகின்றன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து விரட்டப்பட்ட மேற்கத்திய சக்திகளுக்கு மீண்டும் இங்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம்.

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து பங்குதாரர்களை எல்லாம் பங்குகளை வாபஸ் பெறச் செய்தனர். 1896-ல் பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர், எட்டையபுரம் மன்னர் கொடுத்த கிராமத்தில் பருத்தி அரைவை ஆலையை நிறுவினார். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டியது. அதைப்பொறுக்காத பிரிட்டிஷார், அந்த ஆலையை மூடக்கூடிய வகையில் எட்டையபுரம் அரசின் பங்குகளைத் திரும்பப் பெறச் செய்தது மட்டுமல்லாமல், ஆலை நிலத்தையும் திரும்பப் பெற்று ஆலையை மூடச் செய்தனர்.

உலகமயமாக்கலால் ஏற்கெனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாதிரியான கொடுமைகள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், தற்போது ஏற்பட்டுள்ளது.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————–

கிராம மக்களுக்கு கடன் வசதி

எஸ். கோபாலகிருஷ்ணன்

கந்து வட்டிக் கொடுமை பற்றி பேசாத மனிதர்கள் இல்லை; எழுதாத ஏடுகள் இல்லை. எனினும் அவசரத் தேவை என்றால், கிராமவாசிகளுக்கு வேறு என்னதான் வழி?

இந்த அவலத்தை ஒழித்துவிடுவோம் என்று 38 ஆண்டுகளுக்கு முன் புறப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இதனைச் செய்யவில்லை.

தேசிய வங்கிகள், ஆர்.ஆர்.பி. எனப்படும் கிராமிய வங்கிகள் என எந்த ஓர் அமைப்பும் பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. மத்திய அரசு அவ்வப்போது செயல்படுத்திய திட்டங்கள், அமைத்த நிபுணர் குழுக்கள் ஆகியவையும் பயனளிக்கவில்லை.

அதீத வட்டி வசூலிக்கும் வட்டிக் கடைகள் அல்லது லேவாதேவிப் பேர்வழிகளின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களைக் காப்பாற்ற இயலவில்லை.

தற்போது தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் அமைப்புகள் முறையாகப் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்றும், வேறு சில விதிமுறைகளை உள்ளடக்கியும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களின் தன்மையும், கூர்மையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனினும் அவற்றின் நோக்கம் அதீதவட்டி வசூலிப்பதை தடுப்பதும், கந்து வட்டியாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். பஞ்சாப், ஹரியாணா போன்ற சில மாநிலங்களில் இதுபோன்ற சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை.

சட்டம் இயற்றப்பட்ட மாநிலங்களிலும் சட்டத்தின் நோக்கம் எந்த அளவு ஈடேறி உள்ளது என்பது கேள்விக்குறியே. வட்டிக்குக் கடன் கொடுக்கும் தனியார் கடைகளோ, அமைப்புகளோ விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் வட்டிவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அவ்வளவு ஏன்? கந்து வட்டி தொடர்பாகக் கொடுக்கப்படும் புகார்கள் உரியமுறையில் பரிசீலிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.

2002-ம் ஆண்டு அகில இந்திய கடன் மற்றும் முதலீடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் காணப்படும் தகவல்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

கிராமப்புற மக்கள் 1991-ம் ஆண்டில், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தொகை அப்பகுதியின் மொத்த கடன் தொகையில் 17.5 சதவீதமாகத்தான் இருந்தது. 2001-ல், 29.6 சதவிகிதமாக உயர்ந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட எந்த நடவடிக்கையும், கிராமவாசிகள் தனியார் வட்டிக்கடைகளைத் தேடிப் போவதைக் குறைக்கவில்லை. மாறாக, இந்தத் தேவை அதிகரித்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியாக, பாரத ரிசர்வ் வங்கி இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், கடந்த ஆண்டு ஒரு தொழிலியல் குழுவை அமைத்தது. ரிசர்வ் வங்கியின் பிரதான சட்ட ஆலோசகரின் தலைமையில் அமைக்கப்பட்ட இக் குழுவில் இதர அங்கத்தினர்களாக அதே வங்கியின் அனுபவமிக்க அதிகாரிகள் இருந்தனர். இக்குழு தனது பரிந்துரைகளை அண்மையில் அளித்தது. அவற்றின் சாரம் வருமாறு:

கிராமப்புறங்களில் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள், பதிவு செய்து கொண்டால் மட்டும் போதாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். தவிர, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், உரிய பரிசீலனைக்குப்பின், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” ( Accredited Loan Providers) வங்கிகளால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் கிராமவாசிகளுக்கு கடன்வழங்குவதற்குத் தேவையான தொகையை வங்கியே நியாயமான வட்டியில் கடனாகக் கொடுக்கும். இதற்காக, ஒவ்வொரு “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும்” ஒரு வங்கியுடன் இணைக்கப்படுவார்.

கிராமவாசிக்கு கடன் கொடுக்கும்போது, கொடுப்பவர் தனது சொந்தப் பொறுப்பில்தான் கடன் வழங்குவார். வங்கி அதற்கு பொறுப்பல்ல. அங்கிகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர் வங்கியிலிருந்து வாங்கிய கடனை, வங்கிக்கு திரும்பச் செலுத்த வேண்டியது அவரது பொறுப்பு.

கிராம வாசிகளுக்கு கடன் வழங்கும்போது அதிகபட்ச வட்டிவிகிதத்தை மாநில அரசு நிர்ணயித்து அறிவிக்கும். இந்த வட்டி விகிதம் குறித்த கால இடைவெளியில், மறு ஆய்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதத்துக்கு அதிகமாக வட்டி வசூல் செய்தால் தண்டனை விதிக்கப்படும்; அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். வங்கியும் இதைத் தொடர்ந்து கண்காணிக்கும்.

ஏற்கெனவே வட்டிக்கடை வைத்திருப்பவர்கள் விவசாயப் பண்டங்களில் வாணிபம் செய்பவர்கள் விவசாய கமிஷன் ஏஜென்டுகள், வாகன விற்பனையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போன்ற – கிராமவாசிகளுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்களாக” நியமிக்கத் தகுதி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்களையும், இப்பொறுப்புக்கு தகுதி உடைய பிறரையும் வங்கி உரியமுறையில் பரிசீலித்து, “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்”களாக நியமனம் செய்யும்.

வங்கியும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவரும், தத்தம் கடமைகள், உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். அவசியம் நேரும்போது அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு விதிமுறை அனுமதிக்கும் புகார்கள் மற்றும் குறைதீர்ப்பு நடைமுறை எளிமையாக இருக்கும்.

அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு தரப்படும் வங்கிக் கடன், வங்கிகளைப் பொருத்தவரை, முன்னுரிமை ( Priority Sector) கடனாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளின்படி, வங்கிக் கடனில் 40 சதவிகிதத் தொகையை விவசாயம், சிறுதொழில் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவினருக்குக் கடனாக வழங்க வேண்டும். அந்த வகையில், வங்கிகள் தங்கள் கடமையை எளிதாக நிறைவேற்ற ஒரு வழி கிடைத்துள்ளது எனலாம்.

இத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மாநிலங்கள் புதிய சட்டம் இயற்றவேண்டும். அதற்கான வரைவு மசோதா ஒன்றை ரிசர்வ் வங்கியின் குழு ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளது.

குழுவின் பரிந்துரையை ரிசர்வ் வங்கியும் மத்திய, மாநில அரசுகளும் விரைந்து ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். முதன்முறையாக, நடைமுறைக்கு உகந்ததாக, எளிதானதாக மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் லாபம் தரும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் வங்கிக்குச் சென்று அலைக்கழிக்கப்படாமல், தனக்குப் பரிச்சயமான ஒரு நபரிடமிருந்து கடன் பெறலாம். காலதாமதத்துக்கு வழியில்லை. வட்டி விகிதமும் நியாயமானதாக இருக்கும்.

கடன் வழங்குபவருக்கு சொந்த முதலீடு தேவையில்லை. கடன் வழங்குவதற்கு, வங்கியிடமிருந்து தேவையான பணத்தைக் கடனாகப் பெறலாம். கடன் வாங்குபவர், வழங்குபவருக்குப் பரிச்சயமான கிராமவாசி; நேரடித் தொடர்புடையவர். எனவே கடனை வசூல் செய்வதில் சிரமம் இருக்காது; வாராக் கடனாக மாறாது.

வங்கியைப் பொருத்தவரை, எண்ணற்ற கிராமவாசிகளைத் தொடர்பு கொள்வதற்குப் பதில், தங்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு கடன் வழங்கி, கடனைத் திரும்ப பெறுவதில் பிரச்னை இருக்காது. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவருக்கு கொடுக்கப்படும் கடன்தொகை, முன்னுரிமைக் கடன் என்று கருதப்படும். கிராமவாசிகளுக்கு நேரிடையாக கடன் வழங்குகையில், உள்ளூர் அரசியல் புள்ளிகளின் தலையீடு இருக்கக்கூடும். புதிய திட்டத்தில் இது அறவே தவிர்க்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு இத்திட்டம் நன்மைபயக்கவல்லது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தப்படி, கிராமவாசிகளுக்கும் வங்கிகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும், நட்புறவும் மலரவில்லை என்பதே உண்மை. புதிய திட்டத்தின் மூலம் இவ்விரு தரப்புக்கும் இடையே ஒரு பாலமாக “”அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குபவர்கள்” திகழ்வார்கள் என்று எதிர்ப்பார்கலாம்.

தொழில்நுட்ப மேம்பாட்டின் பலனாக, படித்த, வசதிபடைத்த நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்குச் சேவைகள் வழங்கி, லாபம் ஈட்டினால் மட்டும் போதாது; ஏழை, எளிய மக்களையும் அரவணைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்படவேண்டும் என்பதே இன்றைய எதிர்பார்ப்பு. இதற்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Al, Aluminium, APR, Assets, Auto, Balance, Ballpoint, Banking, Banks, Biz, branch, Business, Calendar, Cellphone, Cheyyaar, Cheyyaaru, Cheyyar, Citi, City, Commerce, Compensation, Crackers, Diary, Dindugul, Dindukal, Dindukkal, Economics, Education, Educational, Employment, Ettayapuram, Exim, Expenses, Export, Exporters, Factory, Finance, Fireworks, Garments, GDP, Globalization, Growth, Gudiatham, Gudiyatham, Home, Housing, ICICI, Imports, Income, Industry, Installment, Instalment, Interest, ITC, Jobs, Kalugumalai, Kalukumalai, Kazhugumalai, Kazhukumalai, Kazugumalai, Koilpatti, Kovilpatti, Kudiatham, Kudiyatham, Loans, match, Matchbox, Matches, Metro, Mobile, Monetary, Motor, Nibs, Opportunity, Pen, Private, Profit, Purchase, Purchasing, Rajapalayam, Rates, RBI, Refill, Revenues, Reynolds, Rural, Sangarankoil, Sangarankovil, Sangarankoyil, Sankarankoil, Sankarankovil, Sankarankoyil, SBI, Sivakasi, Small Biz, Small scale, SSI, Tamil, Textiles, Thiruchendhur, Thiruchendoor, Thiruchendur, Thoothukudi, Thuthukudi, Tuticorin, VaiGo, VaiKo, Vasudevanalloor, Vasudevanallur, Villages, Wimco, Work, Writing | Leave a Comment »

London Diary in Dinamani Kathir by Iraa Murugan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 16, 2006

லண்டன் டைரி: லண்டன் டவர் ஒற்றைக் கட்டடமில்லை!

இரா. முருகன்

கி.மு முன்னூற்றுச் சொச்சம், கி.பி. எண்ணூற்று முப்பத்தேழு என்று யாராவது மூக்குக் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு வரலாற்றுப் பாடம் ஆரம்பித்தால் உடனடியாக ஜகா வாங்கி தலை தெறிக்க ஓடுகிறவரா நீங்கள்? உங்களோடு கூட, அல்லது பத்து அடி இன்னும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறவன் என்ற தகுதியோடு சொல்கிறேன் -லண்டன் கோபுரத்துக்குள் நுழைவதாக இருந்தால் கொஞ்சம் யோசித்துவிட்டுக் காலை எடுத்து வையுங்கள், மீறிப் போனால், “”வேண்டாம், வேண்டாம்” என்று நீங்கள் கையைக் காலை உதைத்து அடம் பிடித்தாலும் கிடத்திப் போட்டுச் சரித்திரத்தைக் கரைத்துப் புகட்டிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

பிரிட்டீஷ் அரசாங்கமே இதற்காக மெனக்கெட்டு செலவு செய்து யோமன் காவல்காரர்கள் என்று மாஜி ராணுவ வீரர்களின் ஒரு படையையே வேலைக்கு அமர்த்தி இருக்கிறது. பீஃப் ஈட்டர்ஸ், அதாவது, “மாட்டு மாமிசம் சாப்பிடுகிறவர்கள்’ என்று இவர்களுக்குச் செல்லப் பெயர்.

டவர் ஹில் பாதாள ரயில் ஸ்டேஷனில் இறங்கி, கையில் பிடித்த காமிரா, பாப் கார்ன் பொட்டலம், புஷ்டியான கேர்ள் ப்ரண்ட் என்று சுறுசுறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிற கூட்டத்தில் கலக்கிறேன். முன்னால் ஏழெட்டு பிரம்மாண்டமான அலுமினிய டிபன் காரியரை அடுத்தடுத்து நிறுத்திய மாதிரி கோட்டை, கொத்தளம். தூர்ந்து போன அகழி என்று தேம்ஸ் நதிக்கரையில் லண்டன் கோபுர வளாகம் கம்பீரமாக நிற்கிறது. “தனிக்கட்டை ஆசாமிகளுக்கு பதினைந்து பவுன் டிக்கெட். குடும்பமாக வந்தால் நாற்பத்தைந்து பவுன் மட்டும்தான்’ என்று அறிவிப்புப் பலகை கண்டிப்பாகச் சொல்கிறது… ரொம்ப வயதான ஒரு கொரிய தம்பதி, ரொம்ப ரொம்ப வயதான ஜெர்மானிய ஜோடி. வால்தனமான நாலு குழந்தைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு ஓர் அமெரிக்க அம்மா -அப்பா, நிமிடத்துக்கு நாற்பத்தேழு தடவை கிச்சுக்கிச்சு மூட்டியது மாதிரி சிரிக்கிற சீன நர்சுகளின் கூட்டம் ஒன்று. கூட நிற்கிற இவர்களில் யாரையும் சத்தியப் பிரமாணம் செய்து “என்னோட குடும்பம்’ என்று கூடவே அழைத்துப் போய் குடும்ப டிக்கெட் எடுத்துக் காசை மிச்சப்படுத்த முடியாது என்று நிச்சயமாகத் தெரிய, மனசே இல்லாமல் பதினைந்து பவுனை அழுது ஒரு டிக்கெட் வாங்குகிறேன்.

அழுத்தமான கறுப்பில் சிவப்புக் கோடு இழுத்த நர்சரி பள்ளிக்கூட பின்-அப்-பார்ம் சீருடை அணிந்து கொண்டு தாடி வைத்த வயதான ஒரு பீஃப் ஈட்டர் எனக்காகக் காத்திருக்கிறார். எதிரில் முன்னால் சொல்லப்பட்ட சுற்றமும் நட்பும்.

“”வெள்ளைக் கோபுரத்தோடு பயணத்தைத் தொடங்கலாமா… எனக்கு நீங்கள் காசு பணம்னு எதுவும் தரத் தேவையில்லை. ராணுவ பென்ஷன். இந்தக் காவல் உத்தியோகத்துக்குக் காசு, தங்கியிருக்க கோட்டைக்குள்ளேயே வீடு இப்படி அரசாங்கமே எல்லாம் கொடுக்குது.”

“சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி எல்லாம் ரொம்பத் திருப்திகரமா இருக்கு’ என்று கூட்டம் கூட்டிச் சொல்கிற சர்க்கார் ஊழியரை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்த்த ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொள்ளத் திரும்பிப் பார்த்தால், சீன நர்சுகள் கெக்கெக் என்று சிரிக்கிறார்கள். அவர்கள் நாட்டில் எல்லோருமே எப்போதுமே சந்தோஷமாக இருப்பார்கள். இல்லாத பட்சத்தில் நாலு மாசம் ஜெயிலில் தள்ளிச் சந்தோஷப்படுத்தி அனுப்பிவிடுவார்கள் என்று தோன்றுகிறது.

“”லண்டன் டவர்னு சொல்றது ஒத்தைக் கட்டடம் இல்லை. சின்னதும் பெரிசுமா இருபது கோட்டைகள், கோபுரம், அகழி எல்லாம் சேர்ந்த இந்த இடம் முழுக்கவே லண்டன் டவர்தான். வெள்ளைக் கோபுரம், செங்கல் கோபுரம், மணிக் கோபுரம், ரத்தக் கோபுரம். தொட்டில் கோபுரம், நடுக் கோபுரம், உப்புக் கோபுரம், கிணற்றுக் கோபுரம் இப்படி இருபது கோட்டைகள். முதன்முதலாக் கட்டினது வெள்ளைக் கோபுரம். அது கி.பி 1078ல்.” அவர் பின்னால் விரிந்து கிடக்கிற கட்டடங்களை இரண்டு கையையும் விரித்துச் சுழற்றிக் காட்டியபடி தொடர்கிறார். பழைய ஜேம்ஸ்பாண்ட் சினிமா ஹீரோ ஷான் கானரி போல கம்பீரமான குரல்.

“”ஆயிரத்து எழுபத்தெட்டிலா?” நம்ப முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் ஜெர்மானியப் பெருந்தாத்தா தலையாட்டி, பாட்டி காதில் ஏதோ சொல்கிறார். “”நமக்குக் கல்யாணம் ஆனதுக்கு அடுத்த வருஷம்” என்று நான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்தை ஆயிரம் வருடம் முன்னால் ஆக்கிரமித்த வில்லியம் மன்னன் வெள்ளைக் கோபுரத்தைக் கட்டியதற்கு முக்கியக் காரணம் பயம்தான் என்று தெரிகிறது. பகை அரசர்களின் படையெடுப்பிலிருந்து தற்காப்பு நடவடிக்கை என்று வெளியே சொன்னாலும், லண்டன் பட்டணத்து ஜனங்களிடமிருந்து ஜாக்கிரதையாகத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளத்தான் மேற்படி வில்லியம் இதைக் கட்டியிருக்கிறான். கருங்கல், சுண்ணாம்பு, ஜல்லி வகையறாக்களுக்குக் கூட லண்டன்காரர்களை நம்பாமல், ஒரு கல் விடாமல் பிரான்சிலிருந்து வரவழைத்திருக்கிறான் இந்தப் பேர்வழி.

வெள்ளைக் கோபுரத்துக்குள் நுழைகிறேன். சரித்திரத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் காவலாளி. “”வில்லியம் ராஜாவிலே தொடங்கி அப்புறம் வந்த ராஜாக்களும் ராணிகளும் இங்கே அடுத்தடுத்து கட்டடம் கட்டியிருக்காங்க. இல்லேன்னா அவங்க கழுத்தை அறுத்துக் கொன்று போட்டு மத்தவங்க அழகான சமாதி கட்டியிருக்காங்க. அதுக்கு முன்னாடி அவங்களை அடைச்சு வைக்க ஏற்கனவே இருந்த கோபுரங்களைச் சித்திரவதைச் சாலை, சிறைக்கூடம்னு மாற்றி அமைச்சிருக்காங்க. ஆக, கட்டட கான்ட்ராக்டர்களுக்கு எப்போவும் எக்கச்சக்க டிமான்ட்.”

அமெரிக்க அம்மையார் சரித்திரத்தில் பொறுமையில்லாமல் நாலு குட்டிக் குழந்தைகளையும் பீஃப் ஈட்டருக்கு முன்னால் தள்ளிவிட்டு அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளக் காமிராவில் கோணம் சரிபார்க்கிறார். மேலிட அனுமதி வாங்கிவிட்டு, வீட்டுக்காரரும் ஃபோட்டோவில் இடம்பெற ஓடுகிறார். “”கோபுரத்தை மறைக்கறீங்களே தரையிலே உட்காருங்க”. வீட்டம்மா கட்டளைப்படி காவல்காரரின் காலடியில் சமர்த்தாக மண்டிபோட்டு உட்கார்ந்து அட்டகாசமாக போஸ் கொடுக்கிறார். சீன நர்சுகளின் சிரிப்பை எதிர்பார்க்கிறேன். அவர்கள் பாப்கார்ன் மென்றுகொண்டு மொபைல் தொலைபேசிகளை தோள்பட்டையில் உரசித் துடைத்தபடி அதில் இருக்கும் காமிராவால் சுட்டுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த விநாடி, பெய்ஜிங்கில் அவர்கள் வீடுகளில் மொபைல் தொலைபேசி ஒலிக்க, வெள்ளைக் கோபுரமும், தாடி வைத்த காவல்காரரும், இந்த நர்சுகளும், ஒரு நறுக்கு இங்கிலாந்து சரித்திரம் உடனடி ஏற்றுமதியாக அங்கே ஒளிபரப்பாகும். “”லண்டன்லே இருந்து எங்க யுங் யான் அனுப்பியிருக்கா. அங்கே அரண்மனை வாசல். அந்தத் தாடிக்காரக் கிழவன் யார்னு தெரியலை. சே, சே பாய் பிரண்ட் எல்லாம் இல்லை” பந்துமித்திரர்களோடு இன்னும் ஒருவாரம் தகவல் பகிர்ந்துகொள்ளப்படும்.

“”கி.பி 1536லே ஆன்போலின் அரசியை, அவங்க புருஷன் எட்டாம் எட்வர்ட் சிரச்சேதம் செய்த இடம் இது”. எனக்கு முன்னால் பச்சை விரிந்து கிடக்கும் இடத்தைப் பார்க்கிறேன். “”பட்டப்பகலில் படுகொலை. ராணி ஸ்தலத்திலேயே மரணம்” மனதுக்குள் யாரோ தலைப்புச் செய்தி படிக்கிறார்கள்.

Posted in Diary, Dinamani, Era Murugan, Era Murukan, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, Tamil, UK | Leave a Comment »

London Diary – Westminister, Churchill, Dosa Granny, Musicians

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

லண்டன் டைரி: மூச்சுவிட மறந்த விஐபிகளின் விலாசம்!

இரா. முருகன்

வெஸ்ட்மின்ஸ்டர் பாதாள ரயில் நிலையத்துக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் என்றாலும் ஒரு பெரிய அலையாக எல்லாக் கிரகங்களிலிருந்தும் புறப்பட்டு வந்த உயிரினங்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு கும்பல் வெளியிலிருந்து உள்ளே இறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நான் முதல் கூட்டத்தில்.

கழிவறைக்குப் போகிற பாதையில் தரையில் துண்டு விரித்து வைத்து ஓர் இளைஞர் அற்புதமாக வயலினில் மேற்கத்திய இசை வாசித்துக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் சுவரில் “இங்கே பஸ்கிங்க் அனுமதிக்கப்பட்டுள்ளது‘ என்று எழுதியிருப்பது கண்ணில் படுகிறது. ரயில் நிலையத்தில் இப்படி வாத்தியம் வாசித்து துண்டு விரித்துக் காசு சம்பாதிக்க (இதற்குப் பெயர்தான் “பஸ்கிங்க்’) லண்டன் மாநகராட்சி ஏற்படுத்திய தடை சமீபத்தில் நீங்கியதால், ரயில்வே ஸ்டேஷன்களில் அங்கங்கே இசைமழை. துண்டு விரிப்பில் காசு போட்டுவிட்டு “”என்ன வாசிக்கிறீங்க?” என்கிறேன். ரிச்சர்ட் வாக்னர் எழுதிய இசை என்று சொல்லிவிட்டு அவர் தொடர்கிறார். அடுத்து இடத்தைப் பிடிக்கத் தயாராக ஓர் ஆப்பிரிக்கக் கூட்டம் முரசுகளோடு நிற்கிறது.

ரயில் நிலையக் கழிவறையில் நுழைய ஐம்பது பென்ஸ் கட்டணம். ஒன் பாத்ரூம் போக நாற்பத்தைந்து ரூபாயா? “”பக்கத்திலே செடிகொடி இருக்காமலா போயிடும்?” தோளைக் குலுக்கிக் கொண்டு இரண்டு அமெரிக்க இளைஞர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள். உள்ளே காசைக் கொடுத்துவிட்டுக் கனவான்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள். “”குப்தாஜி, இஸ் மே ஸரா பானி…” அடைத்த கதவுக்குப் பின்னால் இருந்து யாரோ காலி பிளாஸ்டிக் மினரல் வாட்டர் பாட்டிலை வெளியே நீட்ட, வெளியே நிற்கும் குப்தாஜி காகிதத்தை உபயோகிக்கச் சொல்லி இந்தியில் மன்றாடுகிறார். உள்ளே இருந்து இன்னும் அதிகாரமும் அவசரமுமாக குப்தாஜி மிரட்டப்பட, காலிபாட்டிலோடு தண்ணீர் பிடிக்க ஓடுகிறார் அவர். இனிமேல் இந்த பிராண்ட் மினரல் வாட்டர் வாங்கப் போவதில்லை என்று தீர்மானித்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வருகிறேன்.

பாதாள ரயில் பாதையின் இருட்டைப் பார்த்துப் பழகிய கண்ணுக்கு, ஸ்டேஷனுக்கு வெளியே கண்ணைக் குத்தும் காலை வெயில் இதமாக இருக்கிறது. இங்கிலாந்தின் பரபரப்பான சரித்திரம் தொடர்ந்து நிகழ்கிற பெரிய வெட்டவெளி மேடையாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தின் வாசலில் நூற்றுச் சொச்சம் வயதானவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து ஒரு கடமையை நிறைவேற்றுகிறது போல் நிதானமாகச் சாக்லெட் க்ரீம் வடியும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பின்னால், வெஸ்ட்மின்ஸ்டர் கல்லறைகள். மூச்சுவிட மறந்துபோன வி.ஐ.பிகளால் அந்த இடம் நிறைந்து கிடக்கிறது. பெரிய சைஸ் சதுரங்கப் பலகைகளிலிருந்து வாரியெடுத்துக் கிடத்திப் படுக்க வைத்தது மாதிரி ராஜா, ராணி, மந்திரி, மதகுரு என்று ஒரு நட்சத்திரக் கும்பலே அங்கே உண்டு. கூடவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, நாடக நடிகர்கள், அரசியல்வாதிகள். இன்னும் நிறையப் பிரபலங்களை இங்கே புதைக்க இங்கிலாந்து மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களைப் புதைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதுதான் சின்னச் சிக்கல்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை வாசல். அப்படிச் சொன்னால் ஆட்டோக்காரருக்கு வழி தெரியாது. நாடாளுமன்றம் என்று சொன்னால் சுலபமாகப் புரியும். (குறுக்கு வெட்டாக ஒரு தகவல் -இங்கிலாந்தில் ஆட்டோக்கள் புதிதாக அறிமுகமாகியிருக்கின்றன. நம்ம ஊர்த் தயாரிப்புதான். இன்னும் இவை லண்டனுக்கு வராவிட்டாலும் அறிமுகப்படுத்திய இடங்களில் சக்கைப்போடு போட, லண்டன் டாக்ஸி டிரைவர்கள் முஷ்டியை மடக்கிக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.)

நாடாளுமன்ற வாசல் முன்பாக நின்றபடி முறைத்துப் பார்க்கிற பழைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை, கன்சர்வேடிவ் கட்சி -லிபரல் கட்சி -திரும்ப கன்சர்வேடிவ் கட்சி என்று தாத்தா அந்தக் காலத்திலேயே ஜம்மென்று கட்சித் தாவல் நடத்தினாலும் இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சர்வ கட்சி அரசாங்கத்தின் பிரதமராக சக்கைப் போடு போட்டிருக்கிறார். அதிமுக்கியமான நூறு பிரிட்டீஷ்காரர்கள் யார் என்று பி.பி.சி டெலிவிஷன் இரண்டு வருடம் முன்னால் எடுத்த கணக்கெடுப்பில் எலிசபெத் மகாராணி, மறைந்த அவருடைய மருமகள் டயானா எல்லோரையும் பின்னால் தள்ளிவிட்டு முதல் இடத்தைப் பிடித்தவர் இவர். மகாத்மா காந்தியைப் பற்றி, “அந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கையையும் காலையும் கட்டி, டில்லித் தெருவிலே போட்டு யானை மேலே வைஸ்ராய் துரையை உக்கார வச்சு ஓங்கி மிதிச்சுக் கொல்லச் சொல்லணும்’ என்று அழுகல் வாக்கு அருளிய இந்தச் சுருட்டுக்காரக் கிழவரைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன்.

நாடாளுமன்றத்துக்கு முன்னால் சுற்றி வளைந்து போகிற சந்து பொந்துகளில் கால்போன போக்கில் நடக்கிறேன். பழைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசித்த இந்தத் தெருக்கள் இன்னும் பழைய கேஸ் விளக்கு அலங்காரத்தோடு காலத்தில் உறைந்துபோய் நிற்கின்றன. நாடாளுமன்றத்தில் ஏதாவது மசோதா மேல் ஓட்டெடுப்பு வந்தால் அங்கே முழங்கும் மணிச்சத்தம் இந்த முடுக்குச் சந்துகளில் சத்தமாகக் கேட்க, சாப்பிட உட்கார்ந்த, தூங்க ஆரம்பித்த, சும்மா வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்து காதைக் குடைந்து கொண்டிருக்கிற உறுப்பினர்கள் எல்லாரும் போட்டது போட்டபடி ஓடி வருவார்களாம்.

தற்போது நாட்டை ஆளும் தொழிற்கட்சியும் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் எதிரும் புதிருமாகத் தலைமைச் செயலகம் அமைத்திருந்த தெரு நிசப்தமாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் இரண்டு கட்சி ஆபீசிலும் தொண்டர்கள் மாடியில் ஏறி நின்று கட்சித் தாவலுக்காக எதிர்க் கட்டட ஆசாமிகளைத் தூண்டுவார்கள். இதோ வந்தாச்சு என்று யாராவது நிஜமாகவே கட்டடம் விட்டுக் கட்டடம் தாவித் தவறி விழுந்து காலை உடைத்துக்கொண்டார்களோ என்னவோ தெரியாது. ரெண்டு கட்சிகளும் ஆபீசை வேறுவேறு இடங்களுக்கு மாற்றி விட்டன.

வெஸ்ட்மின்ஸ்டர் சுரங்கப் பாதையில் மறுபடி புகுந்து நான்காம் வாசல் வழியாகத் தேம்ஸ் நதி தீரத்துக்கு வருகிறேன். போன நூற்றாண்டில் கிட்டத்தட்ட லண்டன் கூவமாகத் கிடந்த தேம்ஸ், சுத்தமும் சுகாதாரமும் பளிங்கு போன்ற தண்ணீருமாக மணக்க ஆரம்பித்து வெகு காலம் ஆகிறதை நினைத்துப் பார்க்கிறேன்… கூவம் ஐயோ பாவம் என்று பக்கத்தில் பிக்பென் கடிகாரம் சத்தமாக மணியடித்து அனுதாபப்டுகிறது.

தேம்ஸ் படித்துறையில் பான்கேக் கடை பூட்டியிருக்கிறது. இந்தியக் களையோடு எந்த மூஞ்சியாவது தட்டுப்பட்டால், பான்கேக் வார்க்கிற இரும்புச் சட்டியில் கரண்டியால் டொண்டொண் என்று தட்டி, “தோசை சாப்பிட வாங்க’ என்று அன்போடு கூப்பிடுகிற பிரிட்டீஷ் பாட்டியம்மாளைக் காணோம். பான் கேக்குக்கும் தோசைக்கும் உள்ள ஒற்றுமையை யாரோ அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். “” ஒரு மாதம் கடையை மூடிட்டு தென்னிந்தியாவிலேயே சுத்தலாம்னு இருக்கேன்” என்று போனமுறை சந்தித்தபோது சொன்னார். மெரினா மிளகாய் பஜ்ஜிக் கடைகள் பக்கம் புதுசாக ஸ்டால் போட்டு, “இங்கிலீஷ் தோசை’ விற்கிற, கத்தரிப்பூ கலர் கவுன் மாட்டிய ஒரு வெள்ளைக்காரப் பாட்டியை யாராவது பார்த்தால் தகவல் சொல்லவும்.

Posted in Churchill, Diary, Dinamani, Dosa, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London, VIP, Westminister | Leave a Comment »

London Diary :: Iraa Murugan

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

லண்டன் டைரி: அடல்ஃபி தியேட்டர்…வில்லியம் ஆவி!

இரா. முருகன்

டிரஃபால்கர் சதுக்கத்திலிருந்து பொடிநடையாக ஸ்ட்ராடுக்குப் போகலாம். பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தால் நம் அதிர்ஷ்டம் நமக்கு முன்னால் ஒரு நாலு டூரிஸ்ட்கள் அன்ன நடை பயின்று கொண்டிருப்பார்கள். அதாவது காலில் வலி வந்த வயசான அன்னம் களிம்பு வாங்கப் புறப்பட்டது போன்ற நடை. என் மிச்ச வாழ் நாளை அவர்களுக்குப் பின்னால் டிரஃபால்கர் சதுக்க நடைபாதையில் ஊர்ந்தபடி கழிக்க உத்தேசம் இல்லாமல் சுற்றுமுற்றும் பார்க்க, சுரங்கப் பாதை வா வா என்கிறது.

சப்-வேயில் இறங்குகிறேன். மெலிசான இருட்டு. போனால் போகிறது என்று ஒரு குழல் விளக்கு கொஞ்சம்போல் சிந்திய வெளிச்சம் இருட்டை அடிக்கோடு இட்டுக் காட்டுகிறது. குப்பென்ற சிறுநீர் வாடை மூக்கைக் குத்தக் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். லண்டன்தான். எங்கிருந்தோ ஒரு கெட்ட வார்த்தை உரக்க ஆரம்பித்துத் தீனமாக முடிகிற சத்தம். சுரங்கப் பாதை சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடிக்கு ஓர் இளவயது வெள்ளைக்காரன். பக்கத்தில் காலி பாட்டில். கூடவே பாதி உடைந்து தரையில் கண்ணாடிச் சில்லு சிதறிய இன்னொன்று…””சில்லறை இருக்கா?” அவன் கேட்கிறான். இல்லை என்று தலையாட்டிவிட்டு, வழியில் யாரோ வாந்தி எடுத்து வைத்திருந்ததை மிதிக்காமல் ஜாக்கிரதையாக நடக்கிறேன். மறுபடியும் வசவு, அழுகல் வாடையோடு பின்னால் தொடர்கிறது.

சுரங்கப்பாதை படியேறி வெளியே வரும்போது, அழகும் ஆடம்பரமுமாக இன்னொரு லண்டன் சிரிக்கிறது. பரபரப்பான ஸ்ட்ராண்ட் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்னால் நடந்தால், இன்னும் கடைகள், நாடகக் கொட்டகைகள். நடுத்தெருச் சிலைகள். தூரத்தில் பிரதமர் டோனி ப்ளேர் குடியிருக்கும் டவுனிங் தெரு. நாடாளுமன்றம். இரண்டாம் யுத்தகாலத் தலைமைச் செயலகமான போர் அறைகள் என்று நீண்டு வளைந்து போகும் பாதை.

“தள்ளுபடி விற்பனை’, அடல்ஃபி தியேட்டருக்குக் கொஞ்சம் முன்னால் ஒரு பெரிய கடையில் விளம்பரம். கறீஸ் (இன்ழ்ழ்ஹ்ள்) என்ற அந்தப் பெரிய கடையில் டிவி, டிஜிட்டல் காமிரா, பாட்டு கேட்கும் ஐபாட், கம்ப்யூட்டர் என்று சகல எலக்ட்ரானிக் பொருட்களும் சரித்திரம் காணாத மலிவு விலையில், இன்றைக்கு மட்டும். சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்கொண்டு கறீஸ் கடைக் கூட்டத்தில் கலக்கிறேன்.

வாங்கிய பொருளோடு ஒரு பத்து பவுண்ட் கரன்சி நோட்டையும் கல்லாவில் நீட்டுகிறேன். எலிசபெத் ராணியம்மா படம் இல்லாத அந்த நோட்டைக் கடைக் காசாளர் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்க்கிறார். நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் தலை போட்ட அந்தப் பணம் நான் வசிக்கிற ஸ்காட்லாந்து பிரதேசத்தில் அச்சடிக்கப்பட்டது. அந்த மாநிலத்துக்கு மட்டும் தனி நாடாளுமன்றம், தனி கரன்சி நோட்டு என்று பிரிட்டீஷ் அரசு உரிமை கொடுத்திருக்கிறது.

“”என்ன பங்காளி, உங்க எடின்பரோவிலே பத்து, இருபது பவுண்ட் நோட்டு மட்டும்தான் அடிப்பீங்களா? இந்த வயசாளி படம் போட்ட ஐம்பது பவுண்ட் ஸ்காட்லாந்து நோட்டை நான் பார்த்ததேயில்லையே..”

மீதிச் சில்லறையைக் கொடுத்தபடி, கறுப்பர் இனக் காசாளர் “மேட்’ என்று என்னை சிநேகிதத்தோடு பங்காளியாக அழைத்து விசாரிக்கிறார். சமீபத்தில் யாரோ பஸ் கண்டக்டர் தன்னை “மேட்’ என்று கூப்பிட்டதை ஆட்சேபித்து தினப் பத்திரிகையில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் முழுப்பத்திக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது நானில்லை.

“”போனாப் போகுதுன்னு ராணியம்மாவை ஐம்பது பவுண்ட் நோட்டிலே மட்டும் விட்டு வச்சிருக்கோம். அது சரி, உங்க ஊர்லே ஒரு பவுண்ட் நோட்டு கிடையாது. எங்க கிட்டே உண்டே அது” என்கிறேன். “”நிஜமாவா” அவர் ஆவலோடு கேட்க, பாக்கெட்டிலிருந்து ஸ்காட்லாந்து கரன்சி நோட்டு ஒரு பவுண்ட்டை எடுத்துக் காட்டுகிறேன்.

அடல்ஃபி தியேட்டர் வெறிச்சோடிக் கிடக்கிறது சரியாக இருநூறு வருடத்துக்கு முன்னால் அதாவது 1806-ம் வருடம் கட்டிய நாடகக் கொட்டகை அது. ராயல் தியேட்டர், ராயல் மாடர்ன் அடல்ஃபி தியேட்டர், ராயல் அடல்ஃபி தியேட்டர் என்றெல்லாம் இந்த இருநூறு வருடத்தில் அவ்வப்போது பெயரை மாற்றி, இடித்துக் கட்டி, தற்போது வெறும் அடல்ஃபி தியேட்டராக இயங்குகிறது. இந்தத் “தற்போது’ என்பது 1930-ல் தொடங்குகிற சமாச்சாரம். ஷேக்ஸ்பியர் எழுதிய மேக்பெத் தொடங்கி, ஈவிதா வரை இருநூறு வருடத்தில் இங்கே மேடையேறாத நாடகமே இல்லை.

இந்தத் தியேட்டரிலும் சுற்றுப் புறத்திலும் ஒரு பேய் உலாவுகிறதாகத் தெரிகிறது. 1897-ம் வருடம் ஒரு டிசம்பர் மாதக் குளிர்கால ராத்திரியில் வேஷம் கட்ட பக்கத்து முட்டுச் சந்து வழியாக அடல்ஃபி தியேட்டருக்கு விரைந்து கொண்டிருந்த வில்லியம் டெரிஸ் என்ற ராஜபார்ட் நடிகரை, சக நடிகர் ஒருத்தர் குத்திக் கொலை செய்துவிட்டாராம். “போய்ட்டு வரேன்’ என்ற கடைசி வாக்கியத்தோடு உயிரை விட்ட வில்லியம் இன்னும் இடத்தை விட்டுப் போகவே இல்லையாம்.

அடல்ஃபி தியேட்டரில் “ஈவிதா’ பகல் காட்சிக்கே இடம் கிடைத்தது. நான் நுழைந்தபோது தனியாகப் பத்து நிமிடம் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். என் ஒருத்தனுக்காக ஒரு பெரிய கோஷ்டியே பாடி நடிக்கப் போகிறது என்ற பெருமை சின்னாபின்னமாக, சீக்கிரமே அவை நிறைந்தது. நாலு மாதமாக ஒவ்வொரு தினமும் ஹவுஸ்ஃபுல்லாக நடக்கிற நாடகமாக்கும் ஈவிதா.

“”ஈவிதாவா நடிக்கிற எலினா ரோஜர், வீட்டுலே விசேஷம்னு அர்ஜெண்டினா போய்ட்டாளாம். இன்னிக்கு இன்னொரு பொண்ணு தான் நடிக்கறா” பக்கத்து சீட் அண்ணாச்சி கொஞ்சம் வருத்தத்தோடு சொல்ல, அனுதாபத்தோடு தலையாட்டுகிறேன்.

ஐம்பதுகளில் அர்ஜெண்டினா அதிபராக இருந்த மேனுவெல் பெரானின் மனைவி ஈவா பெரான் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் இது. சின்னக் கிராமத்தில் பாடகியாக வாழ்க்கையைத் தொடங்கி, அர்ஜெண்டினா தலைநகர் போனஸ் அயர்ஸ் வந்து மானுவல் பெரானின் ஆசை நாயகியாக, அப்புறம் அவருடைய அன்பு மனைவியாக, நாட்டு மக்களின் பேரன்புக்குப் பாத்திரமான தலைவி ஈவிதாவாக எனப் படிப்படையாக உயர்ந்து, எதிர்பாராத தருணத்தில் நோயில் விழுந்து மரித்த ஈவா பெரானின் வாழ்க்கை பாட்டுக்களுக்கும் நடனத்துக்கும் இடையே பார்வையாளன் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈவா பெரான் சந்தித்தே இருக்காத பொலிவீயா புரட்சிக்காரன் செகுவேரா தான் அந்தப் பார்வையாளன் பாத்திரம்.

“”டோண்ட் க்ரை ஃபார் மீ அர்ஜெண்டினா” (எனக்காக அழாதீர்கள், அர்ஜெண்டினா மக்களே). இறக்கப் போகும் ஈவிதா உருக்கமாகப் பாட அரங்கத்தில் கலங்காத கண் இல்லை. நாடகம் முடிந்து செகுவேரா குரலில் “குட்நைட் அண்ட் கம் எகெய்ன்’ என்று வாய்க்குள் பாடிக்கொண்டு சப்-வே வழியாகத் திரும்புகிறேன்.

“”எப்படி இருந்தது நாடகம்?”- கத்திக்குத்தில் செத்துப்போன ராஜபார்ட் வில்லியம் பக்கத்தில் மிதந்தபடி விசாரிக்கிறார்.

“”பிரமாதம்: ஆமா, நீங்க எப்படி பகல் நேரத்திலே உலாத்தறீங்க?”

“”நானும் மேட்னி ஷோ நடத்துறேன்.” புகைபோல் அந்த ஆவி டிரஃபால்கர் சதுக்கப் பக்கம் எழுந்து போகிறது.

Posted in Adelphi Theater, Diary, Dinamani, Era Murugan, Ira Murukan, Iraa Murugan, London, Series, Thinamani Kathir | 1 Comment »