Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Destruction’ Category

Nuclear Power & Technology – Hiroshima, Nagasaki, Destruction

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 6, 2007

ஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை!

என். ரமேஷ்

1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.

அந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’

நகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.

அணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

ஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அணுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.

எனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,

  1. அமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.
  2. ரஷியா – 16,000,
  3. பிரிட்டன் – 200,
  4. பிரான்ஸ் – 350,
  5. சீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத
  6. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  7. இஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.

1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

கதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மறைமுகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.

அணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.

——————————————————————————————————————-
போர் இன்னும் முடியவில்லை!

உதயை மு. வீரையன்

புகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்?…”

அதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”

இதன் பொருள் என்ன? மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்?

அணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றன.

ஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.

அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.

ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.

இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

நாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.

விமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.

ஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.

அதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.

இவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

அணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.

அணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா? எப்போது தீரும்? என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”

போர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.

வெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை!

(கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்).

Posted in Agni, America, Arms, Atom, Baikonur, bhopal, Bombs, Britain, China, dead, Death, Deficiency, Deformity, Destruction, Effects, Electricity, England, Enriched, Enrichment, Fights, France, Hiroshima, Impact, International, Israel, Japan, Killed, leak, London, medical, Missile, Mohawk, Nagasaki, Nuclear, Pakistan, Palestine, Peace, Power, Russia, Technology, Tragedy, UK, Ukaraine, Ukraine, Uranium, US, USA, USSR, War, Weapons, World | 1 Comment »

Warrants of Arrest for the Minister of Humanitarian Affairs of Sudan, and a leader of the Militia/Janjaweed

Posted by Snapjudge மேல் மே 3, 2007

சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஜான் ஜாவீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்

சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.

அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.

யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது


அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன

அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்

சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.

டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.

ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.

Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »

Tamil nadu Government moves in a Clandestine manner against High Court Orders

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டம் தயார்?

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அமைச்சரவையும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இத்திட்டத்துக்கு தேவையான 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதற்கான நிலத்தை கையகப்படுத்த முதலில் உருவாக்கிய திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு மாற்றியது.

இதன்படி பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தேவையான நிலத்தை தமிழக அரசு அளித்தால் தான் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விமான நிலைய விரிவாக்கத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காண பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி, இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளை விரைந்து கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இது தொடர்பான விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப்பணிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இத்தகைய செயலால் பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

==========================================================================
பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 19: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் ஏரியில் 23 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் அளித்த 3-வது நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ளது தாங்கல் ஏரி. சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

அனகாபுத்தூர் வழியாக 200 அடி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் அளித்தவர்களை இந்த தாங்கல் ஏரியின் ஒரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் குடியமர்த்தியது.

இந்நிலையில், இந்த புதிய குடியேற்றத்துக்கு அருகில் உள்ள 23 ஏக்கர் நிலத்தை இப்பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக இருந்த அரசியல் பிரமுகர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கல் ஏரியில் உள்ள நிலத்தை ஒரு சென்ட் ரூ.50 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டது என்றும், இவ்வாறு விற்பனை செய்த நிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வீட்டுவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன என பொழிச்சலூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதன்படி இங்கு நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகள், கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான ஆளும் கட்சி பிரமுகர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

——————————————————————————-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு: சென்னை விமான நிலையம் விரிவாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடன் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பாமக தலைவர் ஜி.கே.மணி.

சென்னை, மே 23: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,069 ஏக்கரில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 1,069 ஏக்கரில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யும் பணிகளால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று கூறி அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக தவிர, மற்ற கட்சியினர் விரிவாக்கப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 1,069.99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதிப்புக்குள்ளாகும் குடிசைகள், மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் மொத்தம் 947. இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மறுவாழ்வுக்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். விரிவாக்கப் பணியின் முதல் கட்டமாக இத்தகைய மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் விரிவாக்கப் பணிகளை இந்திய வானூர்திக் குழுமம் (ஏஏஐ) ஏற்று நடத்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும். இதற்கென 4,820.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். புதிய விமான நிலையம் அமைக்கும் பணியையும் இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடியிலும் அடுத்தகட்டமாக ரூ. 1,000 கோடியிலும் மொத்தம் ரூ. 2,000 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநிதி.

விரிவாக்கப் பணி மற்றும் புதிய விமானம் அமைக்கும் பணியை இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழக அரசு இதுவரை, தனியார் மூலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ஏஏஐ மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

  • நிதியமைச்சர் அன்பழகன் (திமுக),
  • டி.சுதர்சனம்,
  • டி. யசோதா (காங்.),
  • டி. ஜெயக்குமார் (அதிமுக),
  • ஜி.கே. மணி,
  • இரா. மலையப்பசாமி (பாமக),
  • சி. கோவிந்தசாமி,
  • டி. நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூ.),
  • வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்),
  • வீர. இளவரசன் (மதிமுக),
  • பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
  • வி. பார்த்தசாரதி (தேமுதிக),
  • கலிலூர் ரஹ்மான் (டிஎன்ஐயுஎல்),
  • செல்வம்,
  • கே. பாலகிருஷ்ணன் (டிபிஐ),
  • பூவை ஜெகன்மூர்த்தி,
  • சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோர் பங்கேற்றனர்.

———————————————————————————————————————————

பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

சென்னை பொழிச்சலூர் தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள ஞானமணி நகர்.

சென்னை, ஜூலை 2: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தாங்கல் பகுதியில் புறம்போக்கு நிலத்தை இப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானமணி உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 200-க்கும் அதிகமானோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் இங்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாம்பரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் திமுக பிரமுகரும் பொழிச்சலூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஞானமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது சொந்த ஜாமீனில் ஞானமணி விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் ஞானமணி நகர், விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துணையுடன் அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக ஞானமணி மீது இப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் தொடர்பான அவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறையினர் எடுத்து சென்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந் நிலையில் வருவாய்த் துறை நடவடிக்கையை எதிர்த்து ஞானமணி தரப்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு வருவாய்த் துறை சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தாம்பரம் வட்டாட்சியர் சுப்பையா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னரே தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மணப்பாக்கம் கிராமத்தினர் போர்க்கொடி – எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியரிடம் மனு

சென்னை, ஜூலை 12: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, எம்.எல்.ஏ. யசோதா துணையுடன், மணப்பாக்கம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மொத்தம் 1070 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், மணப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாக்கம் மார்பிள் ரிவர்வியு விரிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் புதன்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஆட்சியர் பிரதீப் யாதவை சந்தித்தனர்.

“எங்கள் பகுதியில் 250 வீடுகள் உள்ளன. நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது. நாங்கள் அப்பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறி மனு அளித்தனர்.

இதற்கு ஆட்சியர் யாதவ் பதில் கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிலத்தை இழப்போருக்கு உரிய இழப்பீடு தரப்படும்’ என்றார்.

பொதுமக்களுடன் வந்த யசோதா எம்.எல்.ஏ. கூறியது:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 1500 வீடுகள் தான் பாதிக்கப்படும் என முதலில் கூறினர். தற்போது 300 வீடுகள் தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.

சிலர் பாதிப்படையும் போது, அவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும். எனது தொகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என்றார் யசோதா.

——————————————————————————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கத்துக்கு கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டம்: தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புதிய நுழைவாயில்

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு போரூரை அடுத்த கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்காக முதலில் 1,457 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் வடக்கில் உள்ள பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலம் கையகப்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4,820 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்படி, விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முதலில் அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் விரிவாக்கத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கும் தற்போதைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் நடுவில் ஆறு (அடையாறு) குறுக்கிடுவதால் திட்ட செயலாக்கத்தில் நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மணப்பாக்கம் முதல் கோவூர் வரையுள்ள பகுதியில் 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய அரசாணை அக்டோபர் 9-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மணப்பாக்கத்தில் 87.85 ஏக்கரும், கெருகம்பாக்கத்தில் 144.57 ஏக்கரும், கொளப்பாக்கத்தில் 145.69 ஏக்கரும், தரப்பாக்கத்தில் 32.56 ஏக்கரும், கோவூரில் 22.51 ஏக்கரும் என மொத்தம் 1,069 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் மணப்பாக்கம் முதல் தரப்பாக்கம் வரையுள்ள நிலங்களில் 3-வது ஓடுபாதையும், தரப்பாக்கம், கோவூரின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலத்தில் புதிய முனைய கட்டடங்களும் அமைய உள்ளன.

மேலும், புதிய முனையங்களை பயன்படுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு? விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி விமான நிலையத்தின் 2 பெரிய ஓடுபாதைக்கு நடுவே அடையாறு செல்லும்.

இதனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலை என்ன?

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு அரசாணை (ஜி.ஓ. எம்எஸ். 108) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இருப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், போரூர், நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டால் இவர்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என இப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு இந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கை.
——————————————————————————————————————————————————-

விமான நிலைய விரிவாக்கத்தால் 381 வீடுகள் இடிக்கப்படும்

சென்னை,நவ. 7: சென்னைக்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விமான நிலையம் அருகேயுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் 1069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. புதிய திட்டத்தால் 381 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் பட்டா நிலத்தில் வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் அரசு கூறியிருப்பதாவது:

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையம் 1151 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுபாதைகள் இரண்டு உள்ளன. சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. எனவே, விமான நிலையத்தை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக விமானங்கள், வானிலேயே வட்டமடித்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாகிறது. எனவே விமான நிலையம் அருகே 583 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், பல்லாவரம் கன்டோன்மெண்ட், பம்மல் போன்ற இடங்களில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் 5050 வீடுகளை இடிக்க வேண்டியிருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு பதிலாக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்த 2-5-2007 ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தால் 381 வீடுகள் மட்டுமே பாதிக்கப்படும்.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். 2005-ம் ஆண்டில் அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப இப்பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொது நோக்கத்துக்காக இப்போது இந்த இடத்தில் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1069 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இந்திய விமான நிலையம் ஆணையம் 1-8-2007 ல் அனுமதி அளித்துள்ளது. இது தவிர திருவள்ளூர் தாலுகா ஸ்ரீபெரும்புதூரில் நவீன விமான நிலையம் அமைக்க 4,820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.குலசேகரன் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

——————————————————————————————————————————————————-

Posted in AAI, abuse, ADMK, Agitation, AIADMK, Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Bribes, Chennai, Collector, Compensation, Corruption, Destruction, Dhaangal, Dharapakkam, Dharappakkam, DMK, DPI, encroachment, Expansion, Extension Project, Gaul Bazaar, High Court, Homeless, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjeepuram, Kanjeevaram, Karunanidhi, Kerugampakkam, Kerukampakkam, kickbacks, Kolapakkam, Kolappakkam, Lake, Law, Madras, Manapakkam, Manappaakkam, Manappakkam, Manmohan Singh, MK, Njaanamani, Njaanamani Nagar, Njamani Nagar, Njanamani, Njanamani Nagar, Order, Pallavaram, PMK, Polichaloor, Polichalur, Power, Pozhichaloor, Pradeep Yadav, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Tamil Nadu, Thaangal, Thaankal, Tharapakkam, Tharappakkam, TN | 1 Comment »