Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘deaths’ Category

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Human Rights, Encounter Deaths – Crime, Law and Order

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

“தோட்டாக்கள்’ எழுதும் தீர்ப்புகள்!

உ . நிர்மலா ராணி

தில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.

அதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

தாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.

ஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.

பின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

போலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.

அவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.

மோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும் பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.

இதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.

உண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா? ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார்? அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா? ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.

சட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா? சிந்திப்போம்!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

————————————————————————————————————————————————

கூலிப்படையின் குருகுலங்களாய்…

சு. பிரகாசம்


தமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.

ரவுடிகளை மட்டுமல்ல! தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.

எனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.

சிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல! சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.

சிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே! எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.

சிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம்! ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா! என…

சிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி!

அய்யா! உணவை வாயில் வைக்க முடியலிங்க! என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்! என்றாராம் சிறை அதிகாரி!

வீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய்! இவங்க போலீஸ் இல்லைடா! நம்ம குருகுலத்து தெய்வங்கள்! என்றாராம் கூலிப்படைத் தலைவன்! சக கூட்டாளிகளிடம்.

இவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.

சிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.

கைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன்! ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.

அரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒருபகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.

அன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.

தமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.

சிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

மத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.

கைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

சிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

சிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.

கைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

சிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.

கைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.

விசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.

சிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

சிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.

ஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இல்லையேல் தனிநபர் ஆகட்டும்! அரசியல்வாதிகளாகட்டும்! ஆளும் அரசுக்கு எதிரானவர்களா! எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.

எனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)

Posted in Arms, Attorney, CBI, Courts, Dada, dead, deaths, Delhi, Don, Encounter, guns, HC, Judges, Justice, Law, Lawyer, mafia, Mob, Order, Police, Ravi, SC, terror, Terrorism, Terrorists, Vellai, Weapons | Leave a Comment »

Road Accidents & Traffic Deaths – Travel Safety issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

சவால்விடுக்கும் சாலை விபத்துகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

உலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.

2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.

தமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.

அரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.

“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.

விபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.

“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.

சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்!

Posted in Accidents, Auto, Automotive, Bus, car, Chennai, Construction, CoP, dead, deaths, deduction, Fast, Helmet, Highway, infrastructure, Injured, Injury, Insurance, Kill, Law, Limb, Madras, Metro, Obey, Order, passenger, Police, Policy, Premium, Reimbursement, Rikshaw, Road, rules, Safe, Safety, Speed, Street, Traffic, Travel | Leave a Comment »

Rains toll in Karnatata, Kerala, Andhra Pradesh and Maharashtra reaches 157

Posted by Snapjudge மேல் ஜூன் 26, 2007

மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் மழையின் வேகம் தணிந்தது: சாவு எண்ணிக்கை 157 ஆக உயர்வு

மும்பை, ஜூன் 26: கடந்த சில நாட்களாக பெரும் பொருள் சேதத்தையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்திய மழையின் தீவிரம் திங்கள்கிழமை குறைந்தது. இதையடுத்து, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. இருப்பினும், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களான கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை திங்கள்கிழமை பெய்தது. மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மிகவும் கனமழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கனமழை, வெள்ளத்துக்கு 4 மாநிலங்களிலும் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.

புணே அருகில் தக்லி-ஹாஜி என்ற கிராமத்தில், 6 முதல் 8 வயது நிரம்பிய சிறார்கள் 4 பேர் மழை நீரால் நிரம்பியிருந்த சாக்கடைப் பள்ளத்தில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

கர்நாடகத்தில் தண்ணீர்பாவி கடலோரம் மூழ்கிய சரக்குக் கப்பலின் மாலுமி சடலம் கரையோரம் ஒதுங்கியது. இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களில் பெய்த மழைக்கு கர்நாடகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்; 4500 பேர் வீடிழந்துள்ளனர் என அம் மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். கேரளத்தில் 59 பேரும் ஆந்திரத்தில் 37 பேரும் மகாராஷ்டிரத்தில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலும், தாற்காலிக முகாம்களிலும் அதிகாரிகள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Center, Dam, dead, deaths, Disaster, Environment, Flood, Govt, Gujarat, Health, Homes, Houses, HR, Insurance, Karnatata, Kerala, maharashtra, Monsoon, Mumbai, Nature, NGO, Ocean, people, Rains, relief, Rivers, Sea, service, TN, victims, Volunteer, Water, Winds | Leave a Comment »

Massacres, Encounters, Jail Deaths, TADA, POTA, Torture killings – TSR Subramanian

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மோதல்களா, படுகொலைகளா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

குஜராத்தில் நடந்த “”போலி மோதல்” சம்பவம் எல்லோருடைய மனதையும் பாதித்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியையும் வேறு சில தலைவர்களையும் தீர்த்துக்கட்ட வந்ததாகக் கூறப்பட்ட “”தீவிரவாதி” சோரபுதீன் என்பவர் போலீஸôருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. சோரபுதீனுடன் அப்போது இருந்த அவருடைய மனைவி கெüசர் பீவி பிறகு காணாமல் போய்விட்டார்; சோரபுதீன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த மற்றொரு சாட்சி அச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கொல்லப்பட்டார்.

குஜராத் மாநில அரசின் சி.ஐ.டி. போலீஸôர் இப்போது இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். முழு உண்மைகளும் இன்னும் தெரியவில்லை. ரத்த வெறிபிடித்த திரைப்பட கதாசிரியர் கூட கற்பனை செய்யத் தயங்கும் ஒரு “”கோரமான கதை” அரங்கேறி முடிந்திருக்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலைகாரர்களாக மாறும்போது, சமூகம் தன்னுடைய பாதுகாப்புக்கு யாரை நாடும்?

“”மோதல்கள்”, அதிலும் “”போலி மோதல்கள்” சமீபகாலத்தில்தான் இந்திய சமுதாயத்தில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளை எதற்காகவும் மன்னிக்க முடியாது.

1960-களிலும் 1970-களிலும் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தார்த்த சங்கர் ராய் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்தான், நக்ஸல்களை வேட்டையாடும் போலி மோதல்கள் ஆரம்பித்தன. சாரு மஜும்தார் என்ற நக்ஸலைட் தலைவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் ஒழிக்க, மேற்கு வங்கப் போலீஸôர் சட்டத்துக்குப் புறம்பான இந்த வழிமுறையைக் கையாண்டனர்.

நக்ஸல்கள் பலர் கொல்லப்பட்டபோதும், நக்ஸல்பாரி இயக்கமும் வளர்ந்தது; நக்ஸல்கள் உருவாகக் காரணம் வெறும் சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டும் அல்ல. சமூக, பொருளாதார நிலைகளில் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போதெல்லாம் இம் மாதிரியான வன்செயல்கள் மக்களிடமிருந்து வெடிக்கும்.

நக்ஸல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய பிறகு, பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆளுநராக சித்தார்த்த சங்கர் ராய் நியமிக்கப்பட்டார். காவல்துறைத் தலைவராக இருந்த கே.பி.எஸ். கில் அவருடன் சேர்ந்து காலிஸ்தான் தீவிரவாதிகள் பலரை இப்படிப்பட்ட மோதல்களில் வெற்றிகரமாக அழித்தனர். அதே சமயம் இருதரப்பிலும் ஏராளமாக ரத்தம் சிந்த நேர்ந்தது.

அதன் பிறகு இந்த “”மோதல்” முறை ஒழிப்பு, உத்தரப்பிரதேசத்தின் பண்டல்கண்ட் பகுதியில் கொள்ளைக்காரர்களைத் தீர்த்துக் கட்ட பயன்படுத்தப்பட்டது. இதிலும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்தது. உண்மையான வெற்றி எப்போது கிடைத்தது என்றால், கொள்ளைக்காரர்களுக்கென்று உழைத்துப் பிழைக்க அரசே நிலம் கொடுத்தபோதுதான் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்தன.

ஆனால் இத்தகைய முறை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பலன் தரவில்லை. அங்கு ராணுவம், போலீஸôரின் அடக்குமுறையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகச் சண்டையிடும் மனோபாவத்திலேயே இருந்தனரே தவிர சமாதான வழிமுறைகளை ஏற்கத் தயாராக இல்லை.

வட இந்திய மாநிலங்களில் சமூக விரோதிகளை ஒடுக்க துணை நிலை ராணுவப் படைகளைச் சேர்ந்த இடைநிலை அதிகாரிகளும் ஜவான்களும் இதே போலி மோதல் முறையைக் கையாண்டனர். அத்துடன் சிறந்த போலீஸ் அதிகாரி என்ற பதக்கத்தையும் பாராட்டையும் வாங்க இந்த மோதல்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

முதலில் சில சமூக விரோதிகள் கொல்லப்பட்டாலும் சில அப்பாவிகளும் தவறுதலாக பலியாக ஆரம்பித்தனர். பிறகு, திட்டமிட்டே “”இந்த மோதல்கள்” மூலம் பலரைக் கொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

போலி மோதல்கள் மூலம் அப்பாவிகள் கொல்லப்படுவது அதிகரித்ததால்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் வட-கிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட ஆரம்பித்தது. இப்போதோ போலி மோதல்கள் என்பது பாதுகாப்புப் படையினருக்கு பணம் கொடுத்தால் நடைபெறும் “”கூலிக்குக் கொலை” என்றாகிவிட்டது. காக்கிச் சீருடையில் இருப்பவர்கள் பண ஆதாயத்துக்காகக் கொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இங்கே கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன. சட்டத்தை மீறுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனே, கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நீதித்துறை தவறிவிட்டது.

பயங்கரவாதிகளும் கொள்ளைக்காரர்களும் போலீஸôரால் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆவதும் பிறகு தலைமறைவு ஆவதும் பின்னர் அதே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டதால், இது நேரத்தை விரயமாக்கும் வேலை, நீதித்துறைக்கு முன்பிருந்த தண்டிக்கும் அதிகாரம் போய்விட்டது, இனி நாமே தண்டித்துவிடலாம் என்ற முடிவுக்கு போலீஸôரையும் பாதுகாப்புப் படையினரையும் தள்ளியது.

இத்தகைய போலி மோதல்கள் அதிகரிக்க, இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் நீதிமன்ற நடைமுறைகள் முக்கிய காரணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதை அடைவதற்கான நடைமுறையும் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.

பயங்கரவாதிகள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், சமூகவிரோதிகள் போன்றவர்களைத் தண்டிப்பதில் நீதித்துறை தவறினாலும் சட்டத்துக்குப் புறம்பான இத்தகைய படுகொலைகளைச் செய்வதில் நியாயமே இல்லை.

சட்டத்தை அமல் செய்ய வேண்டியவர்களுக்கு தரப்படும் அதிகாரம் அல்லது அவர்களே தங்களுக்கு வழங்கிக் கொள்ளும் அதிகாரம், அதிகார துஷ்பிரயோகமாகவே முடியும் என்பதுதான் இயற்கை.

1970-களில் “மிசா’, “காஃபிபோசா’ போன்ற சட்டங்களையும், பின்னாளில் “தடா’ சட்டத்தையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு தரும் இதைப்போன்ற அதிகாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், மேல் அதிகாரிகளின் கண்காணிப்பும் இருக்க வேண்டும்; இல்லையென்றால் இவை தவறாகவே பயன்படுத்தப்படும்.

சோரபுதீன் விஷயத்தில் அவரைப் போலீஸôர் போலி மோதலில் சுற்றி வளைத்துக் கொன்றுள்ளனர். அவரைப் போலீஸôர் தடுத்து அழைத்துச் சென்றபோது உடன் இருந்த அவருடைய மனைவி கொல்லப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டார். சோரபுதீனைக் கொன்றதை நேரில் பார்த்த சாட்சியும் கொல்லப்பட்டுவிட்டார்.

இச் சம்பவத்தில் குஜராத் போலீஸôர் மட்டும் சம்பந்தப்படவில்லை, வேறு மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் காவலர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதே அளவுக்கு இல்லாவிட்டாலும், இத்தகைய போலி மோதல்கள் இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் இத்தகைய போலி மோதல்கள் நடைபெறுகின்றன என்றால்கூட அதைப் புரிந்து கொள்ளமுடியும், ஆனால் அவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால் இதை பிற மாநிலங்களில் அரங்கேற்றுவதை சகித்துக் கொள்ளவே முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட இச் சூழலில் இதுபோன்ற மோதல் சம்பவங்களையும், படுகொலைகளையும் மக்களும், பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் விடுவது கவலையை அளிக்கிறது. இந்த விசாரணைகளே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிரானவை என்று சிலர் நினைப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது.

சமூகவிரோதிகளை ஒழிக்க புனிதமான நடவடிக்கையாக போலீஸôரால் கருதப்பட்ட இச் செயல் பணத்துக்காகக் கொலை செய்வது என்ற நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. இதை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒழிக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Agitation, Army, Bengal, Blast, Bomb, Bundelkand, Bundelkhand, Cell, Chaaru Majumdar, COFEEPOSA, COFEPOSA, Convict, conviction, Correctional, deaths, defence, Defense, Democracy, Encounter, escape, Federal, Force, Freedom, Govt, Gujarat, Independence, India, Innocent, J&K, Jail, Jammu, Judge, Justice, Kashmir, Khalistan, Khalisthan, killings, KPS Gill, Law, Leninist, Liberation, Majumdar, Majumdhar, massacre, Mazumdar, Mazumdhar, Military, Misa, ML, Modi, Naxal, Naxalbari, Order, Police, POTA, Power, Protest, Punjab, regulations, Shorabudhin, Sidhartha Sankar Roy, Sorabudheen, Sorabudhin, Srinagar, SS Roy, State, Subramanian, Suppression, TADA, terrorist, Thief, Torture, UP, Uttar Pradesh, Victim, WB, West Bengal | 2 Comments »

Defer move to put skull symbols on beedis?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

புகை நடுவிலே…

புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.

புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.

பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.

ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.

அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.

தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.

பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.

நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.

இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.

பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.

According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.

Posted in AIDS, Anbumani, Ban, Beedi, betelnut, Chew, Cigar, Cigarette, Commerce, Consumer, Cost, Customer, deaths, Economy, Employment, Filter, Finance, Govt, Habits, Health, Healthcare, Income, ITC, Jobs, manufacturers, Manufacturing, MNC, Nicotine, Pan Parag, Passive, Protest, Ramadas, Ramadoss, sales, skull, Smoke, smoking, Symbols, Tax, Tirunelveli, Tobacco, warning, workers, wrappers | Leave a Comment »

Police Force & Human Rights: Gujarat & Tamil Nadu’s Law Enforcement – Kalki Editorial

Posted by Snapjudge மேல் மே 9, 2007

குஜராத்: சாம்பலான மனித நேயம்

தமிழகக் காவல்துறை மண்டல ஐ.எ. ஒருவர், ஒரு யுக்தியைக் கையாண்டிருக்கிறார். பல்வேறு காவல் நிலையங்களுக்கு, அப்பகுதியைச் சாராத காவல் துறை ஊழியர்களை மாறுவேடத்தில் அனுப்பியிருக்கிறார். அந்த ஊழியர்கள் சில புகார்களை (புனைந்துதான்) அந் நிலையங்களில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார்கள். மூன்று நாட்களில் திரும்பி வந்த அவர்கள், தங்கள் கண்ணீர்க் கதையைத்தான் விவரிக்க வேண்டியிருந்தது! புகார் தர முயன்ற சிலருக்கு வசவு, வேறு பலருக்கு அடி உதை! கடைசியில், பரிசோதனைக்கு உட்பட்ட அத்தனை போலீஸ்காரர்களும் ஆடிப் போய், தாங்கள் இனி ஒருபோதும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

– இந்த விவரத்தை தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, தேசிய மனித உரிமைக் கழகம் நடத்திய ஒரு முக்கிய பயிற்சித் திட்டத்தின்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

காக்கி உடுப்பணிந்து, கையில் லத்திக்கட்டையைத் தூக்கிவிட்டாலே ஆணவமும் முரட்டுத்தனமும் வந்துவிடுகின்றன என்பதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம். இந் நிலையில், காவல் துறையினருடைய தோரணையில் மாற்றங்களைப் புகுத்தத் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள் எடுத்துவரும் முயற்சிகளையும் பரிசோதனைகளையும் நாம் மனமார வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதற்கு நேர்மாறான போக்கு குஜராத்தில் காணப்படுகிறது!

ஷொராபுத்தீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் காவல் துறையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கௌசர் கொல்லப்பட்டதுடன், அவர் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் வயல்வெளிகளில் தூவப்பட்டிருக்கிறது! இத்தகைய அசுரத்தனமான செயல்களைச் செய்ததோடல்லாமல், கொலை செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள் என்றும் அவர்கள் என்கவுன்டரில் இறந்து போயினர் என்றும் கதை கட்டியிருக்கிறது போலீஸ்! அதனால் கிடைத்த மீடியா கவனத்தாலும் விளம்பரத்தாலும் மக்கள் மத்தியில் “ஹீரோ’க்களாக இந்தப் போலீஸார் சித்தரிக்கப்பட்டும் இருக்கின்றனர்.

இந் நிலையில்தான், மாண்டுபோன ஷொராபுத்தீன் ஷேக்குடைய சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, நம்ப முடியாத உண்மைகள் வெளிவந்திருக்கின்றன!

குஜராத் சம்பவம் வெறும் அதிகார துஷ்பிரயோகம் அல்ல; அது திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது. சிறுபான்மை இனத்தவர் பேரில் அம் மாநிலக் காவல்துறை காட்டிவரும் ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடாக நடந்த இச் சம்பவம் குறித்து இப்போது சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டு வருகிறது.

இத்தகைய துவேஷமும், சக உயிர்களைத் துச்சமாக எண்ணும் குரூரமும், ஆட்சியாளர்களின் மௌன அங்கீகாரமின்றி வளர்வதும் வெளிப்படுவதும் சாத்தியமில்லை.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத துவேஷம் காரணமாக நிகழ்ந்த பல கொடூரக் குற்றங்களைக் கண்டு நாடே நடுங்கியது.

இன்று அதே வகையான குற்றங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் விமரிசையாக நடக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் பொருளாதார ரீதியில் பாய்ந்து முன்னேறியிருக்கலாம்; ஆனால், மனித நேய அடிப்படையில் பார்த்தால் சுடுகாடாகத்தான் இருக்கிறது. மோடி அரசு, சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் என்று வாதாடுவது, “அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொல்வதுபோல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டுமானால், பாரதிய ஜனதா கட்சி தனது தீவிர ஹிந்து அடிப்படைவாதத்தைக் கைவிட வேண்டும். பிற மத துவேஷத்தை வளர்க்கிற பஜ்ரங் தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளிடமிருந்து விடுபட்டு, சுதந்திர அரசியல் இயக்கமாகி, சமதர்ம சமுதாயம் என்ற உயர் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.

இல்லாவிடில், அக் கட்சி மெள்ள அழிவதுடன் “”வேற்றுமையில் ஒற்றுமை” என்னும் இந்தியாவின் ஜீவ கொள்கையின் மீது ரணகாயங்களையும் ஆறாத வடுக்களையும் விட்டுச் செல்லும்.

———————————————————————————————

மனித உரிமைக் கல்வியின் அவசியம்…?

என். சுரேஷ்குமார்

இந்தியாவில் மனித உரிமைக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழுவினர் தற்போது மனித உரிமை கல்விக்கான கல்லூரி, பள்ளிகளுக்கான மாதிரி பாடத் திட்டம், அந்த பாடத்தை ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை ஆகியவற்றை வெளியிட்டு, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை தீர்மானித்திருக்கிறது.

வளர்ந்து வரும் எந்தச் சமுதாயத்திலும் மனித உரிமை மீறல் என்பது எதிர்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பிரச்னை. மனித உரிமை மதிக்கப்படும்போதுதான் எந்தவொரு சமுதாயமும் முழுமையான நாகரிகத்தை எட்டியிருக்கிறது என்று சொல்ல முடியும். இந்த வகையில் மனித இனம் இன்னும் கடக்க வேண்டிய தடைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள், ஏராளம், ஏராளம். மனித உரிமை மீறலைத் தடுப்பது அதன் முக்கியமான முதல் கட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்த கிராமத்தில் பய்யாலால் போட்மாங்கே என்ற விவசாயியின் குடும்பத்தின் மீது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினருக்கு ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியினால் பய்யாலாலின் மனைவி சுரேகா, மகள் பிரியங்காவை ஊருக்கு நடுவில் பய்யாலாலின் மகன்கள் ரோஷன் மற்றும் சுதிரைக் கொண்டு மானபங்கம் செய்ய வலியுறுத்தியதும் அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இருவரையும் படுகொலை செய்ததோடு சுரேகாவையும், பிரியங்காவையும் கிராமத்து ஆண்களால் மானபங்கம் செய்ததோடு கொன்றும் வீசினர்.

2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தப் படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது என்று கேட்டால் – ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன என்று பார்க்கும்போது ஒன்று – மனித உரிமை மீறல் குறித்த கல்வியறிவு இல்லாதது. இரண்டாவது – இம்மாதிரியான செய்திகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காததும், சுட்டிக்காட்டத் தவறியதுமே.

மனித உரிமை குறித்த கல்வி ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக இன்றியமையாதது. இதன்மூலம் மட்டுமே சுதந்திரம், ஜனநாயகம் காக்கப்படும்.

மனித உரிமைக் கல்வியை ஊக்குவிக்க யுனெஸ்கோ 1974-ம் ஆண்டு உலகநாடுகள் அனைத்துக்கும் பரிந்துரை செய்தது. இது தொடர்பாக, மனித உரிமைகளைப் பயிற்றுவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு வியன்னாவில் 1979-ம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி குறித்தும் அதைப் பயிற்றுவிப்பது குறித்தும், மனித உரிமைக் கல்வி குறித்து தனி நபர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரண்டாவது மாநாடு 1987-ம் ஆண்டு மால்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மனித உரிமைக் கல்வி மற்றும் கற்பித்தலை பொது நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் விரிவான பங்கேற்புடன் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தப்பட்டது.

மூன்றாவது மாநாடு 1993 மார்ச் மாதம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் நகரில் நடைபெற்றது. இந்த மாநாடு ஜனநாயகத்திற்கான கல்வி என்பது, மனித உரிமைகள் கல்வியின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவித்தது. மேலும், மனித உரிமைக் கல்வி, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியை மெய்யாக்க ஓர் அடிப்படை தேவை என்பதையும் இம்மாநாடு வலியுறுத்தியது.

மனித உரிமைகள் கல்வியின் அவசியம் 1993-ம் ஆண்டு 171 நாடுகள் பங்கேற்ற மனித உரிமைகளுக்கான உலக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மாநாடு மனித உரிமைகள் மீதான மரியாதையையும் அது ஒரு மெய்யான ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதையும் ஆதரித்தது. இதைத்தொடர்ந்து ஐநா சபை மனித உரிமைகள் கல்விக்கான தீர்மானத்தை 1994-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தத் திட்ட அமல் மற்றும் ஒருங்கிணைப்பு பொறுப்பை ஐநா மனித உரிமைகளுக்கான ஹைகமிஷனிடம் ஒப்படைத்தது.

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான முழுமையான கல்வியை அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கச் செய்வது யுனெஸ்கோவின் நீண்டநாள் நோக்கமாகும். முறையான கல்வித் திட்டத்துடன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வித் திட்டத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் யுனெஸ்கோ வலியுறுத்தியது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை கட்டமைக்க கல்வியாளர்கள், ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாலேயே முடியும்.

மனித உரிமைகள் கல்விக்கான திட்டத்தை 1995-ம் ஆண்டுவரை 125 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, BJP, deaths, Editorial, Enforcement, Govt, Gujarat, Hindu, Hinduism, HR, Human Rights, Influence, Kalki, Law, Lockup, Modi, Murder, Order, Police, Police Station, Power, RSS, Tamil Nadu, TN | Leave a Comment »

Sri Lankan gov’t, LTTE blamed for truce violations – 200 civilian deaths

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு இன்று தெரிவித்துள்ளது.

மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனாலும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட மோதல்களினாலும் விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை மீறியிருக்கிறார்கள் என்றும் சம்பூர் பகுதிகளில் அரச படை நடவடிக்கை மேற்கொண்டதால் அவர்களும் அதனை பெரிய அளவில் மீறியிருக்கிறார்கள் என்றும் கண்கானிப்புக்குழுத் தலைவர் கூறியிருக்கிறார்.

கண்காணிப்புக்குழுவின் ஏனைய தீர்ப்புக்கள்….

மூதூர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்
மூதூர் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்

— திருகோணமலையில் அரச கட்டுப்பாட்டுப்பாட்டிலுள்ள மூதூர் பகுதிகள் மீது வலிந்த தாக்குதலை நடத்தியது புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

— சம்பூர் பகுதிகளில் புலிகளின் கட்டுபாட்டிலிருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல் நடத்தியது அரசபடைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- அரச படைகளின் மீது யாழ்ப்பாணத்தில் புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்கள் புலிகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

யாழ் மோதல்களும் பெரும் அவலங்களுக்கு வழி செய்தன
யாழ் மோதல்களும் பெரும் அவலங்களுக்கு வழி செய்தன

—– விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அரச படைகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களும், முகமாலையின் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது அரச படைகள் வலிந்து தாக்குதல்களை நடாத்தியதும் அப்பகுதிக்குள் உள்புகுந்ததும் அரச படைகள் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதியளிக்காது, சுயாதீன விசாரணைகளிற்கு இடமளியாதது அரச படைகளும், புலிகளும் அதாவது இரு தரப்பும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

—- விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களிற்கு உட்செல்லவும், வெளியேறவும் சிவிலியன்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது அரச படைகளும், புலிகளும் இழைத்த யுத்த நிறுத்த மீறல்.

Posted in Ceylon, deaths, Eezham, LTTE, North East, Norway, Peace, Rajapakse, Sri lanka, Tamil, Triconamalee, Truce, Viduthalai Puligal, Violations | Leave a Comment »