Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘dancer’ Category

Interview with Narthaki Nataraj – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

நர்த்தகி நடராஜ் உடனான சென்ற வார சந்திப்பின் தொடர்ச்சி…

‘‘லண்டன் பி.பி.ஸி.யில், ஒரு பரதக் கலைஞர் என்கிற முறையில், என்னைப் பேட்டி காண அழைத்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் சமாளித்துப் பதில் சொன்னேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் அந்த நிருபர் : ‘நீங்கள் பரத நாட்டியக் கலைஞராகியிராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?’

பேட்டி காணப்படும் பலரிடம் கேட்கப்படக் கூடிய சராசரிக் கேள்விதான் இது. ஆனால் என் பதில் மட்டும் சராசரியானதல்ல…

‘பரதக் கலைஞராக உயர்ந்திராவிட்டால் மும்பை அல்லது கொல்கத்தாவில் விலைமாதாக இருந்திருப்பேன்’ என்று சொன்னேன். உண்மையும் அதுதான்!’’

பால் திரிபுக்குள்ளாகும் அனேகம் குழந்தைகளைப் போல் நர்த்தகியும் பெற்ற தாயால் வீட்டை விட்டு விரப்பட்டு வெளியேறியவர்தான். சிறிய வயதிலேயே சக்தி துணையாக வாய்த்ததால் இருவரும் சேர்ந்தே குடும்பம் ஏற்படுத்திய காயங்களையும் பள்ளிச் சூழல் இழைத்த அநீதிகளையும் தாங்கி வளர்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள் நிகழ்வது என்ன என்று புரிவதற்குள் இரக்கமற்ற, உயிர் உறிஞ்சும் வெளி உலகில் வந்து விழுந்து, திருநங்கைக் கூட்டத்தில் இணைந்து, அந்த வாழ்க்கை முறை தவறு என்ற விவேகம் இயல்பிலேயே இருந்ததால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கலை ஆர்வம் இவர்களை தஞ்சையில் கிட்டப்பா பிள்ளையிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. கடுமையான சோதனைக்குப் பிறகே அவரும் இவர்களை சிஷ்யைகளாக ஏற்றிருக் கிறார். வெளியே தங்குவது நித்திய சோதனையாக இருக்கவே, வீட்டிலேயே அடைக்கலம் கேட்டு இந்த மாணவிகள் இறைஞ்ச, அவரும் ஏற்றுப் பாதுகாப்புத் தர, அதுவே அவர்களுடைய குருகுலவாச மாக இன்று அறியப்படுகிறது.

கிட்டப்பா பிள்ளை வஞ்சனையில்லாமல் வழங்கிய கலைக் கொடையும் நர்த்தகி, சக்தியிடம் இயல்பாகவே அமைந்திருந்த பக்தியும் அவர்களைச் சமூகத்தின் களைகளாக மாறாமல் காப்பாற்றியதுடன் மிக உயர்ந்த கலைஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நர்த்தகி மட்டுமே நடனக் கலைஞராக அங்கீகாரம் பெற்றாலும் சக்தி அவரது ஒப்பனை, அலங்காரம் வழிகாட்டல், விமர்சனம் அனைத்திலும் கலந்து நிற்கும் துணையாக விளங்குகிறார். மீடியா இன்று நர்த்தகியைக் கலைஞர் என்ற முறையிலேயே வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்…

‘’இன்னமும் எங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தர யாருமே யோசிக்கிறார்கள். கற்பகாம்பாள் அருகே, கலை மையங்கள் சூழ மயிலாப்பூரில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நன்கு தெரிந்தவர்கள்கூட வீடு தர நாசூக்காக மறுக்கிறார்கள்- பொய்க் காரணங்கள் சொல்கிறார்கள். சமுதாய அங்கீகாரமும் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் பெற்ற எங்களுக்கே இந்த கதி என்றால் திருநங்கைக் கூட்டத்தின் இதர சகோதரிகளுடைய கதி என்ன…?

பசியின் கொடுமைதான் அவர்களை அலங்கோலத்தில் தள்ளுகிறது என்பதை சமுதாயம் மறந்துவிடுகிறது. சிறு வயதில் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்புக் கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படிப்பட்டக் கூட்டத்தில் போய் விழப்போகிறார்கள்? புறக்கணிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று திரண்டால் நிகழக்கூடிய விபரீதம்தான் திருநங்கைக் கூட்டத்தினருக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்தையை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. ஆனால் இனியேனும் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.

தீராநோயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மட்டும் திருநங்கைகள் மீது அரசும் என்.ஜி.ஓ.க் களும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தக் கவனம், வளர்ந்து விபசார வலைக்குள் சிக்கிவிட்டவர்கள் மீது மட்டுமே விழும்.

விவரம் புரியாத வயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தையும், புரிந்துகொள்ள முடியாமல், பெற்ற தாய் உள்பட அனைவரின் புறக்கணிப்பையும் சமாளிக்க முடியாமல் உடைந்து சிதறும் இளம் திருநங்கைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்..?

முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். இந்தக் குழந்தைகளும் இறைவனின், இயற்கையின் சிருஷ்டி என்கிற உணர்வு பலத்தைக் கொடுங்கள். பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெரும்பாலும் அவர்கள்தான் முதலில் அடையாளம் காண்பார்கள். பெற்ற தாய் கூட ஆண் பிள்ளை என்பதாகவே கொண்டு, பெண்குழந்தைக்குத் தரக்கூடிய கவனத்தைத் தரமாட்டாள். ஆனால், அந்தப் பருவத்தில் திருநங்கைகளுக்குப் பெண்மையின் அரவணைப்பும் பாதுகாப்புமே ரொம்ப தேவைப்படுகின்றன. ஆண் உலகம் அவர்களை அச்சுறுத்தி சீண்டுகிறது.

இதெல்லாம் எப்போது, எப்படி மாறும் என்று யோசித்து மலைத்துப் போய் விடக்கூடாது. அரசு ஜி.ஓ.க்களும் விதிகளும் வெறும் புள்ளிகள்தான். அவற்றைப் பயன்படுத்தித் தப்பில்லாமல் கோலம் போட வேண்டியது சமுதாயம்தான். பொதுவாக எந்த மாற்றமும் அடிமட்ட மனிதர்களிடையே நிகழவேண்டும் என்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் மனமாற்றம் மேல்தட்டு மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செல்வச் சீமான்கள் வீட்டுத் திருநங்கைகளுக்குக்கூட இன்று ஏழைகளின் குடிசைகளில்தான் இடமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அந்த அங்கீகாரம் ஆரோக்கியமானதாக எப்போதும் இருப்பதில்லை என்பதுதான் கொடுமை. ஆனால் அருவருப்போடு அடித்துவிரட்டாத இடத்தில் தானே திருநங்கைகள் அடைக்கலம் தேட முடியும்… இதை மாற்றுவதும் திருநங்கைகளை உயர்த்துவதும் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.’’

திருத்தமாகப் பேசி முடிகிறார் நர்த்தகி. அவர் நாட்டியத்தின் அசைவுகளிலும் கை முத்திரைகளிலும் காணக்கூடிய திருத்தம் அவர் சிந்தனையில் பளிச்சிடுகிறது. நடனத்தின்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் சத்திய ஒளி அவர் சொற்களிலும் வீசுகிறது.

– சீதா ரவி, சுகந்தி ஜி.பாரதி
படங்கள் : ஸ்ரீஹரி

– சஞ்சயன்

————————————————————————————–

From Thozhi.com


திருநங்கையர் நர்த்தகி நடராஜன், சக்தி பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்வு திருநங்கையரின் உலகை அறிமுகப்படுத்தியது

– ந. கவிதா

கோவையில் மாதந்தோறும் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திவந்த ‘அற்றைத்திங்கள்’ நிகழ்ச்சி இந்த மாதத்திலிருந்து சென்னையில் நடைபெறுகிறது. 29.04.07 அன்று இந்நிகழ்வின் முதல் கூட்டம் புக்பாயிண்டில் தொடங்கியது. இதில் திருநங்கையர் நர்த்தகி நடராஜும் சக்தி பாஸ்கரும் கலந்துகொண்டு உரையாடினர்.

தமக்குள் உணர்ந்த பெண்மையை உன்னதமெனக் கொண்டாடி, அந்தப் பெண்மையை வெளிப்படுத்தும் வடிகாலாக நடனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட திருநங்கையர் இவர்கள்.

பால்திரிபு நிலை, சமூகத்தின் ஏளனத்தையும் குடும்பத்தின் புறக்கணிப்பையும் தந்த நிலையிலும் துயரங்களைக் கடந்து லட்சியப் பயணத்தை மேற்கொண்ட இத்திருநங்கையரின் உரையாடல் அவர்களது வேதனைகளைவிட அவர்கள் அடைந்துவிட்ட இலக்கின் மனநிறைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆளற்ற மைதானமும் மரங்கள் சூழ்ந்த கண்மாய்க் கரையும், பழைய கோயில் மண்டபங்களும் இவர்களின் நடனத்தையும் அற்புதமான கனவுலகத்தையும் கண்டுகொள்ளும் அரங்குகளாக இருந்தன. கீற்றுக் கொட்டகையில் கடைசி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுத் திண்ணையில் உறங்கிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர்களின் ஆதர்ச நாட்டியக்காரர்களாக பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் இருந்தனர்.

விளையாட்டிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நர்த்தகிக்கு, அவரைப் போலவே புறக்கணிப்பிற்குள்ளான சக்தி தோழியாகக் கிடைத்தார். இவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் தனி உலகில், பாகுபாடு காட்டாத மனிதர்களும் பசித்தவர்களு்கு எப்போதும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்த இவர்களது வளமிக்க வீடும் இருந்தன.

முகபாவத்திலும் ஒப்பனை செய்யும் ஆர்வத்திலும் நடனத்திலும் இவர்களுக்கு இருந்த அளவில்லாக் காதல், குடும்பத்தினரின் வெறுப்பிற்கு இவர்களை ஆளாக்கியது. இது நர்த்தகியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்தபோது, வசதியான வீட்டில் வாழ்ந்த சக்தியும் அவருக்காக ஊரைவிட்டு வெளியேறினார். பல விதமான துயரங்களுக்குப் பிறகு, வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.

பால்திரிபையும் வறுமையையும் பொருட்படுத்தாமல், வைரங்களைக் கொட்டித் தரும் மாணவிகளைப் போலவே இவர்களையும் பயிற்றுவித்த தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை, தஞ்சை நால்வரின் மார்க்கங்களைக் கற்றுத் தந்தார். நர்த்தகி ஒரே ஆண்டில் ஆறு வருடங்களில் முடிக்க வேண்டிய நடன மார்க்கங்களைக் கற்று, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

‘எல்லா வேதனைகளின்போதும் ஏமாற்றங்களின்போதும் தாயாக, தோழியாக என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி பாஸ்கர்தான் காதலிலும் காமத்திலும் நான் சிக்கிவிடாதபடி வழிகாட்டி இன்றைய என் சாதனையை எட்டச் செய்தவள்’ என்றார் நர்த்தகி. சக்திதான் தனக்கு எல்லா சக்தியும் என்று தன் தோழியைப் பற்றிப் பெருமிதப்படுகிறார் அவர்.

நர்த்தகி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் நான்கு ஆண்டுகள் விரிவுரையாளர், மத்திய அரசின் மானியத்தை இருமுறை பெற்றவர். தற்போது இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

சக்தி பாஸ்கர் இந்த உரையாடலில் மிகக் குறைவாகவே பேசினார். இருந்தாலும் சில வார்த்தைகளில் அரவாணிகளின் வாழ்வியல் துயரைப் புரியவைத்தார். அரவாணிகளைப் பொறுத்தவரை காதல் ஏமாற்றம் தரும் விஷயம் என்றார் அவர். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் பெரும்பான்மையினரின் வாழ்க்கையாக இருக்கும் சூழலில், லட்சியங்களை அடைய, அளவற்ற சுதந்திரமுள்ள அரவாணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலுக்கு முன்பாக, பீஷ்மரைக் கொல்ல சிகண்டியாக உருவெடுத்த அம்பையின் கதையை நடன வடிவமைத்திருந்த நர்த்தகியின் அந்த நடனக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவரது நடனத்தில் எழுச்சியும் உணர்வுகளும் மிக்க முகபாவங்கள் அழகுற அமைந்திருந்தன.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும் நடன வகைகளுள் ‘வீழ்ந்தாடல்’ எனும் வகை ‘பேடியாட’லைக் குறிப்பதுதான் என்று சொன்ன நர்த்தகியின் பேச்சு மிகுந்த புலமையோடு வெளிப்பட்டது. இறப்பதற்குள் ஒரு அரவாணியைத் தனக்குப் பின் உருவாக்குவதே தன் ஆசை என்றார் நர்த்தகி. நிகழ்விற்கு நூறு பேர்தான் வந்திருப்பார்கள் என்றாலும் அரங்கம் அவரது உரையில் கட்டுண்டிருந்தது என்று சொல்லலாம்.

பிறகு நர்த்தகி, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். இறுதியாக எழுத்தாளர் தேவிபாரதி நன்றி கூறினார்.

Posted in Ali, Aravaani, Aravani, Artist, Arts, Biosketch, Classic, Classical, dancer, Faces, Interview, Kaalachuvadu, Kalachuvadu, Kalki, Narthaki, Nataraj, people, profile, Sakthi Baskar, Sakthi Bhaskar, Shakthi Baskar, Shakthi Bhaskar, Sigandi, Sikandi, Transgender | 1 Comment »

Padma Subramaniyam – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஒரு படத்தின் படப்பிடிப்பு… ஒரு குழந்தை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்து அழுகிற மாதிரி காட்சி. குழந்தை பயந்து, தயங்கியது. அந்தக் குழந்தையின் தந்தையே படத்தின் இயக்குநர்.

அவரே தைரியம் கொடுத்து குழந்தையை மாடிப் படிகளில் தள்ளிவிடுகிறார். குழந்தை படிகளில் உருண்டு விழும் காட்சி மிக இயல்பாக அமைந்து பலராலும் பாராட்டப்பட்டது.

அந்த இயக்குநர் கே. சுப்ரமணியம். குழந்தை நட்சத்திரம் பத்மா சுப்ரமணியம். அவருக்கு அப்போது வயது நான்கு. எதையும் பர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்பது அந்தச் சிறுவயதிலேயே தனது தந்தையிடமிருந்து பத்மா கற்றுக் கொண்டது.

இயக்குநர் கே. சுப்பிரமணியம் _ மீனாட்சி, இவர்களது ஒன்பது வாரிசுகளில் நான்கு பேர் பெண்கள். அவர்களில் கடைக்குட்டிதான் பத்மா.

பத்மா பிறப்பதற்கு முன்பே மைலாப்பூரில் பிரமாண்டமான தனது வீட்டின் ஒரு போர்ஷனில் நிருத்யோதயா என்ற பெயரில் நாட்டியப்பள்ளி நடத்திவந்தார் சுப்பிரமணியம். இங்கு பரதம் உட்பட பல்வேறுவிதமான நடனங்களும் சொல்லித் தரப்பட்டன.

கருவிலிருந்த போது, தாயின் கருப்பையில் இருந்து கொண்டே அபிமன்யு சக்கர வியூகத்தைக் கற்றதுபோல், பத்மாவும் நிருத்யோதயா மாணவிகளின் ஜதி ஒலிகேட்டு, கருவறையிலேயே பிஞ்சு மலர்ப்பாதம் உதைந்து நடனம் கற்றிருப்பாரோ? அதனால்தானோ என்னவோ, சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது பத்மாவுக்கு அலாதிப் பிரியம்.

அம்மா மீனாட்சி ஓர் இசைக் கலைஞர். வீணை, வயலின் வாசிப்பார். நல்ல குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நிறைய பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கணவர் எடுத்த சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

வழுவூர் ராமையாப்பிள்ளை

பத்மா சிறு வயதிலிருந்தே சூட்டிகை. அழகான வட்ட நிலா முகம். நிலவின் நடுவே இரண்டு நட்சத்திரங்கள் போல் மின்னும் அகன்ற கண்கள். எதையும் ஒருமுறை பார்த்தால் உடனே பற்றிக் கொள்வார். எதிலும் தீவிர ஆர்வம். அவரது நடன ஆர்வம் கண்டு தந்தை சுப்பிரமணியம் பரதம் கற்க ஒப்புதல் அளித்தார். மைலாப்பூரில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார்கள். அப்போது அவரது வயது ஆறு.

அந்த நேரத்தில், பரதத்தில் பிரபலமாயிருந்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரிடம் பரதம் பயின்ற முத்திரை மாணவிகள். பத்மா நடனம் கற்றுக்கொண்டபோது, உடனிருந்து உதவியவர் நடிகை ஈ.வி. சரோஜா. நடனத்தில் நடைமுறை இலக்கணங்களை மீறி ஜதிகளின் புதிய விதிகளைக் காற்று வெளியில் எழுதத் தொடங்கியது பத்மாவின் தங்க மலர்ப் பாதங்கள்.

அரங்கேற்றம்!

வழுவூர்ப் பாணி நாட்டியத்தில் அழகுச்சுவை அதிகம். லயசுத்தம், அங்க சுத்தம் ஆகியவற்றில்தான் அதிகப்படி கவனம் இருக்கும். அழகுப் பெண்ணான இவருக்கு அவை மிக எளிதாகக் கைவந்தன.

பதினொரு வயதிலேயே அரங்கேற்றம்_மைலாப்பூர் ஆர்.ஆர். சபாவில். எப்போதும், அரங்கேற்றத்தின்போது புதிதாக சலங்கை கட்டிக் கொள்ளமாட்டார்கள். ராசியான ஒருவரின் சலங்கையைக் கட்டிக் கொண்டு மேடையேறுவதுதான் அன்றைய மரபு. இவர் அணிந்து ஆடியது நாட்டியப் பேரொளி பத்மினியின் காற்சலங்கைகளை.

மேடையின் முன் வரிசையில் நடிகர் திலகம், ராஜரத்னம் பிள்ளை, எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று ஜாம்பவான்களின் ஜமா. அனைவரின் பார்வைகளும் பத்மாவின் மீதே. ஆடத் தொடங்கினார் பத்மா. நடனம் கண்டு மெய் சிலிர்த்தனர் பார்வையாளர்கள். பாராட்டு மழை குவிந்தது.

பி.யூசி. படித்து முடித்ததும் பத்மாவுக்கு டாக்டருக்குப் படிக்க ஆசை. ஆனால், அப்பாவுக்கோ மகள் பெரிய நடனக் கலைஞராக வேண்டும் என்று விருப்பம். அப்போது, கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பத்மாவிடம், ‘டாக்டர்கள் பலபேர் கிடைக்கலாம். ஆனால், உன்னை மாதிரி டான்ஸர் கிடைக்க மாட்டா. டாக்டர் படிப்பு வேணாம்..’ என்று கூற, அவரது பதிலில் நியாயம் இருந்ததால், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பு. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பிரபல நடனக் கலைஞராகப் புகழ் பெற்றிருந்தார் பத்மா.

ரசவாதம்!

கல்லூரியில் படிப்பு; வீட்டில் நடனம். இரண்டிலுமே பத்மா சிறந்தார். நாட்டிய உடையணிந்து பத்மா மேடையேறினால், ஆண்டாள் மீண்டும் பிறந்து வந்தாளா என்று வியக்க வைக்கும். நவரச முத்திரைகள் ஒரு ரசவாதம் போல், அவரது முகங்களில் மாறி மாறி உணர்வுகள் ஆட்டம் போடும். ஜதிக்கு இவர் ஆட்டமா? அல்லது இவரது ஆட்டத்துக்கு ஜதியா என்று தீர்மானிக்க முடியாத நுணுக்கப் பிறழ்வுகள் இல்லாத இயைந்த நடனம் இவருடையது.

பத்மா கல்லூரி படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய எல்லை லடாக்கில் போர்வீரர்களுக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி. அங்கு பனி அதிகம். ஆக்ஸிஜன் அளவு 40 சதவிகிதம் இங்கிருப்பதைவிட குறைவு. அங்கு போய் சூழ்நிலையைப் பழகிக் கொள்ளவே ஐந்து நாட்கள் ஆனது. கொஞ்சநேரம் ஆடினாலே மூச்சு வாங்கியது. ஒரு வழியாக வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திவிட்டுத் திரும்பினார் பத்மா.

‘எவ்வளவோ தடவை வெளிநாடுகளுக்குப் போய் ஆடியிருக்கேன். ஆனால், தாய்நாட்டு எல்லையில் ஆடியது மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் பத்மா.

அண்ணன்!

உலகின் பல்வேறு நாடுகளின் மேடைகளை பத்மாவின் சலங்கைகள் அதிர வைத்திருக்கின்றன. நடனத்தில் புதுமை விரும்பியான இவர், ரஷ்ய மியூசிக் கம்போஸர் ஒருவரின் இசைத்தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் நடத்திக் காட்டியபோது, நடனப் பிரியர்கள் ஆனந்த உச்சமெய்தினர். இது ஓர் உதாரணம்தான். பத்மாவின் சாதனைப் பேரேட்டில் இதுபோல் புதுமைகள் ஏராளம் … ஏராளம்!

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் கால நீட்டம் கொண்டது பத்மாவின் சலங்கை ஒலி. நடனத்தையே உயிர் மூச்சாகவும், உணர்வாகவும் கொண்டதால், திருமணத்தைப் பற்றி நினைக்கவே அவருக்கு நேரமிருந்திருக்காது போலும். பத்மா இப்போது இருப்பது தனது அண்ணன் பாலகிருஷ்ணன் வீட்டில். இன்னொரு தாயாக இருந்து பத்மாவைக் கவனித்துக்கொண்டவர் அண்ணி சியாமளா. ‘இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா, நான் சாதிச்சிருக்க முடியாது’ என்று பெருமைப்படுகிறார் பத்மா. அண்ணி சியாமளா மறைந்தபோது, ஆறாத் துயரில் வீழ்ந்தார் பத்மா.

நடிப்பு!

எம்.ஜி.ஆர். உட்பட பல முன்னணி நடிகர்கள் இவரைக் கதாநாயகியாக நடிக்க அழைத்த போதும் மறுத்தார். அவரது முழுக் கவனமும் நடனக்கலையின் மீதே பதிந்திருந்தது. ஓயாத நடனம், அப்பா ஆரம்பித்த நிருத்யோதயா நடனப் பள்ளியை அண்ணன் பாலகிருஷ்ணனுடன் இருந்து கவனித்துக்கொள்ளுதல் என்று கடிகார முட்களைப்போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பத்மாவின் வாழ்க்கை.

கண்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி பத்மாவுக்கு சலங்கை. நாட்டியத் தாரகை, பாடகி, இசையமைப்பாளர், ஆராய்ச்சியாளர், நடனகுரு என்று பன்முகத் தன்மை கொண்டது பத்மாவின் சாதனைச் சங்கிலி. பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாதமி விருது உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இந்த நடனத் தாரகையால் பெருமை கொண்டன.

‘‘என்னோட அப்பா காலமானபோது, இந்தக் கலையை வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கணும்னார். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று கூறுகிறார் பத்மா.

பரத முனிவர் இன்றிருந்தால் பத்மாவை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்; ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்.

_பெ. கருணாகரன்

Posted in Biography, Biosketch, dancer, Kumudam, Padma Subramaniam, Padma Subramaniyam, people, profile, Tamil | Leave a Comment »