Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Dalit Panthers’ Category

99 Chennai Corpn councillors to resign – DMK, allies ready to face re-election in 99 wards

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை

பா. ஜெகதீசன்

99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது

சென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.

தற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.

300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.

வரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.

24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.

பிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.

ஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.

அதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.

ஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.

தற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்

சென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.

திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

மாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:

  • திமுக- 90,
  • காங்கிரஸ் -38,
  • பாமக -17,
  • அதிமுக -4,
  • இந்திய கம்யூனிஸ்ட் -2,
  • விடுதலைச் சிறுத்தைகள் -2,
  • மதிமுக -1,
  • பகுஜன் சமாஜ் -1.

தற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:

  • திமுக-36,
  • காங்கிரஸ்-13,
  • பாமக- 4,
  • சுயேச்சை -1,
  • காலியிடங்கள் -2

முக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.

மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.

Posted in 99, ADMK, AIADMK, Assembly Election, Backgrounder, Bahujan Samaj Party, BSP, bypoll, Chennai, Civic Polls, Court, CPI, CPI (M), Dalit Panthers, DMK, Elections, History, Judge, Justice, Karunanidhi, local body elections, M Subramanian, Madras, Mayor, MDMK, MLC, Order, Pattali Makkal Katchi, PMK, Re-election, Tamil Nadu, TN, Viduthalai Chiruthaigal, Viduthalai Siruthaigal | Leave a Comment »

Collector starts probe into attack on DPI MLA D Ravikumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை போலீஸ் தாக்கியதாக புகார்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கடலூர், ஜன. 11: காட்டுமன்னார்கோயில் சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமாரை, போலீஸ் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2-ம் தேதி கடலூர் வட்டம் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவாவின் சவ ஊர்வலம் சேடப்பாளையத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ரவிக்குமார் எம்.எல்.ஏ.வை, காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை நிலையை அறிய, மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சியத் தலைவரை விசாரணை அலுவலராக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் 25-1-2007 அன்று, காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலக நீதிமன்றக் கூடத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளார்.

சேடப்பாளையம் கிராமத்தில் 2-1-2007 அன்று, நடைபெற்ற சவ ஊர்வலத்தில் பங்கேற்ற ரவிக்குமாரை, காவல் துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்த விவரங்களை நேரடியாகவோ, வேறு எந்த விதத்திலோ தெரிந்தவர்கள், இந்த விசாரணையில் ஆஜராகி அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம். வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ இதைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Posted in abuse, Attack, civil rights, Collectorate, Cuddalore, D Ravikumar, Dalit Panthers, District Collector, District Magistrate, DPI, Gaikward Babu, Human Rights, Kattumanaar Koil, Kattumanaar Kovil, Kattumanar Koil, Kattumanar Kovil, Law, Makkal Civil Rights Kazhagam, Manitha Urimai Iyakkam, MLA, municipal chairman, Municipality, Nellikuppam, Order, Peoples Watch, Police, Puratchi Thamizhagam, Rajendra Ratnoo, Ravi kumar, Ravikkumar, S N Nagar, Thamarai Selvan, vice-chairman, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

‘Maniammai’ Kushboo – Thangar Bhachaan refuses to handle camera duty

Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006

பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் குஷ்பு எதிர்ப்பை கைவிட்டனர்: மணியம்மை படப்பிடிப்பு தீவிரம்

கற்பு பற்றி கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் குஷ்பு. அவர் தற்போது `பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்கிறார்.

`மணியம்மை’ கேரக்டரில் குஷ்பு நடிக்க ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. `பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க கூடாது என்றும் மீறி நடித்தால் படிப்பிடிப்பை நடத்த விடமாட்டோம் என்றும் இரு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் குஷ்பு இடம்பெறும் காட்சிகள் திருச்சியில் படமாக்கப்பட்டு வருகின்றன. பா.ம.க., விடுதலை சிறுத்தைகளால் படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

ஆனால் இரு கட்சித்தொண்டர்களாலும் எதிர்ப்பு வரவில்லை. எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டனர்.

தங்கர்பச்சான் மட்டும் கோபத்தில் பிடிவாதமாக இருந்தார். குஷ்பு காட்சிகளை படமாக்க மறுத்து விட்டார். அவரது உதவியாளர் ஒளிப்பதிவு செய்கிறார். குஷ்பு நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

மணியம்மை கேரக்டரில் நடிப்பது பெருமையாக உள்ளது என்றார் குஷ்பு.

கடவுள் நம்பிக்கை தனக்கு கிடையாது என்றும் தெரிவித்தார்.

Posted in Cameraman, cinematographer, Dalit Panthers, EVR, Kushboo, Kushbu, Maniammai, Periyaar, PMK, Sathyaraj, Thangar Bachan, Thangar Bhachaan, Viduthalai Siruthaigal | Leave a Comment »

“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.

  • “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

Posted in 2.5 Lakhs, Condemn, Creamy Layer, Dalit Panthers, Percentage, Reservations, Salary limits, Supreme Court, Thol Thiruma, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 4 Comments »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

AIADMK Alliance Partners Allocation Details for Local Body Polls

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

உள்ளாட்சி தேர்தல் உடன்பாடு: 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டி

சென்னை, செப். 24-

உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் நேற்றிரவு முடிவு செய்யப்பட்டது. ம.தி.மு.க.வுக்கு 17.5 சதவீதம், விடுதலைச்சிறுத்தைகளுக்கு 4 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாநகராட்சிகளும், 102 நகர சபைகளும் இருக்கின்றன. இதில் யார்- யாருக்கு எந்த இடம் என்று பிரித்துக்கொள்வதற்குப்பதில், மொத்த இடங்களிலும் சதவீத அடிப்படையில் போட்டியிடலாம் என்ற முடிவை அ.தி.மு.க. கூட்டணி எடுத்துள்ளது.

மாநகராட்சி மற்றும் நகர சபைகளை தனித்தனியாக கட்சிகளுக்கு பிரித்துக் கொடுத்தால், அது கட்சி அமைப்பு ரீதியிலும், பிரசாரத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநகராட்சி என்று ஒதுக்கினால், அங்கு அந்த கட்சிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் கவுன்சிலர் இடங்களை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அத்தகைய சூழ்நிலையில் தோழமை கட்சிகளிடையே அதிருப்தி ஏற்படகூடும். மேலும் பிரசார வேலைகளும் முழுமையாக நடக்காது. எனவேதான் மாநகராட்சி, நகரசபைகளில் உறுப்பினர் இடங்களை சதவீத அடிப்படையில் பிரித்துக் கொண்டு போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

உள்ளாட்சித்தேர்தல் முடிந்தபிறகு ஒவ்வொரு மாநகராட்சியிலும், ஒவ்வொரு நகரசபையிலும், கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளது என்பதை பொருத்து மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்வு நடைபெறும். சதவீத அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சி, நகரசபைகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுக்கு சதவீத அடிப்படைகளுக்கு ஏற்பவே வெற்றிகள் கிடைக்கும்.

அந்த சமயத்தில் ம.தி.மு.க.வுக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் தலைவர் பதவியை பெறும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். என்றாலும் சதவீத அடிப்படையில், தலைவர் பதவி இடங்களை தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரு கட்சிகளும் மாநகராட்சி மேயர் பதவியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்துள்ளது. அதற்கு பதில் நகரசபைகளில் கணிசமான தலைவர், துணைத் தலைவர் இடங்களை பெற விருப்பம் தெரிவித்துள்ளன.

ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தையும் தலைவர் பதவிக்குரிய இடங்களுக்கு கூட்டணித் தலைவரான அ.தி.மு.க.வை அனுசரித்தே செல்லவேண்டும். இது கூட்டணி உடையாமல் மேலும் பலமாக வைத்து இருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டுக்கும் அ.தி.மு.க. 21.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில்

  • இந்திய ïனியன் முஸ்லிம் லீக்,
  • இந்திய தேசிய லீக்,
  • மூவேந்தர் முன்னேற்றக்கழகம்,
  • அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம்,
  • உழவர் உழைப்பாளர் கட்சி,
  • மதச்சார்பற்ற ஜனதா தளம்,
  • சமூகநீதிக்கட்சி,
  • தமிழ் மாநில முஸ்லிம் லீக்,
  • இந்திய குடியரசுக்கட்சி,
  • கிறிஸ்தவ முன்னேற்றக்கழகம்,
  • சிறுபான்மை ஐக்கியபேரவை ஆகிய மேலும் 11 தோழமைக் கட்சிகள் உள்ளன.

இந்த 11 தோழமைக்கட்சி களுக்கும் சுமார் 4 சதவீத இடங்களை அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோழமைக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக எஞ்சி உள்ள 75 சதவீத இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தும்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ள விபரம் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க, ம.தி.மு.க., விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலிடம் உடன்பாடு செய் துள்ள சதவீத அடிப்படையில் மாவட்டங்களிலும் இவர்கள் இடப்பகிர்வை இன்றே செய்கின்றனர்.

யார், யார் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்ற விபரம் ஏற்கனவே பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது. எனவே அடுத்த முக்கிய பணியான வேட்பாளர் தேர்வு பணியை அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள் இன்று தொடங்குகின்றன. 20 ஆயிரத்து 886 பதவிகளுக்கு வேட்பாளர்களை இவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்துக்கது.

ஓரிரு நாட்களில் வேட்பாளர் தேர்வு முடிந்துவிடும். இதையடுத்து வேட்பாளர்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் பெருமளவில் மனுத்தாக்கல் செய்வார்கள்.

Posted in ADMK, AIADMK, Allocations, Dalit Panthers, Elections, Local Body, MDMK, Partners, Percentages, Polls, Tamil, Tamil Nadu, TN, Viduthalai Siruthaigal | Leave a Comment »