Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Critic’ Category

Paa Jeyaprakasam & Other new books in Chennai Book Fair – Tamil Literature, Fresh Arrivals

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

வேதம் நம் தாய்…வீழ்வோமென்று நினைத்தாயா?

சென்னை, ஜன.14: 31 வது சென்னை புத்தகக் கண்காட்சியில் நூறாண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பதிப்பகங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று அல்லயன்ஸ் பதிப்பகம்.

1901-ல் நிறுவப்பட்ட அல்லயன்ஸ் நிறுவனம் மதம், பக்தி, தேசபக்தி சார்ந்த நூல்களை வெளியிட்டுள்ளது.

  • ஏ.கிருஷ்ணசாமி எழுதிய “இந்துமத உபாக்கியானம்’,
  • சோவின் “இந்துதர்மம்’,
  • பண்டித கல்யாணராமனின் “பாலராமாயணம்’,
  • ஷ்யாம் சுந்தரின் “கவனம் எச்சரிக்கை’,
  • அ.சீனிவாச ராகவனின் “அ.சீ.ரா. எழுத்துக்கள்- 7 தொகுதிகள்’ ஆகியவை அல்லயன்ஸ் வெளியிட்ட குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

வெளிச்சம்: சிறுபதிப்பகமான வெளிச்சம் கவிஞர் இன்குலாப்பின் “பொன்னிக் குருவி’, “புலிநகச் சுவடுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்க்கூடம்:

இன்னொரு சிறு பதிப்பகமான தமிழ்க் கூடம்

  • தஞ்சை ப்ரகாஷின் “வேதம் நம் தாய்’,
  • பத்ம கல்யாண்ஜியின் “ஆபூர்வ ராகங்கள்’ மற்றும்
  • “ரோகம் தீர்க்கும் ராகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளது.

பொன்னி புத்தகக் காட்சியகம்:

பொன்னி புத்தகக் காட்சியம் இந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க நூல்களாக

  • கோவை ஞானியின் “திருவள்ளுவரின் அறிவியலும் அழகியலும்’,
  • புவிக்கோவின் “வீழ்வோம் என்று நினைத்தாயா?’,
  • இந்திரா தேவியின் “வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ ஆகியவை குறிப்பிடப்பட வேண்டிய நூல்களாகும்.
  • இங்கர்சாலின் “கடவுள்கள் – கோயில்கள்’,
  • “வால்டையர்’ ஆகியன பொன்னி புத்தகக் காட்சியகத்தின் புதிய வெளியீடுகளாகும்.

வசந்தா பிரசுரம்:

வசந்தா பிரசுரத்தின் சிறுவர் நூல்களாக

  • பட்டத்தி மைந்தனின் “புகழ்பெற்ற விக்கிரமாதித்தன் கதைகள்’,
  • பூவை அமுதனின் “தேன்சுவைக் கதைகள்’,
  • சௌந்தரின் “உண்மை உயர்வு தரும்’ ஆகியவை வெளிவந்திருக்கின்றன.
  • “அப்துல் கலாம் பொன்மொழிகள்’ என்ற நூலும் வசந்தா பிரசுரத்தின் வெளியீடாக வந்துள்ளது.

———————————————————————————————————————————————————

ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூல்!

சென்னை, ஜன.14: சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி புதிய புத்தகங்கள் வெளியிடப்படுவது சாதாரண விஷயம். இந்த ஆண்டு ஓர் எழுத்தாளருடைய சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து வெளியிட்டுள்ளது சந்தியா பதிப்பகம்.

இதுபோல வேறு எழுத்தாளருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

“பா.செயப்பிரகாசத்தின் கதைகள்’ என்ற அந்த நூலில் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகள் அனைத்தும் தொகுத்து ஒரு நூலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முந்திய தலைமுறை எழுத்தாளர்களான ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், கிருஷ்ணன்நம்பி, கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஆ.மாதவன், நகுலன் கதைகள் ஆகியோரது கதைகள் முழுத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

அதற்குப் பிந்திய தலைமுறை எழுத்தாளர்களான பிரபஞ்சன், வண்ணநிலவன், வண்ணதாசன், திலகவதி, பூமணி, ராசேந்திர சோழன் ஆகியோருடைய கதைகளும் இவ்வாறு முழுத் தொகுப்புகளாக வெளிவந்துவிட்டன.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி ஓர் எழுத்தாளருடைய கதைகளின் முழுத் தொகுப்பு என்கிற வகையில் இந்த நூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————————-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்
கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன.17-

சிறந்த நூலாசிரியர்களுக்கு மேலும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

விருது வழங்கும் விழா

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழா, தமிழக வளர்ச்சித் துறையால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் திருவள்ளுவர் திருநாள் விழா, மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், சான்றோர்கள், மற்றும் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகளையும், நிதி உதவியையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம்

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே அமர்ந்து பணிகளை விரைவாக நடத்துவதற்கு வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், பேராசிரியர் அன்பழகன் இங்கே குறிப்பிட்டதை போல பெற்ற மகவு வளர்ந்து, மணவிழா நேரத்திலே, அதை காணமுடியாத ஒரு தாய்; விழாவை காணமுடியாமல் தவித்த தவிப்பை அவர் இங்கே எடுத்துரைத்தார். கோட்டம் இங்கே திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அரசியல் லாபம் அல்ல

நேற்று பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து மாரிமுத்துவுக்கு இந்த விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்த நேரத்தில், நல்லகண்ணுவுக்கும் இந்த விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏன் என்றால், இந்த கவனத்தை ஊட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் கம்ïனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

எந்த அரசியல் லாபமும் கருதி அல்ல. எந்த கட்சியிலே யார் இருந்தாலும் அவர்கள் நல்லவைகளை மதிப்பார்கள். தியாகத்தை போற்றுவார்கள். அப்படி நாமும் போற்ற வேண்டும் என்ற பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக எல்லோரும் நான் உள்பட அந்த பாடத்தை பெற வேண்டும் என்பதற்காக நான் அதை கவனித்தேன்.

புறக்கணிக்கவில்லை

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன். அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கார் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்காரை ஒரு ஜாதிக்குள்ளே புகுத்த விரும்பவில்லை. ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர் அந்த சமூகத்தினுடைய விழிப்புணர்வுக்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கார் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் யாரும், தலித்துகளை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை. நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்ïனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர் என்பதில் எனக்கு எந்த விதமான ஐயப்பாடும் இல்லை.

பத்தாத பணம்

ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருது தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது.

பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதல்-அமைச்சர் கொடுக்கிறாரே என்ற அந்த மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன். அது பத்தாத பணம் தான் அவர்களுக்கு என்பது எனக்கு தெரியும்.

எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல-இந்த ஆண்டே கூட இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம்

இதை நூலாசிரியர்களுக்கு மாத்திரமல்லாமல், பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளாவது இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

அங்கீகாரம்

விழாவில், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு பேசும்போது, “அம்பேத்கார் பெயரால் எனக்கு விருது வழங்கப்பட இருப்பதாக ஒருநாள் கலைஞர் கூறினார். இன்று வாழும் பெரியாராக வாழ்ந்து வரும் கலைஞர் கையால் அந்த விருது கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவும், என்னை சிறுவயதில் இருந்து வளர்த்த இந்திய கம்ïனிஸ்டு இயக்கங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாரதா நம்பிஆரூரான் ஆகியோர் பேசினார்கள்.

அம்பேத்கார் விருது

முன்னதாக இந்த விழாவில், அம்பேத்கார் விருது இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணுவுக்கும், திருவள்ளுவர் விருது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், பெரியார் விருது கவிதைப்பித்தனுக்கும், அண்ணா விருது பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கும், காமராஜர் விருது சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கும், பாரதிதாசன் விருது, திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கும், திரு.வி.க. விருது, முனைவர் த.பெரியாண்டவனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிவேந்தர் கா.வேழவேந்தனுக்கும் வழங்கப்பட்டன. பாரதியார் விருது கவிஞர் சவுந்திரா கைலாசத்துக்கு வழங்கப்பட்டது. அவர் உடல்நலம் குன்றியிருந்ததால், இந்த விருதை பெற்றுக் கொள்ள அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசம் பெற்றுக் கொண்டார். விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 லட்ச ரூபாயையும், தங்க பதக்கத்தையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

நூலாசிரியருக்கு பரிசு

2006-ம் ஆண்டில் வெளிவந்த நூல்களுள் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களும் அவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு குறிப்பிடத்தக்க வகையில் பணி செய்து, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் 12,000-ரூபாய்க்கு மிகாமல் உள்ள ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, ம.கேசவன், தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் ஆணைகளையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. இதன் வரிசையில் தற்போது `ம’ `ய’ மற்றும் `வ’ எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட `தமிழ் அகரமுதலி வரலாறு’ என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை அமைச்சர் அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்று பேசினார். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி, எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன், தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் டி.சுதர்சனம், கவிஞர் வைரமுத்து மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Posted in Ambedkar, Announcements, Arrivals, Authors, Awards, Books, Chennai, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Critic, Criticism, Dictionary, Events, Exhibition, Fair, Fresh, Functions, Gatherings, Jeyapragasam, Jeyaprakasam, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Literature, Meetings, MK, Money, Nallakannu, Nallakkannu, Prizes, Tamil, Writers | Leave a Comment »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

La Sa Ra: Lalgudi Saptharishi Ramamirtham: Anjali, Memoirs, Reviews

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

——————————————————————————————————————————————

எழுத்தாளர் லா.ச.ரா. மறைந்தார்

சென்னை, அக். 30: “லாசரா’ என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம் (92) சென்னை அம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (அக்.30) அதிகாலையில் காலமானார். அவர் இரு தினங்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

அவருக்கு மனைவி ஹேமாவதி, எழுத்தாளர் லா.ரா. சப்தரிஷி உள்ளிட்ட நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பெங்களூரில் 1916-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த லா.ச.ரா.வின் பூர்விகம் லால்குடி.

ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய 5 கதைகள் “மணிக்கொடி’ இதழில் பிரசுரமாகி சிறப்புப் பெற்றன.

மனித மனத்தின் மெல்லிய பக்கங்களைத் தனக்கே உரித்தான பாணியில் எழுதி, எழுபதாம் ஆண்டுகளில் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்குத் தூண்டுகோலாய் அமைந்த லா.ச.ரா. தனது 92-வது பிறந்த நாளிலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • லா.ச.ரா. எழுதிய “சிந்தாநதி’ நாவலுக்கு 1989-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
  • உலகக் கவிஞர்கள் மன்றத்தின் கெüரவ விருது (1982),
  • தமிழக அரசின் கலைமாமணி விருது,
  • காஞ்சி சங்கராசாரியார்கள் இணைந்து அளித்த “கதாரஸன் சதுரஹ’ என்ற விருது,
  • இலக்கியச் சிந்தனை விருது (1995),
  • அக்னி அட்சர விருது (1992),
  • 1997-ல் வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது ஆகியவை இவருக்குக் கிடைத்த சிறப்புகள்.

17 வயதில் அவர் “தி எலிபென்ட்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய கதைதான் முதலில் பிரசுரமானது.

லா.ச.ரா. எழுதிய 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவர் “அமுதசுரபி’ இதழில் “தி பாய் ப்ரெண்ட்’ என்று எழுதியதே அவரது கடைசி கதையாகும்.

மத்திய அரசின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி மேலாளராக ஓய்வு பெற்றவர் லா.ச.ரா.

அவரது மகன் சப்தரிஷியின் வீட்டு முகவரி: ஏ 6, அட்சயா ஹோம்ஸ், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயல் (சேகர் ஸ்டோர்ஸ் அருகில்), சென்னை -62. தொலைபேசி: 26375470, செல்: 94444 97502.
——————————————————————————————————————————————

சிந்தாநதி சகாப்தம்: – அசோகமித்திரன்

சென்ற திங்கள்கிழமை 29-ம் தேதி மறைந்த லா.சா.ராமாமிர்தம், 1916-ல் லால்குடியில் பிறந்தார். அன்று கீழ்மத்திய வகுப்பினருக்குக் கிடைத்த எளிய படிப்பை வைத்துக் கொண்டே அவர் ஆங்கிலத்தில் எழுத முயன்றார். அன்று அவருடைய பெரிய ஆதரிசம் இளம் அமெரிக்க எழுத்தாளர் ஹெமிங்க்வே. ஆனால், விரைவில் அவருடைய உண்மையான சாதனம் “தமிழ்’ என்று தெரிந்து விட்டது.

அதன்பின் 50 ஆண்டு காலம் லா.சா.ரா. வியந்து ஆராதிக்கத்தக்க தமிழ் எழுத்தாளராக விளங்கினார்.

சிறுகதைகள் எழுதிவந்த அவரை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் “புத்ர’ என்ற நாவல் எழுத வைத்தது. அதன்பின் அவர் இரு நாவல்கள் எழுதினாலும் அவருடைய இலக்கியச் செல்வாக்கு சிறுகதை வடிவத்தில் இருந்தது.

அவருக்கு 1989-ல் “சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை “”சிந்தாநதி” தினமணி கதிரில் தொடராக வந்தது.

ஒரு விதத்தில் லா.சா.ரா. அவர்கள் ஆயுள் முழுக்க ஓர் அம்பாள் உபாசகராக இருந்திருக்கிறார். தன் அன்னை மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி அவருடைய பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அன்பு, சாந்தம், பரிவு, தியாகம் ஆகிவற்றுடன் கோபம், சாபம், ரெüத்திரம் எனப் பல அம்சங்கள் உள்ளடக்கியது அவருடைய தாய் உபாசனை.

தமிழ் வரையில் இந்து மத தெய்வங்களை அவர் போல இலக்கியக் குறியீடாக பயன்படுத்தியவர் எவருமே இல்லை எனலாம். அதேபோல இந்தியத் தத்துவச் சொற்களையும் அவர் போலக் கையாண்டவர் தமிழில் கூற முடியாது. இக் குறியீடுகள் தவிர அவருடைய படைப்புகளில் இறுக்கமான கதையம்சமும் இருக்கும். ஒரு முற்போக்கு விமரிசகர் இவரையும், இன்னொரு எழுத்தாளரான மெüனியையும் இணைத்து மேலோட்டமாகக் குறிப்பிட்டதைப் பலர் திருப்பி எழுத நவீன தமிழ் இலக்கிய உலகில் ஒரு விசித்திரமான பிரிவு ஏற்பட்டது. அது இரு எழுத்தாளர்களுக்கும் நியாயம் இழைக்காததுடன் அத்தகைய விமரிசகர்களுக்குப் படைப்புகளுடன் நேரிடைப் பரிச்சயம் இல்லை என்றும் தெரியப்படுத்தி விடும்.

லா.சா.ரா.வின் சிறுகதைகளைப் பத்திரிகையில் படித்து அவரைத் தேடிப் போய் அவரை நூல் வடிவத்தில் வாசகர்களுக்கு அளித்தப் பெருமை கலைஞன் மாசிலாமணி அவர்களைச் சேரும். சுமார் 7 ஆண்டுகள் முன்பு லா.சா.ரா.வைக் கெüரவிக்கும் விதத்தில் அவருடைய ஆயுட்காலப் படைப்பிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு ரீடர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. லா.சா.ரா.வுக்கு இருந்த இலக்கியச் செல்வாக்குக்கு இணையாக அவருக்கு பரிசுகள், விருதுகள் அளிக்கப்படவில்லை.” சிந்தாநதி’ என்ற படைப்புக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருது கூட மிகவும் காலம் கடந்து அளிக்கப்பட்ட ஆறுதல் பரிசு.

லா.சா.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட “மஹஃபில்’, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட “நியூ ரைட்டிங் இன் இந்தியா’ செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.சா.ரா.வைக் கருதினார்.

நூற்றுக்கு மேற்பட்ட சிறந்த சிறுகதைகள் லா.சா.ரா. எழுதியிருந்தாலும் அவருடைய “பாற்கடல்’ என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய “புத்ர’ மற்றும் “அபிதா’ நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் “சிந்தாநதி’ அவருடைய இயல்பானக் குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டிருக்கும். லா.சா.ரா. எழுதிய காலத்தில் உயரிய நவீன தமிழ்ப் படைப்பிலக்கியம் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியன், கு.ப.ராஜகோபாலன் என்று ஒரு அணியும் கல்கி, ஜெயகாந்தன், விந்தன் என்றொரு அணியுமாக இருந்தது. இரண்டிலும் அடங்காதது லா.ச.ரா. ஒரு தனிப்பாதையில் எழுதினார். அவருடன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
——————————————————————————————————————————————

தூக்கமே! நீ அதிருஷ்டசாலி! – லா.ச.ராமாமிருதம் :: appusami.com

தூக்கமே, நீ இலாதுபோனால் துக்கங்களுக்கு முடிவு ஏது? மறதி எனும் மருந்து தந்த மாபெரும் மருத்துவம் அல்லவா நீ?

உன் வருகை தெரிகிறது; ஆனால் நீ வந்தது அறியேன்; அறிய நீ விடுவதில்லை.

நான் விழித்திருக்கையிலேயே நீ இழைத்த மருந்தை என் கண் சிமிழில் எப்போது வழித்தாய்? இமைமீது உன் முத்தத்தின் மெத்துதான் இறுதியாக நான் அறிந்தது. என் கண்ணுக்குள் நீ வைத்த மையில் யாவும் மறைந்த இழைவில் நானும் மறைந்தபின் என் கண்ணுக்குள் நீ வந்து புகுந்தது எப்போ? வந்து அங்கு நீ என் செய்கிறாய் என்று நான் அறிய முடியுமா?

உன்முகம் ஆசைமுகம். எப்போதும் மறைவு முகம் எதிர்ப்பட்டு விட்டால் உண்மை உரு தெரிந்துவிடும் என்ற பயமா?

நான் தேடியோ, நீயாக வந்தோ, எப்படியோ நேர்ந்து விடுகிறாய்.

நினைவோடு உன்னை நான் சிந்திக்க நேர்கையில் உன்மை நான் நினைப்பது எப்படி எப்படியோ. தினப்படி உன் மடியில் என்னைத் தாலாட்டு மறுதாய்.

ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண், நினைவுக்கு வைப்பாட்டி நீ மானம் அறியாதவரேயில்லை.

மரணத்தின் தன்மையைக் கரணத்தில் ஊட்டும் உபதேச மோனகுரு.

உயிருக்கு காவல். மரணத்தின் தாதி.

என் துயரங்கள் மறக்க உன்னைத் தேடுகிறேன். ஆனால் நீ வந்ததும் உன்மை மறந்து விடுகிறேன். நீ வந்ததும் என்னையே எனக்கு நினைப்பில்லை. உன்னை நினைவில் நிறுத்துவது எப்படி? உன் நன்றி நான் உன்னை மறந்தாலும் என்னை நீ மறப்பதில்லை. இதுவே என் பெருமை, என் வாழ்வு. நன்மையின் தன்மையே இதுதான். இருவர் ஞாபகத்தை அது நம்பியில்லை, ஒருவர் செய்கையில் வேரூன்றி விட்டபின்.

உனை நான் மறந்தாலும், உனக்கு என் நினைவிருக்க, நீ என் சுமைதாங்கி.

நினைவும் மறதியும், விழிப்பும் தூக்கமும் மாறி மாறி இரவு குவிந்த கண் மலரிதழ், செம்முலாம் உன் கண்டு விரிகையில், இன்றைய விழிப்பில் பிறந்த வண்ணங்கள் கூட்டி நேற்றைய நினைப்பில் வரைந்த சித்திரம் ஒளியும் நிழலுமாய் உலகம் தக தக அழகுகள் வீசி காக்ஷ¢ விரியுதம்மா. எல்லாம் இன்பமயம். உடலும் மனமும் லகுவும் லயமுமாய் சிறுத்தையின் சோம்பல் முறித்தெழுகின்றன.

– நன்றி கணையாழி
——————————————————————————————————————————————

லா.ச.ராமாமிர்தம்

– மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2002

தமிழ்ப் புனைகளத்தில் ‘லா.ச.ரா’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. தமிழ்ச் சிறுகதை மரபு தனக்கான பயணிப்பில் நின்று கொண்டிருந்த போது தனது திறன்கள் மூலம் படைப்புலகில் புதுமைகளை கொண்டு வந்தவர்.

”பொதுவாக ஒரு தத்துவசாரமும் உக்கிரமான ஆத்மதாபமும் என் எழுத்தின் உள்சரடாக ஓடுவதே என் தனித்துவம்” என்று தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் குறிப்பிடுகிறார்.

லால்குடியில் பிறந்த ராமாமிருதம் 1937ல் எழுதத் தொடங்கி தனக்கென தனிப்பாணி ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பதினைந்து பதினாறாவது வயதில் எழுத ஆரம்பித்த அவரது வேகம் லாசராவுக்கு ஓர் தனித்தன்மை கொண்ட ஓர் எழுத்துநடையைக் கொடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்கள், கட்டுரைகள் என பல களங்களிலும் இயங்கியவர். ஆனாலும் எழுதிக் குவித்தவர் அல்ல. ஆனால் அவர் எழுதியவை ஆழமும் அழகும் தனிச்சிறப்பும் கொண்டவை.

‘சாதாரணமாகவே நான் மெதுவாக எழுது பவன். ஆனால் சதா எழுதிக் கொண்டிருப்பவன்’ என்ற கொள்கையை வரித்துக் கொண்டிருந்தவர். மேற்கத்திய இலக்கியங்களில் அதிகம் நாட்டம் கொண்டிருந்தார். அவரது பாத்திரங்கள் பல அவராகவே ஆகி, வார்த்தையாக, கவிதையாக, துடிப்பும் வெடிப்புமாகப் பேசு கின்றது. பேசிக் களைத்தால் சிந்திக்கின்றது. அதுவும் களைப்பாகும் போது, அடிமனம் விடு விப்படைந்து திசையின்றி ஓடுகிறது. வாசக அனுபவத்தில் பல்வேறு சிதறல்களை மனவுணர்வுகளை, மனநெருக்கடிகளை, புதிய உணர்திறன்களை கிளறிவிடுகிறது.

சூழ்நிலைகளில் பாத்திரவார்ப்புகளில் அவற்றின் உணர்ச்சித் தீவிரங்களில் சொல்லா மலே உணர்த்தும் நளினம் கதை முழுவதும் இயல்பாகவே இருக்கும். நனவோடை, மன ஓட்டம், சுயஅமைவு கதையோட்டத்தின் கூட்டமைவுக்கு உயிர்ப்பாக உள்ளன. வாசகர் களின் கற்பனை அனுபவத்துக்கு அப்பால் புதிய தெறிப்புகளாக புதிய உணர்த்திறன்களாக லா.ச.ரா எழுத்துக்கள் உள்ளன.

லாசராவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் யாவும் மனிதமனத்துடன் ஆத்மவிசாரணையை வேண்டி நிற்கும் படைப்புகளாகவே உள்ளன. லாசராவின் படைப்புலகு, எழுத்து நடை, தமிழ்ப்புனை கதை மரபின் வளர்ச்சிக்கான ஊக்கிகளாக அமைந்துள்ளன. அன்பு, காதல், தியானம், தியாகம் இவற்றின் அடிசரடாக லாசராவின் உலகம் இயங்கி புதிய வாழ்வியல் மதிப்பீடு களை நமக்கு வழங்கிச் செல்கின்றன.

நானே என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்
இதற்கு எழுத்து எனக்கு வழித்துணை
ஒருவனுக்கு அவன் பக்தி
ஒருவனுக்கு அவன் ஞானம்
ஒருவனுக்கு அவன் குரு
அதுமாதிரி எழுத்து எனக்கு வழித்துணை
ஒரு சமயம் அது என் விளக்கு
ஒரு சமயம் சம்மட்டி
ஒரு சமயம் கம்பு
ஒரு சமயம் கத்தி
ஒரு சமயம் கண்ணாடி

இவை லாசாராவுக்கு மட்டுமல்ல அவரது படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ளும் வாசகர்களுக்கும் நேர்வது.

லாசராவின் சில படைப்புகள்:

சிறுகதைகள்: ஜனனி, தயா, அஞ்சலி, அலைகள், கங்கா

நாவல்கள்: அபிதா, கல்சிரிக்கிறது, புத்ரா

நினைவுகள்: சிந்தாநதி, பாற்கடல்

கட்டுரைகள்: முற்றுப்பெறாத தேடல், உண்மையான தரிசனம்

மதுசூதனன்
———————————————————————————————————————————-

தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.

அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ

அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.

தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!

சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.

நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!

நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன்.

பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?

தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.

பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.

அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.

‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?

புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.

தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.

ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.

வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.

கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.

மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.

அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.

கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?

‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.

விகடன் ——————————————————————————————————————————————

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம் காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள் கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப் பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம் லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச் சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச் சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத் தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும், குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப் படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை. வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும் இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப் பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’ என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள் விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம் மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும் ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும். ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப் பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத் தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப் போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138, July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

——————————————————————————————————————————–

Thinnai: “லா.ச.ரா என்கிற கைவினைஞர் :: மலர்மன்னன்”
———————————————————————————————————————————
Thinnai: “லா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி :: எஸ். ஷங்கரநாராயணன்”

(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா. நூலுக்கு முதன்முதலாய் வெளிநபர் முன்னுரை தந்தது என அமைந்தது இந்த நூலில்தான். அந்த முன்னரையை நான் எழுதினேன். விதவிதமான சாவிகளின் கொத்து என அட்டைப்படம் வடிவமைத்ததும் நான்தான். ஓவியம் திரு சரண். இன்றைய திரைப்பட இயக்குநர்.

சிறப்புச் சிறுகதை இரண்டாம் தொகுதிக்கு அவரது மகன்கள் லா.ரா.கண்ணன், லா.ரா.சப்தரிஷி இருவரும் முன்னுரை தந்தார்கள். இவை தவிர வேறுநபர் முன்னுரை என லா.ச.ரா. அனுமதித்ததேயில்லை. லா.ச.ரா.வுக்கு நன்றி.)


மு ன் னு ரைஇந்தத் தொகுப்பின் முதல் வாசகனாக அமைவதில் எனக்கு நியாயமான மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு.>>

எழுத்தாளர்களில் லா.ச.ரா. வித்தியாசமானவர். தனித்தன்மை மிக்கவர். நனவோடை உத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் லா.ச.ரா.

பொதுவாக இவர் கதைகள் எளிமையானவை அல்ல, இவை எளிமையான கருக்களைக் கொண்டிருந்த போதிலும். லா.ச.ரா. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் உணர்ந்தபடி எழுதுகிறார். அல்லது தான் கண்ட, கேட்ட ஒரு வாழ்க்கையைத் தன் வாழ்க்கையாய் உணர்ந்து எழுதுகிறார். பொதுவாக கற்பனைகளுக்கு உண்மையின் சாயத்தைப் பூசிப் படைக்கிற எழுத்தாளர்கள் மத்தியில், தன் தீட்சண்யம் மிக்க ஞானத்தினால், கலாபூர்வமான ரசனைமிக்க கண்ணோட்டத்தினால், மொழி ரீதியான வளமான அறிவினால், லா.ச.ரா. உண்மையை அதன் தீவிரம் விலகாமல் கற்பனையையொத்த அழகும் மெருகும் சேர்த்து வழங்குவதில் பெருத்த வெற்றி பெறுகிறார்.

இவர் கதைகள் என நினைத்ததும் சட்டென்று ‘வித்துக்கள்’ சிறுகதை ஏனோ நினைவில் குதிக்கிறது. பள்ளிக்கூட நாட்களில் ‘My dog’ என ஒரு கவிதை வாசித்திருக்கிறேன். நல்லதொன்றும் செய்யாத, உதவியொன்றும் செய்யாத, பெரிதும் துன்பங்களையே விளைவித்து வந்த ஒரு நாய்பற்றிய அந்தக் கவிதையில், பத்தி பத்தியாக அந்த நாயின் உபத்திரவங்களையும், அதனால் தான் அனுபவித்த துன்பங்களையும் சொல்லிக்கொண்டே வருகிற கவிஞன் கடைசியில் இப்படிச் சொல்வான் – ‘And though my dog is as bad as bad can be, I cant leave my dog for all the treasures of the sea.’

உலகத்தின் பெரிய செல்வமான அன்பு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. சுயநலமற்றது. லா.ச.ரா.வின் ‘வித்துக்கள்’ மிகுந்த துஷ்டத்தனங்கள் நிறைந்த தன் குழந்தைகளை நேசிக்கிற ஒரு தாயின் கதை. சில வருடங்களுக்கு முன் ‘சாவி’ வார இதழில் (என நினைக்கிறேன்) படித்த கதை, என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இன்னொரு கதை – தலைப்பு நினைவில் இல்லை. ‘த்வனி’ தொகுதியில் படித்ததாக நினைவு. வங்கியில் இவர் மேனேஜராக இருந்தபோது ‘அலுவல் நேரம்’ முடிந்தபின் ஒரு மனிதன் லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துச் செல்ல வருகிறான். மரணப்படுக்கையில் தன் மருமகன் இருப்பதாயும், கடைசியாய் இவன் மகளை மிகுந்த அலங்காரங்களுடன் பார்க்க விரும்புவதாகவும் கூறி நகைகளை எடுத்துப் போகிறான். அதன் பிறகான இவர் மன சஞ்சலங்கள், முகந் தெரியாத அந்த மனிதர்கள் மீதான இவர் பரிவு, கவலை… யாவும் செறிவுடன் அமைந்திருந்தன. பிறகு அந்த நகைகளை லாக்கரில் வைக்க அந்த மனிதன் வரவில்லை. அவரும், அவன் வராதிருப்பதே நல்லது, அவன் வந்து ஏதேனும் மோசமான முடிவைச் சொன்னால் தன்னால் தாள முடியாது, என்று நினைக்கிறதாக அந்தக்கதை முடியும். மனிதாபிமானம் மிக்க இந்தச் சிறுகதை, என்னால் மறக்க முடியாத லா.ச.ரா.வின் கதைகளில் ஒன்று.

பிறகு ‘பா ற் க ட ல்.’ ஒரு கூட்டுக்குடும்பத்தின் அழகினை இவ்வளவு சிறப்பாக நான் வேறு யாரிடமும் வாசித்ததில்லை. பல பகுதிகளாகத் தன் கதைகளைப் பிரிக்கிற லா.ச.ரா. இதை ஒரே வீச்சில் அமைத்ததும் கதையோட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. ஜனனி, இதழ்கள், கங்கா, த்வனி, மீனோட்டம், பச்சைக்கனவு, உத்தராயணம் (காலரீதியான வரிசை அல்ல) என்கிற இவரது தொகுதிகளில் ‘பச்சைக்கனவு’ மிகவும் சிறப்பானதாக நினைக்க முடிகிறது.

இந்தச் சிறப்புச் சிறுகதைகள் லா.ச.ரா.வே தேர்ந்தெடுத்த கதைகள். முதல் தொகுதி இது. இதில் இடம்பெற்றுள்ள எட்டு கதைகளில் ‘குரு-ஷேத்திரம்’ ஒரு பிரமிக்கத்தக்க சாதனை என்று தோன்றுகிறது. ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது இந்தக் கதையின் சில பகுதிகளை இருபது, இருபத்தோரு முறைகள் திருத்தி எழுதியதாய் லா.ச.ரா. என்னிடம் கூறினார்.

‘குரு-ஷேத்திரம்’ ஒரு திருடனின் மனமாற்றம் பற்றிய கதை. வைரங்களை வாரியிறைத்திருக்கிறார் லா.ச.ரா. குறியீடுகளும் சங்கேதங்களும் மிகுந்த கலைநயத்துடன், வார்த்தைகளின் ஓசைநயத்துடன், தத்துவங்களின் தரிசனத்துடன் வெளியாகின்றன.

எத்தனையோ முறை திருடிவிட்டு, திருட்டுக் கொடுத்தவனுடன் சேர்ந்து பொருளைத் தேடுவதாய் நாடகமாடியிருக்கிற திருடன், தான் திருடிய ஒருவன் கோவில் குளத்தில் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு திடுக்கிடுகிறான். மனசாட்சியின் முதல் விழிப்பு. (”எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ? அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர்மேல் நம்பிக்கை இழந்தவன். உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?” – பக்/83) சிந்தனையின் முதல் உயிரிப்பு.

தன் தாயை, மனைவியை அந்தக் கணத்தில் அவன் நினைத்துப் பார்க்கிறான். அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தான் பிரிந்து வந்த தன் தவறை உணர்கிறான்.

கதை முழுதும் யதார்த்தத் தளத்தில் நிகழவில்லை எனினும் படிப்படியான அவன் மனமாற்றங்களை ஊடுசரமாய்ப் பற்றிக்கொண்டே வரமுடிகிறது இடையே அற்புதமான தரிசன வரிகள். ”எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்றுகொண்டே இருக்கிறோம்?” – பக்/90. ”உலகம் முழுதும் ஒரு உயிர். ஒரே உயிர்தான். அதன் உருவங்கள்தாம் பல்வேறு.” பக்/91.

வாழ்வின் விஷம்போன்ற பொருளாசையை இவன் இன்னும் துறக்கவில்லை என்கிற விதத்தில், பெட்டியைப் பாம்பு பாதுகாக்கிற கதை கனவாக வருகிறது. மனசாட்சியின் உருவோங்குதலில் ”என் எண்ணங்களை நானே நூற்று, என்மேலேயே பின்னிக்கொண்டு, அவை இன்னதெனக்கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.” – பக்/99. ”வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாப்போல் பயம் என் உள்ளத்தில்.” – பக்/101. ”என் வீடு காலியானதும், அதில் என் குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன.” – பக்/101.

அவன் மீண்டும் தன் மனைவியையும், குழந்தையிடமும் சென்றடைவதுவரை கதை ஒரு கவிதையின் நளினத்துடன் அற்புதமாய்ச் செல்கிறது.

‘தாட்சாயணி’ கதையைப் படிக்கையில் இவரது இன்னொரு கதை ‘அபூர்வ ராகம்’ நினைவுக்கு வருகிறது. ”சில விஷயங்கள் சிலசமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை நேர்ந்த விதம் அல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது.” – பக்/71. இதே தன் கருத்தை ‘அபூர்வ ராகம்’ னகதையிலும் வலியுறுத்துகிறார். சங்கீதம் பற்றிய தன் ஆழ்ந்த ரசனையை இந்தக் கதைகளில் முன்வைக்கிறார் லா.ச.ரா. பாத்திரங்கள் மென்மையும் மூர்க்கமும் ஒருங்கே பெற்று வார்த்தைகளின் சிறப்பில் பொலிகின்றன.

லா.ச.ரா. பெண்களை மிக மதிக்கிறார். படித்தவர்களாக, தெளிவானவர்களாக அவர்களை அவர் சித்தரிக்கிறார். இந்தக் கதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், இந்தக் கதைகள் நிகழ்கிற காலத்தையும் வைத்துப் பார்த்தால் லா.ச.ரா.வின் இந்தத் தன்மையின் சிறப்பு புரியும்.

லா.ச.ரா. தன் கதைகளில் உத்திகளை மிகத் திறமையாய்க் கையாள்கிறார். உவமைகளை மிகுந்த லாவகத்துடன் வெளிப்படுத்துகிறார். ”மெத்தைஉறை போன்ற அங்கி அணிந்த பாதிரி” என்பார். ”மழையில் நனைந்ததில் மார்பில் கொலுசு” என்பார். ”இறந்த பிணத்தின் கண்ணில் பளிங்கு ஏறியிருந்தது” என்பார். இவையெல்லாம் எங்கோ படித்திருந்தும் மனதில் தளும்புகின்றன.

இந்தத் தொகுதியில் ”தலையை இளநீர்போல முடிந்தாள்.” – ”வயிற்றில் பசி தேளாய்க் கொட்டிற்று.” – ”கேசுக்கு அலையும் போலிஸ்காரன் கவனிப்பது போல கவனித்தாள்.” – ”கற்கண்டுக் கட்டிகள்போல் நட்சத்திரங்கள்.” ”தலையில் சுருள்சுருளான மோதிரக் குவியல்.” – என்பனபோன்ற ஏராளமான ஜாலங்கள் மனதை நிறைக்கின்றன.

‘இதழ்கள்’, ‘கொட்டுமேளம்’ இரண்டுமே நீண்ட கதைகள். ‘இதழ்கள்’ ஒரு மனிதன் உறவுக்கிளைகள் ஒவ்வொன்றாய் இழப்பதைச் சொல்லி, அவன் தனிமை ஆழப்பட்டு வருவதை விஸ்தரித்து, அவனது நம்பிக்கை சிதையச் சிதைய உடல் வற்றிவருவதை விவரித்து அவன் மரணத்துடன் முடிகிறது. ‘கொட்டுமேளம்’ முழுக்க யதார்த்தத் தளத்தில் அமைந்த கதை. இளம்விதவையான தன் சகோதரியை நேசிக்கிற சகோதரன் கதாநாயகன். கதை சகோதரியின் பார்வை சார்ந்தது. தன் மனைவி அன்புவழிப்பட்ட பொறாமைரீதியாய் அவர்கள் இருவரையும் பற்றி அவதூறாய்ப் பேசிப் பிறந்தகம் செல்கிறாள். ஊரே மூக்கும் காதும் வைத்துப் பேசுகையில் பொறுமையாய் இவர்கள் வெற்றி பெறுகிற கதை. குழந்தை பிறந்ததும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மீண்டும் கதாநாயகனின் மனைவி வீட்டுக்குள் வந்து, (”இத்தனை மதில்கள் எழும்பிய இடத்தில் தொங்குவதற்கு இடம்தேடி அலையும் வெளவால் போன்று…” -பக்/86) மன்னிப்பு கேட்கிறாள். பிறகு அந்தக் குழந்தையின் கல்யாணத்தோடு விதவையின் வாழ்வு முடிகிறதாக கதை முடிகிறது.

‘கஸ்தூரி’, ‘மண்’ திருப்பம் சார்ந்த கதைகள். சொல்நேர்த்தியால் சிறப்பு பெறுகின்றன.

‘பச்சைக்கனவு’ ஒரு வித்தியாசமான கதைதான். இளம் வயதில் கண்ணிழந்த ஒரு குருடன் பற்றிய கதை. கண் இருக்கையில் அவன் கடைசியாய்க் கண்ட நிறம் பச்சை. அக்காரணம் பற்றியே அந்த வர்ணம் மனதைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு விட்டது. (பக்/5) அதிலிருந்து தான் கேள்விப்படுகிற உணர்கிற பொருட்களுக்கெல்லாம் பச்சை வர்ணமே அமைந்திருப்பதாய்க் கற்பனை செய்துகொள்வது இவனுக்குப் பிடிக்கிறது. லா.ச.ரா.வின் சிறப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பாத்திரங்களூடே திடீரென்று வாழ்க்கை பற்றிய தரிசனங்களை மிக நெருக்கமாய் நுணுக்கமாய்த் தெரிவிக்க முடிவதுதான்.

‘பச்சைக்கனவு’ கதையில் குருடனின் நினைவோட்டமாக, ”தூங்குவதற்கும் விழித்திருப்பதற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இரண்டும் ஒன்றாயிருக்கிறது. எப்பவும் இருள்தான். வெய்யில் உடலில் உறைத்தால் அது பகலா? அப்புறம் வெய்யிலில்லாது, தெருக் கொறடில் நான் கட்டிலில் படுத்துவிட்டால் அது இரவா? இப்பொழுது நான் தூங்குவதாக அர்த்தமா? தூக்கம் நிஜமா? விழிப்பு நிஜமா?” – பக்/14. என்று அற்புதமாய் இவரால் எழுத முடிகிறது.

‘இதழ்கள்’ கதையில் தன் சகோதரனை இழந்த நோயாளி இப்படி நினைக்கிறான். ”சந்துருவின் அகாலமான திடீர் மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் அல்லது ஒரு கணக்கில் மூச்சுக்கு மூச்சு ஒருதுளியாய்ச் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக்கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத்தில் நோயின் அவஸ்தை ஒருபக்கமிருக்கட்டும். இதில் எங்கோ ஒரு மூலையில் ஒருவிதமான அவமானம் ஒளிந்துகொண்டு ஊமையாய் உறுத்துகிறது.” – பக்/ 139-140.

கொட்டுமேளம் கதையிலும் இப்படி ஓரிடத்தை ரசிக்க முடிந்தது. ஜானாவின் மன்னி, தன் கணவனையும், ஜானாவையும் பற்றி அவதூறு பேசிப் பிறந்தகம் செல்கிறாள். பிறந்தவீட்டில் இவள் கணவனை விட்டுவிட்டு வந்த துக்கம்கூடத் தெரியாமலேயே வளைய வருகிறாள். பிறகு அவளுக்கும் அவள் தாயாருக்கும் முதல்பிணக்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? ஜானாவிடம் யாரோ இதுபற்றி இப்படிச் சொல்கிறார்கள். ”ஏன்டி, மருமான் முழிமுழியாப் பேசறானாமே! நான் கேள்விப்பட்டேன். உன் மன்னிக்குப் புதுசா தங்கை பிறந்திருக்காம். அதிலேருந்து என்னமோ கசமுசப்பாயிருக்காம்.” – பக்/180.

‘தரிசனம்’ இந்தத் தொகுப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தது. ஏனோ திருமணம் குதிராமல் தடைப்பட்டு வருகிற பெண்களை நினைத்த இவர் சோகம், மிகுந்த கலைநயத்துடனும் கவிதையின் அழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. ”எதிர்வீட்டில் ஒரு பெண் வயது முப்பத்திரெண்டாம். இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்… அவளை அவள்பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹ¤தியாய்ச் சொரிகிறாள்… நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால் தாலிமுடி ஏன் விழுவதில்லை?” – பக்/112. ”கன்யாகுமரி காஷாயினி… காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும் அங்கு அத்தனை செளரியமும், ஒன்றுடன் ஒன்று ஒன்றாக ஏங்கி, வறட்டுக் கெளரவத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய மூக்குத்தி உண்மையில் கல்யாணம் ஆகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச் சொட்டு.” (பக்/117)

லா.ச.ரா.வின் ஒவ்வொரு கதையும் சிறப்புச் சிறுகதைதான். லா.ச.ரா.வின் சொற்செட்டும், கற்பனை அழகும், கவிதை மனமும் மிகுந்த சுவையும், அதேசமயம் கருத்துச் செறிவும் நிரம்பியவை.

எங்களைப்போன்ற இன்றைய இளைய எழுத்தாளர்களுக்கு லா.ச.ரா.வும், ஜானகிராமனும் தவிர்க்க முடியாத ஆதர்சங்கள். இருவரது கதைகளையும் தொடர்ந்து ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டு வருவது மகிழ்ச்சியோடு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

1) லா.ச.ரா. மரபுரீதியான பழக்கவழக்கங்களை தம் கதைகளில் ஆதரித்தார். எனினும் அவைகளை மரபை உதறிய புது முறைகளில் சொன்னார்.

2) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் கட்டுரைகளுக்கு சுந்தர ராமசாமியையும், கதைகளுக்கு லா.ச.ரா.வையும் சொல்லியாக வேண்டும்.

3) லா.ச.ரா. உணர்வுகளின் மைக்ராஸ்கோப். சொற்களின் சூத்ரதாரி. இவர் கதைகள் வார்த்தைகளின் விஸ்வரூபம். லா.ச.ரா.வின் உலகம் குறுகியது என்று கூறுபவர்களால்கூட அது ஆழமானது என்பதை மறுக்க முடியாது.

எஸ். ஷங்கரநாராயணன்
சென்னை 101
10.12.1986
(ஐந்திணை பதிப்பகம் – லா.ச.ரா.வின் சிறப்புச் சிறுகதைகள் – முதல் தொகுதி.)

>>>

லா.ச.ரா.வுடன் நட்பு (அடுத்த இதழில்)
————————————————————————————————————————

By Era Murugan in RKK:
ஒரே கதையைத்தான் லா.ச.ர வெவ்வேறு நடைகளில் எழுதுகிறார் என்று கு.அழகிரிசாமி ஒரு தடவை சொன்னார்

இந்தக் குற்றச்சாட்டு கி.ராஜநாராயணனைக் குறித்தும் உண்டு. பிரபஞ்சன் சொன்னதாக நினைவு.

லா.ச.ராவை ‘அழுகுணிச் சித்தர்’ என்பார் க.நா.சு.

இ.பா சார் சொன்னபடி, அவர் ஒரு தலைமுறையின் கல்ட் ஃபிகர். ‘புத்ர’வும் ‘சிந்தாநதி’யும் அவர் பெயரை எக்காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் – கல்ட் பிகர்கள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துப் போகப்படுவதில்லை என்றாலும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் (1998 என்று நினைவு) அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார் – “கதை நன்றாக வரும்வரை அதை விடாதே. திரும்பத் திரும்ப சோம்பல்படாது எழுது. என் வீட்டுக்கு வா, காண்பிக்கிறேன், புத்ரவுக்கு எத்தனை டிராப்ட் ட்ரங்குப் பெட்டியில் வைத்திருக்கிறேன் என்று”.

அவர் பட்ட கஷ்டம் நாம் படத்தேவையில்லாமல் செய்துவிட்டது டெக்னாலஜி. கம்ப்யூட்டரில் எழுதுவதால், அடித்தலும் திருத்தலும் ஒட்டுதலும் வெட்டுதலும் புதிதாக நுழைத்தலும் நாலே கீபோர்ட் விசைகள் மூலம் நடத்திவிட முடிகிறது. ஆனால் அந்த ‘சிரமத்தை’க்கூட எடுத்துக்கொள்ள எத்தனை எழுத்தாளார்கள் முயல்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

புத்ர-வை நாவலோடு அங்கங்கே அவர் டூடுல்ஸாகக் கிறுக்கிச் சேர்த்த படங்களுக்காகவும் நினைவு வைத்திருக்கிறேன்.வாசகர் வட்டம் (லட்சுமி கிருஷ்ணமூர்த்தி) கிட்டத்தட்ட ஐம்பது வருடம் முன்னால் நூல் பதிப்பில் செய்த அழகான புதுமை அது.

அன்புடன்
இரா.மு

Thinnai: “லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும் :: பா. உதயகண்ணன்”

Thinnai: “லா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக.. :: மகேஷ்.”

Thinnai: “லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி :: ம.ந.ராமசாமி”

————————————————————————————————————————————————–

முகங்கள்: எழுத்தையே சங்கீதமாக்க முயற்சித்தவர்!

ந.ஜீவா

“எழுத்து எனது சொந்த ஆத்மார்த்தம்’, “எனக்காகவே நான் எழுதுகிறேன், அதில் பிறர் தன்னை அடையாளம் காண முடிந்தால் அதுவே பெரிய விஷயம்’ என்றெல்லாம் கூறியவர் மறைந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்த எழுத்தாளர் லா.ச.ரா.வுக்கு வயது 91.

அவரைப் பற்றிய ஓர் ஆவணக் காட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண்மொழி.

அவள் அப்படித்தான், ஏழாவது மனிதன், கருவேலம்பூக்கள், மோகமுள் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் பணியாற்றியவர் அருண்மொழி. காணிநிலம், ஏர்முனை ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது எல்.வி.பிரசாத் ஃபிலிம் & டிவி அகாதெமியில் ஆசிரியராகப் பணியாற்றும் அவரைச் சந்தித்தோம்.

லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?

நான் லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப் படம் எடுப்பதற்குக் காரணம் அவருடைய எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய கவித்துவமான நடை என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருடைய “கழுகு’ கதையை தொலைக்காட்சிக்காகப் படமாக்க வேண்டும் என்று 1992 இல் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. லா.ச.ரா.வைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு எனக்கு ஆர்வம் வந்ததற்கு இன்னொரு காரணம் அவரது சொந்த ஊரான லால்குடிக்கு அருகேதான் எனது சொந்த ஊரும்.

அவருடைய “கழுகு’ கதையைப் படமாக்கினீர்களா?

நான் கழுகு கதையைப் படமெடுக்கலாம் என அவரை அணுகிய போது அதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை.

“என் கதையைப் படமெடுக்காதீங்க…என் கதையைப் படமெடுத்து நஷ்டம் அடையாதீங்க’ என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். அவருடைய கதை படமாகும்போது மாறிவிடும் என்பதனால் அப்படிக் கூறுகிறாரோ என்று நினைத்தேன். அவரும், “கதையின் ஜீவன் படமாக்கும்போது வீணாகிவிடும்’ என்றார். நான் திரைக்கதையை அவரிடம் காட்டுகிறேன் என்றெல்லாம் கூறிப் பார்த்தேன். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் எனக்கு அந்த ஆண்டு அந்தக் கதையைப் படமாக்குவதற்கான அப்ரூவல் தூர்தர்ஷனில் கிடைக்கவில்லை.

ஆனால் அந்தக் கதையை வேறொருவர் எடுத்தார். ஆனால் லா.ச.ரா., “அந்தப் படத்துக்கும் தனது கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்றார்.

லா.ச.ரா.வுக்கு சினிமாவைப் பற்றிய நல்ல அபிப்ராயங்கள் இருந்தனவா? உங்களைப் படமெடுக்க எப்படி அவர் அனுமதித்தார்?

எனக்கும் எல்லாருக்கும் தெரிந்த லா.ச.ரா. ஓர் எழுத்தாளர் என்பதுதான். ஆனால் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர் உலகத்தரம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களின் ரசிகர் என்பது தெரியவந்தது. 1940 – 50 காலகட்டங்களில் வெளிவந்த தரமான படங்களின் ரசிகர் அவர். ஃபிராங் காப்ராவின் படங்களை எல்லாம் பார்த்து அணுஅணுவாக ரசித்திருந்தது தெரிய வந்தது.

உலகத்தரம் வாய்ந்த படங்களைப் பார்த்து ரசித்த லா.ச.ரா.விற்கு தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவு பரிச்சயமில்லை. லா.ச.ரா. தொலைக்காட்சியில் கூட தமிழ் சினிமா பார்க்கமாட்டார் போலிருக்கிறது. 96 – 98 ஆம் ஆண்டில் கமல்ஹாசனைப் பற்றி அவரிடம் பேசினேன். அதற்கு அவர், “கமல்ஹாசனா? யார் அவர்? என்ன பண்றார்?’ என்று கேட்டார். இத்தனைக்கும் கமல்ஹாசன் லா.ச.ரா.வின் தீவிர ரசிகர். அதற்குப் பின் கமல்ஹாசனோடு அவருக்குத் தொடர்பிருந்ததா என்று எனக்குத் தெரியாது. வயோதிகத்தின் காரணமாக ஒருவேளை அப்படி அவர் பேசினாலும் பேசியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

அவரை ஆவணப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போது, “உங்களுக்காக நான் நடிக்க எல்லாம் முடியாது. வேண்டுமானால் இயல்பா நான் இருக்கறதை படம் எடுத்துக்கங்க’ என்றார்.

லா.ச.ரா.பற்றிய ஆவணப்படத்தில் என்ன காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன?

அதற்குப்பின் பலமுறை க்ருஷாங்கினியுடன் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். டைனிங் டேபிள் முன் உட்கார்ந்து க்ருஷாங்கினிக்கு அவர் அளித்த பேட்டிகளைப் படமெடுத்தேன். அதன்பின் லா.ச.ரா. பங்கெடுத்த ஐந்து இலக்கியக் கூட்டங்களைப் பதிவு செய்தேன். அக்கூட்டங்களில் சிட்டி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோர் லா.ச.ரா.வைப் பாராட்டிப் பேசிய நிகழ்வுகளைப் படமெடுத்தேன். இதுதவிர வண்ணநிலவன், ஞானக்கூத்தன் ஆகிய இருவரையும் லா.ச.ரா.வின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்து அதையும் படமாக்கியிருக்கிறேன். லா.ச.ரா.வை அவர் வீட்டில் படமெடுக்கும் போதெல்லாம் அவருடைய துணைவியாரும், மகளும் ரொம்ப ஒத்துழைப்புக் கொடுத்துப் படமெடுக்க உதவினார்கள்.

தான் ஓர் எழுத்தாளனாக இருப்பது பற்றி அவர் எண்ணம் எப்படி இருந்தது?

“நான் சம்பாத்தியத்துக்குத் தொழில் வச்சிருக்கேன். எழுத்தை வியாபாரம் பண்ணலை. முத்திரைக் கதையெல்லாம் எழுதமாட்டேன். நான் எழுத்தில் பரிசோதனைகள் பண்றேன்’ என்பார்.

எழுத்தாளர் தி.ஜானகிராமனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் உடையவராக இருந்தார் லா.ச.ரா. “தி.ஜானகிராமன் சங்கீதக்காரனைக் கதாபாத்திரமாக வைத்து எழுதுகிறார். நான் எழுத்தையே சங்கீதமாக்க முயற்சிக்கிறேன்’ என்பார்.

லா.ச.ரா.விடம் உங்களைக் கவர்ந்த பண்பு?

பணத்தைப் பெரிதாக எண்ணாத மனிதர். 1996 இல் இருந்து 2000 க்குள் அவர் மூன்று வாடகை வீடுகள் மாறிவிட்டார்.

அவர் ஒருவரிடம் ஏதோ பேசணும் என்பதற்காகப் பேசமாட்டார். நாம் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவரைப் பார்க்கப் போனால் அது பற்றி மட்டுமே அவர் பேசுவார். அதுபோல அவரின் ரசிகர் யாராவது நம்மோடு வந்து அவருடன் பேச ஆவலாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் அவர் கண்டு கொள்ளமாட்டார். அவருடன் பேச அவர் இன்னொரு நாள்தான் வரவேண்டும். நேரம் பற்றிய அப்படியொரு விழிப்புணர்வு அவருக்கு இருந்தது.

மேலும் அவரைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லி அவரைப் பாராட்டிவிட முடியாது. வாசகர்கள் யாராவது அவரை அரைகுறையாகப் படித்துவிட்டுப் பாராட்டினால் லா.ச.ரா.கேட்கும் நுட்பமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழிக்க நேரிடும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி ஆவணப்படம் எதுவும் எடுத்திருக்கிறீர்களா?

நான் லா.ச.ரா.வை மட்டும் ஆவணப்படம் எடுக்கவில்லை. நகுலனைப் பற்றிய ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன்.

எப்படி லா.ச.ரா.வை நீண்டகாலமாகப் பதிவு செய்து ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேனோ அதைப் போல பிற எழுத்தாளர்களையும் பதிவு செய்துவருகிறேன்.

கோவை ஞானியை நிறையப் பதிவு செய்திருக்கிறேன். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், இன்குலாப், இலங்கை இலக்கிய விமர்சகர் கா.சிவத்தம்பி ஆகியோரைப் பற்றிய பதிவுகள் என்னிடம் உள்ளன. மேலும் சில காட்சிகளை எடுத்தால் இவற்றையெல்லாம் ஆவணப்படங்களாக மாற்றிவிடலாம்.

கவிஞர் பழமலய், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரையும் படமெடுக்க ஆசை உள்ளது.

ந.ஜீவா

Posted in 2437706, Academy, Anjali, Author, Awards, Biography, Biosketch, Blogs, Books, Critic, Critique, dead, Dhinamani, Dinamani, Faces, Fiction, Kadhir, Kathir, La Sa Ra, Lalgudi, Lalkudi, LaSaRa, Life, Literature, Manikkodi, Manikodi, Memoirs, Novels, people, Poems, Poet, Prizes, Puthra, Putra, Raamamirtham, Ramamirtham, Reviews, Sahithya, Sahithya Academy, Sahitya, Sahitya Academy, Saptharishi, Sindhanathi, Sindhanathy, Sinthanathi, Tamil, Tamil Blogs, Thinamani, Writer | 8 Comments »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »