Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Correctional Force’ Category

Police Force – History, Perspectives, Evolution & Backgrounders : Human Rights

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

ஆர். நடராஜ்

ஆண்டு 1860. ஆகஸ்ட் 17-ம் நாள்.

இது இந்திய காவல் துறை சரித்திரத்தில் மிக முக்கியமான நாள். அன்றுதான் முதல் போலீஸ் கமிஷன் எம்.எச். கோர்ட் தலைமையில் அப்போதைய மதராஸ் காவல் துறைத் தலைவர் டபிள்யூ. ராபின்ஸன் உள்ளிட்ட ஆறு நபர் குழாம் அமைக்கப்பட்டது.

இந்தக் கமிஷனின் பரிந்துரையின் பேரில் இந்திய காவல் சட்டம் 1861 இயற்றப்பட்டது. இது இந்தியாவில் உள்ள காவல் துறை அமைப்பை இன்றுவரை நிர்ணயிக்கும் சட்டம்.

இந்தச் சட்டத்துக்கு அடித்தளம் 1859-ல் இயற்றப்பட்ட மதறாஸ் சட்டம் 27 – இது அப்போதிருந்த மதறாஸ் மாகாணத்தின் காவல் துறை அமைப்பை நிர்ணயித்தது. இந்தச் சட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது 1856ல் இயற்றப்பட்ட சென்னை மாநகர காவல் அமைப்புச் சட்டம்.

ஆம், சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1856 பின்பு வளர்ந்த காவல் அமைப்புகளுக்கு வழிகாட்டி என்பதுதான் உண்மை.

1856 சென்னை நகர காவல் சட்டப்படி போல்டர்சன் முதல் ஆணையாளராகப் பொறுப்பேற்றார். குற்றவியல் நீதித்துறை தலைவர் அந்தஸ்து அவருக்குத் தரப்பட்டது.

1856 முதல் சுதந்திரமாகச் செயல்பட்ட நகர காவல் துறை, 1867ல் மாகாண காவல் துறைத் தலைவர் ஆளுமையில் கொண்டு வரப்பட்டு, பின்பு 1887 முதல் கைல்ஸ் குழுவின் பரிந்துரையின் பேரில் தனிப்பிரிவாக அரசின் பிரத்தியேக அதிகாரத்தின் கீழ் செயல்பட்டது.

1902 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட போலீஸ் கமிஷன், சென்னை, மும்பை, கோல்கத்தா நகரங்கள் மற்றும் மாகாணங்களில் செயல்பட்ட காவல் துறையின் செயல்பாடுகளை ஆராய்ந்து காவல் துறை சீரமைப்புத் திட்டத்தை வகுத்தது. அதன்படி மீண்டும் மாநகர காவல் துறை மாகாணத்தின் காவல் துறையின் ஆளுமையின்கீழ் கொண்டு வரப்பட்டது.

1886ஆம் ஆண்டு சென்னை “மக்கள் பூங்கா’வில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஒரு மிகப்பெரிய பொருள்காட்சி இந்த மைதானத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் 372 பேர் உயிரிழந்தனர்.

இம்மாதிரி மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக அதிக காவலர்கள் தேவைப்பட்டதால், அண்டை மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். “மொஹரம்’ சமயச் சடங்குகள் சமயத்தில் சென்னையில் அடிக்கடி சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது. உயிரிழப்பும் ஏற்பட்டது. இதைக் கருதி “சேமைப்படை’ உருவாக்கப்பட்டது. “மாகாண சேமைப்படை’யும் நிறுவப்பட்டது.

மேற்கூறிய தீவிபத்து மற்றும் அசாதாரணமாக நிகழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு XIII 1888 அமலாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் சென்னை நகர காவல் துறை இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூடும் இடத்தில் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் பணி என்பதை கருத்தில்கொண்டு இம்மாதிரி கேளிக்கை இடங்களுக்கு ஆணையாளரிடமிருந்து உரிமம் பெற வேண்டும் என்று இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

விபசாரம் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது இன்றைய நிலை. ஆனால் அன்று இது ஒரு சமூகத்தில் உறைந்துள்ள தீயொழுக்கம் என்று கருதப்பட்டது. 1887 ஆம் ஆண்டில் சென்னையில் 620 அங்கீகரிக்கப்பட்ட விலை மாதர்கள் இருந்தனர். உரிமம் பெற்ற 237 சாராயக் கடைகளும், 343 கள்ளுக்கடைகளும், 139 போதைப் பொருள்கள் விற்பனை இடங்களும் இருந்தன என்பது அப்போது இருந்த சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறது.

1946ல் இருந்து சென்னை மாநகர விரிவாக்கம் தொடங்கப்பட்டு, புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து படிப்படியாக இணைக்கப்பட்டன.

2005ல் சென்னை நகரத்தின் பரிணாம வளர்ச்சியைச் சமாளிக்க சென்னைப் பெருநகர காவல் துறை உருவாக்கப்பட்டு, மேலும் பல புறநகர்ப் பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டன. இன்று 121 காவல் நிலையங்கள் மற்றும் 34 மகளிர் காவல் நிலையங்களும் இயங்குகின்றன. சென்னை துறைமுகப் பாதுகாப்புக்காக பிரத்தியேக மிதக்கும் கடலோர காவல் நிலையம் இயங்குவது இந்தியாவிலேயே சென்னையில் மட்டும்தான் என்பது சென்னை மாநகர காவல் துறையின் மற்றொரு சிறப்பு.

சென்னை ஆணையாளராக முதலில் பதவி பெற்றவர் போல்டர்சன். பராங்குசம் நாயுடு முதல் இந்தியராக இந்தப் பதவியை அலங்கரித்தவர்.

சமீபகாலத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, ரோந்து வண்டிகளுக்கு பூகோள நிர்மாணிப்புக் கருவி பொருத்தப்பட்டு செயல்முறை முழுவதும் கணினி மயமாக்கப்பட்டது.

சமுதாய காவல்பணி மேலும் மேம்படுத்தப்பட்டு ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் சமுதாய காவல்பணி மையங்கள் அமைக்கப்பட்டன.

குற்றத்தடுப்பு நடவடிக்கை, நடந்த குற்றங்களைக் கண்டுபிடிக்க பிரத்தியேக முயற்சி, மீட்கப்பட்ட பொருள்களை உரியவரிடம் ஒப்படைத்தல், நடந்த குற்றங்களைத் துரிதமாகப் புலனாய்வு செய்து முடித்தல், போக்குவரத்தை சீரமைத்தல், தானியங்கி சமிஞ்கை நிறுவுதல், சைபர் குற்றங்களை எதிர்கொள்ளல், பொதுமக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து மனித நேயத்தோடு தீர்வு காணுதல், குழந்தைகள் குற்றங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க சிறார் மன்றங்களை நிறுவுதல் போன்ற பல ஒருங்கிணைந்த பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல சென்னை மாநகர பதினைந்து காவல் நிலையங்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் பெறப்பட்டது.

இன்று நவீன மயமாக்குவதில் மேலும் ஒரு மைல்கல், பல தொழில் நுட்ப உபகரணங்கள் கொண்ட ரோந்து வாகனங்கள். இம்மாதிரி 100 ஹூண்டாய் வாகனங்கள் தமிழக முதல்வரால் சென்னை மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இம்மாதிரியான நவீன வாகனங்கள் இல்லை.

காவல் துறையினரிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது நேர்மை, கண்ணியம், கடமை உணர்வு, காவல் நிலையங்களில் அனுசரணையான அணுகுமுறை. பாரம்பரிய வளம் பெற்றது தமிழக காவல் துறை. தமிழக காவலர்கள் நல்லொழுக்கத்துக்கு எடுத்துக்காட்டு. எவ்வளவோ சவால்களையும், சுமைகளையும் கடந்து புடம் போட்ட தங்கமாக மிளிர்வது நமது காவல் துறை. தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ஆயிரக்கணக்கான காவலர்களின் வியர்வையில் வளர்ந்தது இந்தத் தல விருட்சம். அதனை மேலும் மேம்படுத்துவது ஒவ்வொரு காவல் துறை ஆளுநரின் கடமை.

சென்னை காவல் துறை, 150-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், காவல் துறைக்கு நற்பணியாற்றிய பல சிகரங்களை எட்டிய பெரியவர்களின் பணிகளை நினைவு கூர்வோம். சமுதாயப் பணிக்காக உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செய்வோம்.

“”நேசமான அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, வெளித் தலையீடுக்கு அடிபணியாதிருத்தல், பரிவோடு நம்பிக்கை வரும் வகையில் நடத்தல், திறமையான உயர்தர ஆளுமை காவல் துறையின் எல்லா மட்டத்திலும் பரிமளித்தல் ஆகிய நல்லியல்புகள் காவல் துறை மேன்மை அடைய இன்றியமையாதவை’ என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ள அறிவுரைக்குச் செயல்வடிவம் கொடுப்போம். இதுவே ஒவ்வொரு காவல் துறையினரின் குறிக்கோளாகவும் அமைய வேண்டும்.

(கட்டுரையாளர்: காவல் துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).

Posted in Arrack, Correctional Force, Cyber Crime, DGP, Drugs, History, Human Rights, IG, Law, Legal Sex, Madras Police, MH Court, Order, Parangusam Naidu, Polderson, Police Commissioner, Prostituition, R Nataraj, Sex, Society, Toddy Shops, W Robinson | Leave a Comment »

Mangaiyar Malar – Lathika Charan Interview

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2006

‘‘மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், எஸ்டேட்கள் வைத்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். என் கூடப் பிறந்தவர் ஒரே ஒரு சகோதரி. எங்கள் பெற்றோர், ‘‘பெண் என்றாலும் வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். படிப்பை முடித்துவிட்டு சொந்தக் காலில் நிற்கவேண்டும்’’ என்று சொல்வார்கள். நான் முதலில் ஊட்டியிலும் அடுத்து கொடைக்கானலிலும் ஹாஸ்டலில் தங்கி என் படிப்பை முடித்தேன்.

படிக்கிற காலத்தில், எனக்குப் புத்தகங்கள் படிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். நான் விரும்பிப் படித்தவை துப்பறியும் நாவல்கள்தான். என்னுடைய மனம் கவர்ந்த துப்பறியும் நாவலாசிரியர், அகதா கிறிஸ்டிதான். துப்பறியும் நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டால், எனக்கு நேரம் போவதே தெரியாது. என்னிடம் சில பத்திரிகையாளர்கள், சின்ன வயதில் துப்பறியும் நாவல்களில் உங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம்தான், போலீஸ் வேலைக்கு வரத் தூண்டியதா என்று கேட்பார்கள். உண்மை என்னவென்றால், நான் பிற்காலத்தில் காவல் துறைக்கு வரப் போகிறேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.’’

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நான் எனக்கு மிகவும் பிடித்த பாடமான கணிதத்தில பட்டப் படிப்பை முடித்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் வாலி பால், நெட் பால், பாஸ்கட் பால் என்று அனைத்து விளையாட்டுகளும் ஆடினாலும், கல்லூரியின் வாலிபால் அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கூட நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று ஆர்வமாக இல்லை. படிப்பை முடித்த பிறகு, என் அப்பா, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கச் சொன்னார். உன்னால் வெற்றி பெற முடியும் என்று எனக்கு ஊக்கம் அளித்தார். தேர்வு விண்ணப்பத்தில், எனது முதல் விருப்பமாகக் காவல்துறைப் பணியைக் குறிப்பிட்டேன். காரணம், என்னுடைய குணத்துக்கு, ஐ.ஏ.எஸ். அல்லது அயலுறவுத் துறை பணியை விட காக்கி சீருடைப் பணி பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். என் அப்பா, அம்மா இருவருமே, உனக்கு எது விருப்பமோ அதையே குறிப்பிடு என்று சுதந்திரம் அளித்தார்கள். பணியிட விருப்ப வரிசையில் முதல் சாய்ஸ் தமிழ்நாடு. அடுத்து கேரளா எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஐ.பி.எஸ்.க்குத் தேர்வு பெற்றபின் அளிக்கப்பட்ட பயிற்சி மிகவும் கடுமையானது. தினமும் நான்கு மணி நேரம் பலவிதமான உடற்பயிற்சிகள். இதில் குதிரையேற்றமும், ஆயுதப் பயிற்சியும் அடக்கம்.

பயிற்சிக்குப் பின்னர், சேலத்தில் துணை கண்காணிப்பாளராக எனக்கு முதல் போஸ்டிங். தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகக் காவல் துறையில் குற்றப் பிரிவு, சி.ஐ.டி. பிரிவு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்ததுடன், சி.பி.ஐ.யிலும் நாலரை ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன்.

என் காவல் துறை அனுபவத்தில் பல பரபரப்பான வழக்குகளை நான் கையாண்டிருக்கிறேன் என்றாலும், என் ஆரம்பக் கட்டத்தில் சேலத்தில் பணியாற்றியபோது புலனாய்வு செய்த ஒரு கேஸ் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாதது!’’

‘‘மூன்று மாதக் குழந்தை ஒன்று, நகரின் பொதுக் கழிப்பிடப் பகுதி ஒன்றில் இறந்து கிடந்தது. விசாரித்த போது, பன்னிரண்டு வயது பையன் ஒருவன் அந்தக் குழந்தை இறப்பதற்கு முன்னால் அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனது தெரியவந்தது, அந்தப் பையன் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு வாங்கியதாக ஒரு பெண்மணி சொன்னாள். அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரணை நடத்தினோம். பையன், குழந்தைக்கு மரவள்ளிக் கிழங்கைக் கொடுத்திருக்கிறான், கிழங்கு அதன் தொண்டையில் சிக்கிக் கொள்ள, குழந்தை மூச்சுத் திணறி இறந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்தோம்.
மறுநாள், இறந்த குழந்தையின் உடலைப் போஸ்ட் மார்டம் செய்த அரசு மருத்துவமனை டாக்டர், என்னைப் பார்க்க விரும்புவதாகத் தகவல் வந்தது, நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர் சொன்ன தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது. தொண்டையில் மர வள்ளிக் கிழங்கு சிக்கி குழந்தை இறக்கவில்லை. துணியை வால் போல் சுருட்டி அந்தக் குழந்தையின் தொண்டைக்குள் செலுத்தியதால் குழந்தை மூச்சுத் திணறி இறந்ததாக டாக்டர் கூறினார். பையனை மீண்டும் விசாரித்தோம். கடைசியில், அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

அவன் கொலை செய்ததற்கு என்ன காரணம் சொன்னான் தெரியுமா? அந்தப் பையன், வட்டிக்குக் கடன் கொடுப்பவன். அந்தக் குழந்தையின் தந்தை, அந்தப் பையனிடம் கடன் வாங்குவான்; ஆனால் ஒழுங்காகத் திருப்பித் தர மாட்டான். ஒருநாள் பையனிடம் கடன் கேட்க அவன் கடன் தர முடியாது; இதுவரை கொடுத்த கடனை முதலில் திரும்பக் கொடு என்று கேட்க, அவன் ‘‘தர முடியாது; உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’’ என்று சவால் விட, பையன் அந்த நபரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து கொன்று விட்டான். விசாரணை முடிந்தவுடன், தான் செய்த காரியத்தின் முழு பரிமாணத்தை அறியாத அந்தச் சிறுவன், ‘‘இப்போ நான் வீட்டுக்குப் போகலாமா?’’ என்று கேட்டபோது, நான் அதிர்ந்தேன். அந்தப் பையன், கடைசியில் சீர்திருத்தப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படான். உண்மையிலேயே என்னால் மறக்க முடியாத கேஸ் இது.

‘‘அரசாங்கம் என்னை நிர்வாகவியல் சிறப்புப் பயிற்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது. முழுமையான ஈடுபாட்டுடனும், திறமையாகவும் என் கடமைகளைச் செய்ததைப் பாராட்டி எனக்கு ஜனாதிபதியின் பதக்கம் வழங்கப்பட்டது.

என்னுடைய திருமணம் காதல் திருமணம். நானும், என் கணவர் சரணும் ஐதராபாத்தில்தான் சந்தித்தோம். திருமணம் முடிந்தது. என்னுடைய பணி எப்படிப்பட்டது என்பதை என் கணவர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், எங்கள் திருமண வாழ்க்கை சுமுகமாக அமைந்துள்ளது. காவல்துறைப் பணி நேரம் காலத்துக்கு உட்பட்டதில்லை என்பதால், நான் முடிந்த அளவுக்கு ஞாயிற்றுக் கிழமைகளை எனது குடும்பத்துக்காக ஒதுக்கி விடுவேன். என் மகள் இப்போது கல்லூரியில் படிக்கிறாள். அவள் சின்னக் குழந்தையாக இருந்தபோது, அதிர்ஷ்டவசமாக நான் சி.பி.ஐ. யில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது என் அலுவலகம் சாஸ்திரி பவனில் இருந்தது. அங்கே ஒரு குழந்தைகள் காப்பகம் உண்டு. அங்கே என் மகளை விட்டுவிட்டு, அவ்வப்போது போய்ப் பார்த்து விட்டு வருவேன்.

எனக்கு சமையலில் ஆர்வமில்லை. ஆனால் என் கணவரும், மகளும் நன்றாகச் சமைப்பார்கள். நான் கேக்குகள், பிஸ்கட்கள் தயாரிப்பேன். மலைப் பகுதியில் அமைந்த எஸ்டேட் பகுதியில் வளர்ந்தவள் என்பதால் எனக்குத் தோட்டக் கலையில் மிகவும் அதிக ஆர்வம் உண்டு. அது மட்டுமின்றி தோட்ட வேலை ஒரு நல்ல உடற்பயிற்சியுமாயிற்றே?

ஒரு பெண் என்றாலும், எனக்கு உடை, அலங்காரம் இவற்றில் எல்லாம் அதிக ஆர்வம் கிடையாது. ஐ.பி.எஸ். அதிகாரி என்ற முறையில், நான் காக்கிச் சீருடை அணிந்தாலும், ஒரு சில பதவிகளில் இருந்தபோது, நான் காக்கிச் சீருடை அணியாமல், புடைவை அணிந்ததும் உண்டு.

எனக்குத் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உண்டு. முன்பெல்லாம் அரைமணி அல்லது முக்கால் மணி நேரம் உடற்பயிற்சிக்காக என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது. ஆனால், இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும், எப்படியும் பதினைந்து நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு நான் ஒதுக்கிவிடுகிறேன்.

தினமும் கமிஷனர் அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுடன் வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை. அவற்றால், பலவிதமான பாதிப்புகள். புகாரும் கையுமாக வரும் ஒவ்வொரு வரையும் தினமும் நான் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். சாமானிய மக்களின் நண்பன் காவல்துறை என்ற பெயரை நிலைநாட்டுவதுதான் என்னுடைய முதல் கடமை.’’

‘‘சென்னை மாநகரக் காவல்துறை வரலாற்றில், ஒரு பெண் கமிஷனராக வந்திருப்பதை ஒரு பெரும் சாதனையாகப் பலரும் சொல்லுகிறார்கள். இதுவரை நான் வகித்த பதவிகள் எல்லாவற்றையும் விட, அதிகமான பொறுப்புகள் கொண்ட பதவி இது. முன்பை விட இப்போது அதிகப்படியான பகுதிகள், சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குள் இருக்கின்றன. இருந்தும், சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக என்னால் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை வைத்து, என்னை இந்தப் பதவியில் அமர்த்தியதற்காக நான் பெருமைப்படுகிறேன்.’’

சந்திப்பு : எஸ். சந்திரமௌலி
படம் : ஸ்ரீஹரி

Posted in CBI, Chennai, Commissioner, Correctional Force, Interview, Lathika Charan, Latika Saran, Madras, Mangaiyar Malar, Officer, Police, Tamil | 2 Comments »