Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Coordination’ Category

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

Congress & Communist Govt.’s Coordination Committee

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

ஒருங்கிணைப்புக் கமிட்டி

மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்தி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துள்ளார். நைனிதாலில் நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இது சாத்தியமில்லை என்றார். கடந்த 2004-ல் தேசிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் அரசு அமைத்தபோது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர்.

இடதுசாரிகள் அரசுக்கு வெளியே இருப்பதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்று சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. இக் கமிட்டியில் இடதுசாரிகள் சார்பில் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேசிய முற்போக்குக் கூட்டணியும் இடதுசாரிகளும் அடங்கிய ஒருங்கிணைப்புக் கமிட்டி என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. இக் கமிட்டியில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அடங்கிய இதர கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த சிலகாலமாகவே கோரி வருகிறது. கடந்த வாரம் டேராடூனில் நடந்த அக் கட்சியின் மாநாட்டில் இக் கோரிக்கை தீவிரமாக வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதியாக விளங்க முடியாது என்று அக் கட்சி கூறியது.

ஆனால் மன்மோகன் சிங் அரசை ஆதரிக்கிற கட்சிகள் பலவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும்போது அக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இடம்பெறத் தேவையில்லை என்பது காங்கிரஸின் வாதமாகும். எனினும் பல முக்கிய விஷயங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் அவை அமைச்சரவையின் முன் வைக்கப்படுகின்றன. அவ்வித நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு ஆலோசனைகள் நடைபெற வழியில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட சில முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அரசு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெய்வேலி நிறுவனப் பங்குகள் விவகாரத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம்.

எனினும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் ஒன்றுதான் தீவிரமாக வற்புறுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப்போல இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிற கட்சிகள் இக் கோரிக்கையை – குறைந்தபட்சம் பகிரங்கமாக எழுப்பவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக உள்ளது.

ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்துவது என்றால் அதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மன்மோகன் சிங் அரசை பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளும் உண்டு. இக் கட்சிகளில் யாரைச் சேர்த்துக் கொள்வது, யாரை விடுவது என்ற பிரச்சினை உள்ளது.

இடதுசாரிகளைப்போலவே தாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்பதால் தங்களையும் அக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதிக் கட்சியும் மாயாவதிக் கட்சியும் கோரினால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

இடதுசாரிகளுடன் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சி வருந்தினாலும் வியப்பில்லை என்ற நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.

Posted in Central, Coalition, Committee, Communist, Cong (I), Congress, Coordination, Government, India, NDA, Tamil, UDA | Leave a Comment »