Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cooperation’ Category

Russia vs USA – India Foreign Relations: External Affairs

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

வாஷிங்டனுக்கே வெளிச்சம்!

இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் என்கிற செய்தி வரும்போதெல்லாம், 1979-ல் இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயின் ரஷியப் பயணம்தான் நினைவுக்கு வரும். ரஷியா என்றாலே எட்டிக்காயாகக் கசந்த மொரார்ஜி தேசாய், அன்றைய ரஷிய அதிபர் பிரஸ்னேவிடமும், பிரதமர் கோசிஜினிடமும் நட்புக்குப் பேசிவிட்டு எந்தவித உருப்படியான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல் திரும்பினார் என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இப்போதும் பேசப்படும் விஷயம்.

1979-க்குப் பிறகு பெரிதாக எதையும் சாதிக்காத இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் ஒன்று இருக்குமானால் அது பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய மாஸ்கோ பயணமாகத்தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, ரஷியாவுடனான நெருக்கம் பெருமளவு குறைந்து கொண்டிருப்பதும், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்கிற கருத்து ரஷியர்களுக்கு ஏற்பட்டிருப்பதும்கூட இதற்குக் காரணம். இந்தியப் பிரதமர் ஒருவரின் மிகவும் குறைந்தகால ரஷியப் பயணம் எது என்று கேட்டாலும், சமீபத்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மாஸ்கோ பயணம்தான். 28 மணிநேரம் மட்டுமே பிரதமர் மாஸ்கோவில் இருந்தார் என்றாலும், ரஷியப் பிரதமருடன் கணிசமான நேரத்தை அவர் பேச்சு வார்த்தைக்காக ஒதுக்கினார் என்பதை மறுக்க முடியாது.

சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷியாவும் கையெழுத்து இடுவதாக ஏற்பாடு. அதிலும் குறிப்பாக, இந்திய-ரஷிய வர்த்தக உறவு சம்பந்தப்பட்ட ஒப்பந்தமும், நிலவுக்குப் போகும் விண்கலம் தொடர்பான ஒப்பந்தமும் குறிப்பிடப்படும்படியான இரண்டு ஒப்பந்தங்கள் என்பதை மறுக்க முடியாது. போதைப் பொருள்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு பிரதமர்களுக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் போர்விமானங்களைத் தயாரிப்பது பற்றிய உடன்பாடு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இப்போது அரைகுறை மனதுடன் இந்த முயற்சிக்கு ரஷியா ஒத்துக்கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு புதிய உலைகள் அமைப்பதும் கையெழுத்துக்குத் தயாராக இருந்த இன்னொரு ஒப்பந்தம்.

சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகும்கூட இந்திய – ரஷிய உறவு தொடர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம், இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வுதான் என்று சொல்ல வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதற்குக் காரணம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் நாம் செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தமும்தான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் நடைமுறைப்படுத்தியே தீருவது என்கிற இந்திய அரசின் முனைப்பு ரஷிய அரசுக்கு இந்தியா மீது இருந்த நல்லெண்ணத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது.

உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் மீறி, நமது தாராப்பூர் அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளை அளிக்க ரஷிய அதிபர் புதின் முன்வந்தார் என்பதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும், நாம் ரஷியாவிடம் நமது நல்லெண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அமெரிக்காவை முற்றிலுமாக நம்புவது ரஷியாவை நம்மிடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்கிறார்கள் வெளியுறவுத் துறை வல்லுநர்கள்.

இதுபோன்ற, உயர்நிலை மாநாடுகள் இரண்டு நாட்டுத் தலைவர்களும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நல்லுறவை உறுதிப்படுத்தவும் உதவும் என்பார்கள். சரி, கூடங்குளம் அணுசக்தி நிலையத்துக்கு நான்கு உலைகளை ரஷியா அளிப்பதாக இருந்ததே, அதைப் பற்றிய ஒப்பந்தம் ஏன் கையெழுத்திடப்படவில்லை? இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய உதவி தேவையில்லை என்று நினைத்ததாலா? இதைப் பற்றி அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கும் பதில் வெறும் மௌனம் மட்டுமே!

உயர்நிலை மாநாடு நடக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளான ரஷியாவும் இந்தியாவும், இப்படியொரு மாநாடு முடியும்போது கூட்டறிக்கை அளிப்பது வழக்கம். இந்தமுறை, ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷிய அதிபர் புதினும் அப்படியொரு கூட்டறிக்கை வெளியிடவில்லை?

வரவர இந்தியாவில் என்ன நடக்கிறது, ரஷியாவில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. எல்லாம் அந்த வாஷிங்டனுக்குத்தான் வெளிச்சம்!

Posted in Affairs, America, Atom, Commerce, Cooperation, DC, defence, Defense, Economy, External, Foreign, India, Manmohan, Nuclear, Relations, Russia, USA, USSR, Washington, World | Leave a Comment »

Chennai Conflicts: Attorneys vs Police Force

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

தவறுகளும் வரம்புமீறல்களும்!

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னையிலுள்ள நீதிமன்றங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது வழக்கறிஞர்கள் சங்கம்.

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒரு வழக்கறிஞர், காலதாமதமாவது ஏன் என்று கேள்வி கேட்க, அதுவே வாக்குவாதமாகி, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டார் என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம். “”காலதாமதத்தையோ, நிர்வாக முறையீடுகளையோ கேள்வி கேட்டதே தவறா? ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன? காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர் என்றும் பாராமல் அவரைத் தாக்கியது என்ன நியாயம்?” – இவையெல்லாம் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.

இணை ஆணையர் ரவியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையோ, வழக்கறிஞர் சங்கத் தலைவரையோ விசாரிக்காமலேயே காவல்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்பது வழக்கறிஞர்களின் அடுத்த ஆதங்கம். நீதிமன்ற விசாரணை தேவை என்பது அவர்கள் கோரிக்கை.

வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எப்போதுமே பனிப்போர் நிகழ்ந்தவண்ணம் இருப்பது உலகளாவிய ஒன்று. காவல்துறையினரிடம் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் பலரையும் சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டி விடுவித்துவிடுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்பது காவல்துறையினரின் வருத்தம். மேலும், கிரிமினல் வழக்குகளில் தங்களைச் சாட்சிக் கூண்டுகளில் ஏற்றி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு கேலிப்பொருள்களாக்கிவிடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் ஆதங்கம்.

வழக்கறிஞர்கள் தரப்பும் சரி, காவல்துறையினர் தங்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்கிறது. வழக்கறிஞர்கள் காவல்நிலையங்களில் தகுந்த மரியாதையுடன் காவல்துறையினரால் நடத்தப்படுவதில்லை என்பதும் குற்றவாளிகளை முறையாக ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் முடிந்தவரை அனுமதிப்பதில்லை என்பதும் நீண்டகாலமாகவே இருந்துவரும் குற்றச்சாட்டுகள்தான்.

எழுபதுகளில் திருப்பரங்குன்றத்தில் வழக்கறிஞர் அய்யாத்துரை என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் தொடரும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிரி மனப்பான்மையும் குறைந்தபாடில்லை. காலம் தரும் பாடம் இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் அவர்களிடம் நல்லுறவையும் வளர்த்திருக்க வேண்டும். சொல்லப்போனால், காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர்களும் சரி நவீன உலகத்தின் நாகரிகக் கோட்பாடுகள் தெரிந்த தலைமுறையினராக இருந்தும், இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி.

இவர்களுடைய கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2006ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 4,06,958. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் இருப்பதாகக் கடந்த மார்ச் மாதப் புள்ளிவிவரம் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் வழக்குகள் சுமார் எட்டரை லட்சம்.

இப்படியொரு நிலையில், பலருடைய ஜீவாதாரப் பிரச்னைகள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. காக்கிச் சட்டை போட்டவரானாலும், கருப்புக் கோட்டு அணிந்தவரானாலும், சிவப்பு விளக்கு எரியும் வாகனங்களில் பயணிப்பவர்களானாலும், பேனா பிடித்து எழுதுபவரானாலும் அனைவரும் பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். வரம்பு மீறுவது யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. சக பணியாளர் என்பதற்காக அவர்களது தவறுகளும் வரம்புமீறல்களும் அனுமதிக்கப்படலாகாது.

நீதி கேட்டு நெடும்பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்களை மேலும் அவதிப்பட வைப்பது தவறு. கைகுலுக்கிச் செயல்பட வேண்டிய காக்கிச் சட்டைகளும் கருப்புக் கோட்டுகளும் கைகலப்பில் ஈடுபடலாமா?

Posted in abuse, Attorneys, Bandh, Chennai, Conflicts, Cooperation, Correctional, Corrections, Doc, doctors, Force, Hardhal, Hospital, Jobs, Justice, Law, Lawyers, medical, Medicine, Order, Police, Power, Protest, Treatment, Work | 2 Comments »

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

Lorry strike total in Kerala – Movement of goods from Tamil Nadu affected

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கேரள ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.90 கோடி வர்த்தகம் பாதிப்பு

நாமக்கல், ஏப்.4: கேரள மாநிலத்தில் கடந்த 3 நாள்களாக நடந்து வரும் கனரக வாகனங்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகத்துக்கான வர்த்தகம் ரூ. 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள மாநில லாரி, டிரெய்லர், டேங்கர், தனியார் பஸ் மற்றும் கனரக வாகன உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

கடந்த 31-ம் தேதி நள்ளிரவு முதல் துவங்கிய இந்த வேலைநிறுத்தமானது செவ்வாய்க்கிழமை 3-வது நாளாக நடந்தது.

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 70 லட்சம் முட்டைகள் கேரளத்துக்கு செல்வது வழக்கம். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக இவையனைத்தும் தேக்கமடைந்துள்ளன. இதேபோல், ஈரோடு பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் மஞ்சள் உள்ளிட்டவையும் செல்லாமல் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன.

சிமெண்ட், இரும்புக் கம்பிகள், குழாய்கள், பிளாஸ்டிக் பைப் ஆகியவை தினமும் 100 லாரிகளுக்கு மேல் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும். கடந்த 3 நாள்களாக இந்த வர்த்தகமும் நடைபெறவில்லை. உதகை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து காய்கறிகளும் பெருமளவில் செல்லவில்லை.

திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் காய்கறிகளும் செல்லவில்லை. கேரளத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வரும் ரப்பர், தமிழகத் தேவைக்கான ஓடுகள், உரம் ஆகியவையும் கடந்த 3 நாள்களாக தமிழகத்துக்கு வரவில்லை.

இதன் காரணமாக தமிழகத்துக்கான வர்த்தகம் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 30 கோடி வீதம் 90 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Bandh, Capitalism, Communism, Cooperation, Dindugul, ESMA, Freight, Gandhi, Kerala, Lorry, Madurai, Namakkal, Non Cooperation, Strike, Tamil Nadu, Theni, Transport, Trucks | Leave a Comment »

Unity in Diversity – Regional affinity vs Naturalized out-of-state Indians

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

இவர்களும் இந்தியர்கள்தான்!

பி. சக்திவேல்

சமீபகாலமாக இந்தியாவில் வெளிமாநிலத்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், அவர்களுடைய உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடைபெறுவதும் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சம்பவங்களால் “பிராந்திய உணர்வுகள்’ முக்கியத்துவம் அடைந்து “தேசிய உணர்வுகள்’ முக்கியத்துவம் இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த வளர்ச்சி இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்புக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்கும் ஆரோக்கியமானதல்ல.

“பிராந்திய உணர்வுகளை’ காட்டிலும் “இந்தியா’ என்ற தேச உணர்வுக்கு முன்னுரிமை அளித்துதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. உதாரணமாக, அரசியலமைப்புச் சட்ட விதி 1-ல் இந்தியா என்பது “”மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஐக்கியம்” என்றுதான் வரையறுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளைக் காட்டிலும் மத்திய அரசு மிகவும் வலிமையானதாகவும் அதிக அதிகாரம் படைத்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அந்நாட்டுக் குடிமக்களுக்கு “இரட்டைக் குடியுரிமை’ வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இந்தியாவில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காகவும், இந்தியா என்கிற உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவும் ஒரே ஒரு குடியுரிமையைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.

மேலும் அடிப்படை உரிமைகளில் இந்திய குடிமக்களுக்குச் சுதந்திரமாக இடம் பெயர்ந்து செல்வதற்கும், ஓர் இடத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிப்பதற்கும், விரும்பிய தொழில் செய்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக, பல மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாகப் பாவித்து நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளது. மகாராஷ்டிரத்தில் வசித்து வரும் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்; அதேபோல், வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மகாராஷ்டிரத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்த வேண்டும்; இது சிவசேனையின் பிரதான கோஷம். இதை வலியுறுத்தித்தான் சமீபத்தில் நடைபெற்ற மும்பை உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. “வாக்கு வங்கியை’ கவர்வதற்காக இனிவரும் காலத்தில் இந்தக் கோஷம் மேலும் வலுப்பெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

சென்ற ஆண்டு ரயில்வே பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதச் சென்ற வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அசாமில் ரயில் நிலையத்தில் தாக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஹிந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்த அனைவரும் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என “உல்பா’ தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். ஹிந்தி பேசும் மக்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். அசாம் மாநில அரசும் மத்திய அரசும் உறுதி அளித்தபோதிலும் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ஹிந்தி பேசும் மக்கள் தங்கள் உடமைகளை விட்டு விட்டு குடும்பத்தோடு அகதிகளாக வெளியேறும் அவலமும் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் அரசியலமைப்புச் சட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள், குடிமக்கள் அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. அசாம் மாநில அரசும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் சரிவர செயல்படாதது மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையிலும் தேசிய உணர்வுகள் முக்கியத்துவம் இழந்து பிராந்திய உணர்வுகள் மேலோங்கி விட்டன. இதையடுத்து நாள்தோறும் உருவாகிவரும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் நமது ஜனநாயகத்திற்கு கேடுகளை விளைவித்து வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால், மக்கள் படிப்படியாக அரசின் மீது நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.

குஜராத்தில் நடப்பது வேறுவிதமான நிகழ்வுகள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் “கோத்ரா’ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் இவர்கள் எவ்வாறு தங்களை தேசிய நீரோட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிய பல்வேறு இனம் மற்றும் மொழி பேசக்கூடிய மக்களைப்பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு நாம் அனைவரும் கவனிக்கப்படக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது, மற்ற எல்லா நாட்டினரைக்காட்டிலும் இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களிடம் மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு வேற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.

தெளிவாகக் கூற வேண்டுமென்றால், மற்ற நாட்டினரைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் ஒற்றுமையோடு, தங்கள் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை மறந்து, வாழ்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையோடு செயல்படும்போது ஏன் இந்தியாவில் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை. இது கண்டிப்பாக நாம் கவனம் செலுத்தப்பட வேண்டிய கேள்வி.

அடிப்படையில் நம்மிடம் “இந்தியா’ மற்றும் “இந்தியன்’ என்கிற உணர்வு உள்ளது. இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதனால்தான் சுனாமி வந்தபோதும், குஜராத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோதும், வடமாநிலங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோதும் கார்கில் போர் நடைபெற்ற தருணத்திலும் நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நம்மால் முடிந்த உதவிகளை அளித்தோம்.

தங்களுடைய அரசியல் செயல்பாட்டிற்காகவும் மற்றும் லாபத்திற்காகவும் பிராந்தியத்தில் செயல்படும் ஒரு சில அமைப்புகள்தான் இந்த வேற்றுமை விதையை விதைத்துத் தங்களுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த அமைப்புகளுக்கு நாம் துணைபோகக் கூடாது. உடனடியாக இத்தகைய அமைப்புகளை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களாகிய நாம் தேசிய உணர்வுகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பிறகே மாநில அல்லது பிராந்திய உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பல்வேறு காரணங்களால் மாநிலங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அந்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் அமைதியைப் பாதித்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்னிய நேரடி முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் சென்றடையக்கூடிய நிலையும் ஏற்பட்டுவிடும்.

எனவே அண்டை மாநிலங்களையும் பிற மாநிலங்களையும் சார்ந்தவர்களை சமமாக நடத்தக்கூடிய மனோபாவத்தையும் பண்பையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களும் இந்தியர்கள்தான்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in Affinity, Citizen, Citizenship, Conflicts, Cooperation, Diversity, Duality, Foreign, Hindi, Identity, Independence, India, Language, Nationalism, Naturalization, Region, Regional, Republic, State, Tamil, Unity, Zone | Leave a Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »