Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘cook’ Category

Mannargudi Halwa – Culinary Specialty

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மன்னார்குடி அல்வா!

அல்வா! இந்தப் பெயரைக் கேட்டாலே திருநெல்வேலி ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா புகழ் பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னொரு ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி.

நாள்தோறும் வீதியோரம் அல்வா கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா?! போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்.

மன்னார்குடியில் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. ஊரின் மையமாய் ஒரு நீண்ட வீதி. இந்தக் கடைசியில் ராஜகோபாலசுவாமியும் அந்தக் கடைசியில் கைலாசநாதரும் அருள்பாலிக்கின்றனர். வீதியின் மையப் பகுதியைப் பந்தலடி என்கிறார்கள். “அல்வாவடி’ எனக் கூறலாம். இரு புறமும் உள்ள அல்வா கடைகளில் நின்றுகொண்டே அல்வா சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை இங்கு எப்போதும் பார்க்க முடிகிறது.

அல்வா மேல் நம் மக்களுக்குத்தான் எத்தனைப் பிரியம்? எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது? அது போகட்டும்!

திக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்; ஒவ்வொரு ருசி. இதில், மன்னார்குடி அல்வாவுக்கு அப்படியென்ன விசேஷம் என்றால், அந்தக் காலத்து கோதுமை முந்திரி அல்வா அதே ருசியில் இன்றும் இங்கு கிடைப்பதுதான்.

மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!

அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.

ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.

அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:

“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.

சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.

மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா” என்கிறார் யுவராஜ்.

புறப்படுகையில் ஒரு சின்ன இலையில் அல்வா வைத்துக் கொடுத்த கடைக்காரர்கள் சொன்னார்கள்: “”சாப்பிட்டுக்கொண்டே சந்தோஷமாய் போங்கள். இதுவும் மன்னார்குடி பாணிதான்!”.

Posted in Alva, Alwa, cook, Cooking, Culinary, Culture, Halva, Halwa, Heritage, Hunger, Mannaargudi, Mannaarkudi, Mannargudi, Mannarkudi, Recipe, Snacks, Sweets, Tastes | 2 Comments »

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

எஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..!

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.

அப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது! மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.

கோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.

“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.

முதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரையும்.

அப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.

தலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.

இன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா? அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.

பெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.

சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.

கர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.

ஸ்டாலின்

Posted in cook, Cooking, Kittappa, Pakoda, Pakora, Special, Specials, Taste | Leave a Comment »

Pupils go hungry in Bihar because cook is low-caste

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாணவர்களுக்கு தடை: பிகாரில் தொடரும் ஜாதிக் கொடுமை

சசாராம் (பிகார்), ஆக. 13: பிகாரில் அரசு நடத்தி வரும் தொடக்கப்பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை மாணவர்கள் சாப்பிட பள்ளிக்குழு செயலர் கடந்த ஒரு மாதமாக தடை விதித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பது சமூக நீதி ஆர்வலர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோடாஸ் மாவட்டத்தில் உள்ளது பிப்ரி கிராமம். உயர்ஜாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியை தலித் பெண் செய்து வருகிறார். இவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என பள்ளிக் குழு செயலர் உமா சங்கர் திவாரி என்பவர் தடை விதித்துள்ளார்.

மகிளா சமாக்ய சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பள்ளியில் மதிய உணவு தயாரிக்க தலித் பெண் நியமித்துள்ளது. அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட நான் அனுமதிக்க மாட்டேன் என உமா சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகிளா சமாக்ய சங்க ஒருங்கிணைப்பாளர் சிகா குமாரி கூறியது:

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பதற்காக 3 தலித் பெண்களும் 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி செயலரிடம், மாணவர்களை மதிய உணவை சாப்பிட விடுங்கள் என பல முறை வற்புறுத்தியும் பலன் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடாமல் செல்கின்றனர்.

திவாரியும் அவரது ஆட்களும் சமையல் கூடத்தை சேதப்படுத்தி சமையல் பாத்திரங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்றார்.

மனித வள துணை செயலர் ராஜேந்திர பிரசாத்துடன் பிப்ரி கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்று இது விசாரணை நடத்த உள்ளதாக மனித வள செயலர் எம்.எம். ஜா பாட்னாவில் கூறினார்.

இது குறித்து சதார் காவல் நிலையத்தில் திவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரச்னைக்குரிய பள்ளியில் 39 தலித் மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட விடுப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Bihar, Caste, cook, Dalit, Eat, FC, Food, Hinduism, Hindus, Meals, Oppression | Leave a Comment »

Veg Finger Foods – Book Writer Felicitated : Promila Gupta

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 14, 2006

இந்திய எழுத்தாளருக்கு ஆஸ்திரேலிய விருது

புதுதில்லி, ஆக. 14: இந்திய-ஆஸ்திரேலிய சமையற்கலை புத்தக எழுத்தாளர் பிரோமிளா குப்தாவுக்கு (53) ஆஸ்திரேலிய நாட்டின் “பெருமைக்குரியவர்‘ என்ற விருது மெல்போர்னில் நடந்த விழாவில் சனிக்கிழமை வழங்கி கெüரவிக்கப்பட்டது.

பிரோமிளா குப்தா எழுதிய “வெஜிடேரியன் பிங்கர் புட்ஸ்’ மற்றும் இந்திய உணவு வகைகள் குறித்த புத்தகங்கள் ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பை பெற்றவை.

இவர், சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் இவர், சமையற்கலை குறித்த கருத்தரங்கம் மற்றும் பணிமனைகளை நடத்தி உள்ளார்.

Posted in Australia, cook, Cookbook, Cooking, Dianamani, Dinamani, Foods, Indian Foods, Pramila Gupta, Tamil | Leave a Comment »