Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Consumer’ Category

Happy Valentines Day – Love Facts & Statistics: Sales, Flowers, Economy, Exports

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

இளமை பக்கம்  – காதல் டேட்டா

* இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பரிசுப் பொருள் விற்பனை ரூ. 55 ஆயிரம் கோடியைத் தாண்டுமாம். கடந்த ஆண்டு விற்பனை ரூ. 50 ஆயிரம் கோடி.

* சராசரியாக ஒவ்வொரு காதலரும் செலவிடும் தொகை ரூ. 4,000.

* காதலர் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாட 61 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.

* பெண்கள் சராசரியாக தங்கள் காதலர்களுக்குப் பரிசு வாங்க ரூ. 3,000 வரை செலவிடுகின்றனராம் (ஆச்சர்யமான விஷயம்தான்!).

* காதலர் தினத்தை அதிகம் கொண்டாடுவது டீன் ஏஜ் பருவத்தினர் அல்ல. 40 வயது முதல் 45 வயதுப் பிரிவினர்தான் காதலர் தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனராம்.

* காதலர் தினத்தில் குறைந்தபட்சம் வாழ்த்து அட்டையை வாங்கி அளிப்போர் 60 சதவீதம் பேர்.

* சாக்லேட் வாங்கி இனிப்புடன் கொண்டாடுவோர் 40 சதவீதம் பேர்.

* 42 சதவீதம் பேர் காதலியுடன் வெளியே சென்று பொழுதைக் கழிக்கவே விரும்புகின்றனர்.

* மலர் கொத்து, மலர்ச் செண்டு வாங்கி வழங்குவோர் 52 சதவீதத்தினர்.

* நகை வாங்கி பரிசளிக்க விரும்பும் ஆண்கள் 22 சதவீதம். பெண்கள் 7 சதவீதம்.

* காதலர் தினத்தில் ரோஜாக்கள் விற்பனை மட்டும் 18 கோடி.

* காதலர் தினத்தில் அமெரிக்காவில் மட்டும் 200 கோடி டாலருக்கு நகை விற்பனையாகுமாம்.

* இதேபோல வாழ்த்து அட்டை விற்பனை 18 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* காதலைப் பறைசாற்றும் இருதய வடிவிலான பெட்டிகள், சாக்லேட்டுகள் விற்பனை அமோகமாக இருக்குமாம். இந்த வடிவ பெட்டிகள், சாக்லேட் விற்பனை 3 கோடிக்கும் அதிகம்.

Posted in America, Chocolates, Consumer, Culture, Customer, Economy, Expenses, Exports, Facts, Finance, Flowers, Gifts, greetings, Heart, Jewelry, Love, Lovers, Marriage, Money, Roses, sales, Statitistics, Stats, Tradition, US, USA, Valentines, Wedding, West, Wishes | Leave a Comment »

Indian coins converted into razor bladed – Monetary value

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

பிளேடாகும் ரூபாய் நாணயங்கள்

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.

இதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.

இந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.

ரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.

இதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.

விசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in babrers, blades, Coins, Consumer, Conversion, Criminals, Customer, Finance, markets, Metal, Metallurgy, Monetary, Money, Paisa, razor, RBI, retail, Rupee, Rupees, Rupya, Salon, Saloon, Shave, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, tonsure | 1 Comment »

Chennai Ranganathan Street – Infrastructure, Safety & Traffic issues due to Illegal Construction

Posted by Snapjudge மேல் நவம்பர் 10, 2007

விதிமுறை மீறல்கள்!

ஒரு திரையரங்கம் கட்டுவதாக இருந்தால் கூட, அதில் இத்தனை நபர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கட்டடத்துக்குள் கூடுவார்கள் என்பதற்கான அதிகபட்ச நிர்ணயம் உண்டு. ஆனால், வணிக வளாகங்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அளவுக்கு நெரிசலை சந்திக்க வேண்டிய கட்டாயம். அதுவும், தொலைக்காட்சி வந்த பிறகு, பண்டிகைக் காலங்களில் இத்தனை சிறிய தெருவில் இத்தனை மக்களா என்று திகைப்பும், பயமும் ஏற்படுகிறது.

இந்த வர்த்தக நிறுவனங்கள் அள்ளி வீசும் இலவசங்களும், சலுகைகளும் பண்டிகைக் காலங்களில் புற்றீசல்போல வாடிக்கையாளர்களை மொய்க்க வைத்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு அந்தக் கட்டடங்களில் இடமில்லை என்பது மட்டுமல்ல, தெருக்கள் அகலமும் இல்லை. உதாரணம், சென்னை ரங்கநாதன் தெருவும் அதிலுள்ள வணிக வளாகங்களும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் மட்டும் சுமார் 35 கட்டடங்கள் எப்.எஸ்.ஐ. (ஊ.ந.ஐ.) என்று அழைக்கப்படும் அதிகபட்சக் கட்டுமானப் பரப்பு விகிதத்தை மீறி எழுப்பப்பட்டவை என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இது ஏதோ அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாமல் நடக்கும் விஷயமல்ல. 10 மீட்டர் அகலமுள்ள சென்னை ரங்கநாதன் தெருவில் பல அடுக்குக் கட்டடங்கள் எதுவும் அனுமதிக்கப்படவே கூடாது. ஆனால், விதிமுறைகளை மீறி சுமார் 14 கட்டடங்கள் எப்படி கட்டப்பட்டன? எந்தவொரு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் தெரியாமலா இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன?

உஸ்மான் சாலையில் இலக்கம் 128 மற்றும் 129 எண்களிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட எப்.எஸ்.ஐ. 1.5 தான். ஆனால், கட்டப்பட்டிருப்பதோ 8.99. சட்டப்படி இந்தக் கட்டடத்துக்கு 266 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சைக்கிள் நிறுத்தக் கூட இடமில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

உஸ்மான் சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் வரம்பை மீறி ஐந்து மாடிகள் கட்டியது கண்ணில் படவில்லையா?

இல்லை, புதிய சரவணா ஸ்டோர்ஸ் நான்கு மாடிகள் கட்டியது யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டதா?

  • கோடம்பாக்கம் சேகர் எம்போரியமும்,
  • உஸ்மான் ரோடு சரவணா கோல்டு ஹவுசும்,
  • ரங்கநாதன் தெருவுக்கு நேர் எதிரில் எழுந்து நிற்கும் சரவணா செல்வரத்தினத்தின் கட்டடமும்,
  • ரங்கநாதன் தெருவிலுள்ள வணிக வளாகங்களும்

ஊரறிய உலகறிய கட்டப்பட்டபோது, அதிகாரிகள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும் நல்லி நிறுவனத்தின் கட்டடத்திலேயே விதிமுறை மீறல் இருப்பதாகச் சொல்கிறார்களே, அது எதனால்?
முறையான அனுமதி பெற்று கட்டடம் கட்டத் தொடங்குவார்கள் – இரண்டு அடுக்கு முடிந்ததும், மூன்றாவது அடுக்கு கட்டத் தொடங்கும்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். மாநகராட்சியைக் கேட்டால், எங்களிடம் அனுமதி வாங்கியது இரண்டு அடுக்குக்குத்தான். அதற்குமேல் கட்டப்படும் கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சிக் குழுமம்தான் பொறுப்பு என்று தட்டிக் கழித்து விடுவார்கள். சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்று விடுவார். அதைக் காரணம் காட்டி பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கண்களை மூடிக் கொள்ளும்.

இதையெல்லாம் மீறி, பொது நல வழக்குத் தொடர்ந்து விடாப்பிடியாக உச்ச நீதிமன்றம் வரை போய் இந்தக் கட்டடங்களில் காணப்படும் விதிமுறை மீறல்களை இடித்துத் தள்ள உத்தரவு வாங்கி வந்தால், சட்டம் இயற்றி இவர்களைக் காப்பாற்ற அரசு முன்வருகிறது. அதாவது, இந்த விதிமுறை மீறல்களுக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும், அரசும் செயல்படுகின்றன என்றால், ஆட்சியும் அதிகாரமும் யாருக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது.

முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்தக் கட்டடங்களைக் கட்ட உதவும் என்ஜினீயர்களும், காண்ட்ராக்டர்களும். விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகும் இவர்களது பட்டம் பறிக்கப்படும், உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால், இந்த விதிமுறை மீறல்கள் பெரிய அளவில் தடுக்கப்படும். படித்த பொறியியல் பட்டதாரிகள் இந்த விதிமுறை மீறல்களுக்குத் துணைபோகத் தயாராவதுதான் அடிப்படைக் குற்றம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தவறான சிகிச்சைக்கு மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களது உரிமம் பறிக்கப்படுவதுபோல, விதிமுறை மீறல்களுக்குத் துணை போகும் என்ஜினீயர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமானால், இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நிச்சயம் குறையும்.

Posted in authority, Biz, Bribery, Bribes, Buildings, Business, Cars, Chennai, Citizen, City, Commerce, Congestion, Construction, Consumer, Corruption, Crackers, Customer, Deepavali, Deepavalli, Departments, Dept, Discount, Diwali, DMK, Dress, Economy, Finance, Fire, Fireworks, Floors, Gold, Hassle, Hazards, Illegal, Incentives, Industry, infrastructure, Jewelery, Jewels, Jewlery, kickbacks, Lanes, Law, License, Madras, Malls, Metro, MMDA, multi storey, Multi story, officers, Order, Parking, Permits, Ranganathan st, Ranganathan street, Rebates, Renganathan st, Renganathan street, retail, Safety, Saravana, Saravana Gold House, Saravana GoldHouse, Saravana Selvarathanam, Saravana Selvarathanam Stores, Saravana Stores, Sarees, Saris, Season, Sector, Sekar Emporium, Shopping, Shops, Sri sankarapandian, Sri sankarapandian Stores, Srisankarapandian, Srisankarapandian Stores, Suspend, Trade, Traffic, Usman Road | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

Chennai Marina Beach – Small vendors & Encroachment: Business vs Environment

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

மெரீனா கடற்கரையில் 400 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஆக. 29-

சென்னை நகருக்கு அழகு சேர்ப்பதில் மெரீனா கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் ஒரே பொழுது போக்கு மெரினா கடற்கரைக்கு சென்று வருவதுதான்.

சென்னை நகர மக்கள் தொகை அதிகரிப்பது போல, மெரீனா கடற்கரையில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல சிறுசிறு கடைகளும் அங்கு அதிகரித்து வருகிறது. முறையில்லாமல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு உருவாகும் கடைகளால், கடற்கரைக்கு வந்து போகும் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுகிறது. மெரீனா கடற்கரை அழகு பாதிக்கப்படு கிறது என்று புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடைïறாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பலர் ஆண்டுக்கணக்கில் மெரீனாவில் கடை வைத்து பிழைத்து வருகிறார்கள்.

பல ஆக்கிரமிப்பு கடைகள் முறையான அனுமதி இல்லா மல் சமீபத்தில் உருவாகி உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

புதிய ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று முன்தினம் போலீஸ் உதவியுடன் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் குப்பை அகற்றும் பணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் செல்ல வேண்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் கடற்கரையில் உள்ள புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும் கடைகள் இரவில் கடற்கரையில் நிறுத்தப்படுகின்றன. அவற்றையும் ஒழுங்குப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, “மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே பலர் 10 முதல் 15 ஆண்டுகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிதாக தோன்றிய கடைகள் இடைïறாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதும் மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்று கூறினார்.

சென்னை நகரை அழகு படுத்த ரூ.25 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 17 கோடி ரூபாய் மெரீனாவை அழகுபடுத்த செலவிடப்படுகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக கடற்கரை அழகை பாதிக்கும் புதிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுகின்றன.

இது கடற்கரையை நம்பி பிழைக்கும் சிறு வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணா, எம்.ஜி.ஆர். கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது, “நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகள் எந்த வகையிலும் இடைïறாக இல்லை” என்றார்.

காந்தி சிலை கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயணன், “நாங்கள் கடைகளை இரவில் இங்கிருந்து அப்புறப்படுத்த தயாராக இருக்கிறோம். மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இதுபோல பல்வேறு வியாபாரிகள் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். மாநகராட்சி கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————–

கோயம்பேடு பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர்

சென்னை, ஆக. 30: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கோயம்பேடு பஸ் நிலையத்தை 3-ஆக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் சுனில் குமார் தெரிவித்தார்.

சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்த பயிலரங்கில் அவர் புதன்கிழமை பேசியது:

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி நகரின் உள்ளே இருந்த வெளியூர் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினார்கள்.

தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தீர்வாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் ஆகியவற்றுக்கான பஸ் நிலையத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரித்து பூந்தமல்லி வழியாகச் செல்லும் பஸ்களுக்கு பூந்தமல்லியிலும், தாம்பரம் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு தாம்பரத்திலும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பஸ்களுக்கு அந்த பகுதியிலும் தனித்தனி பஸ் நிலையங்கள் அமைக்கலாம்.

கோயம்பேடு பஸ் நிலையம் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

சென்னைக்கு வெளியே கண்டெயினர் லாரிகளுக்கான டெர்மினலை அமைப்பதாக முதலாவது மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய டெர்மினல் இதுவரை அமைக்கப்படவில்லை. சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசலுக்கும், சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.

சென்னையில் இருக்கும் பூங்காக்களில் தரைகீழ்தள வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் நாள்களை மாற்றி அமைக்கலாம். அதேபோல, அதிக அளவில் கடைகள் இருக்கும் மார்க்கெட் பகுதிகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம். இந்த புதிய அணுகுமுறைகளை திட்டமிட்டு நிறைவேற்றினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என்றார் சுனில் குமார்.
————————————————————————————————–

Posted in Beach, Beauty, Biz, Business, Chennai, Citizen, Commerce, Consumer, Customer, Economy, encroachment, Environment, Govt, Kannagi, Kannaki, Koyambedu, Koyampedu, Law, Madras, Mareena, Marina, Mayor, Nuisance, Obstruction, Order, Pleasure, Poor, Traffic, Vendors, Water | Leave a Comment »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

The High Cost Of Living in Chennai

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நகரம்: சென்னை – 133!

ரவிக்குமார்

தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!

மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:

  • கல்வி,
  • பொருளாதாரம்,
  • அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
  • போக்குவரத்து,
  • உடை,
  • உணவு வகையிலான மாற்றங்கள்,
  • மக்களின் வாங்கும் திறன்,
  • அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
  • தனிமனித வருவாய்,
  • வீட்டு உபயோகப் பொருள்கள்,
  • பொழுதுபோக்கு அம்சங்கள்…

இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது

  • மாஸ்கோ நகரம்.
  • சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
  • மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  • புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.

அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.

“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.

சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.

நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.

சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.

-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!

Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »

North vs South India – Regional development: Growth Indices & Indicators

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

பலே தென்னிந்தியா!

“”வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்றது அந்தக் காலம். “”வடக்கு வாடுகிறது, தெற்கு ஓடுகிறது” என்பதே இந்தக் காலம்.

இந்தியத் தொழிலகங்களின் இணையம் (சி.ஐ.ஐ.) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காணப்படும் பொருளாதார, சமூக அளவீடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் கல்வி, வருமானம், நபர்வாரி மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பது புலனாகிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த மாநிலங்களில், வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், தொழில், விவசாயம் ஆகியவற்றில் பாரம்பரியமாகவே தென் மாநிலங்கள் உயர்ந்த இடத்தில் இருந்து வருகின்றன. அதிலும் அரசு நிர்வாகம் என்பது தென் மாநிலங்களில் வட இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்பத் தொழில்களில் அடுத்த தலைமுறைத் தொழில்களை ஊக்குவிக்கவும், சென்னை தவிர மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற இரண்டாவது நிலை நகரங்களுக்கு அவற்றைக் கொண்டு செல்லவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

வேளாண் தொழிலிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களிலும் முதலீட்டை ஊக்குவிக்க ஆந்திரம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகமும் கேரளமும் தங்கள் மாநிலங்களில் ஏற்கெனவே உள்ள தொழில்களை வலுப்படுத்துவதுடன் சுகாதாரம் சார்ந்த சுற்றுலாவை வலுப்படுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. புதுச்சேரியும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சிறு தொழில்களை வளப்படுத்தவும் முதலீடுகளுக்கு ஊக்குவிப்பை அளிக்கிறது.

மோட்டார்வாகனத் தொழிற்சாலைகள், கணினிசார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தல்-தின்பண்ட தயாரிப்பு ஆலைகள், மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கு ஈர்த்துவிட வேண்டும் என்ற ஆரோக்கியமான போட்டி தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றிடையே தீவிரம் அடைந்திருக்கிறது.

இதையொட்டியே விமான நிலைய விரிவாக்கம், துறைமுக மேம்பாடு, மேம்பாலங்கள், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகள், புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றைத் தங்கள் மாநிலங்களுக்கென்று பெற இவை போட்டிபோடுகின்றன.

மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப்-ஹரியாணா-புதுதில்லி ஆகிய பாரம்பரியமான வளர்ச்சிப் பிரதேசங்களும் தொழில் முதலீட்டுக்கான பந்தயத்தில் பின்தங்க விரும்பாமல் அந்நிய நேரடி முதலீட்டையும் உள்நாட்டு முதலீடுகளையும் சலுகைகளையும், வரிவிலக்குகளையும் அளித்து ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியத் தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) அதன் தென்னிந்தியக் கிளை மூலம், தென்னிந்தியாவிலேயே இதுவரை தொழில் வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சி காணாத பகுதிகளுக்கு முக்கியத்துவம் தர தனித்திட்டம் வகுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், வடக்கு கேரளம், ஆந்திரத்தின் அனந்தப்பூர்-சித்தூர்-கடப்பை மண்டலம், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி ஆகியவற்றுக்கு ஏற்ற தொழில்பிரிவுகளையும் முதலீட்டு வசதிகளையும் அடையாளம் காணும் பணியைத் தென் மண்டல இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு தொடங்கியிருக்கிறது. இதற்கு மாநில அரசுகள் மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்ட பகுதியின் தொழில்-வர்த்தக சபைகளும், தன்னார்வக் குழுக்களும் உதவிக்கரம் நீட்டினால் தொழில்வளம் என்பது சமச்சீராகப் பரவி வளத்தை ஏற்படுத்தும்.

எப்போதும் இல்லாத வகையில் தென் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியாகவும் இப்போது அதிக முக்கியத்துவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் வரலாறு நம்மை வாழ்த்தும்.

Posted in Agriculture, Auto, Commerce, Compensation, Consumer, Customer, Development, Economy, Econpmy, Education, Employment, family, Finance, GDP, Globalization, Govt, Growth, Income, Index, Indicators, Industry, Infrtastructure, Jobs, Malls, Motor, North, Power, Ranks, Region, Roads, South, States, Statistics, Statz, Tour, Tourism, Tourist, Transport, Zones | Leave a Comment »

APJ Abdul Kalam – Power Grids & Oil Imports: Dependence on Foreign Resources

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கலாம் சொன்னது கவனிக்கத்தக்கது!

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில், நமது மின்சாரத் தேவை குறித்தும், பெட்ரோல்- டீசல் இறக்குமதி குறித்தும் உரிய வகையில் எச்சரித்திருக்கிறார் அப்துல் கலாம். நம் நாட்டின் செல்வ வளத்தையே வற்ற வைக்கக்கூடிய அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைப்பதும், மாற்று எரிசக்தியைக் கண்டறிந்து பயன்படுத்துவதும் மிகமிக அவசியம் மட்டும் அல்ல, அவசரமும் கூட என்று உணர்த்தியிருக்கிறார்.

பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதிக்காக மட்டும் நாம் இப்போது ஆண்டுதோறும் 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையில் 75 சதவீத அளவுக்கு இறக்குமதி செய்கிறோம்.

25 சதவீத அளவுக்கு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு சமாளிக்கிறோம். நியாயமாகப் பார்த்தால், இந்தக் கவலை மத்திய திட்டக் கமிஷனுக்குத்தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும். “”கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களும் அவ்வளவு அத்தியாவசியமானவை அல்ல; அவை நுகர்வுப் பொருள்கள்தான். அவற்றின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இந்த அளவுக்கு அனுமதி தரக்கூடாது; அவற்றை ஓட்டுவதற்குத் தேவைப்படும் பெட்ரோல் நம் நாட்டில் கிடைக்கும் பொருள் அல்ல” என்று திட்டக்கமிஷன்தான் மத்திய அரசுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களும் தொழிலாளர்களும் கிடைக்கிறார்கள் என்பதால் பன்னாட்டு மோட்டார் கார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. நம் நாட்டவருக்கு வேலை கிடைக்கிறது, நமக்கு விளம்பரம் கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கின்றன.

இவை ஒருபுறம் உண்மைதான் என்றாலும், பெருவாரியான மத்தியதரக் குடும்பங்களை இந்த மோட்டார் வாகன மோகம் கடனாளியாக்கி இருக்கிறது என்பதும், தேவையில்லாமல் நமது பெட்ரோலியத் தேவையை அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கப்படாத விஷயம். நம் நாட்டின் ஏழ்மையைப் போக்கவோ, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவோ இவை எந்த விதத்திலும் உதவியாக இருக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.

அரசு தரும் உபசாரங்கள் போதாது என்று வங்கித் துறையும் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் வாங்க குறைந்த வட்டியில் உடனடியாகக் கடன் தருகிறது. வீடு கட்டத் தந்த கடனுக்குக்கூட வட்டி வீதத்தை உயர்த்திவிட்டனர். வாகனங்களுக்கான கடனுக்கு வட்டியை ஏற்றத் தயங்குகின்றனர்.

இதே போன்ற போட்டி மனோபாவம் விவசாயத்துக்குக் கடன் தருவதில் இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் எண்ணிக்கை பல மடங்காக (தேவையில்லாமல்தான்) உயர்ந்து வருகிறது. அதிலும் தமிழ்நாடுதான் மிகவும் முன்னணியில் இருக்கிறது.

“”99 ரூபாய் கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் செல்லுங்கள்” என்கிறது ஒரு விளம்பரம். தமிழ்நாட்டில் 31.3.2006 கணக்கெடுப்பின்படி மொத்தம் 82 லட்சத்து 21 ஆயிரத்து 730 வாகனங்கள் உள்ளன. அவற்றில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபெட்டுகள் போன்ற இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சத்து 75 ஆயிரத்து 328. அதாவது மொத்த வாகனங்களில் இவை 82.10 சதவீதம்.

பஸ் போன்ற பொது பயன்பாட்டுக்கான வாகனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 102. இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 2.98 சதவீதம் மட்டுமே.

தமிழக அரசு பஸ் போக்குவரத்தில் “”ஏக-போக” முதலாளியாக இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை அளிப்பதா அல்லது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்வதா என்பதில் மிகப்பெரிய சந்தேகம் அதற்கு ஏற்பட்டிருக்கிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமல் மக்களை வாட்டுவதாலேயே இன்று பட்டிதொட்டியெங்கும் சைக்கிளைப் போலவே “”டூ-வீலர்கள்” பெருகியுள்ளன.

கலாம் சுட்டிக்காட்டிய மற்றொரு விஷயம் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது பற்றியது. மின்சார உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றிருந்தாலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதை எல்லா வீடுகளிலும் இயக்கமாகவே ஏற்று நடத்த அரசு புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

“”சிறுதுளி பெருவெள்ளம்” என்பதைப்போல எல்லா வீடுகளிலும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தால் கணிசமான அளவுக்கு மின்சாரத்தைச் சேமிக்க முடியும். மழை நீர் சேமிப்பில் முன்மாதிரியாக இருந்ததைப்போல இதிலும் தமிழகம் நாட்டுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

Posted in Agriculture, Alternate, Analysis, APJ, Auto, Banks, Biz, Bus, Business, Consumer, Customer, Diesel, Economy, Electricity, energy, Expensive, Exports, Finance, Financing, Gas, Imports, Info, Kalam, Loans, Motor, oil, Petrol, Power, Prices, Resources, Rich, Scooters, solutions, Statz | Leave a Comment »

iRama Srinvasan – Economic Improvements does not guarantee Poverty Abolishment: Statistics, Analysis

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

பொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்

இராம. சீனுவாசன்

அரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.

இப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.

இதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு

  • 1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,
  • 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.

வறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.

தனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.

வருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.

1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.

  • 1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து
  • 2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.

ஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

இப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.

வறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.

இந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.

1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

கணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.

மாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுதி, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.

வறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்

  • 1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த
  • 1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

எனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.

  • 2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,
  • நகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.
  • மொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.
  • இதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்
  • 8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.

தேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –

  • பிகார்,
  • சத்தீஸ்கர்,
  • ஜார்க்கண்ட்,
  • உத்தரப் பிரதேசம்,
  • உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.

வறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும்? பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.

(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)

———————————————————————————————-

ஏன் இந்த மௌனம்?

மத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.

சொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.

தரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்?

ஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.

எந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.

லாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.

————————————————————————————————–

சரியான நேரத்தில் சரியான யோசனை

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

அதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.

நாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

விவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிகளில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.

சமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது!
————————————————————————————————–

Posted in Analysis, Backgrounder, Banks, Bihar, Calculations, Changes, Chattisgar, Chattisgarh, City, Consumer, Customer, Disparity, Divide, Economy, Education, Employment, Expenses, Finance, Food, GDP, Globalization, Govt, Healthcare, Hygiene, IMF, Improvements, Income, Industry, Inflation, Insights, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jobs, Luxury, maharashtra, Manufacturing, Metro, Mumbai, Necessity, Need, Needy, Numbers, Op-Ed, Percentages, Policy, Poor, Poverty, Power, Pune, Purchasing, Recession, Rich, Rural, Schemes, service, SEZ, Society, Stagflation, States, Statistics, Stats, Suburban, Survey, UP, Utharkhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, Village, WB, Wealthy, Welfare | Leave a Comment »

No water supply shortage in Chennai till October 2007

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

சென்னையில் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது

சென்னை, ஜூன் 3: சென்னையில் வரும் அக்டோபர் வரை குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் (பணிகள் மற்றும் பராமரிப்பு) வி. சிவகுமரன் தெரிவித்தார்.

போதுமான நீர் கையிருப்பு உள்ளதால், தினமும் 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகளில் 332 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 109 கோடி கன அடியும், வீராணம் ஏரியில் 42 கோடி கன அடியும் நீர் உள்ளது.

இவற்றைத் தவிர, தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை 8 டி.எம்.சி. நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வரும் அக்டோபர் மாதம் வரை சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 64 கோடி லிட்டர் நீர் தொடர்ந்து வழங்கப்படும்.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கடந்த ஏப்ரல் முதல் நாளொன்றுக்கு 11 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 3 கோடி லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தேவைப்பட்டால் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் அளவாக உயர்த்தப்படும் என்றார்.

Posted in 2007, Aquafina, Boring pump, Bottled water, Chembarampakkam, Chennai, Cholavaram, Chozhavaram, Consumer, Customer, Dam, Dasani, Drink, Drinking, Expenses, Krishna, Lake, Land water, Liter, Litres, Lorry Water, Madras, October, Poondi, Pump Water, Pumping Station, Puzhal, River, Shortage, Spring water, Supply, Tap Water, Teleugu Ganga, TMC, TN, Water | Leave a Comment »

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »