Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Competition’ Category

Computer Keyboard for the Visually Challenged – Contest Winner details

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

இது புதுசு: புதிய வெளிச்சங்கள்!

அருவி

கருவறை இருட்டை விட்டு வெளியேறி வெளிச்சப் பகுதியில் புதியபுதிய தடங்களைப் பதித்துச் செல்கிறோம். ஆனால் தங்கள் கடைசிக் காலம் வரை பார்வை தெரியாமல் கருவறை இருட்டிலேயே நடப்பதுபோல் நடக்கிறவர்கள் என்ன செய்வார்கள்?

புதியபுதிய தடங்களை, வெளிச்சங்களை பார்வை தெரிந்தவர்களுக்கு நிகராக அவர்களும் பதிக்கிறார்கள். அப்படி அவர்கள் பதிப்பதற்கு பார்வை தெரிந்த பலரும் விழிகளாக இருந்துள்ளனர். அந்தவகையில் சாய்ராம் என்ஜினீரிங் கல்லூரி மாணவர்களான எஸ்.சிவராமன், ஆர்.ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வைத் தெரியாதவர்கள் பயன்படுத்துகிற வகையிலான கம்ப்யூட்டர் கீபோர்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த உருவாக்கத்திற்காகப் பல்வேறு விருதுகளையும் இம்மாணவர்கள் பெற்றுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ்World Comp.2007 மாநாட்டில், பங்கேற்று கீபோர்டு தொடர்பான ப்ராஜெக்ட்டையும் சமர்ப்பித்து பலரது பாராட்டையும் பெற்று வந்துள்ள சிவராமனிடம் பேசினோம்:

“”சாய்ராம் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் புதியபுதிய ப்ராஜெக்ட்டுகளைச் சமர்ப்பிப்போம். அதன்படி முதலாம் ஆண்டு நானோ டெக்னாலஜி குறித்து ஒரு ப்ராஜெக்ட் சமர்ப்பித்தேன். இது தொடர்பாக ஆராய்வதற்குத் தேவையான வசதிகளுடன்கூடிய ஆய்வுக்கூடம் இங்கு இல்லாததால் ஆய்வைத் தொடர முடியாமல் போய்விட்டது.

கம்ப்யூட்டரை வேறு யாரும் பயன்படுத்தாமல், ஒருவர் மட்டுமே பயன்படுத்துகிற வகையிலான லாக் சிஸ்டம் குறித்து இரண்டாம் ஆண்டு ப்ராஜெக்ட் செய்திருந்தேன். கம்ப்யூட்டர் லாக் சிஸ்டம் பற்றி பலர் ஆய்வு செய்து

வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். நான் செய்தது புதிய முறையிலான லாக் சிஸ்டம்.

மூன்றாம் ஆண்டு ப்ராஜெக்ட்டாகத்தான் பார்வையற்றோர் பயன்படுத்துகிற வகையிலான ஆங்கில கீபோர்டை உருவாக்கியிருக்கிறோம். இது என்னோடு படிக்கும் நண்பர் ஸ்ரீகாந்தோடு இணைந்து செய்த ப்ராஜெக்ட்.

இந்தப் ப்ராஜெக்ட்டை முடித்துச் செயல்படுத்துவதற்கு எங்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் 104 கீஸ் இருக்கும். இதைப் பார்வை தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறபோதுகூட பிழைகள் வருவது என்பது இயல்பான விஷயம். ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை பிழையைத் திருத்தித்தான் ஒரு கட்டுரையைச் சரியாக டைப் செய்து முடிக்க முடியும். நமக்கே அப்படியென்றால் பார்வை தெரியாதவர்கள் அடித்தால் எத்தனை பிழைகள் வரும்? அப்படி வராமல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் பிரெய்லி முறையிலான கீபோர்டுகள், சொல்லச் சொல்ல பதிவு செய்கிற முறைகள் எல்லாம் இருக்கின்றன. இந்த வகையிலான கீபோர்டுகளிலும் பிழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு பிறர் உதவியோடுதான் இந்தவகையான கீபோர்டுகளை எல்லாம் பார்வையற்றோர் பயன்படுத்த முடிகிறது. இதுபோன்று இல்லாமல் அவர்களே தனித்து இயக்கக்கூடிய வகையில்தான் இந்தப் புதிய கீபோர்டை உருவாக்கி இருக்கிறோம்.

பார்வையற்றோருக்காக நாங்கள் உருவாக்கி இருக்கிற கீபோர்டில் இருப்பவை மொத்தம் 62 கீஸ் மட்டுமே. இதிலேயே எல்லா எழுத்துகளையும், எண்களையும், பங்ஷன் கீஸ்களையும் அடக்கி இருக்கிறோம். இதனை “ஹாஷ்’ வடிவிலான அமைப்பிலும், “கிராஸ்’ வடிவிலான அமைப்பிலுமாக இரண்டாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறோம். உலகமொழியாக இருப்பதால் முதலில் ஆங்கில மொழிக்கான கீபோர்டைத்தான் உருவாக்கி இருக்கிறோம். அதிலும் இப்போது எல்லா எழுத்துகளும் கேபிட்டல் லெட்டரிலேயே வருகிற வகையில்தான் அமைத்திருக்கிறோம். போகப்போக ஸ்மால் லெட்டரில் டைப் செய்கிற வகையிலும், தமிழ் கீபோர்டையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த கீபோர்டை ஏழு நாள்களுக்குள் எளிதாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம். கீûஸக் குறைத்ததோடு மட்டும் நாங்கள் விட்டிருந்தால் பிழைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். நாங்கள் அப்படிச் செய்யவில்லை.

ஒவ்வொரு கீயைப் பயன்படுத்தும்போதும், அதன் எழுத்து ஒலிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இதனால் நாம் தவறாக ஒரு கீயை அழுத்திவிட்டால்கூட உடனே ஒலிப்பதைக் கொண்டு அறிந்து, தவறைச் சரிசெய்துவிடலாம். இதனால் பிழை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு கட்டுரையை அடித்து முடித்த பிறகுகூட “ஸ்பீக்’ என்றுள்ள கீயை அழுத்தினால், அடித்த எல்லா வார்த்தைகளையும் வரிசையாகச் சொல்லும் வசதியும் கீபோர்டில் செய்துள்ளோம்.

ஒரு கீபோர்டு உருவாக்கத்திற்கு ஆகும் செலவு வெறும் 250 ரூபாயிலிருந்து 350 ரூபாய்க்குள்தான். பார்வையற்றோர் பள்ளிகளிலிருந்து இந்த கீபோர்டைச் செய்து தரச் சொல்லி பலர் கேட்டுள்ளனர். எங்களால் முடிந்தளவு செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நான் செய்த ப்ராஜெக்ட்களில் இதற்குத்தான் அதிக பாராட்டுகள் கிடைத்து இருக்கிறது. சென்னை உட்பட பல்வேறு கல்லூரிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இதற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறோம். அதோடு சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த வேர்ல்டு காம்ப். 2007 மாநாட்டிற்கு எங்கள் கல்லூரியின் உதவியுடன் நேரில் சென்று கலந்து கொண்டேன். பிரமாண்டமான அரங்கில் அந்த மாநாடு நடைபெற்றது. அரங்கத்தைப் பார்த்ததுமே நான் முதலில் மிரண்டு போனேன். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நான் மட்டுமே மாணவன். மற்ற எல்லோரும் பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள். இதில் நம்முடைய ப்ராஜெக்ட் எப்படி எல்லோரையும் கவரப் போகிறது என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் சமர்ப்பித்தபோது வெகுவாக எல்லோராலும் பாராட்டப் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர் தேநீர் இடைவேளையின்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய ப்ராஜெக்ட் குறித்து பாராட்டியதோடு, நான் மேல்படிப்பு படிக்க விரும்பினால் அதற்காகும் செலவைத் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர் கொடுத்த ஊக்கம் எனக்கு இன்னும் புதியபுதிய தடங்களைப் பதிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி இருக்கிறது” என்கிறார் சிவராமன் -“கண்கள் இருந்தும் நான் குருடர் அல்ல’ என்ற சிந்தனை வெளிச்சத்துடன்!

அருவி

Posted in America, Blind, Braille, Challenged, College, Competition, Computer, Contest, Details, Development, Disabled, Dvorak, Engg, Eyes, Feel, Gadget, Handicapped, Indicators, Information, InfoTech, Invention, IT, Keyboard, Keyboards, Keys, Mice, Mouse, Physically, Professors, Project, QWERTY, Research, School, Shorthand, Sight, Steno, stenographers, Student, Tamil, Teachers, Technology, Touch, University, US, USA, Vision, Winner | 2 Comments »

MBBS, BDS merit list released – Details, Statistics, Admission results

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

எம்.பி.பி.எஸ். பொதுப் பிரிவு “கட்-ஆப் மார்க்’ 197: மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200

சென்னை, ஜூன் 28 : தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் (2007-08) மாணவர்கள் சேருவதற்கு

‘கட்-ஆஃப் மார்க்’ விவரம்:

  1. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான “கட்-ஆஃப் மார்க்’ 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 194.50;
  3. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – 191.75;
  4. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் – 187.25;
  5. பழங்குடி வகுப்பினர் – 179.

மாவட்டங்களுக்கே சிறப்பிடம்:

ராசிபுரம், நாமக்கல், ஓசூர், கோவை, மார்த்தாண்டம் (கன்னியாகுமரி), பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கி முதல் ஏழு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் ஏழு பேரும் எம்.பி.பி.எஸ். ரேங்க்கை நிர்ணயம் செய்யும் இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200-க்கு 200 பெற்றவர்கள்.

14 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை வெளியிட்டுக் கூறியதாவது:-

1,552 எம்.பி.பி.எஸ். இடங்கள்:

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே சொன்ன மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 154 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,552 இடங்களுக்கு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அந்தக் கல்லூரியில் உள்ள 98 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்த ரேங்க் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு):

சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு 326 பி.டி.எஸ். இடங்களுக்கும் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரேங்க் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்”” என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

———————————————————————————————–

2004-ல் பிளஸ் 2; 2007-ல் எம்.பி.பி.எஸ்.: பொள்ளாச்சி மாணவர் சாதனை

பொள்ளாச்சி, ஜூன் 28: நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக, தான் கனவு கண்டபடி மூன்று ஆண்டுகள் கழித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறப்பிடம் பெற்று நுழைந்துள்ளார் பொள்ளாச்சி மாணவர் ஜி.கே. அஸ்வின்குமார்.

பிளஸ் 2 முடித்த பிறகு பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் அதில் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தார் இவர்.

சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று 7-வது சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன். பெத்தநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது மகன் ஜி.கே.அஸ்வின்குமார். கடந்த 2003-04-ல் பொள்ளாச்சியில் உள்ள பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

அப்போது அவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 1169.

சம்ஸ்கிருதம் 196, ஆங்கிலம் 183, கணிதம் 190, இயற்பியல் 200, வேதியியல் 200, உயிரியல் 200. ஆக, மருத்துவ படிப்புக்கான கூட்டு மதிப்பெண்ணாக 200-ஐ வைத்திருந்தார்.

இதில் கடந்த 2 முறை நுழைவுத் தேர்வு எழுதியதில் ஒருமுறை பல் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது.

ஆனால் அஸ்வின்குமார் அதில் சேரவில்லை. ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதவில்லை.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்தாகி பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் அஸ்வின்குமார் தமிழக அளவில் 7-வது ரேங்க் பெற்றுள்ளார். மருத்துவக் கல்வியில் முன்னோடியாக விளங்கும் சென்னை மருத்துவக் கல்லூரியை கவுன்சலிங்கில் அவர் தேர்வு செய்யும் நிலையில் இடம் கிடைக்கும்.

மருத்துவப் படிப்பு முடித்து இதய அறுவைச் சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவராவதுதான் தனது எதிர்காலத்திட்டம் என்று அஸ்வின்குமார் தெரிவித்தார்.

வயது வரம்பு கிடையாது:

நுழைவுத் தேர்வு ரத்து, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்பதால் அஸ்வின்குமார் போன்று கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக கூட்டு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பலன் அடைந்துள்ளனர்.

இத்தகைய மாணவர்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அதிகமாக எடுக்காததால் கடந்த ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியவில்லை.

எம்.பி.பி.எஸ்.-ஐப் போன்று பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கவும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. எனவே நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் பலர் பி.இ. ரேங்க் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உண்டு எனக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

———————————————————————————————–
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல்: பயன் தராத ரேண்டம் எண்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் மூலம் அளிக்கப்பட்ட சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) எந்தப் பயனையும் அளிக்கவில்லை.

நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதால், மாணவர் அட்மிஷனுக்கு புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைத்துப் பாடங்களிலும் சமமான மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெற்றிருந்தால், அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது பிறந்த தேதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், கம்ப்யூட்டர் சிறப்பு எண் (ரேண்டம் நம்பர்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதற்காக, விண்ணப்பித்தோருக்கு சில வாரங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மூலம் சிறப்பு எண் தரப்பட்டது. இவர்களில் யாருடைய எண் பின்னால் வருகிறதோ அவருக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசு அறிவித்திருந்தது.

“”இரு மாணவர்கள் மட்டுமே சமமான மதிப்பெண்ணைப் பெற்றிந்தனர். எனினும், அவர்கள் இருவரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்ததால், அரசுக் கல்லூரியில் அவர்களுக்குத் தாராளமாக இடங்கள் கிடைத்துள்ளன. இதனால் ரேண்டம் எண் அடிப்படையில் அவர்களை மதிப்பிடத் தேவையே ஏற்படவில்லை” என்று மருத்துவக் கல்வி வட்டாரம் தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் 14 அரசுக் கல்லூரிகளிலும், 3 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மொத்தம் 1,552 இடங்கள் உள்ளன.

———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 பேர்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான ரேங்க் பட்டியலில் கூட்டு மதிப்பெண் 200-க்கும் 199-க்கும் இடையே 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டு மதிப்பெண்ணில் ஒவ்வொரு 0.25 மதிப்பெண்ணுக்கும் இடையே ரேங்க் பட்டியலில் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மருத்துவப் படிப்பில் சேர

  • 200-க்கு 200 கூட்டு மதிப்பெண்ணை மாவட்டங்களைச் சேர்ந்த 7 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • இதற்கு அடுத்தபடியாக 199.75 கட்-ஆஃப் மார்க்கை 12 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.50 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 17 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199.25 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 13 மாணவர்கள் வாங்கியுள்ளனர்;
  • 199 கட்-ஆஃப் மார்க்கை மொத்தம் 25 மாணவர்கள் வாங்கியுள்ளனர்.
  • ஆக, கட்-ஆஃப் மார்க் 200-க்கும் 199-க்கும் இடையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் 74 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்-ஆஃப் மார்க் 199-க்கும் 198-க்கும் இடையே மட்டும் 114 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவி எஸ். ரம்யாவின் மருத்துவப் படிப்புக்கான கூட்டு மதிப்பெண் 198.25. எனவே அவர் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பிறகு இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 197 என்பதால், கூட்டு மதிப்பெண் 196.5, 196, 195 என வாங்கியுள்ள பொதுப் பிரிவு மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
———————————————————————————————–
எம்.பி.பி.எஸ். : முதல் 7 ரேங்க் பெற்றவர்கள்

சென்னை, ஜூன் 28: எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் நாமக்கல், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் 200-க்கு 200 கூட்டு மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.

ஒரு சென்னை மாணவர்கூட 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தைப் பெறவில்லை.

ரேங்க் வாரியாக சிறப்பிடம் பெற்ற மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளி குறித்த விவரம்:

1. பி. பிரவீண்குமார், எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

2. ஆர். நித்யானந்தன், குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்;

3. எம். கார்த்திகேயன், மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்;

4. எச். மீனா, அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வெங்கிடாபுரம், கோவை;

5. சி. ஜெரீன் சேகர், குட் ஷெபர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி;

6. எஸ். தாசீன் நிலோஃபர், எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்;

7. ஜி.கே. அஸ்வின் குமார் (படம்), பி.வி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி.
———————————————————————————————–

Posted in Admission, backward, BC, BDS, candidates, Caste, Chennai, Colleges, Competition, Cut-off, Cutoff, Dental, Dentist, Details, Doctor, Education, eligibility, Evaluation, FC, Health, Healthcare, Info, IRT, Madras, Marks, MBBS, MD, medical, Medicine, Merit, MMC, Moogambigai, Moogambikai, Mookambigai, Mookambikai, OBC, OC, Perunthurai, Porur, PSG, Ramachandra, Random, Rasipuram, Reservation, Results, SC, selection, self-financing, ST, Statistics, Statz, Students, Study, University | Leave a Comment »

World Intellectual Property Day – Copyright Protections and Impact on Commerce

Posted by Snapjudge மேல் மே 5, 2007

அறிவுசார் பொருளாதார வளர்ச்சி

பி.கே. மனோகரன்

சர்வதேச வர்த்தகத்தில் இன்று அதிக அளவில் பேசப்படுவது அறிவுசார் சொத்துரிமை தொடர்பானதாகும்.

அன்றாட வாழ்விலும் சமூக, பொருளாதார மேம்பாட்டிலும் அறிவுசார் சொத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் “உலக அறிவுசார் சொத்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “படைப்பாற்றலை ஊக்குவித்தல்’ என்பதாகும்.

அறிவுசார் சொத்து என்பது ஒருவர் தன் மூளையைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய, புதுமையான, சமுதாயத்திற்குப் பயன்படுகிற ஒன்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் ஆகும். பொன்னையும் பொருளையும் போல அறிவும் மதிநுட்பமும் ஒருவகையான சொத்தாகக் கருதப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்தது என்ற கருத்து பழங்கதையாகி அறிவுத்திறனே முக்கியக் காரணி என்ற கருத்து உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. அறிவு வளத்தைப் பயன்படுத்தி, பொருள் வளத்தைப் பெருக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே 21-ம் நூற்றாண்டின் அறிவுசார் பொருளாதாரத்தின் இலக்காகும்.

அறிவு என்பது என்ன? நமது மூளையில் சேகரிக்கப்பட்டு வரும் தகவல் மற்றும் புள்ளி விவரங்களை, அனுபவம் மற்றும் உணர்வுகளின் அடிப்படையில் எப்படிச் சொல்லுதல், எதைத் தெரிந்து கொள்வது, ஏன் தெரிந்து கொள்வது, எப்படித் தெரிந்து கொள்வது போன்றவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்கள், மனித ஆற்றல் ஆகியவை அறிவு சார் பொருளாதாரத்தின் மூலம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

வேத காலத்திலேயே நமது பாரத தேசம் அறிவுத்திறன் மிக்க வல்லரசாகத் திகழ்ந்தது. இன்றும் கணிதம் இந்தியாவின் நுண்கலை என்றே அழைக்கப்பெறுகிறது.

உலகளவில் அறிவுசார் ஆளுமையில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்களில் இந்தியர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதில் இருந்தே இதனை அறியலாம். விண்வெளித்துறை, பாதுகாப்பு தொழில் நுட்பம், உயிரிய தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு மற்றும் மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியர்கள் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.

நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே உதவுவதான வளர்ச்சி உண்மையான அறிவுசார் வளர்ச்சி ஆகாது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து செல்லும் அறிவுசார் வளர்ச்சியே அழிவுப் பாதையிலிருந்து நம்மைக் காப்பாற்றி ஆக்கப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

அறிவுசார் சொத்துரிமை பெற ஒரு கண்டுபிடிப்பு புதுமைத் தன்மை, புதினத்தன்மை மற்றும் மூலத்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இதனை மேற்கொண்டவரின் அறிவார்ந்த திறமையை அங்கீகரிக்கும் பொருட்டும், அவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்காகவும் சட்ட வடிவில் அளிக்கப்படக்கூடிய உரிமைகளே அறிவுசார் சொத்துரிமை எனப்படும்.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. எனினும் “டிரிப்ஸ்’ என்றழைக்கப்படும் “வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை’ இவ்வகை உரிமைகள் அனைத்தையும் உள்ளடக்கிய பலதரப்பு ஒப்பந்தம் ஆகும். இதில் ஏழு அம்சங்கள் உள்ளன.

  • 1. காப்புரிமை,
  • 2. பதிப்புரிமை,
  • 3. வர்த்தக சின்னங்கள்,
  • 4. பூகோள அடையாளங்கள்,
  • 5. தொழிலியல் வடிவமைப்புகள்,
  • 6. மின்னணு ஒருங்கிணைந்த இணைப்புச்சுற்று டிசைன்கள் மற்றும்
  • 7. தொழில் ரகசியங்கள். இவற்றுள் முக்கியமானது காப்புரிமையாகும்.

காப்புரிமை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுவதாகும். காப்புரிமை பெறுவது கட்டாயமல்ல. ஆனால் காப்புரிமை பெற்றால் மட்டுமே சம்பந்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை கோரி விண்ணப்பிக்க்பபடும் நாளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு காப்புரிமை அமலில் இருக்கும்.

காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. எடுத்துக்காட்டாக

  • வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் 40 வகை பொருள்களுக்கு அமெரிக்காவும்,
  • மேலும் 50 பொருள்களுக்கு பிற நாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன.
  • ஆனால் வேப்ப மரத்தின் தாய்வீடான இந்தியாவில் வெறும் 3 பொருள்களுக்கு மட்டுமே காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
  • மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் 30 பொருள்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.
  • ஆனால் இந்தியா 8 பொருள்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது.
  • மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, மாதுளை போன்றவற்றுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரு பொருளுக்கு காப்புரிமை பெற குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சம் 2 ஆண்டுகளில் காப்புரிமை தரப்படுகிறது. இந்தியாவில் காப்புரிமை பெற விண்ணப்பித்த 25 ஆயிரம் மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. அமெரிக்காவில் இது 16 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோள்களின் பயணத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர்கள் இந்தியர்கள். ராமாயண, மகாபாரத காவியங்களில் கற்பனையானவை என்று சொல்லப்பட்ட பல கூற்றுகளை இன்றைய அறிவியல் உண்மையாக்கி காட்டுகின்றன. அறிவுசார் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவேதான் இன்றும்கூட அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தில் பெரும்பாலான விஞ்ஞானத் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் தாயகத்துக்கு திரும்பி விட்டால் அந்நாட்டு மருத்துவக் கட்டமைப்பே கவிழ்ந்து விடும்.

இந்தியா அறிவுத்திறன் மிக்க வல்லரசாக, மக்கள் நலன் பேணும் நல்லரசாகத் திகழ மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அறிவுசார் வளர்ச்சி ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆதிக்கம் செலுத்தும் வகையில் இல்லாமல் எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ பாதை அமைக்க வேண்டும்.

அறிவுத்திறன் மிக்க சமுதாயமே ஆரோக்கியமான சமுதாயம். அறிவே ஆற்றல், அறிவே உண்மையான வளர்ச்சிக்கு வழி.

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சி.பி.எம். கல்லூரி, கோவை.)

Posted in Biotech, Commerce, Competition, Copyright, Court, Design, Economy, Expenses, Finance, Infringement, Innovation, Intellectual, Intellectual Property, Intelligence, Invent, Invention, Inventor, IP, Juice, Law, Lawsuit, Medicine, Order, Pomegranate, Property, Protection, Research, Secrets, service, Servicemarks, Sesame, SM, Stifle, Technology, TM, Trade, Trademarks, Turmeric | 1 Comment »

Reliance Fresh – Impact, Job growth, Details, Statistics, Benefits & Information

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 25, 2007

தமிழக சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி முதலீடு: ரிலையன்ஸ் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, பிப். 25: தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ரூ.2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தங்களது சில்லறை வர்த்தகத்தின் மூலம் 40 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அளிக்க அந்நிறுவனம் உத்தேசித்துள்ளது.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் பலன் பெறும் வகையில் தங்களது சில்லறை வர்த்தகம் நடைபெறும் என அந்நிறுவன வட்டாரங்கள் உறுதி கூறின.

தற்போது சென்னையில் 12 இடங்களில் “ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ என்கிற பெயரில் காய்கறிகள் -பழங்கள் -அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் சில்லறை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எந்தெந்த இடங்களில்…:

  1. அண்ணா நகரில்
  2. 2 இடங்களிலும்,
  3. முகப்பேர்,
  4. புரசைவாக்கம்,
  5. அசோக் நகர்,
  6. தியாகராய நகர்,
  7. திருவான்மியூர்,
  8. அடையாறு
  9. நந்தனம் சேமியர்ஸ் சாலை,
  10. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை,
  11. வளசரவாக்கம்,
  12. சூளைமேடு ஆகிய பகுதிகளில் தலா ஓர் இடத்திலுமாக இந்த 12 நிலையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையங்களால் சிறு வியாபாரிகள் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் கூறின.

விவசாயிகளுக்கு உதவி: விவசாயிகள் வாழும் பகுதிகளிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொள்முதல் மையங்களுக்குக் கொண்டு செல்ல ஆகும் வண்டிச் செலவு, விளைபொருள்களைச் சுத்தப்படுத்தி, பதப்படுத்த ஆகும் செலவு போன்றவை தவிர்க்கப்படும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைத்தரகர்களின் மூலம் விற்கும்போது பல இடங்களில் பணம் உடனடியாக விவசாயிகளுக்குக் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

விவசாயிகள் எந்தெந்த காலகட்டங்களில் எத்தகைய காய்கறிகளைப் பயிரிடலாம்? எத்தகைய விதைகள், இதர இடுபொருள்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் கிடைக்கும்? மக்கள் அதிகமாக விரும்பும் காய்கறிகள் எவை என்பன போன்ற விவரங்களை விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் ஃரெஷ் அவ்வப்போது தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறது.

நுகர்வோருக்கு நியாய விலை: விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால், அதிக லாபம் வைத்து விற்க வேண்டிய அவசியம் இல்லை. நியாயமான விலைக்கு விற்க எங்களால் முடிகிறது என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் உள்ள 12 ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளில் 761 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களைத் தவிர, கொள்முதல் உள்ளிட்ட பணிகளில் 411 பேர் வேலை செய்கின்றனர். புழலில் உள்ள விநியோக மையத்தில் 447 பேரும், 10 இடங்களில் உள்ள சேகரிப்பு மையங்களில் 65 பேரும் பணியாற்றுகின்றனர்.

யாருக்கும் போட்டி இல்லை

சென்னை, பிப். 25: ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் சுமார் 70 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 15 நாள்களில் சராசரியாக நாள்தோறும் 13 ஆயிரம் பேர் தான் எங்களின் 12 கடைகளிலும் பொருள்களை வாங்கி உள்ளனர். இதில் இருந்தே எங்கள் கடைகள் யாருக்கும் போட்டி இல்லை. எவருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும் என்றனர் அவர்கள்.

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் விற்பனை நிலையங்களைப் போலவே ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் ஆங்காங்கே விற்பனையகங்களை நடத்துகின்றன. அந்நிறுவனங்களைப் போலவே, நாங்களும் யாருடைய தொழிலையும் பாதிக்கவில்லை என அவர்கள் கூறினர்.

================================================================
சலுகை விலையில் பொருள்களை கொள்முதல் செய்ய ரிலையன்ஸ்-நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ரகசிய உடன்பாடு

சென்னை, மார்ச் 29: நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:

ரிலையன்ஸ் நிறுவனம் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட 40 சதவீதம் சலுகை விலையில், குறைவான விலைக்கு பொருள்களை கொள்முதல் செய்கிறது. இதற்காக, சில நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிப்போம்.

ரிலையன்ஸ் நிறுவனம் சென்னையில் 14 சில்லறை காய்கறிக் கடைகளைத் திறந்து உள்ளது. மேலும், ஏதாவது கடையைத் திறந்தால் அப்பகுதி வியாபாரிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

மே 5-ல் வணிகர் மாநாடு: மே மாதம் 5-ம் தேதி வணிகர் தின மாநாட்டை சேலத்தில் நடத்துகிறோம்.

ஆன்-லைன் வர்த்தகம், மதிப்புக் கூட்டு வரி ஆகியவை விலைவாசி உயர்வுக்குக் காரணம். எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும். சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டங்களை செப்டம்பர் இறுதியில் மேற்கொள்வோம் என்றார் வெள்ளையன்.

Posted in Backgrounder, Benefits, Biz, Business, Buyer, Chennai, Commerce, Competition, Consumer, Details, Economy, Employment, Finance, Fresh, Fruits, Growth, Healthy, Impact, Information, Jobs, Madras, Market, Opportunity, Reliance, Reliance Fresh, Seller, Statistics, Vegetables, Vendors | Leave a Comment »

Palaniappa Chettiyar Memorial Prizes – Young Adult Fiction Contest awards

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

பழனியப்பா செட்டியார் நினைவு சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டி

சென்னை, பிப்.23: புகழ்பெற்ற பதிப்பகமான பழனியப்பா பிரதர்ஸ், அதன் நிறுவனர் செ.மெ.பழனியப்ப செட்டியார் நினைவாக, மாணவப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக, செ.மெ.பழனியப்பா செட்டியார் நினைவுச் சிறுவர் இலக்கியச் சிறுகதைப் போட்டியை அறிவித்திருந்தது.

அதில், பரிசு பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், அக்கதைகளைத் தொகுத்து கண்ணன் கண்ட சொர்க்கம் எனும் நூல் வெளியீட்டு விழாவும், சென்னை ஃபிலிம் சேம்பர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

நிறுவனர் நாளாக நடைபெற்ற இவ்விழாவில் பிரபல எழுத்தாளர்கள் கே.ஆர்.நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம், ப.முத்துக்குமாரசுவாமி எழுதிய அம்பிகை ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டன.

நல்லி குப்புசாமி செட்டியார் நூல்களை வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சை.வே.சிட்டிபாபு மாணவப் படைப்பாளிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ம.இராசேந்திரன் “மதராசப்பட்டினம் என்ற நூல் பல அரிய செய்திகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்று ஆவணம். சென்னையைப் பற்றிய வரலாற்று ஆவணம், முன்னோர்கள் நினைவு கூறும் ஆன்மிகம், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் மாணவர் இலக்கியம் என மூன்று வழிகளில் சிந்தித்து, மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் தந்திருப்பது பாராட்டத்தக்கது’ என்றார்.

விழாவில் 2006-ம் ஆண்டு 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 6 மாணவ, மாணவியரை உருவாக்கிய தமிழாசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அம்மாணவர்களை உருவாக்கிய பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ எழுத்தாளர்களை உருவாக்கும் திட்டத்தின் அடுத்தபடியாக, மாணவ எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றைத் தொடங்க இருப்பதாக பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப.செல்லப்பன் தெரிவித்தார்.

Posted in Children, Competition, Contest, Events, Happenings, Kid, Literary, Memorial, Nalli, Nalli Kuppusami, Nalli Kuppusamy, Narasayya, Palaniappa, Pazhaniappa, Pazhaniappa brothers, Prize, Winner, Writer | 1 Comment »

Car Wars: Maruti takes on Tata Motors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

சிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா?: டாடாவுக்கு மாருதி சவால்

புது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் கத்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

டாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.

போட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.

சிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்

Posted in Auto Industry, Automotive, Business, Cars, Competition, Fights, Maruthi, Maruti, Maruti Udyog, Marutih, Ratan Tata, Singur, Suzuki Motor Corp, TATA, Tata Motors, Wars, WB, West Bengal | Leave a Comment »