Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cholan’ Category

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

Cauvery: Tamil Nadu to get 419 tmcft water, Karnataka 270

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு

 

தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இன்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழகத்துக்கு மொத்தமாக காவிரியில் இருந்து 419 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள காவிரி நடுவர் மன்றம், அதில் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் தரவேண்டும் என்றும், மீதி காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

காவிரி பாசனப்பகுதியில் 740 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது என்று கணக்கிட்டு, அதில் 419 டிஎம்சியும், கர்நாடகாவுக்கு 270 டிஎம்சியும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், பாண்டிச்சேரிக்கு 7 டிஎம்சியும் வழங்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரை பொதுவாக காவிரி நீரைப் பங்கீடு செய்வது பிரச்சினையில்லாமல் இருக்கும் என்றும்,கோடைகாலத்தில், நீர்வரத்துக் குறையும் போது, இரு மாநிலங்களும் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையும் காணப்படுவதால் அந்தக் காலப்பகுதியிலேயே நீர்ப்பங்கீட்டில் பிரச்சினை உருவாகும் என்றும் கூறுகிறார் நீர்ப்பாசனத் துறை நிபுணரான ஜனகராஜ்.

இதேவேளை காவிரி நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு வரவேற்றுள்ளது.

இப்போதாவது நியாயம் கிடைத்ததே என்று தான் ஆறுதலடைவதாக தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.

காவிரி விவசாயிகள்
காவிரி விவசாயிகள்

இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த மனத்திருப்தியைத் தருவதாக அவர் தமிழோசையிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்தத் தீர்ப்பு தமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அது அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தத் தீர்ப்பை அடுத்து கர்நாடகப் பகுதிகளில் பெருமளவு பதற்றம் இல்லையாயினும், சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டதாகவும், வேறு சில இடங்களில் சில எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கருத்துகள்

காவிரி
காவிரி

காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை விட தற்போது வந்துள்ள தீர்ப்பானது தமிழகத்துக்கு சாதகமாக இருக்கிறது என்ற தொனிப்பட தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இன்றையத் தீர்ப்புக் குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதேவேளை இந்தத் தீர்ப்புக் குறித்து தமிழகத்தின் அனேகமான அரசியல் கட்சிகள் தமது கருத்தை இன்னும் வெளியிடாவிட்டாலும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

ஆளும் திமுக இதனை வரவேற்றுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் எம். வரதராஜன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியனும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள போதிலும், ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே அவர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

இவர்களின் கருத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



இதுவரை கிடைத்த நீர்சென்னை, பிப். 6: காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு வெளியான பிறகு கடந்த 17 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் (டி.எம்.சி. அளவில் -ஆண்டுவாரியாக):1991-92 ….. 334.96

1992-93 ….. 351.69

1993-94 ….. 223.37

1994-95 ….. 373.16

1995-96 ….. 183.09

1996-97 ….. 244.05

1997-98 ….. 268.05

1998-99 ….. 237.27

1999-2000.. 268.60

2000-01 ….. 306.20

2001-02 ….. 162.74

2002-03 ….. 94.87

2003-04 ….. 65.16

2004-05 ….. 163.96

2005-06 ….. 399.22

2006-07 ….. 227.76

(பிப்.2 வரை)

இவ்விவரங்களைப் பார்க்கும்போது நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பில் கூறப்பட்ட 205 டி.எம்.சி.யைக் காட்டிலும் அதிக நீரை அவ்வப்போது கர்நாடகம் திறந்து விட்டதைப் போல தோன்றும். ஆனால், பெரு மழை காரணமாக தனது அணைகளுக்கு வந்த உபரி வெள்ள நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் தான் அதிக நீர் காவிரியில் தமிழகத்துக்கு வந்தது.

ஒரு வகையில் பார்த்தால், தனது வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான வடிநிலமாக தமிழகக் காவிரிப் பகுதிகளைக் கர்நாடகம் பயன்படுத்தி வந்துள்ளது என்பதே தமிழகப் பொதுப் பணித் துறையினரின் கருத்து.


காவிரி பயணம் செய்யும் பாதைகர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, “அகண்ட காவிரி’யாகக் காட்சி தருகிறது.

மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.

மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.


காவிரி – தமிழகத்தின் பல நூற்றாண்டுத் தொடர் கதை: ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கிய பிரச்சினை

பா. ஜெகதீசன்சென்னை, பிப். 6: தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரிப் பிரச்சினை என்பது பல நூற்றாண்டுகளாகவே நீடிக்கும் தொடர்கதையாக இருந்து வருகிறது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகியது. இந்நிலையில் இப்பிரச்சினையில் தமிழகம் கடந்து வந்த பாதையை இங்கு காணலாம்.

இப்பிரச்சினை 11-ம் நூற்றாண்டிலேயே தலைதூக்கியது. காவிரியின் குறுக்கே மைசூர் அரசு கட்டிய அணையை 2-வது ராஜராஜ சோழன் உடைத்து, நீரைத் திறந்து விட்டார்.

17-ம் நூற்றாண்டில் மைசூர் அரசு மீண்டும் கட்டிய அணையை உடைக்க தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் தமது படைகளுடன், ராணி மங்கம்மாளின் படைகளையும் அழைத்துச் சென்றார். சரியாகக் கட்டப்படாத அணை அதற்குள் உடைந்தது.

கி.பி. 2-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சிறப்பான பாசனக் கட்டமைப்புகள் தமிழகக் காவிரி பகுதியில் இருந்தன.

காவிரியின் இடது கரையில் உடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உடைப்பின் குறுக்கே இன்றும் உலகமே வியக்கும் பழமையான கல்லணை, கரிகால் சோழனால் கட்டப்பட்டது.

ஒப்பந்தத் தொடர் கதை: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையே 1890-லிருந்து 1892 வரை பேச்சு வார்த்தை -கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அதன் விளைவாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

“சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது புதிய ஆயக்கட்டு அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது’ என்கிற விதி அதில் இடம் பெற்றது.

கிருஷ்ணராஜ சாகர் அணை: காவிரியின் குறுக்கே கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்ட சென்னை அரசின் இசைவை மைசூர் அரசு கோரியது. அத்திட்டம் தமிழகத்தைப் பாதிக்கும் என்பதால் இசைவு அளிக்க சென்னை அரசு மறுத்தது.

“கோலார் தங்கச் சுரங்கப் பணிகளுக்கு மின் சக்தியைத் தரும் சிவசமுத்திரத் திட்டத்துக்குத் தடையின்றி நீர் வழங்கும் நிர்பந்தம் உள்ளது. முதலில் 11 டி.எம்.சி. நீரையும், பிற்காலத்தில் அனுமதி கிடைக்கும்போது 41 டி.எம்.சி. நீரையும் தேக்குவதற்கான உயரத்துக்கு ஏற்ற அகலமான அடித்தளம் கொண்ட அணை கட்டிக் கொள்கிறோம். அகலமான அடித்தளம் அமைப்பதைப் பிற்காலத்தில் பெரிய அணையைக் கட்ட அனுமதி கோருவதற்குக் காரணமாக வலியுறுத்த மாட்டோம்’ என மைசூர் அரசு உறுதி கூறியது.

1924 ஒப்பந்தம்: மைசூர் அரசு சிறிய அணையைக் கட்டிக் கொள்ள சென்னை அரசு இசைவு அளித்தது. 1911 செப்டம்பரில் பணியைத் தொடங்கிய மைசூர் அரசு, தனது உறுதிமொழியைக் காற்றில் பறக்க விட்டது.

இரு அரசுகளுக்கும் இடையே 1913-ல் பிரச்சினை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-ல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது.

44.827 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், 1.25 லட்சம் ஏக்கர் புதிய பாசன வசதியை ஏற்படுத்தவும் சென்னை அரசு இசைவு அளித்தது.

அதே நேரத்தில் 93.50 டி.எம்.சி. கொள்ளளவுத் திறன் கொண்ட மேட்டூர் அணையைக் கட்டி, புதிதாக 3.01 லட்சம் ஏக்கர் நிலத்துக்குச் சென்னை அரசு பாசனம் அளிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

சென்னை அரசு புதிய பாசன நீர்த் தேக்கங்களை அமைக்கலாம். பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய நதிகளில் நீர்த்தேக்கம் அமைத்தால், அதற்கு ஈடாக அதன் கொள்ளளவில் 60 சதவீதத்துக்கும் மேற்படாத ஓர் அணையைத் தனது எல்லைக்குள் காவிரியின் துணை நதிகளில் மைசூர் அரசு அமைக்கலாம்.

எதைச் செய்தாலும், சென்னை மாகாணத்துக்குச் சேர வேண்டிய நீரின் அளவு குறைந்து விடாதபடி மைசூர் அரசு செயல்பட வேண்டும் என ஒப்பந்தம் தெளிவுபடுத்தியுள்ளது.

நடுவர்மன்றக் கோரிக்கை: பிற்காலத்தில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணைகளைக் கட்டி, பாசனப் பரப்பை அதிகரித்தது. இத்தகராறைத் தீர்க்க 1968-லிருந்து காவிரிப் படுகை மாநில முதல்வர்களிடையே பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

பிரச்சினையை நடுவர்மன்றத் தீர்வுக்கு விடும்படி 17.2.1970-ல் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பிறகு, நடுவர்மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி கோரி 1971-ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தாக்கல் செய்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அளித்த அறிவுரை -உத்தரவாதத்தின் பேரில் அவ்வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

1974-லிருந்து கர்நாடகம் தன்னிச்சையாக 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதைக் கைவிட்டது. காவிரி நீரைத் தடுத்து, தனது அணைகளில் தேக்கிக் கொண்டு, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.

நடுவர் மன்றத்தை நியமிக்கக் கோரி 29.05.75-ல் மீண்டும் தமிழக அரசு வலியுறுத்தியது.

விவசாயிகள் ரிட் மனு: நடுவர்மன்றம் அமைக்கக் கோரி தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த ரிட் மனுவுக்குத் தமிழக அரசு ஆதரவு அளித்தது.

16.6.1986-ல் பெங்களூரில் மத்திய அமைச்சர் நடத்திய கூட்டத்தில் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். “நடுவர் மன்றத்துக்குப் பிரச்சினையை விடுவதைத் தவிர இனி வேறு வழி இல்லை’ என்றார் அவர். அதற்கான மனு 6.7.1986-ல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

நடுவர்மன்றம்: நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4.5.1990-ல் உத்தரவிட்டது. அதையடுத்து 2.6.90-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது.

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்கிற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் நடுவர்மன்றம் அளித்தது.

தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.

ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை என மத்திய அரசின் வல்லுநர் குழுவே கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அணைகளைக் கட்டும்போது தமிழக அரசின் முன் இசைவையோ, மத்திய அரசின் அனுமதியையோ கர்நாடகம் பெறவில்லை.

ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி, அமராவதி போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.

1974-க்குப் பிறகு பல்வேறு நிலைகளில் 40 முறை இரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தின.


உபரி நீர் கர்நாடகத்துக்கு சொந்தமா?ஏ. தங்கவேல்புதுதில்லி, பிப். 6: பலத்த மழை பெய்யும் காலங்களில், காவிரியில் உற்பத்தியாகும் உபரி நீரைப் பற்றி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

உபரி நீர் மூலம், ஆண்டுக்கு சராசரியாக 40 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். நடுவர் மன்றம் அது யாருக்குச் சொந்தம் என்று சொல்லாத நிலையில், உபரி நீர் முழுவதையும் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

உபரி நீரைத் தேக்கி வைப்பதற்காக புதிய அணை கட்டலாம் என்ற யோசனைகூட இப்போதே வந்துவிட்டது. அணை கட்டினால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறைப்படுத்தலாம். மின்சாரம் தயாரிக்கலாம். பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்படுகிறது.

ஆனால், இந்த உபரி நீர் தொடர்பாக கர்நாடக வழக்கறிஞர்கள் மத்தியிலேயே ஒருமித்த கருத்து இல்லை.

உபரி நீர் முழுவதற்கும் கர்நாடகம் சொந்தம் கொண்டாடுமானால், தமிழகம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?

அண்டை மாநிலம் அணை கட்ட வேண்டுமானால் தனது அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலையில், தமிழகம் இதுவரை உறுதியாக இருந்துவந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் நேரத்தில்கூட, தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்ட பிறகே சம்மதம் தெரிவித்தது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பில், ஒவ்வொரு மாநிலமும் காவிரியைப் பயன்படுத்தி பாசனம் செய்ய வேண்டிய பரப்பளவு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கவில்லை.

தொடரும் போராட்டம்: இறுதித் தீர்ப்பு வந்துவிட்டாலும், மறு ஆய்வு செய்யக் கோரி மாநிலங்கள் மீண்டும் மனுத்தாக்கல் செய்யும் நிலையில், சட்டப் போராட்டம் தொடரும். நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யும் அதே நேரத்தில், மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

பஞ்சாப் -ஹரியாணா மாநிலங்களிடையே ராபி -பியாஸ் நதிநீர் பிரச்சினையில் 1987-ம் ஆண்டு எராடி கமிஷன் இறுதித் தீர்ப்பு வழங்கிவிட்டது. அதன்பிறகு 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், காவிரியின் நிலை என்னவாகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது.


எல்லையில் நீர் மின் திட்டம் வந்தாலும் தமிழகத்தின் பங்கு குறையக் கூடாது: காவிரி நடுவர் மன்றம் உத்தரவு

Dinamani சிறப்பு நிருபர் புதுதில்லி, பிப். 6: தமிழக -கர்நாடக எல்லையில் நீர் மின் திட்டம் அமைக்கப்பட்டாலும், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள தண்ணீரின் அளவு தமிழகத்துக்குக் குறையக் கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.காவிரிப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தலைவர் என்.பி. சிங், உறுப்பினர்கள் என்.எஸ். ராவ் மற்றும் சுதிர் நாராயணன் ஆகியோர் திங்கள்கிழமை அளித்த இறுதித் தீர்ப்பில், நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் தேவைகள் பாதிக்கப்படாத வகையில் நீர் மின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“”தமிழக -கர்நாடக எல்லையில், தேசிய நீர்மின் திட்டக் கழகத்துடன் இணைந்து சில நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ஆலோசித்து வருவதாக இரு மாநிலங்களும் தெரிவித்துள்ளன. எப்போது அதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டாலும், அணையில் நீர் தேக்கிவைக்கப்பட்டாலும், நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நீர்ப்பாசனத் தேவைகளுக்காகத் திறந்துவிடப்பட வேண்டிய தண்ணீரின் பங்கு குறையக் கூடாது. உத்தரவில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் உரிய நேரத்தில் செல்ல வேண்டும்” என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம் மற்றும் புதுவைக்குரிய தண்ணீரை அனுமதிக்க வேண்டிய அட்டவணையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், மாநிலங்கள் ஒருமித்த கருத்துடன், ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனையுடன், அந்த அட்டவணையை மாற்றிக்கொள்ளலாம்.

ஓர் அணையிலிருந்து, ஒரு மாநிலம் தனது சொந்தத் தேவைக்காக தண்ணீரைத் திருப்பிவிட்டால், குறிப்பிட்ட தண்ணீர் ஆண்டில் (ஜூன் -மே) அந்த மாநிலம் அதைப் பயன்படுத்தியதாகக் கருதப்பட வேண்டும்.

அணை அல்லது துணை நதியில் இருந்து திருப்பிவிடப்படும் தண்ணீரில் 20 சதம் உள்ளூர் மற்றும் நகராட்சி குடிநீர் விநியோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணை, ஆறு அல்லது கால்வாயில் இருந்து எடுக்கப்படும் நீரில் 2.5 சதவீதத்தைத் தொழில்துறைத் தேவைகளுக்காகப் பன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம், கேரளம் அல்லது புதுச்சேரி மாநிலங்கள், ஓர் ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டால், அடுத்து வரும் மாதங்களில், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஓர் ஆண்டில் தனது பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாததால், அடுத்த ஆண்டு குறிப்பிட்ட மாநிலத்தின் பங்கைக் குறைக்க முடியாது. அதேபோல், பயன்படுத்தாத தண்ணீரை அந்த ஆண்டில் வேறு மாநிலம் பயன்படுத்தியிருந்தால், அடுத்த ஆண்டும் அந்த மாநிலம் கூடுதல் பங்கு கேட்பதற்கு உரிமை இல்லை என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஜூன் 1-ம் தேதி துவங்கி, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடையும் காலத்தை, நீர்ப்பாசனக் காலம் என்று நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.


கிடைத்ததை விரும்பு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிக மகிழ்ச்சி தருவதாகவும் இல்லை; அதிக வருத்தம் அளிப்பதாகவும் இல்லை.கர்நாடக மாநிலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இடைக்காலத் தீர்ப்பு. ஆனால், இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சியாக குறைந்துவிட்டது. அதாவது 13 டிஎம்சி குறைவு. காவிரி நீரில், “தமிழகத்தின் பங்குநீர்’ என்பதும், தமிழகத்துக்கு “கர்நாடகம் வழங்க வேண்டிய நீர்’ என்பதும் இரு வேறு விஷயங்கள்.

தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீர் என்ற தீர்ப்பைக் கேட்டவுடன் தமிழகத்துக்கு அதிக தண்ணீர் கிடைத்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், உண்மை அதுவல்ல. காவிரியில் தமிழகத்தின் பங்கு 419 டிஎம்சி. இதில் தமிழக எல்லைக்குள் காவிரியில் எப்போதும் தானாகச் சென்றுகொண்டிருக்கும் தண்ணீரும், கிளைநதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரும் ஆண்டுக்கு 227 டிஎம்சி எனக் கணக்கிடப்பட்டு, கர்நாடகம் நமக்கு “”வழங்க வேண்டிய தண்ணீர் ஆண்டுக்கு 192 டிஎம்சி” என்று கணக்கிடப்படுகிறது. இதில் குடிநீர் தேவைக்கு 10 டிஎம்சியும் அடங்கும்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பில், “13 டிஎம்சி போனால் போகிறது’ என்ற மனநிலைக்கு தமிழக விவசாயிகள் வந்துவிட்டனர். “இந்த நீரையாகிலும் நடுவர்மன்றம் நிர்ணயித்த அளவுப்படி கர்நாடகம் திறந்துவிட்டால் சரிதான்’ என்று போராடிச் சலித்துப்போய்க் கிடக்கிறார்கள் தமிழக விவசாயிகள்.

பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் எப்படி பகிர்ந்துகொள்வது என்பதைத்தான் தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் அதுபற்றி இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மழை பொய்க்காத ஆண்டுகளில் சராசரியாக 250 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுகிறது. மழை இல்லாதபோதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பற்றாக்குறை ஆண்டுகளில் தண்ணீர் பகிர்வுக்கான அளவுகளை அறிவிக்கும்படி நடுவர்மன்றத்திடம் தமிழக அரசு முறையிடலாம்.

இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேட்டூர் அணையை மட்டுமே நம்பியிருக்காமல் நமக்குக் கிடைக்கும் மிகை நீரைத் தேக்கி வைக்க இன்னொரு அணையைக் கட்டும் கட்டாயமும் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரியில் கூடுதல் தடுப்பணை கட்டும் திட்டத்தை உலக வங்கிக்கு தமிழகம் அளித்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்பு வந்த பின்னர் பார்க்கலாம் என்று அவர்கள் நிராகரித்துவிட்டனர். இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்ட நிலையில், இது குறித்து தமிழகம் பரிசீலிக்கலாம். மேலும், நமக்கு கர்நாடகம் உண்மையிலேயே 192 டிஎம்சி தண்ணீர் வழங்குகிறதா என்பதை கண்காணிக்க சரியான அளவீட்டு முறைகள் இல்லை. தற்போது பிலிகுண்டலு பகுதியில் உள்ள அளவுமானியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இப்பகுதி வண்டல்மண்ணால் மேடுற்றுள்ளதால், குறைவான அளவு நீர்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது.

இந்த அளவு மாறுபாடு குறித்து பிரச்சினை எழுந்தபோது, முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஒரு யோசனை கூறினார். கர்நாடக-தமிழக எல்லையில் (ஓகேனக்கல் அருகில்) புனல்மின்நிலையம் அமைத்தால், இரு மாநில அரசுகளும் மின்சாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நீரின் அளவைச் சரியாகத் தீர்மானிக்கவும் முடியும் என்றார். அப்படியும் செய்யலாம்தான்.


காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தேவை

திருச்சி, பிப். 13: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள தமிழக பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத் தலைவர் ஜி. கனகசபை தலைமை வகித்தார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர் மன்னார்குடி எஸ். ரெங்கநாதன் பேசியது:

“காவிரிப் பிரச்சினை முற்றிலும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை; அரசியல் பிரச்சினையல்ல. நடுவர் மன்றத் தீர்ப்பில் முழு திருப்தி இல்லை என்றாலும் நியாயமான தீர்ப்புதான்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்த்தால் பல்வேறு பாசன நலத் திட்டங்களுக்கு உலக வங்கி கடன் தரத் தயாராக உள்ளது’ என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதையடுத்து தமிழகத்தின் பங்கான 419 டிஎம்சி தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்த கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

கோடைக்காலத்தில் தண்ணீர் திறப்பு குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. கோடைக்காலத்தில் தண்ணீர் திறக்காவிட்டால் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு கோடைக்காலத்தில் தண்ணீர் பெற்றுத் தர வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


 Dinamani – Feb 14, 2007

காவிரி தீர்ப்பு: தமிழகத்தின் இழப்பும்-தவறுகளும்

பழ. நெடுமாறன்

சுமார் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக தீராமல் இருந்துவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

1968 முதல் 1990 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகாலமாகப் பேச்சு நடத்தி தமிழகம் ஏமாந்ததுதான் மிச்சம்.

1972 ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் கொடுத்திருந்த வழக்கை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு திரும்பப் பெற்றது.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் 19 ஆண்டுகளாக இழுத்தடித்து நடுவர் மன்றம் அமைக்கவிடாமல் கர்நாடம் தடுத்தது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ஏற்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார்.

16 ஆண்டுகாலமாக நடுவர் மன்றத்துக்கு ஒத்துழைப்பு தராமல் கர்நாடகம் இழுத்தடித்தது. இறுதியாக, 2007ஆம் ஆண்டு ஜனவரியில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி. நீரும், கேரளத்துக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்துக்கு அளிக்கப்பெற்ற 419 டி.எம்.சி.யில் 192 டி.எம்.சி. நீரை கர்நாடகம் அளிக்கும். மீதமுள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி ஓடும் பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகளிலிருந்து கிடைக்கும் நீர் ஆகும். ஆக காவிரியில் கர்நாடகம் கொடுப்பது 192 டி.எம்.சி. இதில் 10 டி.எம்.சி. நீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அளிக்கப்பட வேண்டும். புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. கொடுக்க வேண்டும். இந்த 17 டி.எம்.சி. போக தமிழகத்துக்கு கிடைப்பது 175 டி.எம்.சி. மட்டுமே.

ஆனால் சராசரியாக 177 டி.எம்.சி. நீர் மட்டுமே பெற்று வந்த கர்நாடகத்துக்கு மேலும் 93 டி.எம்.சி. நீர் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மற்றோர் அநீதியும் நமக்கு இழைக்கப்பட்டுள்ளது. காவிரி தாவா தொடங்கப்பட்டதிலிருந்து பேச்சுவார்த்தைகளின்போதும் உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு எடுத்து வைத்த நிலை என்பது நமக்களிக்கப்படும் காவிரி நீர் மேட்டூர் அணையில் அளக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பில் இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் கர்நாடகம் மேட்டூரில் அளப்பதைக் கடுமையாக எதிர்த்தது. பில்லிகுண்டு என்ற இடத்தில்தான் நீர் அளக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு பல வகையிலும் இழப்பு ஏற்படும். அதாவது பில்லிகுண்டில் அளந்தால் நமக்கு 14 டி.எம்.சி. நீர் குறையும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் மற்றும் ஓர் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. கேரளத்திற்கு 30 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி. நீரும் தமிழகம் பவானி ஆற்றிலிருந்து 9 டி.எம்.சி. நீரும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் தமிழ்நாடு உள்பட காவிரிப் பாசன மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறைத்துள்ளது. அதைப்போல கர்நாடகம் பயன்படுத்த வேண்டிய நீரின் அளவும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அவ்வாறு செய்யவில்லை. இது மிகப்பெரிய அநீதியாகும்.

கர்நாடகத்திற்கு நடுவர் மன்றம் அளித்த காவிரி நீரின் பங்கு 270 டி.எம்.சி. ஆகும். இதில் 50 சதவீத நீர் காவிரி நீர் பாயும் பகுதிகளில் இருந்து கிடைக்கிறது. காவிரி நீர் பாயும் பகுதிகள் அல்லாத இடங்களிலிருந்து கிடைக்கும் எஞ்சிய 50 சதவீதத்திற்கும் அதிகமான கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகத்திற்கு எவ்விதத் தடையும் கிடையாது. இந்த நீரில் மற்ற மாநிலங்கள் உரிமை கொண்டாட முடியாது என்றும் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது ஒருசார்பானது ஆகும்.

காவிரிப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையின்போதும், உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் வழக்குகள் நடந்தபோதும் நமது சார்பில் பல தவறுகள் இழைக்கப்பட்டுவிட்டன. இது இறுதித் தீர்ப்பில் நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் தமிழகத்தின் சார்பில் 1972ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரே சீரான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகள் மாறி மாறி ஏற்பட்டன. ஒவ்வோர் ஆட்சியின்போதும் ஒவ்வோர் அணுகுமுறை கையாளப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தின் நிலைப்பாடு உறுதியற்றதாகவும் பல மாற்றங்களுக்கு ஆளானதாகவும் இருந்தது.

இந்நிலையில் நடுவர் மன்றத் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜியை அப் பதவியிலிருந்து அகற்ற கர்நாடகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கர்நாடகம் அளித்த பொய்யான புள்ளிவிவரங்களை ஏற்க மறுத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

இந்நிலையில் முகர்ஜி பதவி விலகினார். அவர் விலகாமல் இருந்திருந்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு நிச்சயமாக வேறுவிதமாக இருந்திருக்கும்.

இதற்கிடையில், நடுவர் மன்றத்தில் அங்கம் வகித்த மற்ற நீதிபதிகளும் மாறினர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள காலஅவகாசம் கிடைக்கவில்லை.

பிரதமராக நரசிம்மராவ் இருந்தபோது தமிழகத்திற்கு உடனடியாக 11 டி.எம்.சி. நீரைத் திறந்துவிடுமாறு காவிரி நடுவர் மன்றம் ஆணையிட்டது. அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பிரதமர் அதுபற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். அந்தக் குழுவில் பதவி வகித்த கே. அலக் என்பவர் 6 டி.எம்.சி. நீர் தமிழ்நாட்டுக்கு அளித்தால் போதும் என்று பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமரும் அவ்வாறே ஆணையிட்டார். பிற்காலத்தில் தேவெ கௌட பிரதமராக வந்தபோது, மத்திய திட்ட அமைச்சராக கே. அலக் நியமிக்கப்பட்டார். திட்டக்குழுவின் அனுமதியில்லாமல் காவிரியிலும் அதன் துணை நதிகளிலும் கர்நாடகம் மேற்கொண்டு வந்த பாசனக் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கும் நோக்கத்துடன் திட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறே அனுமதியும் வழங்கினார். இதை மத்தியில் அங்கம்வகித்த தமிழக அமைச்சர்களோ, தமிழக அரசோ ஆட்சேபிக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற பிரதமர் குஜ்ரால் காலத்தில் வரைவுத் திட்டமும் ஆணையமும் உருவாக்குவதற்கான வழி வகுக்கப்பட்டது. ஆனால் குஜ்ரால் அரசு சில மாதங்களே பதவியில் இருந்ததால் இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்க முன்னாள் பிரதமர் வாஜபேயி முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என அவரை வற்புறுத்த தமிழக அரசும் தவறிவிட்டது.

1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987-க்குப் பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ தொடர்ந்து அங்கம் வகித்துள்ளன. ஆனாலும் 1956ஆம் ஆண்டு சட்டத்தைப் பயன்படுத்தி காவிரி நதிநீர் வாரியம் அமைக்க இவைகள் முற்றிலுமாகத் தவறிவிட்டன.

உச்ச நீதிமன்றத்திலும் நடுவர் மன்றத்திலும் காவிரி வழக்கு நடைபெற்றபோது தமிழக வழக்கறிஞர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை அ.தி.மு.க. ஆட்சி மாற்றியது. அ.தி.மு.க. ஆட்சி நியமித்த வழக்கறிஞர்களை தி.மு.க. ஆட்சி மாற்றியது. இதன் விளைவாக வழக்கின் போக்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இறுதியாக காவிரிப் பிரச்சினையில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிட்டன. கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இதன் விளைவாக மத்திய அரசும் நடுவர் மன்றமும் நம்மை மதிக்கவில்லை.

(கட்டுரையாளர்: தலைவர், தமிழர் தேசிய இயக்கம்).

Posted in Agriculture, Amaravathi, Amaravathy, Analysis, Backgrounder, Bavani, Bhavani, Biligundlu, Border, Cauvery, Cauvery Water Disputes Tribunal, Cholan, Current, Dam, Developments, discharge, Dispute, Events, Farmer, Farming, Happenings, Hearings, Hemavathi, Hemavathy, Herangi, Heranki, History, Inter-state, Irrigation, Kabini, Kallanai, Kannambadi, Karikal Cholan, Karnataka, Kavery, Kaviri, Kerala, KR Sagar, Krishna Raja Sagar, Madikeri, Mercara, Mysore, Nedumaran, Noyyal, Opinion, Pala Nedumaran, Pazha Nedumaran, Pazha Netumaran, Public Works, Pudhucherry, Puducherry, PWD, Rajaraja Chozhan, reservoir, River, State, Tamil Nadu, Tanjore, Thanjavoor, Thanjavur, Tribunal, verdict, Water | 1 Comment »