Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cho Ramaswamy’ Category

Convert development process into mass movement: Narendra Modi – Thuglak magazine’s anniversary celebrations in Chennai

Posted by Snapjudge மேல் ஜனவரி 15, 2008

எது மதச்சார்பின்மை?: மோடி விளக்கம்

“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.

Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”

சென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:

நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.

தமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.

எனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.

என் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.

முதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.

நான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.

பெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.

மதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

என்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.

குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.

தேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.

எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.

வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.

  • தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,
  • தமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,
  • கட்டுரையாளர் குருமூர்த்தி,
  • ஜெயா ஜெட்லி,
  • திருநாவுக்கரசர் எம்.பி.,
  • அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,
  • மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

மற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Posted in America, BJP, Cho, Cho Ramaswamy, Cho S Ramasamy, Civil, Criminal, dead, Editor, Ela Ganesan, Gujarat, Gurumoorthy, Gurumurthy, Hindu, Hinduism, Hindutva, Ila Ganesan, Islam, Jaya, Jeya, Killed, Law, MDMK, minority, Modi, Murder, Muslim, Order, Religion, Sarathkumar, Sharathkumar, Thirunavukkarasar, Thirunavukkarasu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, US, USA, Vai Gopalasami, Vai Gopalsami, Vai Gopalsamy, Vai Kopalsami, Vai Kopalsamy, VaiGo, VaiKo, Visa | 2 Comments »

Iraa Sezhiyan – ‘Reason yet to be given for the Meeting Cancelation’

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

காவல்துறையினரின் கடமை

இரா. செழியன்

ஒரு நாட்டில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பல முனைகளில் வேகமாகப் பரவியும் வளர்ந்தும் வரும் நிலையில், அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவற்றை ஒட்டி நாட்டின் சட்டங்களும் வேலைத் திட்டங்களும் எண்ணற்ற அளவில் விரிவடைந்து வருகின்றன.

மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்பட வேண்டிய பணிகளை அரசாங்கம் பல துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம், நிறைவேற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு, நுணுக்கமாகச் சட்டத்தில் எழுதி வைக்க முடியாது. அதற்காக பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் உண்டாகும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு உசிதப்படி அதிகாரிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உசிதப்படி செயல்பட வேண்டும் என்பதால், மனம் போன போக்கில் ஒவ்வோர் அதிகாரியும் தமக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை மீறி, சட்டத்தின் நோக்கத்தை மீறி, தேவையற்ற நியாயமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஓர் அதிகாரி பயன்படுத்தினால், அது கொடுங்கோன்மை மிக்க எதேச்சாதிகாரமாக ஆகிவிடும்.

கலவரத்திலும் வன்முறையிலும் ஒரு கும்பல் ஈடுபட்டால், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் எடுக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை, கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் ஒன்றை உசிதப்படி அதிகாரிகள் கையாள வேண்டும். அப்படி இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகத்தை போலீஸ் பயன்படுத்தக் கூடாது.

அக்டோபர் 24, 2006ஆம் நாளன்று ராஜாஜி பொதுவிவகார மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம், சென்னைப் போலீஸ் கமிஷனரிடமிருந்து அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டது.

பொதுவான அமைதி – ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளில், இபிகோ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதிக்கிறது. கூட்டங்கள் – ஊர்வலங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன்கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்காமற் போகலாம்.

அனுமதி வழங்காத நிலைமையில் போலீஸ் கமிஷனர் கையாள வேண்டிய முறைகளை சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பு அளித்து, நேரிடையாக அவரோ, அவருடைய வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

அதன்பிறகும் அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவு எடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

அக்டோபர் 24 கூட்டத்திற்கான மனுவின் மீது, தமது வாதங்களை முன்வைக்க ராஜாஜி மையத்தைச் சேர்ந்தவருக்கோ, அவரது வழக்குரைஞருக்கோ, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சட்டப்படி அனுமதி வழங்கப்படாததற்கான காரணத்தை எழுத்து மூலம் உத்தரவில் தந்திட, சென்னைப் போலீஸ் கமிஷனர் தவறிவிட்டார்.

ஒருவேளை எழுத்து மூலம் காரணங்களை எழுதி போலீஸ் கமிஷனர் தமது அலுவலகக் கோப்பில் வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், முடிவில் அனுமதி கேட்டவருக்கு கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுவிட்டது. சட்டத்தை மீறி கூட்டத்தை நடத்த விரும்பாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதற்கான அறிவிப்பை பொதுமக்களின் பார்வைக்கு கூட்ட அமைப்பாளர்கள் வைத்தார்கள்.

கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால், கூட்டம் நடத்துவதற்குத் தடை போடப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம்; மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறலாம்.

ஆனால் போலீஸ் சட்டத்தில் 6-வது விதிமுறையில் ஒரு கடும் எச்சரிக்கை இருக்கிறது. போலீஸ் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் அமலில் இருக்கும்பொழுது, அனுமதி பெறாமல் யாராவது கூட்டம் நடத்தினால், ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கான குற்றத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதுதான்.

நிர்வாகத்தின் உள் அமைப்பில் எத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டாலும், சட்டத்தின்படி பொறுப்பை வகிப்பவர் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவதைக் கவனித்திருக்க வேண்டும். வெளிப்படையாக நமக்குத் தெரிவது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி அன்று வரவில்லை, கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பவைதாம்.

பொதுக்கூட்டம், தனிப்பட்ட ஓர் அமைப்புக்காகவோ, ஒரு சிலருக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொதுமக்கள்பட்ட இன்னல்களை வைத்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. எத்தகைய காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிந்தால், வருங்காலத்தில் கூட்டம் நடத்துபவர்களுக்கு, அது உதவியாக இருக்கும்.

மேலும், ஓர் அதிகாரிக்கு ஒரு செயல்பாட்டுக்கான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்றால், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததாக ஆகும். எந்த அளவு அதிகாரி பொறுப்பை நிறைவேற்றினார் என்பதுடன் நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை ஆராய்ந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மக்களாட்சி முறையில் ஏற்படுகிறது.

கூட்டம் நடைபெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வழங்காமற் போவதற்கும் காவல்துறை ஆணையருக்கு சில வழிமுறைகளை சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சென்னை காவல்துறை நடந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் எவை என்பதை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

Posted in 144, atrocity, Ban, cancel, Cho, Cho Ramaswamy, Commissioner, Democracy, DMK, Era Sezhiyan, Iraa Sezhiyan, Karunanidhi, Meeting, MK, Police, POTA, TADA, Tamil, Tamil Nadu, Thuglaq, VR Lakshminarayanan | Leave a Comment »