Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Chiken Gunya’ Category

Chikun Kunya attacks Kerala – 62 ill

Posted by Snapjudge மேல் மே 30, 2007

கேரளத்தில் 62 பேருக்கு சிக்குன் குன்யா

திருவனந்தபுரம், மே 30: கேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 62 பேர் சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் 5 உறுப்பினர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி இது குறித்து கூறியது:

சிக்குன் குன்யா நோய்க்கு எவரும் பலியாகவில்லை. பதனம்திட்டா மாவட்டம் சித்தூரில் அதிக அளவாக 49 பேர் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி, கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், ஆலப்புழை மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

—————————————————————————————————————–

தமிழகத்தில் மீண்டும் சிக்குன் குனியா?

சென்னை, ஜூன். 3: தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டங்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. சித்த மருந்துகளும் இப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ராமச்சந்திரன்.

——————————————————————————-

கேரளாவில் சிக்குன்குனியாவால் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது

திருவனந்தபுரம், ஜுன்.12-

கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா வைரஸ் காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோட்டயம், பத்தினம்திட்டை, இடுக்கி, ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங் களில் தான் சிக்குன்குனியா தாக்கம் அதிகமாக உள்ளது.

இம்மாவட்டங்களில் மட்டும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் 10, 319 பேரும், இடுக்கி ஆஸ்பத்திரியில் 3073 பேரும், ஆலப்புழை மாவட்டத்தில் 1515 பேரும் சிகிச்சை பெற்றனர். இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிக்குன்குனியாவுக்கு பலி யானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குட்டப்பன் (வயது56), அன்னம்மா (59), வேலாயுதன் (67), அய்யப்பன் (60), தோமஸ் (76), லீலா (56), பொன்னன்குட்டி (78) ஆகிய 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் சாவு எண்ணிக்கை 70-ஐ தாண்டியது.

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். இவருக்கும் உஷாகுமாரி என்ற மனைவியும், ஆதிரா, அஞ்சு, ஆரியா என்ற 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

அனில்குமாரின் உடலை பார்த்து அவரது மனைவி உஷாகுமாரி மற்றும் 3 குழந்தைகளும் கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. இனிமேல் இந்த 3 குழந்தைகளும் நான் எப்படி காப்பாற்றுவேன் என உஷாகுமாரி கதறி அழுதார்.

சிக்குன்குனியா காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ராணுவ டாக்டர்கள் முகாம் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம், திருவனந்தபுரம் அம்பூரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ராணுவ டாக்டர்கள் அமைத்துள்ள தற்காலிக முகாமில் தினமும் ஆயிரக்கணக் காணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Posted in Alapula, Alapuza, Alapuzha, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Chithoor, Chithur, Chitore, CPI, dead, Disease, DMK, Kerala, KKSSR, Kollam, Kottayam, Outbreak, Palacaud, Palaghat, Palakode, Quilon, Sathoor, Sathur, Thrichoor, Thrichur, TN, Trichoor, Trichur | 4 Comments »

Mosquito Menace – Rajapalayam Ku Ganesan : Public Sanity Projects & Environment

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

கொசுக்களுடன் ஒரு பனிப்போர்

ராஜபாளையம் கு. கணேசன்

“சிங்கத்தைக் கூட அதன் குகைக்கே சென்று சந்திக்கும் ஆற்றல் உள்ள மனிதன், சிறு கொசுவுக்குப் பயந்து பதுங்கிக் கொள்கிறான் ஒரு கொசுவலைக்குள்’ என்று ஒரு புதுக்கவிதை உண்டு. இன்று இது நடைமுறை உண்மையாகி வருகிறது. இந்தியாவில் கொசுக்களை ஒழிக்கும் முறையான திட்டங்கள் தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. என்றாலும், இன்றளவும் கொசுக்கள் ஒழிந்தபாடில்லை. இதற்குக் காரணம், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்கும்போது கொசுக்களை ஒழிக்கும் களப்பணிகள் தீவிரமடைவதும், இந்த நோய்கள் குறைந்து வரும்போது, கொசு ஒழிப்பின் மீதான அரசின் அக்கறையும் மக்களின் கவனமும் குறைந்து விடுவதும் வழக்கமாகி விட்டது.

கொசுக்களை ஒழிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தங்களுக்குத் தெரிந்த “ஆயுதங்’களை, மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் கொசு ஒழிப்புத் திட்டங்களை உற்றுக் கவனித்தால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது – உலகளவில் ஏற்பட்டிருக்கும் நவீன அறிவியல் வளர்ச்சியாலும், புதுப்புது மருத்துவக் கண்டுபிடிப்புகளினாலும் இந்தக் கொசு ஒழிப்பு ஆயுதங்கள்தான் அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கின்றனவே ஒழிய, கொசுக்களை மட்டும் நம்மால் ஒழிக்க முடியவில்லை.

1950களில் இந்தியாவில் மலேரியா தீவிரமாகப் பரவி ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தபோது, “தேசிய மலேரியா கட்டுப்பாட்டுத்திட்டம்’ எனும் பெயரில் கொசுக்களுக்கு எதிராக ஒரு போர் 1953-ல் தொடங்கியது. அப்போது நம்மிடம் இருந்த ஒரே ஆயுதம் “டி.டி.டி.’ ( DDT) என்னும் மருந்து மட்டுமே. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இதைச் செயல்படுத்தியதில் இந்தியாவில் மலேரியா பரவுவது வேகமாகக் குறைந்தது; கொசுக்களும் ஓரளவிற்கு ஒழிந்தன. என்றாலும் காலப்போக்கில் இந்தியக் கொசுக்களின் மரபணுக்களில் ஏற்பட்ட “தடாலடி’ மாற்றங்களால் இந்த “டி.டி.டி.’ மருந்தையே எதிர்க்கிற ஆற்றல் அவற்றுக்கு வந்துவிட்டது. இதனால் “தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்’ எனும் பெயரில் இந்தப் போராட்டத் திட்டங்களை 1958லும் 1977லும் சற்று மாற்றி அமைத்தார்கள். இதன்படி டி.டி.டி. மருந்து பலன் தராத இடங்களில் “லின்டேன்’, “மாலத்தியான்’ போன்ற மருந்துகளைத் தெளித்தார்கள். இதுவும் சில ஆண்டுகளுக்குப் பலன் தந்துவிட்டு மீண்டும் “படுத்து’க் கொண்டது.

காரணம், கொசுக்கள் வாழும் திறந்தவெளிச் சாக்கடைகள், தண்ணீர்த் தொட்டிகள், நீர்சேமிப்புப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து கொசுக்கள் மீண்டும் மீண்டும் பெருக்கமடைந்து வீடுகளுக்குள் வந்து விடுகின்றன. இந்த “வழிகளை’ அடைக்க வேண்டுமென்றால் “சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பேண வேண்டும்; தேங்கும் நீர்நிலைகளில் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற சுகாதார விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டியது அவசியம்.

என்றாலும் இந்த வழிகளை அடைப்பதற்கு இரண்டு புதிய மருத்துவ ஆயுதங்களும் தயாராயின. ஒன்று, “பைரெத்ரின்’ என்னும் கொசு ஒழிப்புப் புகைமருந்து. மற்றொன்று, கொசுவின் லார்வாக்களை அழிக்கும் “அபேட்’ எனும் நுண்ணுயிரி மருந்து. இவற்றில் “கொசு ஒழிப்புப் புகைமருந்து’ தெருக்களில் புகையாகத் தெளிக்கப்படுவது. இது கொசுக்களின் நரம்புகளைப் பாதித்து அவற்றை உடனடியாகக் கொன்று விடுகிறது. இந்த மருந்தை உட்கொண்ட லார்வாக்களின் உணவுப்பாதை கிழிபட்டு அழியும். அதனால் கொசுப்புழுக்கள் 100% அழிக்கப்படும். என்றாலும் இதற்கு ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்றவற்றின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சிமன்றங்கள் கொசு ஒழிப்பிற்கு என ஒதுக்கும் நிதி மிகக் குறைவு என்பதால் இந்த “ஆயுத’ங்களும் சரியாகச் செயல்படவில்லை.

அதேநேரத்தில், கொசுக்களை ஒழிப்பதற்காக இதுவரை நாம் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளின் வேதிப்பொருள்கள் அனைத்துமே நீர், நிலம், காற்று இம் மூன்றிலும் நச்சுக்களைக் கலந்து, சுற்றுச்சூழலைப் பாதிக்கத் தொடங்கின; இதை உறுதி செய்யும் விதத்தில், “இந்தியாவில் பெருகிவரும் ஆஸ்துமா போன்ற நெஞ்சக நோய்களுக்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. மருந்துதான் காரணம்’ என்று ஓர் ஆய்வு தெரிவித்தது. எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத விதத்தில், உலக அளவில் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் வேறு “ஆயுத’ங்களைப் பயன்படுத்தலாமா என இந்தியச் சுகாதாரத்துறை யோசித்தது.

நியூசிலாந்தில் ஆண் கொசுக்களின் மரபணுக்களை மாற்றி வைத்து, அவற்றை மலடாக்கி, கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள்.

கொசுக்கடியிலிருந்து தப்பித்தாலே மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதற்குக் கொசுவலைகள் மற்றும் கொசுவிரட்டி வில்லைகளை “ஆயுத’ங்களாகப் பயன்படுத்தலாம் என யோசனை கூறப்பட்டது.

இந்தக் கொசுவிரட்டிகளில் பல வகைகள் உள்ளன. “டைஎதில் டாலுவாமைடு’ அல்லது “டைஎதில் பென்சாமைடு’ எனும் மருந்து உள்ள களிம்பைப் பகல் நேரத்தில் உடலில் பூசிக்கொண்டால் தாற்காலிகமாகக் கொசு கடிப்பதிலிருந்து தப்பிக்கலாம். என்றாலும் இதனால் சிலருக்குத் தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு.

அடுத்ததாக, நெருப்பில் புகையும் கொசு ஒழிப்புச் சுருள்கள், மணிக்கட்டில் கட்டப்படும் மருந்துப் பட்டைகள் மற்றும் மின்சாரத்தில் ஆவியாகும் திரவ மருந்துகளும் கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவற்றில் உள்ள அல்லெத்ரின், பிராலெத்ரின், இன்டலோன், டைமெதில் தாலேட், டைமெதில் கார்பேட் போன்ற வேதிப்பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த “ஆயுத’ங்களைச் சந்தையில் விற்பதற்கு ஊடகங்கள் செய்யும் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் இவற்றின் தகுதி மற்றும் திறன் பற்றி ஐயங்கள் எழுகின்றன.

இவை உண்மையிலேயே செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் கொசுக்களே இருக்கக் கூடாது. நிலைமை அப்படி இருக்கிறதா? யோசிக்க வேண்டியதிருக்கிறது.

ஆகவே, இனி மீதமிருக்கும் ஒரே “ஆயுதம்’ கொசுவலைதான். இதனால் நமக்கு அதிகச் செலவில்லை. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை. பயன்படுத்துவது மிக எளிது. பக்கவிளைவுகள் இல்லாதது. அதேநேரத்தில் இதை நாம் சரியாகப் பயன்படுத்தினால்தான் கொசுக்கடியிலிருந்து முழுவதுமாகத் தப்பிக்க முடியும்.

குறிப்பாக, படுக்கப் போகும்போது கொசுவலையைக் கட்டிப் பலனில்லை. ஏனென்றால், வழக்கமாக இருட்டத் தொடங்கும் நேரத்தில்தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் போன்றவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பே – மாலை 5 மணி அளவில் – படுக்கையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அப்போதுதான் கொசு நம்மைக் கடிக்காது. சரி, கூட்டுக்குடும்பங்களுக்கு இது சரிப்படும். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் என்ன செய்வது? காலையில் அலுவலகம் கிளம்பும்போதே கொசுவலையைக் கட்டிவிட வேண்டியதுதான். வேறு வழி?

Posted in airborne, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, DDT, Dengue, Dichloro-diphenyl-trichloroethane, Disease, Environment, Health, Infection, Mosquito, Outbreak, Sanity, Tamil, Waterborne | 1 Comment »

‘Healthcare schemes to protect Future Generations’ – KKSSR

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

வருங்கால தலைமுறையை காக்கும் சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

சென்னை, நவ. 20: வருங்காலத் தலைமுறையைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் பார்வை தின விழாவில் அமைச்சர் பேசியதாவது:

நோய்ப் பரவல் தடுப்பு மற்றும் வருமுன் காத்தல் என்று இரு அணுகுமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனினும், குழந்தைகள் உள்பட இளைய தலைமுறையினரைக் காக்கும் வகையில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அரசு அதிக ஆர்வம் கொண்டுள்ளது.

நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அவசியம்.

தமிழகத்தில் கடந்த 2004-05-ம் ஆண்டில் கண் தானம் மூலம் 4001 கண்கள் மட்டுமே பெறப்பட்டன.

எனவே, கண் தான விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.

சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் பேசியதாவது:

இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை அளித்து சாதனை செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு கண் பார்வை இழப்பைத் தடுக்கும் வகையில் வைட்டமின் ஏ கரைசல் திரவம் விரைவில் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

தமிழ்நாடு பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குநர் டாக்டர் டி. செல்வகுமாரி, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் வி. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Posted in Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, Eye, Healthcare, KKSSR, Minister, Outbreak, TN | Leave a Comment »

TN Govt. (atlast) declares Chikungunya as notifiable disease

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சிக்குன்குனயா தொற்று நோய் என தமிழக அரசு அறிவிப்பு

சிக்கன்குனியாவைப் பரப்பும் கொசு
சிக்கன்குனியா நோயைப் பரப்பும் கொசு

இதற்கிடையே, கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்திய சிக்குன்குனியா நோயை, அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காலரா, மலேரியா, அம்மை, டைபாய்ட் காய்ச்சல் உள்ளிட்ட 21 நோய்கள் ஏற்கெனவே அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோய்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிக்குன் குன்யாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் அரங்கில் சிக்குன் குன்யா நோய் பரவல் என்பது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் விவகாரமாக உருவெடுத்ததால், தமிழகத்தில் சிக்குன் குன்யாவின் நிஜமான பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனைபேருக்கு சிக்கன் குன்யா காய்ச்சல் தாக்கியது என்பது குறித்து இருவேறு மதிப்பீடுகள் நிலவி வருகின்றன.

அரசு தரப்பில் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சிக்குன் குன்யா நோயாளிகளின் கணக்கை மட்டுமே அரசு தருவதாகவும், அவர்களைப்போல பலமடங்கு நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தனியார் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்ற விவரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Posted in Affected, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, dead, Disease, Govt, Healthcare, Infectious, Outbreak, Tamil Nadu, TN, Toll | 1 Comment »

Mosquitoes, Local Body, Healthcare – C Mahendiran

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

உள்ளாட்சித் தேர்தல்-கொசு ஒழிப்பு

சி. மகேந்திரன்

சிக்குன் குனியா, டெங்கு ஆகிய இரண்டு கொடிய காய்ச்சல்களுக்கு அடிப்படைக் காரணம் கொசுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நாட்டின் முன்னேற்றம் அனைத்திற்கும் தடையாக இருப்பதில் முக்கியக் காரணம் வகிப்பது லஞ்சம்தான் என்பதை நாம் உணர்ந்தும் அதனை ஒழிப்பதற்கு முயற்சி எதுவும் எடுக்காமல் இருப்பதைப் போலத்தான் கொசு ஒழிப்பதிலும் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. எந்த ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியும் இவ்வாறாகத்தான் தொடங்குகிறது.

எய்ட்ஸ் கொடிய நோய்தான். இதன் பரவல் கட்டுப்பாடற்ற பாலுணர்வு வாழ்க்கையிலிருந்துதான் பெருகியிருக்கிறது. மானுட நெடும்பரப்பின் அனுபவம் எது நன்மை பயக்கும்? எது தீமை பயக்கும் என்ற பாதையைத் தெளிவாக உருவாக்கித்தான் வைத்திருக்கிறது. காடு, மேடு, மலையின் உச்சி, பள்ளத்தாக்குகளின் பாதாளம் என்று ஓடித் திரிந்த வாழ்க்கையில் மனிதன் அனுபவத்தின் அடிப்படையில் கண்டறிந்ததுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறை சிதைந்ததால்தான் எய்ட்ஸ் வந்ததா? அல்லது ஆணுறை இன்மையால் நோய் வந்ததா என்ற கேள்வி நம்மைப் பெரிதும் வெட்கமுற வைக்கிறது. இன்று வியாபாரத் தந்திரங்களிலிருந்து, எந்தவொரு நாடும் தப்பிக்க இயலவில்லை. ஒருபுறம் வியாபாரமாகிப் போன உலகில், ஆண், பெண் உறவிலுள்ள தார்மிகத்தை வெகுவாக இழந்து விட்டோம். மறுபுறம் ஆணுறை நிறுவனங்கள் உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தைக் குவித்துக் கொண்டிருக்கின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையும் இதே பாதையில்தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

கொசுக்களை ஒழிக்கப் புறப்பட்ட ஆயுதங்களில் எத்தனை வகைகள் இருக்கின்றன. நெருப்பைப் பொருத்தி எழுப்பும் புகையாகவும், மின்சாரத்தில் பொருத்தி உருவாக்கும் ஆவியாகவும், உடல்களில் பூசிக் கொள்ளும் பசைகளாகவும் எத்தனை வகைகளில் இவை! இந்த நடவடிக்கைகளின் தகுதி, திறன் பற்றி ஊடகங்கள் செய்த விளம்பரங்கள் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் கொசுவை ஒழிக்க முடியவில்லை? இச் செயல்முறைகள் மறைமுகமாகக் கொசுவை வளர்த்தனவா என்ற சந்தேகம் கூட இப்பொழுது எழத் தொடங்கிவிட்டது. வியாபாரத் தந்திரங்களை யார் அறிவார்?

கொசுவும், கொசு மூலம் பரவும் நோய்களும் ஆதிகாலம் முதல் இருந்திருக்கத்தான் வேண்டும். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மக்கள் கண்டறிந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பதும் மறக்க முடியாத உண்மையாகும். நமது தொன்மையான முறைகள் எதுவும் வியாபாரம் சார்ந்ததல்ல. “வியாபாரம் சாராத’ மக்கள் நலம் சார்ந்த நடவடிக்கைதான் இன்று அவசியமாகிறது.

உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் சார்ந்தவை. மக்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கும் பங்கேற்பு ஜனநாயகமாக உள்ளாட்சித் தேர்தல் அமைந்துள்ளது. ஆனால் இது அதிகாரத்தின் மூலம் மக்களின் பணத்தை மறைமுகமாகக் கொள்ளையிடுவதற்கான வழிமுறையாக இன்று மாறி வருகிறது. இதை வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் சேவை மையமாக மாற்ற வேண்டும்.

மக்கள் நடவடிக்கை குறித்த அனுபவங்களுக்கு வியட்நாம், கியூபா செயல்திட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியமானது என்று தோன்றுகிறது. வியட்நாமின் சில தகவல்கள் நம்மை வியப்புற வைக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் எங்காவது நீர் தேங்கி அதில் கொசு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால், உடன் வாழ்விடத்தின் சுகாதார நடவடிக்கைக் குழுக்கள் அல்லது பெற்றோர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகளின் இந்தப் பொறுப்புணர்வு அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? சமூகம் அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த ஆரம்பக்கல்வி. ஒரு முழு சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குழந்தைகளிடம்தான் பார்க்க முடிகிறது. இதைப் போன்றுதான் புயல்போல் வேகமெடுத்துப் பரவிய டெங்கு காய்ச்சலை கியூபாவில் மக்கள் நடவடிக்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. 1981-ஆம் ஆண்டு 3 லட்சத்து 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நான்கு மாதங்களில் அங்கு இந்த நோய் முற்றாக ஒழிக்கப்பட்டது.

மக்கள் நடவடிக்கையின் மூலம் கொசுக்களை ஒழிப்பதில் முதலில் கவனம் கொள்ள வேண்டியது, சுற்றுச்சூழல் பாதிப்பற்ற திட்டங்களில்தான்! கொசுவை ஒழிக்கும் முயற்சியில் நீர், நிலம், காற்று ஆகியவற்றிலும் விஷத்தைக் கலந்து விடுகிறோம். இதனால் இயற்கைக்கும், இயற்கையைச் சார்ந்து வாழும் மனிதனுக்கும் ஏற்படும் துயரங்களை வார்த்தைகளால் விவரித்துவிட இயலாது. இன்று பெருகி வரும் நெஞ்சக நோய்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு கொசுக்களை அழிக்கப் பயன்படுத்திய டி.டி.டி. போன்ற மருந்துகள்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சூழலுக்குப் பாதிப்பற்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் வகுக்கப்பட்டுள்ளன. இதில் நியூஜிலாந்தின் நடவடிக்கை மிகவும் யோசித்துப் பார்க்கத் தகுந்தது. இங்கு ஆண் கொசுக்களை மலடாக்குவதன் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தை முற்றாக நிறுத்தி விட்டார்கள். இதில் கதிர் வீச்சுகளைப் பயன்படுத்தும் முறைகளும், மரபு அடிப்படையிலான முறைகளும் இருக்கின்றன.

கம்பூச்சியா நாட்டில் ஒருவகை மீன், கொசுவை மிக வேகமாக ஒழித்து விடுகிறது. இதைப்போலவே மிசோ – சைக்கோளப் என்னும் மற்றோர் உயிரினம் டெங்கு, சிக்குன் குனியா முதலிய நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழித்து விடுகிறது. கொசுக்கள் பெரும்பாலும் நீரில் தங்கித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. தேங்கியுள்ள நீர் நிலைகளில் இந்த மீன்களையும் சில உயிரினங்களையும் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை அழிக்கும் நுட்பத்தை அங்கு வளர்த்தெடுக்கிறார்கள். சுற்றுச்சூழலுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

இத்தகைய சூழல் பாதிப்பற்ற நடவடிக்கைகள் உலகில் பல நாடுகளில் செயல்வடிவம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் ஏமாற்று வேலைகள் என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்க மூலதன நிறுவனங்கள் பல்வேறு சதித்திட்டங்களை உருவாக்கி வருகின்றன. இதனால்தான் கியூபா போன்ற நாடுகளின் புகழ்மிக்க விவசாயத் தீர்வுகளை, உலகத்திற்கே தெரியவிடாமல் சூழ்ச்சி செய்து மறைத்து விட்டார்கள்.

உள்ளாட்சிகளில் சூழல் பாதுகாப்புடன் கூடிய கொசு ஒழிப்பிற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஊராட்சி மன்றங்கள் முதல் எல்லா நிலைகளிலும் இதற்காகத் தனித்தனியான திட்டங்கள் வகுத்து மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

கொசு ஒழிப்புத் திட்டம் வலிமையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனின், சுகாதாரத்திற்கான அரசாங்கத்தின் நிதியைக் கூடுதலாக்குவது அவசியம். பல நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை சுகாதாரத்திற்கு ஒதுக்குகின்றன. இந்தியா தனது தேசிய வருமானத்தில் 0.9 சதவீதத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் கூட 2 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக வரவு – செலவுத் திட்டத்தில் 30 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கருத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பரிசீலனை செய்து பொருத்தமுடைய ஒதுக்கீட்டிற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இந்தத் தொகையில் குறிப்பிடத்தக்க அளவை, கொசு ஒழிப்புக்கென்று செலவிடுவது அவசியம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் வாக்களிக்கும் மக்களும் கொசு ஒழிப்பதற்கான திட்டங்கள் குறித்து இந்த நேரத்தில் யோசிப்பது முக்கியமாகும். இதைத் தவிர்த்து, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல்கள் பரவுவதற்கு, ஆளும் கட்சி காரணமா? எதிர்க்கட்சி காரணமா என்ற சொற்போர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால் யாருக்கும் பலன் கிடைக்கப் போவதில்லை.

Posted in Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Local Body, Mosquito, Op-Ed, Outbreak, Suggestions | Leave a Comment »

‘Kerala still did not get the promised help on Chikun Kunya from Anbumani’ – Achuthananthan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

கேரளத்தில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த அன்புமணி அறிவித்த உதவிகள் இதுவரை வரவில்லை: முதல்வர்

திருவனந்தபுரம், அக். 11: கேரள மாநிலத்தில் பரவி வரும் சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வரவில்லை என அந்த மாநில முதல்வர் அச்சுதானந்தன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கேரள சட்டப் பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அச்சுதானந்தன் இத்தகவலை தெரிவித்தார்.

ஆலப்புழை மாவட்டத்தில் சிக்குன்குனியா பாதிப்பு குறித்து அறிய கடந்த 6-ம் தேதி வந்த மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த உதவிகள் குறித்து பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால், அத்தகைய உதவிகள் ஏதும் இதுவரை வரவில்லை.

இதுகுறித்து, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்துக்கு செல்லும் கேரள சுகாதார அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வார் என்றார். முன்னதாக ஆலப்புழை வந்த அன்புமணி, சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை அடிக்கும் இயந்திரம், கொசு வலைகள் ஆகியவற்றை சிறப்பு நிவாரணமாக கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.

Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chiken Gunya, Chikun Kunya, Healthcare, Kerala, Outbreak, promises | Leave a Comment »