Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Cement’ Category

Companies slash prices to sell cement in Tamil Nadu at Rs 200/bag: Tamil Nadu Cement Corporation (TANSEM)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

பாவம், பொதுஜனம்!

கட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.

ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.

சிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.

சுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் என்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது? மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்?

பொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது? அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்?

இதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.

முதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது? பாவம், பொதுஜனம்!

Posted in ADMK, Biz, Building, Cement, Chettinad, Chettinad Cement Corporation, Companies, Construction, Dalmia, Dayanidhi, DMK, Duopoly, Economy, Finance, Grasim, India Cements, Industries, Industry, Kalanidhi, Madras Cements, manufacturers, Maran, Monopoly, Muthiah, Oligopoly, Poor, Private, Ramco, Rich, Tamil Nadu, TANSEM, Ultratech | 1 Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Vat Q&A – Dinamani Solutions on Sales Tax Questions

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி?
டி. அய்யாபிள்ளை, நாகர்கோவில்.

நான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.

சிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.

உங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.

நீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.

இந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.

நுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்?

பாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.

“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in

இந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp  என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.

Posted in Accountancy, Accountant, Answers, Biz, Business, Cement, Economy, Farmer, Farming, Finance, Government, India, Input Tax, Output Tax, Personal, professional, Q&A, Questions, Sales Tax, Small Business, State, Tamil Nadu, Tax, TNGST, VAT | 5 Comments »