Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘CBSE’ Category

Primary Education – Tamil as a Language in Schools for youth

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழுக்கு இனி பொற்காலம்!

தமிழினியன்

தமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.

சிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்!

தமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.

தமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை! என்பது அவரது ஆதங்கம்.

அந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.

ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.

பிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.

தமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.

ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.

தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன்? சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது? வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.

தமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.

தாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.

குழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.

அதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.

புத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.

இத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.

அரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.

அந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).

————————————————————————————————-
தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்

வி.என். ராகவன்

திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.

ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.

இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

ஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

சில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.

ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

தமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.

இந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

குழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:

“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

Posted in CBSE, Colleges, Education, HSC, ISC, KG, Language, LKG, Matric, Matriculation, Metric, Metriculation, Primary, Schools, Students, Tamil, Thamizh, UKG, univ, University, Youth | 4 Comments »

Helmets, Plus One Admissions – Justice Intervention Required

Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007

திறமையின்மைக்குச் சான்றிதழ்

சமீபகாலமாக அரசியல்வாதிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி எழுப்பும் கூக்குரல், நீதிமன்றம் அநாவசியமாக நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறது என்பதுதான். சொல்லப்போனால், அது உண்மையும்கூட. நீதிமன்றத் தலையீடு என்பது “ஹெல்மெட்’ அணிவதா, வேண்டாமா என்பதுவரை தொடர்வது துரதிருஷ்டவசமானது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுபோல, நீதிமன்றம் அன்றாட நிர்வாக விஷயங்களில் தலையிடுவதற்கு என்ன காரணம் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். தங்களது கடமையில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறும்போது நீதிமன்றத்தின் மூலம்தான் நியாயம் கிடைக்கும் என்கிற நிலைமைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். நீதி கேட்டு ஒரு சராசரி குடிமகன் நீதிமன்றத்தைச் சரணடையும்போது அவனுக்கு நியாயம் வழங்க வேண்டிய நிர்பந்தம் நீதிபதிகளுக்கும், நீதித்துறைக்கும் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாவதுவரை படித்த மாணவன் அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது இயற்கை நியதி. இதை அனைத்து பள்ளிக்கூட நிர்வாகங்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு.

சி.பி.எஸ்.இ. முறையில் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாவது வகுப்பில் படித்த மாணவனை பிளஸ் ஒன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள நுழைவுத் தேர்வு மற்றும் புதிய நன்கொடை என நிபந்தனைகள் விதிக்கக்கூடாது என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகாவது, மாநில கல்வித் துறை தங்களது அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதா என்று உறுதி செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஓர் அரசாணை பிறப்பித்து அத்தனை பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கட்டுப்பட வைத்திருக்க வேண்டும்.

அரசு இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல், குறைந்தபட்சம் அரசாணைகூட பிறப்பிக்காமல் இருந்தது எதனால் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னை எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ பள்ளி நிர்வாகம் தனது பள்ளியில் பத்தாவது படித்துத் தேறிய முகமது வாசிப் என்ற மாணவனுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் தராமல், அதிக நன்கொடை அளித்த, அவரைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்ற வெளிப்பள்ளிக்கூட மாணவனுக்கு இடம் அளித்தபோதுதான் பிரச்னை வெடித்தது. முகமது வாசிப் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் நீதிமன்றம் தலையிட நேர்ந்தது.

பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பில் இடம் கொடுத்த பிறகுதான் மற்ற பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது, கட் – ஆஃப் மதிப்பெண் நிர்ணயிப்பது, புதிய அட்மிஷனாகக் கருதி நன்கொடை பெறுவது போன்ற நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

தான் செய்ய வேண்டிய கடமைகளைத் தட்டிக் கழிக்க அரசு ஏன் முயல வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அதிகார வர்க்கம் எப்போதுமே எந்தப் பொறுப்பையும் சுமக்காமல் முடிந்தவரை தட்டிக் கழிக்கப் பார்க்கும் என்பது தெரிந்த விஷயம். ஆனால், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் அப்படி இருந்துவிட முடியாது. பொதுமக்கள் நன்மையைக் கருதி தைரியமாக முடிவெடுக்க வேண்டிய கடமை அமைச்சர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உண்டு.

அளவுக்கு அதிகமான நன்கொடை வசூலிக்கும் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லை. தெருவுக்குத் தெரு காளான்போலப் பெருகி வரும் நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதைப்பற்றி அரசின் கல்வித்துறை கவலைப்படுவதாகவே இல்லை. எந்தவிதப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்ளாமல், நீதிமன்றத் தீர்ப்பாக உத்தரவுகள் வருவதற்குக் கல்வித் துறை காத்திருக்கிறது என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

திறமைசாலி என்று கருதப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த விஷயங்களில் ஏன் தடுமாறுகிறார் என்பது புரியவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு அரசின் திறமையின்மைக்குத் தரப்பட்டிருக்கும் சான்றிதழ்.

Posted in +1, abuse, Admissions, Ban, Bar, Bikes, Business, CBSE, Courts, Cutoff, Disqualify, Don bosco, Donations, Donbosco, Education, Extortion, Helmet, Helmets, HSC, Industry, Judges, Justice, Law, Marks, Matric, Matriculation, Merit, Minister, Needy, Order, Plus1, PlusOne, Poor, Power, Price, Quality, revenue, Rich, Safety, School, Schools, seats, State, Study, Thangam Thennarasu, Thenarasu, Thennarasu, Wealthy | Leave a Comment »

Sakshat – Pilot portal project by HRD for Educational Needs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

இலவச கல்வி இணையதளம்: தில்லியில் கலாம் தொடங்கி வைத்தார்

புதுதில்லி, அக். 31: மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழங்கும், ஒருங்கிணைந்த இலவச இணைய தளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த இணைய தளத்துக்கு “சாட்சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தில்லியில் நடந்த இந்த விழாவில் கலாம் பேசியது:

நம் நாட்டில் இத்தகைய இணைய தளம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. இம்முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மக்களுக்கு இன்டர்நெர் இணைப்பு இலவசமாகக் கிடைக்கவேண்டும்.

நாட்டில் கல்வி கற்பிக்கப்படும் முறையை மாற்றி அமைப்பதற்காக தொடக்க முயற்சி இது. இந்த இணைய தளத்தின் உள்ளடக்கத்தை பல்கலைக் கழக மானியக் குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி அமைப்புகள் உருவாக்கியுள்ளன.

21-ம் நூற்றாண்டின் அறிவு சார் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நன்கு படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கல்வி பெற உதவுவதோடு, சர்வதேச அளவில் போட்டியிட உதவும் தொழில் திறனையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்தும் சாட்சாத் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

Posted in AICTE, APJ Abdul Kalam, CBSE, digital library, digital repository, e-books, Education, HRD, Human Resources, IGNOU, IISc, IIT, NCERT, portal, Sakshat, UGC | Leave a Comment »