Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Castes’ Category

60pc marks for Grants – Restrictions on SC/ST Scholarships: A Flawed Government Policy?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

நிபந்தனைகளும் நியாயங்களும்

இரா.சோமசுந்தரம்

ஒரு சட்டம் அல்லது புதிய நிபந்தனை புகுத்தப்படும்போது அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதில்லை.

அத்தகைய நிபந்தனை அல்லது சட்டத்தை எதிர்க்கும்போது ‘இதை இப்போது அமல்படுத்துவதன் அவசியம் என்ன?’ என்று கேள்வி கேட்பதும், அதற்கு அரசு சொல்லும் காரணத்தை விவாதத்துக்கு உட்படுத்துவதும், பெருந்திரளானோரின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அது அமலாகும்படி பார்த்துக் கொள்வதும் நியாயமான அணுகுமுறைதான்.

இப்போது பட்டியல் வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே உதவித்தொகை தரப்படும் அல்லது தொடரும் என்ற நிபந்தனைக்கு பட்டியல் வகுப்பு மாணவர்கள் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள்) எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

திடீரென இப்படியொரு நிபந்தனையை மத்திய அரசு கொண்டுவரக் காரணம் என்ன? என்பது பற்றி மாணவர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, யாருமே பேசவில்லை.

இந்த நிபந்தனையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளாவிட்டாலும், மாநில அரசு தனது நிதியில் இந்த மாணவர்களுக்கு உதவித்தொகையை நிபந்தனையின்றி வழங்கும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரும்கூட, இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விளக்கவோ, அல்லது மாணவர்களுக்கு அறிவுறுத்தவோ முயலவில்லை.

ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது?

மத்திய, மாநில அரசுகள் மட்டுமன்றி சில தனியார் அறக்கட்டளைகளும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டுஉறைவிட வசதியும் அளிக்கின்றன. அல்லது அதற்கான செலவை ஏற்கின்றன.

இந்தத் தனியார் அறக்கட்டளைகளின் கருணை நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவர்களிடம் சலுகையைப் பெறும் மாணவர், ஒரு பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர் உதவித்தொகை அல்லது இலவச விடுதி சலுகையை இழந்துவிடுவார். மீண்டும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே (எந்தப் பாடத்திலும் ‘அரியர்ஸ்’ இல்லாத போதுதான்) அவருக்கு இலவச சலுகை மறுபடியும் தொடரும். அதுவரை, ஒன்று அவர் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும். அல்லது பொது மாணவர்களுக்கு இணையாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, அந்த மாணவர்கள் தங்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் கவனம் சிதறினால், கல்விக் கட்டணம் கையைக் கடிக்கும்.!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கும் அவர்களது இலவச உண்டுஉறைவிடத்துக்கும் மத்திய, மாநில அரசுகள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாகச் செலவிடுகின்றன.

இந்த மாணவர்களுக்கு இதுவரையிலும் எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காத மத்திய அரசு, இப்போது அதை நடைமுறைப்படுத்துவது ஏன்? உயர்கல்வியில் இந்த மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைந்துள்ளதுதான் காரணம். இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும். ஆனால் அவர்களும் அரசியல்வாதிகள் போலவே மெüனம் சாதிக்கிறார்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும் (அரியர்ஸ் இருக்கக்கூடாது) என்று எதிர்பார்க்கும் உரிமைகூட அரசுக்கு இல்லாமல் போகுமா?

நகரங்களில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்து, இலவச உண்டுஉறைவிடத்தில் தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டால், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வியை முடிக்கும்வரை (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு) கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை.

இந்த உண்மையை அறிந்துகொள்ள ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துப் பார்க்கலாம். அரசின் கல்வி உதவித் தொகை மற்றும் உணவு உறைவிட சலுகை பெறும் மாணவர்களில் எத்தனை பேர் அனைத்துப் பருவத் தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் (அரியர்ஸ் இல்லாதவர்கள்) என்பதை கல்வித் துறை மிக எளிதில் கணினி உதவியுடன் பட்டியலிட முடியும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண் நிபந்தனையை வைத்தால், பெரும்பாலான மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்ற அச்சம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. அத்துடன், பொது ஒதுக்கீட்டிலும் இடம்பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.

அரசின் நிபந்தனையை எதிர்ப்பவர்கள் யார்? கல்லூரியிலும் மாணவர் விடுதியிலும் இடம் கிடைக்கப்பெற்று, கல்வியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தங்கள் கவனத்தை நகர வாழ்வின் மோகத்தில் சிதறவிடும் மாணவர்கள்தான்.

அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெறுவது கடினம் என்று கருதினால், பருவத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நிபந்தனையை மட்டுமாவது ஏற்க முன்வர வேண்டும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

Posted in Caste, Castes, Government, Govt, Grants, Marks, Policy, Reservations, restrictions, SC, Scholarships, ST | 1 Comment »

Interview with Dravidar Kazhagam Ki Veeramani: EVR Periyar’s Legacy

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2008

“வீரமணி அவர்களே, இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறீர்கள்?”
கோடை பண்பலை வானொலி நிலையத்தார் கேள்வி

தமிழர் தலைவர் அளித்த பதில் என்ன?

வீரமணியார் அவர்கள் இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று கருதுகிறார் என்று கோடை பண்பலை வானொலி நிலையத்தார் எழுப்பிய கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பதில் அளித்தார்.

21-1-2008 அன்று கோடை பண்பலை வானொலிக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் அய்யாவால் பார்க்கமுடியவில்லையே

அய்யா அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிறைவேற்றத்தை அய்யா அவர்கள் பார்க்காமலே கண் மூடினார்.

அய்யா அவர்களுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். அன்னை மணியம்மையார் அவர்களுக்குப் பிறகு எங்களை மாதிரி இருக்கின்ற எளியோர்கள் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

அய்ந்தாம் முறை முதல்வராக கலைஞர்

அய்ந்தாம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். முதல் திட்டமாக கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையைக் கூட்டி முதல் திட்டமாக அதை அவர் நிறைவேற்றியிருப்பது பாருங்கள். அது மிகப்பெரிய சாதனை வெற்றி. இது ஏதோ நான்கு பேருக்கு அர்ச்சகர் வேலை என்பது அல்ல. அதில்தான் சமுத்துவ சமுதாயம் அமைந்திருக்கின்றது.

மீதி இடங்களில் எல்லாம் ஜாதியினுடைய சின்னங்கள் இருக்கும். இன்னும் ஜாதித் திருமணங்கள் அதன் அடை யாளங்கள் குறியீடுகள் எல்லாம் இருக்கும். ஆனால் அதன் ஆதிக்கம் பச்சையாக சட்டப்பூர்வமாக இருக்கிறது. இன்னமும் சமுதாய அனுபவப்பூர்வமாக இருக்கிறது.

ஜாதியை ஒழிக்க

இரட்டைக் குவளை முறைகள் இருக்கின்றன. அதை எதிர்த்துப் போராடக் கூடிய நிலைகள் எல்லாம் நமக்கு இருக்கிறது. ஆனால், அதிகாரப் பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட, அரசியல் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட முறை அங்குதான் இருந்தது.

அதனால்தான் பெரியார் அவர்கள் முழு வெற்றி அடைய வேண்டும் என்றால் ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றும் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு வைத்த கோரிக்கையில், நாங்கள் வெற்றி அடைந்திருக்கின்றோம்.

பெரியார் அவர்களால் முதல் சட்டத் திருத்தம்

பெரியார் காலத்தில் பல போராட்டங்களில் அவர் வெற்றி அடைந்தார். மத்திய அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு பெரியார் காலத்தில் இல்லை. அது அவ்வளவு சீக்கிரமாக வருமா? என்று பலபேர் நினைத்தார்கள். அரசியல் சட்ட முதல் திருத்தமே தந்தை பெரியார் அவர்களால்தான் உருவாக்கப்பட்டது – 1951-ஆம் ஆண்டு. கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்று சொன்னவுடனே தந்தை பெரியார் அவர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்குப் பிறகு அவருடைய 76-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

69 சதவிகித இட ஒதுக்கீடு

69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வந்தது. தந்தை பெரியார் அவர்கள் 50 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு அதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினார். அவர் அரசியலை விட்டே வெளியேறி ஒரு சமுதாய இயக்கத்தை நிலை நிறுத்தி அவர் போராடியதே 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்காகத்தான். இன்றைக்கு 69 சதவிகித இடஒதுக்கீட்டை நீங்கள் பார்க்கலாம்.

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு

50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார். இன்றைக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது. இன்னும் 50 சதவிகிதம் வரவில்லை. பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெண்கள் பெரிய அளவிற்கு உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்து விட்டார்கள்.

எங்களுடைய காலத்தில் மத்திய அரசு மண்டல் குழு பரிந்துரையை எங்களது தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அமல்படுத்தியது. மத்திய அரசில் இட ஒதுக்கீடு பெற எங்களுடைய காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம்.

76-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வெற்றி

அதேபோல அரசியல் சட்ட திருத்தத்தில் 76-ஆவது திருத்தத்தில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கின்றோம். அதேபோல பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் இன்றைக்கு வந்திருக் கிறது. தந்தை பெரியாருடைய கொள்கைத் திட்டங்கள் எல்லாம் ஒரு தொடர் வெற்றிகளாக இன்றைக்கு வந்து கொண்டி ருக்கின்றன.
பெரியாருடைய காலத்திலும் வெற்றிகள் வந்திருக்கின்றன. பெரியாருடைய தொண்டர்கள் காலத்திலும் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

பெரியார் – மணியம்மையார் காலத்தில் வெற்றி

கேள்வி: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களுடைய காலத்தில் தொடர்ந்து வெற்றிகள் வந்திருக் கின்றன. இதற்கு அடுத்து தலைவராக அய்யா நீங்கள் வந்திருக்கின் றீர்கள்.
வீரமணியார் அவர்களுடைய பணி இனி எப்படி?

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இவர்களைத் தாண்டி வீரமணியார் அவர்கள் என்ன செய்யலாம்? அவர்களுடைய பெயரும், புகழுக்கும் இன்னொரு மகுடம் சூட்டுவது போல் அல்லது மகுடத்தில் ஒளி முத்துக்களை, வைரங்களை வைப்பதுபோல வீரமணியார் அவர்கள் தனித்து நின்று இன்னும் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கின்றார்?

தமிழர் தலைவர்: வீரமணி தனித்துச் சாதித்தார் என்ற சரித்திரம் வரவேண்டும் என்பது வீரமணிக்கு முக்கியமல்ல. பெரியாருடைய பணி முற்றுப்பெறவில்லை. அந்தப் பணி பெரியாரோடு முடிந்துவிட வில்லை. பெரியார் என்பது ஒரு சகாப்தம். ஒரு காலகட்டம். ஒரு திருப்பம் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் வருகிற தலைமுறைக்கு நினைவூட்டி, அவ்வப்பொழுது தேவைப்படுகிற செய்திகளை, செயல்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பணியை நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம். அவர்களுடைய கொள்கைகள் பரவுவதற்கு என் னென்ன திட்டங்களைச் செய்யவேண்டுமோ? அதைச் செய்கி றோம்.

தனி மனிதர் சாதித்தார் என்று சொல்லமாட்டேன்

அதில் ஒன்றுதான் நான் சற்று நேரத்திற்கு முன்னால் சொன்னதுபோல் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரையிலே, கல்விக் கூடங்களாகவும், கருத்து அறிவிப்புக்குரிய நிகழ்வுகளாகவும், ஏடுகளாகவும் பிரச்சாரம், செயல்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.

பெரியாருக்குப் பின் இத்தகைய செயல்பாடுகளை தனி மனிதர் ஒருவர் சாதித்தார் என்று நான் சொல்லமாட்டேன். பெரியாருடைய அந்தத் தாக்கம், பெரியாருடைய கொள்கைகள், அதனுடைய விளைவுகள்தான் இப்பொழுது வந்திருக்கின்றன.

இப்பொழுது மார்க்சியம் என்று சொன்னால் மார்க்சிய சிந்தனைக் கருத்துகள் பல ரூபங்களில் பல நாடுகளில் பல பேரால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

`பெரியாரியம் மனித நேயம்

`பெரியாரியம் என்ற கொள்கை இருக்கிறது பாருங்கள், அது மானிடப்பற்று, மனித நேயம், மூடநம்பிக்கைக்கு எதிரானது, பேதத்திற்கு எதிரான.து, பெண்ணடிமைக்கு எதிரானது. இந்தக் கருத்துக்களை எல்லாம் எங்கெங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ, அங்கங்கு சேர்க்கப்படக்கூடிய தூதுவர்களாக தொழிலாளர்களாக நாங்கள் எங்களை ஆக்கிக் கொள்வோம்.

அதுதான் எங்களுடைய குறிக்கோள்.
கோடை பண்பலை நேயர்கள் சார்பில்
வானொலி: உங்களுடைய மனித தூதுப்பணி சிறக்க கோடை பண்பலை நேயர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்..

தமிழர் தலைவர்: ரொம்ப மகிழ்ச்சி. நல்ல ஆழமான கேள்விகளைக் கேட்டீர்கள். சிறப்பான அளவுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தீர்கள். அதற்காக உங்களுக்கு உங்களுடைய பணிகளுக்கு நன்றி, எங்களுடைய நல் வாழ்த்துகள்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Posted in Brahminism, Castes, DK, Dravidar, Dravidian, EVR, Legacy, Periyaar, Periyar, Veeramani, Viramani | Leave a Comment »

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

Other backward castes – Information & Statistics on various Indian State Population

Posted by Snapjudge மேல் மே 8, 2007

உ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

புதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிகார்,
  • ஆந்திரம் மற்றும் கர்நாடகம்
  • ஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.

பிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

  • அருணாசல பிரதேசம்,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Andaman, Andhra, Andhra Pradesh, AP, Arunachal, Arunachal Pradesh, backward, Bengal, Bihar, Castes, Census, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Community, Dadra Nagar Haveli, Demographics, Demography, Empowerment, Goa, Information, Justice, Karnataka, Lakshadweep, MBC, Mizoram, Nagaland, Nicobar, OBC, Panchayat, Population, Reservation, SC, Social, ST, State, Statistics, Stats, Tripura, Union Terrirtory, UP, UT, Uttar Pradesh, Welfare, West Bengal | 1 Comment »

Caste certificate explicitly given as ‘Dog’ by the Tashildar

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

சவரத் தொழிலாளிக்கு “நாய்” ஜாதி என்று சான்றிதழ் வழங்கிய கிராம அதிகாரி `சஸ்பெண்டு’ 

திருவனந்தபுரம், அக்.24-

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பெரும்பாய் கோடு கிராமத்தை சேர்ந்த வர் பி.சி.விஜயன். சவரத் தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்காக கோட்டயம் நகரசபையில் கடன் உதவி பெற விண்ணப்பித்திருந்தார்.

அதற்காக அவருக்கு ஜாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. சான்றிதழ் பெறுவதற்காக “பெரும்பாய்கோடு” கிராம நிர்வாக அதிகாரியை அணுகி னார். பலமாத அலைச்சலுக் குப்பின் அவருக்கு ஜாதிச் சான்றிதழை அந்த அதிகாரி வழங்கினார்.

சான்றிதழை வாங்கிப் பார்த்ததும் விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அதில் `சுர கன்‘ (கேரளாவில் சவரத் தொழிலாளிகளை அழைக்கும் பெயர்) என்பதற்குப் பதி லாக “சுனகன்” என்று இருந் தது. சுனகன் என்றால் மலை யாளத்தில் நாய் என்று அர்த்தம். எழுத்து பிழையாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்த விஜயன் உடனே அந்த அதிகாரியிடம் இது பற்றி தெரிவித்து திருத்தி தர கூறினார். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை. “வார்த்தையை திருத்தி மறு சான்றிதழ் தர வேண்டு மென்றால் அரசு கெசட்டில் நீ அறிவிப்பு வெளியிட வேண் டும்” என்று கூறி விஜயனை அனுப்பி வைத்துவிட்டார். திருத்தப்பட்ட ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக விஜயன் எவ்வளவோ அதிகாரிகளை பார்த்தார். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்த விஷயம் பற்றி விஜயன் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதனால் அவரது பிரச்சினை மாவட்ட கலெக்டர் காதுக்கு எட்டியது. உடனே அவர் மண்டல வரு வாய்த்துறைக்கு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். தவறுதலாக சான்றிதழ் வழங் கிய அந்த கிராம நிர்வாக அதிகாரியை சஸ்பெண்டு செய்தார்.

Posted in Barber, Caste certificate, Castes, Community Certificate, Dog, Hair stylist, Kerala, Kottayam, MBC, Oppression, Salon, SC, ST, Sunagan, Suragan, Tashildar, Village | Leave a Comment »

State of Scheduled Castes & Tribes – Unable to get the Community Certificates

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சாதியப் “பாம்பு’கள்-“கீரி’ப்பட்டிகள்!

முகில்வண்ணன்

“தலித்துகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைவதைச் சாத்தியமாக்கிவிட்டது வாக்குரிமை; ஆனால், அந்த வாக்கு வங்கியால், அவர்களைத் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களுக்குள் நுழைய வைக்க முடியவில்லையே; ஏன்? என்று கேட்டார் சத்யஜித் பட்கர்.

இன்னும் ஒரு கேள்வியும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது;  “ந.ப. எனும் பட்டியல் பழங்குடியினருக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவி உள்பட பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பதவிகளால் அந்தந்த ஊரிலுள்ள பழங்குடியினருக்கு  “சாதிச் சான்றிதழ்கள்”கூட பெற்றுத் தர முடியவில்லையே! ஏன்?”

வெளிச்சத்துக்கு வராத கீரிப்பட்டிகளும், பாப்பாப்பட்டிகளும், நாட்டார்மங்கலங்களும், புற்றுக்குள் பாம்பாகத் தமிழகத்தில் இன்னமும் பல ஊர்களில் உள்ளன. இதோ ஓர் எடுத்துக்காட்டு:

விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கெல்லையில் மலை சூழ்ந்த ஒரு கிராமம்: (தண்டரை எனும் பெயர்கொண்ட பல ஊர்களில் அதுவும் ஒன்று) சுமார் 1000 பேர் உள்ள கிராமத்தில் 23 குடும்பங்களில் 60 வாக்காளர்கள் மட்டும் “இருளர்’ எனும் பட்டியல் பழங்குடியினர். இம்முறை இட ஒதுக்கீட்டுச் சுழற்சியில் தலைவர், ஓர் உறுப்பினர் என அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்க்கச் சென்ற எனக்குப் பல அதிர்ச்சிகள்! 59 ஆண்டுக்கால சுதந்திரத்தில், புறத்தோற்றத்தில் மட்டும் சற்றே மாறி, மனத்தளவில் சற்றும் மாறாத “பழங்கால மக்களை’ அங்கே அடையாளம் காண நேர்ந்தது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில், இங்கும் “கீரி’கள் கட்டப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டு, (சாதிப்) பாம்புகள் சுதந்திரமாய்ப் படமெடுத்தாடி மிரட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஊரிலுள்ள பிற்பட்ட வகுப்பினரில் உள்ள சில இளைஞர்களின் முயற்சியால், நப எனும் “இருளர்’ குடும்பங்கள் 23க்கும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகளும் “”ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம்” ரகம்தான்.

75% மானியத்தில் பசுக்கள், செம்மறியாடுகள் பெற்றுத் தரப்பட்டதாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற “”மான்யம்” பெறும் விஷயங்களுக்கு, அதிகாரிகள் அவசர அவசரமாக “”இவர்கள் இருளர்கள்” எனும் நப பிரிவினர் எனத் தாற்காலிகச் சாதிச் சான்றிதழ்கள் தயார் செய்து (“”பங்கு போடும்”) திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கின்றனர்.

ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளாய், அந்த இனத்தில் சில மாணவர்கள் 10ஆம் வகுப்பும், ஓரிருவர் 12ஆம் வகுப்பும் படித்திருந்தும் “”சாதிச் சான்றிதழ்கள்” வழங்கப்படாததால், மேற்படிப்புக்கோ, வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கோ செல்ல முடியாத நிலை.

விவசாயக் கூலித் தொழிலாளிகளாக, முத்திரை குத்தப்படாத கொத்தடிமைகளாகவும் இன்றுவரை இருக்கும் அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), முதல் கோட்ட வருவாய் அலுவலர் (RDO) வரைப் படியேற நேரமும் இல்லை; படியளக்கப் பணமும் இல்லை; எனவே, சாதிச் சான்றிதழ் பெற முடியவில்லை.

இருளர்களில் ஒரு பெற்றோர் மட்டும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவரமான ஒருவர் மூலம் புகார் மனு அனுப்பினார்.

மனு மீதான நேரடி விசாரணைக்கு ஓர் அதிகாரி வந்தார். மனுதாரரை எலி பிடித்துக் காட்டச் சொன்னார். அவரும் ஓர் எலி வளைக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு பானையால் அதை மூடி, புகைபோட்டு, எலிகள் வெளியேறும்போது பிடித்துக் காட்டினார்.

“”எலி பிடிப்பது சுலபம்; பாம்பைப் பிடித்துக் காட்டு” என்றார். “”பாம்பு நிலையாக ஓரிடத்தில் தங்காது; அதைத் தேடிப்பிடிப்பது கடினம்” என்று கூறிவிட்டார் அந்தப் பழங்குடி.

“”கன்னிமார் சாமி கும்பிடுவீர்களாமே! சாமி ஆடிக்காட்டு” என்றார். அதற்கும் தலை குளித்துவிட்டு, கையில் கற்பூர தீபம் ஏற்றி அவர் “”ஆ.. ஊ..” என ஆடிக்காட்ட, அருகிலிருந்த பெண்கள் பேயாட்டம் ஆட, சாமி ஆடுபவர் அப் பெண்களைச் சாட்டையால் அடிக்க (அதிலும் ஒரு லாவகம் உண்டு) பதறிய அதிகாரி அவர்களை “இருளர்கள்’ (நப) என ஒப்புக்கொண்டு சென்றார்.

போனவர் கோப்பில் இப்படி எழுதி வைத்துள்ளாராம்:

“”இவர்கள் பழக்கவழக்கத்தால் இருளர்கள்தாம். ஆனால் போதிய ஆவணச் சான்றுகள் இல்லை (நில உரிமைப் பத்திரங்களில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்); ஆதாரங்கள் தந்தால், சாதிச் சான்றிதழ் வழங்கலாம்.”

அதன்பின் அவரது “”ஆண்டை” ஆயிரக்கணக்கில் “அன்பளிப்பு’ கொடுத்து ஓரிருவருக்கு மட்டும் “சாதிச் சான்றிதழ்’ பெற்றுத் தந்ததாகவோ, தர இருப்பதாகவோ கேள்வி.

சென்ற ஆண்டு 12ஆம் வகுப்புத் தேறிய ஒரு பழங்குடி மாணவன் உரிய காலத்தில் “சாதிச் சான்றிதழ்’ கிடைக்காததால் இடைநிலை ஆசிரியப் பயிற்சியில் இலவசமாக இடம் கிடைத்தும் சேர முடியவில்லையாம். இந்த ஆண்டாவது கிடைத்தால் ஒருவராவது அரசுப் பணிக்குத் தயாராகலாம்.

வீட்டுக்கும், மாட்டுக்கும் செம்மறி ஆட்டுக்கும் கடன் என்றால், “சாதிச் சான்றிதழ்’ தயாரித்து வரும் அதிகாரிகள் மனிதர்களுக்கு மட்டும் தர மறுக்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர். ஏன்? இதில் “”எவருக்கும் லாபமில்லை – பயனாளிகளைத் தவிர!

விடுதலை என்பது ஒரு வேட்கை; அது அறிவுதாகத்தால்தான் வரும். “”விலங்கை உடைப்பதால் மட்டுமே விடுதலை கிட்டாது; விலங்கு, மனிதனானால் மட்டுமே அது கிட்டும்” என்பார் கேம்ஸ் ஓப்பன் ஹிம்.

மேற்படிப்புக்கான “சாதிச் சான்றிதழ்கள்’ தர மறுத்து, அவர்களது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டு, தலைவர் பதவி போன்ற அலங்காரங்களை மட்டும் அளிப்பது, இன்றைய முதல்வர் பாணியில் சொல்வதென்றால் “புண்ணுக்குப் புனுகு பூசும்’ வேலையல்லவா!

தேர்தலைப் புறக்கணித்தால், அவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகிறோம்.

தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பது, ஆள் கடத்துவது, ஊரைவிட்டுத் துரத்துவது, நின்று வென்ற பின்னும் “கைப்பாவையாய்’ ஆட்டுவிப்பது, ஆட மறுத்தால், “”வைத்தால்தான் பிள்ளையார்; வழித்தெறிந்தால் சாணி” என அவனை உடனே ராஜிநாமா செய்யச் செய்வது; மறுத்தால், மரணப் பரிசளிப்பது என வெறிக் கூத்தாடும் சாதிய நச்சரவங்களை என்ன சொல்லி அழைப்பது?

இக் கொடுமைகளைக் கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள், வாயிருந்தும் ஊமையாக இருக்கும் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் – இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

இப்போது நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப் புற்றுநோய் புரையோடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

“”சமாதான வாழ்வுக்கு எப்போதும் ஓர் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்; அந்த ஆபத்தின் பெயர்தான் சாதி!”என்று எச்சரித்தார் பெரியார்.

அந்தச் சாதி அடுக்குகள் இருக்கும்வரை அடித்தட்டில் உள்ளவர்கள் அழுத்தப்பட்டு, நசுக்கப்படுவது தொடரும்.

சாதிய நோயால் ஏற்பட்ட வீக்க மேடுபள்ளத்தை, மேனியைத் தடவி மந்திரிப்பதால் சமப்படுத்தவோ, சரிசெய்யவோ முடியாது. அதற்குத் தேவை அறுவைச்சிகிச்சை.

கேரளத்து தலித் போராளி “அய்யங்காளி’ ஒருமுறை சொன்னார்: “”எல்லோர் ரத்தமும் சிவப்பு என்பதை, ரத்தம் சிந்தாமல் எப்படி நிரூபிக்க முடியும்?”

சிந்தும் ரத்தம் நோய் வராமல் தடுக்க அல்லது நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கான ரத்தமாக இருக்கட்டும்!

Posted in Castes, Community Certificates, Corruption, Dalits, Irular, Keeripatti, Official, Pappapatti, Research, Scheduled Caste, Scheduled Tribe, Tamil Nadu | Leave a Comment »