Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Carnatic’ Category

Soundaram Ramachandran, Dr. Rajammal Devadas, Sigappi Aachi, Veerammal, Veena Artist Dhanammal, Dr S Dharmambal

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

Thiruvengimalai Saravanan

இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.

இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்

அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித

சங்கடமும் வந்துவிடக்கூடாது.

இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே

கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.

வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.

இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.

இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.

வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.

வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.

வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.

1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.

தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.

1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.

ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..

நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.

அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.

பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.


தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.

சரி, யார் இந்த வீரம்மாள்?

திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்

16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.

வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.

வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.

ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.

வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.

வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.

பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.

அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.

அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.

திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.

பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.

கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.

2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..


செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.

கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?

சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.

சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.

ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.

ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.

குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.

சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.

1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.

அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.

நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.

பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.

கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.

கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.

மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.

அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ

மாமியார் மெச்சியவர்!

மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.

‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’

சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.


பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.

இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.

பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.

இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.

நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.

1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.

‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.

மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.

பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..

நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.


பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.

ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.

அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.

கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.

ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.

ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.

எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.

கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.

நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.

மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.

இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.

இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.

வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.

‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.

அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..


திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.

இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.

நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.

நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.

இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.

திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.

இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.

அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.

ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.

திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.

1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.

எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

நன்றி: பைம்பொழில் மீரானின்

‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.

Posted in Aachi, Achi, artists, Arts, Carnatic, Chettinad, Classical, Devadas, Devdas, Dhanammal, Dharmaambal, Dharmambal, Faces, Females, Ladies, MAM, music, people, Rajammal, Ramasami, Ramasamy, Segappi, Sekappi, Sevappi, She, Sigappi, Sikappi, Sivappi, Thanammal, Tharmambal, Veena, Veenai, Veerammal | Leave a Comment »

Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

“சீசன்’ சிந்தனைகள்

சாருகேசி

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.

கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.

நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.

ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.

கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.

ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.

சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!

இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.

பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.

சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.

இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »

Fr Jegath Gasper Raj & Tamil Mayyam’s December Music Celebrations: Festival of Love

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

அன்பின் திருவிழா!

கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.

அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…

“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.

இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.

“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”

“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.

“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.

திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.

இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.

தமிழ்மகன்

Posted in Andaal, ARR, Arts, Birthday, Bombay Jayashree, Carnatic, Casper, Casperraj, Celebrations, Christ, Christian, Christianity, Christmas, Classical, Culture, December, Faith, Folk, Fr Jegath Gasper Raj, Gasper, Gasper Raj, Gasperraj, Heritage, Homeless, Jayashree, Jayashri, Jayasri, Jegath, Jegath Gasper Raj, Jesus, Jeyashree, Jeyashri, Kanimoli, Kanimozhi, Kanimozi, Labor, Labour, Labourers, music, Orphans, Performance, Rahman, Rehman, Religion, Sangam, Sangamam, Santa, Shows, Stage, Thiruppaavai, Thiruppavai, Thiruvembavai, Thiruvempavai, Trees, workers, Xmas | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி

“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.

சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.

கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »

Thavil performer G Muthukumarasamy passes away – Carnatic Musician: Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

தவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்

கும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.

சிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

நாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.

பின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.

திருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.

Posted in Anjali, Artiste, Artistes, artists, Arts, Carnatic, G Muthukumarasami, G Muthukumarasamy, G Muthukumaraswami, G Muthukumaraswamy, Isai, music, Musician, Muthukumarasaami, Muthukumarasaamy, Muthukumarasami, Muthukumarasamy, Muthukumaraswami, Muthukumaraswamy, Performer, Performers, Shows, Stage, Thavil | 3 Comments »

KV Narayanasamy – Carnatic music legends: Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

“அரியக்குடி’யின் அரிய “சிஷ்யதிலகம்’

நீலம்

“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.

பிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

கலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.

பாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.

அவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.

முன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.

மற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.

இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.

அது என்ன யோசனை? ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.

இதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.

தமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.

இத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு!. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்!” என்று தைரியமூட்டினார்.

அவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்!” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

எப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்!” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.

அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.

“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.

ஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.

வயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா?

கே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.

குறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா!” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.

கே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.

வாழ்க கே.வி.என். புகழ்.

(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)

Posted in Ariyakkudi, Audio, Biosketch, Carnatic, Faces, Legends, music, names, Naraianasami, Naraianasamy, Naraianaswami, Naraianaswamy, Naranaswami, Naranaswamy, Narayanasami, Narayanasamy, Narayanaswami, Narayanaswamy, Palacad, Palacaud, Palacode, people, Performer, Stage | Leave a Comment »

Celebrated Hindustani classical singer Prabha Attre’s 75th birthday celebrations

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

வாழும்போதே வாழ்த்துங்கள்!

ஞாயிறு மாலை. மழைச் சாரல் வேறு.

பாராட்டுப் பெறுபவருக்கோ 75 வயது. அதுவும் கர்நாடக இசைப் பாடகி கூட அல்ல. ஹிந்துஸ்தானி இசைப் பாடகி! -இத்தனை இருந்தும் பாரதிய வித்யா பவன் மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்து இருந் தது. இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் ஸ்ரீமதி பிரபா ஆத்ரே.
ரேடியோவிலும், மும்பை மகளிர் கல்லூரியி லும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். குடியரசுத் தலைவரின் பத்ம பூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது என்று ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிரபா ஆத்ரே.

வழக்கறிஞர் கே.சுமதி, இலக்கியத்தில் ஆர் வமுள்ளவர், நாவல் எழுதியிருக்கிறார் என்று தெரியுமே தவிர, ஹிந்துஸ்தானி இசையில் இவ்வளவு ஈடுபாடுள்ளவர் என்று இந்த நிகழ்ச்சி மூலம்தான் தெரிந்தது. “”இந்த வயதி லும் கூட இவர் பாடுகிறதைக் கேட்டால் மெய் மறந்து போய் விடுவோம். இவரை நீங்கள் ஒரு விழா ஏற்பாடு செய்து பாராட்ட வேண் டும்” என்று கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முர ளியைக் கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே பண்டிட் ஜஸ்ராஜ், பண்டிட் ஹரிபிரசாத் சௌ ராசியா போன்ற ஹிந்துஸ்தானி இசைமேதை களை விழா எடுத்துப் பாராட்டியிருப்பவர் முரளி; உடனே இசைந்தார்.

கௌரி ராம்நாராயணன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் சுமதி விரிவான வரவேற்புரை நிகழ்த்த, பாடகி அருணா சாய்ராம் பிரபா ஆத்ரேயை வாழ்த் திப் பேசினார். அதற்குப் பிறகு வேத பண்டிதர் கள் சமஸ்கிருதத்தில் ஒவ்வொரு தெய்வத்தை யும் வேண்டும் சுலோகங்களைச் சொல்லி அருள் வேண்ட, ஓதுவார்கள் தமிழில் அதே பணியைச் செய்தார்கள்.

(ஓதுவாரின் குரலில்தான் என்ன கம்பீ ரம், என்ன இனிமை! அவர் பாடி முடிக் கும் போதெல்லாம் கைத்தட்டல் எழுந்த தில் வியப்பே இல்லை.) ஒவ்வொரு கடவுளையும் வேண்டி, வாழ்த்துகளை அவருக்குத் தெரிவிக்கும் போது, வெள்ளியில் வேல், திரிசூலம், சடாரி என்று பரிசாகவும் வழங்கினார் கள். பொன்னாடைகள் போர்த்தி, சரசு வதி தேவியின் படத்தையும் அன்பளிப் பாகக் கொடுத்தார் முரளி.

இத்தனை நடக்கும் போதும் ரசிகர்க ளிடமிருந்து எந்தச் சிறு சலசலப்பும் இல்லை. பிரபா ஆத்ரேக்குச் செய்யப்படும் விதவிதமான மரியாதைகளையும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்தார்கள்.

“”இவர் சரஸ்வதியின் அவதாரம் போன்ற வர். அதனால் வெண்ணிறப் புடவையை அன் பளிப்பாகக் கொடுக்கிறோம்” என்றார் அருணா சாய்ராம்.

அப்புறம் தொடங்கியது பிரபா ஆத்ரேயின் இசை நிகழ்ச்சி.

இந்த எழுபத்தைந்து வயதில் பலருக்குக் குரல் இனிமை போய், கரகரப்பாக மாறி இருக் கும். இனிமை எங்கே என்று தேட வேண்டியி ருக்கும். பலருக்கு இந்த வயதில் குரலில் நடுக் கம் தெரியும். நிலையாக இராது.

பிரபா ஆத்ரேக்கு இந்தப் பிரச்னைகள் எது வுமே இருக்கவில்லை. குரலில் இனிமைக்குக் குறைவு இருக்கவில்லை. குரல் நடுங்கவே இல்லை. குரலில் ஒரு பிசிறு கூடத் தட்ட வில்லை.

ஏழரை மணி ஆகியும் கூட எழுந்து போகாத ரசிகர்கள், அவர் பாட்டைக் கேட்கக் காத்திருந்தது வீண் போகவில்லை.

பெஹாக் ராகத்தில் மெதுவாகவும், பிறகு வேக கதியிலும் அவர் பாடியதைக் கேட்ட போது, 75 வயதுக்காரர் பாடும் பாட்டா இது என்று வியக்க வைத்தது.

அடுத்ததாக, அவர் கலாவதி ராகத்தையும் இதே முறையில் கையாண்ட போது, அத்தனை ரசிகர்களும் கைதட்டி மகிழ்ந்தார்கள். வந்து அமர்ந்து கேட்டவர்கள் “கொடுத்து வைத்தவர் கள்’ என்பது மிகையில்லாத வார்த்தை.

நாம் அரியக்குடி பாணி, ஜி.என்.பி. பாணி என்பது போல, வடக்கே “கரானா’ என்று பாணியைக் குறிப்பிடுவார்கள். இவர் கிரானா கரானாவைச் சேர்ந்தவர். குரு-சிஷ்ய பரம் பரை முறையில் காலம் சென்ற சுரேஷ்பாபு மோனே என்பவரிடமும், பிறகு, புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகியும் தன் சகோதரியு மான, பத்மபூஷன் விருது பெற்ற ஹிராபாய் பரோடேக்கரிடமும் பயிற்சி பெற்றிருக்கிறார் பிரபா ஆத்ரே.

இவர் இசைக் குறித்து எழுதிய நூல்கள் நிறைய. முதல் நூலான “ஸ்வரமயி’ மகாராஷ்டிர அரசின் பரிசைப் பெற்றது. இரண்டாவது நூல் “சுஸ்வராளி’ மத்திய பிரதேச அரசால் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு பல பாராட்டுகளைக் குவித்தது.
ஒலி நாடாக்களும், குறுந்தகடுக ளும் இவர் இசையை உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எடுத்துச் சென்றிருக்கின்றன.

ஸ்வரமயி அமைப்பாளர் பாரதி, வழக்கறிஞர் சுமதி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் முயற்சி யால் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடந் திராவிட்டால், ஒரு மகத்தான ஹிந்துஸ்தானி இசை மேதையான பிரபா ஆத்ரேயின் திறமைப் பற்றி இங்கே பலரும் அறியாமலே போயி ருப்போம்.

சாருகேசி 

Posted in 75, aathre, aatre, Artist, Birthday, Carnatic, Celebrations, Faces, Guru, Hindustani, music, Musician, Padmabhushan, Padmabushan, Pathmabhushan, Pathmabushan, people, praba aathre, praba aatre, prabha aathre, prabha aatre, Professor, Singer, Songs, Students, svaramyi, swaramyi, Swarangini, Swaranjini, Teachers | Leave a Comment »

Dinamani Kathir Weekly Variety: A Performance before President Kalam

Posted by Snapjudge மேல் மே 1, 2007

மேடை: கலாமைத் தலையாட்ட வைத்த இஞ்சிக்குடி!

பா. கிருஷ்ணன்

கடந்த ஏப்ரல் முதல் தேதி. தில்லியில் சார்க் உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தில்லி வந்திருந்த சார்க் தலைவர்கள் குடியரசுத் தலைவரையும் பிரதமர், அமைச்சர்களையும் மாறி மாறிச் சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையும் பரபரப்பாக இருந்தது.

அவரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வந்த பலர் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் பெற்றவர்களும் காத்திருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தில்லி உத்தர சுவாமிமலை ஆலயத்தில் பங்குனி உத்தரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை ஒட்டி மார்ச் 31-ம் தேதி இரவு முருகன் திருவீதியுலாவிலும், மறுநாள் ஏப்ரல் 1-ம் தேதி காலை அபிஷேகத்தின்போதும் நாகஸ்வர இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த இஞ்சிக்குடி இ.பி. கணேசனுக்கு ஓர் அதிர்ச்சி, அதே தினம் மாலையில் காத்திருந்தது.

பங்குனி உத்தரத் திருவிழாவின் நிறைவில் ஏப்ரல் 1-ம் தேதி மாலையில் அவரது கச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி சுவாமிநாதன் கச்சேரி முடிந்ததும் அவரிடம் கேட்டது, ஆயிரம் தவில்களை வாசிப்பது போன்ற இனிய அதிர்ச்சியை அளித்தது.

“”நீங்க நாளைக்கு குடியரசுத் தலைவர் முன்னால் நாகஸ்வரம் வாசிப்பீர்களா? அதற்கு ஏற்பாடு செய்கிறோம்” இதுதான் சுவாமிநாதன் கேட்ட கேள்வி.

மறுநாள் அவரது செல்போனில் அழைப்பு வந்தது, மாலை 6 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கச்சேரி நடத்தவேண்டும் என்று.

மாலை 5 மணிக்கே நாகஸ்வரம், தவில், சுருதிப் பெட்டி சகிதம் இ.பி. கணேசன் பார்ட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஜர் ஆனது.

அங்கு, மிக முக்கியமான நபர்கள் மட்டுமே பங்கு பெறும் சிறிய அரங்கு உள்ளது. அங்கே கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 5 மணியளவில் 60 பேர் அங்கே நிறைந்துவிட்டனர்.

ஐந்திலிருந்து ஆறுமணி வரை அரங்கில் பதிவுசெய்யப்பட்ட மெலிதான இசை அரங்கில் தவழ்ந்து கொண்டிருந்தது.

அதேநேரத்தில் தனது அலுவலகத்தில் விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டார்:

“”எங்கள் ஊரில் மங்கலமான நிகழ்ச்சிகளில் நாகஸ்வரம் என்ற அற்புதமான கருவியை இசைப்பது உண்டு. அதன் இசையைக் கேட்க விருப்பமா?” என்றார்.

உற்சாகத்துடன் அவர்கள் தலையை அசைக்க, சரியாக மாலை 6 மணிக்கு விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் சகிதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அரங்குக்குள் நுழைந்தார் கலாம்.

முதல் வரிசையில் விசேஷமாக அமைக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து, கச்சேரியைத் தாளம் போட்டு, தலை அசைத்து ரசித்தார். நாகஸ்வர இசைக் கச்சேரிக்கு 20 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், கலாம் ரசித்ததோ சுமார் 50 நிமிஷம்.

முதலில் ஹம்சத்வனியில் “ரகுநாயகா’ என்ற தியாகையரின் கீர்த்தனை. அடுத்து, பஞ்சரத்தின கீர்த்தனையில் இடம்பெற்ற “எந்தரோமஹானுபாவுலு’; மூன்றாவதாக, பைரவி ஆலாபனையுடன் கூடிய ராகமாலிகை என்று முழு நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசித்தார் கலாம்.

அத்துடன் நிற்கவில்லை. நிகழ்ச்சியை வழங்கிய இஞ்சிக்குடி கணேசனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் மரியாதை செய்தபோது, “”மிகக் குறுகிய நேரத்தில் உங்களது இசைத் திறமையை அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்களது தந்தை பிச்சக்கண்ணுப் பிள்ளையின் வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். அதே கலை உங்களிடமும் உள்ளது, பாராட்டுகள்” என்றார் அப்துல் கலாம்.

ஓர் உண்மையான கலைஞரால்தானே இன்னொரு உண்மையான கலைஞரின் திறமையை முழுமையாகப் பாராட்டமுடியும்! அப்துல் கலாம் விஞ்ஞானி, கவிஞர் என்பது மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த வீணை இசைக் கலைஞரும் ஆவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?!

Posted in Carnatic, Delhi, EB Ganesan, EP Ganesan, Gadam, Injikkudi, Kadam, Kalam, Kathir, music, Nadhasvaram, Nadhaswaram, Nathaswaram, Pancharathna, Thavil | Leave a Comment »

‘Voice of America’ Bala – Interview in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

இசை: தமிழின் கண்களில் தியாகராஜர் தரிசனம்!

ரவிக்குமார்

கலாச்சாரப் பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் “வாய்ஸ் ஆப் அமெரிக்கா’வுக்காக, அமெரிக்காவுக்கு வந்து தங்கியிருந்த பலநாட்டவரும் ஊருக்கு மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள். மூட்டைகட்டிய கூட்டத்தில் பாலாவும் அடக்கம் தான். ஆனால் கட்டிய மூட்டையை உடனே மீண்டும் பிரிக்கவேண்டியிருக்கும் என்று அவர் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. “”நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்…உங்களின் சேவை..அமெரிக்க வானொலிக்குத் தேவை..” என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ஒருவருக்கு குடியுரிமை கிடைப்பதற்கு அவர் தங்கியிருக்கும் மாகாணத் தலைவர் பரிந்துரை கடிதம் வழங்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏகப்பட்ட சட்ட, திட்டங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நடைமுறைகளை எல்லாம் ஒரே நாளில் நடத்தி, உச்சகட்டமாக சட்டமன்றத்தில் அந்தத் தமிழரை அமெரிக்க பிரஜையாக்க மசோதாவே இயற்றப்பட்டு, எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் அந்தத் தமிழரை அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவராக அறிவித்தனர். அந்தத் தமிழரின் பெயர் டி.என். பாலா. அவரை அமெரிக்காவிலேயே தங்கவேண்டும் என்று விரும்பியவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடி!

ஏறக்குறைய 29 வருடங்கள் அமெரிக்காவின் ஏபிசி நெட்வொர்க்கில் நிகழ்ச்சி இயக்குனராக, தயாரிப்பாளராக பல பொறுப்புகளை வகித்த டி.என். பாலாவுக்கு தற்போது வயது 80. இவருக்கு வாய்ப்பாட்டும் அத்துப்படி. மதுரை மணி ஐயரின் சீடர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்நாடக இசைத்துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கெüரவிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum்) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் 2004-ம் ஆண்டு இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர். தமிழர் டி.என். பாலாதான். இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்திருப்பது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் “முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான்.

இந்தப் பாடல்களின் தொகுப்பு நூலை சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வர் பக்கிரிசாமி பாரதி நூலை வெளியிட்டுப் பேசும்போது, “”முருக பஞ்சரத்னத்தில் வரும், “முருகானந்தஸôகரா திருமாமயூரா க்ருபாகரா…’ என்ற பாடலை மாணவிகள் வகுப்பில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புறா ஒன்று எங்கோ அடிப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வகுப்பிற்குள் வந்து விழுந்தது. அதற்கு மாணவிகள் சிறிது தண்ணீர் தந்ததோடு சரி. முருகனின் அனுக்ரகம் இருந்தால் அது பிழைத்துக் கொள்ளும் என்று இருந்துவிட்டனர். இரண்டொரு நாளில் அந்த புறா பழைய நிலைமைக்கு திரும்பியதோடு, ஒவ்வொரு மாணவியையும் ஆசிர்வாதம் செய்வது போல, அவர்களின் அருகே பறந்தபடியும், அமர்ந்தபடியும் சிறிது நேரம் செலவழித்துப் பின் பறந்து சென்றது. இது ஏதோ புராண காலச் சம்பவம் அல்ல. எங்கள் கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம். முருக பஞ்சரத்னத்தில் ஒலிக்கும் வார்த்தைகளின் வலிமைதான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார்.

“”தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு தியாகராஜர் அன்னியமாகத் தெரியாமல், அவர்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான் இதைச் செய்திருக்கிறேன். தமிழின் கண்கொண்டு தியாகராஜ சுவாமிகளைப் பார்க்கும் முயற்சிதான் இது. தமிழையும் முருகனையும்

பிரிக்கமுடியாது அல்லவா? அதனால்தான், என் அப்பனைப் பாடியிருக்கிறேன். இதை யாராவது முறையாக இசை வடிவத்தில் கொண்டு வருவதாக இருந்தாலும் அவர்களுக்கு இதன் உரிமையைத் தருவதற்கு தயாராக உள்ளேன்.” என்றார் கண்கள் பனிக்க டி.என். பாலா.

Posted in ABC, America, Bala, Biography, Biosketch, Broadcast, Carnatic, Dinamani, India, Interview, JFK, John F Kennedy, Kathir, Kennedy, Mani Iyer, Media, MSM, music, network, NPR, NRI, people, Radio, TN Bala, TV, US, USA, VOA, Voice of America | Leave a Comment »

Chennai Sangamam: Tamil Maiyyam Festival – Celebration of Thamizh Heritage, Culture

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 28, 2007

சென்னை சங்கமம் – ‘நம்ம தெருவிழா’
கேடிஸ்ரீ

‘சென்னை சங்கமம்’ என்ற பெயரில் ஒருவாரகால கலை நிகழ்ச்சிகள் சென்னையில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தது. தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா – பண்பாட்டுத்துறை இணைந்து இவ்விழாவை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தியது.

மக்கள் மறந்த நம் பாரம்பரிய கலைகளை – மக்களிடம் இருந்து பிரிந்து போன கலைகளை மீண்டும் மக்களிடமே கொண்டு சேர்க்கின்ற ஒர் அரிய முயற்சியே ‘சென்னை சங்கமம்’.

முன்னதாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் தொடக்கவிழா சென்னை ஐஐடி திறந்தவெளி அரங்கில் கடந்த 20ம் தேதி இனிதாக தொடங்கியது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இவ்விழாவை துவக்கி வைத்தார். அன்றைய விழாவில் கிராமிய கலை, பாடல்கள், நடனங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதலாக சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான கனிமொழி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.

”எங்களுடைய இந்த சங்கே முழங்கு சென்னை சங்கமத்தின் துவக்கம்.. தமிழ்மொழியின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. இது கிராமிய, கலை வடிவங்களை உள்ளடக்கியது. கிராமியக் கலைஞர்களின் பெயர் பாட இந்நிகழ்ச்சி ஒரு வெளிப்பாடாக அமையும். உலகத்தை மறந்து யாரும் கை தட்டுகிறார்களா என்பதைக்கூட அறியாமல் கலையையும், தங்கள் படைப்புக்களையும் உயிராக மதிப்பவர்களின் சங்கமம் இது” என்றார்.

விழாவை தொடக்கி வைத்து பேசிய முதல்வர், ” நமது வழித்தோன்றல்கள் நம்மை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள்..” என்று விழாவின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வரின் மகளுமான கனிமொழியை பாராட்டி பேசியது மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான அரங்கினை வடிவமைத்த ‘தோட்டா’தரணியையும் பாராட்டினார். மேலும் பழந்தமிழை, பண்பாட்டை, வரலாறை இவ்விழாவின் மூலம் மீண்டும் மக்கள் பார்க்கலாம். இதுமாதிரியான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறும் போது மக்கள் அதை வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

விழாவிற்கு வந்தவர்களுக்கு இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர் கஸ்பர்ராஜ் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவின் ஓர் அங்கமாக ‘நெய்தல் சங்கமம்’ திருவிழா திடல் திறப்புவிழாவும் அன்று நடைபெற்றது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற வெலிங்டன் சீமாட்டி திடலில் ‘நெய்தல் சங்கமம்’ வளாகம் அமைக்கப்பட்டது. இவ்வாளகத்தில் கிராமதிருவிழாவில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இவ்வாளகத்தில் கைவிணை பொருட்கள் கண்காட்சி, டூரிங் டாக்கீஸ் எனப்படும் கிராம சினிமா கொட்டகை அமைக்கப்பட்டு அதில் சிறு படங்கள் காட்டப்பட்டன. இதுதவிர பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஆகியவை நடைப்பெற்றன.

‘நெய்தல் சங்கமம்’ வாளகத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் பிரபல கர்நாடக இசைபாடகி சுதா ரகுநாதன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சென்னையின் முக்கிய இடங்களான சென்னை சென்டல் ரயில் நிலையம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை ஏக்மோர் ரயில் நிலையம், சென்னையில் உள்ள பிரபல பூங்காக்கள், ஓட்டல்கள், பள்ளிக்கூடங்கள் என்று சுமார் 60 இடங்களில் இத்தகைய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது முற்றிலும் புதுமையாக இருந்தது.

தினமும் காலை 6 மணிக்கே நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். காலை 6 மணிக்கே சென்னை பூங்காக்கள் கர்நாடக இசையினால் நிரம்பி வழிந்தது என்றால் அதுமிகையல்ல. பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ, ஓ.எஸ். அருண், தஞ்சை சுப்ரமணியம், அருணா சாய்ராம் என்று பிரபலங்களின் இசைவெள்ளத்தில் மக்கள் நீராடினார்கள்.

காலை 10 மணிக்கு மேல் சென்னை மாநகர பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்களை பாடிய வண்ணமும், வாத்தியங்களை வாசித்த வண்ணமும் ஊர்வலமாக வந்த காட்சிகள் அற்புதம். கிராமத்து கலைகள் அத்துணையும் சென்னைக்கே வந்துவிட்டது போல் இருந்தது அந்தக்காட்சிகள்.

மாலை ஆறு மணிக்கு வெலிங்டன் சீமாட்டி திடலில் உள்ள ‘நெய்தல் சங்கமத்தில்’ தப்பட்டா கலைக்குழுவினர், கனியன் கூத்து குழவினரின் கலைநிகழ்ச்சிகளும், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இலக்கிய ஆர்வலர்களுக்காக சென்னை அண்ணாசாலை அருகில் உள்ள பிலிம்சேம்பர் அரங்கில் ‘தமிழ் சங்கமம்’ என்ற ஓர் இலக்கிய நிகழ்ச்சி தினமும் நடைப்பெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள், கதாசிரியர்கள், விமர்சனர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்றது சிறப்பு ஆகும்.

சுமார் 1400க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மேல் ‘சென்னை சங்கமம்’ விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இனி ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்கள்.

இவ்விழா பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விழா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, ” இனி வரும் காலங்களில் சென்னை சங்கமத்தில் பங்குபெறும் சிறந்த 30 கலைஞர்களை தேர்வு செய்து சென்னையில் நிரந்தரமாக பாரம்பரிய கலைகளை விளக்கும் ஒரு மன்றத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விழாவை மக்களே தங்கள் இல்ல விழாவாக மாற்றிக் கொண்டாடுகின்ற வகையில் நாங்கள் வழங்க இருக்கிறோம்..” என்றார்.

அசோக் லைலைண்ட், ரிலையன்ஸ், டிவிஎச், நல்லி, ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் அண்ட் சார்ட்டபிள் டிரஸ்ட், சரவணா ஸ்டோர், போத்தீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்கினார்கள்.


 

 

பாரதியின் புதுமைப் பெண்ணும் பட்டிமன்றப் பேச்சாளர்களும்

– ந. கவிதா

தமிழ்நாடு பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறையும் தமிழ் மையமும் இணைந்து நடத்திய ‘சென்னை சங்கமம்’ கலாச்சாரத் திருவிழா 20.02.07 முதல் 26.02.07 வரை நடைபெற்றது. எல்லாத் தரப்புப் பார்வையாளர்களுக்குமான விழாவாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

கவிஞர் கனிமொழியும் அருட்தந்தை கஸ்பர் ராஜும் இத்திருவிழாவை ஒருங்கிணைத்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலைஞர்கள் பங்கேற்றார்கள். ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், கட்டைக்கால் கூத்து, நையாண்டி மேளம், ஜிம்ளா காவடி ஆட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் என்று பல்வேறு கிராமியக் கலைகள், கர்நாடக இசை, பரத நாட்டியம், மேற்கத்திய இசை, நாடகங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்குகள் என்று இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சென்னை சங்கமத்தில் அரங்கேறின.

அடையாறு ஐ.ஐ.டி. வாளகத்தில் மிகப் பிரம்மாண்டமான இந்நிகழ்வின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் மு. கருணாநிதி தலைமையேற்க, சங்கத் தமிழிலிருந்து நவீனத் தமிழ் வரையிலான கவிதைகளை ‘சங்கே முழங்கு’ என்ற நடன நிகழ்ச்சியாகத் தந்தார்கள்.

சென்னை சங்கம நிகழ்ச்சிகள் சென்னையின் பல்வேறு பூங்காக்களிலும் கடற்கரையிலும் அரங்குகளிலும் நடைபெற்றன. கிராமிய நிகழ்த்துகலைகளில் பெண் கலைஞர்களின் பங்கும் மிகக் கணிசமானதாக இருந்தது. தப்பாட்டத்திலும் பெண்கள் தங்கள் தனி முத்திரையைப் பதித்தார்கள். தப்பாட்டம் ஒரு காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்தது நினைவுக்கு வருகிறது. மறக்கப்பட்டுவிட்ட நமது பாரம்பரியக் கலைகள் பலவற்றை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டுவந்த ஒருங்கிணைப்பாளர்களும் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஃபிலிம் சேம்பரில் கவியரங்கங்களும் வழக்காடு மன்றங்களும் நாடக அரங்கேற்றங்களும் நடந்தன. 21.02.07 அன்று ‘பாரதி கண்ட புதுமைப் பெண் கனவா நனவா?’ என்ற தலைப்பில் சாரதா நம்பியாரூரன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘கனவே’ என்ற அணியில் மூவரும் ‘நனவே’ என்ற அணியில் மூவரும் வாதித்தனர்.

‘கனவே’ அணியில் பேசிய பர்வீன் சுல்தானா, பெண் எதிர்கொள்ளும் நிகழ்காலப் பிரச்சினைகளையும் இனி வரும் சவால்களையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டினார்.

பிடிக்காததைச் செய்யாமலிருப்பது கூடச் சுதந்திரம்தான். தனக்குப் பிடிக்காவிட்டாலும் கணவனுக்காகக் கத்தரிக்காய்க் குழம்பு செய்வது ஒரு வகையில் சுதந்திரத்தை இழப்பதுதானே என்று ஒரு பேச்சாளர் வாதித்தது சுவையாக இருந்தது. கத்தரிக்காய்க் குழம்பிற்கும் பெண் சுதந்திரத்திற்கும் முடிச்சுப் போடப் பட்டிமன்றப் பேச்சாளர்களால்தான் முடியும்.

பாரதி கண்ட புதுமைப் பெண் கனவுதான் என்பதைச் சொல்லப் பெண் சிசுக் கொலை, வரதட்சணை, பெண் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பாரபட்சம், பெண்மீதான ஒழுக்கத் திணிப்புகள் ஆகியவை மட்டுமே போதும் என்பது இந்த அணியினரின் வாதமாக இருந்தது.

புதுமைப் பெண் பற்றிய கனவு நனவாகத்தான் இருக்கிறது என்ற அணியினர், ஏழு பெண்கள் இன்று மேடையேறிச் சுதந்திரமாகக் கருத்துக்களை முன்வைததுக்கொண்டிருக்கிறோமே, இது பாரதி சொன்ன பேச்சு சுதந்திரமன்றி வேறென்ன என்ற கேள்வியோடு தங்கள் வாதத்தைத் தொடங்கினார்கள். அந்த ஏழு பேரின் சமூக-பொருளாதாரப் பின்னணி பற்றிய அலசல் பெண் சுதந்திரத்தின் நன்மை கருதித் தவிர்க்கப்பட்டது.

சானியா மிர்சாவிலிருந்து கிரண் பேடி வரை எத்தனையோ பெண் சாதனையாளர்களைச் சுட்டிக்காட்டி பாரதி கண்ட கனவு நனவாகித்தான் இருக்கிறது என்று இந்த அணியினர் பேசினார்கள். எங்கோ நடைபெறும் சில கொடுமைகளைச் கொண்டு மொத்தமாகப் பெண்களின் நிலை இதுதான் என்று சொல்ல முடியாது என்பது ‘நனவே’ அணியினரின் கருத்து.

ஆனால் சமூகத்தில் விதிவிலக்குகளாகச் சாதனை புரியும் கல்பனா சாவ்லா போன்றவர்களை மட்டுமே கொண்டு பெண் சமூகம் முழுவதும் சாதனையாளர்கள் நிரம்பியிருப்பதாகச் சொல்ல முடியுமா என்ற கேள்வியைக் ‘கனவே’ அணியினர் முன்வைத்தார்கள்.

நடுவரின் தீர்ப்பு சமரசமாக் இருந்தது. பாரதி கண்ட கனவு நனவாகிக்கொண்டிருக்கிறது; பெண்கள் புதுமைப் பெண்களாக முன்னேற இன்றும் கடக்க வேண்டிய தூரமும் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் நிறைய இருக்கின்றன; அந்த இலக்கை அடையும் முயற்சி இன்றைய பெண்களுக்குத் தேவை என்று தீர்ப்பளித்தார் சாரதா நம்பியாரூரன்.

ஒரு பட்டிமன்றத்தில் பொழுதுபோக்கிற்காகவும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கவும் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் இந்தப் பட்டிமன்றத்திலும் இருந்தது. எத்தனைதான் ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயமாக இருந்தாலும் கூட அதை வெகு சுலபமாகப் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்கான விஷயமாக மாற்றிவிடும் நிலை இந்த மன்றங்களில் நிகழ்வதுண்டு. இந்த நிகழ்விலும் அது இருந்தது.

இருந்தாலும் வெகுஜனத் தளத்தில் இப்படிப்பட்ட பட்டிமன்றங்கள் வெறும் பொழுதுபோக்கிற்கான அம்சங்களாக மட்டுமே மாறிவரும் சூழலில், இந்த மன்றம் அதிலிருந்து சற்றே விலகி யதார்த்த வாழ்வில் பெண் எதிர்கொள்ளும் சிக்கலையும் சவாலையும் பகிர்ந்துகொள்ளும் விதமாக அமைந்தது சற்றே நிறைவைத் தருகிறது.
படங்கள்: சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டது ஏன்?: கருணாநிதி விளக்கம்

சென்னை, மார்ச் 7: அரசின் கொள்கை அறிவிப்புப்படிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வரின் மகள் கனிமொழி ஒருங்கிணைப்பாளராக உள்ள தமிழ் மையம் சார்பில் நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு அரசு நிதி உதவி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்காக தனி அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இது குறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள விளக்கம்: சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு வழங்கியது போன்ற உதவியை மற்ற அமைப்புகளுக்கும் அரசு வழங்குமா இதற்கு முன்பு இதுபோல் வழங்கியதற்கு முன்மாதிரி உண்டா? என்று கேட்கிறார்கள். இதற்கான விளக்கத்தை சுற்றுலாதுறை செயலாளர் இறையன்பு அளித்துள்ளார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று ரூ. 27.17 லட்சத்துக்கு சுற்றுலா துறை விளம்பரம் செய்தது. இதுதவிர விளம்பர பலகைகள் வைக்க ரூ. 80 ஆயிரம் செலவு செய்துள்ளது. தமிழ் மையம் இந்நிகழ்ச்சியை நடத்தப்போவதாக தெரிவித்து, அதற்கு அரசின் அங்கீகாரத்தை கோரியது. அரசும் அனுமதித்தது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு சுற்றுலா துறையின் கொள்கை குறிப்பில் கலை நிகழ்ச்சிகள் தனியார் பங்கேற்புடன் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிதான் இந்த நிகழ்ச்சிக்கு உதவி செய்யப்பட்டது. தமிழ் மையத்துக்கு அரசு நிதி வழங்கவில்லை. ஒருங்கிணைப்பு பணிகளுக்கு தான் உதவியது. ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு தனியார் அமைப்புகளுக்கு இதுபோன்று அரசு உதவிய நேர்வுகள் உள்ளன.

திருவையாறு இசை நிகழ்ச்சிக்கு நிதியுதவி, சேலம் ஜெயலட்சுமி கலை பண்பாட்டுக் கழகம் அமைப்பதற்கான நிதியுதவி, குன்னக்குடி வைத்தியநாதனின் அமைப்பான ராக ஆராய்ச்சி மையம் நடத்தும் நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம், சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்கு ரூ. 98 ஆயிரம் என பல நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி வழங்கி வருகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Kalki 11.03.2007

கல்கி – சென்னை சங்கமம்: கலை விழாவா? கழக விழாவா??

ஒரு புறம் பாராட்டு, மறுபடியும் முணுமுணுப்பு. ‘இது கலை
விழா, இல்லையில்லை… இதுகனிமொழி விழா’ என்ற வாதங்கள். கலந்துகொள்ள அழைக்கப்படாதவர்களின் வருத்தம் அழைக்கப்பட்டும் கலந்து கொள்ளாதவர்களின் கோபம் இப்படித்தான்
முடிந்திருக்கிறது சென்னை சங்கமம் விழா.

இதுபற்றி மக்கள் என்ன
நினைக்கிறார்கள்?

பாலாஜி பிரசாத் (திரைப்பட இயக்குநர்): நம்ம பண்பாட்டை கலாசாரத்தையட்டி நடைபெற்ற கலைவிழாக்கள் ரொம்ப அருமையா இருந்திச்சு. எல்லா ஊரிலிருந்தும், அடுத்த
மாநிலத்திலிருந்துகூட இந்த நிகழ்ச்சில கலந்துகிட்ட பார்க்கிறப்ப சந்தோஷமா இருந்திச்சு. நம்மோட அடுத்த தலைமுறைக்கு நம்முடைய பழமையின் அடையாளங்களை அறிமுகம் இது! சென்னை நகரத்துக்குள், தெருவுக்குள், பூங்காவுக்குள் கிராமம் அருமையான கான்செப்ட்.

ஸ்ரீ தங்கலட்சுமி பி.காம். (எஸ்.ஐ.ஜி. கல்லூரி): ஸ்கூல், காலேஜ்
விழாக்களில் பார்க்குற டான்ஸ் தவிர வேறெதுவும் எங்களுக்குத்
தெரியாது. ஆனா இந்த சென்னை சங்கமம் மூலமா கிராமியக் கலைஞரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கான்று மலைப்பா இருக்கு’’

இது தி.மு.க. விழாவா

யார் பண்ணா என்ன பாஸ்? செய்யுற விஷயம் நல்லா இருக்கிறப்ப பாராட்ட வேண்டியதுதானே! இன்னும் கொஞ்சம் நாள்
எடுத்திருக்கலாம். போதுமான விளம்பரம் இல்லை. அதனால் குறையாகத் தெரியுது.

ஜலதா … (குடும்பத் தலைவி) : சென்னைக்கு வந்து இருபத்தைந்து வருஷமாச்சு எங்க ஊர்ல சின்ன வயசில கோயில் திருவிழாக்களில் இது மாதிரி கலை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடக்கும். அந்த சந்தோஷம் தனி. அன்னைக்கு அசோக் நகர் பார்க்குக்கு பேரக்குழந்தைகளை அழைச்சுகிட்டுப் போய்ட்டு வந்தேன. பசங்க அதைப் பார்த்துட்டு வந்து அடிச்ச லூட்டி இருக்கே! அப்பப்பா… சென்னைக் குழந்தைகளுக்கு இந்த விழா ரொம்ப அவசியம்.

பி.ராஜ்மோகன் : வருடா வருடம் இது நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற விழாக்கள் கொண்டாடுவதோடு இல்லாமல் ‘கிராமியக் கலைகளை’ பள்ளி மாணவர்களிடம் நிலைநிறுத்த வேண்டும்.

கே.எஸ்.கோபி: இயந்திர மயமாகிவிட்ட சென்னை போன்ற நகரங்களில் தொலைக்காட்சி மட்டுந்தான்
பொழுதுபோக்காகிவிட்டது. ஆடி ஓடி விளையாட இடம் கிடையாது. ஒரு கிராமத்து பையன் சிட்டிக்கு உந்த எப்படி மலைச்சு போவானா அப்படித் தான் சிட்டி பையன் கிராமத்துக்குப் போனாலும் இந்த இடைவெளியைக் குறைக்க இது போன்ற விழாக்கள் நிச்சயமா உதவும்.

சி.கே.குமார் – முதன்மை பெற்ற காரணம் : யார் இதற்காக முயற்சி செய்தாலும் இந்த அரசு நிச்சயம் உதவியிருக்கும். ஏனென்றால் கலையிலும், இலக்கியத்திலும் ஆர்வமுடையவர் முதல்வர். ஜெயலலிதா ஆட்சியென்றால் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்வளவுதான். அவரும் உலகத் தமிழ்மாநாட்டை நடத்தியவர்தான்.

கலையை, பண்பாட்டை, கலாசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தொலைக்காட்சி ஒன்று போதுமே? சன் டீ.வி. அதைச் செய்யலாமே?

சென்னை சங்கமம் குறித்து எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி என்ன நினைக்கிறார்?

இதுபோன்ற கலை விழாக்கள் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். சென்னை சங்கமமும் நன்றாக இருந்ததாகதான் சொல்கிறார்கள். எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததால் நான் போகவில்லை. கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் பங்குபெறச் செய்வதற்கு வாய்ப்பு இல்லாவிடாலும் அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாம். அவர்கள் அதைச் சரிவர செய்யவில்லை. அங்கங்கே இதுகுறித்த முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. இதுதவிர குழனமப் பார்மையான அணுகுமுறைகள், அழைப்புகள் இருப்பதாகவும் குறைபடுகின்றனர். எப்படியோ விழா நடந்தேறியுள்ளது.

இப்படிப்பட்ட விழாக்களைத் தொடர்ந்து செய்யப்போகும் அழைப்புகளுக்கு ஒரு நிலையான ‘செட் அப்’ அவசியம். அது அக்கரையோடும், பொதுமையோடும், அனைத்துத் தரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் தன்மையோடும் அரசு ஆதரவோடும் செயல்பட்டால் இன்னும் சிறப்புறச் செய்ய முடியும்.

சில வருடங்களுக்கு முன் அரசாங்கம் அகாடமிகள் செயல்பாடுகள், செலவினங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றைக் கேட்பார்கள். அக்சர் கமிட்டி என்ற பெயரில் எங்ளது
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தோம். நாங்கள் சமர்ப்பித்ததில் அவர்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு மற்றதை
விட்டுவிட்டார்கள். ஏனென்றால் மக்களது வரிப்பணம் இது போன்ற அமைப்புகளின் மூலம் செலவிடப்படும்போது அதற்கான வரவு செலவுத் திட்டங்கள் மக்கள்முன் வைக்கப்பட வேண்டியது அவசியம்.

சென்னை சங்கமமும் அதைச் செய்ய வேண்டும்.

மைலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.கே. சேகர் : வருஷத்தில் ஒரு நாள் கலைஞர்களை கூட்டி விழா எடுப்ப்தனால் கலை வளர்ந்துவிடாது. கலைஞர்களுடன் நிலைமையும் மாறிவிடாது.
கிராமியக் கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுமென்றால், அந்தவாடி அந்தந்தக் கிராம விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அரசு விழாக்களில் இடம்பெற வேண்டும். சென்னை சங்கமத்திற்கு சுமார் 5 கோடி செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதில் பங்குபெற்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகதானே இருக்கிறது.

கூரையேறி கோழியடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதையாகத்தான் இருக்கிறது. இன்றைய கிராமியக் கலைஞன், கலைஞர்களின் வாழ்வும், நிலையும்.

– ச.ந.கண்ணன்

————————————————————————————————————————————————-
“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி – முதல்வர் வழங்கினார்


சென்னை, ஆக. 7: “சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள “தமிழ் மையம்’ என்ற அமைப்பு “சென்னை சங்கமம்’ என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

“சென்னை சங்கமம்’ நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை “தமிழ் மையம்’ நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

மீண்டும் “சென்னை சங்கமம்’: வரும் ஆண்டும் இதுபோன்ற “சென்னை சங்கமம்’ கலை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்தார்.

Posted in Aaraamthinai, Aaramthinai, Allegations, Arts, Ashok Leyland, Carnatic, Casper Raj, Casperraj, Chennai, Chennai Sangamam, Chidambaram, Chidhambaram, Chithambaram, Culture, Dance, DMK, Drama, Events, Expenses, Ezines, Festival, Finances, Folk, Function, Gasper Raj, Gasperraj, Government, Heritage, Iraianbu, Isai, Kanimoli, Kanimozhi, Karunanidhi, Kavitha, kickbacks, Madras, music, Nalli, Natyanjali, Pothys, Revenues, Sarvana Stores, Statement, Tamil Maiyyam, Thamizh, Thiruvaiyaar, Thiruvaiyaaru, Thiruvaiyar, Thozhi.com, Tourism, Travel, TSCII, Visitor | Leave a Comment »

Sangeet Natak Akademi introduces youth awards

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

தமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது

புதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விவரம்:

புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  • இசை,
  • நாட்டியம்,
  • நாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,
  • பாரம்பரிய நாட்டுப்புற கலை,
  • பொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்களின் விவரம்:

கர்னாடக வாய்ப்பாட்டு: டி.எம்.கிருஷ்ணா

மிருதங்க இசை: என்.மனோஜ் சிவா

கடம் வாசிப்பு: எஸ்.கார்த்திக்

பரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா

படைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்

Posted in Acting, Actor, Artiste, Arts, Awards, Barathanatyam, Bharatanatyam, Bharathanatyam, Bismillah Khan, Bismillah Khan Yuva Puraskar, Carnatic, Creator, Culture, Dance, Direction, Gadam, Hindustani instrumental, Hindustani vocal, instrumental, Kadam, Kathak, Kathakali, Kuchipudi, Kutiyattam, lighting, Manipuri dance, Mime, Ministry of Tourism and Culture, Mridangam, Mrudangam, music, Odissi, Performer, Playwriting, Puppetry, Sangeet Natak Akademi, santoor, Singer, sitar, Stage, stage craft, Tamil Nadu, Thang-ta, Theater, tribal, Ustad Bismillah Khan, vocal, Youth, youth award, Yuva Puraskar | Leave a Comment »

Kanimozhi presents ‘Chennai Sangamam’ – Tamil Sangamam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.

சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.

இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.

புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.

அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்

சென்னை, பிப். 20-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும்

  • அண்ணா நகர் டவர் பூங்கா,
  • மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
  • தி.நகர் நடேசன் பூங்கா,
  • கே.கே.நகர் சிவன் பூங்கா,
  • ராயபுரம் ராபின்சன் பூங்கா,
  • மாட வீதி,
  • பிலிம் சேம்பர்,
  • பெசன்ட் கடற்கரை,
  • கோட்டூர்புரம் பூங்கா,
  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
  • கலைவாணர் அரங்கம்,
  • மிïசிக் அகாடமி,
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
  • தியாகராய ஹால்,
  • பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
  • கர்நாடக சங்கீதம்,
  • மயி லாட்டம்,
  • ஒயிலாட்டம்,
  • தப்பாட்டம்,
  • நையாண்டி மேளம்,
  • பாவைக் கூத்து,
  • காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-

மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)

தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)

தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு

மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்

6.15: சென்னை இளைஞர் குழு இசை

இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு

புஷ்பவனம் குப்புசாமி

கே.கே.நகர் சிவன் பூங்கா:

காலை 6.00: தேவார திருப் புகழ்

6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு

மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்

6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்

ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்

6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி

கோட்டூர்புரம் பூங்கா:

மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்

மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-

காலை 6.00: நாதசுரம்

6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.

நையாண்டி மேளம்

மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.

6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு

அண்ணா நகர் டவர் பூங்கா:-

காலை: நாதசுரம்,

6.30: மகதி வாய்ப்பாட்டு

மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்

6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு

பிலிம் சேம்பர்:-

மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்

6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.

Posted in Artistes, Arts, Attraction, Books, Carnatic, Casper Raj, Chennai, Chennai Sangamam, Culture, Dance, Drama, Events, Folk, Gasper Raj, Gasperraj, Heritage, Kaavadi, Kanimozhi, Kavadi Aattam, Madras, Mayilattam, music, Naiyandi Melam, Native, Oyilattam, Paavai Koothu, Pattimanram, Sujatha, Tamil Sangamam, Thamizh, Thangam Thennarasu, Thappaattam, Theater, Tourist, Vasanth | 3 Comments »

Nalli Kuppusami Chettiyar – Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

நேர்காணல்: ஆண்டுதோறும் ஆயிரம் இசை நிகழ்ச்சிகள் !

பா. ஜெகதீசன்


நல்லி குப்புசாமி செட்டியார்

‘நான் இசை மேதை அல்ல. ஆரம்பக் காலங்களில் பாடல்களின் ராகங்களைக் கூட எனக்குத் தெரியாது’ -இப்படித் தன்னடக்கத்துடன் சொல்பவர் யார் தெரியுமா?

ஆண்டுதோறும் சராசரியாக ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இசைக் காவலர் தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார்.

வான வில்லின் வண்ணங்களைப் போன்ற 7 சங்கீத சபாக்களின் தலைவராகவும், ஏராளமான சபாக்களில் முக்கிய பொறுப்புகளிலும் அவர் உள்ளார்.

மலர்களில் வாசம் மிக்கது மல்லி… பட்டுத் துணியில் சிறந்தது நல்லி… கலைகளைக் காக்கும் தொழில் அதிபர்களில் குறிப்பிடத் தக்கவர் நல்லி குப்புசாமி செட்டியார் என்றால் அது மிகையாகாது.

பட்டுச் சேலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் நல்லி குப்புசாமி செட்டியார், இயல், இசை, நாடகக் கலைகளைக் கட்டிக் காப்பதிலும் தன்னிகரற்ற மாமனிதராகத் திகழ்கிறார்.

விசுவரூப வியாபாரம்: சென்னை தியாகராய நகரில் பனகல் பூங்கா எதிரே 1928-ல் சிறிய கடையாக 200 சதுர அடியில் தொடங்கப்பட்டது நல்லி பட்டு நிறுவனம். தற்போது அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் ஒரு தெருவில் இருந்து பக்கத்துத் தெரு வரையில் விரிந்து, பரந்து, விசுவரூபம் எடுத்து அது காட்சி தருகிறது.

ஆல மரத்தின் விழுதுகளைப் போல, இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் 17 கடைகள் உள்ளன. ஒரு காலத்தில் ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய் அளவுக்கு மட்டுமே தமது நிறுவனத்தில் நடைபெற்ற விற்பனையைப் படிப்படியாக சில நூறு கோடிகளுக்கு உயர்த்திக் காட்டி, உழைப்பின் சிகரத்தைத் தொட்டவர் நல்லி குப்புசாமி செட்டியார்.

பல்வேறு பதவிகளை வகித்தவர். ஏராளமான விருதுகளைப் பெற்றவர். அறப் பணிகளுக்கும், நலிந்தோருக்கும் போட்டி போட்டுக் கொண்டு உதவுபவர்.

தியாகராய நகரில் நல்லி சில்க்ஸில்

விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையிலும், எத்தகைய பரபரப்பும் இன்றி, சிரித்த முகத்துடன் அவர் அளித்த பேட்டி:

இசை ஆர்வம் துளிர்த்தது: கிருஷ்ண கான சபா 1954-ல் தியாகராய நகரில் எங்கள் கடைக்கு அருகே தான் இருந்தது. அப்போதெல்லாம் இரவு 7 மணியானால், இப்பகுதியே அமைதியாகி விடும். அந்த நேரத்தில் கடையின் முன் பகுதியில் நின்றால், கிருஷ்ண கான சபாவில் இருந்து சங்கீதம் காற்றினில் தவழ்ந்து வரும்.

என்ன ராகம் என்றே தெரியாது. இருந்தாலும் அந்த இசையை நான் விரும்பி ரசிப்பேன். அப்படி நான் உள்ளம் லயித்து கேட்ட இசை நிகழ்ச்சிகள்.தான் என் மனதில் இசை ஆர்வத்தை விதைத்தன. பின்னர் கிருஷ்ண கான சபாவில் துணைத் தலைவர் பதவியில் என்னை அமர்த்தினார்கள்.

1969-ல் மயிலாப்பூர் வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியில் நான் இடம் பெற்றிருந்தேன். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எனது நண்பரின் 8 வயது பேத்தி பாடல்களின் ராகங்களைச் சரியாகச் சொல்லியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன்.

குழந்தைகளைப் பார்த்து ஆச்சரியம்: 1980-ல் எனது மகளின் திருமணம் நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாகஸ்வரம், வளையப்பட்டி தவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி போன்றவை திருமண விழாவில் இடம் பெற்றன.

இசை நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களின் ராகங்களை குழந்தைகள் எளிதாகக் கண்டுபிடிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜனுடன் 1980-ல் பல்வேறு கச்சேரிகளுக்குப் போய் வந்தபோது, பாடல்களின் ராகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினேன். உடனே அவர் திரைப்படப் பாடல்கள் சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றின் ராகங்களைக் கூறினார்.

ராகத்தை அறிய எளிய வழி: அக்காலத்தில் “திரைப்படங்களில் கர்நாடக இசை’ என்கிற நூலை கள்ளபிரான் என்பவர் வெளியிட்டார். திரைப்படப் பாடல்கள் பாடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ராகங்களைக் கண்டு பிடிக்கும் நூல் அது. அதைப் படித்து, ஓரளவுக்கு ராகங்களைத் தெரிந்து கொண்டேன்.

பின்னர், இசை நிகழ்ச்சிகளில் இடம் பெறும் பாடல்களின் ராகங்களைத் தொகுத்து, கச்சேரி கையேடு என்கிற நூலை வெளியிட்டோம். பாடல் -ராகம் -பாடலாசிரியர் என்கிற முறைப்படி அகர வரிசையில் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

231 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இசையைப் பயிலும் மாணவ -மாணவிகளுக்கு மட்டுமின்றி, இசையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் கூட பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை உன்னிகிருஷ்ணன் தனது கச்சேரியில் டாக்டர் ராமநாதன் சொல்லிக் கொடுத்த அபூர்வமான ராகத்தில் பாடினார். அந்த ராகம் இந்த நூலில் இடம் பெறவில்லை. இதையடுத்து, இந்நூலில் புதிய ராகங்களையும் அவ்வப்போது சேர்த்து, மேம்படுத்தி வருகிறோம்.

அதற்குப் பிறகு, பல சபாக்களின் தலைவரானேன். ஏராளமான இசை விற்பன்னர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக, எம்.எஸ். சுப்புலட்சுமி -சதாசிவம் ஆகியோருடன் பழகியபோது இசையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

யார், எங்கே, எப்போது?: 40 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாதெமி), மயிலாப்பூர் தியாகராஜ வித்வத் சமாஜம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொûஸட்டி (பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கோகலே ஹால்), ஜெகந்நாத பக்த ஜன சபா (எழும்பூர்), பெரம்பூர் பக்த ஜன சபா ஆகியவை தான் இருந்தன.

எனவே, இசை விழா நடைபெறும் காலங்களில் எந்த சபாவில் எந்தத் தேதியில் யார் கச்சேரி செய்கின்றனர் என்பதை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டு நிலவரப்படி சென்னையில் 81 சபாக்கள் உள்ளன. ஒரே மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

10 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் கண்ணன் (பேங்க் ஆஃப் பரோடாவில் பணியாற்றியவர்) எந்தெந்த சபாக்களில் எந்தெந்தத் தேதிகளில், யார் பாடுகின்றனர் என்கிற விவரங்களைத் தொகுத்து சிறிய நூலை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து இசை விழாவில் பங்கேற்பதற்காகவும், இசை அமுதத்தைப் பருகவும் ஏராளமானவர்கள் சென்னைக்கு வருவது வழக்கம். அவர்கள் இத்தகைய நூலைப் பார்த்து, எங்கே செல்வது என எளிதாக முடிவு செய்ய இயலும்.

அத்தகைய இசை விழா வழிகாட்டி நூலை கண்ணனுடன் சேர்ந்து நாங்களும் தயாரித்து வெளியிட்டு வருகிறோம்.

தற்போது (1) கிருஷ்ண காண சபா -தியாகராய நகர், (2) பிரம்மா கான சபா -மயிலாப்பூர், (3) நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதெமி, (4) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி சபா, (5) முத்ரா -தியாகராய நகர், (6) பைரவி கான சபா -மயிலாப்பூர், (7) மெலட்டூர் பாகவத மேளா சபா -தஞ்சை ஆகியவற்றில் தலைவராக உள்ளேன். மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபா துணைத் தலைவராக உள்ளேன்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளைப் பெற்ற இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து பாராட்டு விழா நடத்துகிறோம். அவ்விழாக்களிலும் பிரபலங்களின் கச்சேரிகள் இடம் பெறும்.

சென்னையில் நடைபெறும் இசை விழாக்களில் விருது பெற்ற அனைவரையும் அழைத்து, கச்சேரி நடத்தி கெüரவித்து வருகிறோம்.

இலக்கியத்தை ஊக்குவிக்க பாரதி கலைக்கூடத்தை ஆரம்பித்து, அதன் தலைவராக உள்ளேன். நூல்கள் வெளியீடு, எழுத்தாளர்களுக்குப் பாராட்டு, நூல்கள் மொழி பெயர்ப்பு போன்ற பணிகளை அந்த அமைப்பின் மூலம் செய்து வருகிறோம்.

பைரவி கான சபையின் மூலம் நாங்கள் நடத்திய ஜுகல் பந்தி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது புறநகர்ப் பகுதிகளிலும் இசை விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

நாடகத்துக்கும் ஊக்கம்: நாட்டியம், சங்கீதம் போன்றவற்றுக்கு வழங்குவதைப் போல நாடகத்தை ஊக்குவிக்க நாடகத்துக்கும் விருது அளிக்கிறோம்.

நாகசுரத்தை ஊக்குவிக்க 81 சபாக்களிலும் தற்போது தொடக்க விழாக்களின்போது ஒரு மணி நேரம் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இசை விழாவை முதற்கட்டமாக தற்போது ஆகஸ்ட் 5-ல் தொடங்கி அக்டோபர் 2 வரை நடத்துகிறோம். சங்கீத சூடாமணி விருது வழங்குகிறோம். டிசம்பரில் நடத்தப்படும் வழக்கமான இசை விழாவில் நித்ய சூடாமணி விருது வழங்கி வருகிறோம்.

பாரம்பரியச் சிறப்பு: தஞ்சை மெலட்டூரில் 450 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெலட்டூர் பாதவத மேளாவை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் கொண்டாடி வருகிறோம். கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்ட தெலுங்கு சாகித்தியங்களே தற்போதும் நாடகத்தில் இடம் பெறுகின்றன.

Posted in Bharathy Arts Center, Biosketch, Carnatic, Classical, Krishna Gana sabha, Nalli Kuppusami, Nalli Silks, Ragas, T nagar, Tamil Music, Thamizh isai | Leave a Comment »