Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘BRIC’ Category

Rupee appreciates against Dollar – Financial pressures & Trade imbalance in Pricing disparities

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்

ஆர். அறிவானந்தம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.

செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.

ரூபாய் மதிப்பு உயர்வால்

  • ஆட்டோமொபைல்,
  • உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
  • டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
  • ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
  • கைவினைப் பொருள்

உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்

  • சாப்ட்வேர் நிறுவனங்கள்,
  • பிபிஓ நிறுவனங்கள்,
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
  • கிரானைட்,
  • கடல் உணவு,
  • தேயிலை,
  • என்ஜினீயரிங்,
  • முந்திரி,
  • மாம்பழம் மற்றும்
  • நார் பொருள்களை

தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.

அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.

கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.

மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.

நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.

ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted in Appreciation, Balancesheet, BPO, BRIC, Cash, China, Company, Disparity, Dollar, Economy, Exchange, Exim, Exports, Finance, fiscal, Fishery, Fixing, GDP, Imbalance, Imports, Industry, Inflation, InfoTech, Interest, Issues, markets, Monetary, Money, Outsourcing, Policy, PPP, Pressures, Pricing, Rates, ratio, RBI, Recession, Reserve, Rupees, Rupya, service, Trade, World | 1 Comment »

Foreign Instituitional Investors – Lucrative opportunities in Emerging Indian markets & sectors

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

முதலீடுகளுக்கு காத்திருக்கும் தொழில்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

சமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இவர்கள் யார்? “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.

அந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.

இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது!

ஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன? மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.

அவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன? எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது?

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன?

அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.

அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.

மாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.

உதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.

ஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.

சரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீடுகள் எங்கே போகின்றன? மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.

அடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).

ஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.

இன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.

தற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.

இந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.

கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது

மேலாளர்.)

Posted in Analysis, Auto, Backgrounders, Bonds, Brazil, BRIC, BSE, Bus, Cars, China, Defaltion, Deflation, Diversify, ECE, Economy, EEE, Electrical, Electronics, Emerging, Employment, Exchanges, Exports, FDI, FEMA, FERA, FII, Finance, Funds, GDP, Globalization, Growth, Imports, Index, Industry, Inflation, InfoTech, Instrumentation, investments, job, Leather, Luxury, Manufacturing, markets, Metro, MNC, Model, Motors, NIFTY, NSE, Op-Ed, Opportunities, Options, Outsourcing, pension, Primers, Recession, Retirement, revenue, Risk, Russia, sectors, service, Shares, Stagflation, Stats, Stocks, Taiwan, Tech, Technology, Telecom, Textiles, Trucks | Leave a Comment »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »