Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Benami’ Category

Women and reservation – 33% Allocation & Benami Prohibition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

உள்ளாட்சி அதிகாரத்தில் பெண்களா, பினாமிகளா?

வீர. ஜீவா பிரபாகரன்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…’ என்று பெண்கள் விடுதலை குறித்துப் பாடினார் பாரதி. நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, அரசியல் கட்சிகளின் தலைவர்களாக உயரிய பொறுப்புகளுக்குப் பெண்கள் வந்துள்ளனர்.

எனினும், அரசியல், பொதுத் தொண்டில் பெண்கள் ஈடுபடுவதில் தயக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பெண் பிரதிநிதிகளின் பினாமிகளாக கணவர் மற்றும் குடும்பத்தினர் செயல்படுவது தொடர்கதையாகிறது.

1993-ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 4700 பேரிடம் இருந்த அரசியல் அதிகாரம், 73, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்துக்குப் பின்னர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பரவலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக – உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு, பணிகளைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேசிய அளவில் 10 லட்சம் பெண்களும், தமிழகத்தில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வு என்பது, வெறும் காகிதப் பூவாகவே உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்ட 29 துறைகளைச் சார்ந்த பணிகள், பணியாளர், நிதி ஆகிய மூன்று நிலைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தும் அதிகாரம், கர்நாடகம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இத்தகைய அதிகாரப் பகிர்வு முழுமை அடையவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பெண் பிரதிநிதிகளின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், மாவட்ட, ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என, பல பதவிகளை பெண்கள் அடைந்துள்ளது சிறந்த சமூக மாற்றத்துக்கான அடிப்படையாக விளங்குகிறது.

ஆனால், பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைச் செலுத்தும் பினாமிகளாக கணவர், உறவினர்கள் நீடிப்பது பெரும்பாலான இடங்களில் தொடர்கிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குப் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்க, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களே செல்கின்றனர்.

இந்நிலைக்கு, பெண்களின் கூச்ச சுபாவம், போதிய கல்வி அறிவின்மை, பதவிக்குரிய பணி பற்றிய தெளிவின்மை, ஆண் ஆதிக்கத் தலையீடுக்கு உட்படல், பொதுப் பிரச்னையைக் கையாளுவதில் பயம், தாழ்வு மனப்பான்மை, வன்முறையை உள்ளடக்கிய அரசியல் தலையீடு, குடும்பம், சமூகம், பொருளாதாரச் சூழல் சார்ந்த இடர்ப்பாடுகள் ஆகியவை முக்கியக் காரணங்கள் என பல்வேறு அமைப்பினர் நடத்திய அனுபவ ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இக் குறைபாட்டைப் போக்கும் வகையில், தற்போது தமிழக அரசு தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக உள்ள ஏ.எம். காசிவிஸ்வநாதன், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களுடைய கணவர்களோ, உறவினர்களோ நிர்வாகப் பணிக்கு வரக்கூடாது என்பதைக் கட்டாயமாக்கினார்.

இது, மாவட்ட அளவில், பெண் பிரதிநிதிகளின் சுயச்சார்பையும் தன்னம்பிக்கையையும் அரசு அதிகாரிகளிடம் கூச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறனையும் உருவாக்கியது.

எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது பணிகளில் தலையீடு ஒருபுறம் உள்ளது; உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் அரசு முத்திரையுடன் அளிக்கும் கடிதம், விளம்பரங்களில்கூட அவர்களுடைய கணவர்களின் படங்களும் இடம்பெறுகின்றன. அரசு அதிகாரிகள் எவரும் அதைக் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்று பல்வேறு சமூகத் தடைகளையும் தாண்டி சுதந்திரமாகச் செயல்பட்டு, சாதனை படைக்கும் பெண் பிரதிநிதிகள் விதிவிலக்காக ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளனர். அவர்களும் மகளிர் சுய உதவிக் குழுவின் அடிப்படையில் தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான இடங்களில் சட்டம் வழங்கிய பொறுப்பும் கடமையையும் பெண்களின் பெயரில் இருந்தாலும் அதிகாரத்துக்குப் பினாமிகளாக ஆண்களே நீடிக்கின்றனர்.

இந்நிலையை மாற்றுவதே பெண்களுக்கான உண்மையான அதிகாரப் பகிர்வாக இருக்கும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் பிரதிநிதிகளுக்கு முழுமையான நிர்வாகப் பயிற்சி, சுயச்சார்ப்புப் பயிற்சியைத் தொடர்ந்து அளிக்க வேண்டும்.

அதுவே, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் போது அவர்களின் சிறந்த செயல்பாட்டுக்கும் பாலியல் சமத்துவத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும்.

Posted in 33, Benaami, Benami, City, Collector, Council, Councillor, Elections, Female, Feminism, Govt, Lady, Leaders, Legislative, Party, Percent, Percentage, Pinaami, Pinami, Planning, Policy, Politics, Polls, Power, Reservations, Rural, service, She, TNPSC, Village, Women | Leave a Comment »

Finance ministry against Govt nominees in Punjab & Sind Bank: Board in open war

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

வங்கிகளும் அரசியல் தலையீடும்!

அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.

“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.

முதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.

அவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்?

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.

நிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.

ஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.

Posted in abuse, Assets, Balance, Banking, Bankruptcy, Banks, Benaami, Benami, Board, Bribery, Bribes, Cabinet, Campaign, CEO, CFO, chairman, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, CMD, Commerce, Congress, COO, Corruption, Director, Finance, Financing, Gopalakrishnan, Govt, Influence, kickbacks, Loans, Management, Manmogan, Manmohan, MD, Members, Moopanaar, Moopanar, Mooppanaar, Mooppanar, Nominee, Op-Ed, Options, panel, Penami, Power, Prathiba, Prathibha, Proxy, PSB, Punjab, Punjab & Sind Bank, reconstitution, regulations, SBI, Sind, Sindh, State Bank, Statements, Trading, Trustees, VP | Leave a Comment »