Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘beer’ Category

Carbon emissions are confused with Carbon dioxide – Environment, Backgrounders

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

உலகை மிரட்டும் வாயு!

என்.ராமதுரை

அண்மையில் அறிவியல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் (வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ என்பது நினைவில்லை) கரியமிலவாயு ஒரு “”நச்சுப்புகை” என்று வருணிக்கப்பட்டது. இது ஒரு நச்சு வாயுவே அல்ல. அது நம்மைச் சுற்றிலும் இருப்பது. நமது மூச்சுக் காற்றுடன் வெளியே வருவது. நாம் சாதாரணமாக அருந்தும் சோடா போன்ற பானங்களில் அடங்கியுள்ளது. (பீர் பானத்திலும் உள்ளது) செடி கொடிகள் மரங்கள் கரியமில வாயுவை பகல் நேரங்களில் கிரகித்து தமது உணவைத் தயாரித்துக்கொள்கின்றன.

கரியமிலவாயுவுக்கு ஒரு “தம்பி’ உண்டு. அதுதான் மோசமான வில்லன். அதன் பெயர் கார்பன் மோனாக்சைட். அண்மையில் சென்னையில் காரை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே ஏ.சி. போட்டுக்கொண்டதன் விளைவாக காருக்குள் இருந்தவர்கள் உயிரிழந்த இரு சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டிலும் உயிரைப் பறித்தது கார்பன் மோனாக்சைட் ஆகும்.

ஆனால் கரியமிலவாயு அப்படி உயிரைப் பறிக்கின்ற வாயுவே அல்ல. அதற்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது. அது கண்ணுக்கே தெரியாதது. பலரும் கரியமிலவாயுவையும் புகையையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.

கரியமிலவாயு, மீத்தேன் வாயு, ஆவி வடிவிலான நீர் ஆகியவை காற்றுமண்டலத்தில் எப்போதும் வெவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கின்றன. இவைதான் பூமியில் உயிரினத்தைக் காத்து வருவதாகவும் கூறலாம். பூமியில் அனைத்தும் கடும் குளிரால் உறைந்து விடாமல் இவைதான் தடுக்கின்றன. அதாவது பகல்நேரத்தில் சூரியனிலிருந்து பெறுகின்ற வெப்பத்தை, பூமி பின்னர் முற்றிலுமாக இழந்துவிடாதபடி காப்பது இந்த வாயுக்களே.

ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவுகின்ற இடங்களில் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களே இருக்கும். அதுமட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர்கள், கூரை ஆகிய அனைத்தும் கண்ணாடியால் ஆன கட்டுமானங்களும் காணப்படும். இவற்றுக்குள் செடிகொடிகளை வளர்ப்பர். பகல் நேரங்களில், செடிகளுக்கு கண்ணாடிகள் வழியே சூரிய ஒளிக்கதிர் கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் வெளியே உள்ள குளிர், செடிகளைப் பாதிக்காதபடி கண்ணாடிப் பலகைகள் தடுத்துவிடும். இதன் மூலம் கண்ணாடி கூடாரத்துக்குள் செடிகளுக்கு இதமான வெப்பம் தொடர்ந்து இருக்கும். அதாவது பகலில் சூரிய ஒளிக்கதிர் மூலம் கிடைத்த வெப்பம், வெளியே போய்விடாதபடி கண்ணாடி தடுக்கிறது. இவ்வித கண்ணாடிக் கட்டடத்துக்கு பசுமைக்குடில் என்று பெயர். இக் கட்டடத்தில் ஏற்படுகின்ற விளைவுக்கு பசுமைக் குடில் விளைவு என்று பெயர்.

பூமியைப் போர்த்தியுள்ள காற்று மண்டலத்தில் அடங்கிய கரியமிலவாயு, மீத்தேன், ஆவி வடிவிலான நீர் போன்றவை கிட்டத்தட்ட கண்ணாடி போல செயல்பட்டு பூமி, தான் பெறுகின்ற வெப்பத்தை இழந்துவிடாதபடி தடுக்கின்றன. ஆகவே இந்த வாயுக்களுக்குப் பசுமைக் குடில் வாயுக்கள் என்று பொதுவான பெயர் உண்டு.

காற்றுமண்டலத்தில் சேரும் கரியமிலவாயு அளவு அதிகரித்துக்கொண்டே போனால் பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகுமே என்று கேட்கலாம். ஆனால் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் அந்த வாயு காற்றுமண்டலத்திலிருந்து தொடர்ந்து அகற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள செடி, கொடி, மரம் அனைத்தும் பகல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கின்றன. கடலில் மிதந்தபடி வாழும் பிளாங்கட்டான் என்ற நுண்ணுயிரிகளும் இதைச் செய்கின்றன. காற்று இயக்கம் காரணமாகவும் கடலில் கரியமிலவாயு கரைகிறது. இதை கார்பன் சுழற்சி என்று சொல்வர். கடந்த பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருவதிலும் அகற்றப்படுவதிலும் ஒருவித சமநிலை காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து -மனிதனின் செயல்களால் காற்றுமண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நிலக்கரியைப் பயன்படுத்துகிற அனல் மின்நிலையங்கள், எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் எண்ணற்ற வாகனங்கள் போன்றவற்றின் மூலம் கரியமிலவாயு பேரளவில் காற்று மண்டலத்தில் சேர்ந்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை உயரலாயிற்று. இப்படி சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே போனால் உலகில் விபரீதங்கள் ஏற்படும். தென், வட துருவங்களில் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்களும் இமயமலை போன்ற உயர்ந்த மலைகள் மீதுள்ள உறைந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பிக்கும். கடலில் நீர் மட்டம் உயரும். உலகில் பல இடங்களில் கடல் ஓரமாக அமைந்த நகரங்கள் கடலில் மூழ்க ஆரம்பிக்கும். பருவநிலை மாறும். புயல்கள் அதிகரிக்கும். கோதுமை விளைந்த இடங்களில் நெல் சாகுபடி செய்கிற நிலைமை ஏற்படும். சில பகுதிகள் பாலைவனமாகிவிடும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கையால் இயல்பாக ஜீரணிக்க முடியாத அளவில் கரியமிலவாயு சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கரியமிலவாயு சேர்மான அதிகரிப்பு குறிப்பாக 1950-களிலிருந்து நன்கு காணப்படுகிறது. இப் பிரச்னை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்து அவ்வப்போது உலக அளவிலான மாநாடுகளை நடத்தி விவாதித்தன. கடைசியாக ஜப்பானில் கியோட்டோ என்னுமிடத்தில் 1997-ல் ஐ.நா. சார்பில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

கரியமிலவாயு உள்பட பசுமைக் குடில் வாயுக்கள் காற்றுமண்டலத்தில் மேலும் மேலும் சேருவதைக் கட்டுப்படுத்தி 1990 வாக்கில் இருந்த நிலையை எட்ட வேண்டும் என்பது மாநாட்டின் முக்கிய முடிவாகும். இதுவரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலில் இதை ஏற்பதாகக் கூறிய அமெரிக்கா, பின்னர் 2001-ல் பல்டி அடித்தது. இந்த உடன்பாட்டை ஏற்பதனால் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வயல்களிலிருந்தும் அத்துடன் கால்நடைகளின் வயிற்றிலிருந்தும் நிறைய மீத்தேன் வாயு காற்றில் கலப்பதாக குதர்க்கம் பேச முற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டுதோறும் காற்றுமண்டலத்தில் கூடுதலாகச் சேரும் கரியமிலவாயுவில் 21 சதவிகிதம் அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்படுவதாகும்.

எனினும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் தழுவிய அளவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்).

Posted in AC, beer, Carbon, Carbon di oxide, Carbon dioxide, CO, CO2, Colorless, emissions, Environment, Gas, Methane, O3, Odorless, Oxygen, Ozone, Poison, Pollution, Protection, Radiation, Soda, Vapor, Water | Leave a Comment »

TASMAC vs Private Liquor Shops in Tamil Nadu – Monthly License woes

Posted by Snapjudge மேல் மே 17, 2007

மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் பார் உரிமையாளர்கள் அவதி

சென்னை, மே 16: மாதாந்திர உரிமத் தொகை மாற்றத்தால் தனியார் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் பாரை மூடிவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2005-2006) டெண்டர் காலத்தில், மதுக்கடையின் மொத்த விற்பனைத் தொகையிலிருந்து, கடையைப் பொருத்து 2.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் அதிகபட்ச சதவீதம் எடுப்பவர்களுக்கு மட்டும் டெண்டர் உரிமம் கொடுக்கப்படும்.

அவர்கள் மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து கூடுதலாகவோ, குறைவாகவோ ஒவ்வொரு மாதமும் மாதாந்திர உரிமத் தொகையை செலுத்திவந்தனர்.

ஆனால் 2006 டிசம்பர் மாதம் முதல், கடந்த ஆண்டில் எந்த மாதம் அதிகமான விற்பனை ஆகியிருந்ததோ, அதனையே குறைந்தபட்ச மாதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் டாஸ்மாக் கடையில் விற்பனை கூடுதலாகும் பட்சத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாதக் கட்டணத்தைவிட கூடுதலாகவும், விற்பனை குறையும்போது நிர்ணயிக்கப்பட்ட தொகையும் மாத உரிமத் தொகையாக வசூலிக்கப்படுகிறது.

எந்தவொரு வியாபாரமும் எப்பொழுதும் ஒரே சீராக இருப்பதில்லை. வியாபாரம் குறைந்தால் கட்டணத் தொகையைக் குறைக்காமலும், வியாபாரம் அதிகரித்தால் மட்டும் கட்டணத் தொகையை கூடுதலாகக் கட்டச் சொல்வதும் பார் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.

இதோடு அரசு விடுமுறை நாள்களுக்கும் சேர்த்துப் பணம் கட்ட வேண்டியுள்ளது. கிடங்கிலிருந்து கடைகளுக்கு மதுபாட்டில்களை எடுத்துவருவதற்கு மெத்தனப் போக்கு காட்டுவதால், பார் தின்பண்ட விற்பனை நேரடியாகப் பாதிக்கப்படுகிறது.

மேலும் 30 சதவீதத்தினர் பாரில் அருந்தாமல், மது பாட்டில்களை பார்சல் வாங்கிச் சென்றுவிடுகின்றனர். ஆனால் இந்த 30 சதவீதத்தினருக்கும் சேர்த்தே மாதக் கட்டணத்தை அரசுக்கு பார் உரிமையாளர் செலுத்தவேண்டி உள்ளது.

மாதக் கட்டணத்தை குறைக்கக் கோரி உயர் அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. தனியார் பாரை மூடவைத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் பார் நடத்தி லாபம் அடைவதிலேயே அதிகாரிகள் குறிக்கோளாக உள்ளனர் என்றார் சென்னை எழும்பூர் தனியார் பார் உரிமையாளர் குமார்.

தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு மதுக்கடையின் விற்பனையைப் பொருத்து, பாருக்கான மாத உரிமத் தொகையைக் கணக்கிட்டு வசூலிக்கவேண்டும் எனவும் பார் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in AA, Alcohol, Alcoholic, Alcoholics, Bar, Bars, beer, Brandy, Budget, Chennai, Cocktails, Commerce, Drink, Drunkard, Economy, Expenses, Finance, Govt, License, Liquor, Loss, Madras, Monthly, Parcel, Private, Profit, revenue, Rum, sales, Scotch, Shops, Tamil Nadu, TASMAC, tender, Whiskey, Wine | 2 Comments »

Vairamuthu: “Today’s cinema songwriters write with their beer’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

வைரமுத்து சொன்னது சரியா?
– கடுகடுக்கும் கவிஞர்கள்

Kalki 25.03.2007

அது ஒரு விழா மேடை.

‘இன்றைய இளம் பாடலாசிரியர்கள் பாட்டிலுடன் கவிதை எழுதுகிறார்கள். எனவே அந்தப் பாடல் அவர்களுக்குச் சொந்தமானதல்ல’

என்கிற ரீதியில் பேசுகிறார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து. இது மறுநாள் தினசரிகளில் வந்துவிட, அங்கே இங்கே என்று சலசலப்புகள் ஆரம்பித்துவிட்டன. வைரமுத்து சொன்னது சரியா? இளம் பாடலாசிரியர்களிடம் கேட்டோம்.

விவேகா: ஒட்டுமொத்த கவிஞர்களையும் குறை கூறுவது ஏற்க முடியாத செயல். மது பக்கமே போகாத என்னைப் போன்றவர்களை இப் பேச்சு அவமானப்படுத்துவதாக உள்ளது. யார், யார் மது அருந்துகிறார்கள் என்கிற ஆய்வு தேவையற்றது. இளம் கவிஞர்களின் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியிருக்கலாம். இப்படிக் குற்றம் சாட்டுவது சரியான அணுகுமுறையாக எனக்குப் படவில்லை.

சிநேகன்: சென்ற தலைமுறை கவிஞர்களைவிட, இன்றைய தலைமுறை கவிஞர்கள் திறமையானவர்கள்; உழைக்கத் தெரிந்தவர்கள்; பிழைக்கத் தெரிந்தவர்கள். எல்லாக் கவிஞர்களையும் குற்றம் சாட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

குகை மா. புகழேந்தி: சரக்குள்ள பாடல்கள் பலவற்றை எழுதுகிற இன்றைய இளங்கவிஞர்களை, சரக்குப் பாட்டில் இருந்தால்தான் எழுதவே ஆரம்பிக்கிறார்கள் என்று வைரமுத்து பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.

வேறு ஏதோ ஒரு கோபம் அவர் பேச்சு மூலம் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். எந்த இளைய தலைமுறைக் கவிஞனும் அவரை விமர்சிக்க, குற்றஞ்சாட்டத் தயாராக இல்லாதபோது, விஷம் தெளிக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். புத்திமதி என்றுகூட எங்களால் இதை எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், தன் மகன் மீது குறையிருந்தால், அதைத் திருத்த எந்தத் தகப்பனும் மேடை போட்டுச் சொல்ல மாட்டான். வைரமுத்து யாரையும் பாராட்ட மாட்டார். இந்த ஆராவாரத் தூற்றல் எங்களை எரிச்சல் படவே வைக்கிறது!

கபிலன்: எப்போதாவது சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றால், எந்தக் கவிஞனும் கெட்டுப் போகப் போவதில்லை. தண்ணியடித்தால் என்ன… பாடல்கள் தள்ளாடாமல் இருந்தால் சரி!

யுகபாரதி: அவர் மது அருந்துகிறவர்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறார். நான் மது அருந்துவதில்லை. எனவே, அந்தச் செய்திக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அறிவுமதி: கவிஞர்களிடையே ஒற்றுமை இருக்கவேண்டும் என விரும்புபவன் நான். அந்த ஒற்றுமை குலைய வேண்டாம் என்று நினைக்கிறேன். எனவே மேற்கொண்டு பேச விரும்பவில்லை.

ஆண்டாள் பிரியதர்ஷினி: இளைய தலைமுறை மீது அக்கறை இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கவிஞரை தனிப்பட்ட முறையில் கனிவாகக் கண்டிக்க வைரமுத்துவுக்கு உரிமை உண்டு. ஆனால், விழா மேடையில் ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தைப் பொதுமையாக்கிப் பேசுவது தேவையில்லாதது. இப்படிப் பொதுவாகப் பேசுவது தொழில்போட்டியில் வரும் பொறாமையுணர்வுப்பேச்சோ என்ற யூகத்துக்கு வழி வகுத்துவிடும்.

எம்.ஜி.கன்னியப்பன்: ‘இன்றைய கவிஞர்கள் குடித்துவிட்டுப் பாடல் எழுதுகிறார்கள், குடிக்காமல் எழுதுகிறார்கள்’ என்பது வைரமுத்துவுக்கு ஒரு பிரச்னையே இல்லை. ‘ஒரு படத்துக்கான ஒட்டுமொத்த பாடல்களையும் எனக்கே கொடுங்கள்’ என்று கேட்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என அவர் எண்ணிக் கொண்டிருக்கையில், இன்னொரு கவிஞரும் அப்படிக் கேட்பதை அவரால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்தக் கோபத்தை நேரடியாகப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல், ஒட்டுமொத்த இளம் கவிஞர்களைச் சாடினால், போய்ச் சேர வேண்டிய கவிஞனை சேருமே என்பதற்காகத்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.

தனக்கென ஓர் எல்லையை நிர்ணயித்துக்கொண்டு, ‘எல்லை தாண்டி வந்தாயென்றால் பார்’ என்று எச்சரிக்கை விடுவது என்பது நாடுகளிடையே வேண்டுமானால் இருக்கலாம், பாடலாசிரியர்களிடையே இருக்கக்கூடாது.

நா.முத்துக்குமார்: இதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை.

தாமரை: படைப்பாளியாக இருந்தால் மட்டும் என்ன? யாராக இருப்பினும் வாழ்நாளில் தவிர்க்க வேண்டிய, எதிர்க்க வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மது.

இதைப் பற்றி மூத்த தலைமுறைக் கவிஞரான மு.மேத்தா என்ன சொல்கிறார்?

‘‘யாரோ ஒருவரை மனத்தில் வைத்துக் கொண்டு எல்லோரையும் பொத்தாம் பொதுவாக இழிவாகப் பேசுவதென்பது தவறான காரியம். வளர்ந்து வருகிற இளங் கவிஞர்களை வாழ்த்தும் ஸ்தானத்தில், தங்களை வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வைரிகளாகக் கருதுகிற மனோபாவம் குரூரமானது!’’

கவிஞர் வைரமுத்துவின் கருத்தறிய அவரைத் தொடர்பு கொண்டபோது அவருடைய உதவியாளர், ‘‘நீங்கள் கேட்பதற்கு, கவிஞர் ஈரோட்டு லயன்ஸ் கிளப்பில் பேசிய அந்த ஆடியோ கேசட்தான் பதில். அதையே பதிலாகப் போட்டுக் கொள்ளுங்கள். திரித்து வெளியிடும் பத்திரிகைகளின் செய்தியினை வைத்துக் கொண்டு கேட்காதீர்கள். இது குறித்து கவிஞர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமோ தருவதற்கு ஒன்றுமில்லை’’ என்றவர், ஈரோட்டு தொலைபேசி எண்ணைத் தந்தார். நமது தொடர்ந்த அழைப்புக்கு ஈரோட்டிலிருந்து பதிலில்லை என்ற விஷயத்தை மறுபடியும் கவிஞரின் உதவியாளரிடம் கூறினோம். ஆனால் அவர் மூலம் ஆடியோ கேசட்டோ, கவிஞரின் மறுப்போ இந்த இதழ் அச்சாகும்வரை கிடைக்கவில்லை.

– சுமதி, அருணாஸ்

Posted in Andal Priyadarshini, Arivumathi, Arivumathy, Audio, beer, Brandy, Cinema, Cocktail, Culture, Drink, Drunkard, Gin, Immoral, Kabilan, Kalki, Kannadasan, Kapilan, Kavinjar, Lyricist, Lyrics, Moral, Morality, music, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Preach, Rum, Scotch, Snegan, Snehan, Song writer, songwriters, Thaamarai, Thamarai, Vairamuthu, Viveka, Whiskey, Whisky, Wine, Yugabharathi, Yugabharathy, Yukabharathi, Yukabharathy | Leave a Comment »