Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Bangalore’ Category

“User development fees” at the Bangalore International Airport

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

சர்வதேச விமானநிலைய கட்டண வசூலை நிறுத்திவைக்க யோசனை

பெங்களூர் அருகே உள்ள தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு இந்த விமானநிலைய நிறுவனத்துக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விமானநிலையம். இந்த விமானநிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பெரும் முதலீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான திட்டச் செலவை ஈடுகட்டவும் பராமரிப்புச் செலவைச் சரிக்கட்டவும் இந்த விமானநிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளிடம் தனி மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கட்டணத் தொகையானது உள்நாட்டுப் பயணிகளுக்கு சற்று குறைவாகவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சற்று கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூரில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் எச்ஏஎல் விமானநிலையத்தை ஒப்பிடும்போது தூரம், நேரம், பணம் அதிகமாக விரயமாவதால் புதிய சர்வதேச விமானநிலையத்திற்கு பல தரப்பில் ஆட்சேபம் எழுந்தது.

அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகர்களுக்கு சர்வதேச விமானத்தில் இருந்து செல்லும்போது காலவிரயமும் பணவிரயமும் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு விமானநிலையங்களையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேவனஹள்ளி சர்வதேச விமானநிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கும் முடிவை விமானநிலையத் திட்டச் செலவின் தணிக்கை அறிக்கை வரும்வரை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

இதுபோன்ற யோசனையை ஹைதராபாத் சர்வதேச விமானநிலைய நிறுவனத்திடம் கூறியபோது அதைப் பரிசீலித்து அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனைப்படி, முதல் 4 மாதங்களுக்கு உள்நாட்டுப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அமைச்சகம் கூறிய யோசனையைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியது பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனத்தின் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பிரன்னர் தெரிவித்தார்.

கட்டண விலக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 மாத காலத்திற்குள் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிட ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் விமானம் தரையிறங்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் வரும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு இந்த விஷயம் குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணிகளிடம் ரூ.675 மற்றும் வரியை மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் ரூ.955 மற்றும் வரியை வசூலிக்கவும் பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனம் முடிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in AAI, Airport, Andhra, AP, aviation, Bangalore, Bengaluru, Devanahalli, Domestic, Hyderabad, International, Mandakalli, Mysore, UDF, User, Vayudoot | Leave a Comment »

Interview with Yediyurappa – State of Karnataka and BJP, Janata Dal, Deve Gowda & Congress

Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2007

நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல!: எடியூரப்பா

எடியூரப்பா – கர்நாடக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக பரவலாக மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர். ஜனசங்க காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் எடியூரப்பாவின் மிகப்பெரிய பலம் நேர்மையானவர், கைசுத்தமானவர் என்கிற நல்ல பெயர். சக்தி வாய்ந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது அடுத்த பலம். எடியூரப்பாவும் குமாரசாமியும் இணைந்து ஆட்சி அமைத்தபோது அது உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அமைந்தது. காரணம்,

கர்நாடகத்தில் சக்தி வாய்ந்த இரண்டு சாதிப் பிரிவுகளான லிங்காயத்துகளும் வொக்கலிகர்களும் இணைந்த கூட்டணியாக

அது இருந்தது என்பதால்தான். மதச்சார்பற்ற ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்த பிறகும்

அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்கிற அரசியல் குழப்பத்துக்கு நடுவில் எடியூரப்பாவின் கருத்துகளை அறிந்துகொள்ள முற்பட்டோம். கர்நாடகத்தின் முன்னாள் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா

“தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

குமாரசாமி அமைச்சரவையிலிருந்து விலகி, ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

எங்களது உடன்பாட்டின்படி ஆட்சி மாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதால் நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டது உண்மை. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவித்திருந்தால் அதில் பிரச்னையே இருந்திருக்காது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம்.

அப்படியானால் இப்போது சட்டமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு வழிகோலுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. குமாரசாமி அமைச்சரவைக்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது அப்படியொரு நிலைமை இருந்தது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, மதச்சார்பற்ற ஜனதாதளம் எங்களை ஆதரிக்க முன்வந்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எங்களது கூட்டணிக்கு இருப்பதால், எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் நியாயம். அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சொல்கின்றன.

உங்களுக்கே இது சந்தர்ப்பவாதமாகப் பட வில்லையா?

அரசியலில் ஈடுபடுவதும், ஆட்சியில் அமர்வதும் மக்களுக்குச் சேவை செய்யவும், நமது கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தவும் நமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்பதுதான் உண்மை. எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்னும் போது நாங்கள் பழி வாங்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வசைமாரி பொழிந்த தேவகௌடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்வது சந்தர்ப்பவாதமில்லையா?

நாங்கள் அவர்களது ஆதரவைக் கோரவில்லை. அவர்கள்தான் வலியவந்து ஆதரவு தந்திருக்கிறார்கள். மேலும் எங்களது ஒப்பந்தப்படி உடனடியாக ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்காதது தவறு என்று குமாரசாமி பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதற்கு மக்கள் மன்றத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அவரது எண்ணத்தையும், செயல்பாடுகளையும் சந்தேகிப்பது நியாயமல்ல. அவரே வலியவந்து ஆதரவு அளித்த பிறகு, எங்களுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் எந்தவித சந்தர்ப்பவாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

உங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த குமாரசாமி இப்போது திடீரென்று வலிய வந்து ஆதரவு தருவது ஏன்?

சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்கும் நிலைமை. புதுதில்லியில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நிருபர்களிடம் பேசும் போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்காவது இருக்குமானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதில் தனக்குத் தடையேதுமில்லை என்று அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். இதுதான் நடந்தது.

அதனால் ஆளுநர் உங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?

மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் ஆட்சி அமைக்க, தனது ஒப்புதலை அளிக்கிறது. அந்த ஒப்புதல் கடிதத்தை முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான குமாரசாமி ஆளுநரிடம் அளிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். எங்களது கட்சியும்

ஏகமனதாக என்னைத் தேர்வு செய்கிறது. 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் நிலையில், என்னை ஆட்சி அமைக்க அழைப்பதுதானே முறை?.

நீங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய போது அவர் என்னதான் சொன்னார்?

உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பது தெரிகிறது. நான் அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டவன். அதற்கு ஏற்றவாறு அறிக்கை தயாரித்து எனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.

அவரது செயல்பாடு குறித்து உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?

ஓர் ஆளுநரின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பது முறையல்ல. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் ஆளுநரிடம் வருத்தம் உண்டு. குமாரசாமி அமைச்சரவையிலிருந்து நாங்கள் விலகி, எங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோது, ஆளுநர் நியாயமாகச் செய்திருக்க வேண்டிய விஷயம், குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வதல்ல. சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமையில்தான் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அவர் பரிந்துரை செய்திருக்க வேண்டும்.

மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், நீங்கள் எப்படிப் பெரும்பான்மையை நிரூபித்திருப்பீர்கள்?

அது ஆளுநர் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல. இந்தச் சட்டமன்றத்தைப் பொருத்தவரை அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அந்த வகையில், ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆளுநரின் செய்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவு ஆளுநரால் எடுக்கப்பட்டதா, இல்லை, மத்திய அமைச்சரவையால் எடுக்கப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்து அல்லது அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் முயற்சிதான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்திருப்பது என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

இத்தனை குழப்பங்களுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறீர்களா?

அதிலென்ன சந்தேகம்! தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனோபாவம் காங்கிரஸ் தலைமைக்கு எப்போதுமே உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பிரதமரைச் சந்தித்தீர்களே, அவர் என்ன சொன்னார்?

பிரதமரை நாங்கள் சந்தித்தபோது உள்துறை அமைச்சரும் இருந்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்கள். குடியரசுத்தலைவரும் அதையேதான் சொன்னார். ஆனால், ஒரு வார காலமாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லையே?

அவர்களுக்குத் தெரிந்த அரசியல் சட்டத்தில் இப்படித்தான்எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? அரசியல் சட்டப்படி எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது தான் நிஜம்.

இன்னாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் திருப்தி அடைந்தால்தான் ஒருவரை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிற பிரிவும் இருக்கிறதே?

எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு இந்தப் பிரிவுக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. எந்தவொரு அரசின் பெரும்பான்மையும் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அனுமதித்து, சட்டமன்றத்தில் எங்களது பெரும்பான்மையை நிரூபிக்க கோருவதுதான் ஆளுநர் நியாயமாகச் செய்ய வேண்டிய விஷயம். அவர் அதைச் செய்யத் தவறினால், அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்கிற பழியைச் சுமக்க நேரும்.

ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்கள் இருப்பதும், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் தெரிந்த பிறகும் உங்களை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமா?

அதிருப்தியாளர்கள் இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்போது இல்லை. பிரகாஷ் எங்களுடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல. தனது முழு ஆதரவையும் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அது ஒருபுறம் இருக்கட்டும். அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள், கட்சி பிளவுபட வாய்ப்பிருக்கிறது, பெரும்பான்மை கிடையாது போன்ற சாக்கு போக்குகளைச் சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தானே பொம்மை வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்களுடைய பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அடுத்தபடியாக 65 உறுப்பினர்களுடைய காங்கிரஸ் கட்சியும், மூன்றாவதாக 58 உறுப்பினர்களுடைய மதச்சார்பற்ற ஜனதாதளமும் இருக்கின்றன. சட்டமன்றத்தில் அதிக இடங்களை உடைய பெரிய கட்சி என்கிற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.

உங்களுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது எப்படி ஆட்சி அமைக்க அழைப்பது? சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது மதச்சார்பற்ற ஜனதாதளம் எதிர்த்து வாக்களிக்காது என்பது என்ன நிச்சயம்?

இதைப்பற்றி ஆளுநர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிக எண்ணிக்கையை உடைய கட்சி என்கிற வகையில் எங்களுக்கு வாய்ப்பளித்த பிறகு, எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் அவர் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதோ, அல்லது சட்டமன்றத்தைக் கலைப்பதோ நியாயம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் அப்படிச் செய்ய முடியாது, செய்யக்கூடாது.

குமாரசாமி மன்னிப்பு கேட்டுவிட்டார், நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள், ஆனால், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகெüடா 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறாரே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பாரதிய ஜனதா கட்சியுடன் 20 மாதங்களுக்கு முன்னால் கூட்டணி அமைத்தது குமாரசாமிதானே தவிர தேவகெüடா அல்ல. முதலில் அவர் அதை எதிர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளில் பல குமாரசாமிக்கு உடன்பாடானவை என்று கருத முடியாது. இன்னொரு விஷயம். தேவகெüடாவின் நிபந்தனைகள் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நான் இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.

இவ்வளவு பிரச்னைகள், மனக்கசப்புகள், பரஸ்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் இணைந்து சுமுகமாகச் செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக முடியும். எங்களது 20 மாத கால ஆட்சிதான் அதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில் எனக்கும் குமாரசாமிக்கும் உள்ள உறவும் நெருக்கமும் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதோ இப்போதுகூட எனது அறையில்தான் அவர் அமர்ந்திருக்கிறார், நீங்கள் பார்த்தீர்களே. எங்களது இந்தக் கூட்டணி 20 மாதங்களில் சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம். நாங்கள் ஒன்றுபட்டு இருந்தால் இதைவிட பலமான சக்தி வேறு எதுவும் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம். எங்களது கூட்டணியின் சுமுகமான செயல்பாடு குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.

பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பலமானது என்கிறீர்கள். உங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெறுப்படைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இந்தச் சூழ்நிலையில் தேர்தலைச் சந்தித்து மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டியதுதானே?.

தேவையில்லாமல் மக்கள் மீது தேர்தலைத் திணிப்பது முறையல்ல. இன்னும் 19 மாதங்கள் இந்தச் சட்டமன்றத்திற்கு ஆயுள் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் என்று சொன்னால், குறைந்தது அடுத்த நான்கு மாதங்களுக்காவது அரசு இயந்திரமே ஸ்தம்பித்துப் போய்விடும். அத்தனை வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிடும். கடந்த 20 மாதங்களில் நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையாத நிலைமை என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். வேறு வழியில்லை என்றால் மக்கள் மன்றத்தை சந்திப்பதுதான் முறை. இப்போது வழி இருக்கிறது என்பது மட்டுமல்ல, நிலையான அரசு அமையவும் வாய்ப்பு இருக்கும் நிலையில் தேர்தல் என்பது தேவையில்லாத செலவு.

நீங்கள் தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறீர்கள் போலிருக்கிறதே?

சொல்லப்போனால் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். சட்டமன்றம் கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, நான் தெளிவாகவே ஒரு கருத்தை வலியுறுத்தினேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே யாருடனும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பார்களேயானால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று சொன்னவன் நான்தான். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல், தேர்தல் என்று உதட்டளவில் சொன்னார்களே தவிர, இப்போதும் அவர்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் தேர்தலைத் தள்ளிப்போட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் தனது ஆட்சியை நடத்த விரும்புகிறதே தவிர தேர்தலைச் சந்திக்க தயாராக இல்லை. அதனால்தான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்தார்கள். குமாரசாமி மீண்டும் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நடந்துமுடிந்த சம்பவங்களால் பாரதிய ஜனதாவின் இமேஜ் குறைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய பாஜக துணிந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?

எங்களது இமேஜ் எள்ளளவும் குறையவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது. நான் துணை முதல்வராகத் தொடர சம்மதித்திருந்தால், பதவிதான் பெரிது என்று கருதி இருந்தால், இந்தப் பிரச்னைகளே எழுந்திருக்காது. அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு நான் ஒருநாள்கூடத் துணை முதல்வராகத் தொடர மாட்டேன் என்று சட்டமன்றத்தில் கூறியிருந்தேன். அதேபோல, முதல்வரிடம் எங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டோம். ஆட்சிக்கு ஆதரவளித்து வந்ததைத் திரும்பப் பெற்றோம். இவையெல்லாம் எங்களது பதவி ஆசையாலா அல்லது பதவியின் பளபளப்பில் நாங்கள் மயங்காததாலா?

உங்களுடைய கருத்துப்படி ஆளுநர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்கிறீர்கள். அப்படித்தானே?

நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப் பதவியின் கெüரவத்தை நான் குலைக்க விரும்பவில்லை. ஆனால், மக்கள் அப்படி நினைக்கிறார்கள். ஆளுநர் மாளிகை காங்கிரஸ் கட்சி அலுவலகமாகச் செயல்படுகிறது என்பது மக்கள் மத்தியில் நிலவும் பரவலான கருத்து. நடந்து கொண்டிருக்கும் செயல்களையும், செயலிழந்த நிலையையும் பார்க்கும்போது, மத்திய அரசின் வற்புறுத்தல்களுக்கு ஆளுநர் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. காங்கிரஸின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்று மக்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை.

மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூருக்கு வந்ததும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதும் தேவகெüடாவின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறதே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.எம். கிருஷ்ணா ஒரு ஜென்டில்மேன். அவர் இதுபோன்ற அரசியல் பேரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது கருத்து. எனக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மரியாதைக்குரிய சிலரில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒருவர்.

ஒரு சின்ன சந்தேகம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணியாகத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்று நம்புகிறேன். அடுத்த 19 மாதங்கள் நாங்கள் இணைந்து ஆட்சியில் தொடர்ந்தால், கர்நாடகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் ஆட்சி அமையாது. அந்த அளவுக்கு எங்களது ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்.

இனி ஆளுநர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?

எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது. அரசியல் சட்டப்படி அதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. மேலும், 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல்போனால், சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோல வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேறு வருகிறது. இங்கே எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதன் தாக்கம் குஜராத்தில் எதிரொலிக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். அதனால், எந்த நேரத்திலும் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பளிச்சென்று சொல்லுங்கள். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் தேவகெüடாவா? காங்கிரசா?

நிச்சயமாக காங்கிரஸ்தான். அதில் காங்கிரஸ்காரர்களுக்கேகூட சந்தேகம் இருக்காது.

—————————————————————————————————————————————–கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார் முதல்வர் பதவியை ஏற்கவுள்ள பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா (இடது). உடன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி.

பெங்களூர், நவ. 9: ஆட்சி அமைக்க ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்ததையடுத்து கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா (64) நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கிறார்.

கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து எடியூரப்பாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் எனவே புதிய அரசு அமைக்கும்படி எடியூரப்பாவிடம் தாக்கூர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது தலைமையில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும் என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:

பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைச்சரவை நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும். பதவி ஏற்பு நேரம், இடம் குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்றார்.

குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அக்டோபர் 7-ம் தேதி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி முதல் கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

முதலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்ளாத மதச்சார்பற்ற ஜனதா தளம் பிறகு ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் அக்டோபர் 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கடிதம் கொடுத்தனர்.

மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவிக்கும் 129 எம்எல்ஏ.க்களின் பிரமாணப் பத்திரமும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் நவம்பர் 6-ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன் இரு கட்சிகளையும் சேர்ந்த 125 எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.

இதையடுத்து நவம்பர் 8-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு, கர்நாடக ஆளுநர் அளித்த அறிக்கை மீது விவாதித்தது. பிறகு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள தீர்மானித்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் தாக்கூர்.

கெüடாவுடன் குமாரசாமி, எடியூரப்பா ஆலோசனை

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெüடாவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில், கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் அரசு அமைய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு அமைகிறது. வியாழக்கிழமை தில்லி சென்றிருந்த எடியூரப்பா மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வியாழக்கிழமை இரவு பெங்களூர் திரும்பினார்.

வெள்ளிக்கிழமை காலை எடியூரப்பா மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா சென்றார். காவிரி ஆற்றில் குளித்த பிறகு அங்குள்ள சாஸ்வதி மந்திரில் நடத்தப்பட்ட சூர்ய நாராயணா ஹோம பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், சந்திரமவுளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார்.

ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தேவெ கெüடாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார்.

புதிய கூட்டணி அமைச்சரவை எப்போது பதவி ஏற்பது, யார்-யாருக்கு எந்தெந்த துறைகள் என்பது குறித்து அவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு எடியூரப்பாவும், குமாரசாமியும் ரகசிய இடத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் அங்கிருந்து நேராக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு, ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.

தென் மாநிலங்களில் முதன்முதலாக…

தென் மாநிலங்களில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நவம்பர் 12-ம் தேதி அமைக்கிறார் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

பெரும் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடகத்தின் 25-வது முதல்வராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

—————————————————————————————————————————————–

35 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவர் எடியூரப்பா

பெங்களூர், நவ. 9: மண்டியா மாவட்டம் பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). பிறகு இவரது குடும்பம் ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கினார் எடியூரப்பா.

ஜனசங்கத்தில் சேர்ந்த எடியூரப்பா 1972-ம் ஆண்டு ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவசாயிகளின் தலைவர் என்று ஹிந்து மதத் தலைவர்களிடையே பிரசித்தி பெற்றவர் எடியூரப்பா. அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் இத்தலைவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுப்பார்.

அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.

1983-ம் ஆண்டு முதன் முதலாக ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2000-ம் ஆண்டு முதல் 2004 வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், மாநில பாஜக தலைவராக இருமுறை பதவி வகித்துள்ளார். பாஜகவை கிராம அளவில் வளர்த்தத் தலைவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் இவர்.

பாஜக நடத்தும் போராட்டங்களில் முன்னின்றி கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். குறிப்பாக விவசாயிகள் நலனுக்காக ஏராளமான முறை போராட்டங்களை நடத்தியுள்ளார்.

2004-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தாலும், பாஜகவை ஆதரிக்க காங்கிரúஸô, ம.ஜனதாதளமோ முன்வரவில்லை.

இதனால் காங்கிரஸ் தலைமையில் ம.ஜனதாதள கூட்டணி அரசு அமைந்தது. இதனால் முதல் இடத்தைப் பிடித்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பாஜக. இந்நிலையில்தான் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்த ம.ஜனதாதள தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.

அப்போது ம.ஜனதாதளத்துக்கு 50 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தாலும், 79 எம்எல்ஏக்கள் உடைய பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது.

இவ்விரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் குமாரசாமி ஒப்படைக்காததால் அக்டோபர் 7-ம் தேதி குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.

இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மாநில சுற்றுப்பயணத்தை பாஜக மேற்கொண்டது. இப்போராட்டத்தால் கலக்கம் அடைந்த ம.ஜனதாதளம், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.

ஆனால் தென் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு கர்நாடகம் நுழைவு வாயிலாக ஆகிவிடக்கூடாதே என்ற கவலையில் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணி அரசைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தது.

ஆனால் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் வேறு வழியின்றி பாஜக தலைமையில் அரசு அமைக்க மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி கர்நாடகத்தின் 25-வது முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் எடியூரப்பா. தென் மாநிலங்களில் அமையும் முதல் பாஜக அரசு இது என்பது குறிப்பிடத்தக்கது.

—————————————————————————————————————————————–
அமைச்சரவையில் சம இடங்கள் வேண்டும்: குமாரசாமி கோரிக்கை

பெங்களூர், நவ. 9: எடியூரப்பா தலைமையில் அமையும் அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு சம அளவில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடக சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த சட்டத் திருத்தப்படி, கர்நாடகத்தில் 34 அமைச்சர்களுக்கு மேல் நியமனம் செய்யக் கூடாது.

இந்த வகையில் கூட்டணி ஆட்சி அமையும்போது இரு கட்சிகளும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்கள் என்று பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி அமைக்கின்றன. 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அமைந்தபோது முதல்வராக ம.ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

அதுபோல் ம.ஜனதாதளத்தைச் சேர்ந்த முதல்வர் உள்பட 16 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அதுபோல் துணை முதல்வர் உள்பட பாஜகவை சேர்ந்த 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 79 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால் அக்கட்சிக்கு கூடுதலாக அமைச்சரவையில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இப்போது 21 மாதங்களுக்குப் பிறகு பாஜக தலைமையில் ம.ஜனதாதள கூட்டணியில் ஆட்சி அமையவுள்ளது. இப்போது முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் பதவி ம.ஜனதாதளதுக்கு போகிறது.

இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை இரு கட்சிகளும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை அமைச்சர்களின் எண்ணிக்கையை பாஜகவும்- ம.ஜனதாதளமும் 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம் என்றார்.

—————————————————————————————————————————————–

அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை படம் பிடித்து காட்டியது கர்நாடகா

21,புதன், நவம்பர் 2007
கார்த்திகை 05

புதுடில்லி: கர்நாடகாவில் அரசியலில் திடீர் திடீரென ஏற்பட்ட திருப்பங்கள், அம்மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பவாதிகள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே கர்நாடக அரசியல் அமைந்து விட்டது.

காங்., ஆட்சியை கவிழ்த்த, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், மற்ற கட்சிகளால் மதவாதக் கட்சி என்று வர்ணிக்கப் படும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதை முதல் சந்தர்ப்பவாதம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதலில் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்களை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி துõக்கிய தேவகவுடா, பின்னர் தனது மகன் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆலோசகராகவே மாறிவிட்டார். இது முதல் பல்டி.

ஒப்பந்தப்படி, 20 மாதத்துக்கு பிறகு பா.ஜ.,விடம் ஆட்சி ஒப்படைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதை தேவகவுடா உறுதி செய்து விட்டார். பா.ஜ., ஆட்சிக்கு வழி விட மறுத்தார். இடைத் தேர்தல் நிலை உருவானது. இந்த குழப்பத் தில் தேர்தலை சந்தித்தால், “அம்பேல்’ தான் எனக் கருதிய தேவகவுடா, பா.ஜ.,வுடன் மீண்டும் பேச்சுக்கு முன்வந்தார். இது இரண்டாவது சந்தர்ப்பவாதம்.

தேவகவுடா சொல்வதற்கெல்லாம் பா.ஜ., தலையைத் தலையை ஆட்டியது. இது பா.ஜ.,வின் சந்தர்ப்பவாதம். எப்படியும், இவர்களின் கூட்டணி அரசு நீடிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட காங்., சட்டசபை கலைப்பை வற்புறுத்தாமல், வேடிக்கை பார்த்தது. இது காங்.,கின் சந்தர்ப்பவாதம்.

சொன்னதற்கெல்லாம் வளைந்து கொடுத்த பா.ஜ.,வுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூலம் கடிதம் கொடுக்க வைத்தார் தேவகவுடா. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், தேவகவுடா மூளையில் புதிய யோசனை உதித்தது.

இதுவரை நாடுகளுக்கு இடையில் தான் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி வந்தன. முதல் முறையாக, 12 அம்சங்கள் என்ற பெயரில் 12 நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தை தயாரித்தார் தேவகவுடா. வளைந்து கொடுத்து வந்த பா.ஜ., இந்த விஷயத்தில் விறைப்பாக நிமிர்ந்து நின்றது. மீண்டும், “யு’ டர்ன் எடுத்த கவுடா, பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க மறுத்தார். விளைவு, ஏழு நாள் முதல்வராக பதவி இழந்தார் எடியூரப்பா.

காங்., ஆட்சியை கவிழ்த்த கவுடா, அடுத்ததாக பா.ஜ., ஆட்சியையும் கவிழ வைத்தார். இதனால், கர்நாடகாவில் கவுடாவின் கட்சி தீண்டத்தகாத கட்சி என்ற நிலைக்கு சென்று விட்டது. இனி எந்த கட்சியும் தேவகவுடாவுடன் கூட்டு சேர தயாராக இல்லை.

“அரசியல் தார்மீகத்தை எல்லாம் தாண்டி, கடுமையான மூளை விளையாட்டுகளில் அப்பா தேவகவுடாவும், மகன் குமாரசாமியும் ஈடுபட்டதால் தான் இந்த நிலை’ என்று கவலைப்படும் பா.ஜ., அனுதாப அலையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தனி மெஜாரிட்டி தான் நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு ஓட்டுகள் அள்ளிக்கொண்டு போகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது காங்., எப்படியும் புது அரசியல் வியூகங்களை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார் தேவகவுடா. தேர்தல் முடிவுகளில் தான் மக்களின் மன நிலை தெரியவரும்.

சர்ச்சையில் சிக்கிய கவர்னர்: கர்நாடகாவில் கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான ரமா ஜோன்ஸ் விமர்சனம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மனம் மாறி, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரிடம் கடிதம் கொடுத்தனர். பா.ஜ.,வுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாக உறுதி செய்த பிறகே, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதன் பின், சட்டசபையிலும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இது தேவையற்றது. கர்நாடகாவில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரின் இந்த முடிவு தான் காரணம்.

அதேபோல, ஆதரவை பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் படி பா.ஜ.,வை மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது, சட்டவிரோதமானது; இது அரசியலில் தார்மீகம் என்பதை படுபாதாளத்தில் தள்ளும் செயல். முக்கிய துறைகளை கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடித்தது தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணம். முதல்வருக்கு உரிய அந்தஸ்தை தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் கேட்கிறார். இவ்வாறு ரமா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
—————————————————————————————————————————————–

கட்சித் தாவலின் மறுவடிவம்?

ஆசை கண்ணை மறைக்கும் எனும் வாழ்வியல் உண்மையை உணர்த்திய அங்கத-துன்பியல்-நாடகம்தான் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் துறந்ததும்.

நல்ல நாடகங்களில் இறுதி முடிவை முன்கூட்டியே உணர்த்துகின்ற படிமங்கள், காட்சிகள் இடம்பெறுவதைப்போலவே, கர்நாடக அரசியலிலும் இறுதி முடிவின் அடையாளங்கள் தொடக்கம் முதலாகவே தோன்றிக்கொண்டே இருந்தன.

“முன்பாதி நான் முதல்வர்; பின்பாதி நீர் முதல்வர்’ என்ற முதல் ஒப்பந்தமே தார்மிகக் குறைபாடு கொண்டதுதான். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 56 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜகதான் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

ஒப்பந்தப்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆட்சிக்காலம் முடிந்தவுடன் தாமாக முதல்வர் பதவியை பாஜகவுக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல, காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயாராகியது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை அதில் உள்ள அதிருப்தியாளர் கோஷ்டி மூலம் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது என்பதால் கோபம் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டு அமைக்க திரும்பி வந்தபோது, அல்லது தேவ கெüடா 12 நிபந்தனைகள் விதித்தபோதாகிலும் பாஜக புரிந்துகொண்டிருக்க வேண்டும். புரியாமல் இருந்திருக்க முடியாது. ஒருவேளை, வாஜ்பாய் 13 நாட்களில் பிரதமர் பதவியை இழந்தார் என்ற களங்கம் மறைய, எடியூரப்பா 8 நாள் முதல்வர் பதவியை ஏற்றிருப்பாரோ! அல்லது, அடுத்த ஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் பரிவு வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் யுக்தியாக இருக்குமோ!

எதுவாக இருப்பினும், இன்றைய அரசியலில் நிபந்தனையற்ற ஆதரவு என்பதற்கு என்ன பொருள்?

ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டமாக அணிவகுத்து நின்று, கடிதம் கொடுத்து, பெரும்பான்மையைக் காட்டி, ஆட்சிக்கு அழைக்கும்படி ஆளுநரைக் கட்டாயப்படுத்திய பின்னர், ஆட்சியில் அமர்த்திய பின்னர், ஆதரவை விலக்கிக் கொள்வது ஜனநாயகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கேலிக்கு இலக்காக்கிவிட்டது.

இத்தகைய முறையற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் போல, ஆதரவு அளிப்புக்கும் ஒரு தெளிவான, விதிமுறைகளுடன்கூடிய சட்டம் இன்றியமையாதது.

அரசுக்கு ஆதரவை அளிப்பதும் அல்லது பாதியில் ஆதரவை விலக்கிக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பதும் கட்சித் தாவலின் மறுவடிவம்தான். கட்சித் தாவலில் உறுப்பினர்கள் இடம் மாறி எண்ணிக்கையை சரி செய்வதைப் போன்றதுதான், வெளியிலிருந்து அல்லது உள்ளிருந்து அளிக்கப்படும் ஆதரவு தடம் மாறுவதும்.

இனி வரும் காலங்களில், மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரிதாகி வருகிறது. துணையாக வேறு சில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகளே அதிகமாகி வருகின்றன.

தேர்தலில் போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காக அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர்களைத் ஆதரித்து தேர்வு செய்த வாக்காளர்களுக்கு, அவர்கள் எத்தனை மோசடி செய்தாலும் திரும்பப் பெறும் அல்லது நீக்கும் உரிமை இல்லை. அப்படியெனில், மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்த இவர்கள் அளிக்கும் ஆதரவை மட்டும் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் உரிமை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

மக்கள் எப்படி ஆதரவை அளித்துவிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்கின்றார்களோ, அதேபோல “நிபந்தனையற்ற ஆதரவு’ தரும் கட்சிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு, பொறுமை காப்பதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். சிறந்த ஜனநாயக மரபாகவும் அமையும். ஆதரவைத் தருவதாகக் கடிதம் கொடுப்பதும், தராமல் கவிழ்ப்பதும், பாதி ஆட்சியில் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டிக்கொண்டே இருப்பதும், ஓர் அரசு முழுமையாக செயல்படுவதற்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதே மத்தியிலும் மாநிலத்திலும் இப்போது நாம் காணும் உண்மை நிலை.

ஐந்து ஆண்டுக்கு முற்றாக ஆதரவு “உண்டென்று சொல்; இல்லை அன்றென்று சொல் இந்த திரிசங்கு சொர்க்கம் தேவையில்லை’.
—————————————————————————————————————————————–

தேவ கௌடா கட்சி உடைகிறது

பெங்களூர், நவ. 24: கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்கும் அறிவிப்பு வெளியானதும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக உடைந்து, ஒரு பிரிவினர் காங்கிரஸிலும் மற்றொரு பிரிவினர் பாஜகவிலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.

தேவ கெüடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தபோது முதல் 20 மாதங்கள் ம.ஜனதா தளம் தலைமையிலும், அடுத்த 20 மாதங்கள் பாஜக தலைமையிலும் ஆட்சி அமைக்க இரு கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் ம.ஜனதாதளத் தலைவர் குமாரசாமி ஒப்படைக்கவில்லை. இதனால் குமாரசாமி தலைமையில் இருந்த அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளத்தின் மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் திடீரென அக்டோபர் 27-ம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளம் ஆதரவு தெரிவித்து, ஆட்சியும் அமைக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் நவம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க ம.ஜனதாதளம் முடிவு செய்ததால், எடியூரப்பா அமைச்சரவை ராஜிநாமா செய்தது.

இது மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் தேவ கெüடா, குமாரசாமி ஆகியோர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு, திடீரென பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதால் பிரகாஷ் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் மீண்டும் காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க கெüடா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. கெüடாவுடன் கூட்டுசேர காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு சட்டப் பேரவையை கலைக்கவும் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நாடாளுமன்றம் இந்த அறிக்கை மீது திங்கள்கிழமை விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே கர்நாடக சட்டப் பேரவை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்னும் 19 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது தேர்தலைச் சந்திக்க எந்தக்கட்சி எம்எல்ஏக்களும் விரும்பவில்லை.

இந்த சூழ்நிலைக்குக் காரணம் ம.ஜனதாதள தலைமைதான் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கருதுகிறார்கள். சட்டப் பேரவை கலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ம.ஜனதாதளம் இரண்டாக பிளவுபடும் என்று கூறப்படுகிறது.

அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.பிரகாஷ் தலைமையில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதில் பல முக்கியத் தலைவர்களும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை கூடிய காங்கிரஸ் உயர் நிலைத் தலைவர்கள் கூட்டத்தில் ம.ஜனதாதளத்திலிருந்து பலர் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது கட்சியில் சேருவோருக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டது.

இதுபோல் மற்றொரு பிரிவினர் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான செலுவராய சுவாமி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்.

இதை ம.ஜனதாதளத்தின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே பெரும்பான்மையினர் விரும்பினர். இந்நிலையில்தான், பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ம.ஜனதாதளம் விலக்கிக் கொண்டதால் எடியூரப்பா அரசு கவிழ்ந்தது. எனவே செலுவராய சுவாமி உள்பட ம.ஜனதாதளத்தின் பல எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாள்களில் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—————————————————————————————————————————————–

Posted in Bangalore, Bengaluru, Biosketch, BJP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Deve Gowda, Ediyurappa, Faces, Gowda, Interview, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JD, JD(S), JD(U), Karnataka, people, State, Yediyurappa | Leave a Comment »

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

Posted in Accord, Allegations, Alliance, Balance, Bangalore, Bengaluru, BJP, candidates, Clean, CM, Coalition, Commerce, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Coomarasami, Coomarasamy, Corruption, Crores, deal, Devegowda, EC, Economy, Election, Elections, Expenditure, Expenses, Forecasting, forecasts, Gowda, Income, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JD, Karnataka, kickbacks, Kumarasami, Kumarasamy, Lakhs, Mela, Minister, MLA, MLC, MP, P&L, parliament, Party, Politics, Poll, Polls, Profit, Projections, Rich | 1 Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Notorious criminal Vellai Ravi & associate killed in encounter

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi « Tamil News – வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?:

07.06.07 – குமுதம் ரிப்போர்ட்டர் :: தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம்.


தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெள்ளை ரவிசென்னை, ஆக. 3: சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரைச் சேர்ந்த சாமி -மாரியம்மா தம்பதியின் மகன் ரவி (எ) வெள்ளை ரவி. இவர் 8-ம் வகுப்பு வரை படித்தவர். இவருக்கு 2 சகோதரிகளும், 2 சகோதரர்களும் உள்ளனர்.1991 முதல் ரவுடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் என மொத்தம் 21 வழக்குகள் உள்ளன.இதில் 5 கொலை வழக்குள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் 5 முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.எச்சரிக்கை: வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி சேராவும், வெள்ளை ரவியும் எதிரெதிர் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள். 2001-ல் ஷகீல் அக்தர் துணை கமிஷனராக இருந்த போது இருவரையும் அழைத்து சமரசமாக செல்லும்படி எச்சரித்தார். அச்சமயத்தில் இருவரும் சமாதான புறா பறக்கவிட்டனர்.தேர்தலில் போட்டி:2001-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் 2,702 வாக்குகள் பெற்றார்.அதன்பின்னர் சிறிது காலம் அமைதியாக இருந்த வெள்ளை ரவி, ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.சென்னை போலீஸ் கமிஷனராக விஜயகுமார் பொறுப்பு வகித்த சமயத்தில் ரவுடிகள் வீரமணி, ராஜாராம், வெங்கடேச பண்ணையர் உள்ளிட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.இதனால் பயந்து போன ரவுடிகள், சென்னையில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மாநிலங்களுக்கு சென்று பதுங்கினர்.

2002 முதல் தலைமறைவாக இருந்த இவர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவி கமலாவும், மகன், இரண்டு மகள்களும் உள்ளனர்.
————————————————————————————————

அடுத்த குறி யார்?

சென்னை, ஆக. 3: ரௌடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த குறி யார்? என்ற பேச்சு ரௌடிகள் மத்தியில் அடிபடத் தொடங்கியுள்ளது.

ஆள் கடத்தல், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரௌடி வெள்ளை ரவி, ஓசூரில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் சுடப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ரௌடிகள் மத்தியில் ஒரு வித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ரௌடிகள் பட்டியல்:

சென்னை மற்றும் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ரௌடிகள்

  • மாலைக்கண் செல்வம்,
  • காதுகுத்து ரவி,
  • கேட் ராஜேந்திரன்,
  • நாகேந்திரன்,
  • சேரா,
  • காட்டான் சுப்பிரமணியன்,
  • ஜெர்மன் ரவி,
  • கருப்பு பாலு,
  • ஸ்டாலின்,
  • திண்டுக்கல் பாண்டியன்

என போலீஸின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இவர்களில் ஒவ்வொரு ரௌடிக்கும் 10 முதல் 20 வழக்குகள் வரை உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரௌடிகளின் நடமாட்டத்தை போலீஸôர் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். இதில் நாகேந்திரன் மட்டும் ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற ரௌடிகளும், அவரது ஆள்களும் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பதாகப் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————–
வெள்ளை ரவி விவகாரத்தில் என் பெயரா?

ஒசூர், ஆக. 3: ரெüடி வெள்ளை ரவியை சுட்டுக் கொன்றச் சம்பவத்தில் என்னுடைய பெயரைப் போலீஸôர் தேவையின்றிப் பயன்படுத்தி களங்கம் ஏற்படுத்தியுள்ளனர் என முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு ஃபேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் வெங்கடசாமி அளித்த பேட்டி:

புதன்கிழமை மாலை 7 மணிக்கு மத்திய கப்பல், போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவரை வரவேற்க தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் நின்றிருந்தேன்.

அப்பொழுதுதான் ஒசூரில் போலீஸôர் நடத்திய மோதலில் 2 ரெüடிகளைச் சுட்டுக் கொன்ற விவரம் எனக்குத் தெரிந்தது.

என்னை ஏன் கடத்தப் போகிறார்கள்? என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இது குறித்து டி.ஜி.பி.யிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, “அவர்கள் உங்களை கடத்தப் போவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சென்னையில் இருந்து ஒசூருக்குப் போலீஸ் குழுவினர் வந்தனர்’ எனக் கூறினார்.

என்னைக் கடத்தப் போவதாகக் கூறினால், போலீஸôர் முதலில் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்கள் இப்படி பேட்டி கொடுத்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி ஃபேக்ஸ் அனுப்பியுள்ளேன் எனக் கூறினார்.

——————————————————————————————-
வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட குணா சாராய வியாபாரி

ஓசூர், ஆக. 3 –

ஓசூர் அருகே ரவுடி வெள்ளைரவியுடன் சுட்டுக்கொல்லப்பட்ட அவனது கூட்டாளி குணா, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாராயம் விற்று வந்தவர் என்ற பரபரப்பான தகவல் தெரியவந்து உள்ளது.

உறவினர்கள் வருகை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள ஈச்சங்கூர் பகுதியில் பிரபல ரவுடி வெள்ளைரவியும் அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து அவர்களது பிணங்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

அவர்களது உடல்களை அடையாளம் காட்டவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அந்த உடல்களை பெற்றுச்செல்லவும் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வெள்ளைரவி மற்றும் குணா ஆகியோரின் உறவினர்கள் வந்தனர்.

அடையாளம் காட்டினர்

வெள்ளைரவி தரப்பில் அவனது தாய் மாரியம்மா, தம்பி தனசேகர், மைத்துனர் பாபு மற்றும் மோகன் ஆகியோரும், குணா தரப்பில் அவனது மனைவி தமிழ்அரசி, தம்பிகள் சுட்டு, இச்சப்பா மற்றும் ராஜு ஆகியோரும் வந்திருந்தனர். ஆஸ்பத்திரியில் அவர்கள் கதறி அழுதபடி வெள்ளைரவி, குணா இருவரின் உடல்களையும் அடையாளம் காட்டினர்.

ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சுட்டுக்கொல்லப்படவர்களின் உறவினர்கள் கூடியதால் அங்கு நேற்று போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

4-வது மகன்

முன்னதாக வெள்ளைரவியின் தாய் மாரியம்மா கூறுகையில் வெள்ளைரவி எனக்கு 4-வது மகன். அவன் சுட்டுக்கொல்லப்பட்டதை டெலிவிஷனில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். `எனது மகனை போலீசார் சுட்டுக்கொன்றது ஏற்கனவே நிர்ணயித்து செய்த சதி’ ஆகும். அவனுக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

குணாவின் மனைவி தமிழ் அரசி கூறியதாவது:-

காய்கறி வியாபாரம்

நானும் எனது கணவர் குணசேகர் என்கிற குணாவும் கர்நாடக மாநிலம் பெல்லாரி நகரில் வசித்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் பெல்லாரியில் உள்ள கவுல்பஜார் மாரியம்மன் கோவில் அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

எனது கணவர் ஒருவரிடம் கூலிக்கு கமிஷன் அடிப்படையில் சாராய வியாபாரமும் செய்து வந்தார். தற்போது சாராய விற்பனைக்கு கர்நாடக அரசு தடைவிதித்து விட்டதால் என்னுடன் சேர்ந்து கணவரும் காய்கறி வியாபாரமே செய்து வந்தார்.

தமிழில் பேசுவோம்

வெள்ளை ரவி தனது மனைவியுடன் பெல்லாரிக்கு வந்து 9 மாதங்களாக தங்கி இருந்தார். அப்போது காய்கறி வாங்க வெள்ளைரவி அடிக்கடி எங்கள் கடைக்கு வருவார். அவர் நன்கு தமிழில் பேசுவார். நாங்களும் தமிழில் பேசுவோம். இதனால் வெள்ளை ரவிக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

அடிக்கடி கடைக்கு வந்து செல்வதால் எனது கணவர் குணாவுக்கும் வெள்ளை ரவிக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவியை நானும் பார்த்து பேசி இருக்கிறேன்.

எனது கணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளை ரவியின் மனைவி தான் டெலிபோன் செய்து என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான், நான் பெல்லாரியில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டு வந்தேன்.

இவ்வாறு தமிழ்அரசி கூறினார்.

——————————————————————————————-

லாட்ஜில் தங்கி இருந்தவரை சமரசத்துக்கு அழைத்துசென்று சுட்டு கொன்றுவிட்டனர்: வெள்ளைரவி அக்காள் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி வெள்ளைரவி. ஓசூர் அருகே நேற்று போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் காலனியில் வசிக்கும் அவரது அக்காள் வாசுகி (54), கதறி அழுதார்.

வெள்ளை ரவி சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி வாசுகி கூறியதாவது:-

என் தம்பி ரவி கடந்த சில மாதங்களாக ரவுடி தொழிலை கைவிட்டு திருந்தி வாழ்ந்தான். ஆனால் போலீசார் அவனை நிம்மதியாக வாழவிடவில்லை. ஏதாவது ஒரு வழக்கில் தண்டனை வாங்கி கொடுத்துவிடலாம் என்று நினைத்தார்கள். போலீசாரின் திட்டம் நிறைவேறாததால் ஆத்திரம் அடைந்தார்கள்.

எப்படியாவது ரவியை சுட்டு கொன்றுவிட வேண்டும் என்று செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு அழைத்து சென்று தீர்த்துகட்ட பார்த்தார்கள். அதுவும் அவர்களால் முடியவில்லை. செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் உதவியோடு என் தம்பி மீது புதிதாக ஒரு வழக்கு போட்டார்கள். அதில் அவன் பணத்தை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்கள்.

அந்த ராஜ்குமார் அசாம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன். வெடி மருந்துகள், ஆயுதங்கள் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக போலீசார் எந்த வழக்கும் போடவில்லை. ஆனால் என் தம்பியை சுட்டுக்கொல்ல கங்கணம் கட்டி கொண்டிருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஓசூரில் உள்ள ஒரு லாட்ஜில் என் தம்பி தங்கி இருந்தான். நேற்று அதிகாலை 2 மணிக்கு அவனது அறைக்கு போலீசார் சென்றுள்ளனர். சமாதானம் பேசி முடித்துவிடுவோம். அதன் பிறகு உனக்கும் பிரச்சினை இருக்காது என்று நைசாக பேசி அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இதை அறிந்ததும் உறவினர் மூலம் ரவியை எங்கே வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டோம். நாங்கள் பிடிக்கவில்லை என்று மாலை வரை போலீசார் மறுத்தனர். திடீரென்று மாலை 5 மணிக்கு போலீசாருடன் நடந்த சண்டையில் சுட்டு கொன்றுவிட்டதாக தகவல் தந்தார்கள்.

அவனை திட்டமிட்டு கொன்று விட்டார்கள். அவனை அழைத்து சென்று பேரம் பேசி இருக்கிறார்கள். அவன் எந்த விதமான பேரத்துக்கும் உடன்பட வில்லை. அதனால் சுட்டு கொன்றுவிட்டார்கள்.

கடந்த 6 மாதமாக இரவு, பகல் எப்போதும் போலீசார் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். என் மகன்களையும் பிடித்து சென்று கொடுமை படுத்தினார்கள். அநியாயமாக என் தம்பியை கொன்றவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
——————————————————————————————-

வெள்ளை ரவி கூட்டாளிகள்: 7 ரவுடிகளை சுட்டு பிடிக்க முடிவு

சென்னை, ஆக. 2-

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவன் வெள்ளை ரவி. பிரபல ரவுடியான இவன் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையை கலக்கி வந்தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல், கொலை- கொள்ளை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்து வந்த இவன், போலீசுக்கு பெரும் சவாலாக விளங்கி வந்தான்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டூழியம் செய்து வந்த ரவுடிகளை போலீசார் தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து போலீசாருடன் நடைபெற்ற மோதலில் ரவுடிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் பயந்து போய் சென்னையை விட்டே ஓட்டம் பிடித்த வெள்ளை ரவி ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளிமாநிலங்களில் பதுங்கி இருந்து தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தான்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவரை கடத்திச் சென்ற வெள்ளை ரவி, அவரை விடுவிப்பதற்காக ரூ.2 கோடி வரை பேரம் பேசினான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் வெள்ளை ரவியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் அருகே வைத்து வெள்ளை ரவியையும், அவனது கூட் டாளிகள் சிலரையும் சுற்றி வளைத்தனர்.

ஆனால் அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் வெள்ளை ரவி தப்பி ஓடிவிட்டான். கூட்டளிகளை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளை ரவிக்கு அடைக்கலம் கொடுத்த அவனது காதலி சானியாவும் போலீசில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளை ரவியை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந் நிலையில் வெள்ளை ரவி ஓசூர் அருகே சொகுசு குடிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த உதவி கமிஷனர் ஜெயகுமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் ஓசூர் விரைந்தனர்.

பின்னர் வெள்ளை ரவி பதுங்கி இருந்த சொகுசு குடிலை சுற்றி வளைத்தனர். அங்கு வெள்ளை ரவியுடன் அவனது கூட்டாளிகள் 8 பேரும் இருந்தனர். போலீசை கண்டதும் கூட்டாளிகள் 7 பேர் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் போலீசில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் பார்த்து போலீசார் சரண் அடைந்து விடுங்கள் என்று எச்சரித்தனர். ஆனால் போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெள்ளை ரவி மற்றும் அவளது கூட்டாளி குணா ஆகியோர் மீது துப்பாக்கி குண்டு கள் பாய்ந்தது. இருவரும் பலியானார்கள்.

இதனையடுத்து தப்பி ஓடிய கூட்டாளிகள் 7 பேருரையும் சுட்டுப்பிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஓசூர் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது வருகிறது. இதற்கிடையே ரவுடிகள் 7 பேரும் பெங்களூருக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அங்கும் தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவனது உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்த பிறகுதான் உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்கள். ——————————————————————————————-

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு: பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்

ஓசூர், ஆக. 2-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன் வெள்ளை ரவி (வயது 42), பிரபல ரவுடியான இவன் சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை மற்றும் தொழில் அதிபர் உள்பட பலரை கடத்தி பணம் பறித்தல் ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டான்.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையில் தொழில் அதிபர் ராஜ்குமாரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறிக்க முயற்சி செய்தான். வெள்ளை ரவியை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடிவிட்டான்.

கடந்த 2 மாதத்துக்கும் மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த அவன் நேற்று முன்தினம் இரவு ஓசூரை அடுத்த தமிழக -கர்நாடக எல்லையில் பாகலூர் அருகே ஈச்சாங்கூர் என்ற இடத்தில் தனியார் சொகுசு குடிலில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தான்.

நேற்று இரவு ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தவருமான வெங்கடசாமியை கடத்தி ரூ.1 கோடி பறிக்க திட்டமிட்டு இருந்தான்.

இந்த தகவல் கிடைத்தும் சென்னையில் இருந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் உதவி கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்- இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று காலை ஓசூர் வந்தனர்.

வெள்ளை ரவி தங்கிய சொகுசு குடில் அருகே போலீசார் பதுங்கி நின்ற னர். குடிலுக்கு வெளியே பாதுகாப்புக்கு நின்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகள் 2 பேரும் உள்ளே சென்று போலீசார் வந்து இருப்பதை கூறி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வெள்ளை ரவியும், அவ னது கூட்டாளிகளும் 2 டாடாசுமோ கார்களில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். போலீசாரை நோக்கி அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். மேலும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் திரும்பி சுட்டனர். இதில் வெள்ளை ரவியும், அவனது கூட்டாளி குணாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி சம்பவ இடத்தில் பலியானான். அவனது கூட்டாளி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தான். இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.

வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோரது உடல்கள் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று வெள்ளை ரவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்கிறார்கள்.

வெள்ளை ரவியின் தாயார் மாரியம்மாள், அண்ணன்கள் தனசேகரன், பாபு மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். பிண பரிசோதனை முடிந்ததும் வெள்ளை ரவியின் உடல் அவரது உறவினரிடம் ஒப் படைக்கப்படுகிறது.

அவனது கூட்டாளி குணா உடல் தொடர்ந்து ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவனைப் பற்றிய விவரம் போலீசாருக்கு தெரியாததால் அவனது உறவினர்கள் வந்த பிறகு தான் அவனது உடல் பரிசோதனை செய்யப்படும்.

காயம் அடைந்த கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இன்ஸ் பெக்டர்கள் தில்லை நடராஜன், பிரதீப், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று திரும்பினார்கள். அவர்கள் ஓசூரிலேயே தங்கி உள்ளனர்.

வெள்ளை ரவியின் மனைவி- குழந்தைகள் எங்கே?

சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைரவியின் தாயார் மாரிம்மாள் மற்றும் அவரது வக்கீல் உள்பட 5 பேர் இன்று காலை ஓசூர் வந்தனர். வெள்ளை ரவியின் மனைவி கமலா மற்றும் அவரது குழந்தைகள் வரவில்லை. அவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தேடி வருகிறார்கள். ——————————————————————————————-

வெள்ளை ரவி உடல் அடக்கம்: வியாசர்பாடியில் பலத்த பாதுகாப்பு

பெரம்பூர், ஆக. 3-

சென்னையை கலக்கிய பிரபல தாதா வெள்ளை ரவி ஓசூர் அருகே போலீ சாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

நேற்றிரவு வெள்ளை ரவி உடல் போலீஸ் வேன் மூலம் ஓசூரிலிருந்து சொந்த ஊரான சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவுக்கு கொண்டு வரப்பட் டது. இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல் வந்து சேர்ந்தது.

இதையொட்டி பக்தவச்சலம் காலனி முழுவதும் டிïப் `லைட்’கள் கட்டப்பட்டிருந்தது. அந்த பகுதி மக்கள் வீட்டு முன்பு காத்திருந்தனர். வெள்ளை ரவி உடல் குளிர் சாதன பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்டது. அவன் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தலில் உடல் வைக்கப்பட்டது.

அவன் உடல் அருகே வெள்ளை ரவி மகள் பாக்கிய லட்சுமி, மகன்கள் கோகுல், நவீன் மற்றும் வெள்ளை ரவி அக்காள் வாசுகி, தாய் மாரியம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தனர்.

பக்தவச்சலம் காலனி பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வெள்ளை ரவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் வரிசையில் செல்ல வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் வெள்ளை ரவி உடல் வியாசர்பாடி முல்லை நகரில் உள்ள இடு காட்டில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதை யொட்டி வியாசர்பாடி பகுதியில் தெரு தெருவாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

உதவிக் கமிஷனர்கள் ராஜாராம், விமலா, சந்திரன் ஆகியோர் வியாசர்பாடியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட வெள்ளை ரவி மனைவி கமலா கூறியதாவது:-

எனக்கு சொந்த ஊர் மைசூர் அருகில் உள்ள ரெய்ச்சூர் பர்மா காலனி. வெள்ளை ரவி தொழில் காரணமாக அடிக்கடி எங்க ஊர் பகுதிக்கு வருவார். அப்போது எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் திருமணம் நடந்தது.

அதன் பிறகு நான் ரெய்ச்சூரில் என் வீட்டிலேயே இருந்தேன். வெள்ளை ரவி மட்டும் சென்னை வந்து செல்வார். நான் ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் சென்னை வந்து செல்வேன்.

செங்குன்றத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது அண்ணன் சேகர் ஆகியோரும் என் கணவ ருடன் சேர்ந்து அசாம் மாநி லத்தில் பொருட்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்கள். சேகருக்கு தொழி லில் நஷ்டம் ஏற்பட்டது. அப்போது என் கணவர்தான் உதவிகள் செய்தார்.

பின்னர் சேகரும், ராஜ்குமா ரும் பெரிய பணக்காரர்கள் ஆகி விட்டனர். அசாமில் அவர்களுக்கு பலரோடு தொடர்பு இருக்கிறது. இதனால் அவர்கள் மீது வழக்குகள் உள்ளது.

என் கணவர் சமீப காலமாக ரவுடி தொழிலை விட்டு விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் என்னோடும், குழந்தை களுடனும் வசித்து வந்தார். ஆனால் என் கணவர் மைசூரில் என்னுடன் தங்கி இருந்த போது ராஜ்குமாரை கடத்தியதாக பொய் வழக்கு போட்டனர்.

எப்படியாவது என் கண வரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். போலீஸ் தேடலுக்கு பயந்து என் கணவர் என் வீட்டிலேயே தங்கி இருந்தார். அங்கும் போலீசார் வந்து விட்டனர்.

இதனால் அவர் மைசூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உப்பிலி எனும் ஊரில் இருக்கும் ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார். அவருக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் தெரியாது. இதனால் துணைக்கு ஒரு வாலிபரை கூடவே தங்க வைத்திருந்தார்.

அப்போது எனக்கு லாட்ஜில் இருந்து அடிக்கடி போன் செய்வார். உப்பிலியில் ஏதாவது ஒரு இடத்துக்கு வரச் சொல்வார். அங்கு நாங்கள் சந்தித்துப் பேசுவோம். அப் போது வீட்டு செலவுக்கு பணம் தருவார்.

அதே போல சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்கு எனக்கு போன் செய்தார். காலை 6 மணிக்கு உப்பிலி வந்து விடு என்றார். நானும் அன்று இரவே புறப்பட்டு அதிகாலை உப்பிலி சென்றேன்.

ஆனால் குறிப்பிட்டப்படி அவர் வரவில்லை. அவரிடம் 3 செல்போன்கள் உண்டு. நான் அந்த 3 செல்போன்களுக்கும் தொடர்பு கொண்டேன். 3 சொல்போன்களுமுë சுவிட்-ஆப்” செய்யப்பட்டிரு ந்தது.

அதன் பிறகுதான் இரவோடு இரவாக என் கணவரை போலீசார் பிடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. அன்று இரவே அவரை போலீசார் திட்டமிட்டு சுட்டுக் கொன்று விட்டனர். வேண்டும் என்றே என் கணவரை கொன்று விட்டனர்.

இவ்வாறு வெள்ளை ரவி மனைவி கமலா கூறினார்.

———————————————————————————————————————

வெள்ளைரவி வேட்டைக்கு “ஆபரேஷன் ஒயிட்” பெயர் – நடிகை சானியா தகவல் மூலம் சிக்கினான்

சென்னை, ஆக. 4-

Vellai ravi photoசென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 19-வது தெருவில் வசித்து வந்தவன் வெள்ளை ரவி. படித்த காலத்தில் ஒழுக்கமானவாக இருந்த இவன் பிறகு தகாத சேர்க்கையால் ரவுடியாக மாறினான். 18 ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையை சேர்ந்த இரும்புக்கடை சுப்பையாவை இவன் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வெட்டிக் கொன்றான். வெள்ளை ரவி செய்த முதல் கொலை இதுதான்.

அதன் பிறகு ஆள் கடத்தல், செம்மரம் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கொள்ளை என்று இவன் பெரிய தாதா ஆகி விட்டான். வீரமணி, பங்க் குமார் உள்பட தற்போது சென்னையில் ரவுடியிசம் செய்யும் பலர் வெள்ளை ரவியால் வளர்க்கப்பட்டவர் களாகும். எனவே தாதா குழு வுக்கு “மூளை”யாக இருந்த வெள்ளை ரவி மீது போலீசார் ஒரு கண் வைத்தப்படியே இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் ரவுடி தொழிலை விட்டு விட்டு திருந்தி விட்டதாக போலீசாரிடம் கூறினான். 2001ம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுக்கள் வாங்கினான். அதன் பிறகு அவனது பழைய கட்ட பஞ்சாயத்து கொடூரங்கள் மீண்டும் தலை தூக்கின.

இதனால் சென்னை போலீசார் வெள்ளை ரவியை சுட்டுக் கொல்ல முடிவு செய்தனர். முதல் கட்டமாக அவனால் வளர்க்கப்பட்ட வீரமணி, பங்க் குமார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மைசூர், அசாம், பர்மா என்று வெள்ளை ரவி ஓட்டம் பிடித்தான்.

வெள்ளை ரவி தலைமறை வாக இருந்து கொண்டே சென்னையில் உள்ள பல தொழில் அதிபர்களை மிரட்டி காரியம் சாதித்து வந்தான். இதனால் அவனை வேட்டையாடும் பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் இந்த “வேட்டைக்குழு”வுக்கு தலைமை தாங்கினார்.

இந்த படையின் வேலைக்கு “ஆபரேஷன் ஒயிட்” என்று பெயரிடப்பட்டது. இந்த படை யினர் தனி தனி பிரிவுகளாக பிரிந்து வெள்ளை ரவிக்கு வலை விரித்தனர். இது வெள்ளை ரவிக்கும் தெரிய வந்தது.

போலீஸ் கைகளில் சிக்கா மல் இருக்க வெள்ளை ரவி கர்நாடகாவுக்கு தப்பிச் சென் றான். இதனால் வெள்ளை ரவியின் தாய் மாரியம்மாள், அண்ணன் தனசேகரன் மற்றும் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில் பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து வியாசர்பாடி, செங்குன்றம் பகுதியில் வெள்ளை ரவிக்கு நெருக்க மானவர்களிடம் போலீசார் தகவல்களை திரட்ட முயன் றனர். அவர்கள் வெள்ளை ரவி மூலம் ஏதாவது ஒரு வகையில் பலன் அடைந்திருந்ததால், யாருமே வெள்ளை ரவி பற்றி வாயை திறக்கவில்லை. இதனால் வெள்ளைரவி மறை விடத்தை கண்டு பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவா லாக இருந்தது.

இந்த நிலையில்தான் போலீ சாருக்கு கை கொடுக்கும் வகையில் நடிகை சானியா கிடைத்தார். “சிவாஜி” பட துணை நடிகையான சானியா, வெள்ளை ரவியின் கள்ளக்காதலி ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக சானியாவை அவன் ஆசை நாயகியாக வைத்திருந்தான்.

சானியா தன் கணவன் சபியுல்லாவுடன் பெரம்பூரில் வசித்து வருகிறாள். வெளிïர்களில் மிகவும் போரடித்து விட்டால் வெள்ளை ரவி மிகவும் ரகசியமாக பெரம்பூர் வந்து சானியாவுடன் இருந்து விட்டுப்போவான். சானி யாவுக்காக அவன் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளான்.

சமீபத்தில் ராஜ்குமார் என்பவரை வெள்ளைரவி ஆட்கள் கடத்தி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில் நடிகை சானியாவும் பிடி பட்டாள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவள் கடந்த வாரம் விடுதலை ஆனாள்.

அவளை கொத்தி சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீ சார் ரகசிய இடத்தில் வைத்து மிரட்டி விசாரித்தனர்.
அப்போது வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் ரகசியமாக தங்கி இருக்கும் தகவலை சானியா கூறி விட்டதாக தெரிகிறது. இதையடுத்தே போலீசார் ஹூப்ளி சென்று வெள்ளை ரவியை பிடித்து வந்து ஓசூர் அருகில் வைத்து “என் கவுண்டர்” செய்திருப்பதாக தெரிகிறது.

ஆனால் வெள்ளை ரவியை சானியா மூலம்தான் பிடித்தனர் என்பதை சானியா தரப்பினர் ஒத்துக் கொள்ள வில்லை. போலீசார் ஏற்கனவே வெள்ளை ரவியை பிடித்து வைத்திருந்தனர். நேரம் பார்த்து போட்டுத் தள்ளி விட்டனர் என்கிறார்கள்.

இதற்கிடையே ஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்துக்காரன் ஒருவன் தங்கி இருந்தான். ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு போய் விட்டு வருவதாக கூறிய அவன் மாயமாகி விட்டான். அவன் மூலம் போலீசார் வெள்ளை ரவியை பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்படியோ போலீசாரின் “ஆபரேஷன் ஒயிட்” சக்சஸ் ஆகிவிட்டது.

—————————————————————–
காசிப்ஸ்: அமைச்சர் உத்தரவால் சரண் அடைந்த தாதா:

வட சென்னையில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வரும் பிரபல தாதா மாலைக்கண் செல்வம். இவர் ஷாக் அடிக்கும் துறையின் அமைச்சருக்கு வலது கரம். சட்டமன்ற தேர்தலின் போது, விஜயகாந்தே அந்த அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவர் மாலைக் கண் செல்வத்துடன் வலம் வருவதாக புகார் கூறினார். அவர் மீது வழக்கு போடக் கூடாது என்று அமைச்சர் தலைகீழாக நின்று பார்த்தார். ஆனால் துணை கமிஷனர் முருகன் பிடிவாதமாக இருந்ததோடு, அந்த தாதா, அமைச்சரின் பாதுகாப்பில் இருப்பதாக கமிஷனர் மூலமாக முதல்வருக்கு நோட் அனுப்பிவிட்டார்.

அதோடு, அவரை தீவிரமாக தேட ஆரம்பித்துவிட்டனர். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில் பிடிபட்டால் சுட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய தாதா, அவர் உத்தரவுபடி கமிஷனரிடம் 8ம் தேதி சரண் அடைந்தான். இதுவரையில் எந்த கமிஷனரும் இது போன்ற தாதாக்கள், ரவுடிகளை சந்தித்ததில்லை. அவர்களை போலீஸ் நிலையத்திலோ, அல்லது கோர்ட்டிலோ சரண் அடைய செய்வார்கள்.

திருந்திவிட்டதாக சொன்ன ரவுடிகள் எல்லாம், போலீசாரின் துப்பாக்கி குண்டுக்குத்தான் பலியாகியிருக்கிறார்கள். ஆனால் நாஞ்சில் குமரன், அமைச்சரின் உத்தரவை ஏற்று தாதாவை சந்தித்து, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். 150 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு இது பெரிய அவமானம் என்று ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் புலம்பியிருக்கிறார்.

———————————————————————————————————————
ரௌடி “மாலைக்கண் செல்வம்’ போலீஸில் சரண்!

சென்னை, ஆக. 9: ரவுடி “மாலைக்கண் செல்வம்’ (41) போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் புதன்கிழமை சரண் அடைந்தார்.

ரெüடி வெள்ளை ரவி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தக் குறி மாலைக்கண் செல்வம்தான் என்று போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்நிலையில் மாலைக்கண் செல்வம் தனது வழக்கறிஞர்களுடன் புதன்கிழமை காலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். பின்னர் கமிஷனர் நாஞ்சில் குமரனை சந்தித்து தான் சரண் அடையப் போவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாலைக்கண் செல்வத்தை வெளியே அழைத்து வந்த கமிஷனர் நாஞ்சில் குமரன், நிருபர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கேள்விகளை கேட்டார்.

எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார் நாஞ்சில்குமரன். அதற்கு மாலைக்கண் செல்வம் 5 பேர் உள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண ஆளாக இருக்கிறாய், உன் மீது எவ்வளவு கொலை வழக்குகள் உள்ளன? முதலில் 3 கொலை வழக்குகள் என்ற மாலைக்கண் செல்வம், இவையெல்லாம் பொய் வழக்கு என்று தெரிவித்தார்.

உடனே கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் குறுக்கிட்டு, 4 கொலை வழக்குகள் உள்ளன என்று பதில் அளித்தார்.

ரெüடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கைகளை போலீஸôர் எடுத்து வருகிறோம். எனவே, குழந்தைகளை நன்றாக படிக்க வை. இல்லையெனில் போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று நாஞ்சில் குமரன் எச்சரித்தார்.

நான் எதையும் செய்யவில்லை என்று மாலைக்கண் செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மாலைக்கண் செல்வத்தை கைது செய்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு மாதவரத்தில் செந்தில்குமார் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மாலைக்கண் செல்வத்தை கைது செய்வதாக இணை கமிஷனர் எம். ரவி தெரிவித்தார்.

“போலீஸ் பொய் வழக்கு’ ரௌடி மாலைக்கண் செல்வம் மீது போலீஸôர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவருக்கும் கொலை வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்றார் மாலைக்கண் செல்வத்தின் வழக்கறிஞர் கிருஷ்ணபிரசாத்.

3 கொலை வழக்குகள்: மாதவரத்தில் மனைவி, 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்த மாலைக்கண் செல்வம் மீது 1988-ல் முதல்முதலாக போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராயபுரத்தில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி மாதவரம் பால்பண்ணையில் குடும்பத்துடன் குடியேறினார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. மூன்று வழிப்பறி கொள்ளை வழக்குகளும், இரண்டு போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. இரண்டு கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இறுதியாக மாதவரத்தில் மாலைக்கண் செல்வத்தின் கூட்டாளி நித்யானந்தன் என்பவர் எதிர் கும்பலைச் சேர்ந்த ரவுடி செந்தில்குமாரை கொலை செய்த வழக்கில் மாலைக்கண் செல்வம் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவர் மூன்று கன்டெய்னர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார்.

———————————————————————————————–

என்கவுண்டருக்கு பயந்து ரவுடி மாலைக்கண் செல்வம் போலீசில் திடீர் சரண் – கொலைசதி வழக்கில் கைது

சென்னை, ஆக. 8-

சென்னை மக்களுக்கு இடைïறாக இருக்கும் மேலும் 15 ரவுடிகள்
மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் அறிவித்தார்.

போலீசாரின் விசாரணை யில் வடசென்னையில் ரவுடித்தனம் செய்து வந்த செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் அத்துமீறி செயல்படுவதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை சுட்டுப்பிடிக்க போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தர விட்டார்.

அதன் பேரில் கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் வடசென்னை இணைக் கமிஷனர் ரவி ஆகியோர் “ஆபரேசன்” நடவடிக் கைகளில் ஈடுபட்டனர். போலீ சார் பல்வேறு சிறு குழுக்களாக பிரிந்து மாலைக் கண் செல்வத்தை தேடும் வேட் டையில் ஈடுபட்டனர்.

கடந்த 2 தினங்களாக மாலைக்கண் செல்வம் எங்கு பதுங்கி இருக்கிறான் என்ற விசாரணை தீவிரப்படுத்தப் பட்டது.

என்கவுண்டர் மூலம் தன்னை தீர்த்துக்கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதை அறிந்ததும் மாலைக்கண் செல்வம் அதிர்ச்சி அடைந் தான். இனியும் தாமதித்தால் போலீசார் பிடித்து சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று பயந்தான். எனவே போலீசில் சரண் அடைய முடிவு

செய்தான்.இன்று மதியம் 12 மணிக்கு மாலைக்கண் செல்வம் எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தான். அவனுடன் வக்கீல் கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் நாதன், ராஜ்குமார், கிருபா ஆகியோர் உடன் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்பு மாலைக் கண் செல்வம் சரண் அடைந் தான்.

மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக் கில் மாலைக்கண் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தான். அந்த வழக்குக்காக அவன் கைது செய்யப்பட்டான்.

மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்த மாலைக்கண் செல்வத் துக்கு 45 வயதாகிறது. சிறு வயதில் இருந்தே இவன் ரவு டித்தனம் செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் நெருக்கடி கொடுத் ததும் 3 லாரிகளை வாங்கி தொழில் செய்து வந்தான்.

நல்லவன் போல காட்டு வதற்காக சென்னை துறை முகத்தில் ஒப்பந்ததார ராகவும் இருந்து வந்தான்.

மாலைக்கண் செல்வம் மீது 4 கொலை வழக்குகள் உள் ளன. இது தவிர கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என்று 14-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவனுக்கு பயந்து யாரும் சாட்சி சொல்ல வராததால் இவன் மீதான எந்த வழக்கிலும் இவனது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

3 தடவை இவனை போலீ சார் கைது செய்தனர். உடனே இவன் விடுதலை ஆகி விடு வான். முக்கிய ரவுடிகளை போலீ சார் வேட்டையாடியதும் இவன் சில மாதங்கள் சென் னையில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான். கடந்த 5 ஆண்டுகளாக தலை மறைவாகவே இருந்து வந்தான்.

சமீபத்தில் மாதவரத்தை சேர்ந்த செந்தில்குமார் படு கொலை செய்யப்பட்டார். தன் உறவினரை கொன்றதற் காக பழிக்கு பழி வாங்க செந்தில் குமாரை மாலைக்கண் சதி திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டி இருப்பது போலீஸ் விசா ரணையில் தெரிய வந்தது. எனவே அவன் கொட்டத்தை ஒடுக்க சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்தனர்.

அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலை யில் தான் அவனை பற்றிய முழு தகவல்கள் கமிஷனர் நாஞ்சில்குமரனுக்கு தெரிய வந்தது. உடனடியாக அவர் மாலைக்கண் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்தே அவன் பயந்து போலீஸ் கமிஷனர் முன்பு இன்று சரண் அடைந்து விட் டான்.

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாலைக்கண் செல்வத்திடம் கமிஷனர் நாஞ் சில் குமரன் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் மாலைக்கண் செல்வம் கூறியதாவது:-

எனது பெயர் செல்வம் என்ற மாலைக்கண் செல்வம். நான் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை. என்னுடன் இருப்பவர்கள் செய்த தவறுக் காக 3 வழக்குகளில் என்னை பிடித்து சென்றனர். என் மீது எத்தனை வழக்குகள் உள் ளன என்பது தெரியாது.

நான் ரவுடியாக வாழ வேண்டும் என்று நினைக்க வில்லை. எந்த குற்றமும் செய்ய வில்லை இருந்தாலும் என்னைப் பற்றி சிலர் போலீசாரிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள் அத னால் போலீசார் என்னை தேடி வருவதாக அறிந்தேன் எனவே இங்கு வந்து சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கு கமிஷனர் நாஞ்சில் குமரன் உன்னை பற்றி போலீஸ் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். 1990ல் ரவுடியாக ஆரம்பித்து 92ல் என்னmaalaikkan selvam arcot veerasamy DMK Politics Party affiliations rowdy dada arrest செய்தாய்பயார்-யாரை எல்லாம் கொலை செய்திருக் கிறாய்ப எத்தனை வழக்குகள் உன்மீது உள்ளனப எப்படி யெல்லாம் நீ தப்பித்து கொண் டிருக்கிறாய் என்பதை போலீஸ் துறை நன்கு அறியும்.

சென்னையில் யாரும் ரவுடியிசம் செய்யலாம் என்ற கனவில் திரிய கூடாது அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிந்து பயந்து போய் எங்களிடம் ஓடி வந்து இருக்கிறாய். இனி மேலாவது திருந்தி வாழ முயற்சி செய். நீ இது போல ரவுடியாக திரிந்தால் உனது குழந்தைகளையும் குடும்பத்தாரையும் யார் மதிப் பார்கள்ப உன்னுடைய குழந் தைகள் என்ன செய்கி றார் கள்ப என்று அவர் கேட் டார்.

அதற்கு பதில் அளித்த மாலைக்கண் செல்வம் எனது மனைவி பெயர் வடிவு. 5 குழந் தைகள் உள்ளனர். மூத்த மகள் பிளஸ்-2 படித்து வருகிறாள். போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதால் அவர்களுக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. அதனால் ரவுடி தொழிலை விட்டு நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். நல்ல தொழில் செய்து வாழ் வேன் என் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டாம் என்னை பற்றி பார்த்து பழகியவர்களிடம் கேட்டு பாருங்கள் தவறாக சொல்ல மாட்டார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி னான்.

இதனால் கோபம் அடைந்த கமிஷனர் யாரை ஏமாற்ற பார்க்கிறாய் சமீபத்தில் கூட மாதவரத்தில் உனது மைத் துனர் அகஸ்தீஸ்வரன் கொலைக்கு பழிக்குபழியாக செந்தில்குமார் என்பவரை கொலை செய்திருக்கிறாய். திருந்தி வாழ்ந்தால் உனக்கு நல்லது. போலீசாரை ஏமாற்ற நினைத்தால் கடும் தண்டனை நிச்சயம் உண்டு என்றுஹ எச்சரித்தார்.

உடனே மாலைக்கண் செல்வம் கமிஷனரை பார்த்து இருகைகளையும் தூக்கி கும்பிட்டு கண்ணீர் விட்டு அழுதான். இனி திருந்தி வாழ்வேன் என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

பின்னர் அவனை கோர்ட் டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர்.

———————————————————————————————–
அக்கா மகனை கொன்றதால்
பழிக்கு பழி வாங்கியதாக ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம்
புழல் சிறையில் அடைப்பு

செங்குன்றம், ஆக.10-

அக்கா மகனை கொன்றதால் பழிக்கு பழி வாங்கவே கொலை செய்தேன் என்று சரண் அடைந்த ரவுடி மாலைக்கண் செல்வம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுட்டு பிடிக்க உத்தரவு

சென்னை காசிமேடு புதுமனை குப்பம் முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மாதவரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் சரண் அடைந்தனர். 2 பேர் கைதாகினர்.

இதில் ரவுடி மாலைக்கண் செல்வம் முக்கிய குற்றவாளி என்று தெரியவந்தது. இதனால் செல்வம் தலைமறைவானார். அவரை சுட்டு பிடிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் முன்னிலையில் செல்வம் நேற்று முன்தினம் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

செல்வம் கொடுத்த தகவலின் பேரில் காசிமேட்டை சேர்ந்த சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் மாதவரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து திருவொற்றிïர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் இருவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த கொலை தொடர்பாக மாலைக்கண் செல்வம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பழிக்கு பழி

கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னுடைய அக்கா மகன் அகத்தீஸ்வரனை செந்தில் மற்றும் அவருடைய கூட்டாளிகள் எண்ணூர் அருகே கொலை செய்தனர். இதனால் செந்திலை பழிக்கு பழி வாங்க காத்திருந்தேன். இதை அறிந்த செந்தில் தலைமறைவானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி செந்தில் அவருடைய குடும்பத்தை பார்க்க காசிமேடு வந்ததாக தகவல் கிடைத்தது. என்னுடைய கூட்டாளிகளை ஏவி விட்டு மாதவரம் புதிய மேம்பாலம் அருகே செந்திலை கொலை செய்தேன். என்னை போலீசார் சுட்டு பிடிக்க முயன்றதால் சரண் அடைந்தேன். இனி திருந்தி வாழ போகிறேன்.

இவ்வாறு செல்வம் கூறினார்.

———————————————————————————————–

Posted in ACP, Akhthar, Akthar, Alcohol, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Arkadu, Arms, Arrack, Assassin, Assassination, Assembly, Bagalur, Bangalore, BJP, Bombs, Cabinet, Chennai, Cinema, Commissioner, CoP, Crime, Criminal, CSI, Dada, DCP, dead, Election, Electricity, Encounter, Extortion, Faces, gang, Guna, Hide, Hideout, Hijack, Hosoor, Hosur, HR, ICF, Illicit, Karnataka, Kidnap, kidnappping, Kumaran, Law, Leaders, Liquor, Maalaikan, Maalaikkan, Madras, Minister, MLA, Money, Movies, Murder, Murugan, Murukan, N Veerasamy, Nanjil, Nanjil Kumaran, National Highway, Neta, Netha, nexus, NH, Order, Osur, people, Peramboor, Perambur, Police, Poll, Raichoor, Raichur, Rajaram, ransom, Ravi, Rich, rights, Rowdy, Santhapuram, Selvam, Selvaraghavan, Shakeel, Story, TASMAC, Toddy, Veerachami, Veerachamy, Veeramani, Veerasami, Veerasamy, Vellai, Vellai Ravi, Venkatasaami, Venkatasaamy, Venkatasami, Venkatasamy, Venkatesa Pannaiyaar, Venkatesa Pannaiyar, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayakumar, Vijaykumar, Weapons | Leave a Comment »

Shankar, Rajni & AVM’s Sivaji release details in Puthuseri & Karnataka

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

சினிமா டிக்கெட் வெளியிட்ட புதுவை முதல்வர்

ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தின் டிக்கெட்டை புதன்கிழமை வெளியிடுகிறார் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி (வலது). உடன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

புதுச்சேரி, ஜூன் 14: புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாக ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான சிவாஜி பட டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இந்த இரு கோஷ்டியினரின் டிக்கெட்டுகளையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பிரபலமான நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதும் ரசிகர் மன்றக் காட்சியின்போதும் பல்வேறு விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து புதுச்சேரி திரையரங்குகளில் ரசிகர் மன்றக் காட்சிகளைத் தடை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்தது.

ஆனால் பெரும் வரவேற்புடன் வரும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்று சிவாஜி படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று திரையரங்குகளில் சிவாஜி படம் வெளியாவதால் ஆங்காங்கே கட்-அவுட்கள், பேனர்கள் என்று வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் புதுச்சேரியில் புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு கோஷ்டியாகவும், புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கூறுகின்றனர். நாங்கள்தான் முறையாகத் தலைமையின் உத்தரவுப்படி செயல்படும் அமைப்பு என்று புதுவை மாநில அனைத்து ரசிகர் மன்றங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை சிவாஜி படம் திரையிடப்படும் மூன்று திரையரங்குகளிலும் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரஜினிசங்கர் உள்ளிட்டோர் வந்து ஒரு திரையரங்குக்கான ரசிகர் மன்றக் காட்சிக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனை புதுவை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநில அனைத்து ரஜினிகாந்த் மன்றங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஞானேவேல், கோபி, காமராஜ் உள்ளிட்டோர் மற்றொரு குழுவாக வந்து மற்ற இரு திரையரங்குகளின் ரசிகர் மன்றக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை வெளியிட்டனர். இதனையும் புதுவை முதல்வர் என். ரங்கசாமியே வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

இரு தரப்பினரும் ரஜினிகாந்த் திரைடப்படத்துக்கு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்கர்கள் திரையரங்கில் சேர்களை உடைத்தல், திரைகளை கிழித்தல், குறிப்பிட்ட காட்சிகளை அடிக்கடி ஒளிபரப்ப திரையரங்கு ஊழியர்களை வற்புறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று ரசிகர் மன்றங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் ரசிகர் மன்றக் காட்சி டிக்கெட்டுகளின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.

——————————————————————————
சிவாஜி திரைப்படத்தை கர்நாடகத்தில் நான்கு தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம்: கன்னட சங்கத் தலைவர் அறிவிப்பு

பெங்களூர், ஜூன் 14: நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி’ திரைப்படத்தை கர்நாடகத்தில் 4 தியேட்டர்களுக்கு மேல் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட ரக்ஷணா வேதிகே அறிவித்துள்ளது.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ~ ஷ்ரேயா நடித்த “சிவாஜி’ தமிழ் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் உலகம் முதல் திரையிடப்படுகிறது.

சங்கர் இயக்கத்தில் இப்படம் பல கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால் இப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதை கன்னட சங்கங்கள் சில மாதங்களாக தடுத்து வந்தன.

இதையும் மீறி தமிழ் படம் திரையிட்ட திரையரங்குகள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

அண்மையில்தான் தமிழ்ப்படங்கள் கர்நாடகத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில் சிவாஜி படத்தை திரையிட கர்நாடகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் போன்ற பெரிய நடிகர்கள் படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இவர்களது படங்கள் திரையிடப்படும்.

ஆனால் சிவாஜி படத்தை கர்நாடகம் முழுவதும் நான்கு தியேட்டர்களிலேயே திரையிட வேண்டும் என்று கன்னட ரக்ஷணா வேதிகே கூறி வருகிறது.

இதுகுறித்து ரக்ஷணா வேதிகேயின் தலைவர் நாராயண கெüடா கூறியதாவது:

பிறமொழிப்படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படும்போது சில கட்டுப்பாடுகளை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை விதித்துள்ளது.

இதன்படி கர்நாடகத்தில் திரையிடப்படும் கன்னடம் அல்லாத பிற மொழிப்படங்களை நான்கு தியேட்டர்களில் மட்டுமே திரையிட வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள் கன்னடத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு ஒட்டப்பட வேண்டும். இதுபோல் பிற விளம்பரங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் கன்னடத்திலேயே வெளியிடப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள்படி ரஜினிகாந்த் படத்தை திரையிட நாங்கள் எதிர்க்கவில்லை.

இதை மீறி பல தியேட்டர்களில் திரையிட்டால் அந்த தியேட்டர்களில் படச்சுருளை கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் பறிமுதல் செய்வர்.

இயக்குநர் சங்கரின் 23-வது புலிகேசி திரைப்படம் கர்நாடகத்தைச் சேர்ந்த புலிகேசி மன்னனை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருந்தது.

இதனால் இப்படத்தை கர்நாடகத்தில் திரையிட நாங்கள் அனுமதிக்கவில்லை.

அதுபோல் சிவாஜி திரைப்படத்திலும் ஏதாவது ஆட்சேபகரமான காட்சிகள் இருந்தால் அதற்கு எங்களது எதிர்ப்புகளைத் தெரிவிப்போம்.

இதற்காக ரக்ஷணா வேதிகே தொண்டர்கள் டிக்கெட் எடுத்து தியேட்டருக்குச் சென்று கண்காணிப்பார்கள் என்றார் அவர்.

13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை: இதற்கிடையே சிவாஜி படத்தை பெங்களூரில் 13 தியேட்டர்களில் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 13 தியேட்டர்களிலும் வியாழக்கிழமை முன்பதிவு செய்யப்படுகிறது.

Posted in ARR, AVM, Bangalore, Cauvery, Cinema, Fans, Films, Kannada, Karnataka, Kaviri, Movies, Mysore, Pondicherry, pondichery, Pondy, Pondycherry, Previews, Pudhucherry, Puducherry, Puthucehrry, Puthucherry, Puthuchery, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Rehman, release, River, Shankar, Shivaji, Shreya, Shriya, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sreya, Sriya, State, Theaters, Theatres | 2 Comments »

The increasing cost of Property Appreciation – Practices, Investments, Discrepancies

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உயரும் நில மதிப்பு

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.

Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »

BSNL to issue IP TV tenders in six months

Posted by Snapjudge மேல் மே 5, 2007

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம்

திருச்சி, மே 5: சென்னை, பெங்களூர் உள்பட 4 நகரங்களில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றார் பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே. சின்கா.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

கடும் போட்டிகளிடையே இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் முன்பிருந்த அரசுத்துறை என்பதை மாற்றி ஒரு கம்பெனி நிர்வாகம் என்ற போக்கில் ஊழியர்களும், அலுவலர்களும் தங்களது மனப்பாங்கை மாற்ற வேண்டும்.

2010-ம் ஆண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் 90 ஆயிரம் கோடி நிகர வருமானத்தை ஈட்டுமாறு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் பணித்துள்ளது.

2000-1 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டபோது நிகர வருமானம் ரூ. 22 ஆயிரம் கோடியாக இருந்தது. இதுவே தற்போது ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த பெருக்கம் இன்னும் ஊக்கவிக்கப்பட்டால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை எளிதில் அடைந்துவிடலாம்.

சமீபத்தில் புணே நகரில் இணையதளம் மூலம் டிவி பார்க்கும் வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த சேவைக்கு கிடைக்கும் பங்குதாரர்களை வைத்து மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஏ.கே. சின்கா.

Posted in Airtel, Bangalore, Bengaluru, broadband, BSNL, Business, Chennai, Commerce, content, Economy, Finance, Hyderabad, Internet Protocol TV, IPTV, Kolkata, Reliance, Telecom, Telephony, Television, tenders, TV, Voip | 1 Comment »

Tiruppur, Coimbatore Electricity shutdowns – Power cuts & Textile Industry’s impact

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ரூ.240 கோடி மின்கட்டணம் செலுத்தும் நகரம்: மின்தடையால் அவதியுறும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூர்,பிப். 14: ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி மின் கட்டணம் செலுத்தும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நாள்தோறும் ஏற்படும் மின்தடையால் பனியன் தொழில் நிறுவனங்களில் பெருமளவில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

திருப்பூர் நகருக்கு ஈரோடு அருகே உள்ள ஈங்கூர் துணை மின் நிலையம், கோவை அருகே உள்ள அரசூர் துணை மின் நிலையம் ஆகிய 2 இடங்களிலிருந்து மின்சாரம் பெறப்பட்டு, நகரில் உள்ள 10 துணை மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் பகுதியில்,

  • வீட்டு இணைப்புகள் 99 ஆயிரத்து 450,
  • தொழிற்சாலை மின் இணைப்புகள் சுமார் 22 ஆயிரத்து 250,
  • மேலும் தெருவிளக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 157 மின் இணைப்புகள் உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக திருப்பூர் பகுதியிலிருந்து மாதம் தோறும் சுமார் ரூ.20 கோடி மின் கட்டணம் வசூலாகிறது.
  • ஆண்டுக்கு சுமார் ரூ.240 கோடி திருப்பூர் பகுதியில் மின் கட்டணம் செலுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிக அளவில் மின் கட்டணம் செலுத்தும் நகரம் திருப்பூர்.

உற்பத்தி அடிப்படையில் கூலி பெறும் பனியன் தொழிலாளர்களுக்கு மின்வெட்டு காரணமாக கூலியில் வெட்டு விழுகின்றது.

பாதிப்பு குறித்து “”டிப்” சங்கத் தலைவர் அகில்மணி கூறியது:

உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பின்னலாடை இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் “”இன்வென்டர்” பழுதாகின்றன. டீசல் செலவு அதிகமாகிறது. அதிக அளவில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுகின்றது என்றார்.

நகரில், சாய ஆலைகள் அமைத்து வரும் சாயக்கழிவுநீர் மறுசுத்திகரிப்பு நிலையங்களுக்கும், பனியன் தொழில் நிறுவனங்கள் தொழிற்கூடங்களை விரிவாக்கம் செய்து வரும் நிலையிலும், எதிர்வரும் காலத்தில் பனியன் தொழிற்துறை உபயோகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.

மின் வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,

  • பல்லடம் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3 முதல் 6 மாதங்களுக்கு இப்பணி முடிவடையும்.
  • இதன் பின் திருப்பூர் நகரில் பெருமளவில் மின் வெட்டு இருக்காது.
  • இதேபோல் பெருமாநல்லூர் பகுதியில் 230 கே.வி.துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது.
  • நகரில்
    • நொச்சிபாளையம்,
    • மங்கலம் சாலை,
    • அருள்புரம்,
    • மண்ணரை,
    • திருவள்ளுவர் நகர்,
    • மாதேஸ்வரா நகர்,
    • கே.ஜி.புதூர் கல்லூரி சாலை ஆகிய 8 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்றனர்.

கர்நாடகத்தில் மின்தடை அமலாகிறது: முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு

பெங்களூர்,பிப்.23-

கர்நாடக மின்சார கழகத்தின் உயர்மட்ட குழு கூட்டமும், மின்சார தட்டுப்பாடு குறித்தும் ஆலோசிப்பதற்காக மந்திரி சபை கூட்டமும் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்தபின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தீவிர மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவியை நாங்கள் நாடினோம். மத்திய தொகுப்பில் இருந்த 500 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் மத்திய அரசு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டது.

மின் துண்டிப்பு செய்வது என்பது அரசின் நோக்கம் அல்ல. மாநில மக்களுக்கு சிறந்த மின் வினியோகத்தை வழங்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வருகிறோம். ஒரு வேளை மின்சாரம் கிடைக்க வில்லை என்றால் மின் துண்டிப்பு செய்யப்படும் நிலை ஏற்படும். அதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மின்சார துறை மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

தற்போது மாநிலத்தில் மாணவர்களுக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எப்படியாவது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கூறி உள்ளார். வெளியில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய முயற்சித்து வருகிறோம். மின்சாரத்தை துண்டிக்கும் முடிவு இன்னும் எடுக்கவில்லை. வருகிற மந்திரி சபை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் வினியோக கழகத்தில் இருந்து 50 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெறுவது குறித்து பேசி வருகிறோம்.

இவ்வாறு மந்திரி ரேவண்ணா கூறினார்.

============================================================

செய்தி வெளியீடு எண்-193 நாள்-2.4.2007
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தின் எல்லா மின் நுகர்வோருக்கும் தடையில்லாத, நம்பகமான, தரமான மின்சாரம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக, தமிழ்நாடு அரசு

  • வடசென்னை,
  • எண்ணூர்,
  • மேட்டூர் மற்றும்
  • தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களின் நிறுவுதிறனை 2500 மெகாவாட் அளவுக்கு அதிகரித்திட ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இவற்றைத் தவிர, நீலகிரி மாவட்டத்தில் 500 மெகாவாட் நீரேற்று புனல் மின் திட்டத்தை செயலாக்கி வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற உள்ள இந்த நிறுவுதிறன் அதிகரிப்புத் திட்டங்கள் அதிக அளவு மின் உற்பத்தி செய்வது மட்டுமின்றி மின் செலுத்துகை மற்றும் விநியோகக் கட்டமைப்பினையும் வலிவாக்கும். மாநில மின்சார அமைப்பிற்கு (GRID)) மின்சாரத்தை ஏற்றுவதற்குத் தேவையான மின் செலுத்துப் பாதைகள் நிறுவுவதற்கான செலவு உட்பட மேற்கண்ட திட்டங்களுக்கான மொத்த திட்ட முதலீடு 16 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்திட்டங்களை நிறைவேற்றிட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனுதவி அளித்திட ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் (Rural Electrification Corporation)) முன் வந்துள்ளது. இது ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், தமிழ்நாட்டுக்கு அளித்துள்ள கடனுதவிகளில் மிகப் பெரியதாகும். இது தமிழ்நாடு மின்சாரத் துறைக்கு, நிதித் தட்டுபாடின்றி அதன் விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்ற உதவிடும். தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளித்திட மின்சார வாரியத்துக்கும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding)) ஏற்பட்டுள்ளது. இதில் 2.4.2007 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வாரியத் தலைவர் திரு.ஹன்ஸ் ராஜ் வர்மா அவர்களும், ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.அனில் கே.லகினா அவர்களும் கையெழுத்திட்டனர்.

மாண்புமிகு தமிழக மின்துறை அமைச்சர் திரு.ஆற்காடு நா.வீராசாமி அவர்களும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் மற்றும் சிறப்பு ஆணையர் திரு.கு.ஞானதேசிகன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஆர்.சத்பதி, தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (கணக்கியல்), திரு.ச.கதிரேசன், தமிழ்நாடு மின்வாரியத்தின் உறுப்பினர் (உற்பத்தி) திரு.ச.அருணாசலம், திரு.பால் முகுந்த், இயக்குநர் (தொழில் நுட்பம்), ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி, திரு ரமா ராமன், செயலாண்மை இயக்குநர், ஊரக மின்மயமாக்கல் நிறுவனம், புதுடில்லி ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் நிகழ்ச்சியின் பொழுது உடனிருந்தனர்.
***
வெளியீடு-இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.

Posted in Arasoor, Arasur, Bangalore, Banian, Business, Coimbatore, Coomarasami, Coomarasamy, Diesel, Economy, Electricity, Engoor, Engore, Engur, Environment, Erode, Factory, Filtration, Garments, Generator, Incentives, Industry, Inverter, Karnataka, Kovai, Kumarasami, Kumarasamy, Palladam, Perumanalloor, Perumanallur, Pollution, Power, Power Cuts, Power Station, retail, Small Business, Textiles, Thiruppoor, Thiruppur, Tiruppoor, Tiruppur, UPS, Waste Water | 2 Comments »

Toyota to build new low cost car plant in Bangalore, India

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007

பெங்களூரில் ரூ.1500 கோடி முதலீட்டில் கார் ஆலை அமைக்கிறது டொயோட்டா

டோக்கியோ, பிப். 13: ஜப்பானின் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், பெங்களூரில் ரூ.1500 கோடியிலிருந்து -ரூ.1900 கோடி வரையிலான முதலீட்டில் செலவில் கார் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

இது இந்தியாவில் டொயோட்டாவின் இரண்டாவது உற்பத்திப் பிரிவாக அமையும். ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் அளவுக்கு தொடக்கத்தில் உற்பத்தி செய்யப்படும்.

குறைந்த விலைக் கார்களுக்கான சந்தை இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதைத் தொடர்ந்து, டொயோட்டா கார் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிக்கேய் என்ற ஜப்பானிய வர்த்தகப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் முதல் தொழிற்சாலை 1999-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் கார் சந்தையில் அந் நிறுவனம் சுமார் 4 சதவீத பங்கைப் பெற்றுள்ளது.

Posted in Auto, Automotive, Bangalore, Business, Capacity, car, Factory, India, Industry, Jobs, Nikkei, Production, Toyota | Leave a Comment »

IAF pilot killed in air show rehearsals crash

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: விமானி சாவு

 பெங்களூர் எலகங்கா விமானப் படை பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கும் விமானப் படை ஹெலிகாப்டர். இவ் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.

பெங்களூர், பிப். 3: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானப்படை விமானி இறந்தார்; மற்றொரு விமானி காயமடைந்தார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரில் (ஏஎல்எச்) விமானப்படை விமானிகள் பிரியே சர்மா, வி.ஜெய்டெலே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டு 9-வது ஓடு பாதையில் தரையில் விழுந்து நொறுங்கியது. உடனடியாக தீப்பிடித்துக் கொண்டது. இதைக் கண்காணித்த விமானப்படையினர் தீயணைப்பு வாகனத்துடன் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பிரியே சர்மாவையும், ஜெய்டேலேயையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் பிரியே சர்மா வழியிலேயே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெய்டேலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்பரை ஓட்டிச் சென்ற விமானிகள் இருவரும் விமானப்படையில் சாகசங்கள் நிகழ்த்தும் “சரங்க்’ படைப்பிரியைச் சேர்ந்தவர்கள்.

பெங்களூரில் பிப்ரவரி 7-ம் தேதி சர்வதேச விமான கண்காட்சி துவங்குவதையடுத்து சரங்க் படைப் பிரிவினர் எலகங்கா விமான பயிற்சி நிலையத்தில் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நீதிமன்றம் (சிஓஐ) விசாரணை நடத்தும். இந்த விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றார்.

Posted in advanced light helicopter, Air Force, ALH, Bangalore, Chopper, crash, Defense, Dhruv, HAL, Helicopter, Hindustan Aeronautics Limited, IAF, Indian Air Force, pilot, Priye Sharma, rehearsals, Squadron Leader, Training, V Jetley, Wing Commander, Yelahanka | Leave a Comment »

Karnataka cities to change their names to be in Kannada

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

கர்நாடகாவில் மேலும் 11 நகரங்களின் பெயர்கள் மாறுகிறது

பெங்களூர், ஜன. 24-

பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் சென்னை என்றும், பம்பாய் மும்பை என்றும், கல்கத்தா கொல்கத்தா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதே போல கர்நாடக தலைநகர் பெங்களூர் என் பதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பெயர் மாற்றத்திற்காக கடிதம் எழுதி இருந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல அமைச்சகம், அமைப்புகளிடம் பெயர் மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது.

இதே போல ரெயில்வே துறை, விமான போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடமும் கருத்து கேட்கப்பட்டது.

பெங்களூர் பெயர் மாற்றுவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ கழித்துதான் பெயர் மாற்றத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

இதே போல மேலும் 11 நகரங்களின் பெயர்களை மாற்றவும் கர்நாடக அரசு கோரிக்கை வைத்து உள்ளது.

  • மைசூர் என்பதை மைசூரு என்றும்,
  • மங்களூரை மங்களூரு என்றும்,
  • பெல்காம் என்பதை பெல்காவி என்றும்,
  • பெல்லாரி என்பதை பல்லாÖì என்றும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

Posted in Bangalore, Belgaum, Bellary, Bengaluru, Changes, City, Kannada, Karnataka, Mangalore, Mysore, names | Leave a Comment »

Communal violence flares in Bangalore

Posted by Snapjudge மேல் ஜனவரி 22, 2007

பெங்களூர் வன்முறையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுவன் சாவு; ஊரடங்கு உத்தரவு அமல்

பெங்களூர், ஜன. 22: பெங்களூரில் நடந்த வன்முறையில் போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.

இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.

இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸôர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெüரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Bangalore, Barathi Nagar, Basavaraj Horatti, Bengaluru, Bharathi Nagar, Bharathy Nagar, Bhartinagar, BJP, Cantonment, Elections, Golwalkar, H D Kumaraswamy, Halasur, Hindu, Hinduism, Iraq, Meeting, Politics, Politics & Religion, Religion, RSS, Saddam Hussein, Shivaji nagar, Sivaji Nagar, Ulasuru, Violence, Viraat Hindu Samjotsav | Leave a Comment »

‘Thanga Vettai’ Vijayalakshmi to marry Kannada Actor’s son

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

கன்னட நடிகர் மகனை மணக்கிறார்: நடிகை விஜயலட்சுமி காதல் திருமணம்

Thanga Vettai compere Actress Vijayalakshmi Suicide – Background Details « Tamil News: “சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.”

“ப்ரண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.

சூரி, கலகலப்பு உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்தி ருக்கிறார்.

தமிழில் பிரபல கேம்ஷோ டி.வி. தொடராக விளங்கிய தங்கவேட்டையின் கன்னட பதிப்பை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

தங்கவேட்டை ஷூட்டிங்கின்போது அதன் இயக்குனர் ரமேஷ் கொடுத்த மன உளைச்சலினாலேயே தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.

தன்னை காதலிக்க ரமேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். விஜயலட்சுமிதான் ரமேஷை காதல் நச்சரிப்பு செய்ததாக அவர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்தனர்.

தற்போது டி.வி. தொடர் களில் அதிகக் கவனம் செலுத்தி வரும் விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான லோகேஷின் மகனான சுருஜன் லோகேஷை விரைவில் விஜயலட்சுமி மணக்க உள்ளார். இதற்கான நிச்சயதார்த்தம் சமீபத்தில் பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது.

சுருஜனுக்கும், விஜயலட்சுமிக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Posted in Bangalore, Betrothal, Friends, Kannada, Logesh, Lokesh, Marriage, Ramesh, Soori, Suicide, Surujan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Thanga Vettai, TV, Vijayalakshmi | 1 Comment »