Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Balancesheet’ Category

Nothing macho about India’s forex reserves – Impact on growth and prices: Varadharajan

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

அன்னியச் செலாவணி கையிருப்பு “நீர்க்குமிழியா’?

உ .ரா. வரதராசன்

“இந்திய நாட்டின் பொருளாதாரம் இமயமென உயர்ந்து நிற்கிறது’ என்று வளர்ச்சியின் பரிணாமங்களை வியந்து போற்றுகிற ஆட்சியாளர்களும் வல்லுநர்களும் அதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவது நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு பற்றிய புள்ளிவிவரங்களாகும்.

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து அமல்படுத்தத் தொடங்கியது 1991 ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டு மார்ச் இறுதியில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அன்னியச் செலாவணிக் கையிருப்பாக இருந்த தொகை 580 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே. இது படிப்படியாக உயர்ந்து 2007 மார்ச் இறுதியில் 19,920 கோடி டாலராக ரிசர்வ் வங்கியில் அம்பாரமாகக் குவிந்து கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியதற்குப் பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டவற்றில் ஒன்று, நாடு சந்தித்த அன்னியச் செலாவணி நெருக்கடி. மறைந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அன்னியச் செலாவணி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வேறு வழியில்லாமல், மத்திய அரசு ரிசர்வ் வங்கியிலிருந்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு போய் இங்கிலாந்து (மத்திய) வங்கியில் அடமானம் வைக்க நேரிட்டது என்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய நிகழ்வு. அந்த நிலைமை இப்போது தலைகீழாய் மாறியிருக்கிறது என்பதையே தற்போதைய அன்னியச் செலாவணிக் கையிருப்பு விவரங்கள் உணர்த்தும் நிலவரம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில், இது மிகவும் திருப்திகரமானதொரு நிலைமை என்றே தோற்றமளிக்கலாம். இதை அளவுகோலாகக் கொண்டால், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பெரும் வெற்றியை நம் நாட்டுக்குத் தேடித் தந்துள்ளதாகவே முடிவுக்கு வரத் தோன்றும். ஆனால், இந்தக் கையிருப்பின் கணக்குகளை சற்றுக் கருத்தூன்றிப் பரிசீலித்தால், கவலையே மிஞ்சுகிறது.

1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான பலன்கள் விளைந்தனவா என்பது முதலில் பார்க்க வேண்டிய கணக்கு.

  • 1990 – 91ஆம் ஆண்டில் நமது இறக்குமதிகளின் மொத்த மதிப்பு ரூ. 50,086 கோடி;
  • ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 33,152 கோடி மட்டுமே.
  • நிகர பற்றாக்குறை ரூ. 16,934 கோடி!
  • இது டாலர் கணக்கில் 944 கோடி.
  • இதுவே, 2005-06ஆம் ஆண்டில் ரூ. 2,29,000 கோடி பற்றாக்குறையாக உயர்ந்தது;
  • டாலர் கணக்கில் இந்தப் பற்றாக்குறை 5,184 கோடியாகும்.

கடந்த பதினாறு ஆண்டுகளில் ஓர் ஆண்டில்கூட நம் நாட்டின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதி மதிப்பைவிடக் கூடுதலாக இல்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் கூறும் உண்மை.

இந்தப் பதினாறு ஆண்டுகளில் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிகர பற்றாக்குறை – ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதியால் சந்திக்க வேண்டிய சுமை – 3,410 கோடி டாலர் என்று ரிசர்வ் வங்கிக் கணக்கு கூறுகிறது. (ரூபாய் மதிப்பில் இன்றைய நிலவரப்படி இது 1,37,000 கோடி ரூபாய் பற்றாக்குறையாகும்!)

இப்படியிருக்கையில், நம் நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு மட்டும் உயர்ந்து கொண்டே இருப்பது எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பே!

சர்வதேச ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தக நிலவரம் நமக்குச் சாதகமாக அமையாத பின்னணியில், நம் நாட்டின் ஆட்சியாளர்கள் அன்னியச் செலாவணி வரத்தைக் குறியாகக் கொண்டு, நிதித்துறை சீர்திருத்தங்கள் பலவற்றையும் அமலாக்கி வந்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக 1991 ஆம் ஆண்டு தொடங்கி நமது நாட்டுப் பொருளாதாரத்தின் சகல துறைகளும் – பாதுகாப்புத்துறை உள்பட – அன்னிய முதலீட்டுக்காகத் திறந்துவிடப்பட்டு வந்துள்ளன. புதிதாகத் தொழில் தொடங்க நூற்றுக்கு நூறு சதவீத முதலீட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தொழில் நிறுவனங்களை விலைபேசி கையகப்படுத்துவதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டது.

இரண்டாவதாக 1993 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொழில் முதலீட்டுக்கு மட்டுமன்றி, பங்குச் சந்தை வர்த்தகத்திலும் அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

இந்த இரண்டு வகையிலும், பன்னாட்டு நிதி மூலதனம் நம் நாட்டுக்கு வருவதற்கு ஊக்கம் அளிப்பதற்காக அடுக்கடுக்கான சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன.

இவற்றில், முதல் வகையில் நேரடித் தொழில் முதலீடுகளாக வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, இரண்டாவது வகையில், பங்குச் சந்தை வர்த்தகத்திற்காக வந்த தொகைகள் பல மடங்காகும்.

நேரடித் தொழில் முதலீட்டிலும், புதிய தொழில்களைத் தொடங்க வந்த வெளிநாட்டு மூலதனத்தை விட, உள்நாட்டு நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்காக வந்த மூலதனமே மிகுதியாகும்.

இரண்டாவது வகையாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் (சூதாட்டத்தில்) நுழைந்துள்ள அன்னிய மூலதனத்தின் வளர்ச்சி திகைப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கு அனுமதி வழங்கப்பட்ட 1993 ஆம் ஆண்டில், அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் ஈடுபடுத்திய தொகை 83 கோடி அமெரிக்க டாலர்கள். இதுவே 2007 மார்ச் இறுதியில் 5200 கோடி டாலர்களாக “விசுவரூபம்’ எடுத்தது! இப்படி மூலதனக் கணக்கில் வரவாக வந்த அன்னியச் செலாவணிதான் ரிசர்வ் வங்கியில் ஏகபோகமாக குவிந்து நிற்கிறது!

இதற்கு விலையாக நமது நாடு கொடுத்தவை ஏராளம், ஏராளம்!

இந்த அன்னிய மூலதன வரவுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர் நிறுவனங்கள் கொண்டு வரும் நிதி மூலதனத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் யார் என்று தெரிவிக்க வேண்டியது கட்டாயமில்லை!

இந்த முதலீடுகள் கொழிக்கும் லாபத்துக்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு உண்டு. இதற்காக மொரிஷியஸ் நாட்டோடு பாஜக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டு, அந்த நாட்டின் வழியாக வந்து போகும் அன்னிய மூலதனம் எந்த வரிவிதிப்புக்கும் உட்படாது. (இதை மறுபரிசீலனை செய்வோம் என்று குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறியுள்ள இன்றைய மத்திய அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதைக் கண்டுகொள்ளவே இல்லை!)

இந்த அன்னிய மூலதனம்தான் நமது நாட்டின் பங்குச் சந்தையை ஆட்டிப் படைக்கிறது. இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனங்களில் 30 கம்பெனிகளின் பங்குகளின் விலை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் “சென்செக்ஸ்’ குறியீடு ஒரு மாயாஜால விளையாட்டாக மாறியுள்ளது.

1990 ஜனவரியில் 1000 என்று இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் 2004 ஆம் ஆண்டு வரை 7000 புள்ளிகளுக்குக் கீழாகவே இருந்தது. 2005 ஜூன் மாதம் 7000 புள்ளியை எட்டிப்பிடித்த சென்செக்ஸ், இப்போது 20,000 புள்ளிகள் வரை நாலு கால் பாய்ச்சலில் எகிறிக் குதித்துள்ளது! இதன் ஏற்ற இறக்கங்களில் பல லட்சம் கோடி ரூபாய்கள் நாள்தோறும் ஒரு பிரிவினருக்கு லாபமாகவும், இன்னொரு பிரிவினருக்கு இழப்பாகவும் பரிமாற்றமாகின்றன.

சென்செக்ஸ் பற்றி நாட்டின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் “சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும்’ இருக்கிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அதைத் தாண்டி இந்த “மாயா பஜார்’ விளையாட்டைக் கட்டுக்குள் கொண்டு வருவது பற்றி சிந்திக்கக்கூட அரசு மறுப்பதுதான் வேதனை!

எனவேதான், அரசுத் தரப்பில் ஆர்ப்பரிப்போடு பேசப்படுகிற அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல; அது சோகை பிடித்த பொருளாதார நீரோட்டத்தின் மேற்பரப்பில் தென்படும் நீர்க்குமிழி போன்றதே!

பொருளாதாரச் சீர்திருத்தங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல – ஆதரவாளர்களே ஆழ்ந்த கவலையோடு பரிசீலிக்க வேண்டிய நிலைமை இது!

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)

Posted in ADR, Agflation, America, APR, Balance, Balance sheet, Balancesheet, Banks, Benefits, Budget, Conversion, Currency, Deficit, Deflation, Dollar, Economy, Exchange, Exports, FDR, Finance, financial, forex, Funds, GDP, Growth, Imbalance, IMF, Impact, Imports, Index, India, Indices, Inflation, Interest, investments, Loans, Loss, markets, MNC, Monetary, Numbers, PC, Policy, Prices, Profit, Rates, RBI, reserves, Return, ROI, Shares, Statistics, Statz, Stocks, Tariffs, Tax, US, USA, Varadharajan, Varadharasan, WB | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »

Rupee appreciates against Dollar – Financial pressures & Trade imbalance in Pricing disparities

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்

ஆர். அறிவானந்தம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.

கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.

செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.

ரூபாய் மதிப்பு உயர்வால்

  • ஆட்டோமொபைல்,
  • உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
  • டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
  • ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
  • கைவினைப் பொருள்

உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்

  • சாப்ட்வேர் நிறுவனங்கள்,
  • பிபிஓ நிறுவனங்கள்,
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
  • கிரானைட்,
  • கடல் உணவு,
  • தேயிலை,
  • என்ஜினீயரிங்,
  • முந்திரி,
  • மாம்பழம் மற்றும்
  • நார் பொருள்களை

தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.

அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.

கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.

மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.

நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.

ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Posted in Appreciation, Balancesheet, BPO, BRIC, Cash, China, Company, Disparity, Dollar, Economy, Exchange, Exim, Exports, Finance, fiscal, Fishery, Fixing, GDP, Imbalance, Imports, Industry, Inflation, InfoTech, Interest, Issues, markets, Monetary, Money, Outsourcing, Policy, PPP, Pressures, Pricing, Rates, ratio, RBI, Recession, Reserve, Rupees, Rupya, service, Trade, World | 1 Comment »