Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Asset’ Category

PMK Ramadoss to lead protest against NLC land acquisition

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

கேள்விக்குறியாகும் என்.எல்.சி.யின் எதிர்காலம்

என்.முருகவேல்

நெய்வேலி, அக். 16: பல தேசியத் தலைவர்களின் தொலைநோக்குப்பார்வையாலும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தற்போது பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் தொடர்ந்து செயல்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சுதந்திர இந்தியாவில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் என்.எல்.சி.யும் ஒன்று. 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந் நிறுவனம் ஒரு சுரங்கத்தையும், ஒரு மின் நிலையத்தையும் கொண்டு 600 மெகாவாட் மின்னுற்பத்தியுடன் செயல்படத் துவங்கி, இன்று சுரங்கம் 1ஏ, 2-ம் சுரங்கம், முதல் அனல்மின் நிலைய விரிவாக்கம், 2-ம் அனல்மின் நிலையம் என வளர்ந்து, தற்போது 2,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்து தென் மாநிலங்களுக்கு விநியோகம் செய்துவருகிறது.

இதுதவிர ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதில் சுமார் 25 ஆயிரம் பேர் படிப்படியாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை அழைத்து தனது பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடி, ஊழியர்களுக்கு பொன்விழா ஆண்டு வெகுமதியையும் அளித்தது. இவ்விழாவின் போது, நெய்வேலியில் ரூ.4,200 கோடி செலவில் அமையவுள்ள 2-ம் சுரங்க விரிவாக்கம் மற்றும் 2-ம் அனல்மின் நிலையம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றார்.

2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் 50 சதம் முடிந்துள்ளது. அதேநேரத்தில் 2-ம் சுரங்கம் விரிவாக்கத்துக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டு, அதன் இயந்திரக் கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெறுகின்றன.

இதனிடையே சுரங்கம் தோண்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதில் தற்போது பிரச்னை எழுந்துள்ளது. முதல் சுரங்கத்துக்குத் தேவையான 250 ஏக்கர் நிலங்கள் கெங்கைகொண்டான் பகுதியில் அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும், மாற்றுக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அப்பகுதியிலிருந்து காலிசெய்ய மறுக்கின்றனர். இன்னும் 6 மாதத்துக்குள் இப்பகுதியை கையகப்படுத்தவில்லையெனில் முதல் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி தடைபட நேரிடும்.

இதேபோன்று சுரங்கம் 2-ம் மற்றும் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி, கீழ்பாதி, மேல்பாதி, கோட்டகம், கோ.ஆதனூர், கம்மாபுரம், சாத்தப்பாடி உள்ளிட்ட 69 கிராமங்களில் இருந்து சுமார் 25,000 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து, இவற்றில் ஒரு சிலருக்கு இழப்பீட்டுத் தொகையை என்.எல்.சி. வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுரங்க விரிவாக்கத்துக்கு அளவீடு செய்யப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நில உரிமைதாரர்கள் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும், மேலும் பல நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட பகுதியில் நிலத்தை கையகப்படுத்தினால் ஒரு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதனால் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் தொடக்கம் தடைபட்டுள்ளது.

இதனிடையே நிறுவன தலைவர் எஸ்.ஜெயராமன், நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து, நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை விளக்கியுள்ளார். இதனால் தொழிற்சங்கத் தலைவர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் 6 மாதத்திற்குள் சுரங்கத்துக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தவில்லை எனில் நிறுவனம் தொடர்ந்து செயல்படுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல் படி தான் இழப்பீடு வழங்கமுடியும், நிர்வாகமாக எதையும் செய்ய இயலாது. தற்போது கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கு கோரப்படும் இழப்பீட்டுத் தொகையை கொடுத்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க இயலாது.

மேலும் நிறுவனத்தை முன்னிறுத்தித்தான் சுற்றுப்புற கிராம நிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய போட்டி உலகில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கையகப்படுத்தும் நிலங்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை உயர்த்த மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும்

“”மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண விகிதப்படி தான் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம். அதற்கேற்றபடி தான் இழப்பீடு, நிவாரண உதவிகள் வழங்க முடியும். எனவே நிறுவன நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் சொற்ப அளவைத் தான் எட்டியுள்ளது” என்றும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் சில சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை. நிறுவனத்தின் நிலையை நிறுவனத் தலைவரே வெளிப்படையாக அதிகாரிகளிடமும், தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் பகிர்ந்து கொண்டிருப்பது நிறுவன வரலாற்றில் இதுதான் முதல்முறை.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த காலங்களில் பல பிரச்னைகளை நிர்வாகம் கையாண்டிருந்தாலும், இன்றைய சூழலில் அரசியல் கட்சிகளை சமாளிப்பதில் நிறுவனத்தின் தற்போதைய உயரதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.

கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்தும் போது, நில உரிமைதாரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் கிராமங்களில் உள்ள மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மறைமுக தொடர்பாளர் ஒருவரை நியமித்து அதன்மூலம் பல்வேறு உதவிகளையும் மாற்றுக் குடியிருப்பையும் என்.எல்.சி. செய்துவந்ததால் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழவில்லை.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு கிடையாது, அப்படியே வழங்கப்பட்டாலும், மிகுந்த சிரமத்திற்கு இடையே ஒப்பந்தப் பணி மட்டுமே வழங்கப்படுகிறது. சுற்றுப்புற மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதன்மூலம் சாலை, குடிநீர் வசதி, பள்ளிக் கட்டட வசதி செய்து கொடுத்தாலும், அவை முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தித் தரவேண்டும், என்.எல்.சி. மருத்துவமனையில் இலவச மருத்துவ வசதி செய்து தரவேண்டும் என்பது போன்ற அடிப்படை வசதிகளே கிராம மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.

கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடும், மாற்றுக்குடியிருப்பும் வழங்கியாயிற்று, அதன் பின்னர் அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற எண்ணம் உதித்ததன் விளைவுதான் இன்று நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்.

இந் நிறுவனத்தை நிர்வகித்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் சுற்றுப்புற கிராம மக்களை அனுசரித்து, அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்திசெய்து, நிறுவனத்தை பொன்விழா ஆண்டு கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி வந்துள்ளனர்.

அடுத்து இந்நிறுவனம் வைரவிழா ஆண்டையும் கொண்டாட வேண்டும் எனில், நிலம் கையகப்படுத்துதலில் நிர்வாகம் கடந்த காலங்களில் கையாண்ட உத்திகளை மீண்டும் தொடர வேண்டும். காலத்திற்கேற்ப எவ்வாறு தொழில் துறையில் மாற்றம் ஏற்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளையும் இன்றைய காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்பட நிர்வாகம் முன்வரவேண்டும்.

நிர்வாகத் திறன் படைத்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவற்றிலிருந்து விலகிச் செல்ல முற்படுவது அழகல்ல. தமிழகம் மட்டுமன்றி, தென் மாநிலங்களுக்கும் ஒளி வழங்கும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலப் பிரச்னை ஒரு கேள்விக்குறியாக இருந்து விடக்கூடாது. இந் நிறுவனத்தை நம்பி இன்று ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாநில அரசும், மத்திய அரசும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சரியான வழிகாட்டவேண்டும்.

அதேநேரத்தில் சுமார் 19,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நிறுவனத்துக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டும் என்பதே பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பு.

———————————————————————————————————————————

நிலத்திற்கு நிலம்!

கே.எஸ். அழகிரி

அரசின் பொது நோக்கங்களுக்காகவும், தனியார் துறையின் தொழிலியல் நோக்கங்களுக்காகவும், அரசு மூலம் நிலங்களைக் கையகப்படுத்தும் நிகழ்வு, சமீபகாலங்களில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வானது, போராட்ட குணம் நிறைந்த இடதுசாரிகளையே திகைக்க வைத்துள்ளது.

விவசாயியைப் பொருத்தவரை, நிலம் என்பது அவனுடைய உயிருக்கும் மேலானது. சொத்துடமையின் சின்னமே நிலம்தான். சமூகத்தின் மரியாதை, அவனுக்குள்ள நில உடமையை வைத்தே இன்னும் கிராமங்களில் அளவிடப்படுகிறது.

ஒரு விவசாயி தன்னுடைய சொத்துகளை விற்கவேண்டிய நிலை வரும்போது நிலத்தைத் தவிர பிற சொத்துகளை விற்கவே விருப்பப்படுகிறான்.

நிலத்தை இழந்து விட்டால் தன்னுடைய இருப்பையே இழந்துவிட்ட உணர்வு விவசாயிக்கு ஏற்படுகிறது. எனவே நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அரசுகள் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்காக, தனக்கிருக்கிற ஒரே ஆதாரமான நிலத்தையும் தனது குடிசையையும் இழந்து எவ்வாறு வாழ்வது என்ற கவலை விவசாயியை நிலைகுலையச் செய்து விடுகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஓர் ஆக்கத்திற்காக ஓர் இருப்பை அழித்துவிடக் கூடாது.

ஆலைகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் கூடாது எனில், நாம் மீண்டும் களப்பிரர்களின் இருண்ட காலத்திற்குத்தான் செல்ல வேண்டி வரும். இதற்கான மாற்று வழிதான் என்ன? நிலத்திற்குப் பதில் நிலம்!

1957-ல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுத்தபோது, ஏக்கருக்கு ரூ. 250 முதல் ரூ. 500 வரை ஈட்டுத்தொகையும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டுமனையும், அதுபோக, குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் மாற்று நிலமும் கூரைப்பேட்டை, மெகாசா பரூர், பூவனூர் போன்ற இடங்களில் கொடுத்தனர். இன்று அந்த நிலங்கள் ஏக்கர் 10 லட்சம்வரை விலைபோகின்றன. எனவே அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று வசதியாக வாழ்கின்றனர்.

ஆனால் இரண்டாம் சுரங்கம் தோண்டும்போது கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு புன்செய் நிலத்துக்கு ரூ. 3000-மும் நன்செய் நிலத்துக்கு ரூ. 7000-மும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கங்கைகொண்டான் ராமசாமி நாயுடு, ஊமங்கலம் ரங்கசாமி ரெட்டியார் ஆகியோர் நிதிமன்றம் சென்று ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் ஈட்டுத்தொகை கோரி தீர்ப்பு பெற்றனர்.

ஆனால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உயர் நீதிமன்றம் சென்று ரூ. 60 ஆயிரத்துக்குப் பதில் ரூ. 30 ஆயிரம் என்று குறைத்து ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அந்தப் பகுதி விவசாயிகளின் ஏழ்மைநிலை இடம் தரவில்லை. மேலும் அப்போது அவர்களுக்கு விழிப்புணர்வோ, போராட்டக்குணமோ இல்லை.

அதன் பிறகு, மறைந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி இரண்டாம் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் வாழ்க்கைநிலை குறித்து ஆய்வு நடத்தியபோது அச்சமூட்டும் உண்மை வெளிப்படத் தொடங்கியது. நிலம்கொடுத்தவர்களில் 90 சதவிகிதத்தினர் கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தமிழக, தேசிய விவசாயிகள், தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் நெய்வேலி ஜான் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஊருக்கெல்லாம் ஒளிகொடுக்க நிலம் கொடுத்தவர்களின் வாழ்வு இருண்டுபோகக் காரணம் திட்டமிடலில் உள்ள குறைபாடா, மனசாட்சியற்ற அதிகாரவர்க்கமா என மக்கள் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.

நெய்வேலி விவசாயிகளின் பிரச்னையை 1996-ல் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் எழுப்பினேன். பிரச்னையின் பரிமாணத்தை முதல்வர் கருணாநிதி புரிந்துகொண்டு என்னையும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் குழந்தை தமிழரசனையும் கொண்ட ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தார். உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஈட்டுத்தொகையை ரூ. 70 ஆயிரமாக அறிவித்து, விவசாயிகளை இன்ப அதிர்ச்சியில் திளைக்க வைத்தார்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் காந்திசிங்கை சென்னைக்கு வரவழைத்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்து, மூன்று மாதத்தில் விவசாயிகளுக்கு பணத்தையும் வழங்கச் செய்தார். அரசுகளின் ஆமைவேக நடைமுறைகளில் மாறுபட்ட இந்த துரித செயல், மாபெரும் புரட்சியாக அன்று விவசாயிகளால் கருதப்பட்டது.

ஆயினும்கூட, இந்தப் பணத்தைக் கொண்டு விவசாயிகளால் அன்றைய நிலையில் மாற்று நிலங்களை வாங்க முடியவில்லை.

ஆலைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது ஈட்டுத்தொகையாக மாற்று நிலங்களைக் கொடுத்து, ஒரு புதிய குடியிருப்பை உருவாக்கித் தருவதே விவசாயக் குடும்பங்களைக் காக்கும் நல்வழியாகும். திட்டச் செலவோடு இந்தச் செலவையும் இணைத்தே, திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

நிலத்திற்கு இணையாக மாற்று நிலம் வழங்க முடியாத சூழ்நிலையில், தற்போது வழங்குவதுபோல் பத்து மடங்கு வழங்குதல் வேண்டும்.

பொதுவாகவே ஒரு நிலத்தை விற்கும் போது மாவடை மரவடை என்று பத்திரத்தில் சேர்த்து எழுதுவார்கள். நிலத்தின் மதிப்பு வேறு. நிலத்தில் உள்ள மதிப்புமிக்க மரங்களின் விலை தனி. எனவே நிலத்தில் உள்ள மாவடை மரவடைக்குத் தனியாக விலை தருதல் வேண்டும். அந்தவகையில், நெய்வேலியில் நிலங்களுக்கு அடியில் உள்ள பழுப்பு நிலக்கரிக்கும் ஏதாவது ஒரு விலையை நில உடமையாளர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

விவசாயிகளின் குடும்பங்களில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அப்படி படித்தவர்களிலும் 10-ம் வகுப்பைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை அதைவிடவும் குறைவு. எனவே நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை அளிக்க வேண்டும். வேலைபெறத் தகுதியற்ற குடும்பங்களுக்கு ஓர் ஈட்டுத்தொகையை நிலத்தின் விலையோடு சேர்த்து வழங்குதல் வேண்டும். படிப்பறிவற்ற குடும்பங்களை விட்டுவிடக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளை விதித்தால் தொழில் வளருமா என்ற கேள்வி எழுவது இயல்புதான். தொழில்வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி; தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களது சொத்தை அளித்தவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தக் கோரிக்கைகளின் மையக்கரு ஆகும்.

அணைகள் கட்ட நிலம் கொடுத்த பழங்குடி விவசாயிகள் – அனல்மின் நிலையம் கட்ட, சுரங்கம் வெட்ட, தொழிற்சாலைகள் அமைக்க நிலம் கொடுத்த விவசாயக் குடும்பங்கள் அனைத்துமே, குடும்ப அமைப்பு சிதைந்து – புலம் பெயர்ந்த நாடோடிக் குடும்பங்களாக மாறியுள்ள அவலம்தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகளில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. நாடு முழுவதும் முக்கியப் பிரச்னையாக உருவாகிவரும் “நிலம் கையகப்படுத்துதலை’ விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் மேற்கொள்ள வழிவகை காண வேண்டும்.

(கட்டுரையாளர்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்)

Posted in acquisition, Agriculture, Anbumani, arbitrary, Arbitration, Asset, Ban, Bengal, Coal, Commerce, Compensation, Deplete, Depletion, Economy, Electricity, Employment, Farmer, Fight, Govt, Industry, Insurance, Irrigation, Jobs, Land, Lignite, Management, Megawatt, Mgmt, Mine, Minerals, MW, Nandigram, Neiveli, Neyveli, Neyveli Lignite Corporation, peasants, PMK, Power, Private, Protest, Public, Ramadas, Ramadoss, resettlement, rights, Rural, Security, Settlement, Stocks, Strike, Thermal, Trade Union, TU, Union, Uzhavar Paadhukappu Peravai, Valuation, Village, villagers, WB, Work, Worker | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

China Olympics evict 1.5 million

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்
பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்

சீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Asset, Beijing, China, Evictions, Freedom, Games, Homeless, Homes, Houses, Korea, Land, Olympics, Peking, Property, Seoul, South Korea, venues | Leave a Comment »

The increasing cost of Property Appreciation – Practices, Investments, Discrepancies

Posted by Snapjudge மேல் மே 10, 2007

உயரும் நில மதிப்பு

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அதிகம் வருவதால் நன்மைகள் அதிகம் உள்ளன. நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கில் ஊதியம் கிடைக்கிறது. இருப்பினும் சில இடையூறுகளும் உடன் வருகின்றன.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் அப் பகுதியில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிடுவது (அல்லது உயர்த்தப்படுகிறது?) இயல்பான நிகழ்வாகிவிட்டது. சாதாரண தொழிற்சாலை வந்தாலும் நிலத்தின் மதிப்பு உயரும்தான். ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறை என்றால் நிலத்தின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

சென்னை, கோவை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் திடீரென நிலத்தின் விலை பல கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

இதனால், சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் காலிமனைகளை வளைத்துப்போடுவது அல்லது குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவது, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகியன அதிகரித்துள்ளன. அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள், கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான இடங்களை விற்கும் நிலையை உருவாக்கி, அதை கூட்டணி அமைத்து ஏலத்தில் எடுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

சென்னை நகரில் இதுபோன்ற ரியல் எஸ்டேட் முறைகேடுகள் பற்றிய புகார்கள் ஆயிரத்துக்கும் மேலாக உள்ளன. தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் வேகமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

இதற்குப் பின்புலமாகவும், பலமான ஆதரவாகவும் இருப்பவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இப்படி வாங்கப்படும் மனை, நிலம் ஆகியவற்றின் “உயர்த்தப்பட்ட’ மதிப்பு இவர்களாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் இத்தகைய ரியல் எஸ்டேட் முறைகேடுகளை விசாரிக்க காவல்துறையில் தனிப்பிரிவுகள் உள்ளன. என்றாலும், யாரும் தண்டனை பெறவில்லை. இந்த முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதில் அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை மேற்கொண்டால் முறைகேடுகளைத் தடுக்கவும், நிலத்தின் போலியான உயர் மதிப்பீட்டைக் கட்டுப்படுத்தவும் முடியும். இல்லையெனில், நகரின் மையப்பகுதிகளில் வசிக்கும் “எதிர்ப்பு சக்தி’ இல்லாத சாதாரண மக்கள் உயிருக்குப் பயந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாததாக மாறும்.

தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்கள் நினைத்தால் இத்தகைய நிலமதிப்பு உயர்வைத் தடுக்க முடியும். இந்நிறுவனங்களைக் காட்டிலும், அதில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மனது வைத்தால் அந்தந்த நகரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு உயர்வதைத் தடுக்க முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். இவர்களது செலவிடும் திறன் சாதாரண மக்களைக் காட்டிலும் மிக அதிகம்.

ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை கொடுப்பது அவருக்குச் சிரமமில்லை. ஆனால் அவரை அறியாமலேயே அப்பகுதியின் வாடகையை உயர்த்துகிறார். அவரால் குறைந்தபட்ச தூரத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.30-ஐ வீசிவிட முடியும். அப்பகுதியில் ஆட்டோ கட்டணம் உயர அவர் காரணமாகிறார். அதைவிட மோசமாக. அவரால் ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள ஒரு குடியிருப்பை ரூ.15 லட்சத்துக்குக் கண்ணை மூடிக்கொண்டு வாங்க முடியும். ஆனால், சம்பளத்தைத் தவிர “வேறு வருமானம்’ எதையும் பார்க்க முடியாத நடுத்தர மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை கூடுதல் என்றாலும் அது பெரும் சுமை. சொந்த வீடு எனும் கனவை மண்ணுக்குள் அழுத்துகிற சுமை.

Posted in Apartments, Appreciation, Asset, Bangalore, Bid, Biotech, Boom, Bust, Chennai, Compensation, Construction, CRR, Deflation, Delhi, Discrepancy, Economy, Employment, Estate, Exports, Finance, Flats, Hyderabad, India, Industry, Inflation, InfoTech, Interest, Investment, IT, Jobs, Labor, Land, Madras, Manufacturing, Plots, Poor, Property, Real Estate, Recession, REIT, Rich, Salary, Sale, SEZ, Stagflation, Telecom, workers | Leave a Comment »

Money Lending practices – Checks, Loans, Accounting Backgrounder

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

போலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்

ப. முத்தையன்

இந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’

ஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.

பணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.

பணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.

எனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.

இக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.

இம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.

பணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.

கையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

எதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.

கையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்?

சேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.

ஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.

எந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.

மேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.

அரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா? சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.

(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).

Posted in Accountancy, Accountant, Accounting, Analysis, Asset, Backgrounder, bank, CA, Check, Checking, Cheque, Chit Funds, Commerce, DD, Demand Draft, Draft, Finance, History, Income, Interest, Lending, Loan, Loss, MF, MO, Money, Money Order, Mortgage, Muthaian, Muthaiyan, Mutual Funds, Pa Muthaiyan, Profit, Rates, revenue, Savings, Security | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

Posted in Ambani, Anil, Arrogance, Asia, Asset, Azim Premji, Bajaj, Bill Gates, Billion, Billionaire, Birla, Biz, Bombay, Brazil, Business, Capitalism, Children, China, Commerce, Dayanidhi, Dhinakaran, Dinagaran, Dinakaran, Display, Distribution, Economics, England, Finance, Forbes, France, Gates, Globalization, Godrej, HCL, Homeless, Homes, Housing, Industry, Infosys, Japan, Kalanidhi, Kid, Kungumam, Lakshmi Mittal, maharashtra, Manufacturing, Maran, Microsoft, Millionaire, Mittal, Money, Mugesh, Mukesh, Mumbai, Nadar, Narayana Murthy, Needy, Oberoi, Oceanview, Op-Ed, Poor, Pune, Rich, Right, Russia, Seaview, Services, Shiv Nader, Sooriyan FM, Soviet, Street, Sun TV, TATA, USA, USSR, Vakf, Wakf, Warren Buffet, Wealth, Wipro | 1 Comment »

Economic impact of Industrialization of Agricultural Farmlands

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தொடரும் நிலப் பறிப்பால் துன்புறும் மக்கள்

மா.பா. குருசாமி

தொழில் வளர்ச்சி என்ற பெயரால் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்களும் பெருத்த இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதிக்கப்படும் மக்கள் வலுவற்றவர்களாக இருந்து வருவதால் அவர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதில்லை; ஆனால் தற்போது நிலைமை சற்று மாறிவருகிறது. நிலத்தை இழந்த விவசாயிகள் வீதிக்கு வந்து பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

விவசாயிகளை திடீரென நிலமற்ற நாடோடிகளாக விரட்டியடிப்பது பெரிய சிக்கலின் தொடக்க வெளிப்பாடாகும். இதைத் தடுக்காவிட்டால் கிராம மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரத்தையே இழக்கச் செய்யும் ஒரு “வளர்ச்சி’ முறையை ஆதரிக்கின்றவர்கள் இந்தச் சிக்கலை மேலோட்டமாகப் பார்க்கின்றனர். நிலத்தை மதிப்புள்ள ஒரு சொத்தாக மட்டும் கருதி, அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் போதுமென்று கருதுகின்றனர்.

இந்தியா தொழில்மயமான நாடாக மாற, சில தியாகங்கள் செய்ய வேண்டுமென்றும் அப்படிப்பட்ட தியாகங்களில் ஒன்றுதான் சில கடைநிலை விவசாயிகள் நிலத்தை இழப்பதும் என்று வாதிடுகின்றனர்.

சின்னஞ்சிறு விவசாயிகளுக்கு நிலம் வெறும் சொத்து மட்டுமல்ல; அது அவர்களுக்கு அமுதசுரபி. ஆண்டாண்டு காலமாக அந்த பூமித்தாயை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள், நான்கைந்து பசு – எருமை மாடுகள் இருந்தால் உழைப்பை நம்பி, வளமாகவும் நலமாகவும் வாழ்ந்த காலம் இருந்தது. கிராம வாழ்வின் ஆதாரமாக வேளாண்மையும், வேளாண்சார் தொழில்களும் இருந்தவரை வாழ்க்கை ஒரு சீராக இருந்தது.

இந்நிலையில், நகரங்களின் விரிவாக்கமும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரங்களை ஒட்டிய வேளாண் நிலங்களை விழுங்கத் தொடங்கின.

வீட்டடி நிலத்திற்காக இருபோகம், முப்போகம் விளைந்த நிலங்கள் வாங்கப்பட்டன. நிலத்தை வாங்கி விற்பவர்கள் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, வீட்டுமனைகளாக்கி, அவற்றை விற்று, கோடி கோடியாகப் பணம் குவிப்பதும், அடுத்தடுத்து இருக்கும் நிலங்களை, அக்கம் பக்கம் தெரியாமல் வாங்கிச் சேர்ப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெருஞ் செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக நிலத்தில் முதலீடு செய்கின்றனர். நிலத்தின் மதிப்பு நாளுக்குநாள் கூடுவது இதனை ஊக்குவிக்கிறது. தங்கத்துக்கு அடுத்தபடியாக நிலமுதலீடுதான் கருப்புப் பணத்தைக் கவர்ந்து ஈர்த்தது.

குடியிருப்புக்கு அடுத்து வாணிப, தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்கின்றன. நிலத்தை வாங்க, விற்க உரிமை இருப்பதால் இதில் யாரும் தலையிட முயல்வதுமில்லை; முடிவதுமில்லை.

மேலும் நமது நாட்டில் நிலத்தை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்ற கொள்கை இதுவரை உருவாகவில்லை. ஆதலால் நிலத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகின்றனர்.

கணிசமான கிராம மக்கள் சொந்த நிலத்தை, வாழ்வை இழந்து வெளியேறுவதை “வளர்ச்சிப் போக்கு’ என்று அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர்.

நமது நாட்டில் சராசரி நில உடைமையளவு 1.41 ஹெக்டேர். இது ஒரு வேளாண் குடும்பத்துக்கு வாழ்வளிக்காது. இப்பொழுது 74 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.

வேளாண்மையை நம்பி இருக்கின்றவர்களில் 20 சதவீத மக்களை வேறு துறைகளுக்கு மாற்ற வேண்டுமென்று வற்புறுத்துகின்றனர். எப்படி, எந்தத் துறைக்கு மாற்றுவதென்று யாரும் திட்டவட்டமாகக் கூறவில்லை; கூற முடிவதில்லை.

இந்நிலையில் பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைத்து கிராமங்களைத் தொழில் மயமாக்க அரசு முயன்று வருகிறது. பொருளாதாரச் சிறப்பு மண்டலங்களை அமைக்கும் பொறுப்பு நமது உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில்தான் மேற்கு வங்கத்தில் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலைக்கும், மிதுனபுரி மாவட்டம் நந்தி கிராமத்தில் இந்தோனேசியா நிறுவனத்துக்கும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் மேற்குவங்க அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

இப்பொழுது அனுமதி பெற்றிருக்கிற 237 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குத் தரப் போகிற நிலம் 37,400 ஹெக்டேர். இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டங்கள் 340. மேலும் 300 திட்டங்கள் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்யப்பட உள்ளது என்றும் எராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் உறுதி கூறுகின்றனர்.

நிலத்தை இழக்கின்றவர்களுக்கெல்லாம் இந்த நிறுவனங்களில் வேலை கிடைக்கப் போவதில்லை. இவர்களில் சிலருக்கு தொடக்க காலத்தில் உடல் உழைப்புச் செய்யும் பணிகள் கிடைக்கலாம். ஆனால் இவற்றில் தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் திறன்மிக்க பயிற்சி பெற்ற தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள்.

நமது நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 63 சதவீதம் நிலத்தில்தான் வேளாண்மை செய்கிறோம். இன்னும் 37 சதவீத நிலம் மேய்ச்சல் நிலமாக, தரிசு நிலமாக, வேளாண்மை செய்யத் தகுதியற்ற நிலமாக இருக்கிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சாகுபடி செய்யும் நிலத்தின் அளவைக் கூட்டி, உணவு உற்பத்தியைப் பெருக்க முயல்கிறோம்.

இந்நிலையில் ஏராளமாக இருக்கும் சாகுபடி செய்ய முடியாத இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவலாம். ஆனால் பெரிய தொழில் நிறுவனங்கள் அகக் கட்டுமானங்கள் உள்ள நகரங்களை அடுத்த கிராமப்புறங்களை விரும்புமே தவிர, தூரத்திலுள்ள இடங்களை நாடாது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் மத்திய, மாநில அரசுக்கு, “”பொது நோக்கிற்காகவும், நிறுவனங்களுக்காகவும், இழப்பீடு அளித்து கையகப்படுத்தும் முழு உரிமையை அளிக்கிறது”. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் இப்பொழுது மாநில அரசுகள் நிலத்தின் விலையை நிர்ணயித்து வேளாண் நிலத்தைக் கைப்பற்றுகின்றன.

இந்தச் சட்டம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய நிறுவனங்களுக்கு மொத்தமாக நிலத்தைத் தாரை வார்க்க உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இப்பொழுதும் நமது விவசாயிகளை மொட்டையடிக்க இந்தச் சட்டம் பயன்படுவது வேடிக்கை.

இப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை (விலையை) மாவட்ட ஆட்சியாளர் நிர்ணயம் செய்கிறார். அது நடைமுறை பத்திரப்பதிவு விலையாக இருக்கும். அந்த நிலம் தொழில் நிறுவனத்திற்குக் கை மாறியபின் எத்தனை மடங்கு உயரும் என்பதைக் கூற முடியாது.

இழப்பீடாக பல ஆயிரம் ரூபாய் பெறுகிற விவசாயியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவன் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கிப்போட்ட செடியாக இருப்பான். உடனே வேறு இடத்தில் நடப்பட்டால் செடி தழைக்கும். இல்லையேல் காய்ந்து கருகிப் போகும். கையிலுள்ள பணம் செலவானபின் விவசாயி வெறும்கையுடன் வேலை தேடி அலைய வேண்டும். லஞ்ச ஊழல் நிர்வாகத்தில் நிர்ணயிக்கப் பெற்ற இழப்பீட்டுத் தொகை முழுமையாகக் கிடைக்குமென்ற உறுதிப்பாடும் இல்லை.

2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 6,38,365 கிராமங்கள் இருக்கின்றன. இவற்றில் 5,93,643 கிராமங்களில்தான் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இரண்டு லட்சம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களில் குடியேறுவதாக வைத்துக் கொள்வோம். நகரங்கள் எல்லாம் நரகங்களாகும் நிலை தானே ஏற்படும்.

நிலத்தை – வேளாண்மையை – நம்பியிருக்கின்ற மக்களுக்கு வாழ மாற்று ஏற்பாடு செய்யாமல் நிலத்தை இழந்து வெளியேறச் செய்வது குளவிக்கூட்டில் கல்லெறிந்து கூட்டைக் கலைப்பதைப் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

சரியான பொருளாதார வளர்ச்சியை முறையாக மேற்கொண்டு எல்லா மக்களையும் வாழ வைப்பதுதான் நல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்க வளர்ச்சியாக இருக்கும்.

Posted in Agriculture, Analysis, Asset, City, Commerce, Dinamani, Economy, encroachment, Farmers, Farmlands, Finance, Globalization, Growth, Industrialization, Industry, Land, Op-Ed, Opinion, peasants, Property, Rural, Urbanization, Village | 1 Comment »

‘Coimbatore Technology Park & SEZ will affect Agricultural lands’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம்: ஜெ. எச்சரிக்கை

சென்னை, ஜன. 12: விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தினால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம் காட்டியதும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில் இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.

இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்கப் போவதாக கருணாநிதி கூறுவது யதேச்சதிகாரமானது.

பயன்பாட்டில் உள்ள இந்த விவசாய நிலங்களையும் தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று அப் பகுதி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடச் சென்றால் அவர் மக்கள் முன் வர மறுக்கிறார். ஆத்திரம் கொண்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மைனாரிட்டி திமுக ஆட்சி வந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அபாயகரமானது. தொழில்நுட்பப் பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி எப்போதும் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களைப் பிற காரணங்களுக்காகக் கையகப்படுத்தும் திட்டத்தை எந்த நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

============================================

வர்த்தக நோக்கங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 12: சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொங்கன் ரயில்வேயில் ரோஹா-மங்களூர் இடையே அகல ரயில்பாதைகளை அமைப்பதற்காக 11 ஆயிரத்து 875 சதுர மீட்டர் நிலம் கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.4 வழங்குவது என மாநில அரசு நிர்ணயித்தது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சதுர மீட்டருக்கு ரூ.192 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இத் தொகையை ரூ.38 என குறைத்தது.

இதற்கு எதிராக, நிலத்தின் உரிமையாளர் நெல்சன் ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த ஏ.ஆர்.லட்சுமணன், அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு: உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொகையைக் குறைக்கும்போது பொத்தாம்பொதுவாக முடிவுசெய்துள்ளதாக கருதுகிறோம். சட்டப்படி இது ஏற்கக்கூடியது அல்ல.

முறையீடு செய்தவர்களுக்கு, நிவாரணம், அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருக்கும் மரங்களுக்காக ரூ.59,192 அளிக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.250 வீதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், வர்த்தக நோக்கங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயரிய அளவில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான காரணத்துடன், அப்போதைய மார்க்கெட் மதிப்பு, நிலம் அமைந்துள்ள இடம், நிலத்தின் உரிமையாளர் அடையும் இழப்பு உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

======================================================

கையகப்படுத்திய நிலம் அரசின் சொத்து ஆகும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மார்ச்.19-

ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசின் தனிப்பட்ட சொத்து ஆகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1978-ம் ஆண்டு சென்னையை அடுத்த பாடியில் 43 பேரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 21 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அடுக்குமாடி திட்டம் வரவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 43 பேரும் தமிழக அரசிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் இந்த மனுக்களை நிராகரித்து விட்டது.

உடனே 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் கருத்தை கேட்காமல், பொது நோக்கத்துடன் கையகப்படுத்திய நிலங்களை மனுதாரர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த 2 அப்பீல் மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எங்கள் கருத்தை சொல்ல சென்னை ஐகோர்ட்டு வாய்ப்பு தரவில்லை. குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு நேற்று விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகளின் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அந்த நிலத்தை மார்க்கெட் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் அரசு வழங்கலாம்.

இவ்வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்யும் முன், அதற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். இதுதவிர மறு ஆய்வு மூலம் தன்னுடைய தவறை சரி செய்து கொள்ள டிவிஷன் பெஞ்சுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மிகவும் அவசியமானது. அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று வீட்டு வசதி வாரியம் கூறியதை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டது. இதன்மூலம் இந்த வழக்கின் விசாரணையில் ஐகோர்ட்டு தவறு செய்து உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

———————————————————————————————–

தேவை புதிய விமானநிலையம்

Dinamani op-ed

July 14, 2007

விமானக் கட்டணக் குறைப்பு, அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்கள், பெருகி வரும் விமானப் போக்குவரத்து என்று ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா சமீபகாலங்களில் காண நேரிட்டு வருகிறது. சாதாரண மனிதர்கள்கூட விமானத்தில் பறக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

ஒரு கோடியே இருபத்தெட்டு லட்சம் பயணிகள் மட்டுமே 2003-ல் விமானப்பயணம் மேற்கொண்ட நிலைமை மாறி, சுமார் இரண்டரைக் கோடி பேர் விமானப் பயணம் செய்யும் நிலைமை 2006-ல் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 20 சதவிகிதம் அதிகரிப்பு. மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்று விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும்போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்களில் விமானங்களுக்கு இடவசதி செய்து தரவும், கூடுதலான பயணிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விமான நிலையங்களின் வசதிகளைப் பெருக்கவும் அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் அதிகரிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப விமானநிலைய விரிவாக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

சிறு சிறு நகரங்களில்கூட விமானநிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பூணே, கோவா போன்ற சிறு நகரங்களில் விமானநிலையம் அமைப்பதைப் பற்றி அந்தந்த மாநில அரசுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ராணுவ விமானநிலையங்களின் மூலமாக விமான சேவை நடைபெறுகிறது என்றாலும், பொதுமக்களின் தேவைக்காகப் புதிய விமானநிலையம் தேவை என்று கோரிக்கைகள் எழுகின்றன.

இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India) இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. பெருகிவரும் தேவைக்கு எப்படி ஈடுகொடுப்பது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமானநிலைய ஆணையமும் மூளையைக் கசக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசின் திட்டம் செயல்படுமேயானால், இந்திய விமானநிலைய ஆணையமும் தனியார் விமானநிலையங்களுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமானநிலையங்களை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் 36,000 கோடி ரூபாய் செலவிட இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கையில், தமிழகத்தைப் பொருத்தவரை, விமான நிலையங்கள் அமைக்க இன்னமும் இடங்கள் கையகப்படுத்தியாகவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், அதேநேரத்தில் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமையாமல் விமானநிலையத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் ஏற்பட வேண்டும் என்று புரியவில்லை.

நாம் முந்திக் கொள்ளாவிட்டால், விமானநிலைய வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவப்படுவது மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள விமானநிலையங்களைப் புதுப்பித்து அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்தை எதிர்நோக்கும் அளவுக்கு நவீனப்படுத்தியாக வேண்டும்.

பொதுமக்களும், அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத விமானநிலைய விரிவாக்கப்பணி அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி – எல்லா கட்சியினரையும் அழைத்துப் பேசி, விரைவிலேயே புதிய விமானநிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குவதுதான்!

——————————————————————————————————————————–

விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: மணப்பாக்கம், தரப்பாக்கம் மக்கள் நிலை என்ன?

சென்னை, ஜூலை 22: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கி உள்ளனர்.

இந்த கிராமங்களில புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கான இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது குறித்து அரசு தெளிவாக அறிவிக்காதது இந்த பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 1069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2005 ஏப்ரலில் அறிவித்தபடி மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இங்கு புதிய விமான ஓடுதளம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழப்பம்:

நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அரசு நிர்வாகம், இவர்களுக்கான மாற்று இடம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

2005 ஏப்ரலில் அறிவித்ததுக்கு மாறாக 2005 டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையை காரணமாகக் காட்டி மணப்பாக்கம், தரப்பாக்கத்தில் பெருமளவு நில விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு கிடைத்த குறைந்த நேரத்தை பயன்படுத்தி இங்கு விமான நிலையம் வராது என்று கூறி புதிய குடியிருப்புகளை 2 பெரிய நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

இவ்வாறு இங்கு விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தும் குடியிருப்புகளை விற்பனை செய்தவர்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி அளித்தது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நிவாரணம் எப்போது?

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1991-ல் கவுல்பஜார் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இவர்களுக்கான இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு கிடைக்குமா என்பதே இந்த மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

———————————————————————————————————————–
சென்னை விமான நிலைய விரிவாக்க பணி: ஜனவரியில் தொடக்கம்

சென்னை, செப். 3:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று இந்திய விமானத் துறை செயலர் கே.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்தார்.

ரூ. 2,700 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு தொடங்கும். விமான ஓடுபாதை (ரன்வே) மற்றும் டாக்ஸி வே மற்றும் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் ஆகியன புதிதாக கட்டப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் பெருகி வரும் விமானப் பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களைக் கையாளும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டப் பணிகள் 2010-ம் ஆண்டு முடிவடையும். புதிதாக அமையும் விமான ஓடுபாதை ரூ. 1,700 கோடியில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டடங்கள் ரூ. 1,000 கோடியில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலையம் (கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட்) அமைப்பது குறித்த அனைத்து பூர்வாங்க பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விவரம் ஒரு மாதத்திற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் புதிய விமான நிலையம் அமையும் என்றார் ஸ்ரீவாத்ஸவா.

Posted in acquisition, ADMK, Agriculture, AIADMK, Airport, Asset, Coimbatore, Commerce, Compensation, DMK, encroachment, Farmer, Farming, J Jayalalitha, Kongu Nadu, Kovai, Land, Loss, M Karunanidhi, Mangalore, Market, Pammal, PMK, Polichaloor, Polichalur, Pozhichaloor, Pozhichalur, Prices, Property, Protest, Railways, Refugee, Satellite City, SEZ, Technology Park | 2 Comments »