Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Asiad’ Category

Champion India in Asia Cup Hockey – Indian coaches & Sports Minister Mani Shankar Aiyar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

ஆசியக்கோப்பை: மணிசங்கர் அய்யர் மெüனம் காப்பது ஏன்?

வி. துரைப்பாண்டி

சர்வதேச அளவிலான போட்டியில் இதற்கு மேல் ஒரு வெற்றி வேண்டுமா என வியக்கும் அளவுக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஏழாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி, திறமையை வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக 7 நாடுகளை வீழ்த்தியது! இலங்கைக்கு எதிராக 20 கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த சாதனையை சமன் செய்தது உள்பட 57 கோல்கள் இந்திய அணியின் கணக்கில். இவ்வளவுக்கும் பெனால்டி கார்னரில் இந்தியா “ஹீரோ’ அல்ல, ஏறக்குறைய ஜீரோதான். தட களத்தில்தான் வினாடிக்கு வினாடி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், குழு விளையாட்டுப் போட்டியில் அதுமாதிரியான தருணத்தை காண்பது அரிது. ஆனால் இளமையும் முதுமையும் கலந்த இந்திய அணியினர், ஹாக்கியை தட களமாக மாற்றி, ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தளித்தனர். அனுபவ வீரர் பிரப்ஜோத் சிங், வேகத்தில் தன்ராஜ் பிள்ளையாகவே காணப்பட்டார். அவரது “ரிவர்ஸ் பிளிக்’ கோல் முயற்சி, நிச்சயம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.

நீண்ட போட்டிகளுக்குப் பிறகு ஓர் அணியாக விளையாடியது இந்தியா. உச்சக்கட்டமாக, ஆசியாவில் புலியாகத் திகழும் கொரியாவை 7-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்து உலக ஹாக்கி வட்டாரத்தை தலைதூக்கிப் பார்க்கச் செய்துள்ளது பிரப்ஜோத் திர்கே தலைமையிலான இந்திய அணி. இல்லை, பயிற்சியாளர் ஜோஹிம் கார்வலோ பார்வையிலான இந்திய அணி என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஹாக்கியை “தேசிய விளையாட்டு’ எனக் கூறிவருகிறோம். ஆனால் அதற்கு சட்டபூர்வமாக எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் 1960-80-களில் இந்தியா குவித்த வெற்றிகளால், அப்போதிருந்த 80 கோடி மக்கள் இவ் விளையாட்டை ஜனரஞ்சகமான ஆட்டமாக ஏற்று, போற்றத் தொடங்கினர். அதனால், மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் ஹாக்கி ஓங்கி ஒலித்தது, விளையாடப்பட்டது, மக்களும் ஏற்றுக்கொண்டனர், பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு காலப்போக்கில் அந்த அணி தீனி போடமுடியாதது வருத்தமான விஷயம்தான்.

கடைசியாக தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5-ம் இடம். அதற்கு முன்னர் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றுவந்த இந்திய அணியினர், நம்மிடம் பயின்ற சீனாவிடம் பெற்ற தோல்வி, அப் போட்டியில் அதளபாதாளத்துக்குத் தள்ளியது.

உதை மேல் உதை. ச்சீ… இதைப் போய் தேசிய விளையாட்டு என்று எப்படிச் சொன்னார்கள் என எள்ளிநகையாடாதவர்கள் குறைவு. 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை, ஏன் ஆசிய நாடுகளைக்கூட தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான, வீரமான 11 வீரர்கள் கிடைக்கவில்லையா என்ற ஆதங்கம் கடைக்கோடி மக்களிடம்கூட இருந்தது.

அதற்காக, இந்திய ஹாக்கி அமைப்பு என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டன. 1976-வரை கட்டாந்தரையிலேயே விளையாடி பழக்கப்பட்ட இந்தியர்களுக்கு, அதன் பிறகு வந்த ஆஸ்ட்ரோ டர்ப்பில் (செயற்கை புள்தரை) விளையாடுவதுதான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்றார்கள். ராஜீந்தர் (சீனியர்), ஜெரால்டு ராச், ராஜீந்தர் (ஜூனியர்), கடைசியாக வி. பாஸ்கரன் என எத்தனையோ பயிற்சியாளர்கள் இந்திய அணியை சீர்தூக்கிப் பார்க்க முயற்சித்தனர். ஆனால் ஏற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான்.

ஆனால், பாஸ்கரனுக்குப் பிறகு அணியை செம்மைப்படுத்திவரும் முன்னாள் ஒலிம்பியன் கார்வலோ, தான் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். கோலாலம்பூர், பூம் ஆகிய நகர்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கம். தற்போது ஆசியக் கோப்பையில் தங்கப் பதக்கம். 9 மாத காலத்தில் நம்பிக்கையான பார்வை.

உலக மக்கள் தொகையில் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்ற பெயரைப் பெற்ற இந்தியா, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதே சமயம் குழுப் போட்டியான ஹாக்கி, 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தேடிக் கொடுத்துள்ளது.

ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றுள்ள இந்தியாவுக்கு அடுத்த இலக்கு பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே. உலகத் தரவரிசையில் தற்போது 8-வது இடத்தில் இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு இன்னும் தகுதியைப் பெறவில்லை. ஆனால், சிரமம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள கார்வலோ, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஏற்கெனவே 8 நாடுகள் அதற்கான தகுதியைப் பிடித்துவிட்டன. மற்றைய நாடுகள் எவை என்பதைத் தீர்மானிக்க சிலி, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியாவும் விளையாட உள்ளது.

இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒலிம்பிக் விளையாட்டாகத் திகழும் ஹாக்கியை, முதன்மைப் பிரிவிலிருந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் அது குறித்து கவலைப் படவில்லை என்பதற்கு ஆசியக் கோப்பை வெற்றியே சாட்சி.

கோலாலம்பூரில் 2003-ல் முதன்முதலாகப் பெற்ற ஆசியக் கோப்பையை, இம்முறையும் இந்திய அணியினர் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்திய அணியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கையில் வைத்துள்ள மணி சங்கர் அய்யர் மட்டும் மெüனம் காப்பது ஏன் என்பதுதான் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

Posted in Asia, Asiad, Chakde, Champion, Chennai, Coach, Cricket, Cup, Games, Goals, Hockey, Madras, Mani, ManiShankar, match, Minister, Olympics, Play, Players, Shahrukh, Sports | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

Tamil Nadu kid wins in Muay Thai, Kickboxing, Martial Arts of Thailand

Posted by Snapjudge மேல் மே 9, 2007

முகங்கள்: “மொய்தாய்’

கே. இளந்தீபன்

“மொய்தாய்’ விளையாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் கனகராஜ். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஸ்டார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் இம்மாணவர், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசைத் தட்டி வந்துள்ளார்.

“மொய்’ தெரியும். “தாய்’ தெரியும். அது என்ன “மொய்தாய்’ கலை? கனகராஜே சொல்கிறார்:

“”தாய்லாந்து நாட்டிலிருந்து வந்ததுதான் “மொய்தாய்’ என்று அழைக்கப்படும் தற்காப்பு கலை. ஒருவர் தன்னுடைய முஷ்டி, பாதம், முழங்கால், முழங்கை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் பயிற்சியாகும்.

இந்தத் தற்காப்பு கலைக்கு “மொய்தாய்’ என்ற பெயரைச் சூட்டியவர் “அபித்கரு மொய்’ என்பவர்.

இந்தத் தற்காப்பு கலையில் “சங்க்மொய்’ என்பது முஷ்டி பாதம் முழங்கை, முழங்கால் ஆகிய உறுப்புகளை விளையாட்டின்போது பயன்படுத்தும் முறையை விளக்குவதாகும்.

“லுக்மாய்’ என்பது எல்லா வீரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை முறையாகும். மொய்தாய் தற்காப்பு கலையைத் துவங்கும் முன் “க்ராபி-க்ராங்’ என்ற பயிற்சிக் கருவியின் மூலம் குருவணக்க நடனம் ஆடப்படுகிறது.

பழைய முறைகளைத் தவிர்த்து இந்த “மொய்தாய்’ இப்போது சீருடை, கையுறை, தடுப்பு உறை போன்ற பாதுகாப்பான வசதிகளுடன் விளையாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் தாய்லாந்து ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய பயிற்சியாகவும் இருக்கிறது.

மொய்தாய் தற்காப்பு கலை இந்தியாவில் முதன்முதலாக பெங்களூர் நகரில் 1996-ல் வந்தது. ஆந்திரா சென்று தற்போது தமிழ்நாட்டில் 2005-ல் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்த பயிற்சியாக மாறி வருகிறது.

உலகளவில் உள்ள வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, கனடா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில்தான் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.

இந்த விளையாட்டோடு ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் தேசிய அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். மொய்தாய் விளையாட்டில் நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர் செந்தில் மாஸ்டர்தான். மொய்தாய் தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கனகராஜ்.

கின்னஸ் கனவு வெல்லட்டும்!

Posted in Arts, Asiad, Australia, Bangkok, China, England, Japan, Judo, Kanagaraj, Kanakaraj, karate, Kathir, Kickboxing, Korea, Kumbagonam, Kumbakonam, Martial, Moitai, Moithai, Muay Thai, Muaytai, MuayThai, Olympics, Taekwondo | 1 Comment »

Pillay wants longer term for Carvalho

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை

கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.

கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:

பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.

பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Asiad, Asian Games, Azlan, Azlan Shah, Baskaran, Bhaskaran, Captain, Carvalho, Coach, Cup, Dhanraj, foreign coach, Game, Hockey, IHF, Indian Hockey Federation, Joaquim Carvalho, K Jothilkumaran, K P S Gill, Loss, maharashtra, Olympics, PHL, Pillai, Pillay, Politics, Premier Hockey League, President, Rajinder Singh, Secretary, selection, Sports, Sultan Azlan Shah, Tamil Nadu, TamilNadu, Taminadu, Team, Term, TN, trial, Vasudevan Baskaran, Victory, Win, World Cup | Leave a Comment »

33rd National Games in Guwahati – No Place for TN athlete Santhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை சாந்திக்கு இடம் இல்லை

சென்னை, பிப்.1-

33-வது தேசிய விளையாட்டுப் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் வருகிற 9-ந் தேதி முதல் 18ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 40 பேர் இடம்பெற்று உள்ளனர். 20 வீரர்களும், 20 வீராங்கனைகளும் தேர்வாகி உள்ளனர்.

தோகாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த சாந்தி தமிழக அணியில் இடம் பெறவில்லை.

பெண் தன்மை சோத னையில் தோல்வி அடைந்த அவரது பதக்கம் பறிக்கப் பட்டதா இல்லையா என்ற மர்மம் இன்னும் நீடித்து இருக்கிறது. சாந்தியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு அமைச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் சி.நீலசிவலிங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சாந்தியின் பெயரை சேர்த்து இருந்தோம். திடீரென இந்திய தடகள சம்மேளனத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு பட்டியல் அனுப்பவும் என்று கடிதம் வந்தது. ஆனால் விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் சாந்தியை நீக்கி உள்ளோம்.

இவ்வாறு நீலசிவலிங்கசாமி கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள்:

அரவிந்த், மாணிக்க வாசகம், விஜய குமார், சத்யா, சரவணகுமார், ரகுநாத், முத்துசாமி, கருப்பசாமி, விக்டர், ஜெபசிங், புயல் பாலச்சந்தர், பெனடிக்ட் ஸ்டார்லி, நிகில், சித்தரசு, வெய்ன் பெபின், வினோத்ராஜ், சந்திரசேகர், ரஞ்சித்குமார், வடிவேலு, பார்த்தீபன், பிரேமானந்த், பிரசாந்த்,

பயிற்சியாளர் அண்ணாவி,

மானேஜர் செந்தில்.

பெண்கள்:

அஞ்சு ஜார்ஜ், சாரதா நாராயணா, அன்பு விமலா, பிரதீபா, மோகனாள், இளவரசி, சூர்யா, மகேஸ்வரி, சங்கரி, காயத்ரி, லீலாவதி, லட்சுமி, சுரேகா, சரஸ்வதி, அணிச்சம், கற்புரா மாலா, ஜெயந்தி, மோகன பிரியா, மலர் விழி, சரண்யா பிரகாஷ்,

பயிற்சியாளர்:- சுகந்தி,

மானேஜர்:- பார்வதி.

Posted in 33, Asiad, Asian Games, athlete, athletics, Contestants, Controversy, Games, India, Medals, National Games, Olympics, Santhi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Sports, Track and field | Leave a Comment »

Doha Asiad ’06 – India’s Medal Tally improves by 19

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

இந்தியாவுக்கு கடந்த போட்டியை விட 19 பதக்கங்கள் அதிகம்

டோகா, டிச. 16-

டோகா நகரில் நடந்து வந்த ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 165 தங்கம் உள்பட 316 பதக்கங்களை பெற்று சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. 58 தங்கம் உள்பட 193 பதக்கங்களுடன் தென் கொரியா 2-வது இடத்தையும், 50 தங்கம் உள்பட 198 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்து உள்ளது. 10 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்கள் கிடைத்து உள்ளன.

2002-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 10 தங்கம் உள்பட 35 பதக்கம் கிடைத்து இருந்தன. இந்த போட்டியல் கூடுதலாக 19 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளன.

இருந்தாலும் தர வரிசை அடிப்படையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த போட்டியிலும் 8-வது இடத்தைதான் பிடித்தது. இந்த தடவையும் அதே இடம்தான் கிடைத்து உள்ளது.

1998-ம் ஆண்டு போட்டியில் இந்தியா 7 தங்கம் உள்பட 35 பதக்கம் பெற்றிருந்தது. அப்போது 9-வது இடத்தில் இருந்தது.

Posted in 2006, Asiad, Asian Games, athletics, China, Doha, India, Japan, Medal, Rank, South Korea, Sports, Tally, Tamil | Leave a Comment »

TN Govt announces cash award to Santhi Soundarajan – 800 Meters Race Silver Medalist

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் பரிசு: முதல்வர்

சென்னை, டிச. 11: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளி.

போட்டியின் போது சாந்தி

போட்டியின் போது சாந்தி

தற்போது தோஹாவில் நடைபெற்றுவரும் 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தடகளத்தில் இந்தியா தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. அத்துடன் தமிழகத்திலிருந்து பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் சாந்தி ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய சாதனை படைத்துள்ள சாந்தியின் பெற்றோர்கள் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஆசிய அளவில் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள விளையாட்டு வீராங்கனை சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்

சாந்திக்கு தமிழக முதல்வர் பரிசு வழங்குகிறார்இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 நிமிடம் 3.16 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் என்ஜினியரிங் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாதமியில் பயிற்சி பெற்றவர்.

வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து சாந்தி கூறுகையில், “”தகுதிச் சுற்றில் நான் சற்று பின்தங்கியிருந்தேன். இருப்பினும் இறுதிப் போட்டியில் நம்பிக்கையுடன் பங்கேற்றேன். பயிற்சியாளர் நாகராஜனின் ஆலோசனைப்படி புதிய உத்திகளைப் பயன்படுத்தினேன். இதனால் வெள்ளிப் பதக்கம் வசமானது,” என்றார் சாந்தி.

25 வயதான சாந்தி இதற்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதேபோல 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தி விவகாரம் குறித்து விளையாட்டுத் துறையினரின் கருத்துகள்

சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை
சாந்தியின் குடும்பத்தினர் பணியாற்றும் செங்கல் சூளை

இந்த சர்ச்சை குறித்து இது வரை இந்திய தடகள சங்கத்திற்கோ அல்லது தமிழ்நாடு தடகள சங்கத்திற்கோ எந்த வகையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை என அகில இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறுகிறார்.

அவ்வாறு ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கிடைக்க பெற்றால் பிறகு அவரால் மகளிர் பிரிவில் பங்குபெற முடியாது எனவும் அவர் கூறுகிறார். மேல் முறையீடு செய்வது தனிப்பட்ட வீரர் வீராங்கனையின் பொறுப்பு எனவும், சங்கத்திற்கு அதில் எந்த பொறுப்பும் கிடையாது என்றும் கூறினார் தேவாரம்.

இந்த வருடம் கொரியாவிலும், இலங்கையிலும் இரண்டு சர்வதேச போட்டிகளில் அவர் பங்கு பெற்றிருந்தாலும், இவ்வாறான பிரச்சினை ஏதும் எழவில்லை எனவும் கூறும் தேவாரம், ஒரு போட்டியில் பங்குபெற ஒரு வீராங்கனை வரும் போது அவர் ஆணா அல்லது பெண்ணா என்று பார்ப்பது ஒழுங்கற்ற செயல் எனவும் அவர் மேலும் கூறினார்.

சாந்தியின் செம்மண் வீடு
சாந்தியின் செம்மண் வீடு

1986 வரை பாலியல் தொடர்பான சோதனை நடத்தப்பட்டன எனவும், அது பெண்மைக்கு இழுக்கு எனக் கருதப்பட்டதால், அதன் பிறகு அந்தச் சோதனை நடத்தப்படுவதில்லை எனக் கூறுகிறார் தோஹா போட்டிகளுக்கு தொழிற்நுட்ப நடுவராக சென்றிருந்த சி.கே.வல்சன். போட்டியில் பங்கு பெற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பெண்மை குறித்த இந்த பாலியல் சோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். ஆனால் சாந்தி விடயத்தில் அவ்வாறு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தம்மால் உறுதியாக் கூறமுடியும் எனவும் மேலும் கூறினார் வல்சன்.

அறிவியல் ரீதியாக ஹார்மோன்களின் அளவின் அடிப்படையிலேயே ஆணா பெண்ணா எனத் தீர்மானிக்கப்படும் எனக் கூறுகிறார் விளையாட்டு மருத்துவ வல்லுநர் டாகடர். கண்ணன் புகழேந்தி.

சாதாரணமாக சிறுநீர் தான் பரிசோதிக்கப்படும் எனவும் இது போன்ற சிக்கலான சூழலில் ரத்தப் பரிசோதனை அவசியம் எனவும், அதில் தான் ஹார்மோன்களின் அளவு தெரியவரும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

இவ்வாறான சோதனைகளுக்கு அப்பாற்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டால் அதன் மூலம் ஒருவரது பாலியல் தன்மை உறுதியாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

 

 

சாந்தியின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சாந்திக்கு ஏற்பட்ட சரிவு
சாந்திக்கு ஏற்பட்ட சரிவு

அண்மையில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி சவுந்திரராஜனின் பதக்கம் திரும்பப் பெறப்படும் என இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த ஆசிய ஒலிம்பிக் சங்கத்தின் கடிதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் தமக்கு கிடைத்திருப்பதாக இந்திய தடகள சங்கத்தின் செயலர் லலித் பானோட் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் யாரும் தனிப்பட்ட பொறுப்பேற்க முடியாது எனக் கூறும் அவர், சாந்தியின் பிறப்புச் சான்றிதழில் அவர் பெண் என்று குறிபிடப்பட்டுள்ளது எனவும், அவரது கடவுச்சீட்டிலும் அவ்வாறே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தனிப்பட்ட நபருக்கும், சங்கத்திற்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் நாட்டிற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

போட்டியாளரின் பாலியல் குறித்து கண்டறிய சர்வதேச சங்கம் தடைவிதித்துள்ள காரணத்தால், இது குறித்து போட்டிக்கு முன்னர் சோதிக்க இயலாது எனவும் கூறுகிறார் பானோட். ஒரு ஆணிடம், அவர் ஆடவர் தானா எனக் கேட்க முடியாத போது எப்படி ஒரு பெண்ணிடம் அப்படி கேட்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் இனிவரும் காலங்களில் இது போன்ற அசாதாராண விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 

 

தமிழக வீராங்கனை சாந்திக்கு ரூ.15 லட்சம்- டெலிவிஷன் பரிசு கருணாநிதி வழங்கினார்

சென்னை, டிச. 18-

கத்தார் நாட்டில் நடந்த 15-வது ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ் நாட்டை சேர்ந்த 4 பேர் பதக்கம் வென்றனர்.

அதில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்று உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பாராட்டும், பரிசும் குவிந்த நிலையில் சாந்தி பாலின சோதனையில் தோல்வி அடைந்ததாக திடீர் சர்ச்சை எழுந்தது. அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் திரும்ப பெறப்படக்கூடும் என்று தகவல் வெளியானது.

இதனால் அவருக்கு தமிழக அரசின் ரூ.15 லட்சம் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது. ஆனால் தங்களுக்கு இது தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என்று அறிவித்த தமிழக அரசு, இன்று திட்டமிடப்படி சாந்திக்கு ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தோஹாவில் நடைபெற்று முடிந்துள்ள பதினைந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றுத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்த வீரர்களில், தடகளப் பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட் டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்திக்கு 15 லட்சம் ரூபாயும், சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த வீரர் சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயும், வீராங்கனை அஞ்சு பி. ஜார்ஜ் நீளம் தாண்டுதல் போட் டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மைக்கு 15 லட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் ஒற்றையர் போட் டியில் வெண்கலப் பதக் கம் வென்ற வீரர் சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யும் பரிசுத் தொகையாக வழங் கப்படும் எனத் தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி இன்று தலைமைச் செயலகத்தில், தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகள் படைத்த தமிழக விளையாட்டு வீரர்களான சசிகிரன்கிருஷ்ணனுக்கு 20 லட்சம் ரூபாயையும், அஞ்சு பி. ஜார்ஜ×க்கு 15 லட்சம் ரூபாயையும், சாந்திக்கு 15 லட்ச ரூபாயையும், சௌரவ் கோசலுக்கு 10 லட்சம் ரூபா யையும் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் பெற்றோர்கள் தம்வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் தமது மகள் தோஹாவில் நிகழ்த்திய சாதனையைக் காண முடியாமல் போனது எனக்கூறியதன் அடிப்படையில், வீராங்கனை சாந்திக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் முதல்-அமைச்சர் கருணாநிதி பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான், விளையாட் டுத் துறை செயலாளர் அம் பேத்கர் ராஜ்குமார், தமிழ் நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் -செயலர் அபூர்வா ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

சாந்திக்கு பரிசு வழங்கியது பற்றி அமைச்சர் மொய்தீன் கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீராங்கனை சாந்தி குறித்து வேறுவிதமான செய்திகள் வந்துள்ளன. என்றாலும் ஆசிய விளையாட்டு போட்டி அமைப்பாளர்களிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை.

சாந்திக்கு மனிதாபிமான அடிப்படையில் முதல்-அமைச்சர் அறிவித்த பரிசை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண் ஆசிய அளவில் பரிசு பெற்று வந்து இருப்பதை நாம் பாராட்டி, வாழ்த்தி, ஊக்குவிக்க வேண்டும். இதை விடுத்து எதற்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி கேட்கக்கூடாது.

இவ்வாறு அமைச்சர் மொய்தீன்கான் கூறினார்.

 வெள்ளிப்பதக்கம் என்னிடம்தான் உள்ளது: வீராங்கனை சாந்தி பேட்டி

முதல் அமைச்சர் கருணாநிதியிடம் பரிசு பெற்று திரும்பியதும் ஓட்டப் பந்தய வீராங்கனை சாந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- முதல் அமைச்சரை சந்தித்து இருக்கிறீர்களே…?

பதில்:- முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவர் தந்த பரிசையும் பெற்றுக் கொண்டேன்.

கேள்வி:- ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்ததாக நேற்று வரை செய்திகள் வந்தன. இன்று உங்கள் பதக்கத்தை திரும்ப பெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- தோகாவில் நான் வெள்ளிப்பதக்கம் பெற்றது பெருமையாக இருந்தது. அந்த வெள்ளிப்பதக்கம் இப்போதும் கூட என்னிடம்தான் இருக்கிறது. பத்திரிகைகளில் இன்று வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் எனக்கு வரவில்லை.

இவ்வாறு சாந்தி கூறினார்.

தோகாவில் நடந்த பாலின சோதனை குறித்து சாந்தியிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஆனால் எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

இது தொடர்பாக இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். முன்னதாக பரிசு பெற வந்த சாந்தியிடம் கருணாநிதி அக்கறையுடன் விசாரித்தார். டிவி பெட்டி கொடுத்து இருப்பதாக கூறி உற்சாகப்படுத்தினார். அவருக்கு சாந்தியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Posted in 800 M, 800M, Allegation, Answers, Asiad, Asian Games, Asian Grand Prix, athletics, championships, Charges, Committee, Doha, Doping, Gender, Interview, IOA, Karunanidhi, Kathakurichi, Manimekelai, Mariam Yusuf Jamal, Operation, Opinion, Puthukottai, Saanthi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Santhy Soundararajan, Sex, Shaanthi, silver medal, South Korea, Sports, St. Joseph’s College of Engineering, Stripped, Tamil Nadu, Test | 10 Comments »