Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007
அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!
எஸ். சையது இப்ராஹிம்
தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- அருணாசலப் பிரதேசம்,
- அசாம்,
- மணிப்பூர்,
- மேகாலயா,
- மிஜோரம்,
- நாகாலாந்து,
- திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.
இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.
இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.
இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.
“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.
ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.
ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.
இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.
இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?
Posted in abuse, AGP, Ahluwalia, AP, Arunachal, Arunachal Pradesh, Asom, Assam, Bangladesh, Banks, Bengal, Bhutan, Budget, Burma, Bus, Capital, Care, Center, China, coffee, Commerce, defence, Defense, Destination, Development, Dilse, Drought, Electricity, Employment, Environment, Exports, Extremism, Flights, Floods, Forest, Funds, GDP, Govt, Green, Growth, IMF, Imports, Improvements, Industry, ISI, Itanagar, Jobs, Kohima, Loans, Mahantha, Manipur, Manirathnam, Maniratnam, Manisha, Manufacturing, Megalaya, Meghalaya, Military, Misa, Mizoram, Montek, Mynamar, Naga, Nagaland, Nature, NE, Neglect, Northeast, Pakistan, Party, Planes, Plants, Plywood, Politics, Pollution, POTA, Power, Preity, Railways, Rains, Roads, Rubber, Shahrukh, Shillong, State, Students, Surface, TADA, Tea, Teak, Terrorism, Terrorists, Tourist, Trains, Transport, Travel, Trees, Tripura, ULFA, Uyire, Water, WB, Wood, Youth, Zinta | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007
டிராகன் புகுந்த நாடு!
எம். மணிகண்டன்
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.
1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.
ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.
ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.
“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.
உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.
சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.
பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.
ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.
இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.
சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.
பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?
Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 8, 2007
உ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
புதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிகார்,
- ஆந்திரம் மற்றும் கர்நாடகம்
- ஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.
பிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.
- அருணாசல பிரதேசம்,
- மிஜோரம்,
- நாகாலாந்து,
- லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
Posted in Andaman, Andhra, Andhra Pradesh, AP, Arunachal, Arunachal Pradesh, backward, Bengal, Bihar, Castes, Census, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Community, Dadra Nagar Haveli, Demographics, Demography, Empowerment, Goa, Information, Justice, Karnataka, Lakshadweep, MBC, Mizoram, Nagaland, Nicobar, OBC, Panchayat, Population, Reservation, SC, Social, ST, State, Statistics, Stats, Tripura, Union Terrirtory, UP, UT, Uttar Pradesh, Welfare, West Bengal | 1 Comment »