Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘artists’ Category

Soundaram Ramachandran, Dr. Rajammal Devadas, Sigappi Aachi, Veerammal, Veena Artist Dhanammal, Dr S Dharmambal

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2008

Thiruvengimalai Saravanan

இந்த வார சாதனை மங்கை ஒரு வீரமங்கை. வீரம் என்றதும் வாள் சண்டை, கத்திச் சண்டை, போர் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். இந்த மங்கை சங்கீதத்தில் வீரத்தையும் தீரத்தையும் காட்டிய மங்கை.

இந்த சம்பவத்தைப் பாருங்கள். ஒருமுறை ஒரு நாதஸ்வர கச்சேரி நடந்துகொண்டிருந்தது. வாசித்துக் கொண்டிருந்தவர் நாதஸ்வர மாமேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. மிகப் பெரிய இசை மேதைகளெல்லாம் முன்வரிசையில் அமர்ந்து நாதஸ்வர இன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வீணை தனம்மாளும் அமர்ந்திருக்கிறார். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரத்திலிருந்து ‘தர்பார்’ ராகம் தவமாய் வந்து கொண்டிருந்தது. அதில் லேசாக ‘நாயகி’ ராகமும் கலந்துவிட்டது. சட்டென்று எழுந்துவிட்டார் வீணை தனம்மாள். தர்பாரில் எப்படி நாயகியைக் கலப்பது என்று அவருக்கு கோபம். எல்லோருக்கும்

அதிர்ச்சி. ராஜரத்தினம் பிள்ளைக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘தர்பாரில் நாயகிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கக் கூடாதா?’ என்று சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு சமாளித்தார். பிறகு தனம்மாளுக்காக சுத்தமான தர்பாரை வாசித்தார். இது வீணை தனம்மாளின் கோபத்துக்கு ஓர் உதாரணம். அவரது கோபம் எப்போதும் சங்கீதத்தின் அடிப்படையில் வருவது. கர்நாடக சங்கீதத்தின் மேல் அத்தனை காதல். பாசம். சங்கீதத்துக்கு எந்தவித

சங்கடமும் வந்துவிடக்கூடாது.

இவரது கச்சேரிக்குச் செல்பவர்கள் எப்போதும் சற்று கவனத்துடன் இருப்பார்கள். அரங்கில் சின்ன பேச்சு சத்தம் வந்தால்கூட தனம்மாளுக்குப் பிடிக்காது. வாசிப்பதை நிறுத்திவிடுவார். அரங்கில் சங்கீதம் மட்டுமே

கேட்க வேண்டும் என்பது அவர் விருப்பம். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவரது இசையைக் கேட்க கூட்டம் அலைமோதும். காரணம் அவரிடமிருந்த இசைக்கலை.

வீணை தனம்மாள் பிறந்தது 1868_ல். ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் அவரது பெயரை மிகுந்த மரியாதையுடன்தான் கர்நாடக சங்கீத மேதைகள் உச்சரிப்பார்கள்.

இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த தனம்மாளுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆர்வம் வந்துவிட்டது. அதற்குக் காரணம் அவரது குடும்பம். இவரது பாட்டி காமாட்சி அந்தக் காலத்தில் சிறந்த வாய்ப்பாட்டு வித்தகி. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷ்யாமா சாஸ்திரிகளின் சிஷ்யை. இவரது பெண் வழிப் பேத்திதான் தனம்மாள். இவரது தாயார் சுந்தரம்மாளும் நல்ல இசைக்கலைஞர்.

இசைக்குடும்பத்தில் பிறந்துவிட்டதால் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. என்றாலும் அன்றைய காலத்தில் பெண்கள் இசைத்துறைக்கு வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். வீட்டைவிட்டே பெண்கள் வெளியே வரக்கூடாது என்றிருந்த சமயத்தில், வீணை தனம்மாளுக்கு வீணை மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் வீட்டில் தாயாரும், பாட்டியும் வாய்ப்பாட்டுதான் சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் மிகச்சிறு வயதிலேயே அருமையாகப் பாடுவார் தனம்மாள்.

இந்த வாய்ப்பாட்டே அவருக்கு ஒரு வாய்ப்பை பெற்றுத்தந்தது.

வீணை தனம்மாளின் தாயார், மாணிக்க முதலியார் என்ற பெரிய செல்வந்தர் வீட்டில் பூஜைப் பாத்திரங்களை கழுவிக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார். தாயுடன் தனம்மாளும் அவரது வீட்டுக்குச் செல்வ துண்டு. ஒருமுறை அங்கே தனம்மாள் பாட, மாணிக்க முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. தனம்மாளின் தாயாருக்கு சம்பளத்தை ஏற்றிக்கொடுத்தார். இந்தப் பணத்தைக் கொண்டு தனம்மாள் வீணை பயில ஆரம்பித்தார்.

வீணை தனம்மாளின் முதல் கச்சேரி ஏழு வயதில் நடந்தது என்றால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சகோதரி ரூபாவதியுடன் தனம்மாள் வாய்ப்பாட்டு பாட, வயலின் இசைத்தது தம்பி நாராயணசாமி. இந்த சிறுசுகளின் கச்சேரி மெல்ல பிரபலமடையத் துவங்கியது. தனம்மாளின் திறமை வெளிஉலகுக்கு தெரிய ஆரம்பித்தது.

அந்தக் காலத்தில் மயிலை சவுரியம்மாள்தான் வீணை வாசிப்பில் மிகப் பிரபலம். அவரைப் போல வரவேண்டும் என்பதுதான் தனம்மாளின் லட்சியம். அதற்காக வீணைக் கலையை ஒரு தவம் போலவே கற்றார். சவுரியம்மாளின் சீடரான பாலகிருஷ்ணனிடம் வீணை வாசிப்பின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.

சங்கீதம் பாடுவதில் இளம் வயதிலேயே நிறைய புதுமைகள் செய்யத் துவங்கினார் வீணை தனம்மாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா என்று அனைத்து பாடல்களையும் மேடையில் சீராகப் பாடி சங்கீத ரசிகர்களின் மனம் கவர்ந்தார். எட்டயபுரம் குமார எட்டேந்திரரின் சாகித்யங்களைப் பாடியதில் அவருடைய புகழ் மேலும் பரவியது.

வீணை தனம்மாளின் மிகப் பெரிய புதுமை அவரே பாடி, வீணை வாசித்தது. பொதுவாக கர்நாடக சங்கீத மேடைகளில் பாடுபவர் ஒருவராகவும் வீணை வாசிப்பவர் வேறொருவராகவும்தான் இருப்பார்கள். ஆனால் தனம்மாள் இந்த இரண்டு கலைகளிலும் வித்தியாசமாக இருந்ததால் பாடிக்கொண்டே வீணை வாசிப்பார். இரண்டிலுமே அவரது இசை மேதாவிலாசம் வெளிப்படும். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் பயணித்து இசைக் கச்சேரிகள் நிகழ்த்தினார். இவரது கச்சேரிகள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் நிறைய இருக்கும். யாரும் பேசக்கூடாது, ‘இந்தப் பாடல் வேண்டும்’ என்று துண்டுச்சீட்டு கொடுப்பது, கை தட்டுவது, ‘பேஷ்’ என்று சொல்வது போன்ற பல சங்கதிகளுக்கு அங்கே தடை. இசை ஒன்றே அங்கே ஆட்சி செய்யவேண்டும்.

1916_ல் பரோடாவில் நடந்த இந்திய இசை மாநாட்டில் கச்சேரி செய்ததும்; 1935_ம் ஆண்டு காங்கிரஸ் இல்லத்தில் பத்தாயிரம் பேர் சபையில் கச்சேரி செய்ததும் இவரது வாழ்க்கையில் திருப்புமுனைகள். கொலம்பியா நிறுவனம்தான் அன்றைய இசைக்கலைஞர்களின் இசைத் தட்டுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் ஒரு சமூகத்து இசைக்கலைஞர்களை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் வீணை தனம்மாளின் எழுச்சியைக் கண்டு, தவிர்க்க இயலாமல் அவரது இசைத்தட்டுகளையும் வெளியிடத் துவங்கியது.

தனக்குப் பிறகு தனது இசை நின்றுவிடக் கூடாது என்பதற்காக தனது வாரிசுகளுக்கும் இசை அறிவை போதித்தார் தனம்மாள். ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம் என்ற அவரது மூத்த மகள்கள் சிறந்த பாடகிகளாக உருவானார்கள். ஜெயம்மாள், காமாட்சி என்ற அடுத்த இரண்டு பெண்களையும் ‘இரண்டாவது தனம்மாக்கள்’ என்று இசையுலகத்தினர் அழைத்தார்கள். இவர்களில் ஜெயம்மாளின் மகள் பாலசரஸ்வதி பிற்காலத்தில் மிகப் பெரிய நாட்டிய மேதையாக உருவானார். தனம்மாளின் இரண்டு மகன்களில் ரங்கநாதன் மிருதங்கத்திலும், விஸ்வநாதன் புல்லாங்குழலிலும் கெட்டிக்காரர்கள்.

வீணையிலும் வாய்ப்பாட்டிலும் இசை ரசிகர்களுக்கு சந்தோஷப் பரவசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தனம்மாளின் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக அமையவில்லை. பெரிய குடும்பம். சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடும்பச் செலவுக்கே சரியாக இருந்தது. தனம்மாளுக்கு நிரந்தர பணக்கஷ்டம்தான். உடல் தளர்ந்து போன காலத்தில் உறவினர்கள் எல்லோரும் தனம்மாளைக் கைவிட்டார்கள். அப்போதும் கக்சேரிகள் செய்தார். இசை ஆர்வத்தால் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை அந்தக் கஷ்டமான சூழலிலும் கற்றார். பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டு போக, தனம்மாளின் வீடு ஏலத்தில் போனது. தனது இறுதிக் காலத்தை பேத்தி பாலசரஸ்வதியுடன் கழித்தார்.

1938_ம் வருடம் தனது அறு பதாவது வயதில் தனம்மாள் காலமானார். கர்நாடக இசையுலகம் தனது பேரரசிகளில் ஒருவரை இழந்தது.

ஆனால் அவரது இசை அவரை மறக்கமுடியாத மங்கையாக்கியிருக்கிறது..

நன்றி: டாக்டர் பக்கிரிசாமிபாரதி.

அரசு இசைக்கல்லூரி. சென்னை_28.

பைம்பொழில்மீரானின் ‘தலை சிறந்த தமிழச்சிகள்’ ‘தோழமை’ வெளியீடு. சென்னை_78.


தமிழ் கூறும் நல்லு லகம் அதிகம் அறி யாத பெயர். ஆனால், அறிய வேண்டிய பெயர். வீரம்மாள் என்ற பெயருக்கு ஏற்றபடி வாழ்க்கையை வீரத்துடன் எதிர்கொண்டவர்.

பள்ளியில் படிக் கும்போது விடு முறைக் காலங்களில் கூலி வேலை செய்த, குப்பை சுமந்த, களை எடுத்த, சித்தாள் வேலை செய்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் செய்த அற்புதமான காரியங்களைத் திரும்பிப் பார்க்கையில் பிரமிப்பாய் இருக்கிறது.

திருச்சி வானொலியில் மிகப் பிரபலமான நிலையக் கலைஞர், ஆதரவற்ற பெண்களுக்காக திருச்சியில் ‘அன்னை ஆசிரமத்தைத் துவக்கி யவர், பெண்கள் தங்கிப் படிக்க ‘நாகம்மை இல்லத்தை நிறுவியவர்… இப்படி அவரது பிற்கால வாழ்க்கையில் சாதித்தவை பல.

சரி, யார் இந்த வீரம்மாள்?

திருச்சி மாவட்டம். திருப்பராய்த்துறையில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட சமுதாயத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தவர் தான் அந்த வீரம்மாள். வேம்பு _ பெரியக்காள் என்ற தம்பதியரின் ஏழாவது குழந்தை. 1924_ம் ஆண்டு மே மாதம்

16_ம் நாள் பிறந்தவர். அப்பா வேம்பு சாதாரண விவசாயத் தொழிலாளி.

வீரம்மாளுக்கு வீட்டில் வைத்த பெயர் வீராயி. குழந்தைக்கு ஏழு வயதாகியும் பள்ளிக்கு அனுப்ப யாரும் முயற்சிக்கவில்லை. அண்ணன்மார்களும் அண்ணிமார் களும் ‘பெண்குழந்தை எதற்குப் படிக்கவேண்டும்’ என்று அலட்சியப்படுத்திவிட்டார்கள். அந்தத்தெரு பையன்கள் எல்லோரும் பக்கத்து ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளிக்குச் செல்வதைக் கண்டு அவர்களோடு வீரம்மாளும் வீட்டார் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். 52 பிள்ளைகள் படித்த அந்த ஆரம்பப் பள்ளியில் வீரம்மாள் மட்டுமே பெண் குழந்தை. அதற்காக வீரம்மாள் வெட்கப்படவோ பயப்படவோ இல்லை.

வீரம்மாளின் கல்வி ஆர்வம் வெளியில் தெரிந்ததும் பெற்றோரும் தடை சொல்லவில்லை. அந்தக் காலத்தில் படிப்பில் ஆர்வமும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது. அதற்கு வேறு சில தடைகளும் அந்தச் சமயத்தில் உண்டு. இந்தத் தடையைப் பாருங்கள்.

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்காக நடுநிலைப் பள்ளியில் சேர்க்க வீராயியை அவரது தந்தை அழைத்துச் சென்றார். ‘‘இது பிரா மணக் குழந்தைகளும், சாதி இந்துக் குழந்தைகளும் படிக்கும் பள்ளி. இங்கு ஹரிஜனக் குழந்தையான வீராயியைச் சேர்த்தால், தனியாகத்தான் உட்கார வைக்க முடியும். குழந்தைகள் அவளை கல்லால் அடித்து விரட்டினாலும் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.’’ என்று கிராம முன்சீப்பும், தலைமை ஆசிரியரும் சொல்லிவிட்டார்கள். அதனால் அருகில் உள்ள ஜீயபுரத்தில் சேர்ந்து. தினமும் 8 கி.மீ. நடந்தே போய் படிக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளியில் இப்படியரு பிரச்சினை என்றால் வீட்டில் ஒரு சிக்கல். வீட்டு வேலைகளைச் செய்தால்தான் பள்ளிக்கு அனுப்ப முடியும் என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள், அதையும் செய்ய வேண்டிய கட்டாயம் அந்தப் பிஞ்சுக் குழந்தை வீராயிக்கு நேர்ந்தது.

ஆறாம் வகுப்பு சரித்திரப் பாடத்தில் மகாவீரர், புத்தர் ஆகியோர் பற்றிய பாடம் ஆசிரியரால் நடத்தப் பெற்றது. அதில் வரும் 1.பொய் சொல்லக் கூடாது. 2. திருடக் கூடாது. 3. உயிர் வதை செய்யக்கூடாது 4. மது அருந்தக் கூடாது. 5. ஒழுக்கம் தவறி நடக்கக் கூடாது என்ற புத்தரின் பஞ்சசீலத்தை வீரம்மாள் பள்ளிப் பருவத்திலேயே கற்று மனதில் பதித்துக் கொண்டார். அவர் இறக்கும்வரை அதைக் கடைப்பிடித்தும் வந்தார். புலால் உண்ணக்கூடாது என்று அன்றே முடிவு செய்து கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார். தினசரி பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லும்போது பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டே போவார். காலுக்குச் செருப்புகூட கிடையாது. எட்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை வீரம்மாள் ஊரிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரம் உள்ள குளித்தலைக்கு ரயில்மூலம் சென்று படித்து வந்தார்.

பள்ளியில் படிக்கும்போதே விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் கூலி வேலைக்குச் செல்வார். மண் சுமப்பது, வயலுக்கு குப்பை சுமப்பது, வாழைக்கு களை வெட்டுவது, சித்தாள் வேலை என்று செய்து காசு சேர்த்துதான் தன் பள்ளிப் படிப்பை அவரால் தொடர முடிந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்து முடிந்தவுடன் வீரம்மாளுக்குத் திருமணம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கையைச் சேர்ந்தவரை மணம் முடித்தார்கள். திருமணத் திற்குப் பின்பும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் கணவர் இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் வீரம்மாள் ஆறு மாத கர்ப்பிணி ஆனார். வீட்டில் பல தொல்லைகளுக்கு இடையேயும் தொடர்ந்து படித்தார். ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு கி.மீ. நடந்து வந்து படிப்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் பயிற்சிப் பள்ளி ஹாஸ்டலிலேயே தங்கிப் படிக்கத் துவங்கினார். இந்தச் சமயத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு நாள் திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அழைப்பு அவருக்கு வந்தது. ‘யுத்தத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் பேசச் சொல்லி யிருந்தார்கள். வானொலி நிலையத்தில் பத்து நிமிடம் பேசிவிட்டு வந்தார். பிறகு இரண்டுமுறை வெவ்வேறு தலைப்புகளில் ‘பெண் உலகம்’ நிகழ்ச்சியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது.

1945 மே மாதம் 10_ம் தேதி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதே நேரம் திருச்சி வானொலி நிலையத்தில் நிலையக் கலைஞர் பணியும் கிடைத்தது. வீரம்மாள் அந்த வேலையில் சேர்ந்துகொண்டார். தொடர்ந்து, இரண்டா வதாக ஆண் குழந்தையும் பிறந்தது. அப்போதுதான் தன் கணவருக்கு ஏற்கெனவே ஒரு இலங்கைப் பெண்னோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது.

வானொலியில் ஈரோடு, கோவை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சென்னை ஆகிய பகுதி மக்கள் பேசும் பாணியிலே பேசி நாடகங்களில் நடித்தார். வீரம்மாளின் பல குரல் திறமை இங்கு உதவியது. பல வருடங்களாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த கிராம சமுதாயப் பகுதியான ‘ஆப்பக்கார அங்காயி’ என்ற ஒரு நிகழ்ச்சியில், வீராயி ஆப்பக்கார அங்காயி ஆக இருந்து ஆப்பக்கடைக்கு வரும் பலதரப்பட்ட மக்களுடன் பேசி, வானொலி ரசிகர்களை அசத்தினார்.

வானொலி நிலையக் கலைஞர் வேலைக்கு இடையிலும் தாழ்த் தப்பட்ட _ தீண்டப்படாத மக்கள் முன் னேற்றத்திற்காக கிராமம் கிராமமாய் சென்று சமூக சேவை புரிந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழகத்தில் வேகமாய் பரவிக் கொண்டிருந்தது. வீரம்மாள் தந்தை பெரியாரின் கொள்கையில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பெரியார் திருச்சிக்கு வரும் போதெல்லாம் அவர் தங்கி இருக்கும் வக்கீல் வீட்டிற்கு வீரம்மாளை வரும்படி சொல்லி அனுப்புவார். அவரும் தவறாமல் போய் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வருவார்.

பேச்சோடு மட்டும் தனது சமுதாயப் பணிகள் நின்றுவிடக் கூடாது என்று நினைத்த வீரம்மாள், கிராமப்புற ஏழை எளிய மாணவிகளுக்கு உதவ நினைத்தார்.

அப்போது கிராம ஆரம்பப் பள்ளிகளில் எங்கோ ஒன்றிரண்டு ஆதிதிராவிட பெண் குழந்தைகள்தான் படித்து வந்தார்கள். அவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பு கிடையாது. காரணம், அந்தக் காலத்தில் ஏராளமான கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது.

அதனால் திருச்சியில் தாழ்த்தப் பட்ட பெண்கள் தங்கியிருந்து உயர் நிலைப்பள்ளியில் படிக்க ஏதுவாக ஒரு விடுதி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக பல இடங்களில் ஆதரவு திரட்டினார். இப்படி உருவானதுதான் ‘நாகம்மையார் மாணவியர் விடுதி’. அத்துடன் அவரது சேவை நிற்க வில்லை.

திருச்சியில் ‘அன்னை ஆசிரம’த்தை நிறுவி ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்கள் என்று பலருக்கும் அடைக்கலம் கொடுத்த வேடந்தாங்கல் அவர். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் ‘அன்னை’ என்றால், அது வீரம்மாள் தான் என்று போற்றும் அளவிற்கு சேவை புரிந்தவர். அதனால் தென்னகத்து அன்னை தெரஸா என்றே அழைக்கப்பட்டார்.

பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து இன்று தமிழ் உலகம் பேசும் சரித்திரமாக மாறியிருப்பதுதான், அவர் உருவாக்கிய ‘தமிழ்நாடு பெண்கள் நலச்சங்கம்’. சின்னஞ்சிறிய திண்ணை ஒன்றில் மூதறிஞர் ராஜாஜியின் வாழ்த்துக்களுடன் பெருந்தலைவர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்தச் சங்கத்தின் தற்போதைய வயது அறுபதுக்கு மேல்.

கணவனை விட்டுப் பிரிந்த பின்னர் வெள்ளை ஆடை அணிய ஆரம்பித்தவர் கடைசிவரை, வெள்ளை ஆடையுடனேயே வாழ்ந்தார். சேவை மனப்பான்மைக்கு அந்த வெள்ளை உடை ஒரு குறியீடாக அமைந்தது.

2006_ல் வீரம்மாள் மறைந்தார். அவர் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள பல நலப் பணிகள் இன்றைக்கும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சோகங்களும், சோதனைகளும், துன்பங்களும், போராட்டங்களும் நிறைந்தது வீரம்மாளின் வாழ்க்கை. இத்தகைய சோகங்களின் சோதனை களிலும் துவண்டு விடாது, மற்றவர்களின் வாழ்க்கையிலாவது அத்தகைய சோகங்கள், துயரங்கள் வராமல் பாடுபட்ட வீரம்மாள் உண்மையிலேயே வீர _ அம்மாதான்..


செல்வச் செழிப்பில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும் எளிமைவாதிகளாகவும் இருப்பது மிக அரிது. இந்த அரிதான குணங்களுடன் கல்வி சேவையும் ஆன்மிக சேவையும் கலந்தால்… அப்படியரு ஆச்சரியமான, அபூர்வமான குணங்களுடன் வாழ்ந்தவர்தான் சிகப்பி ஆச்சி. செட்டிநாட்டு அரசர் டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மனைவி.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் உண்டு என்பதை நாம் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். ஆனால் கண்கூடாகப் பார்ப்பது டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமியின் வாழ்க்கையில்தான். அவரது ஒவ்வொரு வெற்றிகரமான செயலுக்குப் பின்பும் சற்று உற்று நோக்கினால் சிகப்பி ஆச்சியின் கைவண்ணம் இருக்கும்.

கைவண்ணம் என்று சொல்லும்போது இங்கே ஒரு சோகமான, அதேநேரம் தன்னம்பிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

சிகப்பி ஆச்சிக்கு இடதுகை பாதி செயலிழந்து விரல்கள் மூடியேதான் இருக்கும். அதேபோல் இடது கால் பலவீனமடைந்து சற்று விந்திவிந்திதான் நடப்பார். ஆனால் சாதாரணமாய் பார்ப்பவர்களுக்கு இது தெரியாது. இந்த சோகம் அவருக்கு பக்கவாத நோயால் ஏற்பட்டது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்தக் குறைகளுடன்தான் அத்தனை காரியங்களையும் செய்திருக்கிறார் என்றால், அவர் மறக்க முடியாத மங்கைதானே?

சிகப்பி ஆச்சி பிறந்தது 1938_ம் வருடம். செட்டிநாட்டு பள்ளத்தூரில் இவரது குடும்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. ராணி மெய்யம்மையின் உடன்பிறந்த தம்பி உ.அ.உ.க.ராம.அருணாசலம்தான் சிகப்பி ஆச்சியின் தந்தை. மிக செல்வச் செழிப்பான குடும்பம். செல்வம் குவிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தினர் அதிகம் தேடியது கல்விச் செல்வத்தை. பெண்களை பள்ளிக்கு அனுப்பத் தயங்கிய காலகட்டம் அது. ஆனால், நகரத்தார்கள் பொருட்செல்வத்தைத் தேடியது மட்டுமில்லாமல் எப்போதும் கல்விச் செல்வத்தையும் சேர்த்தே தேடினார்கள். சிகப்பி சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட்டில் பள்ளிக் கல்வியை முடித்து, பிறகு ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இங்கே இன்னொரு முக்கிய விஷயம், பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பில் சிகப்பி ஆச்சிதான் முதலிடம்.

சிகப்பி ஆச்சியின் முறைமாப்பிள்ளைதான் எம்.ஏ.எம்.ராமசாமி. சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள். இவர்களுக்குத் திருமணம் நடக்கும்போது எம்.ஏ.எம்.முக்கு இருபத்தொரு வயது. சிகப்பி ஆச்சிக்குப் பதினாறு. கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். செட்டிநாட்டு அரசரின் குடும்பத்தில் மருமகளாய் அடியெடுத்து வைத்த பிறகும் தனது படிப்பைத் தொடர்ந்தார். இதற்கு அவரது கணவரும் அவரது குடும்பத்தாரும் நல்ல ஒத்துழைப்புத் தந்தார்கள்.

ராஜா வீட்டின் மருமகள் என்பது சாதாரண விஷயமல்ல. நிறைய குடும்பப் பொறுப்புகள் உண்டு. செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா செட்டியாருக்கு இரண்டு மகன்கள். குமாரராஜா முத்தையா மூத்தவர். இவரது மனைவி குமார ராணி மீனா முத்தையா. எம்.ஏ.எம். ராமசாமி இளையவர். இவரது மனைவிதான் சிகப்பி ஆச்சி.

ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் இருந்தாலும் இருவருக்குள்ளும் எந்த சச்சரவோ சண்டையோ வந்தது கிடையாது. இருவரும் மிக ஒற்றுமையாக குடும்பக் காரியங்களைக் கவனித்தார்கள். அவர்களின் ஒற்றுமை செட்டிநாடு முழுவதும் பிரசித்தி பெற்றது.

குடும்பப் பொறுப்புகள் இருந்தாலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. பொதுவாய் ‘தாயைப்போல பிள்ளை’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், இங்கு மாமியாரைப் போல் மருமகள். மாமியார் ராணி மெய்யம்மைக்கு கல்வி சேவையில் ஆர்வம் அதிகம். ஏழை மக்களுக்குக் கல்வி கொடுக்கவேண்டும் என்பது அவர்களது தீராத ஆசை. அந்த சேவை மனப்பான்மை சிகப்பி ஆச்சிக்கும் வந்தது.

சென்னை அடையாறிலுள்ள ராணி மெய்யம்மை பள்ளி இவரது முயற்சியில் உருவானதுதான்.

1973_ம் வருடம் துவங்கப்பட்ட இந்தப் பள்ளியின் செயலாளராக தனது இறுதி மூச்சு வரை இருந்தார் சிகப்பி ஆச்சி. இந்தப் பள்ளியைத் தொடர்ந்து ஏழு பள்ளிகளையும் சென்னையில் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் கிட்டத்தட்ட பதினான்காயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளைத் துவக்கியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. ஒவ்வொரு நாளும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சென்று அன்றாடப் பணிகளைக் கவனிப்பார். பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தையும் நிர்வகித்துக்கொண்டு பள்ளிகளைக் கவனித்துக் கொள்வது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஆனால் சிகப்பி ஆச்சிக்கு அது எளிதாய் வந்தது. காரணம் அவர் நேரத்தை மிகவும் திட்டமிட்டு பயன் படுத்துவதில் கெட்டிக்காரர்.

அதிகாலை ஐந்து மணிக்கு அவரது தினசரி வாழ்க்கை துவங்கும். இரவு படுக்கச் செல்லும் நேரம் பதினொன்று. ஆறு மணி நேரம்தான் தூக்கம். பல செல்வந்தர் பெண்களைப் போல் மதியம் உறங்குவது, தோழிகளுடன் அரட்டையடிப்பது போன்ற பழக்கங்கள் சிகப்பி ஆச்சிக்குக் கிடையாது. உழைப்பு, எளிமை இவைதான் அவர் அதிகம் நம்பிய இரண்டு விஷயங்கள்.

நேரத்தை உபயோகமாய் செலவழிப்பது போன்று இன்னொரு நல்ல பழக்கமும் சிகப்பி ஆச்சியிடம் இருந்தது. அது, டைரிக் குறிப்புகள் எழுதுவது. உறவினர்கள், நண்பர்கள், முக்கியமானவர்கள் பற்றிய அத்தனை விவரங்களையும் அதில் எழுதி வைத்திருப்பாராம். கிட்டத்தட்ட முப்பது டைரிகளில் இந்தக் குறிப்புகள் இருந்தனவாம். இந்த டைரிகள் மூலம் எந்த உறவினர், நண்பர் பற்றிய விவரங்களையும் சட்டென்று தெரிந்துகொள்ள இயலும்.

பள்ளிகளைத் துவக்கிய சிகப்பி ஆச்சி சமூகத்துக்குப் பயன்தரும் இன்னொரு காரியத்தையும் செய்தார். சென்னைக்குப் படிக்க வரும் பெண்கள் தங்க ஒரு பெண்கள் விடுதியையும் எத்திராஜ் சாலையில் முப்பது வருஷத்திற்கு முன்பு துவக்கினார். ராணி மெய்யம்மை ஹாஸ்டல் என்றழைக்கப்படும் அந்தப் பெண்கள் விடுதி, இன்றும் சென்னையில் மிகப் பிரபலமானது.

கல்விப் பணி ஒருபுறமிருக்க, ஆன்மிகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் சிகப்பி ஆச்சி. கணவர் எம்.ஏ.எம். ராமசாமி ஒவ்வொரு வருடமும் விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று வருவார். அதனால் சென்னையில் ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்டவேண்டும் என்று தீர்மானித்தார் சிகப்பி ஆச்சி. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதன் விளைவுதான், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஐயப்பன் கோயில். அதேபோல் சிதம்பரம் அண்ணாமலைபுரத்திலும் ஐயப்பன் கோயிலைக் கட்டினார்.

கல்விப் பணி, ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிகப்பி ஆச்சி. அவரும் குமாரராணி மீனாவும் இணைந்து சென்னைக்கு அருகே உள்ள நாவலூர் கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்துக்கு வேண்டிய சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.

சென்ற மாதம் கேளம் பாக்கத்தில் நூறு ஏக்கர் பரப் பளவில் ‘செட்டிநாடு ஹெல்த் சிட்டி’ என்ற ஒரு மருத்துவ நகரத்தின் திறப்புவிழா நடந்தது.

மருத்துவக் கல்லூரிகள், நர்சிங் பயிற்சிக் கல்லூரி, மருத்துவமனை, மருந்தியல் கல்லூரி என முழுக்க முழுக்க மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவ நகரம் அது. இந்த நகரம் வருவதற்கு மிக முக்கியக் காரணமாயிருந்தவர் சிகப்பி ஆச்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் திட்டம் துவக்கப்படும்போது உயிரோடு இருந்தவர், அது முடிக்கப்படும்போது நம்முடன் இல்லை. சென்ற வருடம் சிகப்பி ஆச்சி காலமாகிவிட்டார்.

அவர் காலமாகிவிட்டாலும் அவர் உருவாக்கியவை காலம் காலமாக அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.றீ

மாமியார் மெச்சியவர்!

மாமியார் ராணி மெய்யம்மையார் வெளிநாட்டிற்குச் செல்லும் போதெல்லாம் கூடவே தனது சின்ன மருமகள் சிகப்பி ஆச்சியை அழைத்துச் செல்வது வழக்கம். மாமியாருக்கு உறுதுணையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ஆங்கில இலக்கியம் படித்ததால் மாமியாருக்கு அழகாக மொழி பெயர்த்துச் சொல்வது அவருக்கு எளிதாக இருந்தது. தங்கள் பள்ளியில் வேலை செய்த ஆசிரியர்கள் பணியில் ஓய்வு பெறும் நாளில் ஆச்சியே வீட்டிலிருந்து குறைந்தது பத்து வகையான பலகாரங்களைச் செய்துகொண்டு வந்து அனைவருக்கும் விருந்து படைப்பது இவருடைய வழக்கமாக இருந்தது. பெண்களுக்கென்று உருவான பள்ளிகளுக்கு தன் மாமியார் பெயரையும், ஆண்களுக்கென்று உருவாக்கிய பள்ளிகளில் தன் மாமனார் பெயரையும் சூட்டுவது இவரது வழக்கம்.

‘‘அய்த்தான் எனக்கு ஒண்ணுமில்ல!’’

சிகப்பி ஆச்சியைப் பற்றி அவரது கணவர் செட்டிநாட்டரசர் டாக்டர். எம்.ஏ.எம்.ராமசாமியிடம் கேட்டோம். ‘‘நாங்கள் கணவன் மனைவியாக 42 வருடங்கள் வாழ்ந்தோம். அதற்கு முன்னால் சிறுவயதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். ஒருமுறை நாங்கள் திருப்பதிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமாய் அதிகாலைப் பயணங்களின்போது கார் டிரைவர் குளித்துவிட்டுத்தான் வண்டி எடுப்பார். ஆனால் அன்று அவர் தூக்கக் கலக்கத்துடனே வண்டி ஓட்டியிருக்கிறார். திருப்பதி மலையில் ஏறும்போது ஒரு திருப்பத்தில் கார் தலைகீழா கவிழ்ந்து மலையில் உருளத் துவங்கியது. இரண்டாயிரம் அடி பள்ளம். எங்கள் புண்ணியம் கார் மரத்தில் சிக்கி அப்படியே தொங்கியது. எல்லோருக்கும் நல்ல காயம். சிகப்பிக்கு படுகாயம். மேலெல்லாம் ரத்தம். மெல்ல அவரை மேலே தூக்கினோம். என்மேல் உள்ள ரத்தத்தைப் பார்த்துவிட்டு என் ரத்தத்தைக் கழுவப் பார்த்தாங்க. நான் தடுத்து, ‘உனக்குத்தான் ரொம்ப காயம்’ என்றேன். அதற்கு சிகப்பி, ‘அய்த்தான் எனக்கு காயமில்லை. உங்களுக்கு இப்படியாகிவிட்டதே’ என்று சொல்லிக்கொண்டே மயங்கி விழுந்துவிட்டாங்க. ஒரு வாரம் சுயநினைவு இல்லாம இருந்தாங்க. என்னுடைய உலகமாய் இருந்தாங்க. இப்போது நான் தனி உலகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’’ என்று சொல்லும்போது வார்த்தைகள் தடுமாறுகிறது. அது தடுமாற்றம் அல்ல மனைவி மேல் அவர் வைத்துள்ள பாசம்.


பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களில் இரண்டு வகையினர் உண்டு. எல்லா வசதிகளும் இருந்து பொதுத் தொண்டில் ஈடுபடுவது ஒரு ரகம். எந்த வசதியும் இல்லாமலேயே பொதுப்பணிகளில் தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்திக்கொள்வது மற்றொரு ரகம்.

இதில் இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர் டாக்டர் தருமாம்பாள்.

பணம், பதவி எதுவுமே இல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய வீரத்தமிழன்னைஅவர். தனது இறுதிக் காலம் வரை பொதுத் தொண்டிற்காக கடுமையாக உழைத்தவர். மனிதாபிமானத்தை மூலதனமாக வைத்து, எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத புனிதமான தொண்டுள்ளம் அவருடையது. அதனால்தான் மறக்கமுடியாத மங்கையாக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்திருக்கிறார் டாக்டர் தருமாம்பாள்.

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடிதான் இவரது சொந்த ஊர். அப்பா சாமிநாதன். அம்மா நாச்சியார். வேளாண் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை சாமிநாதன் மிகப் பெரிய அளவில் துணி வியாபாரம் செய்தவர். கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை நண்பர். இவரது தாத்தா திவான் பேஷ்கராக இருந்தவர்.

இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சரஸ்வதி. இவரது பூர்வீகம் கருந்தட்டாங்குடியாக இருந்தாலும், இவர் பிறந்தது திருவையாறு. ஆண்டு 1890. இவ்வூர் இறைவன் பெயர் அய்யாறப்பன். இறைவி அறம் வளர்த்தாள். இறைவியை தர்மசம்வர்த்தினி என்று பேச்சு வழக்கில் அழைப்பதுண்டு. அதைத்தான் பின்னர் தருமாம்பாள் என்று சுருக்கி அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அந்தப் பெயரே இவருக்கும் நிலைத்துவிட்டது. தருமாம்பாள் இளம்வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிட்டதால், ‘லக்குமி’ என்ற பெண்தான் இவரை வளர்த்தார். பெற்றோரை இழந்ததால் அவர் பள்ளிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பையும் இழக்க நேரிட்டது. இருந்தாலும், தருமாம்பாள் சும்மா இருந்துவிடவில்லை. தானாகவே கல்வி கற்கத் தொடங்கினார். தமிழ் மீது இருந்த அளவுகடந்த பற்றின் காரணமாக வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியம், திருநாவுக்கரசு முதலியார், பண்டித நாராயணி அம்மையார் ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். இன்னும் சில பண்டிதர்களைத் தேடிப்போய் தெலுங்கில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார்.

நாடகத் தமிழ் மீது இவருக்கு இருந்த பற்றினால், அந்நாளில் நாடக நடிகராக இருந்த குடியேற்றம் முனுசாமி நாயுடுவைக் காதலித்து மணந்துகொண்டார். முனுசாமி நாயுடு ராஜபார்ட் வேஷம் போடுவதில் வல்லவர். கணவரோடு ஆரம்பத்தில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தாலும் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்.

மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறவியிலேயே அவர் ரத்தத்தில் ஊறியிருந்தது. அதற்குப் பயன்படும் விதத்தில் அவர் சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1930_களின் தொடக்கத்தில் சென்னையில் மருத்துவர்கள் மிகமிகக் குறைவு. வேப்பேரி கங்காதர தேவர், தியாகராய நகர் எஸ்.எஸ்.ஆனந்தன், சைதாப் பேட்டை தணிகாசல வைத்தியர், தங்கசாலை சி.த.ஆறுமுகம்பிள்ளை போன்ற ஒரு சில சித்த வைத்தியர்களே புகழ்பெற்ற மருத்துவர்களாக அறியப்பட்டனர். அந்த வரிசையில் பெத்துநாய்க்கன் பேட்டையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர்தான் டாக்டர் தருமாம்பாள். மருத்துவ சேவைதான் இவருக்கு மக்கள் தொடர்பை அதிகளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

தருமாம்பாள் மருத்துவத்தோடு நிற்காமல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் உயர்வு, விதவை மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என்று பல தரப்பட்ட பொதுத்தொண்டில் ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்கினார். நோய்க்காக மட்டும் தேடி வராமல் பல பிரச்னைகளைத் தீர்ப்பதற்காகவும் இவரைத் தேடி பலர் வரத் தொடங்கினர். நேரடியாக அவரே தலையிட்டு பல பிரச்னைகளைத் தீர்த்து வைக்கத் தொடங்கினார். இதனால் அவரது புகழ் பரவத் தொடங்கியது.

தந்தை பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்ட தருமாம்பாள் அவரைப் போலவே விதவைத் திருமணம், கலப்பு மணம் ஆகியவற்றைத் துணிச்சலாக நடத்தி வைத்தார். வேலை கேட்டு வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு விதவைகளைத் திருமணம் செய்து வைத்தார். எந்த ஒரு பிரச்னை என்றாலும் தருமாம்பாளிடம் சென்றால் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறைத்தண்டனை பெற்றார். இதில் பெண்கள் பலரும் கலந்துகொள்ள முன் உதாரணமாக இருந்ததே தருமாம்பாள்தான். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு இணைந்து மக்கள் முன்னேற்றப் பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

தருமாம்பாளுக்கு இருந்த செல்வாக்கிற்கு அவர் எவ்வளவோ வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொருளாசை அற்றவராக இருந்தார். தமது வீட்டை மகளிர் சரணாலயமாகவே மாற்றியிருந்தார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மீண்டும் அவரவர் கணவர்களோடு சேர்ந்து வாழ வைத்திருக்கிறார். ஏராளமான பெண்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார். படிக்க வசதியற்ற பெண்கள் கல்வி பயில செல்வந்தர்களை உதவ வைத்திருக்கிறார். ஏழைப் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். இப்படி அவரது தொண்டுப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

புகழின் உச்சியில் இருந்தவர்கள்கூட தருமாம்பாளின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அளவிற்கு அவரது பண்பு வளர்ந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி காதில் விழுந்த தவறான செய்திகளைக் கேள்விப்பட்டு, அவரை அழைத்து புகழுக்கும் உடலுக்கும் கேடு வராமல் நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூற, அவரும் அதன்படி மாறி நடந்தது பலரை வியப்பால் ஆழ்த்தியது.

1944_ல் ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாகவதருக்கும், கலைவாணருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, அந்தமான் தீவில் தண்டனையைக் கழிக்க வேண்டும் என தீர்ப்பானது. கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம் செய்வதறியாது தருமாம்பாளை அணுகினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சிலுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இது சாதாரண காரியமல்ல என்றாலும், டாக்டர் தருமாம்பாள் சென்னையில் உள்ள பலரை அணுகி பொருள் திரட்டி, அந்த வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார். அப்போது கலை உலகமே தருமாம்பாளை எழுந்து நின்று வணங்கியது.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் அறிஞர்களுக்காகவும் தருமாம்பாள் பல வழிகளில் உதவியுள்ளார். கருந்தட்டான் குடியில் இருந்த தனது வீட்டை கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கினார். 1940_க்கு முன்பு வரை தமிழ் ஆசிரியர்களுக்கு சமூகத்திலும் அரசியலிலும் ஒரு பெரிய மரியாதையே இல்லாமல்தான் இருந்தது. பள்ளி, கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் இரண்டாந்தரமாக ஒதுக்கப்பட்ட நிலை. ஊதியத்திலும் அவர்களுக்கு அந்த நிலை இருந்ததை எதிர்த்து பெரிய போராட்டமே நடத்தினார். பல கூட்டங்களில் பேசினார்.

‘‘தமிழாசிரியர் களுக்கு சம்பளம் கூட்டவில்லை என்றால், பெண்களை எல்லாம் ஒன்று கூட்டி, ‘இழவு வாரம்’ கொண்டாடுவோம்’’ என்று அரசுக்கே எச்சரிக்கை விடுத்தார். அப்போது கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் செட்டியார் தருமாம்பாளின் கோரிக்கையையும் போராட்டத்தின் நியாயத்தையும் உணர்ந்து ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இது தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.

தருமாம்பாள் திராவிட இயக்கங்களில் பங்கு கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். என்றாலும், பொதுத்தொண்டு என்று வரும்போது கட்சிக்கு அப்பாற்பட்டு நின்றே தொண்டு செய்ய விரும்பினார். பொதுப் பிரச்னைகளுக்காக மற்ற அரசியல் இயக்கங்களுடன் அனுசரணையாகவே சென்றார்.

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு தருமாம்பாள் வரவேற்புக் குழு உறுப்பினராக இருந்து பணி ஆற்றினார். இன்று தமிழிசைப் பாடல்கள் மேடையில் முழங்குகிறது என்றால், அதில் அம்மையாரின் பங்கும் உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக வாழாமல், தனது உழைப்பு, சிந்தனை அனைத்தையும் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இசை, தமிழ் மக்கள் இவற்றுக்காகவே அர்ப்பணித்த தருமாம்பாளுக்கு 1951_ல் திரு.வி.க. தலைமையில் நடந்த மணி விழாவில் தமிழறிஞர் டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார் ‘வீரத்தமிழன்னை’ என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத் தமிழன்னை பட்டம் பெற்ற தருமாம்பாள்தான் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும், எம்.எம். தண்டபாணி தேசிகருக்கு ‘இசையரசு’ பட்டத்தையும் வழங்கினார்.

மக்கள் தொண்டு ஒன்றை மட்டுமே தன் இறுதி மூச்சுவரை கொண்டு போராடி வெற்றி கண்ட இந்த வீரமங்கையின் மூச்சு 1959_ம் ஆண்டு தனது 69ஆவது வயதில் நின்று போனது.

பெரும் பதவிகளை விரும்பாமல், பண வசதி ஏதுமின்றி அம்மையார் செய்த பல மக்கள் பணிகள் பதிவு செய்யப்படாமலேயே போய்விட்டன. அவற்றை வெளி உலகிற்குக் கொண்டு வருவது ஒன்றே அம்மையாருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக் கடனாக இருக்கும்..

நன்றி : க. திருநாவுக்கரசு, எழுதிய ‘திராவிடஇயக்க வேர்கள்’
நக்கீரன் பதிப்பகம், சென்னை_23.
பைம்பொழில் மீரானின்
‘‘தலை நிமிர்ந்த தமிழச்சிகள்’’ தோழமை வெளியீடு, சென்னை_78.


பிறந்தோம். படித்தோம். வளர்ந்தோம். வாழ்ந்தோம். என்று சிலர் வாழ்க்கை இருக்கும்.

ஆனால் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை அப்படியிருப்பதில்லை. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் சரித்திரங்களாகி விடுகின்றன.

அப்படி ஒரு சரித்திரப் பெண்தான் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்.

எல்லோரும்தான் கல்லூரி சென்று பாடம் படிப்பார்கள். ஆனால், எத்தனைபேர் தான் படித்த பாடத்துக்காகவே ஒரு தனிப்பட்ட கல்லூரியைத் துவக்கியிருக்கிறார்கள்? அது ராஜம்மாள் ஒருவர்தான்.

கல்வி. இதுதான் ராஜம்மாளின் இலட்சியம், ஆர்வம், ஆசை, கனவு எல்லாம்.

ஒரு சின்ன சம்பவம். ராஜம்மாளுக்கு திருமணம் நடக்கிறது. அப்போது அவருக்கு வயது பதினெட்டு. பள்ளி இறுதி வகுப்பு படித்திருந்தார். திருமணமானதும் தன் கணவரிடம் அவர் முதலில் பேசியது தனது மேற்படிப்பு பற்றித்தானாம். தன்னை கல்லூரி சென்று படிக்க அனுமதிக்குமாறு கேட்டிருக்கிறார். கணவர் பெருந்தன்மைக்காரர். மனைவியின் மனம் நோகாமலிருக்க கல்லூரி படிப்புக்காக மனைவியை சென்னை அனுப்பினார். இப்போது படிக்கும்போது இந்த விஷயங்கள் சாதாரணமானதாய் தெரியலாம். ஆனால், இந்த சம்பவம் நடந்தது 1937_ல் என்பதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

ராஜம்மாளுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம். நிறையப் படிக்க வேண்டும். நிறைய பட்டங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை. அதற்கு அவர் தந்தையும் ஒரு காரணம்.

ராஜம்மாளின் தந்தை பெயர் பாக்கியநாதன் மைக்கேல். வனத்துறை அதிகாரி. பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள பார்கவி நேரில் கிராமம் என்றாலும், அவர் பணிபுரிந்து கொண்டிருந்தது, திருவண்ணாமலை அருகிலுள்ள செங்கம் பகுதியில். ராஜம்மாள்தான் மூத்த பெண். அவரைத் தொடர்ந்து எட்டு குழந்தைகள். பாக்கியநாதனுக்கு ஒரு விருப்பம். தனது பிள்ளைகள் அனைவரும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்று. இந்த விருப்பம் சாதாரணமாய் எல்லோருக்கும் வருவதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து வரும் விஷயத்தில் அதிசயம் இருக்கிறது. தனது பிள்ளைகளுக்குப் படிப்பறிவு இல்லாத குடும்பங்களில்தான் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று. விரும்பினார். படிப்பறிவு இல்லா குடும்பங்களிலிருந்து மருமகள், மருமகன் அமையும்போது, அந்தக் குடும்பங்கள் தன் குடும்பத்துடன் இணையும். படிப்பறிவு பெறும். அந்தக் குடும்பத்தினரும் அவர்களது உறவினரும் கல்வியின் அருமையை உணர்வார்கள் என்பது பாக்கியநாதனின் எண்ணம். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு சொந்த ஊரில் வேலை பார்த்தால் அங்கே உறவினர்கள் கட்டாயப்படுத்தி அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விடு வார்கள். படிக்க விடமாட்டார்கள் என்று அஞ்சியே சொந்த ஊருக்கு வராமல் இருந்தாராம். அந்த அளவு படிப்பின்மேல் பிரியம். இப்போது புரிகிறதா மகள் ராஜம்மாளுக்குக் கல்வி மீது வந்த காதலுக்கான காரணத்தை.

எப்போதுமே நல்லவர்களை விதி அதிகம் சோதிக்கும். அந்தப் பொல்லாத விதி ராஜம்மாளின் வாழ்க்கை யிலும் பொய்க்கவில்லை. திடீரென நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை. தான் இறப்பதற்கு முன் தன் மூத்த மகள் ராஜம்மாளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். அதனால் பள்ளிப் படிப்பு படித்ததுமே ராஜம்மாளின் திருமணம் நடந்தது. சொந்த தாய்மாமன்தான் மாப்பிள்ளை. திருமணமான சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட, குடும்பம் கஷ்டத்தில் தத்தளிக்கத் துவங்கியது. தாயின் நகைகள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற உதவியது.

கணவரின் உதவியுடன் கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்தார் ராஜம்மாள். வேதியியல் பிரிவில் சேர்ந்தார். மூன்றாண்டுகள் பட்டப்படிப்பில் தங்கப்பதக்கத்துடன் தேர்ச்சியடைந்தார். அதன்பின் மேற்படிப்புக்கு ‘மனையியல்’ பிரிவுக்கு மாறினார். இப்போது ‘ஹோம் சயின்ஸ்’ என்று ஸ்டைலாக அழைக்கப்படும் படிப்புதான் மனையியல். அந்தக் காலத்தில் இதுவும் ஒரு சாதனைதான். எல்லோரும் இயற்பியல், வேதியியல், என்று படித்துக்கொண்டிருக்க, மனையியல் படிக்க முன்வந்தார் ராஜம்மா. இந்தப் படிப்பை அவர் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இது புதிய அறிவியல் என்பதால்.

நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த சூழல் அது. மாணவியாக இருந்த ராஜம்மாள் தானே கை ராட்டையில் நூல் நூற்று, அதனால் தயாரிக்கப்பட்ட கதராடையேதான் அணிவார்.

மேற்படிப்பு முடிந்ததும் படித்த கல்லூரியிலேயே பேராசிரியை வேலை கிடைத்தது. இதில் ராஜம்மாளுக்கு மகிழ்ச்சி. இப்போதாவது தனது குடும்பத்தினருக்கு உதவ இயலுமே என்று தனது சம்பளத் தில் பாதியைத் தனது அம்மாவுக்குக் கொடுத்து விடுவார்.

இந்தியா சுதந்திரமடைந்த வருடம். அமெரிக்காவில் மனையியல் குறித்து ஆராய்ச்சி செய்ய ராஜம்மாளுக்கு வாய்ப்பு வந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கத்தைச் சென்று சந்தித்தார். அமைச்சருக்குச் சந்தோஷம். அப்போதெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சிப் படிப்பு என்பது மிகப் பெரிய விஷயம். அமெரிக்காவில் ஒஹையோ பல்கலைக்கழகத்தில் ராஜம்மாளின் ஆராய்ச்சிப் படிப்புத் துவங்கியது. மூன்று ஆண்டுகளில் டாக்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். மூன்றாண்டுகளில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றது இன்னொரு சாதனை. மனையியல் படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய முதல் இந்தியப் பெண் ராஜம்மாள் தேவதாஸ்தான்.

இன்று நமது பள்ளி மாணவர்களுக்கு மதியம் இலவச சத்துணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு முதல் சுழி போட்டவர் ராஜம்மாள் தேவதாஸ் என்பது இன்னொரு ஆச்சர்யமான செய்தி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு சமச்சீர் சக்தி கொண்ட உணவு கிடைப்பதில்லை, பள்ளியிலேயே மதியம் சத்தான உணவு கிடைத்தால் கல்வியும் வளரும், கற்பவர்களும் வளர்வார்கள் என்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இவரது திறமைகளை அறிந்து அவிநாசிலிங்கம், மனையியல் படிப்புக்காகவே கோவையில் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியைத் துவக்கினார். அதற்கு ராஜம்மாள் தேவதாஸை முதல்வராக்கினார். அந்தக் கல்லூரி வளர்ந்து இன்று பல்கலைக்கழகமாக மாறி, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பின்பு வேந்தராகவும் பணியாற்றினார். கல்லூரியில் படித்த காலத்தைப் போலவே எப்போதும் கதராடைதான். எளிமை, வார்த்தைகளில் இனிமை. இதுதான் ராஜம்மாள்.

வாரம் ஒருமுறை மாணவியர்கள் கதர் சேலை அணிய வேண்டும். வாரம் இரண்டு முறை கைத்தறிச் சேலை அணிய வேண்டும் என்று மாணவிகளுக்கு உத்தரவிட்டார். அந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சின்ன உத்தரவினால் பல நெசவாளர்கள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவருடைய பெண் கல்விச் சேவை, மனையியல் துறைச் சேவை இவற்றைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐ.நா.சபையில் சத்துணவு குறித்து பேசியிருக்கிறார். எழுபத்தொன்பதாவது வயதில்கூட டெல்லியில் நடந்த உலக வங்கிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். எங்கோ தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் சாதனைகளைப் பாருங்கள்.

‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ், 2002ஆம் வருடம் 83_வது வயதில் காலமானார்.

அவர் இன்று இல்லை. ஆனால் அவரது கல்விச் சேவை இன்றும் அவரது சாதனைகளைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றது..


திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பத்தா வது கி.மீ.இல் உள்வாங்கியிருக்கிறது காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம். பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராம மக்களின் கல்லூரிக் கனவுகளை நனவாக்கிய கல்விக்கூடம் அது. அனாதைகள், அபலைகள், ஆதரவற்ற பெண்கள், ஏழைகள் என்று சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்த அத்தனை மக்களுக்கும் இன்றைக்கும் கல்வி கொடுத்து, சுயதொழில் கற்றுக்கொடுத்து ஆதரித்து வரும் அறக்கட்டளை அது.

இன்று பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இந்தியாவின் முதுகெலும்பாய் விளங்கும் பல ஆயிரம் கிராமங்களுக்குக் கல்விக்கண் திறந்துகொண்டு இருக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய சௌந்தரம் ராமச்சந்திரனின் போராட்ட வாழ்க்கை பல தமிழ்ப் பெண்களுக்கு வழிகாட்டி.

நசுக்கப்பட்ட_ ஒடுக்கப்பட்ட_ புறக்கணிக்கப்பட்ட சமூகம் அல்ல அவரது சமூகம். அவருக்காகவோ அவர் பிறந்த சமூகத் திற்காகவோ அவர் போராட வேண்டிய கட்டாயமும் இல்லை. சூழலும் இல்லை. அப்படியரு செல்வச்செழிப்புமிக்க குடும்பம் அவருடையது. ஆனாலும் சௌந்தரம் ராமச்சந்திரன் போராடினார். ஏழைப் பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் படும் துயர் கண்டு அவரால் சும்மா இருக்கமுடியவில்லை. தன் கண் முன்னால் பல சமுதாய மக்கள் குறிப்பாகப் பெண்கள் நசுக்கப் படுவதையும் _ ஒடுக்கப்படுவதையும் _ புறக்கணிக்கப்படுவதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன் குடும்பத்தின் ஆச்சாரங்களை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தார். தன் சமூகத்தின் கட்டுப்பாடுகளை அறுத்துக்கொண்டு கல்வி கற்று சமூக சேவையில் ஈடுபட்டார். அதற்காக அவர் பட்ட துயரங்கள், இழந்த இழப்புகள் ஏராளம்.

நெல்லை மாவட்டத்திலுள்ள சின்னஞ்சிறிய கிராமம் திருக்குறுங்குடி. வேதநெறி தவறாமல் வாழ்ந்த வைதீக பிராமணக் குடும்பங்கள் வாழ்ந்த அந்த அழகிய கிராமத்தில்தான் பெருமைமிகு டி.வி.எஸ். நிறுவனத்தார் குடும்பமும் வாழ்ந்தது. அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்தான் சௌந்தரம்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே மோட்டார் தொழிலில் ஆர்வம் ஏற்பட, அதனையே தனது குடும்பத் தொழிலாக மாற்றி, இந்திய மோட்டார் வாகன உலகில் கொடி கட்டிப் பறந்தவர் டி.வி.சுந்தரம்அய்யங்கார். அவரது துணைவியார் லட்சுமி அம்மை யாரோ சமூக சேவைகள் மூலம் அவரளவிற்குப் புகழ் பெற்றிருந்தவர். இந்த உன்னதமான தம்பதியருக்கு மகளாக 1905_ல் பிறந்தவர்தான் சௌந்தரம். பேரழகியாக பெண் குழந்தை இருந்ததால் சௌந்தரம் (அழகானவள்) என்றே பெயர் வைத்துவிட்டார்கள் பெற்றோர். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பார்கள். பத்து வயதிலேயே வீணை வாசிப்பதிலும் வாய்ப்பாட்டிலும் தேர்ச்சி பெற்று வீணைவித்வான் முத்தையா பாகவதர் போன்றோரை வியப்பில் ஆழ்த்தினார்.

சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். நன்கு வளர்ந்து கொண்டிருந்த மோட்டார் தொழிலை மட்டும் டி.வி.சுந்தரம் அய்யங்கார் கவனித்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அவருக்குள் இருந்த சுதந்திர வேட்கை அவரை காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வைத்தது. அதனால் தேசிய தலைவர்கள் நட்பு கிடைத்தது. பொதுப் பணியில் ஈடுபடுவதில் அவரது துணைவியார் லட்சுமியும் அவருக்கு இணையாகச் செயல்பட்டார்.

இதனால் பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இவர் இல்லத்திற்கு அடிக்கடி வந்து தேசிய பிரச்னைகளைப் பற்றி விவாதிப்பதுண்டு. விவாதத்தின்போது சிறுமி சௌந்தரமும் அருகில் இருப்பார். இதனால் சின்ன வயதிலேயே அவர் மனதில் தேசப்பற்று ஆழமாகப் பதிந்துவிட்டது.

அந்தக் காலத்தில் வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவது வழக்கம். அதன்படி, டி.வி.சுந்தரம் அய்யங்காரின் சகோதரியின் மகன் சௌந்தரராஜனுக்கும் சௌந்தரத்திற்கும் 1918_ல் திருமணம் நடந்தது. அப்போது சௌந்தரத்திற்கு 12 வயது. கணவருக்கு 16 வயது.

திருமணமான கையோடு அவர்கள் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்கள். 1922_இல் சௌந்தரத்திற்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குறைப்பிரசவம் என்பதால் குழந்தை இறந்தே பிறந்தது. துன்பம் என்பதே தெரியாமல் செல்வச் செழிப்பில் வாழ்ந்த சௌந்தரத்திற்கு இதுதான் முதல் சோகம். அதை மறக்க அவர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சோகத்திற்கு மத்தியிலும் கணவர் சௌந்தரராஜன் மருத்துவக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று மருத்துவர் பட்டம் பெற்றது சௌந்தரம் அம்மையாருக்குப் பெரிய ஆறுதல்.

இங்கிருந்துதான் சௌந்தரத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனை விழுகிறது. பட்டம் பெற்ற கணவர் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகிறார். கூடவே தனியாக மருத்துவமனை ஒன்றைத் திறந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கும்போது சௌந்தரம்தான் கணவர்கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து வந்தார். கூடவே அங்குள்ள மாதர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு முழுநேர பொதுப்பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த இடத்தில்தான் அவரது வாழ்க்கையில் இரண்டாவது திருப்பு முனை விழுகிறது. மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பிளேக் நோய் தாக்கியது. பிளேக் நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, கணவரும் மனைவியும் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள். தொடர்ந்து பிளேக் நோய்க்கு வைத்தியம் பார்த்ததில் கணவருக்கும் அந்த நோய் வந்து விட்டது. இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில், ‘‘நான் இறந்த பின்னர் நீ விதவைக் கோலம் பூணக் கூடாது. என்னைப் போல் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய். விரும்பினால் மறு மணம் செய்துகொள். பிற்காலத்தில் நீ சிறந்த சேவகியாக வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றபடி அவரது உயிர் பிரிந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல், சௌந்தரம் விஷத்தைக் குடித்துவிட்டார். மருத்துவர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள்.

அன்று சௌந்தரம் முடிவு செய்தார். நாம் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தோம். நம் கணவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் நம் லட்சியம் என்று முடிவு செய்து மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தார். கணவர் எண்ணம்போல் டில்லி சென்று மருத்துவப் படிப்பு படித்தார். படிப்பு ஒரு புறம் என்றாலும் சமூக சேவையில் தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார்.

ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவரே பாடமும் கற்றுத்தர ஆரம்பித்தார். இவரது சமூக சேவையில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் தனி மருத்துவரான சுசிலா நய்யார் நட்பு கிடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்ற சுசிலா நய்யாரின் நட்பு கிடைத்ததால் பல தேசத் தலைவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு சௌந்தரம் அம்மையாருக்குக் கிடைத்தது. சுசிலா நய்யார் காந்தியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் சௌந்தரத்தையும் அழைத்துச் செல்வார். அப்போது மகாத்மா காந்தி சேவாசிரமத்தில் சேர்ந்து பணிபுரிந்த தென்னிந்திய இளைஞரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சௌந்தரம் மருத்துவக் கல்லூரியில் முதல் மாணவியாக தேர்வு பெற்று, சென்னையில் ஒரு மருத்துவமனை தொடங்கி சேவை செய்யத் தொடங்கினார். அப்போது தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளராக ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டார். டெல்லியில் ஆரம்பித்த அவர்களது நட்பு சென்னையிலும் தொடர்ந்தது. கணவரின் விருப்பத்தை நிறை வேற்றும் விதமாக மதுரை அரசு மருத்துவமனையில் கௌரவ உதவி மருத்துவராகச் சேர்ந்தார். தனியாக ஒரு மருத்துவமனை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். மதுரையில் மருத்துவராக சேவை செய்த முதல் பெண்மணி இவர்தான்.

தனி மனுஷியாக இனி இயங்க முடியாத சமூகச் சூழல். அதனால் ஒரு ஆண் துணையைத் தேடினார். காந்தி வழியைப் பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தார். ஆச்சாரம்மிக்க அவரது குடும்பம் அதனை எதிர்த்தது. பிராமணப் பெண்கள் மறுமணம் செய்வது பாவம் என்று கருதப்பட்ட காலம் அது.

ராஜாஜிதான் முதலில் இவர்கள் திருமணத்தைப் பற்றி சுந்தரம் அய்யங்காரிடம் பேசினார். அவர் சம்மதிக்கவில்லை. இந்தச் செய்தி காந்தியடிகளுக்குச் சென்றது. உடனே காந்தி அழைத்தார். இருவர் விருப்பத்தையும் கேட்டார். சுந்தரம் அய்யங்காருக்கு கடிதம் எழுதினார். ‘‘சௌந்தரம் ராமச்சந்திரன் திருமணத்தை நடத்தி வையுங்கள். இல்லா விட்டால் நானே நடத்தி வைப்பேன்’’ என்றார். இதற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், சேவாசிரமத்தில் காந்தி முன்னிலையில் அவர்கள் திருமணம் நடந்தேறியது.

காந்தி இராட்டையில் தன் கையால் நூற்ற நூலில் செய்யப்பட்ட தாலிக் கயிற்றை ராமச்சந்திரன் சௌந்தரம் கழுத்தில் கட்டினார். காந்தி நெய்த நூலில் செய்யப்பட்ட வேட்டியை மணமகனும் கஸ்தூரிபாய் நூற்ற நூலில் செய்யப்பட்ட சேலையை சௌந்தரமும் ஆடையாக அணிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப்பின் சென்னை வந்தனர். சௌந்தரம் டாக்டர் முத்துலட்சுமியோடு இணைந்து கிராம மருத்துவ சேவையில் ஈடுபட்டார். ராமச்சந்திரன் புகழ்பெற்ற ஒரு ஆங்கில தினசரிக்கு ஆசிரியரானார். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றனர்.

திண்டுக்கல் பகுதியில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கினார். கிராம சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

கிராம சேவைக்கென்றே சின்னாள பட்டியைத் தேர்வு செய்து 1947_ல் ஒரு தொடக்கப்பள்ளி, கிராம சேவை பயிற்சிப் பள்ளி கிராம மருத்துவ விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார். இன்று அவைதான் காந்தி கிராமிய பல்கலைக்கழகமாகவும், கிராமிய அறக்கட்டளைகளாகவும் நிமிர்ந்து நிற்கின்றன.

1956_ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கி வைத்த போது இந்தியாவே சௌந்தரம் அம்மை யாருக்கு நன்றி சொல்லியது.

எங்கு வறுமை தாண்டவமாடு கிறதோ, எங்கு சாதி, மதக் கலவரம் உருவாகிறதோ அங்கு சௌந்தரம் அம்மையார் ஓடோடிச் சென்று அவர்களை நல்வழிப்படுத்துவார். கிராம மருத்துவ சேவைதான் தன் இரு கண்கள் என்று நினைத்தார். இவர் வகிக்காத பதவிகளே இல்லை. 1962_ல் இவரது சேவைக்காக ‘பத்மபூஷண்’ விருது வழங்கப்பட்டது.

காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் எளிய உணவு, எளிய உடை இவற்றையே இறுதிக் காலம் முழுதும் அணிந்தார். 1984 அக்டோபர் 2_ம் தேதி அந்தச் சமூக சேவையின் ஜோதி அணைந்தது. தன் உடல் மீது மலர் அணிவிக்கக் கூடாது. எளிய கதர் ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். யாரும் தொட்டு வணங்கக் கூடாது என்ற அவரது கடைசி கட்டளையை நிறைவேற்றிய மக்கள், அவர் வழி இன்றும் கிராம சேவையில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களுக்கு ஒரு ஊன்றுகோல் சௌந்தரம் அம்மையார் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..

நன்றி: பைம்பொழில் மீரானின்

‘தலைநிமிர்ந்த தமிழச்சிகள்’ தோழமை வெளியீடு, சென்னை_78.

Posted in Aachi, Achi, artists, Arts, Carnatic, Chettinad, Classical, Devadas, Devdas, Dhanammal, Dharmaambal, Dharmambal, Faces, Females, Ladies, MAM, music, people, Rajammal, Ramasami, Ramasamy, Segappi, Sekappi, Sevappi, She, Sigappi, Sikappi, Sivappi, Thanammal, Tharmambal, Veena, Veenai, Veerammal | Leave a Comment »

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

Thavil performer G Muthukumarasamy passes away – Carnatic Musician: Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

தவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்

கும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.

சிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

நாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.

பின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.

திருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.

Posted in Anjali, Artiste, Artistes, artists, Arts, Carnatic, G Muthukumarasami, G Muthukumarasamy, G Muthukumaraswami, G Muthukumaraswamy, Isai, music, Musician, Muthukumarasaami, Muthukumarasaamy, Muthukumarasami, Muthukumarasamy, Muthukumaraswami, Muthukumaraswamy, Performer, Performers, Shows, Stage, Thavil | 3 Comments »

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »