Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Anbumani Ramadas’ Category

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Arrangements, Azagiri, Azakiri, Azhagiri, Coalition, Conference, Details, DMK, Election, Issues, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuppasaami, Karuppasaamy, Karuppasami, Karuppasamy, Karuppasamy Pandian, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Manifesto, MK Alagiri, MK Alakiri, MK Azhakiri, MK Stalin, Mu Ka, Mu Ka Alagiri, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, Nellai, Pandian, Politics, Polls, Power, Preparations, Stalin, Students, Thirunelveli, Tirunelveli, V Karuppasamy Pandian, Votes, Youth | 3 Comments »

Compulsory rural service required for Doctor graduation – Medical Education

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

State of MBBS – Analysis on Medical education « Tamil News


கட்டாய கிராமப்புற மருத்துவ சேவைஜி.ஆர்.ரவீந்திரநாத்

“கிராமப் பகுதிகளில் பணியாற்ற டாக்டர்கள் மறுக்கிறார்கள் என்ற காரணத்தைக் கூறி’ எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் கட்டாய சேவைசெய்ய வேண்டுமென மத்திய அரசு சட்டம் கொண்டு வரவுள்ளது. இந்தச் சேவையை முடித்த பிறகுதான் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துகொண்டு தொழில் செய்ய முடியும். இதற்கேற்ப எம்பிபிஎஸ் படிப்புக் காலத்தை ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தவும் மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இச்சட்டம் இளம் டாக்டர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்கள் மருத்துவம் பயில்வதைத் தடுத்துவிடும். நமது மருத்துவக் கல்வி, மருத்துவத் துறை, மக்கள் நல்வாழ்வுக் கொள்கை ஆகியவற்றில் உலக வங்கியின் விருப்பங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களிலும் 70 சதவீத மருத்துவர்கள் நகர்ப்புறங்களிலும் இருப்பது வருந்தத்தக்கது. இதற்கு நமது சமூகப் பொருளாதார நிலைமைகளே காரணம். இந்தியாவில்

  • 3,043 சமுதாய மருத்துவ மையங்களும்
  • 22,842 ஆரம்ப சுகாதார மையங்களும்
  • 1, 37, 311 துணை மையங்களும்

உள்ளன என்று 2003-ம் ஆண்டு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் 13.3% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமுதாய மருத்துவமனைகளில்

  • 48.6% அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள்,
  • 47.9% மகப்பேறு மருத்துவர்கள்,
  • 46.1% பொது மருத்துவர்கள்,
  • 56.9% குழந்தை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராமப் புறங்களில்

  • 75% அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும்
  • 73% மகப்பேறு மருத்துவர்களும்
  • 86% குழந்தை மருத்துவர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுகள் அக்கறை காட்டாததும் பணி நியமனத் தடை ஆணையும்தான் இந்த நிலைக்குக் காரணம்.
நிரந்தர வேலைவாய்ப்பை வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் தாற்காலிகமாக மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் மருத்துவர்களை நியமிப்பதால் மருத்துவர்கள் அரசுப்பணிகளில் சேரத் தயங்குகின்றனர்.

கிராமப்புற மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்தாததும் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் தங்க குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்காததும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பல சமுதாய மருத்துவ மையங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சொந்தக் கட்டடமே இல்லை. நூற்றுக்கணக்கான மையங்களில் கழிப்பிட வசதியே இல்லை.

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்க கட்டாய கிராமப்புற சேவைதான் தீர்வு என்கிறது அரசு. கட்டாய கிராமப்புற சேவை பயனளிக்காது என்பதோடு, மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடும் என்பதுதான் இளம் மருத்துவர்களின் எதிர்வாதம்.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 0.9% மட்டும் ஒதுக்கப்படுகிறது. உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதிஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியாதான். மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஊரகப்புற மருத்துவமனைகளுக்கு அதிகநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவம் தனியார் மயம் ஆவதும், பெரிய நிறுவனங்களாவதும் மருத்துவர்களை நகரங்களிலேயே குவியச் செய்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவமனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள்ளது. 1980களில் மக்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவில் அரசின் பங்களிப்பு 22% ஆக இருந்தது. இன்று 16% ஆகக் குறைந்துவிட்டது.

மருத்துவர்களை நிரந்தர ஊழியர்களாகப் நியமித்து கிராமப்புறங்களில் 2 ஆண்டு கட்டாய சேவை செய்த பின்னரே பணிவரன்முறை செய்யப்படும் என்ற நடைமுறையைக் கொண்டு வரவேண்டும். டாக்டர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டாக்டர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவோருக்குக் கூடுதல் சம்பளமும் பதவி உயர்வில் முன்னுரிமையும் இதர சலுகைகளும் வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம். இத்தகைய மருத்துவமனைகளில் மருத்துவர்களை பணியமர்த்த தனியாகவே சிறப்புப் பணி நியமன முறையைக் கையாளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடமாறுதல் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உள்ளூர் மருத்துவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கலாம். ஒழுங்காகப் பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்.

ஊழல் முறைகேடுகளை ஒழிக்க அனைத்து மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். கட்டாய கிராமப்புறச் சேவையில் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர்களை பணியாற்ற வைப்பதால் மக்களுக்கு பெரிய அளவில் பயனில்லை. அரசின் புள்ளிவிவரப்படியே மகப்பேறு, குழந்தைகள்நல, பொது மற்றும் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் பற்றாக்குறையே கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு முதுநிலை படிப்பு படித்த டாக்டர்கள்தான் கிராமப் பகுதிகளுக்கு அதிகம் தேவைப்படுகின்றனர்.

இக்குறைபாட்டைப் போக்க இப்படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்த டாக்டர்களுக்கு குறிப்பிட்ட துறைகளில் பயிற்சியளித்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் பட்டயப் படிப்பு படிக்கும் தனியார் மருத்துவர்களை ஓராண்டு காலம் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் முழு ஊதியத்துடன் பணியாற்றச் செய்ய வேண்டும். சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை சரி செய்யப்பட்டதும் இந்தக் கட்டாயச் சேவையைக் கூட ரத்து செய்ய வேண்டும்.

தற்சமயம் ஆண்டுதோறும் இந்தியாவில் 29, 500 டாக்டர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 40 ஆயிரம் ஆகஉயர்ந்துவிடும். ஒவ்வோராண்டும் இவர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவையில் தாற்காலிகமாகப் பணியமர்த்தினால் அது 40 ஆயிரம் டாக்டர்களுக்கான பணியிடங்களை நிரந்தரமாக ஒழித்துக் கட்டிவிடும். மேலும் இந்த திட்டத்துக்கான எம்பிபிஎஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவது சரியல்ல. ஒரு நபர் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்கி எந்தவிதமான தடங்கலும் இன்றி எம்சிஎச், டிஎம் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர்ச்சியாகப் படித்து முடிக்க குறைந்தபட்சம் 13 ஆண்டுகளாவது அவசியம்.

எம்பிபிஎஸ் படிப்பு காலத்தை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தினால் அது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் மருத்துவம் பயிலும் ஆர்வத்தைக் குறைத்துவிடும். திருமணம் போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பெண்களை மருத்துவ படிப்புக்கு அனுப்பத் தயங்குவர். பணபலம் உள்ள ஆண்கள் மட்டுமே படிக்கும் துறையாக மருத்துவக் கல்வி மாறிவிடும்.

தற்பொழுது பிளஸ்2வில் உயிரியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இவ்வாண்டு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்த பலர், பொறியியல் படிப்புக்கு மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் வேலைவாய்ப்பை, உரிமைகளைப் பாதிக்காத வகையில் கிராமப்புற மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளை நிறைவு செய்ய ஆக்கப்பூர்வமாக அரசு முயலவேண்டும்.

(கட்டுரையாளர், சமூக சமதுத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர்.)

——————————————————————————————————-
மாறட்டும் மருத்துவமனை நடைமுறைகள்!

இரா. சோமசுந்தரம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில் பெரும்பாலானோர், வெளியிடத்தில் “தனி ஆலோசனைகள்’ வழங்குவதும், தனியார் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் செய்வதும் நடைமுறையில் உள்ளன. இதனால் அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் அறுவைச்சிகிச்சைகள் மூன்று வகையாக நடைபெறுகின்றன.

அவை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ஓரளவு குணமாகும்வரை தங்கி, பின்னர் வீடு திரும்புவோர். அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று, அதே அரசு மருத்துவர் ஆலோசனையின்பேரில் தனியார் மருத்துவமனையின் அறுவைக்கூடத்தில் சிகிச்சை முடித்துக் கொண்டு, தொடர் மருத்துவத்துக்கு அரசு மருத்துவமனை படுக்கைக்குத் திரும்புகிற அல்லது புறநோயாளியாக வந்து மருந்து பெற்றுச் செல்வோர். அரசு மருத்துவமனைக்கே வராமல், அரசு மருத்துவரின் தனிஆலோசனையைப் பெற்று, அவர் சொல்லும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை முடித்து வீடு திரும்புவோர்.

எந்தவொரு மருத்துவச் செலவையும் ஏற்கும் சக்தி இல்லாத பரம ஏழைகள்தான் முதல் வகை சிகிச்சை பெறுகின்றனர்.

“கார்ப்பரேட்’ மருத்துவமனைகளில் ரூ.50 ஆயிரம் செலவழிக்க வசதியில்லாமல், ரூ.20 ஆயிரத்தில் சிகிச்சையை முடித்துக் கொள்ள விரும்புவோர் மூன்றாவது வகையைத் தேர்வு செய்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறைவு.

நடுத்தர வருவாய்க் குடும்பத்தினர்தான் இரண்டாவது சிகிச்சையை மிக அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் மருத்துவத்துக்குத் தனியாக செலவு செய்யும் சேமிப்புகள் ஏதுமில்லை. நோய்வந்த பிறகே அந்த நோய்க்கான சேமிப்பு அல்லது செலவுத் தொகை ஒதுக்கப்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை வாசலைக்கூட இவர்களால் மிதிக்க முடியாது. தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனை பெற்று, மருந்து வாங்கும் சக்தி இருந்தாலும், அறுவைச்சிகிச்சை, ஒரு வாரம் படுக்கையில் இருப்பது ஆகிய செலவுகள் அவர்களது ஓராண்டு வருமானத்தை விழுங்கக்கூடியவை. இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதே நேரத்தில் அறுவைச்சிகிச்சையை மட்டும் தரமான இடத்தில் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இந்த நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு இருக்கிறது.

அரசு மருத்துவமனையை நாடவும், அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தில்லாத சிகிச்சையை விரும்பவும் செய்யும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் இந்த தற்காப்பு முயற்சியை அரசு ஏன் சட்டப்படி முறைப்படுத்தக்கூடாது?

தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவ வசதிகள் கொண்ட அறுவைக்கூடங்கள் உள்ளன. இவற்றில் நவீன துணைக் கருவிகளைக் கொண்டுள்ளவை மிகச் சிலவே.

தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகளில் பல கோடி ரூபாய் செலவழித்து எவ்வளவு நல்ல எக்ஸ்-ரே கருவிகள், ஸ்கேன் கருவிகள் வாங்கி வைத்தாலும், அவை சில மாதங்களில் நிச்சயம் பழுதாகிவிடுகின்றன.

ஆகவே, எல்லா நகரங்களிலும் பரவலாக உள்ள தனியார் மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சைக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ள சரியான அணுகுமுறையை அரசு உருவாக்கினால் பயனுள்ளதாக அமையும்.

தனிஆலோசனையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, என்டோஸ்கோபி, ஈசிஜி, எக்ஸ்-ரே, மருந்துகள், அறுவைக்கூடம் வாடகை எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் 15 சதவிகிதம், ஊக்கத்தொகையாக மருத்துவருக்கு அவர்களால் வழங்கப்படுவது என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ஊக்கத் தொகையை அரசு சட்டப்படி வழங்க முன்வந்தால், மருத்துவத்தில் பட்டுப்போன மனிதாபிமானம் மீண்டும் தளிர்க்கும்.

அரசு மருத்துவமனை மருத்துவர்களும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவது குற்றமல்ல. அவர்கள் திறமையானவர்களாக இருந்து அவர்களைத் தேடிவரும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகரிக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனை அறுவைக்கூடங்களுக்கு செலுத்தப்படும் கட்டணத்தில் 20 சதவிகிதத்தை சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும், 20 சதவிகிதத்தை மருத்துவமனைக்கும் அளிக்க வகை செய்யலாம்.

வருமான வரி ஏய்ப்பு குறித்த தகவலைத் தருபவருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட வரிஏய்ப்புத் தொகையில் ஒரு பங்கை அரசாங்கமே அளிக்கும்போது, உயிரைக் காக்கும் மருத்துவருக்கும் அரசே சட்டப்படி கமிஷன் கொடுத்தால் என்ன தவறு?

தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்ற திறமையான மருத்துவர்கள் தயங்குவதன் காரணம், அவர்களுக்கு வெளியில் நிறைய வருவாய் கிடைக்கிறது என்பதுதான். அந்த வாய்ப்பை அரசு மருத்துவமனையிலேயே ஏற்படுத்திக் கொடுத்தால் தவறில்லை; பணிபுரிய நிறைய மருத்துவர்கள் முன்வருவார்கள்.

விபத்து, தற்கொலை, வெட்டு, குத்து என்றால் முதலில் அரசு மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்ற நிலைமை இப்போது இல்லை. தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று, காவல்நிலையத்தில் வழக்கைப் பதிவு செய்யும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இதேபோன்று தனியார் மருத்துவமனைகளின் அறுவைக்கூடங்களைப் பயன்படுத்தவும், அங்கே அரசு மருத்துவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கவும் புதிய மாற்றங்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

———————————————————————————————————–
“கருணை’ என்பது கிழங்கு வகை!

இரா. சோமசுந்தரம்
மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்கு கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்கும் திட்டத்தை மருத்துவ மாணவர்கள் எதிர்க்கின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள், “நாங்கள் மக்களுக்கு எதிரியல்ல’ என்ற வசன அட்டைகளைத் தாங்கும்போதும் “குக்கிராமத்திலும் சேவை செய்ய நாங்கள் ரெடி, நிரந்தர வேலைதர நீங்கள் ரெடியா?’ என்ற வசன அட்டையை ஏந்தி நிற்பதைப் பார்க்கும்போதும் மருத்துவக் கவுன்சிலின் மெய்யான நோக்கத்தைப் புரிந்துகொண்ட பின்புதான் இந்தப் போராட்டத்தை நடத்துகிறார்களா என சந்தேகம் வருகிறது.

தற்போது நான்கரை ஆண்டுகள் படிப்பு, ஓராண்டு மருத்துவமனையில் தொழில் பழகுதல் என்ற அளவில் ஐந்தரை ஆண்டுகளாக உள்ள மருத்துவப் படிப்பு, கிராமப்பகுதியில் ஓராண்டு சேவையை வலியுறுத்துவதன் மூலம் ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் மருத்துவம் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில்தான் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மருத்துவக் கவுன்சிலின் புதிய நடைமுறைப்படி, இந்த இளம் “மருத்துவர்கள்’ கிராமப்பகுதிகளில் ஓராண்டு பணியாற்றிய பின்னர் அவர்களது மருத்துவப் படிப்புக்கான சான்றிதழ் அளிக்கப்படும். அதன் பின்னரே அவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளை, சிறப்பு மருத்துவப் படிப்புகளைத் தொடர முடியும்.

மேற்படிப்புக்குத் தடையாக, ஓராண்டு கிராம மருத்துவ சேவை குறுக்கே வந்து நிற்பதை இம்மாணவர்கள் விரும்புவதில்லை. இந்தப் போராட்டத்தின் அடியிழையாக இருப்பது இந்த நெருடலான விஷயம்தான்.

கிராமங்களில் பணியாற்ற மருத்துவர்கள் வருவதில்லை என்பதுதான் அரசின் பிரச்னை. இந்த மாணவர்கள் கிராமங்களில் பணியாற்றத் தயார் என்றால் இவர்களுக்கு நிரந்தர வேலை தருவதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?

மருத்துவக் கவுன்சில் குறிப்பிடும் ஓராண்டு கால கிராம மருத்துவ சேவைக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாணவர்கள் முன்வைத்தால் அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய திட்டத்திலும்கூட ஓராண்டு முழுவதும் கிராமப்புறங்களில் பணியாற்றும் அவசியம் ஏற்படாது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு தாலுகா அளவில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்ற வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும். நான்கு மாதங்களுக்கு சமுதாய நலக் கூடங்களில் பணியாற்ற வேண்டும். இதன்படி பார்த்தால், கடைசி நான்கு மாதங்கள் மட்டுமே அவர்கள் போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமப்பகுதியில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

அதிலும் தற்போது மினி பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்கள் செல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலைமை இருப்பதை மறுக்க முடியாது.

தங்களுடன் சமகாலத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்கள், நான்காவது ஆண்டிலேயே வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைக்கப்பெற்று, கைநிறையச் சம்பாதிக்க முடியும் என்றால், மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் ஆறரை ஆண்டுகள் என்று கேள்வி எழுப்புவது சரியானதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது.

சொல்லப்போனால், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் 5 ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு தொழில் பழகுதல் என 6 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பட்டச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக் கல்லூரி நீங்கலாக, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மூலம் பட்டம்பெறும் ஒவ்வொரு மருத்துவ மாணவருக்கும் அரசு மறைமுகமாக ஏற்கும் செலவினங்கள் பல லட்சம் ரூபாய் வரை ஆகின்றது என்பது இவர்களுக்குத் தெரியாதது அல்ல.

இவர்களில் 69 சதவிகிதத்தினர் அரசு இடஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்றவர்கள். அரசு தங்களுக்கு அளித்ததை ஈடு செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும் ஓராண்டு மருத்துவ சேவையின்போது தங்கள் மருத்துவ அறிவை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இதனை ஏன் கருதக்கூடாது?.

படிப்பின் குறிக்கோள் பணம் என்றாகிவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல } மருத்துவப் பேராசிரியர்களுக்கும்!

அதிக அளவு தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்றைய சிக்கல் விநோதமானது. கற்பிக்கப் பேராசிரியர்கள் இல்லை.

திறமையானவர்கள் அனைவரும் விருப்ப ஓய்வு பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்காகச் சென்றுவிட்டனர். மிக அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்குப் பாடம் நடத்த பேராசிரியர்கள் இல்லை.

குறைந்த மதிப்பெண்களுடன் பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து சேர்ந்த வசதிபடைத்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.

ஏழை சொல் அம்பலம் ஏறாது. அத்தோடு, ஏழையின் நோய்க்கு சிகிச்சையும் கிடையாது. புதுமைப்பித்தன் சொன்னதைப்போல, “கருணை’ என்பது கிழங்கு வகையில் சேர்க்கப்பட்டுவிட்டது!

———————————————————————————————————-
மருத்துவம் வெறும் வியாபாரமல்ல!

Dinamani Op-ed Sep 6, 2007/Thursday
படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர் என்பதற்கு இப்போதைய உதாரணம், கிராமசேவை செய்ய மறுக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம். ஐந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர்கள் ஓராண்டு காலம் கிராமப்புறங்களில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை இவர்கள் எதிர்ப்பது ஏன் என்பது புரியவில்லை. மருத்துவர்களுக்கு சமூகக் கடமை உண்டு என்பதை இவர்கள் உணர மறுப்பது நியாயமில்லை.

நம் நாட்டில் மருத்துவ வசதி நகரங்களில்தான் கிடைக்கிறது, கிராமப்புறங்களில் கிடைப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் பல கிராமங்கள் இப்போதும் நாட்டு வைத்தியத்தையும், முறையாக மருத்துவப் படிப்பு படிக்காத அரைகுறை போலி மருத்துவர்களையும் நம்பித்தான் இருக்கின்றன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. போதிய மருத்துவ வசதி இன்மையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவையும் ஒப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ). அமெரிக்கா மற்றும் வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில் ஆயிரம் பேருக்கு மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் என்கிற நிலைமை இருக்கும்போது, இங்கே இன்னும் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமைகூட ஏற்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

ஒரு விஷயத்தை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் குக்கிராமம்வரை ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்தி மருத்துவ வசதி கிராமப்புறங்களைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் நமது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டன. இதற்காக, நிதிநிலையறிக்கையில் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1951-ல் வெறும் 725 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தன. இப்போதோ ஏறத்தாழ 2 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் 5,842 பேருக்கு ஒரு மருத்துவர் என்றிருந்த நிலைமை மாறி இப்போது சுமார் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்போது, இந்தியாவில் சுமார் 6,50,000 மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது மருத்துவக் கழகக் குறிப்பு. ஆனால் இந்த மருத்துவர்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் நகரங்களில்தான் இருக்கிறார்களே தவிர கிராமங்களில் இருப்பதில்லை. தங்களுக்கு வசதியான வாழ்க்கையும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பள்ளிக்கூடங்களும் கிராமங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களது வாதம்.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 73 விழுக்காடு மக்கள் வாழும் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றிலும் மருத்துவர்கள் பெயருக்கு அவ்வப்போது வந்து போகிறார்களே தவிர சேவை மனப்பான்மையுடன் அங்கே தங்கிப் பணியாற்றுகிறார்களா என்றால் இல்லை. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 11,000. இவர்களில் சென்னை உள்பட நகரங்களில் பணிபுரிபவர்கள்தான் சுமார் 7,500 பேர். அதேபோல, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவர்கள் சுமார் 35,000 பேர் என்றால் இவர்களில் 21,000 பேர் நகரங்களில்தான் மருத்துவசேவை செய்கிறார்கள். சமூக சேவை, சமுதாயத்துக்குத் தங்களது பங்களிப்பு என்கிற வகையில், அசௌகரியங்களையும் வருமான இழப்பையும் கருதாமல் ஓராண்டு காலம் நமது மருத்துவர்கள் கிராமப்புற சேவையாற்ற முன்வர மறுப்பது, மருத்துவத் துறையின் மகத்தான சேவைக்கே களங்கம்.

மருத்துவப் படிப்பு தனியார்மயமாக்கப்பட்டதன் தொடர் விளைவுதான், “நாங்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற மாட்டோம்’ என்கிற மருத்துவர்களின் பிடிவாதத்துக்குக் காரணம். கிராமங்களில் சேவை செய்தால் வேலை நிரந்தரம் செய்து தர முடியுமா என்கிற எதிர்க்கேள்வி அர்த்தமில்லாததாகத் தெரிகிறது. இந்தியாவையும் இந்தியாவின் பெருவாரியான மக்களையும் அவர்களது அவலநிலையையும் சரியாகப் புரிந்துகொள்ளாத மருத்துவர்கள் இருந்தும் என்னதான் பயன்? இவர்களை உருவாக்க அரசும் சமுதாயமும் தனது வரிப்பணத்தை ஏன் விரயமாக்க வேண்டும் என்று கேள்வி கேட்க யாருமே இல்லை என்பதுதான் அதைவிட வருத்தமான விஷயம்.

ஓராண்டு காலம் கிராமப்புற சேவையாற்றும் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சமூக பொருளாதார நிலைகளை நமது மருத்துவர்கள் அறிவதற்கு நிச்சயமாக வழிகோலும். வரவேற்கப்பட வேண்டிய இந்தத் திட்டத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு சமூக சிந்தனை இல்லை என்று சொல்வதா, இல்லை சுயநலத்திற்கு அவர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள் என்று சொல்வதா? மருத்துவம் வெறும் வியாபாரமல்ல என்பதை மறந்துவிடக் கூடாது!

———————————————————————————————————————————————————————-

தேவை, கிராமப்புற கட்டாய மருத்துவச் சேவை

நள்ளிரவைத் தாண்டிய நேரம்! தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையின் வாயிலை ஒரு மாட்டுவண்டி அவசரமாகத் தாண்டுகிறது. அந்த வண்டி மகப்பேறு மருத் துவப் பிரிவை நோக்கி வருகிறது. வண்டியில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்.
பயிற்சி மருத்துவர்களாகிய நாங்கள் அவ் வண்டியை நோக்கி ஓடி, வைக்கோலுக்கு நடுவே பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த அந்த கிராமத்துப் பெண்ணை, கைத்தாங்கலாகப் பிடித்து வந்து பிரசவ வார்டில் படுக்க வைத்தோம். பிரசவத் தின்போது தலை வருவதற்குப் பதிலாக குழந் தையின் ஒரு கை வெளியே வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கொண்டி ருப்பது தெரிந்தது.
உடனே மருத்துவச் சிகிச்சை அளித்தும் – குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை; அதிக உதிர இழப்பு காரணமாக தாயைக் காப்பாற்ற முடியவில்லை; ஏன் முடி யவில்லை? உடனே மருத்துவச் சிகிச்சை அளிக்க முடியவில்லை; ஏன் முடியவில்லை? அவர்கள் இருந்த கிராமத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சிறப்பு மருத் துவ உதவி இல்லை. அந்தப் பெண் செய்த பாவம் ~ அவள் கிராமத்தில் வாழ்ந்ததுதான்.
இதைப்போல கிராமத்துத் தாய்மார்கள் சரியான சிகிச்சை கிடைக்காமல் இன்றும் மாண்டு போகிறார்கள். தாய்மார்களின் பிர சவ கால உயிரிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. அப்படியே பிரசவமானா லும் பச்சிளங்குழந்தைகள் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறக்கும் விகிதத்தை நம் மால் கணிசமாகக் குறைக்க முடியவில்லை.
நாட்டின் முன்னேற்றத்துக்கு சுகாதார மேம் பாடும் முக்கியம். நிலைமை வேறாக உள்ளது.
கிராமத்தில் அனைவருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அத்தனையும் கிடைக்க வேண்டும். கனடா நாட்டிற்கு மேல்படிப்பு பயிற்சிக்காகச் சென்றிருந்தபோது அங்கு நோயாளிகளை ஹெலிகாப்டர் மூலம் அவச ரமாகக் கொண்டு வருவதைக் கண்டு வியந்து போனேன். நம் நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு அடித்தளத்தில் இயங்குவது போல் டொரண்டோ நகரில் 20-வது மாடியின் மேல் தளத்தில் குழந்தைகள் மருத்துவமனை இயங் குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அங்கே கனடா மக்களின் உயிரைக் காக்க உல கத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை காப் பீட்டு உதவியுடன் அரசுதான் நடத்து கிறது. பச்சிளங் குழந்தைகளின் உயிர் காக்க ஹெலிகாப்டர்கள் விரைந்து வருகின்றன. இங்கே வெள்ளத்தில் எத் தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதனைப் பார்க்க அமைச்சர் பெரு மக்களையும் அதிகாரிக ளையும் தான் ஹெலிகாப் டர் சுமந்து வருகிறது.
என்ன வித்தியாசம்! தாஜ்மகாலை உலக அதிசயம் என்று கொண்டாடுகிறோம். ஆனால் அது தன் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய காதல் மாளிகை என்றுதான் பலருக்குத் தெரியும்.
ஆனால் அவரது மனைவியார் பிரசவத்தின் போது இறந்ததையடுத்து அந்த தாஜ்மகால் கட்டப்பட்டது என்பது தனி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் ஒரு மருத்துவராக அந்த தாஜ்மகாலைப் பார்க்கும்போது எனக்கு அதன் கலைநயம் கண்ணுக்குத் தெரி யாது. பிரசவகால மரணங்களைத் தடுக்கும் ஒரு சின்னமாக இருக்க வேண்டும் என்ற எண் ணமேதான் மேலோங்கும். நமது மருத்துவர் கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா வில் மட்டும் இருக்கிறார்கள் என்பது பெரு மையாக இருக்கிறது. அதனால் நம் நாட்டுக் குப் பயனில்லையே.
நம் நாட்டில் ஏறத்தாழ 450 மருத்துவக் கல் லூரிகளில் ஆண்டுக்கு 30,000 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றும், இன்னமும் கிரா மப் பகுதிகளில் தேவையான மருத்துவர்கள் இல்லை. 75 சதவிகிதம் இந்தியர்கள் கிராமத் தில் வாழ்ந்தாலும், அங்கே பணிபுரிவது வெறும் 20 சதவிகிதம் மருத்துவர்கள் மட் டுமே. போதாக்குறைக்கு அங்கே போலி மருத் துவர்கள் தொல்லை வேறு.
வெளிநாடு சென்ற மருத்துவர்கள் குண் டுக்கு அஞ்சி திரும்பியிருக்கிறார்களே தவிர, தொண்டு செய்வதற்காகத் திரும்பி வருவதில் லையே? 2020-ல் வல்லரசு நாடுகளில் ஒன் றாக நம் நாடு வளர வேண்டும் என்று நாம் கனவு காணும் வேளை யில், மகப்பேறு காலத்தில் தாய்மார் கள் உயிரிழக்கும் பரிதாபம், பெண் சிசுக்கொலை, பச்சிளம் குழந்தைக ளின் மரண விகிதம் போன்றவை இன்னும் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. பிர சவ கால உயிரிழப்பை வளர்ந்த நாடுகள் தடுத் துவிட்ட நிலையில் நம் நாட்டில் அது தொட ரும் அபாயம் உள்ளது.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக் கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கி றது. இதுபோன்ற அவல நிலையை அடி யோடு நிறுத்த, மத்திய சுகாதாரத்துறையின் கிராமப்புற சேவைத்திட்டம் வரவேற்கத்தக் கதே. ஆனால் இளம் மருத்துவர்களைப் படித்து முடித்த கையோடு கிராமப்புறத்திற்கு அனுப்பி வைப்பதால் மட்டும் கிராமங்களில் மருத்துவத் தேவைகள் பூர்த்தியாகி விடாது.
கிராமப்புற மருத்துவப் பணிக்கான அடிப்ப டைக் கட்டமைப்பைச் சரி செய்ய வேண்டும்.
பணிமுதிர்ச்சி பெற்று ஓய்வு பெற்ற மருத்து வர்களை, கர்நாடக அரசு செய்வது போல் பணியமர்த்தி அவர்களின் மேற்பார்வையில் இளம் மருத்துவர்கள் கிராமங்களில் பணி யாற்றச் செய்யலாம். அவர்களுக்கான ஊதி யம் 8 ஆயிரம் என்பது இந்தக் காலகட்டத்தில் குறைவு என்பதை அரசு உணர்ந்து அதிகப்ப டியான ஊதியத்தை பணி ஊக்கக் கொடை யாக அளிக்க வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் இடங்களில் தங்கு மிடம், தொலைபேசி வசதி, வாகனவசதி எல் லாம் செய்து தர வேண்டும். மருத்துவக் கல் லூரிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தத்தெ டுத்து – ஆண்டு முழுவதும் மருத்துவ மாண வர்களை பயிற்சி காலத்திலேயே கிராம சேவைக்குப் பழக்க வேண்டும்.
ஒரு பக்கம் டெலிமெடிசின், மெடிக்கல் டூரி ஸம் என்று பெருமை பேசிக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் கிராமங்களின் மருத்துவ அவ லங்களை மறக்கவோ, மறைக்கவோ கூடாது.
ஏழை மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவக் கல்வி பெறும் மாணவர்கள் அவர் களுக்கு நன்றிக் கடனாக சிறிது காலம் சேவை செய்ய மறுத்து வெளிநாடு செல்ல நினைப் பது தவறுதான். இதில் போராடத் தேவை இல்லை. மருத்துவ மாணவர்கள் தங்கள் சமு தாயக் கடமையை உணர வேண்டும்.
கிராம சேவைத்திட்டத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு மருத்துவர்கள் இறைவ னுக்கு அடுத்தபடியானவர்கள் என்ற மக்க ளின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டும். அரசும் அதற் கேற்ற மாதிரித் திட்டங்களை வகுக்க வேண் டும். தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்க ளையும் இதில் கட்டாயமாக ஈடுபடுத்த வேண்டும்.
ஆசிரியர் தொழிலும் மருத்துவத் தொழி லும் புனிதமான பணிகளாக ஆண்டாண்டு காலமாகப் போற்றப்பட்டவை. எனவே மருத் துவர்கள் தங்களுக்குள் ஓர் ஆத்ம பரிசோ தனை செய்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் மருத்துவம் ஒரு சேவைத் துறையாக இருந்தது. தற்போது மருத்துவ மனை சார்ந்த தொழிலாகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இளம் மருத்துவ மாணவர்களுக்கு சேவைக்கான நல்வழி காட்ட வேண்டியது அனைவரது கடமை.
மருத்துவச் சேவைக்கான அரிய வாய்ப் பைப் பெற்ற மருத்துவ மாணவர்கள் படித்து முடித்தபின் ஓராண்டு கிராம மக்களுக்கு மருத்துவம் செய்வதைப் பெரும் பேறாகக் கருதி இன்முகத்துடன் ஏற்றுச் செல்ல வேண் டும்.
அங்கே ஏழைகளின் சிரிப்பில் இறைவ னைக் காணலாம். அவர்களை கருணையு டன் தொட்டு வைத்தியம் பார்த்தால் நோய் பறந்து விடும். அங்கேதான் நீங்கள் கடவுளாக மதிக்கப்படுவீர்கள்!

கட்டுரையாளர்: நிறுவனர், பெண்சக்தி இயக்கம்.
———————————————————————————————————————————————————————-
நல்லது நடக்கிறது!

சுதந்திர இந்தியாவில் மருத்துவச் சேவையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். மருத்துவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளும் சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற பெருநகரங்களில் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தியா வின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், ஏன் உலகின் பல பாகங்களிலி ருந்தும் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் நோயாளிக ளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
தனியார் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் தமிழக மருத்துவத்துறை, சாமானிய மக்களுக்குப் பயன்படும் அரசுத்துறை யில் எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி யாருமே சிந்திப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அரசு மருத்துவம னைகளின் செயல்பாடு தனியார் துறைக்கு எள்ளளவும் குறையாத அளவுக்குத் தரத்திலும், சேவையிலும் இருக்கிறது என்று சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள். காரணம், அரசு மருத்துவமனைகளின் வெளிப்புறத் தோற்றமும், அன்றாடப் பராமரிப்பும்தான்! 29 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள்; 156 தாலுகா அரசு மருத்துவமனைகள்; 1418 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; இவையெல்லாம் போதாதென்று 14 அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள். இத்தனை மருத்துவமனைகள் இருந்தும் மருத்துவச் சேவை அனைத்துத் தரப்பு மக்களையும் போய்ச் சேரவில்லை என் றால் அதற்கு முக்கியமான காரணம், மக்கள்தொகைப் பெருக்கம் தான்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியுள்ளவர் கள் கூடுமானவரை அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை.
இதற்குக் காரணம் அவர்களது வறட்டு கௌரவம் அல்லது அரசு மருத் துவமனைகளில் சரியான சிகிச்சை கிடைக்காது என்கிற தவறான கண்ணோட்டம் போன்றவை. முடிந்தவரை அரசை நம்பாமல் தனி யார் மருத்துவமனைகளை நோயாளிகள் நாடும்போது, உண்மையி லேயே வசதியற்றவர்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அரசு மருத் துவமனைகளுக்குக் கிடைக்கிறது என்பதால் அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.
இப்போதும்கூட, பெருவாரியான நோயாளிகள் மருத்துவச் சிகிச் சைக்கு அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி இருக்கின்றனர் என்ப துதான் உண்மை நிலை. விபத்து சம்பந்தப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என் கிற தவறான கண்ணோட்டம் இப்போதும் இருப்பதால், அவசர சிகிச் சைப் பிரிவுகள் எந்தவொரு நேரத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருக் கும் நிலைமை தொடர்கிறது.

தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 11.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுவதாகவும் இவற்றில் 6.5 லட்சம் பிரசவங்கள் அரசு மருத் துவமனைகளில்தான் நடைபெறுகின்றன என்கிற புள்ளிவிவரத்தை சமீபத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மருத்துவ வசதிக்காகத் தமிழக அரசு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

இப்போதும், சுமார் அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனியார் மருத்துவமனைக ளில் பெரும் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாத நிலைமை தான். மருத்துவச் செலவுக்குக் கடன் வாங்கி அதனால் வறுமையில் வாடும் கிராமப்புறக் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவச் சேவையை ஏழை எளியோரும் பயன்பெறும் வகையில் மாற்ற வேண்டும் என்கிற அரசின் நல்லெண்ணம் கட்டாயமாக வர வேற்கப்பட வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில், அரசு மருத்துவ மனைகளைத் துப்புரவு செய்தல், அடிப்படை வசதிகளை அதிகரித் தல் போன்றவைகளுக்குத் தன்னார்வ நிறுவனங்களையும், சமூக சேவை நிறுவனங்களையும் ஈடுபடுத்தினால் என்ன? அரசு ஏன்முயற் சிக்கக் கூடாது?

———————————————————————————————————————————————————————-

புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 நவம்பர், 2007

தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் மீண்டும் தொடங்கியது

மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓராண்டு கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டுமென்று இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருக்கும் விதிக்கு எதிராக தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை மீண்டும் தொடங்கியுள்ளார்கள்.

இது தொடர்பில் மருத்துவ மாணவர்கள் திங்கட்கிழமை முதல் வெவ்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகிறார்கள். அரசின் இந்தத் திட்டமானது உண்மையான கிராப்புற சேவையல்ல என்பது மாணவர்களின் வாதமாகவுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் பல இடங்கள் காலியாகவுள்ள நிலையில் மருத்துவப் படிப்பை ஆறு ஆண்டுகளாக அதிகரித்தால் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருவது குறைந்துவிடும் எனவும் மாணவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தியாவில்தான் உலக அளவில் குழந்தைகள் இறப்பு அதிமாக இருக்கிறது என்றும் 73 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்ற காரணத்தினாலும், கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு எண்ணுகிறதாலும்தான் இவ்வாறான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுத்துவருகிறது என்று இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி இராமதஸ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிசெய்யவேண்டும் என்பது இருந்தது என்றும், காலகட்டத்தில் அது இல்லாமல் போனது என்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் கூட இன்னமும் ஐந்து அல்லது பத்தாண்டுகள்தான் இருக்கும் எனவும் அமைச்சர் அன்புமணி கூறுகிறார்.

இந்த சர்ச்சை குறித்து சுகாதார அமைச்சர், மருத்துவ மாணவர்கள் மற்றும் பலரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களை நியமிக்க கோரி பா.ம.க., போராட்டம்: ராமதாஸ்துõத்துக்குடி: “தமிழகத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் போதுமான டாக்டர்களை நியமிக்கக்கோரி பா.ம.க., போராட்டம் நடத்தவுள்ளதாக’ அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

துõத்துக்குடியில் அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதியை சந்தித்த மருத்துவ மாணவர்கள், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இன்று வரை நுõதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நானும் ஒரு டாக்டர் தான். டாக்டர்கள் நலனுக்கெதிராக செயல்பட மாட்டேன்.

“கடந்த ஆட்சியில் மாதம் எட்டாயிரம் ரூபாயில் தொகுப்பூதியத்திற்கு அரசு டாக்டர்களை நியமித்த’ ஜெயலலிதா, தற்போது கிராமப்புற சேவையை எதிர்த்து போராடுவது கண்டனத்திற்குரியது. மருத்துவ மாணவர்களின் ஓராண்டு கட்டாய கிராமப்புற சேவை, வெறும் பேச்சளவில் தான் உள்ளது. அரசாணையோ, பார்லியில் சட்ட முன்வரைவோ, மசோதாவோ தாக்கல் செய்யப்படவில்லை. பிரச்னை விவாதப்பொருளாகத்தான் உள்ளது.

கட்டாய கிராமப்புற சேவை குறித்து மருத்துவ மாணவர்களிடம் மூன்று மணி நேரம் பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் குழு அமைத்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத போராட்டம் தமிழகத்தில் நடக்கிறது. மத்திய அமைச்சர் அன்புமணி டில்லியில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களும், கிராமப்புற சேவை திட்டத்தை வரவேற்று உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொண்டார். கையெழுத்து வேண்டுமானால் அமைச்சர் போடாமல் இருந்திருக்கலாம். தமிழக அமைச்சர் அப்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது ஏன்?

கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு கிராமப்புற சேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அவர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டு மருத்துவமனைகளில் அமெரிக்க தர சிகிச்சை தருவதற்குத்தான், மத்திய அரசு கட்டாய கிராமப்புற சேவை திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது.

இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை துõண்டிவிட்டு அதை அரசியலாக்குகின்றனர். தமிழகத்திலுள்ள ஆயிரத்து 417 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரம் டாக்டர்களின் பணியிடம் காலியாக உள்ளது. நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அங்கு சென்று டாக்டர்கள் பணியாற்றலாம்.

அரசு மருத்துவக் கல்லுõரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு டாக்டராவதற்கு மக்கள் வரிப்பணம் ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து 645 டாக்டர்கள் படிப்பு முடிந்து வெளியே வருகிறார்கள்.

கிராமப்புற கட்டாய சேவை குறித்து மருத்துவ மாணவர்களுடன் பேச நானும், மத்திய அமைச்சர் அன்புமணியும் தயாராகவுள்ளோம். அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், அங்கு மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பா.ம.க., முடிவு செய்துள்ளது. அதுகுறித்து வரும் 3ம் தேதி நடைபெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
————————————————————————————————————–

“அன்புமணிக்கு அருகதை இல்லை’: தா. பாண்டியன்

சென்னை, டிச. 14: எங்களைப் பற்றி பேச மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு அருகதை இல்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பவர்களை, கிராம மக்களின் எதிரிகள் என்று அன்புமணி வர்ணித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸýம் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சிகள் மீதும் கூறிவருகிறார். இதை இந்திய கம்யூனிஸ்ட் நிராகரிக்கிறது.

சிகிச்சை அளிப்பதால் மட்டுமே கிராம மக்களுக்கு சேவை கிடைத்துவிடும் என்று கூற முடியாது. கிராம மக்கள் சேவை என்றால், அவர்களுக்கு வேலை தரவேண்டும், தகுந்த ஊதியம், உற்பத்தி செய்கின்ற பொருள்களுக்கு நியாயமான விலை, கிராமங்களை இணைக்க தரமான சாலைகள், குடிநீர் வசதி மேலும் அங்குள்ள பள்ளிகளுக்கு சரிவர ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும். இதில் கடைசியில் வருவதுதான் மருத்துவ சிகிச்சை.

கேபினட் அமைச்சர் என்ற வகையில் அன்புமணி அங்கம் வகிக்கும் மத்திய சுகாதாரத் துறை, ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆகிய உயர் கல்வித் துறைகளில் இதுவரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்கவில்லை.

கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவராவது இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா? அல்லது ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனரா? என்ற விவரத்தை அன்புமணி வெளியிடவேண்டும்.

அதன் பின்னரே கிராம மக்கள் மீது அவர் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கைமீது இதுவரை நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்படவில்லை.

உண்மையில் கிராமப்புற சேவை செய்யவேண்டும் என்றால், மத்திய அமைச்சரவை செய்யத் தவறி இருப்பதை அன்புமணி கண்டித்திருக்கவேண்டும். இதைச் செய்யத் தவறிய அவருக்கு, குறைகளைச் சுட்டிக் காட்டும் எங்களைக் குறித்துப் பேச அருகதை இல்லை.

எம்.ஆர்.எஃப். தொழிலாளர் பிரச்னையை சுமூகமாக தீர்த்துவைத்து, கதவடைப்பை நீக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றால் அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏரி மற்றும் நீர்பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு லட்சம் குடியிருப்புகளை இடிக்கப்போவதாக அறிவித்திருக்கும் பொதுப்பணித் துறையின் எச்சரிக்கையை நிறுத்திவைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவையில் விமான நிலைய விரிவாக்கத்துக்காக, மக்கள் குடியிருக்கும் பகுதிகளை இடிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதை தவிர்க்க மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் போக்க, அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து மின் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தா. பாண்டியன்.
————————————————————————————————————–

Posted in +2, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Biz, Business, Childbirth, Children, City, Clinic, College, Commerce, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Compulsory, Consumer, Cost, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Critic, Customer, Doctor, Economy, Education, Empty, Engg, Engineer, Engineering, Extortion, facilities, Females, Force, Foreign, Free, GH, GI, Govt, Graduate, Graduation, Health, Healthcare, Higher, Hospitals, HSS, Info, infrastructure, Justice, Law, MBBS, MD, medical, Medicine, Metro, MMC, Money, Moore, Munnabai, Munnabhai, Needy, ObGyn, Op-Ed, Operation, Opportunity, Permanent, PlusTwo, Poor, Postgraduate, Postgraduation, Practice, Pregnancy, Private, Ramachandra, Ramadas, Ramadoss, Rich, Rich vs Poor, Royapettah, Rural, School, seats, service, Sicko, Specialization, Stanley, State, Statistics, Stats, Study, Suburban, surgery, University, Urban, voluntary, Volunteer, Wealthy, WHO, Women | 14 Comments »

State of MBBS – Analysis on Medical education

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

எம்.பி.பி.எஸ். -தேவை அவசர சிகிச்சை

ஜே. ரங்கராஜன்

கம்பவுண்டர்களை டாக்டர்களாக மக்கள் மதித்த காலம் உண்டு. ஆனால் இன்று குறைந்தபட்சம் எம்.டி. பட்டம் பெற்றிருந்தால்தான் ஒருவர் டாக்டராகவே பொதுமக்களால் மதிக்கப்படுகிறார். எம்.பி.பி.எஸ்., எம்.டி. அல்லது எம்.எஸ்., உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம். அல்லது எம்.சிஎச். என மொத்தம் 11 ஆண்டுகள் படித்தால்தான் மருத்துவத் துறையின் சிகரத்தை ஒருவர் எட்டும் நிலை உருவாகி விட்டது.

இந் நிலையில் டாக்டர் என சொல்லிக் கொள்வதற்கான குறைந்தபட்ச எம்.பி.பி.எஸ். கல்விக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கே கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் உள்பட எல்லா மாநில அரசுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவக் கல்லூரி தொடங்க அங்கீகாரம் அளிக்கும் பணியை தில்லியில் உள்ள தன்னாட்சி அமைப்பான இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்து தொடர்ந்து நடத்தும் அனுமதியையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டுமானால், ஒரே வளாகத்தில் 25 ஏக்கர் பரப்பளவு இடம், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியர்கள் -கூடுதல் பேராசிரியர்கள் -உதவிப் பேராசிரியர்கள், அவர்களுக்கு குறிப்பிட்ட பரப்பளவில் அறை, 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, சி.டி. ஸ்கேன் உள்பட மருத்துவ சோதனைக் கருவி வசதிகள், சோதனைக்கூட வசதி, உரிமம் பெற்ற வசதிகளுடன் கூடிய ரத்த வங்கி, துறை வாரியான நூலகம், மத்திய நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என மருத்துவக் கல்விக்குத் தேவையான கடுமையான விதிமுறைகளை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை

  • 1835-ல் தொடங்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி,
  • அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி (1838),
  • வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (1942),
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி (1954),
  • தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி (1959),
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி (1960),
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி (1965),
  • கோவை அரசு மருத்துவக் கல்லூரி (1966)

ஆகியவை மிகவும் பழமையானவை. இந்தக் கல்லூரிகளைக் காலம் காலமாக இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து அவ்வப்போது எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
போதிய ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல், 1992-ல் திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டபோதுதான் பிரச்னை தொடங்கியது. அரசியல் லாபத்துக்காக இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளை ஏமாற்றும் வேலையை அரசே செய்தது. அதாவது, இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நிலையில் சென்னை உள்பட வேறு இடங்களிலிருந்து டாக்டர்களைத் திருச்சிக்குக் கடத்தி கணக்குக் காண்பிப்பது, அவர்கள் திருச்சியில் வசிப்பது போன்று தாற்காலிக ரேஷன் அட்டையை அவசர அவசரமாகப் போலியாகத் தயாரிப்பது, ஓய்வு பெற்றோரின் பெயரில் தாற்காலிகமாகப் பணியிடங்களை உருவாக்கி நியமன உத்தரவுகளை அச்சடித்துத் தருவது என மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து மோசடி வேலைகளையும் அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இந்த மோசடி வேலைகளை ஒருங்கிணைத்துச் செய்து ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளைத் திருப்திப்படுத்த சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு மருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்த மோசடி வேலைக்கு உடன்படாத நியாயமான டாக்டர்களைப் பணி இடமாற்றம் செய்து அரசு பழிவாங்கியது.

1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கு உரிய இடத்தைத் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், 2000-ம் ஆண்டில் போதிய வசதிகள் இல்லாமல் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் அளிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை தொடர்ந்தது.

2001-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அரசியல் அறிவிப்பு செய்யப்பட்டு 2003-ல் கன்னியாகுமரியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெற சென்னையிலிருந்து பஸ்ஸில் டாக்டர்கள் கடத்தப்பட்டனர். இதே போன்று அதிமுக ஆட்சியில் தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 2005-ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

வேலூர், தேனி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. முந்தைய காலங்களைப் போல் டாக்டர்களை இப்போது கடத்தி பொய்க் கணக்கு காண்பிக்க முடியாது. ஏனெனில் அரசின் நிர்பந்தம் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் வேலை பார்ப்பதாக பொய் சொன்ன 25 டாக்டர்களின் பெயர்ப் பட்டியலை இணையதளத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் இத்தகையோர் இனி ஆசிரியர்களாகப் பணியாற்ற அது தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்க 12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 7,000 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,398தான். இந் நிலையில் வேலூர்-தேனி-கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 300 எம்.பி.பி.எஸ். இடங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. ஆக, இந்த 300 இடங்கள் கிடைக்காமல் போனால் மிஞ்சும் எம்.பி.பி.எஸ். இடங்கள் 1,098தான்.

இவ்வாறு இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் தர மறுப்பதற்கான முழுமையான காரணம் சுகாதாரத் துறை செயலர் பதவி வகித்த அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரியில் “அனாடமி’, “பிசியாலஜி’, “பயோகெமிஸ்ட்ரி’, “ஃபாரன்சிக் மெடிசின்’ உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் ஒரு பேராசிரியர், இரண்டு கூடுதல் பேராசிரியர்கள், மூன்று உதவிப் பேராசிரியர்கள் இருந்தாக வேண்டும். ஆனால், தமிழகம் முழுவதுமே இந்தத் துறைகளில் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் பேராசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக “அனாடமி’ துறையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 10 பேராசிரியர்கள்-கூடுதல் பேராசிரியர்களே உள்ளனர்.

அரசுப் பணியில் 20 ஆண்டுகள் டாக்டர்கள் இருந்தாலும் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் அளவுக்கே சம்பளம் கிடைக்கும். ஆனால், முதுநிலை மருத்துவப் பட்டம் பெற்ற அடுத்த நாளே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசியராகச் சேரும் நிலையில் மாதச் சம்பளம் ரூ.45 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர் ஆய்வுக்கு வரும் நிலையில் போதிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, முதுநிலைப் பட்டப் படிப்புக்கு டாக்டர்களைச் சேர்க்கும் நிலையில் அரசுப் பணியில் கட்டாயம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் உதவிப் பேராசிரியராக நியமிக்கும்போதே பணியாற்ற விரும்பும் இடம், அதிக சம்பளம் ஆகியவற்றையும் அரசு அளிப்பது அவசியம்.

இந்த அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்தை அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் பெறுவதில் பிரச்னை ஏற்படாது. விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தர்மபுரி, திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்ற அரசியல் மத்தாப்பூ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து முடிக்காமல் வெற்று அறிவிப்புகளால் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படும் என்பதை அரசு உணர வேண்டும்.

————————————————————————————————

அட்மிஷனுக்கு முன்பே விலைபோகும் பி.இ. சீட்டுகள்

சென்னை, ஜூலை 6: தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் அட்மிஷன் நடைமுறை தொடங்கும் முன்பாகவே குறிப்பிட்ட சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். சீட்டுகள் “கொழுத்த தொகைக்கு’ விலைபோகின்றன.

பிரம்மாண்டத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு மாணவரும், பெற்றோரும் இதுபோன்ற கல்லூரிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாகவே குறிப்பிட்ட சில கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாய நன்கொடைக் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் ஆகியவை குறித்த வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை காலையில் பிறப்பித்தது.

இதன்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் பி.இ., பி.டெக். படிப்புகளில் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். 35 சதவீத இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் தாங்களே நிரப்பிக் கொள்ளலாம். சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் 50 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதுவரை 22 பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள அனைத்து இடங்களையும், அண்ணா பல்கலை. மூலம் நிரப்பிக் கொள்ள அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதுபோல், அரசிடம் அனைத்து இடங்களையும் ஒப்படைப்பது குறித்த விருப்பத்தைத் தெரிவிக்கும்படி கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே சில தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பி.இ. படிப்புகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

“நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதே.. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?’ என்று கேட்டதற்கு, அதன் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்றும், “சேர்க்கப்பட்ட’ மாணவர்களுக்குப் பாதிப்பு வராது என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கல்வியை வியாபாரம் ஆக்கும் பொருட்டு சில சுயநிதி கல்லூரிகள் இது போல் செய்து வருவதை மாணவர்களும் பெற்றோர்களும் ஒருபுறம் ஆதரிக்கத்தான் செய்கின்றனர் என்பது வேதனையான உண்மை. அதனால்தான், ஒற்றைச் சாளர முறைக்குக் காத்திருக்காமல், அட்மிஷன் நடைமுறை தொடங்கு முன்பே பல கல்லூரிகளில் பணத்தைக் கொடுத்துவிடுகிறார்கள்.

பிரம்மாண்டமான கட்டத் தோற்றம், மயக்கும் பேச்சு மற்றும் மாணவர்கள் படிக்கும்போதே அக்கல்லூரிகளில் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற “கவர்ச்சி’க்கு மாணவர்களும், பெற்றோரும் மயங்குகின்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக பணம் கொடுத்து சோர்ந்த பின்னர், அம்மாணவருக்கு ஒற்றைச் சாளர முறையில் அட்மிஷன் கிடைக்கும் போது அவர்களுக்கு அந்தப் பணத்தைக் கல்லூரி நிர்வாகம் முழுமையாகத் திருப்பித் தருவதில்லை.

தகுதியுடைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், சுயநிதிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதே முறையானது. இதில் அரசின் நிலையே சரியானது என்றும் பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

——————————————————————————————————

“ஏழை’ எம்.பி.பி.எஸ். ரூ. 2.55 லட்சம்

சென்னை, ஜூலை 9: சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு தலா ரூ. 3 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏழை மாணவராக இருந்தால் இந்தக் கட்டணத்தில் 15 சதவீத சலுகையை அளிக்க வேண்டும் என்று செட்டிநாடு கல்லூரி நிர்வாகத்துக்கு ராமன் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், மாணவரை ஏழை என நிர்ணயிக்கப்போவது எது என்பதற்கு அரசு அறிவிப்பில் விளக்கம் இல்லை. அப்படியே “ஏழை’ என ஒரு மாணவருக்கு கல்லூரி நிர்வாகம் சலுகை அளித்தாலும்கூட, அந்த மாணவர் ரூ. 45 ஆயிரம் தள்ளுபடியைப் பெற்று ரூ. 2.55 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியாக வேண்டும்.
——————————————————————————————————————————–

எகிறியது தனியார் எம்.பி.பி.எஸ். – அரசு சீட் விலை

சென்னை, ஜூலை 9: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கான கட்டணம் ரூ. 1.30 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரே ஆண்டில் எம்.பி.பி.எஸ். கட்டணம் தனியார் கல்லூரி மொத்த இடத்துக்கு ஏற்ப ரூ. 1.10 லட்சம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், கோவை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000 மட்டுமே.

  • சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி,
  • கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி,
  • கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி,
  • ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரி

என நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  1. செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களும்,
  2. பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  3. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களும்
  4. பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் 60 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மேலே கூறப்பட்டுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 410 இடங்களில் 65 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது; மீதமுள்ள 35 சதவீத இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டு மூலம் நிரப்பிக் கொள்ளலாம் எனக் கூறியது.

கட்டணம் உயர்ந்தது ஏன்? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து திங்கள்கிழமை (ஜூலை 9) முதல் எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் சென்னையில் நடைபெறுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.30 லட்சத்தை கடந்த ஆண்டு தமிழக அரசு நிர்ணயித்தது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ரூ.4 லட்சத்தை கட்டணமாக வசூலித்தன.

இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவர்களிடம் வாங்கிய கூடுதல் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, தனியார் மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ். கட்டணம் குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிபதி ராமன் கமிட்டியை கேட்டுக் கொண்டது.

புதிய கட்டணம் என்ன?

இந் நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டுக்கான இடத்துக்கான கட்டணத்தை நீதிபதி ராமன் கமிட்டி மூலம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அனைத்துத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே கட்டணமாக ரூ. 1.30 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியின் இடங்களுக்கு ஏற்ப தனித் தனியே கீழ்க்கண்ட கட்டணங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் படூரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (98 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – ஆண்டு கல்விக் கட்டணம் தலா ரூ. 3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத சலுகை அளிக்க வேண்டும்).

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி (65 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்) – தலா ரூ. 2.25 லட்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி (50 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை.) – தலா ரூ. 2.40 லட்சம்.

பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன மருத்துவக் கல்லூரியில் அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 66,000.

————————————————————————————-

தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். : வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த மாணவர்களுக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கிறது.

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடைபெறும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இந்தியன் வங்கியின் சேத்துப்பட்டு கிளை அதிகாரிகள் கடனுதவி ஆலோசனை மையத்தை அமைத்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4,000-மாக உள்ளது. சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கட்டணமாகவும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ரூ.2.25 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் 5 ஆண்டுப் படிப்புக்கும் சேர்த்து எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.4 லட்சம் வரை 12.5 சதவீத வட்டிக்கு இந்தியன் வங்கி கடனுதவி அளிக்கும். ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை உத்தரவாதம் இன்றி 13 சதவீத வட்டிக்கு கடன் கிடைக்கும். கடன் தொகை ரூ.7.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அசையாச் சொத்துகள், டெபாசிட் பத்திரங்கள் உள்பட கடன் தொகைக்குச் சமமாக 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்; வட்டி விகிதம் 13 சதவீதம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு கடன் தொகையை மாணவர் திருப்பிச் செலுத்தினால் போதும்.

———————————————————————————————————-

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் மறுப்பு

சென்னை, ஜூலை 20: உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் எதிரொலியாக தமிழக அரசு அனுமதிக் கடிதம் அளித்த 25 மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மறுத்து விட்டது.

இதனால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக் கடிதம் பெற்ற 25 மாணவர்கள், வியாழக்கிழமை நடந்த கவுன்சலிங்கில் இக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் என மொத்தம் 97 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மொத்தம் உள்ள 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் (150), 65 சதவீதத்தை (97 இடங்கள்) அரசின் ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்; செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கில், அக் கல்லூரியில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணப் பிரச்சினையுடன் (ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.3 லட்சம்) தற்போது 97 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தடை உத்தரவும் சேர்ந்து மாணவர்களை பெரும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் கடந்த ஆண்டு செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இக் கல்லூரியின் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 150; இதில் 65 சதவீத அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 97.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 15, 16-ம் தேதி கவுன்சலிங் நடைபெற்றபோது, இந்த 97 இடங்களில் 25 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; அவர்களுக்கு இக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது. அவர்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை மறுத்து விட்டது.

செட்டிநாடு மருத்துவக் கல்லூரியில் மீதம் இருந்த 62 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மீண்டும் வியாழக்கிழமை (ஜூலை 19) கவுன்சலிங் நடந்தது. இந்த இடங்களுக்கு 62 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்; ஆனால் உச்ச நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக இந்த 62 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை.

பிஎஸ்ஜி பிரச்சினை இல்லை: “”செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் உள்ள 65 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கவுன்சலிங்கில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; அதில் பிரச்னை இல்லை. இதேபோன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலைப் போக்குவரத்து நிறுவன (ஐ.ஆர்.டி.) மருத்துவக் கல்லூரியின் 39 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்கள் சேருவதில் பிரச்சினை இருக்காது” என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டணப் பிரச்சினை:

ராமன் குழு நிர்ணயித்த ஆண்டு கல்விக் கட்டணத்தை (சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி – ரூ.3 லட்சம்; கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி – ரூ.2.25 லட்சம்) எதிர்த்து இக் கல்லூரி நிர்வாகங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளன.

இந் நிலையில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். அட்மிஷன் கிடைத்த மாணவர்களிடம், ஆண்டுக் கல்வி கட்டணமாக ரூ.4,05,000 செலுத்துமாறு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி கூறியுள்ளது. இதனால், கவுன்சலிங்கின்போது ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.2.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்த்து கோவை பிஎஸ்ஜி கல்லூரியைத் தேர்வு செய்த 65 மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

————————————————————————————————–

கொள்ளை போகும் உயர் கல்வி
குமுதம்
சாவித்திரி கண்ணன்
18.07.07 கவர் ஸ்டோரி

‘‘நீ பெரியவனாயிட்டா டாக்டராவியா? இன்ஜினீயராவியா?’’ என்று, நம் குழந்தைகளிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. ஏதோ இந்த இரண்டைத்தவிர அடையவேண்டிய உச்சம் வேறொன்றுமேயில்லை என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இந்த அபத்தத்தினால் உண்டான ஆபத்தாகத்தான் தமிழ்நாட்டில் தேனீர் கடைகளுக்கு இணையாக பொறியியல் கல்லூரிகள் பிறப்பெடுத்துக் கொண்டுள்ளன.

இந்தியாவிலே மட்டுமல்ல, உலகத்திலேயே, தமிழ்நாட்டைப் போல் இவ்வளவு சிறிய நிலப்பரப்பிற்குள் 251 இன்ஜினீயரிங் கல்லூரிகள் கிடையாது. ‘ஆஹா எவ்வளவு வளர்ச்சி!’ என்று சந்தோஷமடைய வழியின்றி பல சங்கடங்கள்! ஏனெனில், இதில் அரசு சார்ந்த 13 கல்லூரிகள்தான் உருப்படியாகச் செயல்படுகின்றன.

அடுத்ததாக சொல்ல வேண்டுமெனில், 238 சுயநிதிக்கல்லூரிகளில் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான கல்லூரிகளையே வேலைவாய்ப்பு தரும் கல்வி நிலையங்கள் முதல் தர வரிசையில் அங்கீகரித்துள்ளன. அதாவது வருடாவருடம் வெளியேறும் 70,000 மாணவர்களில் சுமார் 10 சதவிகிதத்தினருக்குத்தான் சரியான வேலைக்கு உத்தரவாதமுள்ளது. ஆக இப்படியான கழிசடைக் கல்வியைத்தான் பெரும்பாலான சுயநிதிக்கல்லூரிகள் தந்து கொண்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் வேண்டுமெனில், நம்ம ரயில்வேயில் ‘கலாசி’ எனப்படும் கடைநிலை ஊழியர் பணிக்கு 2000 பேரைத் தேர்ந் தெடுக்க 2004_ல் ஒரு விளம்பரம் வெளியானது. இந்த வேலைக்கு 20,000 இன்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த லட்சணத்திலான கல்வியைப் பெறுவதற்காகத்தான் நமது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வீட்டையோ, நிலத்தையோ, நகைகளையோ விற்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித்துறை வியாபாரமாகிவிட்டதே என்று சிலர் கோபப்படுகிறார்கள். இப்படிப் பேசுபவர்கள் வியாபாரம் பற்றித் தவறான புரிதல்களைக் கொண்டுள்ளனர். ஒரு பொருளுக்குரிய விலை வைத்து விற்பனை செய்து, அதன் தரம், பயன்பாடு, நியாயமான விலை இவற்றில் வாங்குபவரை திருப்தியடைய வைப்பதே வியாபாரம். இந்த வகையில் பார்த்தால், சுயநிதிக் கல்லூரிகள் நடத்துவது வியாபாரமல்ல, சுரண்டல்.

அடிப்படை வசதிகளற்ற கட்டமைப்பு, தகுதியற்ற ஆசிரியர்கள், மோசமான கல்வித்தரம்… போன்றவற்றோடு மருத்துவம், இன்ஜினீயரிங் படிப்புகள் குறித்த மக்களிடமுள்ள மாயையையே முதலீடாகக் கொள்கின்றன, சுயநிதிக் கல்லூரிகள்.

மாயைகளை உருவாக்குவதிலும், மாயைகளில் பலனடைவதிலும் வேறெவர்களையும் விட, அரசியல்வாதிகளே அதிக அனுகூலமடைகின்—றனர். இந்த வகையில் தமிழகத்தில் 1984_ல் தொடங்கி அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கல்விச் சுரண்டலை கைகோர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ம.க. இதுவரை பார்ட்டனராகவில்லை. ஆகவேதான், ‘‘அநியாய கல்விக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ராமதாஸ்.

கல்வி அமைச்சரும், முதல்வரும், ‘‘அடடா அப்படியா! எங்களுக்கொன்றும் புகார்கள் வரவில்லை. ஆதாரம் தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்கிறார்கள். எல்லோருக்கும் புரிந்த உண்மை, கல்வித்துறையை ‘பொன்’ முட்டையிடும் வாத்தாகப் புரிந்து வைத்திருக்கும் அமைச்சருக்கும், முதல்வருக்கும் புரியவில்லை… பாவம்!

‘ஆதாரம் திரட்டும் அருகதை ஆட்சி நடத்து பவர்களுக்கு இல்லையா?’ என மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அன்றைய மன்னர்கள் மாறுவேஷமிட்டுச் சென்று மக்கள் குறைகளைக் கேட்டார்களாம். இன்றைய ஆட்சியாளர்களோ நிஜத்திலேயே வேஷம் போடுகிறார்கள்.

இன்றைய நிலவரப்படி, பிரபல பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக கோட்டாவிற்கான அனைத்து இடங்களும் ஜனவரி, பிப்ரவரியிலேயே 8 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை விலைபேசி விற்கப்பட்டுவிட்டன.

மற்றொரு புறம் விலை போகாத கல்லூரிகளோ எஜிகேஷன் எக்ஸிபிஷன் நடத்தி, 80,000_தான். ஒரு லட்சம்தான். ஹாஸ்டல் வசதி இருக்கு. வாங்க வாங்க என்று கையைப் பிடித்திழுக்காத குறையாகக் கெஞ்சுகிறார்கள்.

நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணம் 32,500 முதல் 40,000 ரூபாய் வரைதான். எனில் தனியார் கல்லூரிகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை எப்படி தங்கள் இஷ்டம் போல் வசூலிக்க முடிகிறது? பொறியியல் கல்லூரிகளில்தான் பொறுக்க முடியாத கொடுமை என்று மருத்துவக் கல்லூரி சென்றால், அங்கோ மகாமோசம். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம் 1,30,000 என்றால், இவர்கள் வசூலிக்கும் கட்டணமோ நாலரை லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை! இப்படி படித்துவிட்டு வருகிறவர்கள் நாளைக்கு மனிதாபிமானத்தையே விலை பேச மாட்டாங்களா?

1992_ல் கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் வந்தது. இதுவரை இதில் ஒரு கல்லூரி அதிபர்கூட கைதாகவில்லை.

இந்தச் சட்டம் ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள ஆயுதம் என்பது, அந்த அதிபர்களுக்கும் தெரியும். அதேசமயம் உரிய வர்களுக்கு பங்கு தரா விட்டால்தான் இது தங்கள் மீது பாயும் என்பதும் புரியும்.

‘‘அரசாங்கத்திற்கு புகார்கள் தந்ததால் கல்லூரியை விட்டே நீக்கப்பட்டவர்களையும், அர சிடமா புகார் செய்தாய் அபராதம் கட்டு என இன்னும் பாதிக்கப்பட்டவர்களின் பட்டி யலையும் தரட்டுமா என்கிறது இந்திய மாணவர்கள் சங்கம். இவ்வளவு ஏன்? தமிழகத்திலுள்ள அனைத்து கல்வியாளர்களும் கொதித்துக் குமுறுகிற வகையில் இதுவரை கறை படியாதிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தையே இந்த ஆட்சி களங்கப்படுத்திவிட்டது. ‘ஸ்பெஷல் ஸ்கீம்’ என்று பகி ரங்கமாகவே 15 லட்சத்திற்கு இன்ஜினீயரிங் சீட்டை விற்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோல் 60 சீட்டுகள் அதிகார பூர்வமாக சில நிறுவனங்களுக்கு விற்றார்கள். இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவுள்ளது. ஏழை எளிய திறமையான மாணவர்களுக்கு கருணை காட்டவென ஒதுக்கப்பட்ட முதல்வர் கோட்டா, கவர்னர் கோட்டா வெல்லாம்கூட கல்விச் சந்தையில் காசாக மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன.

1948_ல் தாராசந்த் கமிட்டி தொடங்கி, சமீபத்திய ராமன் கமிட்டி சுப்பிரமணியன் கமிட்டி வரை எத்தனையோ கமிட்டிகள், என்னென்னவோ ஆய்வுகள், கட்டண வரைமுறைகள், அட்மிஷன் வரைமுறைகள், எந்த நியாயத்தை நாம் எடுத்துச் சொன்னாலும் நடைமுறையில் கேட்கப்படுகிற கட்டணத்தைக் கொட்டிக் கொடுக்க மக்கள் திரளின் ஒரு பகுதி தயாராக இருக்கிறது என்பதே நிதர்சனம். அப்படி கொட்டுபவர்கள் எங்கேயோ போய்கொட்டாமல் அரசாங்க கஜானாவிலேயே கொட்டிவிட்டுப் போகட்டுமே! மதுக்கடைகளை அரசாங்கமும், கல்வி நிலையங்களை தனியாரும் நடத்துவது அவலம், அநீதி.

மழைக்கும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள்கூட ஒரு கல்லூரி துவங்கி காசுபார்க்க முடியுமெனில் அரசாங்கம் மேலும் சில கல்லூரிகளை நடத்தினால் என்ன? வசதியானவர்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை ஏழை எளிய நடுத்தர வர்க்க மாணவர்கள் ஏற்றம் பெற பயன்படுத்தலாமே!

—————————————————————————————————————————-
சுயநிதி கல்லூரி இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைக்காமல் போகும் அபாயம்: ஜெயலலிதா எச்சரிக்கை

சென்னை, ஜூலை 25: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பால் தமிழகத்தில் உள்ள சுயநிதிக் கல்லூரி இடங்கள் இனி அரசு ஒதுக்கீட்டு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் தவறான உயர் கல்விக் கொள்கையால் இந்த ஆண்டு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவர்கள் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன், சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை தேவையில்லை என்று சட்டம் இயற்றப்பட்டது.

ஒற்றைச் சாளர முறையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடையாணை பெறாத வகையில் உரிய முறையில் இச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறோம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தில் சில திருத்தங்களை திமுக அரசு தற்போது கொண்டுவந்தது. அதன்படி சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில்தான் இருக்க வேண்டும்.

தமிழக அரசின் இச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சுயநிதிக் கல்லூரி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் செல்லாது என்று அறிவித்து இந்த கல்வி ஆண்டு மட்டும் இச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்க அனுமதி அளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செட்டிநாடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால தீர்ப்பில் இக்கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை என்றும் அனைத்து இடங்களையும் அக் கல்லூரியே நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்புக் கூறியது.

மொத்தம் உள்ள 240 சுயநிதி கல்லூரிகளில் 160 கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ள இக் ல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும். அதைத் தான் அக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டு தர முன்வந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களைத் தர முன்வராத 80 கல்லூரிகள் மாணவர்கள் விரும்பிப் படிக்கக் கூடிய முன்னிலை கல்லூரிகளாகும்.

எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைத் தர முன்வந்துள்ளன எந்தெந்த சுயநிதிக் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தர முன்வரவில்லை என்பதை திமுக அரசு தெளிவுபடுத்தாத காரணத்தால் மாணவர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

அரசின் அலட்சிய போக்காலும் முன்னுக்கு பின் முரணாக செயல்பட்டதாலும் சுய நிதி கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு கிடைத்து வந்த இடங்கள் அனைத்தும் இனிமேல் கிடைக்காது போகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
—————————————————————————————————————————-
ஏழை மாணவர்களின் நலனை கெடுக்க ஜெயலலிதா சூழ்ச்சி: பொன்முடி

சென்னை, ஜூலை 25: சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலிலதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரசின் தவறான கொள்கையால் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சிறுபான்மை சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 70 சதவீதமாகவும் அரசாங்க ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்தது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 50 சதவீத நிர்வாக ஒதுக்கீடும், அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாகவும் இருந்தது.

திமுக அரசு பொறுப்பேற்றதும் சிறுபான்மை சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைப் போல சிறுபான்மை அல்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஒற்றைச் சாளர முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதற்கு சட்டம் கூட இயற்றப்படவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் அரசு ஒதுக்கீட்டை அதிகம் பெற்றதுடன் நிர்வாக ஒதுக்கீட்டையும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

மேலும் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இன்னமும் ஒப்புதல் பெறப்படவில்லை. அந்தச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் இதுவரை செய்யப்படவில்லை.

2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் ஒற்றைச் சாளர முறை தேவையில்லை என்று கூறியிருப்பதாகச் சொல்லும் ஜெயலலிதா அதை நிரூபிக்கத் தயாரா?

நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே இல்லை.

2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திலும் 2007-ம் ஆண்டைய சட்டத்திலும் சொல்லியிருப்பது ஒற்றைச் சாளர முறையே தவிர வேறு அல்ல.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயற்றப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

மாணவர்களின் மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் அவரது கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு கூட செய்யலாம்.

மேலும் இதுவரை உச்சநீதிமன்றம் பொறியியல் கல்லூரிகளுக்கு எவ்வித தடையாணையோ, தீர்ப்போ சொல்லாத நிலையில், சில சுய நிதிக் கல்லூரிகளோடு சேர்ந்துகொண்டு ஜெயலலிதா ஏழை மாணவர்களின் நலனைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பொன்முடி.
—————————————————————————————————————————-

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி: ஜெயலலிதா குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 25: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி நடந்துள்ளது, மாணவர்கள் நலன் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களுடன் கூடிய பிரகடனத்தில் தொழிற்கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் மற்ற தொழிற்கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்ற வாசகம் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தற்போது 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில விண்ணப்பித்து இடமும் பெற்றிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் படிவத்துடன் கூடிய பிரகடனத்தில் சில வார்த்தைகள் உள் நோக்கத்துடன் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது பொறியியல் உள்ளிட்ட வேறு தொழில் கல்வி படித்து வரும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தது தவறு. பழைய நடைமுறைப்படியே மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதற்கிடையில் உயர் நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றிருக்கிறார்கள். கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் இவர்களை மருத்துவப் படிப்பில் சேர்க்க வேண்டும். இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் எதிர்கால நலன் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

———————————————————————————————————————————
Monday November 26 2007

மக்களுக்காக மருத்துவம்சார் கல்வி

எஸ். மணிவாசகம்

மருத்துவத்தில் வியத்தகு சாதனை புரிந்து வரும் நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு கல்விகள் கூடுதலாக தேவைப்படுகின்றன.

மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.) போன்ற படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இன்றளவும் உள்ளன.

தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர அனைவராலும் முடிவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1545 இடங்களும், தனியார் கல்லூரிகள் 5-ல் மொத்தம் 420 இடங்களும் மட்டுமே உள்ளன.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம், பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இயலாத மாணவர்கள் பயனடைவதற்கு ஏற்றவகையில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளை அதிக இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

ஓராண்டு சான்றிதழ் படிப்புகள், 2 ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள், 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்புகள் போன்றவற்றை உருவாக்கி ஏழை மாணவர்களும் மருத்தும் சார்ந்த கல்வி பயில வழிவகுக்க வேண்டும். இதற்கு ஏதுவாக பாடத்திட்டம், கல்விக் கட்டணம் அமைய வேண்டும். குறைந்தபட்சக் கல்வித்தகுதியையும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போதும் சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடியாகச் சேர்ந்து மருத்துவம்சார் படிப்புகள் பயில்வதற்கு 27 சான்றிதழ், டிப்ளமோவும், தொலைதூரக் கல்வி முறையில் பயில்வதற்கு 12 சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை போதாது. இன்னும் பல படிப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

மருத்துவத் துறையில், செவிலியர், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வுக்கூடம், கண் மருத்துவம், மருந்து தயாரிப்பு, அறுவைச் சிகிச்சை அரங்க தொழில்நுட்பம், பிசியோதெரபி தாய்மை மற்றும் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மற்றும் பராமரித்தல், நரம்பியல் புற்றுநோய், இதய நோய், எலும்பு முறிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, நீரிழிவு நோய், சருமநோய் போன்ற பற்பல துறைகளில் சான்றிதழ், டிப்ளமோ பட்டப்படிப்புகள் தொடங்க தீவிரம் காட்ட வேண்டும்.

பல் மருத்துவத்தில் கூட, முகச்சீரமைப்பு, பல் உருவாக்குதல் மற்றும் பொருத்துதல், பல் நோய்களிலிருந்து விடுபடுதல், அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பங்கள், பல் நோயாளிகளைப் பராமரித்தல் போன்ற துறைகளில்கூட சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தத் திட்டமிடலாம். மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறப்பான பணியும், ஊதியமும், வாழ்க்கை வசதியும், குடியுரிமையும் வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு அன்னிய மொழியை அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக அமையும்.

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணவும், அடிப்படை மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் கிராமப்புற மருத்துவப் பணியாளர்களையும் உதவியாளர்களையும் உருவாக்க வேண்டும்.

கிராமப்புறக் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், தாய்மையடைந்தோர், குழந்தை பெற்றவர்கள், கண் நோயாளிகள், சரும நோய் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் காச நோயாளிகள், வயதானோர், வறுமைக் கோட்டிற்கு கீழ்நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளை வழங்க உதவியாளர்கள் தேவை. இத்தகைய பணியாளர்களைத் தயார் செய்ய சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்புகள் தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ளது. விரைவில் உலகிலேயே முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையை எட்டிவிடும். இந்த முதியவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் நாம் உதவி செய்தல் வேண்டும்.

பிழைப்புக்காக தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, முதியவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களை நாடுகிறார்கள். இந்த முதியவர்களுக்காக, அவர்களின் கடைசி கால வாழ்க்கை சுகமாக இருக்க, முதியோர் காப்பகம் சம்பந்தமாக மருத்துவ ரீதியில் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை உருவாக்க சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம். வெளிநாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெற பல நோயாளிகள் தமிழகத்துக்கு வருகின்றனர். இதன்மூலம் தமிழகத்துக்கு பல்வேறு வகைகளில் வருவாய் கிடைத்து வருகிறது.

செவிலியர்களின் அன்னை, கைவிளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பெயரில் செவிலியர் மற்றும் மருத்துவம் சார் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் தொடங்கி ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம். செவிலியர் படிப்பில் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் தொடங்கலாம்.

அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ அமைய வேண்டுமெனில் மருத்துவம்சார் அறிவியல் படிப்புகள் அவசியம்.

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக எட்டமுடியாத மருத்துவ வசதிகளை இனியாவது ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும். இந்த நூற்றாண்டிலாவது அனைவருக்கும் “ஆரோக்கியமான வாழ்வு’ என்ற இலக்கை எட்ட மருத்துவ அறிஞர்களும், கல்வி நிலையங்களும், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இதற்கு மருத்துவம்சார் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகள் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

—————————————————————————————————————————-

“கிராமப்புற சேவை’யின் மறுபக்கம்

சி. கதிரவன்

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்கள்தான். ஆனால், கிராமங்களில் வசிக்கும் 72 சதவீத மக்களுக்கு நாடி பிடித்துப் பார்க்க ஆளில்லை என்கிறது ஓர் ஆய்வு.

கிராமப்புறங்களில் மருத்துவ சேவையை மேம்படுத்த வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அண்மைக்காலமாக பெரிய அளவில் இந்த விஷயம் பேசப்படுவது ஆரோக்கியமானதே. ஆனால், பேச்சு ஆக்கபூர்வமானதாக இல்லை என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

உண்மையில், கட்டாய கிராமப்புற மருத்துவ சேவையின் மறுபக்கம்தான் என்ன?

மருத்துவம் ஓர் இன்றியமையாத தேவை. மருத்துவக் கொள்கையைப் பொருத்த அளவில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. பிரிட்டன் மருத்துவத் துறையைத் தன் முழுப் பொறுப்பில் வைத்திருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதாரச் சேவை மிகச் சிறப்பானது. பொது மருத்துவத்துக்கான மொத்தச் செலவில் அந்நாட்டு அரசு 94 சதவீதத்தை தானே செலவிடுகிறது.

அமெரிக்கக் கதையோ வேறு. காப்பீட்டுத் திட்டங்கள் சார்ந்த மருத்துவ சேவை அங்கு பின்பற்றப்படுவதால் அரசுக்கும், பொது மருத்துவத்துக்கும் கிட்டத்தட்ட தொடர்பே இல்லை.

நம் நிலைதான் பரிதாபத்துக்குரியது. மொத்த ஆண்டு வருவாயில் மத்திய அரசு 1.3 சதவீதமும், மாநில அரசு 5.5 சதவீதமுமே மருத்துவத்துக்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவை இரண்டும் மருத்துவத்துக்காக நாம் செலவு செய்யும் மொத்தத் தொகையில் கால் பகுதியே ஆகும்.

இந்நிலையில், இந்திய மருத்துவத்துறை வேகமாக தனியார்மயமாகி வருகிறது. மக்கள்தொகைப்படி நமது நாட்டில் 40 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் 14 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலிப் பணியிடங்கள். பெரும்பாலான அரசு மருத்துவக் கல்லூரிகள் பேராசிரியர்கள் இன்றி தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் மட்டும் வேலைவாய்ப்பகத்தில் 15 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்து, வாய்ப்பின்மையால் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆயிரம் கிராமங்களில் மக்களின் நாடி பிடித்துப் பார்க்க மருத்துவர் இல்லாத நமது நாட்டில், நகரங்களை நோக்கிய தொலை மருத்துவ மையங்களின் வருகையின் நோக்கத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மருத்துவத்தை அமெரிக்கப் பாணியில் முழுவதும் தனியார்மயமாக்குவதன் தொடக்கமே “கார்ப்பரேட் கிளினிக்குகள்’ நகரங்களை நோக்கி வருவதும் நகரங்களிலிருந்து மருத்துவ மாணவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்படுவதும்.

கட்டாய கிராமப்புற சேவைத் திட்டம் என்றால் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பு மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அந்த ஓர் ஆண்டில் 4 மாதம் ஆரம்பச் சுகாதார நிலையம், 4 மாதம் தாலுகா மருத்துவமனை, 4 மாதம் மாவட்ட மருத்துவமனைகளில் என சுழற்சி முறையில் மாணவர்கள் பணியாற்றுவதுதான்.

இதில் முதல் முரண்பாடு என்னவென்றால், ஆண்டில் 8 மாதங்கள் கிராமப்புறம் அல்லாத இடங்களில் பணியாற்ற வைக்கப்படுவதுதான். இத்திட்டம் எப்படி கிராமப்புற சேவையாகும்?

உண்மை என்னவென்றால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைப் பெயரளவில் நிரப்பும் அரசின் குறுக்கு வழியே இது. உள்ளபடியே இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவத் துறையும் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நான்கு முறை நடைபெற்றது. இது இதுவரை மருத்துவத்துறை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும். இதில் முதலாமாண்டு மாணவர்களில் 131 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு மற்ற தொழிற்படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.

வேலூர், கன்னியாகுமரி, தேனி மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள், உள் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியையே பெற முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 21 மருத்துவக் கல்லூரிகளில் ஒரு சில கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் இதே நிலைதான். நாட்டிலேயே மருத்துவத் துறையில் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படும் தமிழகத்தின் நிலையே இது என்றால் மற்ற மாநிலங்களின் நிலைமையை சொல்ல வேண்டியதில்லை.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கொண்டு வர முனையும் திட்டத்தை நாம் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது. 2006-ல் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் கிராமங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 800 மருத்துவர்களைப் பணி நியமனம் செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. அதற்கு 12,000 மருத்துவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதிலிருந்தே மருத்துவர்கள் கிராமங்களுக்குச் செல்லத் தயங்குகிறார்களா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

உள்ளபடியே கிராமப்புற மருத்துவ சேவைதான் அரசின் பிரதான நோக்கம் என்றால் அதற்குச் செய்ய வேண்டிய செயல்திட்டங்கள் நிறையவே இருக்கின்றன.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தவுடன் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பட்ட மேல்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். எந்தெந்த ஆரம்பச் சுகாதார நிலையங்ளுக்கு மருத்துவர்கள் இல்லையோ அப் பணியிடங்களுக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக கிராமப் பகுதிகளில் இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டும்.

மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆரம்பச் சுகாதார மையங்களும் மக்கள்தொகைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். தொடக்க நிலை சுகாதார மேம்பாட்டுக்கென கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் வாழ்வுரிமையைப்போல அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்து சட்டமியற்ற வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மீது கட்டாய கிராமப்புற சேவையைத் திணிப்பது ஒன்றே இப்பிரச்னைக்குத் தீர்வு என திசை மாற்றுவதைவிடுத்து அரசு உண்மையாக, ஆக்கபூர்வமான செயலில் இறங்க வேண்டும்.

Posted in abuse, Admissions, ADMK, AIIMS, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Anna, Anniyan, Assets, BE, Bribes, BTech, Caste, Chemical, Chennai, Chettinaadu, Chettinadu, Civil, Coimbatore, Colleges, Combatore, Community, computers, Corruption, DMK, Doc, doctors, Donations, DOTE, ECE, Education, EEE, Electrical, Electronics, Engg, Engineering, Expense, Exploit, Gentleman, Healthcare, IIT, Instru, Instrumentation, Interest, kickbacks, Kovai, Kulasegaram, Kulasekaram, Kumudam, Kumudham, Loans, MBBS, MD, medical, MMC, Moogamibigai, Moogamibikai, Mookamibigai, Mookamibikai, Operation, Perundhurai, Perundurai, Perunthurai, PMK, Poor, professional, PSG, Quota, Ramadas, Ramadoss, Rates, RBI, REC, Rich, SBI, Schools, service, Shankar, Sivaji, Software, Students, Study, surgery, Technology, University, Wealthy | 2 Comments »

Health ministers meeting on polio eradication on June 6

Posted by Snapjudge மேல் ஜூன் 3, 2007

போலியோ பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அழைப்பு

புது தில்லி, ஜூன் 3: போலியோ பாதித்த 10 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போலியோ குறித்து ஆராயவும், வரும் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்க இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் ஜூன் 6-ம் தேதி தலைநகர் தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து தேசிய போலியோ ஒழிப்பு திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு நாடுமுழுவதும் 60 பேருக்கு போலியோ பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  • உத்தரப் பிரதேசம்,
  • பிகார்,
  • தில்லி,
  • ஹரியாணா,
  • பஞ்சாப்,
  • குஜராத்,
  • ராஜஸ்தான்,
  • ஆந்திர பிரதேசம்,
  • மகாராஷ்டிரம் மற்றும்
  • மத்திய பிரதேசம்

ஆகிய மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில்

  1. உ.பி.யில் 36 பேரும்,
  2. பிகாரில் 16 பேரும்,
  3. உத்தரகண்டில் 3 பேரும்,
  4. ஆந்திரத்தில் 2 பேரும்,
  5. ஹரியாணா,
  6. குஜராத்,
  7. மகாராஷ்டிரம்,
  8. ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 674 பேர் போலீயோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். இந்த ஆண்டு 66 பேருக்கு போலியோ இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்குமேயானால் உலக அளவில் நைஜீரியாவுக்கு அடுத்த படியாக போலீயாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.

உலக அளவில் இந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வரை போலியோவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 111 ஆகும். இதில் 54 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாவர்.

செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் இந்த போலியோ வைரஸின் தாக்கம் இருக்கும். போலியோவை கட்டுப்படுத்தும் பொருட்டு, தாக்கம் அதிகமாக உள்ள மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Posted in Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra, Andhra Pradesh, AP, Bihar, Delhi, Eradication, Gujarat, Haryana, Health, Healthcare, Immunization, Immunize, Madhya Pradesh, maharashtra, medical, MP, New Delhi, Nigeria, Outbreak, Polio, Prevention, Punjab, Rajasthan, Shot, UP, Utharkhand, Uttar Pradesh, Uttarkhand, Uttrakand | Leave a Comment »

Anbumani Ramadas Health Ministry, AIIMS Venugopal issue conflicting orders on CPRO

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007

அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

புதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

எய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’

புதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

துணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.

விதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.

பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Posted in Agitation, AIIMS, Allegation, Anbumani, Anbumani Ramadas, B K Dash, Chief Public Relations Officer, Clashes, Dean, Education, Educational, Ego, Employ, Employment, Experience, Fights, Government, Health Minister, Health Ministry, Institutes, Instructors, OBCs, P Venugopal, Petty, PMK, Procedures, Prof, Professor, Professors, Promotion, Public Relations, Ramadoss, rules, Teachers, tussle, Venugopal | Leave a Comment »

Dam across Palar will affect farmers: Jayalalithaa

Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்- ஜெயலலிதா அறிக்கை

சென்னை, ஜன. 30-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணையைக் கட்டப் போவதாகவும், அதற்கான பூமி பூஜையை பிப்ரவரி 1-ந் தேதி அன்று தொடங்கப் போவதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பெரும் நெருக்கடியும், பின்னடைவும், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவையும் சந்திக்க உள்ளார்கள்.

மேலும் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கும் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும்.

கர்நாடக மாநிலத்தோடு காவேரி தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்சினை, கேரளா மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்துவதில் பிரச்சினை, இப்போது பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதில் ஆந்திராவோடு புதிய பிரச்சினை தொடங்கி இருக்கிறது.

பாலாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகின்றது. அது கர்நாடகாவில் சுமார் 35 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 30 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது. ஆந்திராவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் பாலாறு பாய்கின்ற வழியில், “குப்பம்” என்ற பகுதியின் வழியாக தமிழ்நாட்டை வந்தடைந்து, செங்கல்பட்டு அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் அருகில் கடலில் கலக்கிறது.

தமிழ்நாட்டில் பாலாறு பாய்கின்ற தூரம் சுமார் 140 கிலோ மீட்டர் ஆகும். அந்த 140 கிலோ மீட்டர் தூரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு ஜீவாதாரமாகப் பல்வேறு வகையில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் வசதி ஆகியவைகளை பாலாற் றின் வாயிலாகத்தான் அந்தந்த மாவட்ட மக்கள் பயன் பெறுகிறார்கள். கல்பாக்கம் அணு உலைக்கான நீர் ஆதாரமே பாலாறுதான். அந்த ஆற்றின் அமைப்பின்படி தமிழக நதிகளிலேயே பாலாற் றில்தான் நிலத்தடி நீர் அதிக மாக உள்ளது.

நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுக்கின்றது என்ற தகவல் கிடைத்தவுடனே, அவ்வாறு செய்யக்கூடாது என்று ஆந்திர முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் உடனே அழைத்துப் பல மணி நேரம் பல்வேறு முறை விரிவாக விவாதித்து 2006 பிப்ரவரி மாத இறுதி வாக்கில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதி மன்றத்தில் அசல் வழக்கு ஒன்றினை தமிழக அரசின் சார்பில் ஆந்திர அரசுக்கு எதிராக தாக்கல் செய்ய வைத்தேன்.

இவ்வழக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம்தான் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வழக்கின் கோப்புகள் தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட உச்சநீதி மன்ற வழக்கறிஞர்களுக்கு மாற்றப்பட்டது.

தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் ஆற்காடு வீராசாமி ஆகியோர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாலாறு விஷயத்தில் இவர்கள் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பாலாறு பிரச் சினை சம்பந்தமாக அமைச் சர் துரைமுருகன் பேசும்போது, “உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்று சொல்லி இருந்தார். அதாவது இனிமேல்தான் வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவருக்கு இப்பிரச்சினை சம்பந்தமாக எனது ஆட்சிக் காலத்திலேயே உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள விவரம் கூடத் தெரியவில்லை.

ஆற்காடு வீராசாமி பேசும்போது, “தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜாவிடம் சொல்லி, பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின் அனுமதியைத் தராமல் தடுத்திடுவோம்” என்றார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராஜா அனுமதி தராமலா, ஆந்திர அரசு இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடான 270 கோடி ரூபா யில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும்ப

மத்திய அரசின் அனு மதியைப் பெறாமல் இத்திட்டத்திற்கு ஆந்திர அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என்பது, ஒரு பரமரனுக்குக் கூடத்தெரியும். ஆனால் பல முறை அமைச்சராக இருந்திருக் கின்ற ஆற்காடு வீராசாமிக்கு தெரியாமல் போனதுதான் மிகவும் வேதனையாகவும், வியப்பாகவும் இருக்கிறது.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட மக்களின் உயிர் நாடிப்பிரச்சினைக்குக் கூட முக்கியத்துவம் தராமல், ஆந்திர மாநிலத்திற்கு சாதகமாக தடுப்பு அணை கட்ட அனுமதி கொடுத்த மத்திய மந்திரி ராஜா, தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

பா.ஜ.க. கூட்டணி மத்திய ஆட்சியில் அ.தி.மு.க. மந்திரிகள் பங்கேற்றபோது, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்ய வற்புறுத்திய போது அதற்கு பணிய மறுத்து எனது கட்சி மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லி, தமிழக மக்கள் நலனே முக்கியம் என்று கருதி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டேன்.

ஆந்திர முதல்-அமைச்சராக இருக்கும் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர். எனவே பாலாற்றில் தடுப்பு அணை கட்டுவதற்கு சோனியாகாந்தி மூலம் மத்திய மந்திரி ராஜாவிடம் அனுமதி பெற சிரமம் ஏதும் அடைய வாய்ப்பில்லை. மத்திய ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜாவும் தமிழக மக்களின் நலனைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி. மாநிலத்திலும் தி.மு.க.வின் ஆட்சி. ஆனால் விவசாய மக்களின், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கோடான கோடி மக்களை பாதிக்கும் விஷயங்களில் தி.மு.க. எந்த உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

3 அண்டை மாநிலங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மிகச் சாதூரியமான, சாணக்ச யத்தனமான, துணிச்சலான அணுகுமுறைகள் தேவை. எப்போது தி.மு.க. இந்த விஷயத்தில் வியாபார நோக்கோடு நடந்து கொள்ள ஆரம்பித்ததோ, அப்போதே தமிழகத்தின் நலன் பறிபோய் விட்டது. கருணாநிதி தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்கப் போகிறாராப என்பதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை எதுவும் கட்டவில்லை: ஜெயலலிதாவுக்கு துரைமுருகன் பதில்

சென்னை, ஜன. 31-

பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்டப்போவதாக அ.தி.மு.க. பொதுச்செயலார் ஜெயலலிதா அவரது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் ஆந்திரஅரசு தடுப்பனை ஒன்று கட்டுகின்ற பிரச்சினை குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு தடுப்பு அணை கட்ட முயற்சி செய்கிறது என்ற செய்தி வந்தபோதே சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வேலூர் மாவட்டத்திலும் இந்த பிரச்சினை குறித்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன்.

ஏன், வேலூர் மாவட்ட மக்களின் ஆர்ப்பாட்டமே என் தலைமையின் கீழ்தான் நடந்தது. அன்று இந்த பிரச்சினை குறித்து மெத்தனமாக இருந்துவிட்டு உப்புக்கு சப்பாணி என்பது போல பெயருக்கு ஒரு வழக்கு உச்சநீதி மன்றத்தில் கொடுத்து விட்டு அதிலும் நமக்கு உள்ள உரிமைகளை எடுத்து வைக்காமல் பின்னர் அந்த வழக்கு என்னவாயிற்று என்று திரும்பியும் பார்க்காமல் வீட்டுக்கு போனவர் ஜெயலலிதா.

இந்த பிரச்சினை குறித்து ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டத்துக்கு ஓய்வு எடுக்க பல முறை சென்ற ஜெயலலிதா ஆந்திர முதல் மந்திரியிடம் அப்போது ஒரு முறையாவது விவாதித்தது உண்டாப

இல்லை எந்த அமைச்சரை யாவது ஆந்திராவிற்கு அனுப்பியது உண்டா?

ஆனால் கலைஞர் ஆட்சி அமைந்த பின் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் பொன்முடியும் ஐதராபாத் சென்று அந்த மாநில முதல் மந்திரியை சந்தித்து தடுப்பணை விவகாரமாக விவாதித்தது ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே மறந்து விட்டதா?

எந்த நடவடிக்கையும் ஆந்திரா அரசு இந்த பிரச்சினையில் எடுக்காது அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது குறித்து தமிழகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியபின்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அந்த மாநில முதல் மந்திரி அன்று தமிழக அமைச்சர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அதையும் மீறி தடுப்பணை கட்ட முயன்றதாக செய்தி வந்ததும் நானே ஆந்திர நீர்பாசன துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஆந்திர அரசோடு தொடர்பு கொண்டு இது குறித்து பேசி வருகிறார்.

தமிழக அரசு பொதுபணி துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டப்படும் என்று கூறப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று விசாரித்து உண்மை நிலையை அறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

ஆந்திர அரசு அப்படியொரு தடுப்பணையை கட்ட அதிகாரப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி அண்டை மாநில உறவு கெடாமல் தீர்வு காண்பதற்கு பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திர அரசு ஜெயலலிதா திராட்சை தோட்டத்தில் கைவைத்து விட்டது என்று செய்தி வந்ததும் அறிக்கை விடுகிறார். பாலாற்றில் தடுப்பு அணை கட்டுகிறது என்றும் அதை தமிழக அரசு தடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார். உண்மையான விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்வது என் பார்களே அது போன்ற நிலையில் விவாதத்தில் கலந்து கொள்வது ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான்.

சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்குவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசியதாகவும் அதற்காக உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை குறித்து தொடுக்கப் பட்ட வழக்கை வாபஸ் பெற்றோம் என்று தி.மு.க மீது பழிபோட்டு பேரவையில் அறிவித்துவிட்டு உடனடியாக காங்கிரஸ் கட்சி தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் குறுக்கிட்டு அது தவறான தகவல் என்று கூறியதும் நானும் மனுஷி தானே தவறாக பேசி விட்டேன் நாக்கு தவறிவிட்டது என்று சட்டமன்றத்தில் பேசி மன்னிப்பு கேட்டவர்தான் இந்த ஜெயலலிதா. ஒன்று மட்டும் ஜெயலலிதா உணரவேண்டும். இந்த பிரச்சினை ஜெயலலிதாவுக்கு ஒரு அரசியல். ஆனால் எங்கள் மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் உயிர் பிரச்சினை, உரிமை பிரச்சினை நாங்கள் இந்த பிரச்சினையில் எப்படி இருப்போம் என்று நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆந்திரத்தில் பாலாற்றில் அணை கட்டும் இடத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

வேலூர், பிப் . 2: ஆந்திர மாநிலம், குப்பம் கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டப்படவுள்ள பகுதியில் வியாழக்கிழமை பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூரிலிருந்து 15 கார்களில் குப்பம் கிராமத்திற்கு வந்த பாமக-வினர் 120 பேர், அணை கட்டும் மலைப்பகுதிக்கு கண்டன கோஷமிட்டபடி ஊர்வலம் போலச் சென்றனர். அணை கட்டப்படவுள்ள பகுதியில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பாமகவினர் வருகையை தெரிந்துகொண்ட சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராம ரெட்டி காவல்துறை அதிகாரிகளுடன் வந்து, பாமகவினரிடம் கடுமையாக வாதிட்டார்.

இப்பகுதியில் மிகமோசமான குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. அதற்காக அணை கட்டியே ஆகவேண்டும். நீங்கள் தமிழக அரசியல் காரணங்களுக்காக இங்கே வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். ஆந்திர மாநில காவல்துறை அனுமதியின்றி, தகவலும் தெரிவிக்காமல் வந்திருக்கிறீர்கள் என்று வாதிட்டு, வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜி.கே.மணி, இந்தப் பிரச்சினை தமிழகத்தில் 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் என்பதால் நாங்கள் அக்கறையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று அவரிடம் கூறினார்.

ஜெயராம ரெட்டியுடன் வந்தவர்கள், பாமகவினர் அப்பகுதியில் உள்ள மரங்களிலும், பாறைகளிலும் கட்டி வைத்திருந்த கொடிகளை எடுத்துக் கீழேபோட்டனர். ஆந்திர மாநில காவல்துறையினர் தலையிட்டு, பிரச்சினை பெரிதாகாமல் தடுத்தனர். பாமகவினருக்குப் பாதுகாப்பாக தமிழக எல்லை வரை வந்தனர்.

இதுகுறித்து ஜி.கே மணி கூறியது:

ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ.க்குள் 12 தடுப்பணைகளை ஏற்கெனவே உள்ளன. தற்போது குப்பம் பகுதியில் 110 மீட்டர் உயரத்தில் தடுப்பணையை கட்ட ஆந்திர அரசு கட்டவுள்ளது. வியாழக்கிழமை எளிய முறையில் அடிக்கல் நாட்டவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் இங்கு வந்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்தபோது அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேரடியாக சந்தித்து, பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்து, திட்டத்தைக் கைவிடச் செய்வதுதான் பாமகவின் நோக்கம்.

நாங்கள் அணை கட்டவுள்ள பகுதியை வியாழக்கிழமை காலை பார்வையிட்ட போது, பாலாற்றின் குறுக்கே, அணை கட்டும் இடத்துக்குச் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு, பாறைகளில் பல இடங்களில் துளை இடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆந்திர அரசு இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் சொல்வது பழைய செய்தி என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எல். இளவழகன் (ஆர்க்காடு), டி.கே.ராஜா (திருப்பத்தூர்), மாநில துணைத் தலைவர் எம்.கே. முரளி, மாநில மகளிரணி தலைவி நிர்மலா ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், வேலூர் மாவட்ட பொருளாளர் கவிதா கோவிந்தன் உள்ளிட்டோர் பங்குகொண்டனர்.

பாலாற்றில் அணை: குப்பம் பகுதிக்குள் தமிழர்கள் நுழைந்தால் கைது செய்வோம்- ஆந்திர போலீஸ் அதிகாரி எச்சரிக்கை

பள்ளிப்பட்டு, பிப். 2-

வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட தமிழகத்தின் 5 வட மாவட்டங்களில் பாலாறு ஓடுகிறது. இந்த ஆறு ஆந்திராவில் இருந்து வருவதால், அவர்கள் தண்ணீர் திறந்து விட்டால்தான் பாலாற்றில் தண்ணீர் வரும். ஆந்திர மாநில எல்லைக்குள் பாலாற்றில் 20 கி.மீ. தூரத்தில் மட்டும் 12 தடுப் பணைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது குப்பம் அடுத்துள்ள கணேசபுரத்தில் 110 மீட்டர் உயரத்தில் பெரிய அளவில் அணை ஒன்றை கட்ட உள்ளது. இந்த அணை கட்டினால் தமிழக பகுதியில் ஓடும் பாலாறு வறண்டு விடும் அபாயம் உள்ளது.

வேலூர் உள்பட 5 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணை கட்டுவதை தடுக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேலூரில் 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பாலாற்றில் அணை கட்டும் பகுதிக்குள் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை அறிந்ததும் சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

பாலாற்று பகுதியில் உள்ள மரங்களில் பா.ம.க. வினர் தங்கள் கட்சிக் கொடிகளையும், “பாலாற்றில் அணை கட்டாதே” என்ற எதிர்ப்பு வாசகங்களையும் கட்டினார்கள். இதைப் பார்த்ததும் ஆத்திரம் அடைந்த ஆந்திர விவசாயிகள் பா.ம.க.வினர் கட்டிய எதிர்ப்பு வாசகங்களை ஆவேசத்துடன் பிடுங்கி எறிந்தனர். கட்சி கொடிகளை சரமாரியாக கிழித்துப் போட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆந்திர உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஜி.கே.மணியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, “நாங்கள் இங்கு 110 மீட்டர் உயரத்தில் பெரிய அணை ஒன்றை கட்டியே தீருவோம்” என்றனர்.

பாலாற்றில் அணை கட்டும் பகுதி பதட்டமாக இருப்பதால் அங்கு ஆந்திர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்ட உள்ள குப்பம் தொகுதிக்குள் தமிழர்கள் யாராவது சித்தூர் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் நுழைந்தால் உடனே கைது செய்வோம்.

கணேசபுரம் பகுதியில் தமிழர்கள் கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம் வீணாக இங்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது. தமிழர்கள் பாலாற்று பகுதிக்குள் நுழைந்ததால் ஆந்திர விவசாயிகள் கொதிப் படைந்துள்ளனர். இதனால் நாங்கள் தமிழக எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்யவும் ஆந்திர போலீசார் அறிவு றுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாலாற்றில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது. குப்பம் தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டது.

தற்போது அடிக்கல் நாட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அணை கட்டும் பணியை தொடங்கி விடுவோம். எங்களுக்கு மாநில மக்களின் நலன்தான் முக்கியம். இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் இனியும் இந்த அணை கட்டும் திட்டத்தை தாமதப்படுத்த மாட்டோம்” என்றார்.

பாழாகும் பாலாறு

இராதாகிருஷ்ணன்

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்பல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென்பகுதியில் தோன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது.

தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

காவிரிப்பாக்கம் ஏரி மிகப் பெரியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், கொர்த்தலையாறு எனும் பெயரோடு கிழக்கில் பாய்கிறது. அது பயணிக்கும் வழியில் திருத்தணி கையாறு, நகரியாறு போன்றவற்றின் நீரைப் பெற்று, தற்போது சென்னைக்கு வடகிழக்கில், எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் சிலர், இக்கொர்த்தலையாறு பாயும் காவேரிப் பாக்கத்துப் பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் பாலாறு பாய்ந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். இன்றைக்கும் பழைய பாலாறு என்ற பெயரில் சிற்றாறு ஒன்று இங்கு உள்ளது. அது கொர்த்தலையாற்றுப் படுகையையும் பாலாற்றுப் படுகையையும் இணைக்கும்படி அமைந்துள்ளது. இந்த சிற்றாறு சதுரங்கபட்டணம் அருகில் கடலில் சேர்கிறது. தமிழகத்தில் 140 கி.மீ. ஓடுகிறது.

கலிங்கத்துப்பரணியில் முதல் குலோத்துங்கனின் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான், காஞ்சியிலிருந்து கலிங்கத்திற்கு படையெடுத்துச் செல்லும்போது பல ஆறுகளைக் கடந்து சென்ற செய்தி பாடலின் வழி தெரிவிக்கப்படுகிறது. அதில் அவன் கடந்த முதல் ஆறு “பாலாறு’ என்று காட்டப்படுவதால், காஞ்சிக்கு வடக்கில் கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் பாலாறு பாய்ந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய சான்றுகள் மூலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை பாலாறு, காஞ்சிக்கு வடக்கில் உள்ள திருமாற்பேறு, வடகிழக்கில் உள்ள திருப்பாசூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில் வழியாகச் சென்று சென்னைக்கு வடக்கே உள்ள எண்ணூருக்கு அருகில் கடலில் கலந்து இருக்குமெனத் தெரிகிறது.

ஆனால் இன்று பாலாறு, சென்னைக்குத் தெற்கே எங்கோ மாற்றம் கண்டிருக்கிறது. தற்போது பாலாறு பெரும்பாலும் வறண்டு போய், கனமழை பெய்தால் நீர் வரும் ஆறாக மாறியிருக்கிறது. வரும் கொஞ்ச நஞ்ச நீரையும் தமக்கே தேக்கி வைக்க ஆந்திர எல்லையில் அணை கட்டும் வேலையில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது.

800 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வடக்கிலும், தற்போது சென்னைக்குத் தெற்கில் பெயரளவில் நீர் பாயும் தடத்தையும் கொண்டிருக்கும் பாலாறு, மனிதர் மனத்தால் இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழகத்தில் இப்படி ஓர் ஆறு இருந்தது என்று ஆராய்ச்சிக் கட்டுரையை யாரேனும் எழுதத் தூண்டலாம். இந்தத் துயர நிலையில் பாலாற்றுப் பிரச்சினையில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

ஆந்திர அரசு, தமிழகம் பாதிக்கக்கூடிய அளவில் சித்தூர் மாவட்டத்தில் குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. கோலார் மாவட்டத்தில் துர்கா பகுதியில் உற்பத்தியாகி கர்நாடகத்தை அடுத்து ஆந்திரம் வழியாக தமிழகம் வருகிறது பாலாறு. பாலாற்றுப் படுகையில் உள்ள 11 ஆயிரம் கி.மீ பரப்பில் உள்ள தமிழக விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாற்று மூலம் பாசன வசதிகளைப் பெறுகின்றன.

ராணிப்பேட்டைக்கு அருகில் அணை கட்டப்பட்டு இந்த அணையிலிருந்து மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சங்கரமல்லூர், தூசி என்ற நான்கு கால்வாய்கள் மூலம் பாசன நீர் கொண்டு செல்லப்படுகிறது. பல இடங்களுக்கு குடிநீர் வசதியும் பாலாறு மூலம் நீர்வரத்து கிடைக்கின்றது என்று கணக்கிடப்பட்டாலும் பாலாற்றின் நீர்வரத்து மழைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். பல சமயங்களில் தேவையான தண்ணீர் கூட வருவது இல்லை.

ஏனெனில் கர்நாடகமும் ஆந்திரமும் பாலாறு வரும் வழியில் வருகின்ற தண்ணீரை தாங்களே பயன்படுத்திக் கொள்கின்றன.

1850ல் இந்த ஆற்றின் குறுக்கே மண்ணாலான அணையைக் கட்டி காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீரைக் கொண்டு சென்றனர். நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு 1855-ல் ஒரு நிலையான அணையைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. 1855ல் கட்டப்பட்ட அணை 1874ல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்தது. 1877ன் இறுதியில் வறட்சிப் பணிகளின் காரணமாக பாலாறு அணையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1920-ல் மைசூர் அரசாங்கம் திடீரென (சென்னை மாகாண – மைசூர் அரசாங்க) ஒப்பந்தத்தை மீறி புது ஏரிகளை உருவாக்கி பாலாற்று நீரைத் தடுத்து விட்டது.

இப் பிரச்சினை குறித்து சென்னை மாகாணக் கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. அதன்பின்பு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கர்நாடக அரசு அணைகள் கட்ட நீரைத் தடுத்து விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

இதுகுறித்து சென்னை அரசு மைசூர் அரசிடம் புகார் தெரிவித்ததும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திட்டமிட்டு மைசூர் அரசு பாலாறில் ஓடிய தண்ணீரை வறண்ட நிலைக்கு உள்ளாக்கி விட்டது.

1802ல் சென்னை மாகாணம் – மைசூர் அரசுகளுக்கிடையே ஓடும் நதிகளின் நீரை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஏற்பட்ட உடன்பாட்டின் 2வது பிரிவில் சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிகளில் புதிய அணைகளையோ நீர்த்தேக்கங்களையோ அமைக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டது. மொத்தம் 15 முக்கிய நதிகள் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நதிகளில் 8வது நதியாக பாலாறு இடம் பெற்றது. இவ்வாறு உடன்படிக்கை இருந்தும் கர்நாடக அரசு தொடக்கத்திலிருந்தே உடன்படிக்கைக்கு மாறாக நடந்து வந்து கொண்டிருக்கிறது.

1954-ல் வடஆற்காடு – செங்கல்பட்டு விவசாயிகள் மாநாட்டில் பாலாற்று பிரச்சினை குறித்து தீர்மானத்தில் “”100 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினையில் தீர்க்க வேண்டுமென்று மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தினர்”.

தென்பெண்ணை பாலாறில் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் பாழ் மண்ணாகத்தான் இருக்கின்து. இந்நிலையில் ஆந்திரத்தை ஆளும் காங்கிரஸ் அரசு ரூ. 250 கோடி செலவில் 160 அடி உயரத்தில் கணேசபுரம் அணை கட்ட பணிகளைத் துவக்கி விட்டனர்.

இந்த அணையின் மூலமாக ஆந்திரப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியை ஒட்டியுள்ள 120 கிராமங்கள் பயன் பெறும். மேலும் இங்கு கால்வாய்கள் வெட்டப்பட்டு சித்தூர் – திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலை நீடித்தால் தமிழகத்துக்கு பாலாறு மூலம் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் தேக்க முடியாத மழைநீர்தான் எதிர்காலத்தில் கிடைக்கும். நியாயமற்ற முறையில் அணை கட்டப்படுவதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்த்தும் மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருவது அதிருப்தி அளிக்கிறது.

(கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்).

பாலாறு விவகாரம்: கருணாநிதிக்கு ஆந்திர முதல்வர் உறுதி

சென்னை, பிப். 5: தமிழக அரசைக் கலந்து பேசாமல் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்க மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலம் உறுதி அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில், குப்பம் பகுதியில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணை ஒன்றைக் கட்ட, அந்த மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக வரும் செய்தி குறித்து தமிழக முதல்வர் பிப்ரவரி 1-ம் தேதி ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை ஆந்திர முதல்வருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசினார். அப்போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எடுத்துவரும் முயற்சி குறித்து பேசினார்.

அப்போது, “”ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஹைதராபாதுக்கு வந்து சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த உறுதி மொழி காப்பாற்றப்படும்.

அவர்களிடம், கூறியபடி, தமிழக அரசை கலந்து பேசாமல் தடுப்பணை கட்டும் விஷயத்தில் ஆந்திர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு பாதிக்கின்ற வகையில் ஆந்திர அரசு ஈடுபடாது.

இந்தப் பிரச்சினை தொடர்பான அனைத்து விவரங்களையும் தனது நேரடி கவனத்திற்குக் கொண்டு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். அத்துடன் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு தினங்களில் விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பவிருப்பதாகவும் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.


பாலாற்றில் அணைகட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு

09 ஏப்ரல், 2007

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரா வழியாக தமிழ்நாட்டிற்குள் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்டினால், அதை சட்ட ரீதியாக எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி தமிழக அரசு சந்திக்கும் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், ஆந்திர அரசு, தமிழக எல்லையை ஒட்டிய சித்தூர் மாவட்டம் குப்பம் என்கிற இடத்திற்கு அருகே பாலாற்றின் குறுக்கே அணைக் கட்ட போவதாகவும், இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆந்திர அரசு இந்த அணையை கட்டினால், தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப் படும். என்றும் கவலை தெரிவித்தனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன்
தமிழக அமைச்சர் துரைமுருகன்

இதற்கு பதிலளித்துபேசிய துரைமுருகன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு மிகவும் அக்கறையுடன் முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் ஆந்திரா சென்று அம் மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசியதாகவும், அப்போது தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று ஆந்திர முதல்வர் உறுதி அளித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

நேற்று முன்தினம் இந்திய தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வரை சந்தித்து பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படுவதாக வெளியான செய்திகள் பற்றி தாம் கேட்ட போது, அடிக்கல் நாட்டுவதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் முழு விவரம் தெரிந்ததும் தம்மிடம் தெரிவிப்பதாக ஆந்திர முதல்வர் தம்மிடம் தெரிவித்ததாகவும் துரைமுருகன் கூறினார்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்திவருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை, திண்டிவனம் அருகே செண்டூர் கிராமத்தில் 17 பேர் பலியான வெடிவிபத்து பற்றி விசாரிக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எப்.பாரூக்கி, விபத்துக்குள்ளான ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பது குறித்தும் விசாரிப்பார் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பாக இன்று பேசிய எதிர் கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இந்த சம்பவத்திற்கு காரணமான வெடிமருந்து எம்மாதிரியான வெடிமருந்து என்பதையும் பாரூக்கி ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, தமது அரசு இந்த விடயத்தில் எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், இந்த வெடிவிபத்துக்கு காரணமான வெடிமருந்து எந்த வகையைச்சேர்ந்தது என்பதையும் பரூக்கி விசாரிப்பார் என்றும் அறிவித்தார்.

 

——————————————————————————————————
மெல்லச் சாகிறது பாலாறு

எம். மதனகோபால்

வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் – பாலாறு.

இந்த ஒரு நதியை நம்பி விவசாயமும் குடிநீர் வழங்கலும் தொழிலும் தடையின்றி நடைபெற்ற காலம் மறைந்து, இன்று தோல் தொழிலுக்கு மட்டுமே பாலாறு என்ற நிலைமையே மேலோங்கி இருக்கிறது.

மழைக்காலத்தில் பாலாற்றின் வெள்ளப் பெருக்கு தொண்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை நிரப்புவதாலும், நிலத்தடி நீரை உயர்த்துவதாலும் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்துவந்தது.

தற்போது ஆந்திர அரசு தமிழகத்தின் எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டவுள்ளதால், தமிழகத்துக்கு கிடைத்துவரும் தண்ணீரில் ஆண்டுக்கு 450 மில்லியன் கனஅடி தண்ணீர் குறையும்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பது ஒருபுறம் இருக்க, குடிநீருக்கும் தட்டுப்பாடு உண்டாகும் என்பது நிச்சயம். தமிழகத்தில் தண்ணீர் வருவது கட்டுப்படுத்தப்படுவதால் ஏரி குளங்களுக்கு நீர் கிடைப்பது அரிது.

படிப்படியாக மூன்று மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத நிலைமை நிச்சயம் ஏற்படும். இதற்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

பாலாற்றில் மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தண்ணீர் ஊறி பல மாதங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்த நிலைக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலாற்றின் படுகையில் மணல் வரம்புமீறி அள்ளப்படுவதுதான்.

ஆனால் பாலாற்றில் உள்ள மணலை கொள்ளையடிக்கிறார்கள். இதில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே தகராறும், லாரிகள் மறிப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மணல் கொள்ளை நின்றபாடில்லை.

மிக நீண்ட தொலைவுக்கு வெள்ளை மணல் பரவிக்கிடந்த பாலாற்றுப் படுகையில் இப்போது புல்பூண்டுகள் முளைத்து செம்மண் நிலமாக காணப்படுகிறது. ஓர் ஆறு மறைந்து வருகிறது. இதற்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது?

மேலும் பாலாற்றுக் குடிநீர் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு, பழையசீவரம், வில்லியம்பாக்கம் பகுதி வழியாக குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த இடங்களில் உள்ள கிணறுகள் வறண்டு வருகின்றன. அதனால், இனிமேல் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிதண்ணீர் கிடைக்காது. அதனால், அப்பகுதி மக்கள் புதிய வீராணம், கிருஷ்ணா நதி குடிதண்ணீர் கிடைக்கும் இடங்களுக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும்.

இன்றைய சூழ்நிலையில் காஞ்சி நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்காலத்தில் முழுமையாக குடிதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு காஞ்சி நகர மக்கள் குடிதண்ணீருக்காக சென்னையில் குடியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.

பாலாற்றுக் குடிநீர் என்பது மற்றவகை குடிநீரைவிட இயற்கையிலேயே கிடைக்கும் நிலத்தடி நீராகும். மிகவும் சுத்தமானது; சுவையானது.

இயற்கையாகவே கிடைக்கும் சுத்தமான பாலாற்றுக் குடிநீர், தற்போது வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகளால் மாசுபட்டு இருக்கிறது. நிலத்தடி நீரும் கெட்டுள்ளது. பாலாற்றுப் படுகையையொட்டி நடத்தப்பட்ட ஆய்வுகளில் நிலத்தடி நீரில் ரசாயன நச்சு கலந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல்நோய், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகள் இவை.

இப்போதைய அரசு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையையும், ஆற்றில் ரசாயன நச்சுக் கழிவுகள் கலப்பதையும் தடுக்கும் வகையில், பாலாறு பாதுகாக்கப்பட்ட ஆறு என அறிவிக்க வேண்டும்.

பாலாறு தற்போது மத்திய அரசின் அட்டவணை-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அப்படியிருந்தும்கூட இந்த ஆறு பல்வேறு விதிமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பாலாற்றுக்குத் தனி முக்கியத்துவம் தந்து பாதுகாக்கப்பட்ட ஆறு என்ற அறிவிப்பை செய்யத் தவறினால் விவசாயம் முற்றிலும் இயலாததாக மாறுவதுடன் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகும்.

மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களும், தோல் தொழிற்கூடங்களும் கேட்கும் கேள்விகள்என்னவென்றால் – மணல் இல்லாவிட்டால் எப்படி கட்டுமானப் பணிகள் நடக்கும்? தோல் தொழிலால் ரூ.5000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. இவை தடைபட்டால் பல லட்சம் மக்கள் வேலை இழப்பார்கள் என்பதே!

மணல் கொள்ளையர்களும் தோல் தொழிற்கூட உரிமையாளர்களும் குடிநீரை விலை கொடுத்து வாங்கக் கூடும். நோய்களுக்கு மிகப் பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடும். ஆனால் சாதாரண மக்கள் குடிநீருக்கும் தோல் அல்லது புற்றுநோய் சிகிச்சைக்கும் வழியின்றி சாவது மட்டுமே நிச்சயம்.

எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் காரணம் காட்டி, அம்மக்களின் வாழ்க்கையை அழிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனமானது, நியாயமானது?

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

———————————————————————————————————–
ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டும் பணி தாற்காலிக நிறுத்தம்

வேலூர், ஆக. 9: பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பாமக தொடர்ந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ். ராவட் புதன்கிழமை கூறியதாவது:

ரூ. 55 கோடியில் கட்டப்படும் தடுப்பணை திட்டம் நீதிமன்ற நடவடிக்கையால் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குப்பம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த சிறிய திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு ஆந்திர அரசுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் 4 வழக்குகள் இந்த அணை கட்டுமானப் பணியை எதிர்த்து தொடரப்பட்டுள்ளன. ஒரு வழக்கு அதிமுக அரசும், மற்றொரு வழக்கு திமுக அரசும் தொடர்ந்துள்ளன. பொதுநல வழக்குகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் எம்.எம். பஷீரும் தொடர்ந்துள்ளனர்.

———————————————————————————————————–

Posted in A Raja, ADMK, Agriculuture, AIADMK, Analysis, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, Andhra Pradesh, AP, Arcot N Veerasamy, Backgrounder, Cauvery issue, Chennai, Chitore, Chittoor, Chittore, Chittur, Dam, Details, Developments, DMK, Duraimurugan, Environment Minister, Events, Farming, Floods, Future, Ganesapuram, GK Mani, Government, Happenings, History, Irrigation, Jayalalitha, Jayalalithaa, JJ, Kachipuram, KANCHEEPURAM, Kanchi, Kanjeepuram, Kerala, Kolar, Kuppam, Madras, MDMK, Mullai Periyar, Paalaar, Paalaaru, Paalar, Paalaru, Palar, PMK, Public Works, Public Works Department, PWD, PWD Minister, R&D, Rajasekara Reddy, Ramadas, Ramadoss, Research, River, solutions, Tamil Nadu, Thiruvalloor, Thiruvallur, Thiruvannamalai, TN, Vaaniyambadi, VaiKo, Vaniyambadi, Vellore, Water, YSR | 6 Comments »

‘First aid medical center & Telephone help lines along the National Highways’ – Anbumani

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2007

5 கி.மீ ஒரு டெலிபோன் `பூத்’ நெடுஞ்சாலைகளில் ரூ.1000 கோடியில் முதல் உதவி சிகிச்சை மையங்கள்: மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி தகவல்

சென்னை, ஜன.23-

மத்திய சுகாதாரதுறை மந்திரி அன்புமணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

மத்திய சுகாதாரதுறை தரை வழி போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் உதவி சிகிச்சை மையங்களை அமைக்க முடிவு செய்து உள்ளது.

ஒவ்வொரு 100கிலோ மீட்டர் தூர இடைவெளியில் முதல் உதவி சிகிச்சை மையம் நிறுவப்படும். ஒவ் வொரு 300கிலோ மீட்டர் தூர இடைவெளியில் சிறப்பு சிகிச்சை மையமும், ஒவ் வொரு 500 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் அதி நவீன சிகிச்சை மையமும் நிறுவப்படும். இதற்கான இடங்களை அடையாளம் காணப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைகளில் முதல் உதவி சிகிச்சை மையங்களை அமைக்க ரூ.1000 கோடியில் இருந்து ரூ. 2 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் தூர இடைவேளியில் டெலிபோன் பூத்தும் அமைக்க திட்ட மிட்டு உள்ளோம்.

உணவு மற்றும் மருந்து கலப்பட கூடத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வரும் இதன் மூலம் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.

எய்ட்ஸ், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று தவறாக விளம்பரப்படுத்தப் படுகிறது. இந்த விளம்பரத்திற்கு விரைவில் தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

Posted in AAA, Anbumani, Anbumani Ramadas, Anbumani Ramados, Anbumani Ramadoss, First Aid, Healthcare, Help line, Highways, Telephones, Transportation | Leave a Comment »

‘Anbumani Ramadas should be dismissed from Healthcare ministry’- Menaka Gandhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

அன்புமணியின் முதிர்ச்சியற்ற செயலால் அழியும் எய்ம்ஸ்: மேனகா

புதுதில்லி, நவ. 3: சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற செயலால் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அழிந்து வருகிறது என்று பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணியை சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் மேனகா காந்தி.

“அன்புமணியின் செயல்பாடுகள் மீது புகார் தெரிவித்து ஆயிரக்கணக்கான புகார் கடிதங்கள் உங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எம்.பி.க்கள் நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புமணியின் நடவடிக்கை மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீட்டிக்க நீங்கள் அனுமதிப்பது ஆச்சர்யமாக உள்ளது’ என்று கடிதத்தில் மேனகா குறிப்பிட்டுள்ளார்.

“அவரை பதவியில் இருந்து நீக்கினால் உங்களுக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி எனக்குப் புரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் மீது கருணை காட்டுங்கள். உங்களது அரசியல் லாபம் முக்கியமா? லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரமா? எது முக்கியம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ எனவும் அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Posted in AIIMS, Anbumani Ramadas, BJP, Cabinet, Healthcare, Menaka Gandhi, PMK, Ramadoss, Venugopal | 2 Comments »