Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Amartya’ Category

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

Shall we name the next President of India – Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் மே 1, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் கூற முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.

இந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவிட்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.

அப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.

கலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.

அரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்டு. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.

2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா? இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.

அரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.

தமிழில்: ப.ரகுமான்.

Posted in Advani, Amartya, Amartya Sen, Assembly, BJP, BSP, Chatterjee, Communist, Congress, Dalit, Election, India, Infosys, Kalam, Karan Singh, Kashmir, Lok Saba, Lok Sabha, Manmohan, Marxist, Mayawathi, MS Swaminadhan, MS Swaminathan, Narayanamoorthy, Narayanamurthy, Neeraja, Neeraja Chowdhry, Party, Politics, President, Punjab, selection, Shinde, Somnath, Sonia, Sushilkumar Shinde, Swaminadhan, Swaminathan, UP, Vajpayee, Vote | 1 Comment »