Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ads’ Category

The management of MRF Limited: lockout & strikes – Viduthalai Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் அணுகுமுறை மாறட்டும்!

சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூரில் கடந்த 43 ஆண்டுகாலமாக நடந்துவரும் எம்.ஆர்.எஃப். டயர் நிறுவனம் 3.12.2007 முதல் சட்ட விரோதமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 1500 தொழிலாளர் குடும்பங்கள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி சட்ட விரோதமாகக் கதவடைப்புச் செய்யப்பட்டுள்ளது.

சிறு முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்றைய தினம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், திறனும்தான்.

இந்த நிறுவனம் அய்ந்து கிளைகளோடு மிகுந்த இலாபகர மாக இயங்கிக் கொண்டு இருந்தும், தொழிலாளர்களை வதைப்பதில் ஏன் இவ்வளவு பேரார்வம் கொண்டு நிருவாகம் நடந்துகொள் கிறதோ தெரியவில்லை.

உரிமை கேட்டுக் குரல் கொடுத்ததற்காக தொழிற்சங்க நிருவாகிகள் இருவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல, தொழிலாளர்கள் 24 பேர்களும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு தொழிலாளர்களை வேலை நீக்கமே செய்துவிட்டது.

இதுகுறித்து தொழிலாளர் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 28.11.2007 அன்று தொழிலாளர் ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

(1) தொழிலாளர்கள் ஏற்கனவே அளித்து வந்த உற்பத்தி அளவினைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

(2) நிருவாகம் விசாரணையை நிலுவையில் வைத்து, இப்பிரிவுகளில் பணிபுரிந்த தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும்.

(3) புதிய இயந்திரம் நிறுவப்பட்ட எஃப் 270 பான்பரி பிரிவில் அதற்குரிய உற்பத்தி அளவு, தொழிலாளர்களின் எண்ணிக்கை நிர்ணயம் மற்றும் இதரத் தொடர்புடைய இனங்கள் குறித்து நிருவாகமும், தொழிற்சங்கமும் அதன் முன்னர் நடைபெறும் சமரசப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டு தீர்வு காண ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டது.

ஆனாலும், நிருவாகம் அரசின் இந்த ஆணையைப் பொருட்படுத்தவில்லை என்பதிலிருந்தே, இதில் அடாவடித்தனம் செய்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

28.11.2007 இல் தொழிலாளர் துறை ஆணையரின் ஆணை பிறப்பிக்கப்பட்டும் அதன்மேல் சீரான அணுகு முறையை மேற்கொள்ளாமலேயே தொழிலாளர்களைப் பழி வாங்கும் நோக்கத்தோடு நிருவாகம் கதவடைப்பு செய்து வருகிறது.

அரசின் ஆணையை நிறைவேற்றாமல் தடை செய்ய வழக்கம்போல நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையையும் பெற்றுள்ளது நிருவாகம்.

நாள்தோறும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக் குரல்களை எழுப்பி வருகிறார்கள். பல்வேறு தொழிற்சங்கத் தலைவர்களும் உரிமைக்குரல் எழுப்பி வருகின்றனர்.

எதற்கும் நிருவாகம் அசைந்து கொடுப்பதாகத் தெரிய வில்லை. இதன் காரணமாக தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை நாளும் வளர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக இது வேகப்படும்பொழுது பிரச்சினைகள் வேறு பரிணாமத்தை எட்டக்கூடும். அதற்கு நிருவாகமே பொறுப்பேற்கவேண்டி வரும்.

வேலை வாய்ப்பு என்பது இந்தியாவில் பெரும் பிரச்சினை யாக இருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கும் நிறுவனங்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்குமானால், அதன் விளைவு எங்கே கொண்டு போய் விடும் என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தொழிற்சங்கங்கள் இதனை ஏதோ தொழிற்சங்கப் பிரச்சினையாக மட்டும் கருதி, அந்த வட்டத்துக்குள்ளேயே இதுபற்றிப் பேசிக் கொண்டு இராமல் பொதுமக்கள் மத்தியிலும் கொண்டு செல்லவேண்டும்.

தொழிலாளர்கள் பொதுமக்களின் ஓர் அங்கம்தான். அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் மீது பொதுமக்களுக்கும் அக்கறை உண்டு என்று நிரூபிக்கவேண்டும். அப்பொழுது தான் ஆணவத்தோடு நடந்துகொள்ளும் முதலாளிகள் கொஞ்சம் அடங்கி வருவார்கள்.

மற்ற நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களும் எம்.ஆர்.எஃப். நிறுவனத் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க, போராட முன்வருவார்களாக!

Posted in Ads, Advt, Editorial, employees, Employers, Employment, Expenses, Jobs, lockout, Loss, Management, MRF, Poor, Productivity, Profit, Revenues, Rich, Strikes, Tyres, Union, Viduthalai, Work | Leave a Comment »

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Billboards – Advertising Planks: Dangerously hanging on top

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2007

தொடர்ந்து சரியும் விளம்பரப் பலகைகள்…

சென்னையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சரிந்து விழுந்த விளம்பரப் பலகை. (உள்படம்) காயமடைந்த ரெஜீனா.

சென்னை, டிச. 18: சென்னையில் விளம்பரப் பலகைகள் சரிவது தொடர் கதையாகி வருகிறது. செப்டம்பர் 27-ம் தேதி பலத்த காற்று வீசியபோது எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இதில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.

சாலையில் மையப் பகுதிகளில் வைக்கப்படும் சிறிய விளம்பரங்கள், சாலைகளில் சரிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்தும் தடைபடுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. அந்த வழியே சென்ற ரெஜினா என்ற பெண் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றபோதும் விளம்பரப் பலகைகளைச் சோதனையிடவோ, விதிகளைக் கடுமையாக்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேமம் என்ற இடத்தில் அண்மையில் இதுபோல் பெரிய விளம்பரப்பலகை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 வயது சிறுவன் உடல் நசுங்கி இறந்தார். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, உறுதித்தன்மை இல்லாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவிட்டது. விளம்பரப் பலகை வைக்க விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புப் பொறியாளரிடமிருந்து சான்றிதழ்பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஹைதராபாதிலும் விளம்பரப் பலகைகள் வைக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சட்டசபை, தலைமைச் செயலகம், ராஜ்பவன் செல்லும் சாலைகளில் விளம்பரங்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் எல்.சி.டி. விளம்பரப் பலகைகளுக்கும் தடை விதித்து, நகரில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில எல்.சி.டி. விளம்பரப் பலகைகளைளும் அப்புறப்படுத்தப்பட்டன.

விதிகளை மீறி விளம்பரப் பலகை வைக்கும் ஏஜென்டுகளுக்கு முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ. 10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் உரிமத்தை ரத்து செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறது ஹைதராபாத் மாநகராட்சி.

சென்னையில் விளம்பரப் பலகைகளின் அளவுக்கு ஏற்ப, பலமான தாங்குக் கம்பிகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பலத்த காற்று வீசும்போது பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விடுகின்றன என்று போக்குவரத்துப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விளம்பரப் பலகைகள் தகுந்த அளவீடுகளின்படி வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனையிட அரசு உத்தரவிட வேண்டும்.

மழை, பலத்த காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குப் பின் அந்தந்த விளம்பரங்களின் உரிமையாளர்கள் மூலம், விளம்பரத்தைத் தாங்கி நிற்கும் கம்பிகளின் உறுதித் தன்மையைச் சோதனையிடவும் உத்தரவிடப்பட வேண்டும். விதிகளை மீறும் விளம்பர ஏஜென்டுகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள சில விளம்பரப் பலகைகள் எல்.சி.டி., மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காற்றினால் விழும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பும் இருப்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Posted in Accidents, Ad, Ads, Advertisements, Advertising, Arcot, banners, Bill boards, Billboards, Chennai, Cut-out, Cut-outs, cutouts, dead, gigantic, Killed, Oversight, Planks, posters, Veerasamy | Leave a Comment »

Makkal TV – Advertisement costs, Special Programmes: Info

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

Makkal TV Logo

makkal TV Programming Offerings Telecast

Makkal TV Ad Rates Tariff Product Promotions

Posted in Ads, Advertisement, Advertisements, Advt, Anbumani, Info, Makkal, Media, PMK, Product, Programmes, Promotions, Ramadas, Ramadoss, Rates, Serials, Tariffs, TV, Viewers, Viewrs | Leave a Comment »

Stars & salaries – TV, Media Ads and Promotion Prices – Compensation details

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

  • ஷாரூக்குக்கு ரூ. 8 கோடி;
  • அமிதாப்புக்கு 6 கோடி;
  • சச்சினுக்கு 3 கோடி!
  • ஆமீர் கான்  ரூ. 5 கோடி;
  • ராகுல் டிராவிட்  ரூ. 2.5 கோடி;
  • யுவராஜ் சிங்  ரூ. 2 கோடி;

டிவி’ விளம்பரங்களில் நடிக்க

இதெல்லாம், இவர்களுக்கு ஒரு படத்தில் நடிக்க ஊதியமா… ஒரு கிரிக்கெட் பந்தயத்தில் சதம் அடிக்க கிடைத்த பணமா… பத்து விநாடி வந்து போகக்கூடிய, “டிவி’ விளம்பரத்தில் நடிப்பதற்காக கிடைக்கும் ஊதியம் இது.

பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் நடித்து வெளிவரும், “டிவி’ விளம்பரங்கள், 60 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு, கிரிக்கெட் சரிவுகளால், கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் ஓரளவு குறைந்தாலும், பாலிவுட் நட்சத்திரங்களின் விளம்பரங்கள் அதிகரித்தன. கடந்தாண்டு, மீண்டும், கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் அதிகரித்தன. முந்தைய ஆண்டை விட, கடந்தாண்டு, 60 சதவீதம் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் வெளியாயின. இந்தாண்டு, அதை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, “டாம் மீடியா’ நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்:

பேனா முதல் கார் வரை, இந்தியாவில், 9,000 பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், 250 பிராண்டுகள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை நடிக்க வைத்து விளம்பரம் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு, பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்கவைத்து, 53 விளம்பரங்கள் வெளிவந்தன. கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் எண்ணிக்கை 191.

இவர்கள் நடித்தது எல்லா விளம்பரங்களும், பெரிய நிறுவனங்களுடையவை. இதனால், கோடிக்கணக்கில் இவர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது. “டிவி’ விளம்பரங்களால், பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் எக்கச்சக்கமாக அள்ளுகின்றனர். அவர்களை அடுத்து, பிரபல மாடலிங் தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.

பிரபல மாடல் அழகி யானா குப்தா, பத்து விநாடி “டிவி’ விளம்பரத்தில் நடிக்க, ஒன்று முதல் இரண்டு கோடி வரை ஊதியம் வாங்குகிறார். மற்றவர்கள் சில ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.

Posted in Aamir, Ad, Ads, Advt, Advts, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Compensation, Cricket, Dravid, Fame, Famous, Films, Khan, Media, Movies, people, Prices, Promotions, Sachin, Salary, Shahrukh, Sports, Stars, Tendulkar, TV, Yuvraj | Leave a Comment »

Advertisements – Noise & Light Pollutions

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை

க.ப. அறவாணன்

அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.

வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் – மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.

ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.

நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.

மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.

அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.

மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?

நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.

காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Ad, Ads, Advertisement, Banner, Cinema, Disturbance, Elections, Electronic, Environment, Hoardings, Impact, Light, Motor, Nature, Noise, Party, Politics, Polls, Pollution, Sound, Vehicles, Vision | Leave a Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

Sri Lanka to ban thinly clad models from Ads

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

விளம்பரங்களில் நிர்வாணத்திற்கு இலங்கை அரசு தடை

மாடல் அழகி ஒருவர்
மாடல் அழகி ஒருவர்

இலங்கையில் விளம்பரங்களின் போது ஆபாசமாக, அதாவது நிர்வாண, அரைநிர்வாண பெண்ணையோ அல்லது ஆண்களையோ பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச விளம்பரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கலாச்சார அமைச்சு பொது விளம்பரங்களின் போது நிர்வாண அல்லது அரைநிர்வாணக் கோலத்தில் மாடல் அழகிகள்/இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in 1984, Ad, Ads, Advertisement, Agency, Ban, Billboards, Cloth, Clothes, Clothless, Culture, Female, Force, Immoral, Judgmental, Law, male, Model, Moral, Nude, Order, Policing, Pose, Publishers, Seminude, Sexy, Sri lanka, Srilanka, Values | Leave a Comment »

‘Lalitha’s Paattukku Paattu – Kushbu TV Advertisement should be banned’

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

குஷ்பு நடிக்கும் விளம்பரத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் புகார்

சென்னை, ஜன.24: நீதித்துறையை அவமதிக்கும் நோக்கில் டிவியில் வெளியாகும் தங்க நகை விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் டி. ரவிகுமார் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் இடம் பெற்றது. அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜுவல்லரியின் சலுகைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அதைக் கேட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென காணாமல் போவது போல (நீதிமன்றமே காலியாக இருப்பது போல) விளம்பரக் காட்சி இடம் பெறுகிறது.

இந்த விளம்பரம் நீதித்துறையையும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வழக்கறிஞர் ரவிகுமார் கூறியுள்ளார்.

Posted in Ads, Advertisement, Advt, case, Court, Gangai Amaran, Gangai Amaren, Judge, Justice, Kushboo, Kushbu, Lalitha, Lalitha's Paattukku Paattu, Law, Lawsuit, Paattukku Paattu, Sun TV, TV | Leave a Comment »

Ramzan Shopping == Christmas Santa Claus == Deepavali Celebrations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

வர்த்தகமயமாகும் ரம்சான் பண்டிகை

ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்
ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்

ரம்சான் காலத்தில் முஸ்லீம்கள் வீடுகளிலேயே அதிக நேரம் தங்கியிருக்கின்றனர். இதனால் இவர்கள் அதிக நேரம் டி வி பார்ப்பதாக தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். முஸ்லீம் நாடுகளில் செய்யப்படும் மொத்த விளம்பரங்களில 30 சதவீதம் ரம்சான் மாத காலத்தில் செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் செய்யப்படும் டி வி ஒளிபரப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் குடும்பங்களை சென்றடைகின்றன.

நோன்பு காலத்தில் உணர்ச்சிமயமான விளம்பரங்களை விளம்பரதாரர்கள் தயாரிக்கின்றனர். நோன்பு இருப்பவர்களுடன் தொடர்புகொள்ள நீதிக் கதைகளை சொல்வது ஒரு வழியாக உள்ளது என்கிறார் லியோ பர்னேட் நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் பிண்டெர்.

ரம்சான் போது ஷாப்பிங் செய்யாதீர்கள் என்று கூறுகிறார் இமாம் அஜ்மால் மசூர். அதிக அளவுவிலான வர்த்தக் குறுக்கீட்டால், ரம்சானின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக இமாம் அஜ்மல் மசூர் கருதுகிறார்.

உலகம் முழுவதிலும் 100 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர். இதில் பலர் வேகமாக வளரும் நாடுகளில் உள்ளனர். எனவே ரம்சான் மாதத்தில் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏராளமாக பொருள் செலவிடப்படுவதை ஏற்றுக் கொள்ளாத சில முஸ்லீம்கள், தற்போது ரம்சானுக்கும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணுகின்றனர்.

Posted in Ads, Advertisements, Celebrations, Christmas, Customer, Deepavali, Economy, Marketing, Ramadan, Ramzan, sales, Santa Claus, Shopping, TV | 2 Comments »

Craigslist.Org – Concept & Execution

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

ஒரு மாதத்துக்கு கோடி விளம்பரம்!

ஆர்.வெங்கடேஷ்

இணையம் என்றாலே எல்லாம் ஓசியில் சுலபமாகக் கிடைக்க வேண்டும், அங்கே எந்த ஒரு வியாபார நோக்கமும் இருக்கக்கூடாது என்பது இணைய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. வியாபார நோக்கம் தலைதூக்கி விட்டால், இணையம் வளரவே வளராது என்பது இவர்களின் வாதம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் தேவையை ஒட்டி சேவைகள் உருவாக்கப்பட்டு, அது முற்றிலும் இலவசமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆர்வலர்களின் கருத்து.

இது எவ்வளவு தூரம் சாத்தியம், சாத்தியமில்லை என்பது தனிக்கதை. ஆனால், மக்களின் தேவைகளை ஒட்டியே சேவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் நூறு சதவிகிதம் உண்மை. அப்படி உருவான சேவைகளில் ஒன்றுதான் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.நீக்ஷீணீவீரீsறீவீst.ஷீக்ஷீரீ/). வரி விளம்பரங்களை மக்களே இலவச மாக சேர்க்கும் வசதிகொண்ட வலைதளம் இது.

நாளிதழ்களில் வெளியாகும் வரி விளம்பரங்களுக்கு அல்ப ஆயுசு. அடுத்த இதழ் வந்துவிட்டால், சென்ற இதழை எல்லாரும் மறந்து போவார்கள். மேலும் வரி விளம்பரங்கள் பற்றி மக்களுக்கு உள்ளூர சில சந்தேகங்கள் உண்டு. குறிப்பாக, அதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்து சந்தேகம் எழுவதுண்டு. வரி விளம்பரங்களைக் கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதால்தான் இத்தகைய ஓர் அவநம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. சொல்லப்போனால் வரி விளம்பரத்தை நம்புவதைவிட, அதை வெளி யிடும் பத்திரிகையின் மேல்தான் மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இணையம் இந்தப் பிரச்னைகளைச் சுலபமாகக் கடந்துவிட்டது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்டே’ இதற்கு பெரிய உதாரணம். 1995&ல் தொடங்கப்பட்ட இந்த இணையம், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஏரியாவில் உள்ள விளம்பர தாரர்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டது. பின்னர் 1999&ல் இந்த வலைதளம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் இதன் வளர்ச்சி, பிரமிக்கத்தக்க அளவில் விரிந்தது. 2000&ம் ஆண்டில் மேலும் ஒன்பது நகரங்கள் இந்த சேவையில் இணைக்கப்பட்டன. 2003&ல் 14 நகரங்கள் இணைந்துகொண்டன. 2006 ஜூன் மாதத்தின் கணக்குப்படி, இப்போது இந்த லிஸ்ட்டில் உலகெங்கும் உள்ள 310 நகரங்கள் இணைந்துள்ளன. அதில் நமது சென்னையும், பெங்களூரும், டெல்லியும்கூட அடக்கம்.

இதன் வளர்ச்சியை மேலும் புரிந்துகொள்ள இந்த விவரங்களை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இந்த லிஸ்ட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வரி விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன. அதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விளம்பரங்கள் வேலைவாய்ப்புக்கு மட்டுமே பதியப்படுகின்றன. சொல்லப்போனால், வேலைவாய்ப்புக்கு என்றே இருக்கும் வலைதளங்களில் பதியப்படும் விளம்பரங்களை விட இந்த எண்ணிக்கை அதிகம். அதேபோல், இந்த ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் இருக்கும் விவாத அரங்கில் எண்பது தலைப்புகளில் கிட்டத்தட்ட நான்கு கோடி பேர்கள் பங்கேற்று கருத்துகள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வலைதளத்தின் சிறப்புக்களில் ஒன்று, அதன் எளிமை. பொதுவாக, வலைதளங்கள் என்றாலே அதில் எண்ணற்ற விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல சமயங்களில், இந்த விளம்பரங்கள் அந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கம் டவுன்லோட் ஆவதைத் தாமதப் படுத்திவிடும். அல்லது விளம்பரம் முதலில் டவுன்லோட் ஆகிவிடும். வலைப்பக்கத்தில் உள்ள விவரங்கள் டவுன்லோட் ஆகத் தாமதமாகும்.

ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் மருந்துக்குக்கூட ஒரு விளம்பரம் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக இந்த வலைதளம் நடந்துகொண்டிருந்தும் இதுவரை ஒரு விளம்பர பேனர்கூட அங்கே போடப்பட்டது கிடையாது. ஆச்சரியமாக இல்லை? விளம்பரம் போட்டா லென்ன என்று ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் அதிபர் கிரெய்க் நியூமார்க்கிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: “மக்கள் இதைக் கேட்கவில்லையே!”

ஆம்! மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்! பல ஆச்சரியங்கள் இந்த வலை தளத்தில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாக ஒன்றை இந்த வலைதளத்தில் செய்ய வேண்டுமென்றால், கிரெய்க் நியூமார்க் செய்யும் ஒரே வேலை, அதன் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு அறிவதுதான். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டைப் பயன்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர் தன் வலைதளத்தில் செய்வார். ஒவ்வொரு நகரத் துக்கும் இந்த லிஸ்ட்டை விரிவு படுத்துவதும் மக்களின் தேவையை ஒட்டிதான். தொடர்ந்து இணைய மக்களிடமிருந்து, எங்கள் நகரத்துக்கும் இந்த லிஸ்ட்டை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை வந்தால் மட்டுமே அந்த நகருக்கு இந்த லிஸ்ட் விரிவு படுத்தப்படும்!

இன்னொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. ஒருமுறை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் விளம்பரம் செய்ய முன்வந்தது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் பாப்பு லாரிட்டியைப் பார்த்து, தானாகவே வந்த விளம்பர வாய்ப்பு அது. அதுவும், எந்த டிஸ்கவுண்டும் கோராமல், அன்று சந்தையில் விளம்பரங்களுக்கு என்ன ரேட் இருக்கிறதோ அதைத் தருகிறோம் என்று சொன்னது ‘மைக்ரோசாஃப்ட்’. கிரெய்க், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று பிற்பாடு அவரிடம் கேட்டபோது, முதல் காரணமாக அவர் சொன்னது, ‘அப்போது எனக்குப் பணம் வேண்டியிருக்கவில்லை’ என்பதுதான். அடுத்து சொன்னது: ‘மக்கள் இதைக் கேட்க வில்லையே!’ அன்று எடுத்த முடிவு இன்றுவரை விளம்பரமே இல்லாமல், முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு என்றே இந்த வலைதளம் இருக்கிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சந்தேகம். ‘என்ன இவர்கள் மடையர்களாக இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் களாக இருப்பார்களோ? பணம் சம்பாதிக்காமல் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகி றார்கள்?’ என்று ஒவ்வொரு நாள் ராத்திரியும் தூக்கமில்லாமல் தவித்தவர்கள் மற்றவர்கள்தான். ஆனால், இப்படி மக்களின் விருப்பத்தைச் சார்ந்தே இருந்ததால்தான் இந்த அசுர வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்தது.

பொதுவாக இணையத்தில் வரும் விளம் பரங்கள் பற்றி அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் வெளியாகும் வரிவிளம்பரங்களை மக்கள் நம்புகிறார்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். விளம்பரங்களைப் போடுபவர்களிடமும் விளம்பரங்களைப் படிப்பவர்களிடமும் மெள்ள மெள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.

2006&ல் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ மீண்டும் தனது பயனர்களிடம் சென்றது. இந்தச் சேவையை மேலும் தொடர போதிய வருமானம் வேண்டும் என்பது விவாதிக்கப்பட, பின்னர் விளம்பரம் கொடுக்க வரும் நிறுவனங் களிடம் இருந்து பணம் பெறலாம், தனி நபர்களிடம் இருந்து பெறக் கூடாது என்று மக்கள் கருத்துத் தெரி வித்தனர். அதன் பின்னரே, மூன்றே மூன்று அமெரிக்க நகரங்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படத் தொடங்கியது.

இதே வரி விளம்பர ஐடியாவை வைத்துக் கொண்டு, வேறு எண்ணற்ற வலைதளங்கள் இணை யத்தில் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகம் இருக்கும். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ இன்றுவரை பெரும் வருமானத்தை ஈட்டவில்லை. ஆனால், மிகப்பெரும் நம்பிக்கையை மட்டும் ஈட்டி இருக்கிறது!

Posted in Ads, Advertisements, Classified Ads, Craigslist, Craigslist.Org, Free Paper, Junior Vikatan.com, Profits, R Venkatesh, Tamil, Web Models, Web2.0 | Leave a Comment »

Vilambara Piriyar

Posted by Snapjudge மேல் ஜூலை 17, 2006

~~~gOOd aDs~~~

Click here to see a large version

 

Posted in Ads, Advts, Kill Bill, smoking, Uncategorized, Watch | Leave a Comment »