Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Achievers’ Category

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Sai Krishnan – 7th International Abilympics photography champ

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

நிழற் படங்களல்ல… நிஜப்படங்கள்!

யுகன்

ஒரு கேனன் 5ஈ கேமிரா, ஒரு ஆப்பிள் லேப்-டாப் கம்ப்யூட்டர், ஏராளமான தன்னம்பிக்கையுடன் விமானமேறிய சாய் கிருஷ்ணன் என்னும் இளைஞர் போலியோவால் பாதிக்கப்பட்டவர், சமீபத்தில் ஜப்பானின் ஷிஷோகா நகரத்தில் நடந்த ஏழாவது சர்வதேச அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில், புகைப்படப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார். சர்வதேச அளவில் உடல் திறன் குறைந்தவர்களுக்காக நடத்தப்படுவது எபிலிம்பிக்ஸ். இதில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது வரையான சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடம் சாய் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”எனக்குச் சின்ன வயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்தவர் என் தந்தை. அவர்தான் நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு ஒரு ஹாட்-ஷாட் கேமிராவை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இது மிகவும் காஸ்ட்லியான ஹாபியாக இருப்பதால், என்னுடைய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியிலான வேகத்தடை நிச்சயம் இருந்தது. இதையும் தாண்டி நான் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு எனக்கு உதவியாக இருந்தது வித்யாசாகர் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

தேசிய அளவில் நான் உடல் திறன் குறைந்தவர்களுக்கான போட்டியில் பங்கெடுப்பதற்கு, “ஆம்பிஷன் ஃபோட்டோகிராஃபி அகடமி’யின் நிறுவனரான ராஜா பொன்சிங் எனக்கு நிறைய நுட்பங்களைக் கற்றுத் தந்தார். இவரைத் தவிர, ஷரத் அக்ஷர், ராஜீவ் மேனனின் “மைன்ட்ஸ்க்ரீன் ஃபோட்டோகிராஃபி இன்ஸ்டிட்யூட்’டின் முதல்வரான ஞானசேகரன் மற்றும் சுரேஷ், குமாரசுவாமி போன்றவர்களின் வழிநடத்துதலுடன்தான் நான் தேசிய அளவிலான போட்டிகளில் ஜெயித்தேன்.

ஜப்பானில் நடந்த எபிலிம்பிக்கைப் பொறுத்தவரை இது சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பதால் அதற்குத் தகுந்த தொழில்நுட்பத்துடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் போட்டிக்காக நான் பணிபுரியும் ஹெச்.சி.எல். நிறுவனமே கேனன்5டி கேமிராவையும், ஆப்பிள் லேப்-டாப்பையும் வழங்கியது. மத்திய அரசு மற்றும் தேசிய எபிலிம்பிக் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் உதவியுடன்தான் என்னால் ஜப்பானுக்குப் போய் இந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

உலகம் முழுவதுமிருந்தும் பேச்சுத் திறன், செவித் திறன், கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் குறையுள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் 120 நாடுகளிலிருந்து பங்கேற்றனர். புகைப்படப் போட்டியில் 25 நாடுகளிலிருந்து 26 பேர் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து புகைப்படப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நானும்,

கோவையைச் சேர்ந்த ஹரி என்பவரும்தான்.

டெய்லரிங், மோட்டார் ஆக்டிவிடி, எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளிங், ஸ்வெட்டர் பின்னுவது, கணிப்பொறியிலேயே வரைவது… என்று பல வகையான போட்டிகளும் நடந்தபடி இருக்கும். இந்தப் போட்டியில் பங்கெடுப்பவர்களையே, அந்தச் சூழ்நிலையின் பின்னணியோடு, பிரம்மாண்டத்தோடு எத்தனை படம் வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இறுதியாக நாம் எடுத்தவற்றிலிருந்து ஐந்து புகைப்படங்களை நாமே தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான “கமெண்ட்’ டையும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச அளவில் புகைப்படம் எடுப்பதில் புகழ்பெற்ற நடுவர்களைக் கொண்ட குழு இறுதி முடிவை எடுக்கும். என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே சப்ஜெக்ட்டிற்குத்தான் படமெடுக்கும்போது முன்னுரிமை கொடுப்பேன். பின்னணிக்கு அல்ல. இந்த அடிப்படையில் “வெளிச்ச துவாரம்’ என்னும் தலைப்பில் நான் எடுத்த உடல் திறன் குன்றியவரின் திறனும், ஸ்வெட்டர் பின்னும் கைகளின் திறனை வெளிப்படுத்தும் புகைப்படமும், “அசெம்பிளிங்’ செய்யும் பெண்ணின் பார்வைக் கூர்மையை விளக்கும் புகைப்படமும் எனக்கு இந்தப் பரிசை வாங்கித் தந்ததாக நம்புகிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கு நாம் தேர்ந்தெடுத்த கோணம், நாம் முன்னிலைப்படுத்தியிருக்கும் சப்ஜெக்ட், குறிப்பிட்ட புகைப்படம் ஒட்டுமொத்தமாகத் தெரிவிக்கும் செய்தி… போன்ற விஷயங்களின் அடிப்படையில் 26 போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தனர். நான் வெள்ளிப் பதக்கம் பெற்றேன். கோவையிலிருந்து வந்திருந்த ஹரி வெண்கலப் பதக்கம் பெற்றார். பங்கேற்ற 26 பேரில் 21 பேர் தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு முறையாக இந்தச் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆஸ்திரிய நாட்டின் போஸ்க்தான் இந்தமுறையும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்தமுறை ஆறாவது இடத்திற்குப் போய்விட்டார். தற்போது ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர்தான் தங்கம் வென்றார்.

உலக அளவிளான எபிலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறோம். அரசு சார்பாகவும் சரி, தனியார் சார்பாகவும் சரி எந்த பாராட்டும்,அங்கீகாரமும் இதுவரை கிடைக்கவில்லை. எவ்வளவோ விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கூட எங்களைத் திரும்பிப் பார்க்காமல் இருப்பதுதான் மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மற்றபடி, சாமான்ய மக்களின் வாழ்க்கை அனுபவங்களை நிழற் படங்களாக அல்ல… நிஜப்படங்களாகப் பதிவு செய்யவேண்டுமென்று பெரிய திட்டமே இருக்கிறது. பார்க்கலாம்…” என்றார் நெகிழ்ச்சியுடன் சாய் கிருஷ்ணன்.

Posted in 5MP, Abilympics, Achievements, Achievers, Camera, Cannon, Canon, Challenged, Coimbatore, disabilities, disability, Disabled, Faces, Films, handicap, Handicapped, Hari, HCL, Human Resources, IAF, India, International, Kovai, NAAI, Notable, people, Photographer, Photographs, Photos, Pictures, Polio, Saikrishnan, Shizuoka, Skills, Sponsors, Sponsorships, Sponz, Vidyasagar, vocational, World | 1 Comment »

Gandhi, Nehru, Sachin are Time’s heroes

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின்

புதுதில்லி, நவ. 13: கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாக,

  • மகாத்மா காந்தி,
  • ஜவாஹர்லால் நேரு,
  • அன்னை தெரசா,
  • சச்சின் டெண்டுல்கர்,
  • விப்ரோ தலைவர் நாராயணமூர்த்தி

ஆகியோரை ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் “டைம்‘ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
“டைம்’ பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழ் தற்போது விற்பனையில் உள்ளது. அதில் இந்த விவரம் தரப்பட்டுள்ளது. வியக்கத்தக்க இம்மனிதர்களின் சாதனைக்கு மரியாதை செலுத்துவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற அஹிம்சை வழியை கடைபிடித்து அதில் வெற்றி பெற்ற உலகின் மாபெரும் மனிதர் காந்திஜி என அந்த இதழ் காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Posted in Achievers, Asia, Gandhi, Heroes, India, Jinnah, Lists, Nehru, Nusrat, Sachin, Time | Leave a Comment »

Maanpumigu Manithargal – Chinnapullai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பெ. கருணாகரன்,  ப. திருமலை.
டெல்லி… ஸ்ரீசக்தி டிரஸ்கார் விருது வழங்கும் விழா. அந்தப் பெண்ணின் பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் மேடையேறி அங்கிருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயைக் கும்பிட்டார். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத சம்பவம். வாஜ்பாய் அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கினார்.

பிரதமர் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பெண் _ சின்னப்பிள்ளை. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவிளக்கு ஏற்றியவர்.

மதுரை மாவட்டம் சுள்ளந்திரி கிராமம்தான் சின்னப்பிள்ளை பிறந்த ஊர். அப்பா, பெரியாம்பாளை. அம்மா, பெருமி. தாழ்த்தப்பட்ட சமுதாய விவசாயக்கூலிகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். கடைசி வாரிசுதான் சின்னப்பிள்ளை. இவருக்கு மூன்று வயதிலிருக்கும்போது, அம்மா இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமலே நான்கு பேரையும் பெரியாம்பாளை வளர்த்திருக்கிறார்.

வசதியில்லாததால் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை. நான்கு வாரிசுகளுக்கும் விவசாயக் கூலி வேலைதான். ஏழு வயதிலேயே சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை.

திருமணம்!

பத்து வயதில் பெரிய மனுஷி; பன்னிரண்டு வயதில் திருமணம். கணவர் பெருமாள் _ தாய்வழி உறவு. இவருக்கும் விவசாயத் தொழில்தான்.

இரண்டு குழந்தைகள் பிறந்தநிலையில் கணவருக்குத் தீராத வயிற்றுவலி. வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்தச் சூழலில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமாகிவிட, குடும்பச்சுமை சின்னப்பிள்ளையின் மீது.

அசரவில்லை. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். கடுமையாய் உழைத்தார். ஆனால், வருகிற கூலியெல்லாம் கணவரின் வைத்திய செலவுக்கே போனது.

வர்க்கப் பார்வை!

வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபிறகு, இவருக்குள் வர்க்கப் பார்வை தலைதூக்கியது. விவசாயக் கூலிகளின் சிக்கல்களை உணர்ந்தார். செய்த வேலைக்கு சரியான கூலி கிடைக்காதது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லாத நிலை. இதைச் சரி செய்யவேண்டும் என்ற கோபமும், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும் அவரை தினமும் துன்புறுத்தின. விளைவு… அவருக்குள் அதற்கான திட்டங்கள் தோன்றின.

நில உடைமையாளர்களைச் சந்தித்தார். ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் நிலத்துக்குத் தேவையான ஆட்களை காண்ட்ராக்ட் முறையில் மொத்தமாகப் பேசி, பலருக்கும் வேலையைப் பகிர்ந்தளித்தார். நிலவுடைமையாளர்களிடம் கண்டிப்பாகப் பேசி, கூலியை நியாயமாய் வாங்கிக் கொடுத்தார். வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோருக்கும் இவர் வேலை வழங்கத் தவறவில்லை. இதனால் மக்களுக்கு சின்னப்பிள்ளை மீது நம்பிக்கை வந்தது.

இந்த நேரத்தில்தான் மாதர் சங்கத்தினர் சிலர், மான்யத்துடன் வீடு வாங்கித் தருவதாகக் கூறி வந்தனர். சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாயக் கூலிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்தார்கள். ஆனால், கிடைத்தது வீடு அல்ல, ஏமாற்றம்தான்! பணம் கொடுத்தவர்களெல்லாம் சின்னப்பிள்ளை சொல்கிறாரே என்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள். இது சின்னப்பிள்ளைக்குப் பெரிய உறுத்தலாயிற்று.

சுய உதவி!

இந்த நிலையில்தான் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுக்களுடன் சின்னப்பிள்ளையை அணுகி, கடன், சுயஉதவிக் குழுக்கள் என பேசினார். ஏற்கெனவே ஏற்பட்ட ஏமாற்றத்தால் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் விடாமல் பேசிக்கொண்டேயிருக்கவே, சிறிது சிறிதாக அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால், மக்களிடம் சின்னப்பிள்ளையால் நம்பிக்கை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால், பில்லுச்சேரி கிராமத்தில் முதலில் துவங்கப்பட்ட சுயஉதவிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் பதினான்கு பேர் மட்டுமே.

இந்தக் குழுவினர் போட்ட பணம் இவர்களுக்குள்ளேயே சுழன்றது. தானம் அறக்கட்டளையின் நிதிஉதவியும் ஆலோசனையும் குழுவை மேலும் வலுவாக்கியது. சின்னப்பிள்ளைக்கு இந்தத் திட்டம் பிடித்துவிட, அக்கம் பக்கத்துக் கிராமத்து விவசாய பெண்களையும் திட்டத்துக்குள் இழுத்துப்போட ஆரம்பித்தார். சுயஉதவிக் குழுக்கள் கிராமத்துக்குக் கிராமம் வேர்விடத் தொடங்கின.

முதலில் பதினான்கு பேருக்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை, மூன்றே ஆண்டுகளில் முந்நூறு பேருக்குத் தலைவியானார். அடுத்த மூன்றாண்டுகளில் அது ஐந்தாயிரம் ஆனது. இவரது கடின உழைப்பு இவரை ஏழு மாநில களஞ்சிய சுயஉதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கியது. இந்தப் பொறுப்பு ஏழாண்டுகளுக்கு. இப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுநாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இந்தக் கூட்டமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று லட்சம்.

இவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தாலும் கூட, இவருக்கு இன்னும் எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் ஆச்சரியம். எப்படிச் சமாளிக்கிறாராம்? ‘‘வாசிக்கச் சொல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிடறேன். கணக்கு வழக்கு பார்க்க படிச்ச புள்ளைகளை வேலைக்கு வைச்சிருக்கேன். செக்கில் மட்டும்தான் நான் கையெழுத்துப் போடுவேன்…’’ என்கிறார். இவருக்கு இந்தியா முழுக்க பயணம் செய்த அனுபவமுண்டு.

தனக்குக் கிடைக்கும் விருதுகள், பணம் எதையும் தனக்காக இவர் வைத்துக்கொள்வதில்லை. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கொண்டு ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, சிறுசிறுமகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுகிறது.

சாதனை!

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சாதித்ததென்ன? இவரிடமிருந்து பணிவாக பதில் வருகிறது. ‘‘கந்துவட்டியை அடியோடு ஒழிச்சுட்டோம்ல. நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு அதுக்கு வட்டியாக ஒரு மூட்டை நெல் அளந்து கொடுத்த அந்தக் காலம் மலையேறிடுச்சி. இப்ப எங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக்கிறதாலே அநியாய வட்டி என்கிற பேச்சுக்கே இடமில்லே… இது தவிர, மூணு வேளையும் வயிறார பட்டினியில்லாம எங்க பெண்கள் சாப்பிடறாங்க….

தவிர, எங்க குழுக்களில் சுயதொழிலை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்திக்கிட்டு வர்றோம்…’’

பெரிய தலைவியாகியும் வசதியாக வாழ வாய்ப்பிருந்தும் கூட, சின்னப்பிள்ளை இன்னும் கிராமத்திலேயேதான் இருக்கிறார். தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட சிறிய வீடுதான் இவர் குடியிருப்பது. அதைப் பெறவே இவர் போராட வேண்டியிருந்ததாம். இந்த வீட்டிலிருந்துதான் இவரது மக்கள் பணி தொடர்ந்து நடக்கிறது. ‘ரோடு இல்லை… ரேஷன் கார்டு இல்லை… விளக்கு எரியவில்லை…’ என்று மக்கள் குறைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

‘எங்க சனங்க பாவம்ங்க…. அவங்களுக்கு ஏதாவது செஞ்சுக் கொடுங்க…’ என்ற இவரது வெள்ளந்தியான பேச்சை அதிகாரிகளால் தட்ட முடிவதில்லை.

‘வாழ்க்கையிலே நம்மால அடுத்தவர்களுக்குப் பயன் இருக்கணும். நல்லது செஞ்சோம்கிற திருப்தி இருக்கணும். இதுதான் மனுஷ ஜென்மத்தின் முழுமையா இருக்கமுடியும்.’’ என்கிறார் அந்தக் கறுப்பு வைரம்.

_ பெ. கருணாகரன், ப. திருமலை.

Posted in Achievers, Biography, Biosketch, Chinnapullai, Kumudham, people, profile, sinna pulla, Tamil | Leave a Comment »