Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘1947’ Category

TJS George – Good old Bombay days: India – North vs South in Mumbai

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்


சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in 1947, BJP, Bombay, Culture, Divided, Federal, Freedom, George, Heritage, Independence, Karanjia, Mumbai, Nation, National, North, Russy, Russy Karanjia, Sentimental, Sentiments, Separate, Separatists, Shiv Sena, Shivsena, South, State, Thackeray, Tradition, Unity | Leave a Comment »

Indian Freedom Fighters: Joseph George – Pazha Athiyaman in Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

முகங்கள்: “”மாறாமல் இருப்பது மைல்கல்லும் மதியீனனும்தான்!”

மோதிலால் நேரு, காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார் போன்ற பெருந்தலைவர்களின் பேரன்புக்குப் பாத்திரமான இந்திய அளவில் காங்கிரஸ் இயக்கத்துக்காகப் பாடுபட்ட தலைவர் ஜோசப் ஜார்ஜ். வரலாற்று மாணவர்களின் பார்வைக்கும் சிக்காமல் காணாமல் போய்விட்ட இவரைப் பற்றி சமீபத்தில் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். எழுதியிருப்பவர் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி (திருப்பதி) அமைப்பாளர் பழ. அதியமான். எழுத்தாளர் வ.ரா. வின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதும் எழுத்தாளர் தி.ஜ.ர. பற்றி இவர் எழுதிய நூல் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருப்பதும் இவருடைய சிறப்புகள். அவரைச் சந்தித்தோம்.

இந்திய விடுதலை வரலாற்றில் ஜோசப் ஜார்ஜின் இடம்?

மைய நீரோட்ட அரசியலில் கிறித்துவர்களின் பங்கேற்பு அவ்வளவாக இல்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைப்பதாக இருக்கிறது ஜார்ஜ் ஜோசப்பின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பு. மகாத்மா காந்தி, “”ஜார்ஜ் ஜோசப் என்னுடைய நெருக்கமான தோழர்களுள் ஒருவர். நான் எரவாடா சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது யங் இந்தியாவின் ஆசிரியர். அதற்கு முன்னால் என் விருப்பப்படி (மோதிலால் நேருவின்) “தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர். நாட்டுக்காக வருமானமுள்ள வழக்கறிஞர் தொழிலைத் துறந்தவர். சிறை சென்றவர். உற்சாகமுள்ள நாணயமான தேசியத் தொண்டர்.” இது ஜார்ஜ் ஜோசப் வாழும் காலத்திலேயே காந்தி (1929)யிடமிருந்து அவருக்குக் கிடைத்த பாராட்டு.

காந்தி பாராட்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜோசப், தீவிர அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக, வழக்கறிஞராக தமிழக தேசிய அரசியலில் 25 ஆண்டு காலம் செயல்பட்டார். ஆலைத் தொழிலாளர், குற்றப் பரம்பரையினர், வரதராஜுலு நாயுடு மீதான வழக்கு போன்றவற்றில் ஜார்ஜ் ஜோசப்பின் பணி மிகுதி. வ.ரா. சொன்னது போல ஜோசப்பும் ராஜாஜியும்தான் 1910-லிருந்து 1938 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் தமிழக காங்கிரசின் வேலைத் திட்டங்களை யோசித்துத் தீர்மானித்தனர். 100 ஆண்டுகால காங்கிரஸ் வாழ்க்கையில் நான்கில் ஒரு பகுதி. ஆனால் ஜார்ஜ் ஜோசப் என்றால் யார் என்று கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது.

ஜோசப் பரவலாக அறியப்படாததற்கு விடுதலைக்கு முன்பே மறைந்துவிட்டதுதான் காரணமாக இருக்குமா?

அப்படித் தோன்றவில்லை. பாரதி, சத்தியமூர்த்தி, வ.உ.சி. போன்றவர்கள்கூட சுதந்திரத்துக்கு முன்பு இறந்தவர்கள்தானே? ஜார்ஜ் ஜோசப் சிறுபான்மைச் சமூகத்தில் பிறந்ததும் அரசியல் வாரிசோ, குடும்ப வாரிசோ தொடர்ந்து அவரைப் பற்றிச் சமூகத்தில் பேச்சலைகளை உருவாக்காததும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் சரியாக மனசாட்சிப்படி செயல்பட்டால் காலம் கடந்தாவது அறிவுலகத்திலாவது நினைக்கப்படுவார்கள் என்பது ஓர் உண்மை.

தன் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருந்தார் ஜோசப்… காந்திக்கு நெருக்கமாக இருந்து பின்பு அவருடன் முரண்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து செயல்பட்டு மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்த மாற்றங்கள் அவருடைய செல்வாக்கைக் குறைத்திருக்குமா?

இருக்கலாம். கருத்துகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தவர் என்றொரு கருத்து உண்டு. அதைப் பற்றி வ.ரா. இப்படிச் சொல்கிறார்: “”மைல் கல்லும் மதியீனனும்தான் மாறாம இருப்பாங்க”.

ஜோசப் அறிவாளி. காந்தி கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? கலப்பு மணத்துக்கு முதலில் காந்தி ஒப்புக் கொள்ளவில்லையே. சுதேசா- கிருபளானி கலப்பு மணத்துக்கு உடனே வா ஒப்புக் கொண்டார் காந்தி?

“மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள் கம்யூனிஸ்டுகள்’ என்ற புகழ் பெற்ற பத்திரிகை வாசகத்தை கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதின மாஜினி பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறவில்லையா? மாறுவது, முரண்படுவது அறிவுக்கு இயல்பு. ஜோசப்பின் முரண்பாடுகளைத் தவறென்று சொல்ல முடியாது.

அப்படி மாறுவதற்கு அவருக்குப் போதுமான காரணங்கள் இருந்தனவா?

காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கமாக இருந்த ஒருவர், அவர்கள் படுவேகமாக அரசியல் களத்தில் செல்வாக்குடன் வளர்ந்து வருவதைக் கண்டும் ஜோசப் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அதில் அவருடைய சுயநலம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது அப்போதைய அரசியல், சமூக சூழ்நிலையைப் பொறுத்தே அமைந்திருந்தது. சில நேரங்களில் அறிவுப் பூர்வமாகவும் சில நேரங்களில் உணர்ச்சிபூர்வமாகவும் அவர் முடிவெடுத்திருக்கிறார்.

குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேய ஆட்சியில் சட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஜோசப் பாடுபட்டது குறித்து?

குற்றப் பரம்பரையினருக்கு ஜோசப் அனுசரணையாகச் செயல்பட்டது பற்றி இந்த நூலில் மிகக் குறைவான தகவல்களே தந்திருக்கிறேன். அவர் மறைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் மதுரையில் இருக்கும் அவருடைய கல்லறையில் நினைவு தினத்தன்று குறிப்பிட்ட பிரிவினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதிலிருந்தே அவர்களுக்கு ஜோசப் எந்த அளவுக்குப் பாடுபட்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

Posted in 1947, Adhiaman, Adhiyaman, Athiaman, Athiyamaan, Athiyaman, Biography, Biosketch, British, Congress, Dinamani, Faces, Fighters, Freedom, Gandhi, Gandi, George, Independence, India, Joseph, Joseph George, Kaalchuvadu, Kalchuvadu, Kathir, Mahathma, Mahatma, Pazha Athiyaman, people, Research, Unknown | 1 Comment »

More States or no more Splits? – India regions along Languages

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006

தேவையில்லை புதிய மாநிலங்கள்

கே.வீ. ராமராஜ்

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தேசிய அரசியலில் முக்கிய விவாதமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான சரித்திரத்தைப் பற்றியும் மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம்தானா என்பது குறித்தும் அலசி ஆராய வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய போதே 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 1920ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி அதன் மாநில அமைப்புகளை மொழிவாரி அடிப்படையில் கொண்டிருந்தது. 1938ஆம் ஆண்டிலேயே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சென்னை நகரமும் இம்மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆந்திரர்கள் “”மதராஸ் மனதே” என்ற இயக்கத்தைத் தொடங்கினர். 1947ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றமும் மொழிவாரி மாநில அமைப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனித் தமிழ் மாநிலக் கோரிக்கையும் வலுவடைந்தது.

1948 ஜூன் 17 அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாநிலக் குழு அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் முக்கியமான பிரச்சினை அல்ல என்றும் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே பிரிக்க வேண்டுமென்றும் அப்படியிருப்பினும் சென்னை, மும்பை போன்ற நகரங்களைச் சிறப்பு மாநிலங்களாக அறிவிக்க வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரைத்தது. எஸ்.கே.தர் குழுவின் பரிந்துரைகளினால் ஆந்திரத்தில் கோப அலைகள் எழுந்ததைக் கண்டு நேரு, படேல், சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட குழுவை இந்தியத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. மொழிவாரி ஆந்திர மாநிலம் ஏற்படுமாயின் சென்னை ஆந்திரத்துடனும் தமிழகத்துடனும் சேர்க்கப்படாமல் தனித் தகுதி மாநிலமாக இருக்குமென இக்குழுவும் அறிவித்தது. இதனால் புது ஆந்திரத் தலைநகர் உருவாக்க வேண்டும் அல்லது சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்க வேண்டுமென இக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசால் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் நிறுவப்பட்ட பகுப்பாய்வுக் குழு சென்னையை ஆந்திரத்தின் தாற்காலிகத் தலைநகராக வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை.

இந்நிலையில் தெலுங்கு மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடங்கின. 1951 ஆகஸ்டில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலாளர் சுவாமி சீதாராம் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனைக் கண்டித்த நேரு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை எல்லைப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதாயின் மொழிவாரி கொள்கையைப் பரிசீலிப்பதாக 1951 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மொழிவாரிக் கோரிக்கைக்கு நேரு அதிக ஆதரவளிக்காததால் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆந்திரத்தில் காங்கிரஸ் அதிக வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தை உடனடியாக உருவாக்க பொட்டி ஸ்ரீராமுலு 1952-ல் 67 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்டு தனி ஆந்திரம் உருவாக்கப்படும் என 1952 டிசம்பர் 19-ல் அறிவித்து வாஞ்சு குழுவை நேரு நியமித்தார்.

ஆந்திரத்திற்கு புதுத் தலைநகர் ஏற்படும் வரை சென்னை தலைநகராக இருக்குமென வாஞ்சு குழு அறிவித்ததால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; 1953ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக சென்னை மாநிலத்தைப் பிரித்து கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரம் உருவானது. ஆந்திரம் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மற்ற மாநிலங்களும் மொழிவாரி அமைப்பைக் கோரின. 1952ஆம் ஆண்டு பஷல் அலி தலைமையில் சர்தார் கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஷ்ரு ஆகியோர் அடங்கிய மாநிலச் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு நியமித்தது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்படுதலை இக் குழு ஆதரித்துக் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து 1956 ஜூலையில் மாநில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1970களில் எழுப்பப்பட்டது. இதைப் போன்றே மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று இதுவரை 29 கோரிக்கைகள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆந்திரத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அதைப் போலவே ஆந்திரத்தில் சித்தூர், கர்நூல், கடப்பா, ஆனந்த்பூர் மற்றும் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டங்களை இணைத்து ராயலசீமா மாநிலம் உருவாக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே கோரி வருகின்றனர். இதைப் போலவே கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு குடகு மாநிலம் அமைக்க வேண்டுமென அவ்வப்போது பேச்சு எழுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக உள்ளது. தமிழகத்திலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகமும் சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழகமும் இரண்டு மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என ஓரிரு முறை பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா மாநிலக் கோரிக்கையும் மேற்கு வங்காளத்தில் போடோ மாநிலக் கோரிக்கையும் உத்தரப்பிரதேசத்தில் ஹரித் பிரதேச மாநிலக் கோரிக்கையும் அவ்வப்போது எழுகின்றன. ஏற்கெனவே உள்ள மாநில எல்லைகளை மாற்றி புதிய மாநிலங்களை உருவாக்குவது என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.

நம் நாட்டின் அடிப்படை அம்சமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு இப் பிரச்சினை ஊறு விளைவிக்கும் எனலாம். தனி மாநிலம் அமைவதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி பெற்று விட முடியாது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டு உருவான ஜார்க்கண்ட், உத்ராஞ்சல் மற்றும் சத்தீஷ்கர் போன்றவை வளர்ச்சிக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே நிற்கின்றன.

மாநிலங்கள் குறைந்த பரப்பளவில் ஏற்படுத்தப்படும்போது தொழில், வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சில சமயங்களில் வலுவிழக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய தென்னக மாநிலங்களில் ஒரு பகுதியில் மழை பொய்த்துப் போனாலும் இன்னொரு பகுதியில் உள்ள நீர் வளத்தை வைத்து மாநில அரசுகள் குடிநீர், விவசாயம் போன்ற பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம்.

மொழிவாரி மாநிலங்கள் நீடிப்பதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையானது. தேசியத்தையும் மாநில ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கி இதற்கான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தென்னகத்திலும் நான்கு மொழிகளுக்கும் நான்கு மாநிலங்கள் என்ற நிலை தொடர அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரபட்சமற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் சமமான பார்வையோடு ஆட்சி நடத்துவது அவசியமாகும். மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகள் மாநில அளவில் மக்கள் ஒற்றுமைக் குழுக்களையும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அண்டை மாநில நல்லுறவுக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் இக்குழுக்களைக் கண்காணித்து, சிறப்பாகச் செயல்பட நெறிப்படுத்தும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தேச ஒற்றுமைக் குழுக்களை நாடு முழுவதும் வலைப்பின்னல் போல உருவாக்கிட வேண்டும்.

Posted in 1947, Andhra, AP, Independence, India, Karnataka, Kerala, Language, Madras Manathey, Mahrashtra, National Congress, Potti Sriramulu, Province, Rayalaseema, Regional, Republic, State, Tamil, Telengana, Telugu, Vidhrabha, Zone | Leave a Comment »