Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘144’ Category

Why Democracy survives in India? – N Vittal

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2008

ஜனநாயகம் நீடிப்பது இந்தியாவின் அதிர்ஷ்டமா?

என். விட்டல்

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. 1940-களில் இந்தியாவுடன் சேர்ந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. ஆனால், அவற்றில் இந்தியா மட்டுமே தனித்துவமிக்க, உண்மையிலேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கும், துடிப்புமிக்க ஜனநாயகத்துக்கு வெற்றிகரமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அது குறித்து இந்தியர்களாகிய நாம் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.

விடுதலைக்குப் பிறகு செயல்திறன் மிக்க ஜனநாயக நாடாக இந்தியா நடைபோடும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் பெற்றவுடன் தகுதியற்றவர்கள் அதிகாரத்துக்கு வருவார்கள்; எனவே, வெகு விரைவிலேயே இந்தியா பல நாடுகளாகச் சிதறுண்டு போய்விடும் என எதிர்பார்த்தார் சர்ச்சில். இந்தியா சுதந்திர நாடாக ஆகிய உடன் ஊழல் ஆறாகப் பெருக்கெடுத்தோடும் என 1920-களிலேயே கருதினார் ராஜாஜி. நமது அண்டையில் உள்ள நாடுகளிலெல்லாம் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டபோதிலும், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு இருப்பது எவ்வாறு?

அதற்குப் பல விளக்கங்களைக் கூறலாம். எனது விளக்கம் இதுதான்: தகவல் தொழில்நுட்ப காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கணினி மென்பொருள் ~ வன்பொருள் என்ற வகையில் நமது நாட்டில் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

உண்மையிலேயே இந்தியா ஒரு ஜனநாயக நாடாக நீடிப்பது அதிர்ஷ்டத்தாலா? ஜனநாயக ஆட்சி முறை தோல்வி அடைந்து, ராணுவத்தின் தலையீடும் சர்வாதிகாரிகளின் ஆட்சியும் நடந்துகொண்டு இருக்கும் நமது அண்டை நாடுகளின் வரிசையில் நாமும் சீக்கிரம் சேர்ந்துவிடுவோமா?

60 ஆண்டுகளாக இந்தியாவில் உயிர்ப்புள்ள ஜனநாயகம் வளர்ந்து வந்திருப்பதற்கு வெறும் அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல. அந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்துவதற்கு பல்வேறு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே காரணமாகும்.

முதலில் அதற்குக் காரணமான மென்பொருள் என்ன எனப் பார்ப்போம். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் சகிப்புத்தன்மையும் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இந்துக் கலாசாரமாகும்.

இந்து தர்மம் அதாவது சனதான தர்மம் என்பது எப்போதும் இரு அம்சங்களை வலியுறுத்திவந்துள்ளது. ஒன்று, திறந்த மனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியம்; மற்றொன்று, முரணான விஷயங்களை சகித்துக்கொள்ளும் குணம். இதுவே வேதத்தில் “ஆனோபத்ரஹஹா க்ருதவி யந்து விஷ்வாதஹா’ எனப்படுகிறது. நல்ல சிந்தனைகள் உலகில் எங்கிருந்து வந்தாலும் அவற்றை வரவேற்க வேண்டும் என்பது இதன் பொருள். இரண்டாவது முக்கியமான கொள்கை, தர்மத்தின்படி நடப்பதாகும். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு தர்மங்கள் இருக்கின்றன. மகாபாரதத்தின் சாந்திபருவத்தில் பீஷ்மரின் வாயிலாக ராஜ தர்மம், அதாவது நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கான கொள்கைகள் போதிக்கப்படுகின்றன. டாக்டர் அமார்த்தியா சென் எழுதியிருக்கும் “தி ஆர்கியுமென்டேட்டிவ் இந்தியன்’ என்ற நூலில், வாதம் செய்யும் இந்தியாவின் பாரம்பரியம் சரியான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, வன்பொருளுக்கு ~ அமைப்பு ரீதியான அம்சத்துக்கு வருவோம். சிறிது காலத்துக்கு முன் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்செய்ய முஷாரப் மேற்கொண்ட முயற்சியானது, 1975-ல் இந்தியாவில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியதை ஒத்திருந்தது. அதிபர் பதவியில் முஷாரப் நீடிப்பது சட்டப்படி சரியானதுதானா என்ற கேள்வியை எழுப்பியதால் நீதிமன்றத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைப்போலவே இந்திரா காந்தி பிரதமர் பதவியில் நீடிப்பது குறித்து அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு கேள்வி எழுப்பியதால், நெருக்கடி நிலையைப் பிறப்பித்ததன் மூலம் நீதித் துறை மீது தாக்குதலைத் தொடுத்தார் இந்திரா காந்தி. தனது பதவியையும் அதிகாரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த அமைப்பின் மீதும் ஓர் ஆட்சியாளர் தொடுத்த தாக்குதலாகும் அது.

ஒரே இரவில் அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் நாடு முழுவதும் ராணுவத்தையும் பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி சர்வாதிகாரத்தை நிலைநாட்டினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்.

நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தபோது இந்திரா காந்தி கடைப்பிடித்ததும் இதே பாணியைத்தான். இந்திய ஜனநாயக வளர்ச்சிப் போக்கில் நெருக்கடி நிலையானது, வரலாற்று நோக்கில் அதைப் புடம்போட்ட நிகழ்வாக அமைத்துவிட்டது.

இந்தியாவில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைதான் உள்ளபடியே சோதனைக் காலமாகும். அதை நாடு சமாளித்துக் கடந்துவிட்டது. தனது பதவியை சட்டபூர்வமாக ஆக்கிக்கொள்வதற்காக இரு ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்த முன்வந்தார் இந்திரா. தேர்தல் நடத்த அவர் நிர்பந்திக்கப்பட்டாரா அல்லது உளவுத் துறையினர் கருத்தைக் கேட்டு ஏமாந்துபோய் தேர்தலை நடத்தினாரா? அல்லது தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் எந்தப் பிரதமரும் இந்திரா காந்தியின் வழியில் செல்லத் துணிய மாட்டார் என்று கூறும் அளவுக்கு, நெருக்கடி நிலைப் பாதிப்புகளின் பிரதிபலிப்பு தேர்தலில் கடுமையாக இருந்தது.

இந்திய ஜனநாயகத்தின் வன்பொருள் என்ன? துடிப்புமிக்க, பலம் பொருந்திய சுயேச்சையான அமைப்புகள்தான் இந்தியாவில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகின்றன. அவற்றில் ஒன்று பத்திரிகைத் துறை. தூக்கிலிடப்படுவதற்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி புட்டோ எழுதிய, “நான் படுகொலை செய்யப்பட்டால்…’ என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “”உத்வேகம் மிக்க ஜனநாயகத்தினால்தான் இந்தியா வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எழுதியிருக்கிறார் அவர்.

நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்தபொழுதுகூட ராம்நாத் கோயங்கா, இரானி போன்ற மன உறுதி மிக்க, துணிச்சலான பத்திரிகையாளர்கள், மக்களின் ஜனநாயக உணர்வும் விடுதலை வேட்கையும் அணைந்துவிடாமல் காத்தனர். நெருக்கடிநிலையின் கொடூரமான அனுபவத்துக்குப் பின், மீண்டும் அத்தகையதொரு நிலை வந்துவிடாமல் தடுப்பதற்குத் தேவையான தடுப்பு நடைமுறைகளை நாடாளுமன்றமும் நீதிமன்றமும் வகுத்திருக்கின்றன. காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சியாக இருந்தபோது ~ நாட்டில் ஒரு கட்சி ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது அக் கட்சியின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற, அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது வாடிக்கையாக இருந்துவந்தது. ஆனால் இப்போது ஒரு கட்சி ஏகபோகம் என்பது இல்லை. அதோடு, பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலம், 356-வது பிரிவைப் பயன்படுத்துவதற்குப் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துவிட்டது. அதன் வாயிலாக, ஜனநாயக நடைமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை அவ்வளவு சுலபமாக சீர்குலைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த அமைப்புகள் கட்டிக்காத்து வருகின்றன. சோதனையான காலகட்டங்களில் அந்த அமைப்புகள் மேற்கொண்ட நிலைகளின் காரணமாக அத்தகைய பலத்தை அவை பெற்றிருக்கின்றன.

ஜனநாயகம் வளரத் தேவையான மற்றொரு முக்கிய அம்சம், பொதுவாழ்வில் நேர்மை. இவ் விஷயத்தில் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், ஜவாஹர்லால் நேரு, ராஜாஜி போன்ற நமது தலைவர்கள் எல்லாம் பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள்; நமது ஜனநாயகத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட பொழுது, முன்னுதாரணமாக விளங்கியவர்கள். ஆனால் இன்று பொதுவாழ்க்கையில் பெருகிவிட்ட ஊழல் தலைவர்களால், நாம் அந்தத் தலைவர்களில் பலரை மறந்தே போய்விட்டோம்.

அதே நேரத்தில் ஆறுதலான சில விஷயங்களும் இருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற சுயேச்சையான அமைப்புகளின் சிறப்பான செயல்பாடுகளும், பொதுவாழ்வில் சிறிது அளவாவது அடிப்படை நேர்மை இருப்பதற்குக் காரணமாக இருக்கின்றன.

எனவே, இந்தியாவில் ஜனநாயகம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகக் கூற முடியாது. மாறாக துடிப்புமிக்க ஜனநாயகமாக வருங்காலத்தில் வளர்ந்தோங்குவதற்குத் தேவையான வன்பொருளும் மென்பொருளும் இந்தியச் சமூகத்தில் இருக்கின்றன என்பதே காரணம்.

Posted in 144, Amartya, Bhutto, Churchil, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Culture, Democracy, Emergency, Epic, Federal, Freedom, Govt, Hindu, Hinduism, Hindutva, History, Independence, Indhra, India, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Law, Liberation, Mahabharatha, Misa, National, Naxal, Oppression, Order, Pakistan, Police, POTA, Republic, Sen, TADA, Tradition, Values, Vittal | Leave a Comment »

Iraa Sezhiyan – ‘Reason yet to be given for the Meeting Cancelation’

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

காவல்துறையினரின் கடமை

இரா. செழியன்

ஒரு நாட்டில் மக்களுக்குத் தேவையான வசதிகள் பல முனைகளில் வேகமாகப் பரவியும் வளர்ந்தும் வரும் நிலையில், அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் பொறுப்புகளும் அதிகமாகின்றன. அவற்றை ஒட்டி நாட்டின் சட்டங்களும் வேலைத் திட்டங்களும் எண்ணற்ற அளவில் விரிவடைந்து வருகின்றன.

மக்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்பட வேண்டிய பணிகளை அரசாங்கம் பல துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம், நிறைவேற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது. நிர்வாகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்றவாறு, நுணுக்கமாகச் சட்டத்தில் எழுதி வைக்க முடியாது. அதற்காக பணிகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது. நடைமுறையில் உண்டாகும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு உசிதப்படி அதிகாரிகள் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

உசிதப்படி செயல்பட வேண்டும் என்பதால், மனம் போன போக்கில் ஒவ்வோர் அதிகாரியும் தமக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. சட்டத்தை மீறி, சட்டத்தின் நோக்கத்தை மீறி, தேவையற்ற நியாயமற்ற முறையில் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை ஓர் அதிகாரி பயன்படுத்தினால், அது கொடுங்கோன்மை மிக்க எதேச்சாதிகாரமாக ஆகிவிடும்.

கலவரத்திலும் வன்முறையிலும் ஒரு கும்பல் ஈடுபட்டால், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் எடுக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் விதிமுறைகளை வகுத்திருக்கிறது. எச்சரிக்கை, கண்ணீர்ப்புகை, தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்பவற்றில் ஒன்றை உசிதப்படி அதிகாரிகள் கையாள வேண்டும். அப்படி இல்லாமல், எடுத்ததெற்கெல்லாம் துப்பாக்கிப் பிரயோகத்தை போலீஸ் பயன்படுத்தக் கூடாது.

அக்டோபர் 24, 2006ஆம் நாளன்று ராஜாஜி பொதுவிவகார மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம், சென்னைப் போலீஸ் கமிஷனரிடமிருந்து அனுமதி வழங்கப்படாத காரணத்தால், ரத்து செய்யப்பட்டது.

பொதுவான அமைதி – ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய நிலைமைகளில், இபிகோ 144 பிரிவின் கீழ் கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதிக்கிறது. கூட்டங்கள் – ஊர்வலங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன்கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம் அல்லது அனுமதி வழங்காமற் போகலாம்.

அனுமதி வழங்காத நிலைமையில் போலீஸ் கமிஷனர் கையாள வேண்டிய முறைகளை சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது. கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பு அளித்து, நேரிடையாக அவரோ, அவருடைய வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

அதன்பிறகும் அனுமதி வழங்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவு எடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

அக்டோபர் 24 கூட்டத்திற்கான மனுவின் மீது, தமது வாதங்களை முன்வைக்க ராஜாஜி மையத்தைச் சேர்ந்தவருக்கோ, அவரது வழக்குரைஞருக்கோ, வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பிறகு, சட்டப்படி அனுமதி வழங்கப்படாததற்கான காரணத்தை எழுத்து மூலம் உத்தரவில் தந்திட, சென்னைப் போலீஸ் கமிஷனர் தவறிவிட்டார்.

ஒருவேளை எழுத்து மூலம் காரணங்களை எழுதி போலீஸ் கமிஷனர் தமது அலுவலகக் கோப்பில் வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால், முடிவில் அனுமதி கேட்டவருக்கு கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ஏற்பட்டுவிட்டது. சட்டத்தை மீறி கூட்டத்தை நடத்த விரும்பாமல், கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதற்கான அறிவிப்பை பொதுமக்களின் பார்வைக்கு கூட்ட அமைப்பாளர்கள் வைத்தார்கள்.

கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால், கூட்டம் நடத்துவதற்குத் தடை போடப்படவில்லை என்று எடுத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம்; மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறலாம்.

ஆனால் போலீஸ் சட்டத்தில் 6-வது விதிமுறையில் ஒரு கடும் எச்சரிக்கை இருக்கிறது. போலீஸ் அனுமதியைப் பெற வேண்டிய கட்டாயம் அமலில் இருக்கும்பொழுது, அனுமதி பெறாமல் யாராவது கூட்டம் நடத்தினால், ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிறைவாசம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்கான குற்றத்துக்கு அவர் ஆளாக நேரிடும் என்பதுதான்.

நிர்வாகத்தின் உள் அமைப்பில் எத்தகைய ஏற்பாடுகளைச் செய்து கொண்டாலும், சட்டத்தின்படி பொறுப்பை வகிப்பவர் சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனுமதி வழங்குவதைக் கவனித்திருக்க வேண்டும். வெளிப்படையாக நமக்குத் தெரிவது, கூட்டம் நடத்துவதற்கான அனுமதி அன்று வரவில்லை, கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பவைதாம்.

பொதுக்கூட்டம், தனிப்பட்ட ஓர் அமைப்புக்காகவோ, ஒரு சிலருக்காகவோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொதுமக்கள்பட்ட இன்னல்களை வைத்து, பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது. எத்தகைய காரணங்களுக்காக அந்தக் கூட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பது தெரிந்தால், வருங்காலத்தில் கூட்டம் நடத்துபவர்களுக்கு, அது உதவியாக இருக்கும்.

மேலும், ஓர் அதிகாரிக்கு ஒரு செயல்பாட்டுக்கான அதிகாரம் தரப்பட்டிருக்கிறது என்றால், அதனை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததாக ஆகும். எந்த அளவு அதிகாரி பொறுப்பை நிறைவேற்றினார் என்பதுடன் நிறைவேற்றுவதில் குறைபாடு ஏற்பட்டால், அதனை ஆராய்ந்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மக்களாட்சி முறையில் ஏற்படுகிறது.

கூட்டம் நடைபெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கும் வழங்காமற் போவதற்கும் காவல்துறை ஆணையருக்கு சில வழிமுறைகளை சட்டம் வகுத்திருக்கிறது. ஆனால் அந்த வழிமுறைகளின்படி சென்னை காவல்துறை நடந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்கள் எவை என்பதை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

Posted in 144, atrocity, Ban, cancel, Cho, Cho Ramaswamy, Commissioner, Democracy, DMK, Era Sezhiyan, Iraa Sezhiyan, Karunanidhi, Meeting, MK, Police, POTA, TADA, Tamil, Tamil Nadu, Thuglaq, VR Lakshminarayanan | Leave a Comment »