Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 4th, 2008

Communist Party of India-Marxist (CPI-M) meet

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2008

முதுமையும்…இளமையும்..!

கோவை, ஏப்.3: “95 வயது மூத்த தலைவர் முதல் 28 வயது இளைஞர்கள் வரை மொத்தம் 787 பிரதிநிதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றனர்.

கோவையில் ஆறு நாள்கள் நடைபெற்ற இம் மாநாட்டின் மூத்த பிரதிநிதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர் முகர்ஜி. கேரளத்தைச் சேர்ந்த கே.ஐஷபீர், எம்.சுவராஜ் இருவரும் பிரதிநிதிகளில் மிகவும் இளையவர்கள். மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளமாணவர் ரித்ரபிரதா பானர்ஜி சிறப்பு அழைப்பாளர்களில் மிக இளையவர்.

மார்சிஸ்ட் “எம்.ஜி.ஆர்.’…: அதேபோல கட்சியில் நீண்ட நாள்களாகப் பணியாற்றி வரும் ஆர்.உமாநாத், இம் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார். சிபிஎம்மின் எம்ஜிஆர் என அழைக்கப்படும் இவர், 1939-ல் இருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்சிப் பணியில் இருக்கின்றனர்.

இவரது மனைவி பாப்பா உமாநாத் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தவர். மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவின் சிறப்பு அழைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களது மகள் உ.வாசுகி மத்தியக் குழு உறுப்பினராகவும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா இருவரும் இதுவரை நடந்துள்ள 19 அகில இந்திய மாநாடுகளில் ஒரு மாநாட்டைத் தவிர அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளனர். மூத்த தலைவர்களான சுர்ஜித், ஜோதிபாசு இருவரும் கோவை மாநாட்டில் மட்டும் தான் பங்கேற்கவில்லை. குறுகிய கால கட்சி அனுபவம் உள்ள தில்லியைச் சேர்ந்த ஷீபா பருக்கி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.

இம் மாநாட்டில் பங்கேற்ற 787 பிரதிநிதிகளில் 87 பேர் பெண்கள். கடந்த மாநாட்டை ஒப்பிடும்போது பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

Posted in Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM | Leave a Comment »

Petroleum minister asks for zero duty on crude oil – Cuts to cost around Rs 4K cr, fiscal deficit may go up

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2008

இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் திவாலாகும்: பிரதமரிடம் முரளி தேவ்ரா தகவல்

புது தில்லி, ஏப். 3: கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியைக் குறைக்காவிடில் பெட்ரோலிய நிறுவனங்கள் கடன் சுமையால் திவாலாகிவிடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார்.

இறக்குமதி வரியை நீக்காவிடில் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ. 1,30,000 கோடியைத் தாண்டும் என்றும், இதனால் அவை திவாலாகும் சூழல் ஏற்படும் என்று பிரதமரிடம் அவர் சுட்டிக்காட்டினார். புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின்போது தனது கருத்தை அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் முரளி தேவ்ரா கூறியது:

சமையல் எண்ணெய் விலையைக் குறைக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை அரசு ரத்து செய்தது. அதைப் போல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரை எட்டியுள்ளது. தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை முற்றிலும் நீக்க வேண்டும்.

2007-08-ம் நிதி ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 77,304 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 1,30,000 கோடியை எட்டும் என தெரிகிறது.

கடன் பத்திர வெளியீடு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் திரட்டிய தொகை போதுமானதல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் ரூ. 20,333 கோடியும் பிறகு ரூ. 12,675 கோடியும் திரட்டப்பட்டது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி), மற்றும் இந்திய நிலவாயு ஆணையம் (“கெயில்’) ஆகியவை அளித்த மானியம் ரூ. 12,000 கோடி. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் எதிர்கொண்ட இழப்பை ஈடுகட்டும் அளவுக்குப் போதுமானதாக இல்லை.

இறக்குமதி வரிக் குறைப்பு யோசனையை பிரதமர் ஏற்கவில்லை. அதற்குப் பதில் மேலும் கடன் பத்திரங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ரூ. 450 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் அரசு அனுமதிக்கவில்லை. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 10.78-ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 17.02-ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 316.06-ம் நஷ்டம் ஏற்படுகிறது. கெரசினுக்கு லிட்டருக்கு ரூ. 25.23 நஷ்டத்தை சந்திக்கின்றன.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் 32 டாலராக இருந்தபோது 5 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது 100 டாலரைத் தாண்டிய நிலையில் அரசுக்கு எண்ணெய் இறக்குமதி மூலமான வருவாய் அதிகரித்துள்ளது. 2007-08-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ரூ. 7,804 கோடி இறக்குமதி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. அதேசயம் 2006-07-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஓராண்டுக்கும் கிடைத்த தொகை ரூ. 10,043 கோடியாகும்.

கச்சா எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு அளிப்பதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ஓரளவு தவிர்க்க முடியும் என்ற சூழல் நிலவியது. ஆனால் அதற்கு பிரதமர் அனுமதிக்கவில்லை.

Posted in Cost, Customs, Deficit, Diesel, Duty, Economy, energy, Exports, Finance, fiscal, Gas, Imports, Petrol, Petroleum | Leave a Comment »