Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 25th, 2008

Economic upliftment for the needy – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஏழைகளின் எதிரி யார்?

“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்குத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

சிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

இந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.

ஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன?

மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.

தென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.

“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.

  • மேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;
  • தனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.
  • கேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,
  • தனியார் துறையில் 5.39%.
  • தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,
  • தனியார் துறையில் 11.35%.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.

இந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே?

Posted in Budget, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Dinamani, Economy, Editorial, Finance, GDP, Needy, Op-Ed, Poor, Prices, Rich, Wealthy | Leave a Comment »

Parimalam – Adopted son of late TN CM Arinjar Annadurai: Ira Sezhiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

பரிமளத்தைப் பறிகொடுத்தோம்

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் மகன் பரிமளம் திடீரென மறைந்தது என்னைப் போன்றோர்க்கு சோகம் மிக்க தாங்கொணாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.

1944இல் அண்ணாவுடன் நான் முதலில் காஞ்சிபுரம் சென்றபொழுது பரிமளம் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான். அவனுடைய தம்பிமார்களாக இளங்கோவன், கௌதமன், பாபு ஆகியோர் இருந்தனர். பரிமளம் அண்ணாவினாலும், எங்களாலும் “பரி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டான். உற்சாகமான, பொறுப்புள்ள மகனாக, மாணவனாக, பிறகு மருத்துவராக பரிமளம் வளர்ந்தான். அண்ணா ஈடுபடும் ஒவ்வொரு காரியத்திலும், “திராவிட நாடு’ இதழாக இருந்தாலும், நூல் வெளியீடாக இருந்தாலும், அண்ணாவின் நாடகமாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் பரிமளத்தின் பங்கு இல்லாமல் போகாது.

மலேசியா, சிங்கப்பூர், கிழக்கு நாடுகளுக்கு அண்ணாவுடன் நானும் சென்றிருந்தபொழுது, அங்கிருந்து அவனுக்காக ஒரு “ஸ்டெதாஸ்கோப்’ வாங்கி வந்தோம். பரிமளம் அப்பொழுது மருத்துவக் கல்லூரியில் மாணவன். அவன் டாக்டராக ஆவதில் அண்ணாவுக்குப் பெரும் மகிழ்ச்சி. பரிவும், பண்பும், பாசமும், நேசமும் உள்ள ஒருவராகவே பரிமளம் வளர்க்கப்பட்டார். அவரும் வளர்ந்து வந்தார்.

அண்ணாவின் காலத்திலேயே பரிமளம் அரசியல் கட்சியில் நேரடியாக ஈடுபாடு காட்டவில்லை. அண்ணாவும் அந்த முறையில் அவரை வளர்க்கவில்லை. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு கூட நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அண்ணாவின் அறைக்குப் பரிமளம் சென்றார். அரசாங்க நிர்வாகத்திலும், அதிகாரிகளிடமும் எந்த வகையிலும் அவர் தொடர்பு கொண்டதில்லை.

அண்ணா மறைந்த பிறகு, ஓரிரு ஆண்டுகள் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகளின்பொழுது, நானும் கடற்கரைக்கு மற்ற கழகத் தலைவர்களுடனும், தோழர்களுடனும் சென்று அண்ணாவின் சமாதி முன் அஞ்சலி செலுத்துவதுண்டு. ஆனால், வர வர சமாதிக்குச் செல்லும் ஊர்வலத்தில் முந்திச் செல்வதற்கும், முன் நிற்பதற்கும் நடைபெறும் நெருக்கடியை என்னால் ஈடுகொடுக்க முடியாமல் அவ்வாறு செல்வதை நான் தவிர்த்துக் கொண்டேன். ஆனால், ஒவ்வோராண்டும் அண்ணாவின் பிறந்த நாள் – நினைவு நாள் அன்று அண்ணி ராணி அம்மையாரைக் காண பரிமளம் அல்லது இளங்கோவன் இல்லங்களுக்குச் சென்று வருவேன். அண்ணா வாழ்ந்த இடத்தில் அவர்களுடன் இருந்தவர்களைக் காண்பதில், அண்ணாவைப் பற்றிப் பேசுவதில் ஒருவகை ஆறுதல் இருந்தது.

ராணி அம்மையார் மறைந்த பிறகு, ஆண்டுதோறும் அண்ணாவின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று நுங்கம்பாக்கம் அவென்யு சாலையிலுள்ள அண்ணாவின் தாயகத்திற்குத் தவறாமல் சென்று பரிமளத்தையும், அவர் குடும்பத்தினரையும் நான் காண்பது வழக்கம். பரிமளம் ஒரு முறை கூறினார்: “”நான் கூட அண்ணா சமாதிக்கு இப்பொழுது செல்வதில்லை.”

அண்ணாவின் கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றில் பல வெளியிடப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து வெளியிடுவதில் பரிமளம் ஈடுபட்டிருந்தார்.

புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுக்கும் அகழ்வாராய்ச்சியாளர்களைப் போல, மறைந்து கிடக்கும் அண்ணாவின் இலக்கியப் படைப்புகளை வெளிப்படுத்துவதில் அரிய அகழ்வாராய்ச்சியாளராக பரிமளம் விளங்கினார். அதன் விளைவாக, இதுவரை மறைந்து கிடந்த அண்ணாவின் பல கட்டுரைகள், பேச்சுகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

சென்ற மாதம் அண்ணா நினைவு நாளன்று வழக்கம்போல் அவரது இல்லத்தில் பரிமளத்தைச் சந்தித்தேன். அப்பொழுதும் இதுவரை வெளிவராமல் உள்ள அண்ணாவின் கட்டுரைகளைத் திரட்டி வெளியிடுவது பற்றி ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் அவர் பேசினார்.

அண்ணாவின் குடும்பத்துடன் கலந்திருந்த நம்மில் பலருக்கு பரிமளத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Posted in Anjali, Anna, Annadurai, Biosketch, Faces, Foster, Memoirs, Parimalam, people, Sezhiyan, Son | Leave a Comment »

Mar 25: Eezham, Sri Lanka, LTTE, India, Tamil Nadu, War, TR – Updates & News

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 மார்ச், 2008 

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

தேர்தல் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகண சபையின் முதலாவது தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழனன்று ஆரம்பமானது.

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து 37 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை அடுத்த வியாழக்கிழமை வரை மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலையொட்டி வீதித் தடைகளும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படும் 35 உறுப்பினர்களுடன் கூடுதல் வாக்குககளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு போனஸ் உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 37 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபைக்கான தேர்தலின்போது, 9 லட்சத்து 82 ஆயிரத்து 728 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள்.

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து திருகோணமலையில் வரதராஜபெருமாள் அவர்கள், ஒருங்கிணைந்த அந்த மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் தலைமையிலான மாகாணசபையின் ஆட்சிமன்றம் சுமார் ஒரு வருட காலம் செயல்பட்டது.

அதன் பிறகு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த தேர்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முடங்கிப்போயின.

இதனிடையே கடந்த ஆண்டு இலங்கையின் உச்சநீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் தனித்தையாக பிரிக்கவேண்டும் என அளித்த தீர்ப்பை அடுத்து இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.

இவ்வாறு பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் வரும் மேமாதம் நடைபெறவுள்ளது. .

ஏற்கனவே மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள், மத்திய அரசுகளினால் படிப்படியாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறும் வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான எஸ்.எஸ்.எம் ஹனீபா, நடைபெறவிருக்கும் தேர்தல் முதலமைச்சர் தெரிவுக்கான ஒன்றாகவே தான் நோக்குவதாகக் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படும் என மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையார் டி.கிருஷ்னானந்தலிங்கம் தெரிவிக்கிறார்.


‘பிரபாகரன்’ திரைப்பட இயக்குநர் இலங்கையில் உண்ணாவிரதம்

மருத்துவமனையில் இயக்குநர் பீரிஸ்

சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இயக்குநர் துஷாரா பீரிஸ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினையும் ஆரம்பித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரபாகரன் என்ற தனது திரைப்படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் சென்னை ஜெமினி ஸ்டூடியோவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும்போதே, சுமார் 200க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இவர், தனது படச்சுருள்களும், பிரதிகளும் இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசும், இலங்கை அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு தனது படச்சுருள்களை தனக்கு மீளப் பெற்றுத்தரும் வரை தனது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

தனது படம் தமிழர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்றும், இது தமிழர் விரோதத் திரைப்படம் அல்ல என்றும் தெரிவித்த துஷாரா பீரிஸ், 30 வருடகால யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிங்கள, தமிழ் பாமர மக்களே என்பதனை எடுத்துக்காட்டுவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.

இதனிடையே சர்ச்சைகுரிய இந்தத் திரைப்படம் வியாழனன்று சென்னையில் தமிழ் ஆர்வலர்களுக்குத் திரையிடப்பட்டது. தமிழக திரைப்படத் துறையைச் சேர்ந்த பலருடன் இந்தப் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


பிரிட்டனில் தஞ்சம்கோரும் அகதிகள் நிலை மோசம்: சுயாதீன ஆய்வு முடிவு

அகதிகள் நிறைய பேர் அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்

பிரிட்டனில் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விவகாரம் பற்றி ஆராய்ச்சி செய்த சுயாதீன ஆணையம் ஒன்று, மனிதாபிமான மற்றும் நாகரீக வளர்ச்சியடைந்த ஒரு சமூகத்தில் இருக்கவேண்டிய தரத்திலல்லாமல் மோசமான நிலையை அகதிகள் எதிர்கொள்ள நேரிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் பிரிட்டனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயம் இது. தஞ்சம் கோருவோர் தொடர்பான பிரிட்டனின் கொள்கைகள் குறித்து நடத்தப்பட்ட இந்த சுயாதீன ஆராய்ச்சியில் அதிர்ச்சிதரும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், ஆர்வலர்கள் என்று பல் வேறு தரப்பினரோடு. தஞ்சம் கோரிய அகதிகளும் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டனர். அவர்களது வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டு இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கையின் முடிவுகளை பிரிட்டனின் எல்லைகள் மற்றும் குடிவரவுத் துறை நிராகரித்துள்ளது. உறுதியாகவும் அதே நேரம் மனிதாபிமானத்துடனும் தமது செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும். கவனமாகவும் பரிவுடனும் தாங்கள் அகதிகளைக் கையாளுவதாகவும் அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 மார்ச், 2008


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி முடிவு

அஸாத் சாலி

எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் வியாழனன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதில் போட்டியிடப்போவதாக முடிவு செய்திருக்கின்றது.

இம்மாத முற்பகுதியில், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி அதில் பங்குபெற ஐக்கிய தேசியக் கட்சி மறுத்திருந்தது.

ஆனால் தற்போது அங்கு இடம்பெற உத்தேசிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்பதற்கு கட்சி எடுத்துள்ள முடிவு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயருமான அஸாத் சாலி, தமிழ்பேசும் மக்களின் நாளாந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு முயற்சியாகவே கட்சி இதில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தமது கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்த அஸாத் சாலி, இந்தத் தேர்தலின் தானும் ஒரு முக்கிய வேட்பாளராக போட்டியிடப்போவதாகத் கூறினார்.


வவுனியா தூப்பாக்கிசூட்டில் சிவிலியன்கள் பலி

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை இராணுவ முன்னரங்க பகுதியை நோக்கி விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து தப்பிவந்ததாகத் தெரிவிக்கப்படும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீது இருதரப்பிலிருந்தும் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3 பேர் காயமடைந்துள்ளனர், 5 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் மரணமடைந்தவர்களில் ஒருவர் தமிழர் என்றும் ஏனைய அனைவரும் சிங்களவர்கள் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை இராணுவத்தினர் உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 5 பேரும் இராணுவ பொலிசாரின் விசாரணைகளின்போது தெரிவித்துள்ள தகவல்களின்படி, தாங்கள் மொத்தம் 12 பேர் என்றும், தங்களை 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி, 3 வள்ளங்களில் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று முரசுமோட்டை – வள்ளிபுனம் பகுதியில் தங்களைத் தடுத்து வைத்திருந்ததாகக் கூறியிருக்கின்றனர்.

அங்கிருந்து 4 தினங்களுக்கு முன்னர் தப்பிவந்து, புதனன்று பகல் ஓமந்தை முன்னரங்கப் பகுதியில் இராணுவ பகுதியை நோக்கி வந்தபோது தங்களைக் கண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், எனினும் தாங்கள் தொடர்ந்து ஓடியபோது இராணுவத்தினரும் தங்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் மன்னார் ஆலங்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கத் தளங்கள் மீதும், கிளிநொச்சி விசுவமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் வள்ளங்கள் கட்டும் தளத்தின் மீதும் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் உலங்கு வானூர்திகளும், தாக்குதல் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி அவற்றை அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.


மட்டக்களப்பில் அதிரடிப் படையினர் மீது கிளேமோர் தாக்குதல்

மருத்துவமனையில் காயம்பட்ட பெண்ணொருவர்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 2 பொலிசார் கொல்லப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்தில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 4 பேர், 3 சிவிலியன்கள் என 7 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்த ஜப்பானிய உதவி நிறுவனக் குழுவொன்றின் வாகனத் தொடரனிக்கு பாதுகாப்பின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிசாரே இதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட வாகனத் தொடரனியும் வழமை போல் காலை நேர வீதிக் கண்கானிப்பில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரும் வாழைக்காலை சந்தியை அடைந்தபோது, தூரத்திலிருந்து இந்த கிளேமோர் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பு என பாதுகாப்பு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


பிரபாகரன் பற்றிய சிங்களப் படம் இயக்கியவர் சென்னையில் ‘தாக்கப்பட்டார்’

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்த படத்தை இயக்கிய இலங்கை திரைப்பட இயக்குநர் துஷாரா பீரிஸ் அவர்கள், தமிழகத் தலைகர் சென்னையில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்குநருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியன் அவர்கள், இந்த சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பது குறித்தும், தங்களின் எதிர்ப்பு ஏன் என்பது குறித்தும் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

—————————————————————————————————————–

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ராஜேந்தர் தனது தமிழக அரச பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் குரல் கொடுப்பதற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தான் வகித்துவந்த தமிழக அரசின் சிறு சேமிப்புத் துறையின் துணைத் தலைவர் பதவியை திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களைக் கொன்றுகுவிக்க இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா கைகொடுப்பதாகக் குற்றஞ்சாட்டும் ராஜேந்தர் அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குவதையும், பயிற்சிகளை வழங்குவதையும் தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை இலங்கைத் தமிழர் ஒருவர்தான் கொலை செய்தார் என்பதற்காக, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையும் புறக்கணிப்பது நியாயமல்ல என்றும் ராஜேந்தர் கூறினார்.

தான் எந்த விதமான வன்முறை இயக்கத்துக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றும் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகவே தான் குரல் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் என்பது ஒரு அங்கம் என்றும், அது மாத்திரமே இலங்கையில் இருக்கக்கூடிய ஒட்டு மொத்தத் தமிழினம் என்று முத்திரை குத்தக் கூடாது என்றும் ராஜேந்தர் தெரிவித்தார்.

அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கடற்புலிகளின் படகை மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை கூறுகிறது

கடற்புலிகள்
கடற்புலிகள்

இலங்கையின் வடகிழக்குக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் படகுத் தொகுதி ஒன்றுடன் தாம் சண்டையிட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கடற்புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ள போதிலும், அதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்று அது எதுவும் கூறவில்லை.

கடற்படைப்படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு, அதில் பத்து சிப்பாய்கள் கொல்லப்பட்டதை அடுத்த சில தினங்களில் இந்த மோதல் நடந்துள்ளது.

அந்தக் கடற்படைப்படகை தமது தற்கொலைக் கடற்கரும்புலிகள் தாக்கியதாக விடுதலைப்புலிகள் முன்னர் கூறியிருந்தனர்.

ஆனால், அந்தப் படகு கடற்கண்ணி ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்திருந்தது.


Posted in Eelam, Eezham, India, LTTE, Rajeev, Rajendar, Rajiv, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, TR, War | 1 Comment »

TJS George – Good old Bombay days: India – North vs South in Mumbai

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அது பம்பாய் காலம்…

டி.ஜே.எஸ். ஜார்ஜ்


சில நாள்களுக்குமுன் காலமான பிரபல பத்திரிகையாளர் ஆர்.கே. கரஞ்சியாவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலே பம்பாயில் “வட இந்தியர்’களை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருந்தனர் குண்டர்கள். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு ஏதும் கிடையாது. ஆனால், சிறப்புமிகு விழுமியங்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டிருப்பதையும், மறுபுறம் அந்த இடத்தில் தேசபக்தி என்ற போர்வையில் குண்டர்களின் ஆட்சி தலைதூக்கிக் கொண்டிருப்பதையும் அவ்விரு சம்பவங்களும் சித்திரித்தன.

அந்த நாளைய பெருமைக்குரிய பம்பாயின் சின்னமாகத் திகழ்ந்தவர் ருஸ்ஸி கரஞ்சியா. சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலான சமயங்களில் காந்திஜி தங்கியிருந்தமையால் ஒரு வகையில் 1940-களில் இந்தியாவின் அரசியல் தலைநகரம் போலவே திகழ்ந்தது பம்பாய். காந்திஜி தங்கியிருந்த இடத்திலிருந்து கூப்பிடு தொலைவில்தான் இருந்தார் ஜின்னா.

1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக மட்டுமன்றி, நாட்டியம், நாடகம், இலக்கியம், ஓவியம் ஆகிய கலைகளின் தலைநகரமாகவும் மேட்டுக்குடி வாழ்க்கை நளினங்களின் இருப்பிடமாகவும் அறிவுச்சுடர் பிரகாசிக்கும் நகரமாகவும் திகழ்ந்தது பம்பாய். கொடுக்கவும் எடுக்கவும், பகிரவும் கற்கவும் உலகமே கூடும் இடமாக இருந்தது பம்பாய்.

எடுத்துக்காட்டாக, அன்று கலா கோதா பகுதியில் உள்ள ஓர் அறையில் முற்போக்குக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சமுதாயத்துக்கு அறிமுகமே ஆகியிராத, படைப்பார்வமிக்க கே.எச். ஆரா, வி.எஸ். கெய்தாண்டே, எஸ்.எச். ராஸô, எப்.என். செüஸô, எம்.எப். ஹுசைன், கே.கே. ஹெப்பார் போன்றவர்கள். இன்று அவர்கள் கலை உலக மகுடத்தில் மாணிக்கங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். கலா கோதாவோ, இன்று உலகின் சிறந்த கலைநகரங்களுக்கு இணையானது என்று கூறும் அளவுக்கு வளர்ந்துகொண்டிருக்கிறது.

தற்செயலாக நிகழ்ந்ததோ, என்னவோ; ஆனால், அன்றைய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் காக்க வந்த தேவதைகளைப்போல வந்தனர், ஜே.ஜே. கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் வால்டர் லாங்கமர், விளம்பர உலகின் குருவான ரூடி வான் லேடன், பத்திரிகை ஆசிரியரான சி.ஆர். மண்டி ஆகிய திரிமூர்த்திகள். ஒரு முழுத் தலைமுறையின் அழகியல் உணர்வுகளை, சிந்தனைகளை வடிவமைத்து வளர்த்தெடுத்தனர் அவர்கள்.

ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் இந்தியர்களா, வட இந்தியர்களா என்று யாரும் அன்று கேட்கவில்லை. அன்றைய பம்பாயின் சிறப்பு அத்தகையது. “”இந்தியாவின் உயிரோடு கலந்தது; அதன் ஓர் அங்கம்” என்ற, அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த பர்மா ஷெல் நிறுவன விளம்பர வாசகங்களைப்போல, இந்திய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவர்கள் அவர்கள்.

அன்று பாரீஸ் நகரிலிருந்து இந்தியா திரும்பிய ராஜா ராவ் அளித்த உத்வேகத்தில், “சேத்தனா’ என்ற பெயரில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டது. அதுவும் கலா கோதா பகுதியில்தான் அமைக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க ழான் பால் சாத்தரின் சிற்றுண்டிச்சாலையாக இருக்கவில்லை. அங்கு வழக்கமாக வருவோரில் முல்க் ராஜ் ஆனந்தும் ஒருவர்.

அங்கிருந்து சில கட்டடங்கள் தள்ளி, வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது பயணத்தைத் தொடங்கியிருந்தார், நாடக உலகுக்குப் புதிய திசைவழியைக் காட்டிய இப்ராகிம் அல்காஜி. அப்போது அங்கிருந்த ஒரே ஆடம்பர ஹோட்டல் தாஜ் மட்டும்தான். அன்றைய வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது அம்பாசடர் ஹோட்டல். ஆனால் அவற்றையெல்லாம் விஞ்சி ஓஹோவென்றிருந்தது இந்தியா காபி ஹவுஸ்.

முற்றிலும் மாறுபட்ட நாகரிகத்துக்கு மாறத் தயாராக இருந்தவர்களுக்காகவே திறக்கப்பட்டிருந்தது கொலாபாவில் இருந்த லெப்போல்ட் கஃபே. “”சாந்தாராமை”ப் பற்றி எழுதுவதற்கும். “லெப்போல்டை’ உலகம் முழுவதும் பிரபலமாக்குவதற்கும் கிரகோரி டேவிட் ராபர்ட்ஸýக்கு அரை நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும்.

மொரார்ஜி தேசாய் ஆட்சி நடந்துகொண்டிருந்ததும், அவரது மதுவிலக்குக் கொள்கையும் அமலில் இருந்ததும் அந்த பம்பாயில்தான். ஒரு சுவர் அலமாரி முழுவதும் உலகின் மிகச் சிறந்த விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மது வகைகள் அணிவகுத்து நின்ற, கரஞ்சியாவின் மெரைன் டிரைவ் இல்லம் இருந்ததும் அதே பம்பாயில்தான்.

உண்மையிலேயே உலகப் பண்பாட்டில் ஊறியவர் கரஞ்சியா. மாமனிதர்களுடன் பழகிய அதே நேரத்தில், சாமானியர்களின்பாலும் அக்கறை கொண்டிருந்தவர் அவர்.

தனது அலுவலக உதவியாளருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமானால், ஆசிரியர் குழுக் கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, தானே காரை ஓட்டிக்கொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர் கரஞ்சியா. தினமும் காலை 11 மணிக்கு நீர் கொண்டு தரும் கடைநிலை ஊழியருக்கு நன்றி தெரிவிக்க ஒருபோதும் தவறாதவர் அவர்.

பழைய உலகின் மாண்புகளையும் நவீன உலகின் நளினங்களையும் சிறந்த கலாசார விழுமியங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியவர் ருஸ்ஸி கரஞ்சியா. அன்றைய சிறப்புமிகு பம்பாயைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர் அவர்.

ஆனால் இன்றோ, போயேபோய்விட்டன அந்தப் பழைய பெருமைகளெல்லாம்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in 1947, BJP, Bombay, Culture, Divided, Federal, Freedom, George, Heritage, Independence, Karanjia, Mumbai, Nation, National, North, Russy, Russy Karanjia, Sentimental, Sentiments, Separate, Separatists, Shiv Sena, Shivsena, South, State, Thackeray, Tradition, Unity | Leave a Comment »

Primary vs. General Election funds: USA & India Poll Finances: Madhavan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஊழலின் ஊற்றுக்கண்!

செ. மாதவன்

சரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.

அரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.

விதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.

அதிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.

1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.

ஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.

உள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட்சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.

பல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.

ஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.

1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் தேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.

அதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.

1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.

அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்டும். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.

ஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.

46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.

அரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.

நல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்)

Posted in Actors, AIADMK, America, Anna, Annadurai, Assets, Balance, Bribery, Bribes, Cinema, Clinton, Commission, Conferences, Corruption, DMK, EC, Elections, Expenditure, Films, Finance, Finances, Funds, Huckabee, Income, India, IT, JJ, kickbacks, KK, Madhavan, McCain, MGR, Mitt, Movies, Obama, Party, Polls, Poor, President, Primary, Rich, Romney, Tax, Taxes, US, USA, Wealthy | Leave a Comment »

“User development fees” at the Bangalore International Airport

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

சர்வதேச விமானநிலைய கட்டண வசூலை நிறுத்திவைக்க யோசனை

பெங்களூர் அருகே உள்ள தேவனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்குமாறு இந்த விமானநிலைய நிறுவனத்துக்கு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது சர்வதேச விமானநிலையம். இந்த விமானநிலையத்தில் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விமானநிலையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பெரும் முதலீட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான திட்டச் செலவை ஈடுகட்டவும் பராமரிப்புச் செலவைச் சரிக்கட்டவும் இந்த விமானநிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகளிடம் தனி மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க முடிவுசெய்யப்பட்டது.

இந்தக் கட்டணத் தொகையானது உள்நாட்டுப் பயணிகளுக்கு சற்று குறைவாகவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சற்று கூடுதலாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

பெங்களூரில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் எச்ஏஎல் விமானநிலையத்தை ஒப்பிடும்போது தூரம், நேரம், பணம் அதிகமாக விரயமாவதால் புதிய சர்வதேச விமானநிலையத்திற்கு பல தரப்பில் ஆட்சேபம் எழுந்தது.

அதுமட்டுமன்றி, சென்னை உள்ளிட்ட அண்டை மாநில நகர்களுக்கு சர்வதேச விமானத்தில் இருந்து செல்லும்போது காலவிரயமும் பணவிரயமும் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இரு விமானநிலையங்களையும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் தேவனஹள்ளி சர்வதேச விமானநிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அபிவிருத்திக் கட்டணம் வசூலிக்கும் முடிவை விமானநிலையத் திட்டச் செலவின் தணிக்கை அறிக்கை வரும்வரை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.

இதுபோன்ற யோசனையை ஹைதராபாத் சர்வதேச விமானநிலைய நிறுவனத்திடம் கூறியபோது அதைப் பரிசீலித்து அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த யோசனைப்படி, முதல் 4 மாதங்களுக்கு உள்நாட்டுப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக் கட்டணத்தை வசூலிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அமைச்சகம் கூறிய யோசனையைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியது பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனத்தின் நிர்வாகத்தின் பொறுப்பு என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பிரன்னர் தெரிவித்தார்.

கட்டண விலக்கு காலமாக அறிவிக்கப்பட்டுள்ள 4 மாத காலத்திற்குள் மேம்பாட்டுக் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிட ஹைதராபாத் சர்வதேச விமானநிலையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பெங்களூர் சர்வதேச விமானநிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் விமானம் தரையிறங்கிப் புறப்பட்டுச் செல்லும். இந்த விழாவில் கலந்துகொள்ள பெங்களூர் வரும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் சாவ்லா தலைமையிலான குழு இந்த விஷயம் குறித்து விமானநிலைய நிறுவன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டுப் பயணிகளிடம் ரூ.675 மற்றும் வரியை மேம்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் ரூ.955 மற்றும் வரியை வசூலிக்கவும் பெங்களூர் சர்வதேச விமானநிலைய நிறுவனம் முடிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Posted in AAI, Airport, Andhra, AP, aviation, Bangalore, Bengaluru, Devanahalli, Domestic, Hyderabad, International, Mandakalli, Mysore, UDF, User, Vayudoot | Leave a Comment »

Aadhimoolam – Anjali by Ku Pugazhendhi

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

ஆதிமூலம் – ஓவியர் கு. புகழேந்தி

ஓவியர் ஆதிமூலம் ஒரு சிறந்த மனிதர், சிறந்த கலைஞர். நவீன ஓவியம் தமிழ்ச் சூழலில் பரவலாக, அதாவது இதழ்களில் வெளிவருவதற்கு அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. “எழுத்து’ போன்ற சிற்றிதழ்களில் அவருடைய ஓவியங்கள் வெளிவந்தது, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதேபோல் வணிக இதழ்களில், கதை, கவிதை, கட்டுைர போன்றவற்றிற்கான ஓவியங்கள், விளக்க ஓவியங்களாக மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில், அதை மட்டுமே வெளியிட்டு வந்த இதழ்களும், அதுபோன்ற ஓவியங்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன வாசகர்களும் நவீன ஓவியத்தைப் பார்க்க, பயன் படுத்தத் தொடங்கி னார்கள் என்றால் அதைத் தொடங்கி வைத்தவர் ஆதிமூலம் அவர்கள்தான்.

ஒரு ஓவியம் கதை, கவிதைக்கான விளக்கப்படம் என்ற நிலையிலிருந்து, அந்தக் கவிதை, கதையின் ஒட்டுமொத்த சாரத்தை, ஓவியத்தில் வெளிப்படுத்தி, ஓவியத்தை தனித்துவமான படைப்பாக நிலைநிறுத்தியவரும் ஆதிமூலம் அவர்கள்தான். அவர் ஓவியங்கள் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் அதன் மூலம் நல்ல அடித்தளமும் போடப்பட்டது.

அந்த அடித்தளம் தான் என்னைப் போன்றவர்களை வணிக இதழ்கள் துணிந்து பயன்படுத்தியதற்கு துணை புரிந்தது.

அவருடைய கோடுகளுக்குத் தனி அடையாளம் இருக்கிறது. அவருடைய கோடுகள் வலிமையானவை, வீரியமானவை, அழுத்தமானவை. அவற்றை அவருடைய கருப்பு வெள்ளை ஓவியங்களில் நாம் பார்க்கலாம். தமிழ்த் தொன்மங்கள் என்று சொல்லக் கூடிய அய்யனார் போன்ற நாட்டுப்புற வடிவங்களை கோட்டோவியங்களில் வெளிப் படுத்தியவர். அவருடையக் கோட்டோ வியங்கள் தனித்துவமானது. பார்ப்பவர் களை எளிதில் ஈர்க்கக் கூடியது.

நடிகர்களுடைய நடிப்பைப் பார்க்கும் போது “சிவாஜியைப் போன்று’ நடிப்பு இருக்கிறது என்று சொல்வது போல, சில ஓவியர்கள் எப்படி வரைந்தாலும் அதில் “ஆதிமூலம் போன்று’ இருப்பதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவருடைய ஓவியங்கள் தனி அடையாளத்தோடு விளங்குகின்றன.

அதேபோல் அவருடைய அரூப வெளிப்பாடான வண்ண ஓவியங்களும், தனித்துவமான அடையாளத்தோடு விளங்குகிறது. சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ஓவியரான அவர், புதிய தலைமுறைக் கலைஞர் களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர். நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பவர்.

என்னுடைய “உறங்காநிறங்கள்’ ஓவியக்காட்சி நடைபெற்ற பொழுது அழைப்பு அனுப்பியிருந்தேன். அவர் ஊரில் இல்லை. வந்ததும் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது நான் அவரிடம் “ஓவியங்களின் ஒளிப் படங்களை ஒரு நாள் உங்களிடம் எடுத்து வருகிறேன்’ என்றேன்.

“”இல்லை, வேண்டாம் அந்த நிலையை நீங்கள் கடந்து விட்டீர்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்” என்றார்.

பணிச்சுமை, காலமாற்றம் இவை களால் இல்லத்திற்குச் சென்று சந்திப்பது குறைந்துவிட்டது. இலக்கிய அரங்குகள், சில கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒரு சிலவற்றில் சந்திப்பதும் குறைந்துவிட்டது.

அவ்வப்போது தொலைபேசி உரையாடல்கள். அப்படி ஒருநாள் அவைரத் தொலைபேசியில் அழைத்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன். “இல்லை புகழேந்தி, நான் வெளியில் எங்கும் வருவதில்லை, இனிமேல் நீங்கள் எல்லாம் தான் அவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.

அவர் வெளியில் வராமல் இருந்தாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவர் ஓவியங்கள் செய்வதில் இயங்கிக் கொண்டே இருந்தார். 2008 சனவரி 27 ஞாயிறு அதிகாலை அவருடைய இயக்கம் நின்று விட்டது. ஆனால் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவரது படைப்புகளாலும் பலரது நினைவுகளிலும் தமிழ்க்கலை இலக்கிய வரலாற்றில் ஆதிமூலம் அசைக்க முடியாத ஒரு பெயர்.

Posted in Aadhimoolam, Aadhymoolam, Aathimoolam, Adhimoolam, Anjali, artists, Arts, Athimoolam, Faces, Icons, Lit, Literature, Memoirs, Notable, Painters, Paintings, Pugalendhi, Pugazendhi, Pugazhendhi, Pugazhenthi, Sculpture, Works | Leave a Comment »

Balu Mahendira’s Vanna Vanna Pookkal – Interview with Producer Thaanu

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

திரைப்பட வரலாறு :(881)
“வண்ண வண்ண பூக்கள்”
பாலு மகேந்திரா டைரக்ஷனில் தாணு தயாரித்த படம்


பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான பாலுமகேந்
திராவின் இயக்கத்தில், “வண்ண வண்ணப்பூக்கள்” என்ற படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

இந்தப் படத்தை தயாரித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தாணு கூறியதாவது:-

பாலு மகேந்திரா சந்திப்பு

“எனது அலுவலகம் அப்போது தி.நகரில் இருந்தது. ஒருநாள் காலை நான் அலுவலகத்தில் இருந்தபோது, டைரக்டர் எம்.ஆர்.பூபதி டைரக்டர் பாலு மகேந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார்.

நான் அவர்களை வரவேற்று உபசரித்தேன்.

பாலுமகேந்திரா இயக்கிய படங்களை பார்த்திருக்கிறேனே தவிர, அவர் இயக்கிய படம் எதையும் தயாரித்ததில்லை. என்ன நோக்கத்துக்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்த நேரத்தில் பாலு மகேந்திராவே என்னிடம், “தாணு சார்! நான் இதுவரை இயக்கிய படங்களில் ஒரு கமர்ஷியல் தயாரிப்பாளரை தேர்வு செய்யாமல் இருந்து விட்டேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு. அதன் விளைவாக இன்று நான் கஷ்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். எனது ஆபீசுக்கு 6 மாத வாடகை பாக்கி என்று சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. இந்த நேரத்தில் எனக்கு ஒரு படம் கொடுத்தீர்களானால், காலத்துக்கும் மறக்கமாட்டேன். இப்போது நீங்கள் எனக்கு அட்வான்சாக ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும், அது எனக்கு ஒரு லட்சம் மாதிரி” என்று கூறினார்.

ஒரு பெரிய இயக்குனர் இப்படி தன் நிலை பற்றி வெளிப்படையாகப் பேசியதில், எனக்கு மனம் பதறிவிட்டது. அப்போதே அவரிடம், “சார்! என் தயாரிப்பில் ஒரு படம் இயக்குங்கள்” என்றேன்.

“ஒரு கதை வைத்திருக்கிறேன். 26 லட்ச ரூபாய் பட்ஜெட். படத்தில் விக்னேஷ், ஆதித்யா, மவுனிகா, வினோதினி நடிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தக் கதையை சொல்லி, வீட்டிலேயே ரிகர்சல் வைத்து ஷுட் பண்ணியும் இருக்கிறேன். ஏற்கனவே கதையின் கேரக்டர்கள் இவர்களுக்கு அத்துபடி என்பதால், சீக்கிரமாக படப்பிடிப்பை முடித்துவிடுவேன்” என்றார். அதோடு அவர் சொன்ன நட்சத்திரங்கள் நடித்த சில காட்சிகளுக்கான ஸ்டில்களையும் காண்பித்தார்.

பெரிய டைரக்டர் இப்படி சொன்னதும் நான் உடனே `கேஷ் பாக்சை’ திறந்து ஒரு தொகையை அவர் கையில் கொடுத்து “கவலைப்படாதீங்க சார்! நாம படம் பண்றோம்” என்றேன்.

இளையராஜா

அப்போதே அவர் படத்தின் டெக்னிஷியன்கள் பட்டியலையும் சொன்னார். அதில் இசை என்ற இடத்தில் இளையராஜா பெயர் இருந்தது. அந்தப் பெயரை பார்த்ததும் என் மனது மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

என் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. என் தயாரிப்பில் இரண்டாவது படமாக உருவான “நல்லவன்” படத்துக்கு இசைஞானி இளையராஜாவே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். அதற்காக அவரது தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரனுடன் சென்று சந்தித்தேன். என் விருப்பம் சொன்னதும் நான் எதிர்பார்த்திராத ஒரு தொகையை சம்பளமாக சொன்னார். அவர் கேட்ட தொகையினால், நான் அதிர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டவர், “பொட்டி (ஆர்மோனியம்) போடத் தெரியாதவங்களே உங்க கிட்ட அதிகம் கேட்டு வாங்கும்போது நான் கேட்டாலென்ன?” என்றார்.

அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்த இசையமைப்பாளருக்கு, நான் பலமுறை பல சூழ்நிலைகளில் உதவியிருக்கிறேன். அவர் இயக்கிய முதல் படம் ரிலீசின்போது பணப்பிரச்சினை. படத்தை வெளியிட முடியாத நிலையில் என்னிடம் வந்தார். 11/2 லட்சம் ரூபாய் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன்.

அடுத்த படத்துக்கு பூஜை போடும்போதே பிரச்சினை. பூஜைக்கான பணத்துக்காக எனக்கு போன் போட்டார். அப்போது எனது வினியோகத்தில் ஆவடி ராமரத்னா தியேட்டரில் “எங்கேயோ கேட்ட குரல்” படம் ஓடிக்கொண்டிருந்தது. அங்கே போய் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தேன். மூன்றாவதாகவும் ஒரு படத்துக்கு ரிலீசின்போது பிரச்சினை நேர, அப்போது 2 லட்சத்துக்காக ஓடோடி வந்தார். அதையும் பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து சரி செய்தேன்.

இப்படி வெவ் வேறு சமயங்களில் என்னிடம் உதவி பெற்றவர், நான் தயாரிப்பாளர் ஆனதும் “உங்கள் படத்துக்கு நானே இலவசமாக இசையமைத்துத்தருவேன். உங்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இதுவாகத்தான் இருக்கும்” என்று உருக்கமாகப் பேசியதன் பேரில் இசை வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். அப்போதும் அவர் தனது அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று கூறி “ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும்” என்றார்.

இதுவரை நன்றாக இருந்த அவர் பேச்சு, படத்தின் வியாபாரத்தை நான் பேசி முடித்தபோது மாறிவிட்டது. படம் நல்ல விலைக்கு போயிருப்பதை தெரிந்து கொண்டவர், படத்தின் ஹீரோ வாங்கும் சம்பளம் அளவுக்கு தனக்கும் தந்தால்தான் ஆயிற்று” என்று அடம் பிடித்தார். “இது கூட நானல்ல! என் மனைவியின் கட்டாயத்துக்காகவே வாங்க வேண்டியிருக்கிறது” என்று அப்போதும் அவர் சொன்னதுதான் ஹைலைட்.

இந்த விஷயம் இசை ஞானியின் காதுக்கு எப்படியோ போய்ச் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் எடுத்த எடுப்பில் அதிக சம்பளம் கேட்டு அதிர வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு அவரை வற்புறுத்த விரும்பாமல் அப்போது நான் திரும்பி வந்துவிட்டேன்.

அதற்குப்பிறகு இப்போதுதான் அவரது இல்லத்தில் காலெடுத்து வைத்திருக்கிறேன். அவருக்கே உரிய பாணியில் வரவேற்றவர், “உங்களுக்கு இசையமைக்கிறேன். டைரக்டர் யார்?” என்று கேட்டார்.

நான் பாலுமகேந்திராவின் பெயரை சொன்னேன்.

இப்போது அவர் முகத்தில் சின்னதாய் ஒரு மாறுதல் தெரிந்தது.

“தாணு! `ரத்த சம்பந்தலு’ன்னு ஒரு தெலுங்குப்படத்தை பாலுதான் பண்ணினார். பானுசந்தர் – அர்ச்சனா நடிச்சாங்க. 2 வருஷம் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை.”

பதிலுக்கு நான், “சார்! இப்ப அவரே என்கிட்ட அவரோட நிலை பற்றி உருக்கமா சொன்னதாலதான் அவரை வெச்சு படம் பண்றதா வாக்குக் கொடுத்திட்டு அட்வான்சும் கொடுத்திட்டு நேரா உங்க கிட்ட வந்திருக்கிறேன்” என்றேன்.

அப்போதும் அவர் இசையமைக்க யோசித்தார்.

நான் பலவாறாக சமாதானப்படுத்தி, அவர் மனதை மாற்றினேன்.

இளையராஜா இசையமைக்க சம்மதம் தந்ததும் மறுநாளே பாலு மகேந்திரா இளையராஜாவை சந்தித்தார். தனது படத்தின் கதை பற்றி விளக்கினார்.

மெட்டுகள்

மறுநாள் காலை 7 மணிக்கு பாடல் கம்போசிங்கிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள `பிஷர்மேன் கேவ்’ போனோம். 8 1/2 மணிக்கு ஊதுபத்தி ஏற்றி வைத்து ஆர்மோனியத்தை தொட்டதும் முதல் பாட்டு `கண்ணம்மா காதலெனும் கவிதை சொல்லடி’ என்ற பாட்டு பிய்த்துக்கொண்டு வந்தது. அடுத்து `இளம் நெஞ்சே வா’ பாட்டு. அதையடுத்து `சின்னமணி கோவிலிலே’, `ஜின்ஜினாக்கடி’ என தொடர்ந்து மதியத்திற்குள் 6 பாடல்களுக்கான அற்புதமான டிïன்கள் போட்டுக் கொடுத்து விட்டார், இளையராஜா.

அவர் ஆர்மோனியத்தில் இசையமைத்தபோது பாலு மகேந்திரா ஒரு படம் எடுத்தார். அந்த புகைப்படத்தை பெயிண்ட் பண்ணி எனது அன்பளிப்பாக இளையராஜாவுக்குக் கொடுத்தேன். இந்த பெயிண்ட் நூறு வருஷத்துக்கும் மேலாக புகைப்படத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இளையராஜா தன்னை மறந்து இசையமைக்க, அவரது தாயார் தனது மகனை பார்த்து ரசிப்பது போல அந்த புகைப்படம் இப்போதும் அவரது இல்லத்தில் இருக்கிறது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கியது. பாலு மகேந்திராவிடம் ஏற்கனவே இந்த கதைக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். 10 நாள் படப்பிடிப்பு தடங்கலின்றி போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று ஒரு சிக்கல் ஏற்பட்டது. நடிகை அர்ச்சனாதான் அந்த சிக்கலை உருவாக்கினார்.

தேசிய விருது கிடைத்தது!

பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த “வண்ண வண்ணப்பூக்கள்” படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

அர்ச்சனா கோபம்

“வண்ண வண்ணப்பூக்கள்” பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். “நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?” என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.

மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். “சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்” என்றார்.

முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, “நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?” என்று கேட்டேன்.

எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், “அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது” என்றார்.

புது ஹீரோ

இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, “இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?” என்றேன். “அதேதான் சார்” என்றார், அவரும்.

அப்போது “வைகாசி பொறந்தாச்சு” என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.

விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். “உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். “வண்ண வண்ணப் பூக்கள்” படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது “இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி’ கிடைத்திருக்கும்” என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை” என்று அப்போதே சம்மதம் தந்தார்.

பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.

10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.

பாடல் காட்சி

படத்தில் வரும் “இளம் நெஞ்சே வா” பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், “சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது” என்று கேட்டேன்.

நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். “சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை’ மாற்றிக்கொடுத்து விட்டேன்” என்றார்.

என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்’ கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.

ரூ.60 லட்சம்

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, “என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?” என்று கேட்டார்.

இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, “இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க” என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.

நான் அவரிடம், “நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்” என்றேன்.

படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் “இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்” என்று பாராட்டி, எழுதித் தந்தார்.

தேசிய விருது

படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் “தேசிய விருது” கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.

விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். “வருக, வருக! வாழ்த்துக்கள்” என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த “தமிழன்” நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்” என்று சொன்னேன்.

நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், “இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?” என்று வருத்தப்பட்டார். நான், “உண்மையைத்தானே சொன்னேன்” என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.

காயத்துக்கு மருந்து

என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.”

இவ்வாறு தாணு கூறினார்.

Posted in Balu Mahendhira, Balu Mahendira, Balu mahendra, Balu Mahenthira, Balu Mahenthra, Cinema, Dhaanu, Dhanu, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, Interview, IR, Movies, Producer, Thaanu, Thanu | Leave a Comment »

Iran to India Natural Gas Pipeline vs Indo-US Nuclear Accord: Ka Ragunathan

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

அணுசக்தி உடன்பாடா, அமைதிக் குழாய் திட்டமா?

க. ரகுநாதன்

இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசும், ஆட்சியா-ஒப்பந்தமா என்று இடதுசாரிகள் கேட்டால், ஆட்சிதான் முக்கியம் என்று இறங்கி வருவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்தக் களேபரத்தில் முக்கியமான இன்னொரு திட்டத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. அது ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (ஐபிஐ) எரிவாயுக் குழாய் பாதைத் திட்டம். ரூ.28,000 கோடியிலான இத் திட்டம் அமைதிக் குழாய் திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் (ஐபிசிசி) தலைவரான ஆர்.கே.பச்செüரி, ஈரானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி ஷாம்ஸ் அர்டேகனி ஆகியோர் 1989-ம் ஆண்டு இத் திட்டத்தை வரைந்தனர். பின்னர் பல்வேறு பேச்சுகளைக் கடந்து 2005-ம் ஆண்டு இத் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் போடுவது என முடிவானது.

ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வரை மொத்தம் 2,670 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதித்து 2012-ல் இருந்து எரிவாயு வழங்குவதே இத் திட்டம்.

பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திட்டம் துவங்குவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எரிவாயுவின் விலையைத் தீர்மானிப்பதில் இந்தியா-ஈரான் இடையே தொடர்ந்து வரும் இழுபறி நிலையே இதற்குக் காரணம் என்று மத்திய அரசு கூறியது.

இதனால் ஓரிரு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்கவில்லை. மார்ச் மாத கடைசியில் நடைபெறும் பேச்சுவார்த்தையே இறுதியானது; அதில் இந்தியா விலகுவதாகக் கூறினால் சீனா உதவியுடன் நிறைவேற்றுவோம் என ஈரானும் பாகிஸ்தானும் கூறியுள்ளன. ரஷியாவின் காஸ்ப்ரோம் நிறுவனமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா தேவையற்ற காலதாமதம் செய்வதாகவும் அந்நாடுகள் கூறுகின்றன.

ஈரான், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா இடையிலான அரசியல் உறவுகளே இத்திட்டம் தாமதமாவதற்குக் காரணம்.

அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்கில் யுரேனியம் செறிவூட்டும் பணியில் உள்ளதாக அமெரிக்காவுக்கு ஈரான் மீது கோபம். தீயசக்திகளின் அச்சாணி எனக் கூறி போர் தொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதால் ஈரானுக்கு அமெரிக்கா மீது எரிச்சல்.

தன்னைச் சுற்றிலும் இராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் உள்ளதால் தன்னைக் காத்துக் கொள்ள சீனா, ரஷியா, இந்தியாவுடனான நட்பு உதவும் என்பது ஈரானின் எண்ணம்.

2025-ல் இந்தியாவுக்கு தற்போதைய தேவையைப் போல 4 மடங்கு எரிசக்தி தேவை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எங்கிருந்தாவது எரிவாயு கிடைத்தால் போதும் என்பது இந்தியாவின் நிலை.

இத் திட்டத்தை நிறைவேற்றினால் கிடைக்கும் பணத்தை அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் பயன்படுத்தும். அதனால் முக்கிய நாடான இந்தியா, இதில் பங்கேற்கக் கூடாது என்பது அமெரிக்காவின் எச்சரிக்கை.

பாகிஸ்தான் பழங்குடியினத் தீவிரவாதிகளால் குழாய் பாதைக்கு ஆபத்து எனக் கூறியது அமெரிக்கா. அதற்குப் பதில் துர்க்மேனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வழியிலான குழாய் பாதைத் திட்டத்தை ஆதரித்தது. ஆனால் அல்-காய்தா தலைமையிடம் ஆப்கனில் உள்ளதை வசதியாக மறந்துவிட்டது!.

இந் நிலையில் எரிசக்தி தேவையை நிறைவேற்ற 2005-ல் இந்தியாவுக்கு அமெரிக்கா கூறியதே “123′ ஒப்பந்தம்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் உடன்பாட்டை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு அணுசக்தி உடன்பாட்டை இறுதி செய்யாவிட்டால் உலக அளவில் இந்தியாவின் நம்பகத்தன்மை கெடும் என அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்காவின் நெருக்குதலுக்குப் பயந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூட்டத்தில் ஈரான் மீதான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவளித்தது.

இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி ஈரான் ஒரு மில்லியன் யூனிட் எரிவாயுவுக்கு 7.2 அமெரிக்க டாலர் கேட்டது. இந்தியா 4.2 டாலர் மட்டுமே தரமுடியும் என்றது. பின்னர் இந்தியாவும் பாகிஸ்தானும் 4.93 டாலர் தருவதாக முடிவானது.

எப்படியும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தால் அதிகம் பயனடைவது இந்தியாதான். இதனால் பாகிஸ்தானில் இருந்து எரிவாயு கொண்டு செல்ல ஆகும் கட்டணத்தை முடிந்தவரை இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கறந்துவிடுவது என்பது பாகிஸ்தானின் ஆசை. இதனாலும் இழுபறி நீடிக்கிறது.

ஆனால் திட்டத்தைக் கைவிடவில்லை. இழுபறிக்குக் காரணம் வணிக ரீதியிலான பிரச்னையே தவிர அமெரிக்க நிர்பந்தம் அல்ல என பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணுசக்தி உடன்பாட்டையும் அமைதிக் குழாய் திட்டத்தையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துவிட்டது அமெரிக்கா.

இந்தியா இல்லாவிட்டால் இன்னொரு நாடு என்ற நிலைக்கு ஈரானும், பாகிஸ்தானும் வந்துள்ளன. சீனா இத் திட்டத்தில் இணையத் தயாராக உள்ளது. ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது.

அணுசக்தி உடன்பாடு இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கும் எதிரானது என இடதுசாரிகளும், எதிர்க் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், ஈரானுடனான அமைதிக் குழாய் திட்டம் தாமதம் ஆவது ஏன் என்று குறைந்தபட்ச கேள்விகள் கூட எழுப்புவதில்லை என்பதுதான் புதிராகவே உள்ளது.

Posted in Accord, Afghan, Afghanistan, Afghanisthan, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, America, Atomic, China, Diesel, Electricity, energy, Gas, Gulf, India, Indo-US, Iran, Natural, Nuclear, oil, Pakistan, Persia, Petrol, Petroleum, pipeline, Power, Ragunathan, Resources, Russia, US, USA, USSR | Leave a Comment »

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »