Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 5th, 2008

Handicraft products from Betelnut – Tea Cups, Paper Plates from areca tree

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இளமை பக்கம்

பாக்கு பட்டையிலும் பணம் கொழிக்கும்!

ஜி.மீனாட்சி,

இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்பு மிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் -கோவை துடியலூரைச் சேர்ந்த கே.மல்லிகா.

உபயோகிக்க ஏற்றதல்ல என்று வீணாக்கப்படும் பாக்கு மரப் பட்டைகளில் (மட்டைகள்) இருந்து விதவிதமான தட்டுகள், கப்புகள், சூப் கோப்பைகள் என்று இயற்கை வழி பொருட்களைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தயாரித்து சாதனை படைத்து வருகிறார் இவர்.

மல்லிகா இந்தத் தொழிலுக்கு வந்தது எதிர்பாராதது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்:

“”நான் எம்.எஸ்ஸி பட்டதாரி.

திருமணமாகி புகுந்தவீடு வந்தபின், ஏதாவது ஒரு தொழில் செய்யவேண்டும் என்று விரும்பியபோது,

எங்கள் தோட்டத்தில் வீணாகும் பாக்கு மரப் பட்டைகளை உபயோகித்து ஏதாவது செய்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன். பாக்கு மரப் பட்டைகளிலிருந்து தட்டுகள், கப்புகள் செய்யும் இயந்திரம் மைசூரில் கிடைப்பதாய்ச் சொன்னார்கள். அங்கிருந்து முதலில் இயந்திரத்தை வரவழைத்தோம். பின்னர் தயாரிப்பு முயற்சியில் இறங்கினோம்” என்று விவரிக்கிறார் மல்லிகா.

எந்த ஒரு வெற்றியுமே எடுத்த உடனேயே நம் வசப்படுவதில்லை. தொடர் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் மட்டுமே சாதனை சாத்தியமாகிறது. அது மல்லிகா விஷயத்திலும் நடந்தது.

எத்தனை முயற்சி செய்தும் வேண்டிய வடிவத்தில் தட்டுகளையோ, கப்புகளையோ தயாரிக்க முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறியிருக்கிறார் மல்லிகா.

“தட்டு’த் தடுமாறித்தான் தட்டு அவர் கைக்கு வசப்பட்டது.

துவக்கத்தில் இருந்த இரண்டு இயந்திரங்கள், 34 இயந்திரங்களாகப் பெருகின. சொந்தத் தோட்டத்துப் பாக்கு மரப் பட்டைகள் போதாதென்று, வெளியிலிருந்தும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தார். தொழில் வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து நிதி உதவி பெற்றார். 12 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிப்பை முடுக்கிவிட்டார்.

தரமான தயாரிப்புகள், சுத்தம் போன்ற நுட்பமான காரணங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார். நீல்கிரீஸ், கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் இவரது தயாரிப்பைத் தேடி வந்தன. திருமணங்கள், கோயில் விசேஷங்கள், பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் இவரது தயாரிப்புக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.

ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆர்டரின்பேரில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்.

“”நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது போட்டியாளர்கள் அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது நிறையப் பேர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள். பாக்கு மரப் பட்டைகளுக்கான தட்டுப்பாடு, தயாரித்த பொள்களைச் சந்தைப்படுத்த முடியாமை போன்ற பல காரணங்களால் ஏராளமானோர் இத் தொழிலைவிட்டே போய்விடுகிறார்கள்….” என்று நடைமுறைச் சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டும் மல்லிகா, தயாரிப்பு முறை பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்:

“”பச்சையாகக் கிடைக்கும் பாக்கு மரப் பட்டைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கி, வெயிலில் காயவைத்துக் கொள்கிறோம். காய்ந்த மட்டைகளில் ஒட்டியிருக்கும் தூசி, மண் போன்றவற்றைத் தண்ணீரில் பலமுறை அலசிக் கழுவுகிறோம். மீண்டும் அந்த மட்டைகளைக் காயவைத்து, இயந்திரத்தில் உள்ள அச்சில் பொருத்தி வேண்டிய பொருட்களைத் தயாரிக்கிறோம். தயாரிப்புக்கென உபயோகிக்கப்படும் இயந்திரங்கள் முற்றிலும் பணியாளர்களால் இயக்கப்படுகிறது” என்கிறார்.

தட்டுகள், கப்புகள் தயாரித்தது போக எஞ்சியிருக்கும் பாக்கு மரப் பட்டைகளை, அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாம் அல்லது உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.

பாக்கு மரப் பட்டை கப் ஒன்று 40 பைசாவிலிருந்து, ஒரு ரூபாய்க்குள் கிடைக்கிறது. தட்டின் அளவுக்கேற்ப, ரூ.1.50-ல் இருந்து ரூ.2 வரை விலை போகிறது.

திருமணம் போன்ற விசேஷங்களில் “பஃபே’ விருந்துகள் பிரபலமடைந்து வரும் நிலையில், பாக்கு மரப்பட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

“”உபயோகித்தவுடன் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்புகளைவிட பாக்கு மரப் பட்டை கப்புகள், தட்டுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவை. அத்துடன் இதில் பரிமாறப்படும் உணவு வகைகள் சூடு குறையாமல், சுவை மாறாமல் இருக்கும். தட்டுகளைப் பிடித்து சாப்பிடுபவரின் கைகளையும் சூடு தாக்குவதில்லை. முக்கியமாக, பாக்குமரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எளிதில் மட்கும் தன்மை உடையதாய் இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படுவதில்லை” என்று நன்மைகளைப் பட்டியலிடும் மல்லிகாவிடம், இத் தொழிலில் தீமைகளே இல்லையா என்று எதிர்க்கேள்வி எழுப்பினோம்.

“”குளிர்காலத்தில் இந்தப் பொருட்களில் ஒரு விதமான பூச்சி தாக்குகிறது. தயாரிக்கப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே இவை உபயோகிக்க ஏற்றவை என்பதால், நிறையத் தயாரித்து பாதுகாத்து வைக்க முடியாது. விற்பனையாகவில்லையென்றால் தேங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படி ஒரு சில பிரச்னைகள் உள்ளன…” என்கிறார்.

வெற்றிகரமான தொழில் முனைவோராய் வளர்ந்த பிறகு, பெண் தொழில் முனைவோர்களுக்காக “வுமன் பிஸினஸ் என்டர்பிரைசஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன்’ என்ற அமைப்பைத் துவக்கி பல்வேறு தொழில் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்துள்ளார் மல்லிகா. இந்த பெண் தொழில்முனைவோர்கள் அவ்வப்போது ஒன்றுகூடி தொழில்துறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.

“”அடிப்படையில் நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. திருமணத்துக்குப் பிறகு பெண்களின் ஆர்வம் அப்படியே தேங்கிப் போகிறது. குடும்பம், குழந்தைகள் என்று அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பி விடுகிறது. பெண்கள் தங்கள் திறமைகளை வீணாக்காமல், குடும்பத்துக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சியிருக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை பலப்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்” என்னும் மல்லிகாவின் வார்த்தைகள், பெண் தொழில்முனைவோருக்கு நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

Posted in areca, areca nuts, Arts, betelnuts, Biz, Business, Commerce, Cups, Exports, Forest, fruit, Green, Handicrafts, Handlooms, Ideas, nuts, Plant, Plates, Small, Tree | 1 Comment »

Chennai Events & Tamil Literary Happenings – Asokamithran meet in Adyar Club

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சொல்றாங்க..

நகர்வலம்: அசோகமித்திரன் வெட்டிய கேக்!

சாருகேசி

சென்னை அடையாறு காந்திநகர் கிளப், அந்த வட்டார பிரமுகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே உரிய, பிரம்மாண்ட அமைப்பு என்று சென்ற வாரம் வரை நினைத்தது தவறு என்று புதன்கிழமையன்று புரிந்தது.

அப்படிப்புரிய வைத்தவர் வி.ஆர்.அனில்குமார். சிறுதொழில் அதிபர். தொழில் ஆலோசகர். சமஸ்கிருத மொழியில் பி.எச்டி. மேற்கொண்டிருப்பவர். “காந்திநகர் கிளப்பில் எங்கள் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவுக்கு அசோகமித்திரனைப் பேச ஏற்பாடு செய்ததற்கு நன்றி. நீங்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். முதலில் தயக்கமாக இருந்தாலும், பிறகு அசோகமித்திரன் பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆவலில் கிளப்புக்குப் போனேன்.

ஒரு பெரிய நீண்ட சதுர மேசையைச் சுற்றி நாற்காலிகளில் அங்கத்தினர் அமர்ந்து கொள்ள, எந்தவித பந்தாவும் இல்லாமல், வெகு இயல்பாக வரவேற்றார் செயலர். அப்படியே தலைவரும். கடந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமையன்று எந்தெந்த எழுத்தாளர் அல்லது பிரமுகர் எந்தப் புத்தகம் குறித்துப் பேசினார் என்பதை ஒரு சிறு பட்டியல் போல் வாசித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் அனில் குமார். அவர்களில் ஸ்ரீகுமார் வர்மா, சயிதா ராதாகிருஷ்ணா (சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்), நரசய்யா

முதலியவர்கள் வந்திருந்தார்கள்.

அசோகமித்திரன் உடல்நலம் குன்றியிருந்தபோதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வந்திருந்து, சிறிது அறிமுக உரைபோலப் பேசிவிட்டு, தமது சிறுகதை (மெüனம்), கட்டுரை (பேட்டி) இரண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், திருநெல்வேலியில் நடந்தது போல எழுதப்பட்ட “டூ மென்’ (மெüனம்), ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பில் வெளியானது. அசோகமித்திரனே மொழிபெயர்த்தது. “பேட்டி’யும் அவருடைய மொழிபெயர்ப்புத்தான். இரண்டையும் அவரே படிக்கக் கேட்டபோது அதன் தாக்கம் புலப்பட்டது. உறுப்பினர்கள் அத்தனை பேரும் ரசித்துக் கேட்டார்கள். எங்கெல்லாம் கேலியும், நகைச்சுவையும் வெளிப்பட்டதோ அங்கெல்லாம் குபீரென்று சிரித்தார்கள். (இந்தச் சமயத்தில், மறைந்த தமிழ் எழுத்தாளர் சுப்பிரமணிய ராஜு சொன்னது நினைவுக்கு வந்தது: “அசோகமித்திரனின் படைப்பை எந்த மொழியில் வேண்டுமானாலும் மொழி பெயர்க்கலாம். கொஞ்சம்கூட நெருடாது. ஏனென்றால் அவர் கதைகளில் மனிதாபிமானமும் மனித உறவுகளும் மட்டுமே முக்கிய அம்சங்களாக இருக்கின்றன’)

காந்தி நகர் கிளப்பின் நூலகம் விரிவடைந்து வருகிறது என்றார் அனில் குமார். பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் அல்லாமல், தொழில்துறை பிரமுகர்கள் இப்படி நூல்கள் குறித்தும், படைப்புகள் குறித்தும் எழுத்தாளர்களை அழைத்துப் பேசச் சொல்லி மகிழ்வது ஆரோக்கியமான செயலாகப்படுகிறது.

நண்பர் (ரொட்டேரியன்) வி.ஆர்.அனில்குமார், கூட்ட முடிவில் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் “கேக்’ வெட்ட அசோகமித்திரனைக் கேட்டுக் கொண்டார்.

கேக், விரித்து வைக்கப்பட்ட புத்தகம் போலவே உருவாக்கப்பட்டிருந்தது!

“மெட்ராஸ் புக் கிளப்’ உறுப்பினர்கள், சென்ற வாரம் பாக்கியம் செய்திருந்தார்கள் என்று சொல்லலாம்.

ஏனென்றால் சொற்பொழிவாற்ற வந்தவர் டாக்டர் சித்ரா மாதவன். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று நிபுணர். ஒருமுறை ஸ்ரீரங்கம் திருக்கோயில் பற்றி இவர் பேசக் கேட்டவர்கள், அவரைப் பல மேடைகளுக்குப் பேச அழைத்துவிட்டார்கள். தங்கு தடையற்ற ஆங்கிலப் பேச்சு மட்டுமல்ல; ஏராளமான தகவல்களை நக நுனியில் வைத்துக் கொண்டு சரளமாகப் பேசும் பாணி, எவரையும் கவர்ந்துவிடும்.

“தென்னாட்டுக் கோயில்களின் அமைப்பு’ பற்றி சித்ரா மாதவன் நிகழ்த்திய (படங்களுடன் கூடிய) சொற்பொழிவுக்குப் பிறகு, கேள்வி நேரத்தில் அவரை நோக்கி வீசப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவர் அவ்வப்போதே அளித்த விடைகள் அவர் எவ்வளவு தெளிவாகச் சிந்தித்து வைத்திருக்கிறார் என்பதைக் காண்பித்தது.

குகைக் கோயில்கள் அமைப்பிலிருந்து துவங்கி, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் வரை, கொடுத்த ஒரே மணி நேரத்தில் அவர் நிகழ்த்திய உரை, புக் கிளப் உறுப்பினர்களை அசரவே வைத்துவிட்டது.

சித்ரா மாதவனின் சமீபத்திய நூல், “விஷ்ணு டெம்பிள்ஸ் இன் செüத் இன்டியா’வில் “திவ்ய தேசங்கள்’ எனக் குறிப்பிடப்படும் திருக்கோயில்களும் இருக்கின்றன. அதிலும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தையடுத்த கோயில்கள். பல அதிகம் அறியப்படாதவை.

ஒரு துண்டுச் சீட்டில்கூடக் குறிப்புகள் ஏதும் எழுதி வைத்துக் கொள்ளாமல், கி.வா.ஜகன்னாதனைப் பற்றி “கி.வா.ஜ. நினைவுச் சொற்பொழிவு’ ஆற்றினார் “கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; முன்னாள் “தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் பேரர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் முதன்மைச் சீடர் கி.வா.ஜ.வின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றை ஒவ்வொன்றாக கீழாம்பூர் சொல்லி வந்தபோது, பிரமிப்பும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று.

கி.வா.ஜ.வின் திருமணத்தை உ.வே.சா. நிச்சயித்த நிகழ்ச்சி அவற்றில் ஒன்று. கி.வா.ஜ.வின் மனைவி ஆகப் போகிறவரின் வீட்டில் ஒரு வியாழக்கிழமை போய், தாம் ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்கு வரப்போவதாகத் தகவல் சொல்லிவிட்டு வரச் சொல்கிறார் ஆசிரியப்பிரான். சீடரும் அந்த வீட்டுக்குப் போய்த் தகவல் சொல்லுகிறார். “என்ன அருந்துகிறீர்கள்?’ என்று வீட்டுக்கார அம்மாள் கேட்க, “தண்ணீர் மட்டும் போதும்’ என்றாராம். “முதல்முதலாக எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள். காபியாவது சாப்பிட வேண்டும்’ என்று அவர்கள் வற்புறுத்தவே, “நான் காபி அருந்துவதில்லை. பால் ஒரு தம்ளர் கொடுங்கள்’ என்று கூறினாராம். ஞாயிறன்று தம்முடன் சீடர் கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு போனப் போது, அன்று பால் கொண்டு வந்து கொடுத்த அந்த வீட்டு உறவுக்காரப் பெண் (கி.வா.ஜ.வின் வருங்கால மனைவி) மற்றவர்களுக்கு காபி கொண்டு வந்து வைத்துவிட்டு, கி.வா.ஜ.வுக்கு மட்டும் பால் கொண்டு வந்து வைத்தாராம்! (“குறிப்பறிதல்’ என்ற சொல்லுக்குப் பெண்கள்தான் சிறந்த உதாரணம் என்றார் கீழாம்பூர்.)

சொற்பொழிவில் தம் பெருமைக்குரிய தாத்தா ஏ.என்.எஸ். பற்றிய தகவல் துளிகளையும் அங்கங்கே தூவினார். (ஏ.என். சிவராமன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே கீழாம்பூர் சார், நூல் எப்போது வெளியாகும்?)

கி.வா.ஜ. எப்படி ஊர் ஊராகப் போய் தமிழ்ப் பழமொழிகள் சேகரித்தார் என்று விவரித்தார் கிழாம்பூர். கி.வா.ஜ.வின் திருக்குறள் விளக்கவுரை இதுவரை யாரும் முயற்சி செய்யாத வகையில், பரிமேலழகர் முதல் சமீபத்திய அறிஞர் வரை சேர்த்துத் தொகுத்த அற்புதமான படைப்பு என்றார்.

இளம் பாடகர் ராகவ் கிருஷ்ணா, வயலின் கலைஞர் வி.வி. ரவியின் புதல்வர். நாலு வயதிலேயே தம் குரல் வளத்தால் கேட்பவர்களை மகிழ வைத்தவர்.

அவர் வழங்கிய சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய அஷ்டகம், சுப்பிரமணிய கலாவரம்பம் ஆகியவை கொண்ட சிடியையும், அவர் பாடிய 11 பாடல்கள் கொண்ட “பிருந்தாவனம்’ என்ற சிடியையும் மியூசிக் அகடமி தலைவர் முரளி, தியாகராஜ வித்வத் சமாஜ சந்நிதியில் வெளியிட, ராகவ் கிருஷ்ணாவின் குரு இசைக் கலைஞர் பி.எஸ். நாராயணசுவாமி பெற்றுக் கொண்டார். (வி.வி. ரவியை அவர் தகப்பனார் நம்மிடம் இசை பயில அழைத்து வந்ததையும் பிறகு ரவியின் தமையனார் வி.வி.எஸ்.ஸின் மகன் முராரியை ரவி அழைத்து வந்ததையும், பிறகு ரவி தம் மகன் ராகவ் கிருஷ்ணாவை இசைப் பயிலத் தம்மிடம் அழைத்து வந்ததையும் குறிப்பிட்டு, “ஒரு குடும்பம் முழுவதுக்கும் ஆசிரியராக இருந்துவிட்டேன். இனி ராகவ்வின் மகன், பேரனுக்கும்கூட குருவாக இருக்கும் பேறு தமக்குக் கிடைக்கக்கூடும் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார் பி.எஸ்.என்.) “பிருந்தாவனம்’ ஓர் அருமையான, அதிகம் தமிழ்ப் பாடல்கள் கொண்ட தொகுப்பு. “நன்றாகப் பாயிடியிருக்கிறான் ராகவ்’ என்று குருவே பாராட்டி விட்டார்!

Posted in Ami, Asogamithiran, Asogamithran, Asogamitran, Asokamithiran, Asokamithran, Asokamitran, Chennai, City, Events, Literature, Madras, Meetings | Leave a Comment »

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

Tamil Traditions & Culture Festival – Folk Arts Celebration in Erode: Sriram Chits

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மரபு: காகங்கள் சொல்லும் காலம்!

தமிழ்மகன்

ஈரோடு மாவட்டத்தில் பிப்.22 முதல் 24 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்ற கொங்கு மண்டல மரபுக் கலைவிழா நகரையே ஒரு கலக்கு கலக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

விழாவில் மரபு சார்ந்த இந்த நிகழ்த்துக் கலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன், சேலம் காவல்துறை துணை ஆணையர் சின்னசாமி, டாக்டர் வெ. ஜீவானந்தம், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் இராமராஜ் எனப் பல்வேறு அதிகார மையங்களைச் சேர்ந்தவர்களும் வந்து குரல் கொடுத்தது வியப்பளிக்கும் விஷயமாக இருந்தது. மரபுக்கலைகள் குறித்து ஆய்வு நோக்கோடு அவர்கள் பேசியதும் ஆச்சர்யம் ஏற்படுத்தியது.

2002-ல் ஈரோடு மொடக் குறிச்சியில் இந்த விழாவுக்கான வித்திட்டவர் எழுத்தாளர் தேவிபாரதி. “”எங்கள் குடும்பத்திலேயே பலர் “பொன்னர் சங்கர்’ கூத்துக் கலைஞர்களாக இருந்தார்கள். அதுவே எனக்கு இதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கூடவே கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய “நூற்றாண்டுத் தனிமை’யைப் போன்ற மரபின் பின்னணியை ஒட்டி ஒரு நாவல் எழுத உத்தேசித்து பல கூத்துக் கலைஞர்களைச் சந்தித்தேன். இதுதான் மரபுக் கலைஞர்களுடன் எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்கான காரணங்கள்.

மொடக்குறிச்சியில் நடைபெற்ற விழாவை அறிந்து எழுத்தாளர் அம்பை வந்து சந்தித்தார். அப்போது மரபுக் கலைஞர்கள் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் தயாரித்தோம். இந்த ஆண்டு காலச்சுவடு பதிப்பகம், ஸ்ரீராம் சிட்ஸ் இணைந்து இந்த மரபுக் கலைவிழாவை ஏற்பாடு செய்தது” என்று விழாவுக்கான முன்கதைச் சுருக்கத்தைச் சொன்னார் தேவிபாரதி. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கலைவிழாவின் சுவாரஸ்யத் துளிகள்…

தப்பாட்டம், சலங்கையாட்டம் என ஈரோடு வ.உ.சி பூங்காவில் இருந்து மரபுக் கலைஞர்களின் பேரணி ஆரம்பித்தது. விழாவில் பங்கு பெற்றகலைஞர்களிடமும் சிறப்பு விருந்தினர்களிடமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஈடுபாட்டுடன் பேசியதிலிருந்தே அவருக்குப் பண்பாட்டுக் கலைகள் மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல் நாள் இரவு கரூர் கே.ஆர். அம்பிகா குழுவினரின் “அரிச்சந்திரா’ நாடகமும் இரண்டாம் நாள் இரவில் கரூர் ஆர்.டி.எஸ். நெடுமாறன் குழுவினரின் “சித்திரவள்ளி’ இசை நாடகமும் “பொன்னர் சங்கர்’ உடுக்கடிக் கூத்தும் நடைபெற்றது. மூன்றாம் நாள் இரவு கூத்தம்பட்டித் திருமலைராஜன்- பவானி அர்ஜுனனின் “மதுரைவீரன்’ இசைக் கூத்து நடைபெற்றது.

காலை நேரங்களில் அமர்வுகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தேவி பாரதி, செல்வராஜ் போன்றோரின் கிராமப்புறக் கதைகளில் சோம்பேறிகளுக்கான அறிவுரை, சித்தி கொடுமை, சமயோசித புத்தியால் சமாளித்தல் போன்ற பொதுத்தன்மையைக் கவனிக்க முடிந்தது. அதையெல்லாம் கேட்க வாய்ப்பில்லாமல் இன்றைய குழந்தைகள் மெகா சீரியல்களிலும் சினிமா பாட்டு நிகழ்ச்சிகளிலும் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவலமும் நினைவுக்கு வந்தது.

“”இத்தகைய கிராமிய கதைகள் மூலமாக அந் நாளைய கிராமியச் சூழலையும் அறியமுடிகிறது. காக்கைகள் தீய குணம் பெற்றவையாகச் சித்திரிக்கப்படுவது பிற்காலக் கதைகளில்தான். நன்னூலில் ஏழாம் வேற்றுமைக்கு உதாரணமாக “கருப்பின் கண் மிக்குளது அழகு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, காக்கைகள் அறிவாளிகளாகவும் அழகானவையாகவும் சித்திரிக்கப்பட்ட காலகட்டம் தொல்காப்பிய காலகட்டம் என்று தெரிகிறது. கருப்பு நிறம் அறியாமையின் நிறம் என்று சிந்திக்கத் தொடங்கியது பிற்காலங்களில்தான்…” என்ற பெருமாள்முருகனின் கருத்து சிந்திக்கத் தகுந்தது. காக்கைகள் கதைகள் மூலம் காலத்தை அறியமுடியும் என்பது ஆச்சர்யம்தான்.

புலவர் செ.இராசுவின் கொடுமணல் அகழ்வாய்வுகள் பற்றிய பேச்சு வரலாற்றுக் காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.

எழுத்தாளர்கள் சுகுமாரன், யுவன் சந்திரசேகர், குவளைக்கண்ணன், அய்யப்ப மாதவன், கடற்கரய், ரெங்கையா முருகன் போன்ற பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

மரபுக்கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் இந்த முயற்சிக்கு வாழ்த்து சொல்லி புறப்பட்டோம்.

Posted in Arts, Culture, Erode, Folk, Folk Arts, Folklore, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Literature, Research, Sangam, Tradition | Leave a Comment »

Burmese Human Rights Activist Daw Aung San Suu Kyi – Myanmar: Biosketch

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’!

முத்தையா வெள்ளையன்

சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:

ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.

1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.

தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.

தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.

போராட்டம்…

1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:

உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:

அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.

கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.

இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

Posted in Activist, Activists, AngSan, Arrest, AungSan, Biosketch, Buddhism, Burma, Democracy, Faces, Fight, Freedom, Gandhi, Independence, Liberation, Mahatma, Mandela, Myanmar, names, Oppression, people, SuKyi, SuuKyi, Violence | Leave a Comment »

Interview with writer Vennila – Poet, Tamil Kavinjar

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பேட்டி: பெண் பெயரில் ஆண் எழுதினால் குழப்பம்!

பெயல்

கவிதை, கதையில் அதிக ஆளுமை செலுத்தி வரும் வெண்ணிலா இப்போது இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஒன்று:

சார்க் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் சமீபத்தில் கவிதை விழா நடந்தது. அதில் தமிழகத்தின் சார்பில் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். மற்றொருவர் வெண்ணிலா. இந்த வாய்ப்பு கிடைத்ததில் அவருக்கு அளவில்லா சந்தோஷம்.

இரண்டு:

“மீதமிருக்கும் சொற்கள்’ என்ற தலைப்பில் வை.மு.கோதை நாயகியம்மாள் முதற்கொண்டு 46 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பெண் எழுத்தாளர்களின் தொகுப்புகள் பல வெளிவந்திருந்தாலும் இதுபோன்று முழுமையான பெரும் தொகுப்பு வந்ததில்லை. இப் பணிக்காக வெண்ணிலா பெரிதும் இலக்கிய வட்டாரத்தில் பாராட்டு பெறுகிறார்.

இரட்டிப்பு சந்தோஷத்திலிருக்கும் அவரிடம் பேசினோம்.

மீதம் அவரது சொற்களில்:

ஒரிசாவில் நடந்த கவிதை திருவிழாவின் சிறப்பு?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு, பூடான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்த சார்க் கூட்டமைப்பில் இலக்கிய பிரிவு ஒன்றும் உண்டு. இந்த இலக்கியப் பிரிவு சார்பில் மூன்று நாள் கவிதை திருவிழா ஒரிசாவில் நடைபெற்றது. எட்டு நாடுகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதைப் படித்தனர்.

தமிழகத்தின் சார்பில் நா.முத்துக்குமாரும், நானும் கலந்துகொண்டு கவிதைப் படித்தோம். “பின் இருக்கை’ என்ற தலைப்பில் கவிதையொன்றை தமிழில் படித்து, அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் படித்தேன். என்னுடைய கவிதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழியினரின், பல்வேறு நாட்டினரின் கவிதைகளைப் பரிமாறிக்கொள்கிற வகையில் இப்படி ஒரு விழா நடத்துவதே சிறப்பான ஒன்று என்று நினைக்கிறேன்.

கவிதைத் திருவிழாவின் மூலம் நீங்கள் கற்றது?

இங்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. இவ்விழாவில் வெறும் கவிதை படிக்கப்பட்டதுடன் ஒரிசா மாநில பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. கவிதை பற்றிய கலந்துரையாடல் எதுவும் நடைபெறவில்லை. இது என்னளவில் பெரிய மனக்குறையாக இருந்தது. கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால்தான் மற்ற மொழியினரின் கவிதைகளைப் பற்றிய சரியான புரிதல்கள் ஏற்பட்டிருக்கும். படிக்கப்பட்ட கவிதைகளை வைத்துப் பார்க்கிறபோது நவீன தமிழ் கவிதைகளுக்கு நிகரான கவிதை மற்றமொழி கவிதைகளில் இல்லை என்றே சொல்லலாம். சந்தம் வடிவிலான கவிதைகளையே இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாடுபொருள்கள் எல்லாம் நாம் எப்போதோ பாடியதாக இருக்கிறது. தொலைபேசியைப் பற்றியெல்லாம் நாம் எப்போதோ பாடிவிட்டோம். அவர்கள் இப்போதுதான் பாடுகிறார்கள். சிறப்பு என்று கருதி ஒன்று சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தான் கவிஞர்களைச் சொல்லலாம். அவர்கள் “கஜல்’ வடிவிலான கவிதைகளாகப் படித்தார்கள். யுத்தத்தைப் பற்றிய கருப்பொருளாக இல்லாமல் மண் சார்ந்த கவிதைகளாக இருந்தது சிறப்பு.

“மீதமிருக்கும் சொற்கள்’ தொகுப்பை எத்தனை ஆண்டுகளாகத் தொகுத்தீர்கள்?

“கனவுப்பட்டறை’ சார்பாகத்தான் பெண்ணிய சிறுகதைகளைத் தொகுக்கிற பணியைத் தொடங்கினேன். கடைசியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்தான் இப்புத்தகத்தைக் கொண்டு வந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இந்தத் தொகுப்பிற்காகச் செலவிட்டிருக்கிறேன். அசோமித்திரன், கந்தசாமி போன்ற பலர் பெண்ணியச் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். அந்தத் தொகுப்புகள் எல்லாம் அவரவர் விருப்பங்களுக்கு உட்பட்ட கதைகளாகவே இருந்திருக்கின்றன. இந்தத் தொகுப்பில் அப்படியில்லை. வரலாற்று ஆவணமாகத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டுத் தேடித் தொகுத்திருக்கிறேன். அதைப்போலவே வந்திருக்கிறது. மொத்தம் எழுபது பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்வு செய்தோம். இதில் 45 பெண் எழுத்தாளர்களின் கதைகள் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. மற்ற எழுத்தாளர்களின் கதைகள் இடம்பெறாததற்கு முக்கிய காரணம் அந்த எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதுதான். உதாரணமாக எஸ்.ரங்கநாயகி என்கிற பெண் எழுத்தாளர். அவர் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். “கலைமகள்’ அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எழுத்தாளர் அநுத்தமாவைச் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தேன். அவருக்கு விவரம் தெரியவில்லை. இப்படி பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

இத்தொகுப்பைத் தொகுத்ததன் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள்?

புத்தகமே எழுதுகிறளவிற்கு பல விஷயங்கள் இருக்கின்றன. 1930 முதல் 2004 வரையில் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்திருக்கிறேன். இதில் 60 வரை எழுதிய எழுத்தாளர்களைப் பார்த்தோமானால், எழுதிய எழுத்தாளர்கள் எல்லோருமே மேல்வர்க்கத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களாகவே இருக்கின்றனர். 60-க்குப் பிறகே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், கிருத்திகா போன்றோர் வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அதிகளவில் பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டாலும், பெண் விடுதலை பற்றிய எழுத்துகள் அவர்களுடைய எழுத்தில் வெளிப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கணவன்-மனைவி சண்டை போன்ற விஷயங்களைப் பற்றியே கதை எழுதியிருக்கிறார்கள். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய எழுத்துகள் சிலர் சொல்வதுபோல இலக்கியமாகாவிட்டாலும், போற்றிக் கொண்டாட வேண்டிய எழுத்துகள், பெண் விடுதலைக்காக அவர் எழுதத் தொடங்கியதைத் தொடர்ந்தே பலர் எழுதத் தொடங்கினர்.

வை.மு.கோதைநாயகியம்மாள் 115 நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்தை அவர் ஒரு தவமாகக் கொண்டிருந்திருக்கிறார். சுதந்திரப்போராட்டத்துக்காக அவர் சிறையிலிருந்தபோது அவருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பலகார காகிதங்களில்கூட கதை எழுதி அனுப்பியிருக்கிறார். இதைப்போல குகப்பிரியை, குமுதினி போன்றோர் எழுத்தை நேசித்ததைப் கேட்கிறபோது நமக்கு பிரமிப்பைத் தருகிறது.

இதைப்போல மிகவும் சுவாரஸ்யமான ஒரு தகவல் எம்.எஸ்.கமலாவைப் பற்றியது. இவர் ஒரு சோவியத் மாணவி என்றும், முற்போக்கான கட்டுரைகள் எழுதக்கூடியவர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்படி கமலா எழுதிய கதைகளைத் தேடிப் படித்துப் பார்த்தால் எல்லாமே குடும்பப் பாங்கான கதைகளாகவே இருந்தன. பிறகுதான் எம்.எஸ்.கமலா என்ற பெயரில் இருவர் இருந்தது தெரிய வந்தது.

பெயர் குழப்பத்தில் நான் சந்தித்த இன்னொரு சுவாரஸ்யமான அனுபவம், பெண்களின் பெயரில் பல ஆண்கள் எழுதியிருக்கிறார்கள். அது தெரியாமல் நாங்கள் ஆண்கள் எழுதிய கதைகளையும் தேர்வு செய்துவிட்டோம். எழுத்தாளர் வல்லிக்கண்ணன்தான் எங்களுக்கு இதில் உதவினார். ஆண் எழுத்தாளர்களின் கதைகளை நீக்கிக் கொடுத்தார். பெண்கள் பெயரில் ஆண்கள் எழுதுகிறபோது வரலாற்றுக் குழப்பங்கள் எதிர்காலத்திலும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இப்போது பெண்கள் அதிகமாக கவிதை எழுத விரும்புவதுபோலத் தெரிகிறதே?

உண்மைதான். இப்போது கவிதை எழுதுகிறவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். கதை எழுதுகிறபோது அதற்கு ஓர் ஆய்வு தேவை. சிக்கலான மொழி நடையைக் கையாள வேண்டியிருக்கும். கவிதையில் அப்படியில்லை. போகிற வழியிலேயே கரு கிடைக்கும். எளிய யுக்தியில் எழுதிவிட முடியும். இதன் காரணமாக கதை எழுதுகிற பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கலாம். இப்போது எழுதுகிற உமாமகேஸ்வரி, தமயந்தி போன்றவர்கள் கதையில் நல்ல ஆளுமை செலுத்துகிறார்கள்.

– முடிவுறாத சொற்கள் இன்னும் மீதமிருக்கின்றன!

Posted in Authors, Books, Collections, Fiction, Interview, Kavidhai, Kavidhaigal, Kavidhaikal, Kavinjar, Kavithai, Kavithaigal, Kavithaikal, Literature, Orissa, Poems, Poet, SAARC, Story, Vennila, Vennilaa, Writers | Leave a Comment »

List of Firsts – Tidbits, Trivia on Women achievements

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுவடுகள்: பெண்கள் முதல் முதலாய்…

யுகன்

திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுகமான விஷயம்தான். அது தனிப்பட்டவர்களின் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வரலாற்றின் பக்கங்களாக இருந்தாலும் சரி. இன்றைக்குப் பெண்கள் இல்லாத துறையே இல்லை எனலாம். இந்தியாவில் பல துறைகளில், பொறுப்புகளில் முதல் முதலாய் இடம்பிடித்த சிலரைப் பற்றிய ஞாபகங்கள் இங்கே…

1905

சுஸôன்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.

1916

தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? ஐந்து பேர்!

1927

அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

1951

டெக்கான் ஏர்வேஸில் பயணிகள் விமானத்தை செலுத்திய முதல் பெண் விமானி பிரேம் மாத்தூர்.

1959

அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

1966

கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய “மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.

1970

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.

1972

இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.

1989

முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதவியேற்றார்.

1997

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.

2005

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.

2007

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.

Posted in Achievements, Faces, Females, first, History, Ladies, Lists, names, people, She, Trivia, Woman, Women | Leave a Comment »

Remembering a hero of liberty: Justice Hans Raj Khanna, former Supreme Court judge passes away – TJS George

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சுதந்திர இந்தியாவின் துணிச்சல் மிக்க நீதிபதி

டி.ஜே.எஸ். ஜார்ஜ், பத்திரிகையாளர்

சுதந்திர இந்தியாவின் மிகத் துணிச்சலான நீதிபதி யார்? அந்தச் சிறப்புக்குத் தகுதியான நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாதான். அவரது துணிச்சலை மதிப்பிடுவதற்கு, நெருக்கடிநிலைக் கால பயங்கரங்களை நாம் நினைவுகூர்ந்தாக வேண்டும்.

காவல் துறையினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்; சித்திரவதை செய்யலாம்; கொலைகூடச் செய்யலாம்; ஆனால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சூழ்நிலை நிலவிய நாள்கள் அவை.

கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய தகவலையும் நாம் தெரிந்துகொள்ள முடியாது; ஏனென்றால், அப்போது செய்திகள் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன; தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தெருமுனைகளிலும் டீக்கடைகளிலும் சந்தித்துப் பேசுவதற்கே மக்கள் அச்சப்பட்ட காலம் அது. நாடெங்கிலும் அச்சம் பரவி இருந்தது; அனைத்து இடங்களிலும் போலீஸýக்கு உளவு சொல்பவர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நிலவியது என்பதை இன்றைய தலைமுறையால் நம்பக்கூட முடியாது. அத்தகைய கொடூரச் செயல்களைச் செய்ததோடு மட்டுமல்ல; இந்திரா காந்தியின் அன்றைய இந்தியா, அதை மூடிமறைக்காமல் பகிரங்கமாகவும் செய்தது.

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் வகையில் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். ஸ்டாலினின் ரஷியாவிலும் பினோசேவின் சிலியிலும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் போன்றது அது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆனால், அதை எதிர்த்து அப்போதும் பலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். “ஆள்கொணர் மனு’க்களை (ஹேபியஸ் கார்ப்பஸ்) விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 9 உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின. ஆனால், உச்ச நீதிமன்றம் வேறு விதமாகத் தீர்ப்பளித்தது. அரசாங்கத்தின் யதேச்சாதிகாரத்தை அது நியாயப்படுத்தியதுடன், நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுகுவதற்கான குடிமக்களின் உரிமையைப் பறித்ததையும் நியாயப்படுத்தியது.

5 நீதிபதிகள் அடங்கிய அந்த உச்ச நீதிமன்ற பெஞ்சில், 4 நீதிபதிகள் இவ்வாறு தீர்ப்பளித்தனர். ஆனால், ஒரேயொரு நீதிபதி மட்டும் மாற்றுக் கருத்தைத் தெரிவித்தார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கன்னா.

1978, ஆகஸ்ட் 28-ல் வழங்கப்பட்ட அத் தீர்ப்பு, நமது வரலாற்றின் களங்கமான ஆவணமாகவே இருந்துகொண்டிருக்கும். சட்டவிரோதமான சர்வாதிகார அரசைப் பாதுகாக்க வேண்டும் என்ற துடிப்பினால், அந்த 4 நீதிபதிகளும் உள்ளார்ந்த நீதிநெறிப் பார்வையை வெளிப்படுத்தத் தவறும் அளவுக்கு தமது பகுத்தறிவின் கதவுகளை மூடிக்கொண்டுவிட்டனர்.

“”கைதிகளை நல்ல அறைகளில் அடைத்துவைத்து, அவர்களுக்கு நல்ல முறையில் உணவளித்து, நல்ல முறையில் நடத்திவரும் அரசின் பரிவும் அக்கறையும் ஒரு தாயின் பரிவுக்கு இணையாக இருக்கிறது” என்னும் நீதிபதி எம்.எச். பெக்-கின் அதிர்ச்சிகரமான அறிவிப்பு அதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

தாயுள்ளத்தின் உன்னதப் பண்புகளை அவமதிக்கும் வகையில் அந்த வரிகளை அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுதுதான், கர்நாடகத்திலே ஜார்ஜ் பெர்னாண்டஸின் சகோதரர் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்; கேரளத்தில் பொறியியல் மாணவரான ராஜன் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் இதைப்போல ஆயிரக்கணக்கான அட்டூழியங்கள் நடைபெற்றன.

அதற்குச் சில மாதங்கள் கழித்து, எவ்வித வெட்கமும் இன்றி இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார் நீதிபதி பெக். பணிமூப்பின்படி அப் பதவிக்கு உரியவரல்லர் அவர். நீதிபதி எச்.ஆர். கன்னாதான் அனைவரையும்விட மூத்த நீதிபதி. ஆனால் வரலாற்றில் படுமோசமான முறையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு நொடியினிலே, படுமோசமான முறையில் நீதியைக் குழிதோண்டிப் புதைத்த ஒரு நீதிபதி தனது துரோகத்துக்கான பரிசை ~ 30 வெள்ளிக்காசுகளை யூதாஸ் பெற்றதைப்போல ~ பெற்றுக்கொண்டார். ஆனால், யேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக பின்னாளில் வருந்தினார் யூதாஸ் இஸ்காரியோத். அந்த நாகரிகமாவது நீதிபதி பெக்-க்கு இருந்ததா என்பது தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து கன்னாவும் தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவரால் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தது; ஏனென்றால், நீதித் துறையில் நாட்டின் குடிமக்கள் வைத்திருந்த நம்பிக்கையை, தனது மனசாட்சியின் குரலை, பதவியேற்கும் பொழுது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நிலைநாட்டுவதற்கான துணிச்சலை, ஐந்து நீதிபதிகளில் தனியொருவராகக் காட்டியவர் அவர். வாழ்வதற்கான, சுதந்திரத்துக்கான மனிதனின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தவர் அவர். “”ஒரு நீதிமன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறான கருத்தை ஒரு நீதிபதி பதிவு செய்கிறார் என்றால், அது, நீதிமன்றம் தவறாக அளித்துவிட்டதாக அவர் கருதும் தீர்ப்பு என்றாவது ஒரு நாள் திருத்தப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், எதிர்கால மேதைமைக்கும், நீதிநெறி உணர்வுகளுக்கும் அவர் விடுக்கும் முறையீடாகும்” என்று அமெரிக்க நீதிபதி ஒருவர் கூறியிருப்பதையும் மேற்கோள் காட்டினார் நீதிபதி கன்னா.

எச்.ஆர். கன்னாவைப் போன்றோரின் நீதிநெறி உணர்வுகளின் காரணமாக இன்று நாம் சுதந்திரத்தை பெருமிதத்துடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 95 வயதான நீதிபதி கன்னா, கடந்த வாரம் உறங்கிக்கொண்டிருந்த பொழுது அமைதியாக நல்மரணமடைந்தார். அவரை இறைவன் ஆசீர்வதித்தான். அவரது ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நொடிப் பொழுது மெüனம் கடைப்பிடிப்போம்.

Posted in abuse, Arrest, Attorneys, Biosketch, Conservative, Correctional, Courts, Faces, HansRaj, HR, Interrogation, Jail, Judge, Justice, Khanna, Law, Lawyers, legal, Liberal, Liberty, names, Obituary, Order, people, rights, SC, Torture | 1 Comment »

Tamil Nadu Public Works Department (PWD) – Villages’ infrastructure facilities & Support systems for TN river basin resources

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

பொதுப்பணித்துறைக்கு மூடுவிழாவா?

நீதி. செங்கோட்டையன்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் டல்ஹெüசி பிரபுவால் 1849-ம் ஆண்டு இந்தியாவில் பொதுப்பணித்துறை துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரயில், பேருந்து, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கோடு துவக்கப்பட்ட இத்துறை, நாளடைவில் வேளாண் தொழிலின் உயிரோட்டமான நீர்நிலைகளைச் சீரமைக்கும் தலையாய பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

அந்தவகையில் மத்திய பொதுப்பணித்துறையும், அந்தந்த மாநிலங்களுக்குத் தனித்தனியாக மாநிலப் பொதுப்பணித்துறையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை ரெகுலர் பிரிவு, தாற்காலிகப் பிரிவு (திருச்சி, வேலூர் ஆகிய இரு வட்ட அலுவலகங்களின் கீழ் பல கோட்ட அலுவலகங்கள்) என இரு பிரிவுகளாகப் பொதுப்பணித்துறை செயல்படுகிறது.

இதில் ரெகுலர் பிரிவு ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளின் நீர்நிலைகளைச் சீரமைத்து வேளாண் தொழிலுக்கு வேண்டிய நீர்வளத்தைப் பெருக்கிக் கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

தாற்காலிகப் பிரிவானது, ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதிகளில் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது.

முக்கியமாக ஏரிப்பாசனத்தில் தமிழகம் முன்னிலையில் திகழ இந்த தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவின் பங்கு அளப்பரியது.

இதுபோன்ற முக்கியப் பணியை ஆற்றிவரும் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு தமிழக அரசு மூடுவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள், தங்கள் தலையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.

தென் மாவட்டங்களின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத் திகழ்கிறது. இதனால் அப்பகுதி மக்கள், பிழைப்புத் தேடி நகர்ப்புறத்துக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவு மூடப்பட்டால், ஏரிகள் மற்றும் குளங்களைத் தூர்வாரும் பணியில் மேலும் பின்னடைவு ஏற்படும் என்ற கவலை விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது. அத்துடன், ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தடைபட்டுப் போனாலும் போகலாம் என்ற அச்ச உணர்வும் பெரும்பாலான விவசாயிகளின் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது.

பொதுப்பணித்துறை ரெகுலர் பிரிவு வேளாண் கட்டமைப்பு தொடர்பான பணிகளை எப்போதுமே குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிப்பதில்லை.

இதனால் தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா என்ற செய்தி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தவிர்த்து, ரெகுலர் பொதுப்பணித்துறை பிரிவில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகள் சுய ஆதாயத்தில்தான் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, தங்களுக்கு கணிசமான கமிஷனை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் தனிப்பட்ட சுறுசுறுப்பும் உற்சாகமும் கொண்டுள்ளனர் என்பதையே விவசாயிகள் துணிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தவரிசையில், தற்போது தாற்காலிகப் பொதுப்பணித்துறை பிரிவுக்கு மூடுவிழா நடத்தும் நிலைக்கு தள்ளியது கூட, இந்த ரெகுலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கமிஷன் ஆசைதான் என்றும், அவசியம் ஏற்பட்டால் இதை எந்த இடத்திலும் தாங்கள் சொல்லத் தயார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதாவது ஒருகாலத்தில் ஆற்றுப்பாசனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியை மட்டுமே செய்து வந்த பொதுப்பணித்துறையின் ரெகுலர் பிரிவு, அண்மைக்காலமாக ஆற்றுப்பாசனம் அல்லாத பகுதியிலும் நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணியைச் செய்து வருகிறது. ரெகுலர் பிரிவின் இந்த முனைப்புக்கு கமிஷன் தான் காரணம் என்பது தவிர எவ்வித நல்ல நோக்கமும் இல்லை.

மாநிலத்தில் மொத்தம் 39,000 ஏரிகள் உள்ளன. ஏரிப்பாசனத்தின் கீழ் 22 சதவீத நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் விவசாயத்தின் உயிரோட்டமான நீராதாரத்தைப் பெருக்குவதில் அரசு அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.

குறிப்பாக விவசாயத்தின் ஜீவாதாரங்களான ஆறு, ஏரி, குளம், கிணறு போன்றவற்றைச் சீர்படுத்தி அவற்றை எப்போதும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது பொதுப்பணித்துறையின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகப் பொதுப்பணித்துறையின் செயல்பாடோ திருப்திகரமாக இல்லை.

இதேபோன்று மெத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தென்மாவட்டங்களில் விவசாயம் நலிவடைந்து, இன்னொரு “விதர்பாவாக’ உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

இதற்கிடையில், “நதிகளை இணைப்போம்’ என்று அடிக்கடி கூறி வரும் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர், நிதி இல்லாததால்தான் பொதுப்பணித்துறையின் தாற்காலிகப் பிரிவுக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளதாக உலா வரும் செய்திகளுக்கு என்ன பதில் கூறப்போகிறார் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

Posted in Agriculture, basin, Dams, Duraimurugan, facilities, Farmers, Farming, Flyovers, GIS, Govt, Hydrology, infrastructure, Irrigation, Lakes, Management, Mgmt, Planning, Plng, Projects, Public, PWD, Resources, Rivers, service, Suicides, support, Thiruchi, Thiruchirapalli, Thiruchirappalli, Thiruchy, Trichy, Vellore, Vidarba, Vidharbha, Vitharbha, Water | Leave a Comment »

Tamil Nadu Electricity Board (TNEB) restructuring plans – Path to Privatization

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

இது நல்லது அல்ல: சி. மகேந்திரன்

சென்னை, மார்ச் 5: மின் வாரியத்தை இப்படிப் பிரிப்பது நல்லது அல்ல என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவில் இப்படிப் பிரிக்கப்பட்ட பல இடங்களில் தனியாருக்கான வாய்ப்பைக் கூடுதலாக உருவாக்கித் தரும் நிலை உள்ளது. ஆரம்பத்தில் தனியாருக்குத் தர மாட்டோம் என்று கூறுவார்கள். ஆனால் இறுதியில் தனியாருக்குப் பிரித்து தருவார்கள்.

பிகாரில் இப்படி நடந்து, பெரிய போராட்டம் வெடித்து, பிரச்னை இன்னும் முடியாமலேயே உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மின் கட்டணம் உயரவும் வாய்ப்பு உள்ளது.
————————————————————————————————————————————-
துண்டாடப்படுகிறதா மின்சார வாரியம்?

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 5: பொன் விழா கொண்டாடிய தமிழ்நாடு மின் வாரியம் துண்டாடப்படும் என்கிற செய்தி அந்த வாரியத்தினரை மின்சாரம் தாக்கிய நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

தற்போது வாரியத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழும் “மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு’ தனித்து இயங்கும் நிறுவனமாக மாற்றப்பட உள்ளது என்கிற தகவல் ஊழியர்களிடையே பரவி உள்ளது.

தற்போதைக்கு அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தனி நிறுவனமாக இப்பிரிவை உருவாக்கி, இயக்குவதற்குத் தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மின் வாரியம் 1.7.1957-ல் உருவானது. அப்போது தனித் தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு மின்சார நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மாநில அரசின் நிறுவனமாக மின் வாரியம் உருப் பெற்றது.

சமமான முக்கியத்துவம்:

மின் வாரியத்தில்

1) மின் உற்பத்திப் பிரிவு,

2) உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவு,

3) மின் விநியோகப் பிரிவு,

4) மின் கணக்கீடு -கட்டண வசூலிப்புப் பிரிவு என நான்கு பிரதானப் பிரிவுகள் உள்ளன. இந்த நான்குப் பிரிவுகளுமே ஒன்றுக்கு ஒன்று சமமான முக்கியத்துவத்தைப் பெற்றவை.

ஏற்கெனவே மின் உற்பத்திப் பிரிவில் அரசுக்குப் போட்டியாகவும், வர்த்தக ரீதியிலும் தனியார் துறை முதலீட்டுடன் ஆங்காங்கே மின் உற்பத்தி நிலையங்கள் பல்வேறு கட்டங்களாகத் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை அரசு வாங்கி, மானிய விலையில் மின் வாரியத்தின் மூலம் மக்களுக்கு விநியோகித்தும் வருகிறது.

இப்படி மக்களுக்கு உதவி வரும் அரசும், வாரியமும், மீண்டும் மின் வாரியத்தைத் துண்டு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என வாரியத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

தனியாகப் பிரிப்பு: உற்பத்திப் பிரிவில் இருந்து விநியோகப் பிரிவுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் பிரிவை (பவர் டிரான்ஸ்மிஷன் டவர்) தனி நிறுவனமாகப் பிரிப்பது தான் அந்த நடவடிக்கை.

அதன்படி உற்பத்தியாகும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின் கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் மின் கோபுரங்கள், மின் கம்பங்கள், துணை மின் நிலையங்கள் போன்றவை அந்தத் தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய் விடும்.

அந்த நிறுவனத்துக்கு “ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யுடிலிட்டி’, ஸ்டேட் டிரான்மிஷன் கார்ப்பரேஷன்’ என்கிற இரு பெயர்களில் ஒன்று சூட்டப்படலாம் என வாரிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தற்போதைக்கு இந்தத் தனி நிறுவனத்தின் தலைவராக மின் வாரியத் தலைவரே இருப்பார். அவரைத் தவிர, சில இயக்குநர்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும். தற்போது மின் வாரியத்தில் உள்ள கணக்கியல் உறுப்பினர், தலைமைப் பொறியாளர் (டிரான்ஸ்மிஷன்), தலைமைப் பொறியாளர் (திட்டம் மற்றும் தகவல் தொடர்பு), தலைமைப் பொறியாளர் (இயக்கம்) ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். நிறுவனத்தின் கம்பெனிச் செயலராக அதற்குரிய தகுதி படைத்தவர் நியமிக்கப்படுவார்.

தனியார் வசமாகி விடுமோ?:

சிறிது காலத்துக்குப் பிறகு இந்தத் தனி நிறுவனம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விடலாம் என்கிற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் வலுவாக நிலவுகிறது.

அதேபோல, தற்போது அயல்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் வாரிய ஊழியர்கள், பின்னர் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களாக மாறி விடுவார்கள். தற்போது அவர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து அவர்களுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே.

மத்திய அரசின் சட்டம்:

2003-ல் மத்திய அரசு பிறப்பித்த மின் சட்டத்தின்படி இந்தத் தனி நிறுவனம் தொடங்கப்படுகிறது. அந்தக் காலத்தில் இதைக் கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கங்கள் இன்று இதுதொடர்பாக எத்தகைய எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் மெüனமாக இருப்பது வேதனையாக உள்ளது என நவபாரத் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனின் பொதுச் செயலாளர் கி. பழநிவேலு தெரிவித்தார்.

இந்தத் தனி நிறுவனம் அமையுமானால், மின் நுகர்வோர் மிக அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி நேரிடும். தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என வாரிய நலனில் அக்கறை உள்ள தொழிற்சங்கங்கள், பொது நல அமைப்புகள் அச்சம் தெரிவித்தன.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்வது சரியல்ல. இது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி விடும் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் பயப்படுகிறார்கள்.

Posted in ADMK, AIADMK, Arcot, Collections, Department, Dept, Division, DMK, Economy, Electricity, Employment, Expensive, Finance, Govt, Harthal, JJ, Jobs, Kalainjar, Karunanidhi, KK, Operations, Plans, Power, Private, Privatization, restructuring, service, Strike, Tariffs, TNEB, Transmission, Union | 2 Comments »

The path to Nirvana: Mahasivarathri to Vaikunda Ekadasi

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

மோட்சத்துக்குப் போகும் வழி!

ராணிப்பேட்டை ரங்கன்


“தமிழன் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பது வெற்று வார்த்தைகள் மட்டும் அல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து சொன்னவை.

தமிழ்நாட்டவர்களின் பக்தி, நாட்டின் பிற மாநிலத்தவரின் பக்தியைவிட அலாதியானது. கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே இங்கே பக்தி “”ஒரு மார்க்கமாகத்தான்” வளர்ந்து வருகிறது.

வேப்பிலை ஆடை கட்டுவது, மண் சோறு சாப்பிடுவது, மார்பில் கத்தி போடுவது, தலையில் தேங்காய் உடைப்பது, பாய்ந்து சென்று கோழியை வாயால் கவ்வி ரத்தம் குடிப்பது, திருமணம் ஆகாத கன்னிப்பெண் ஆடை அணியாமல் ஊரை வலம் வருவது (பாரதி ராஜா சொல்லாவிட்டால் நமக்கு இது தெரிந்திருக்கவே வாய்ப்பு இல்லை), தனியா சேர்க்காமல் மிளகாயை மட்டும் யாகத்தில் சேர்ப்பது, பாடைக் காவடியில் படுத்துச் செல்வது, தூக்கம் என்ற நேர்ச்சையில் தொங்குவது, ஏரோப்ளேன் காவடி, லாரி-வேன் டிரெய்லர் காவடி என்று பக்தியில் இத்தனை ரகங்களா என்று வியக்கவைப்பதில் வல்லவர்கள் தமிழர்கள்.

சென்னை மாநகர பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது அந்த சுவரொட்டி சற்றே வித்தியாசமாகக் கண்ணில்பட்டது. “”ஒரே காட்சியில் 3 திரைப்படங்கள்” என்பதே அது.

ஐம்பெரும் அறிஞர் கலைஞரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் உச்சத்தில் இருக்கும்போதே தமிழ் திரையுலகுக்கு இப்படிப்பட்ட சரிவா என்று துணுக்குற்றேன். “”ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்பது போய், மூன்றாகிவிட்டதே என்ற சிந்தனையோடு பஸ்ஸிலிருந்து இறங்கி, அதே சுவரொட்டியை அருகில் இருந்து படித்தேன். அப்போதுதான் தெளிவு பிறந்தது.

ஆம்… மகா சிவராத்திரிக்குத்தான் இந்த 3 திரைப்பட சிறப்புக் காட்சி. அடடா… தமிழ்நாட்டில் இன்னாருக்குத்தான் பக்தி, இன்னாருக்கு இல்லை என்று அவசரப்பட்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பக்த சிரோன்மணிகளின் நன்மைக்காகவே கோடம்பாக்கத்தார் சிந்தித்து இப்படி ஒரு விரதா வியூகத்தை வகுத்துத் தந்திருக்கிறார்கள்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுக்க கண் விழித்திருந்தால் மோட்சம் நிச்சயம் என்பதால், வெவ்வேறு வழிகளில் அதை கடைப்பிடித்தும் எதுவும் வெற்றிகரமாக இல்லாததால், பகுத்தறிவும் பக்தியும் ஒருங்கே கைவரப்பெற்ற தமிழன், ஏகாதசியன்று இரவில் ஒரே காட்சியில் 3 திரைப்படங்களைப் பார்த்து “மோட்சத்துக்குப்’ போக ஆரம்பித்தான். (அப்படி அந்த நாளில் தவறவிட்டவனுக்காகவே சென்னையில் மோட்சம் என்ற பெயரில் தியேட்டரைக் கட்டி வைத்திருக்கிறார்கள்)

வைணவத்துக்கு ஏகாதசி என்றால் சைவத்துக்கு சிவராத்திரி அல்லவா? சைவர்கள் மட்டும் தூங்கி நரகத்துக்குப் போக வேண்டுமா என்ற ஆதங்கத்தில்தான் இந்த 3 திரைப்படங்கள்.

இத் திரைப்படங்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை, ஆனால் நல்ல பேக்கேஜ். அதில் ஒன்று மலையாளப்படம். சிவராத்திரி மட்டும் அல்ல, அதை அடுத்து வரும் ராத்திரிகளுக்கும் கண்விழிப்பு நிச்சயம்.

எங்கு எதைச் செய்தாலும் அதை பக்தி பூர்வமாகச் செய்வதில் தமிழனுக்கு நிகரே கிடையாது. முன்பெல்லாம் தனியார்தான் ஒயின் கடை வைத்திருந்தார்கள். மறக்காமல் விநாயகா ஒயின்ஸ், வெங்கடேஸ்வரா ஒயின்ஸ், அருணாசலா ஒயின்ஸ் என்று எல்லாவற்றையும் அந்த பரம்பொருளுக்கு அர்ப்பணித்துவிட்டே தொழிலை நடத்திவந்தார்கள்.

ஒன்று நிச்சயம் ஐயா, தமிழ்நாட்டில் பிறந்தவன் கூடாத நட்பால் பொதுவுடமைவாதியாகவோ, பகுத்தறிவாளனாகவோ மாறினால்கூட அவனை அந்த நடராஜன், சிவராத்திரி சமயத்தில் காந்தம்போல இழுத்துவிடுகிறான். எப்படி என்று கேட்காதீர்கள், அது “சிதம்பர ரகசியம்’.

Posted in Bakthi, Belief, bhakthi, Cinema, Ekadasi, Films, God, Hindu, Hinduism, Hindutva, Mahashivarathri, Mahasivarathri, Moksha, Movies, Nirvana, Religion, shivarathri, shivrathri, sivarathri, sivrathri, Superstition | Leave a Comment »