Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 28th, 2008

Sri Lanka’s Palali Military Complex Shelled by the LTTE

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கையின் யாழ்குடாநாட்டில் உள்ள பலாலி இராணுவ படைத்தளத்தின் மீது புலிகள் எறிகணை தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் மிக்க இராணுவத்தின் பலாலி படைத்தளத்தின் மீது இன்று காலை 9.15 மணியளவில் எறிகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற வேளை, கொழும்பில் உள்ள பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் பலாலிக்குச் சென்றதாகவும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக அவர்கள் பிரயாணம் செய்த விமானம் பலாலியில் தரையிறங்காமல், அவர்கள் நூலிழையில் உயிர்தப்பி கொழும்புக்குத் திரும்பிச் சென்றதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணத்திற்கான விமானப் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகள் பலாலி தளத்தை நோக்கி எறிகணை தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார். எனினும் இராணுவத்தினருக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என்றும் பலாலிக்கான விமான சேவைகளும் பாதிக்கப்படவில்லை என்றும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இன்றுகாலை ஒரு தொகுதி இராணுவத்தினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தை பலாலியில் நடத்தியதாகவும், இதனை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இந்த எறிகணை தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் புலிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதை போல, முக்கிய ராணுவ உயரதிகாரிகள் யாரும் இன்று பலாலிக்குச் சென்றதாக அங்கிருந்து அறிக்கைள் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், பலாலிக்கும் கொழும்பிற்கும் இடையிலான விமான சேவைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

 


தமிழக மீனவர்கள் கைது குறித்து சட்டமன்றத்தில் விவாதம்

தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்
தமிழக மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

தங்கள் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் புதைத்திருப்பதாக இலங்கை அதிகாரப் பூர்வமாக இந்தியாவிற்கு தெரிவித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஜனவரி 21ம் தேதி மூன்று விசைப்படகுககளில் சென்ற 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இப்பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆளும் திமுகவைத் தவிர்த்து ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை மீட்டுத்தர வேண்டும், அப்போது தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

விவாதத்திற்கு பதிலளித்துப்பேசிய மூத்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இந்திய வெளிவிவகாரத்துறைக்கான மத்திய இணைஅமைச்சர் அகமதுவுடன் தொடர்பு கொண்டு கடத்தப்பட்ட மீனவர்கள் தொடர்பாக பேசியிருப்பதாகக்கூறினார். அவர்களெல்லாம் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தனது நம்பிக்கையினையும் வீராசாமி தெரிவித்தார்.

சர்வதேசஎல்லையை மீறக்கூடாது என தமிழகமீனவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், கச்சததீவு ஒப்பந்தப்படி அவர்களுக்குள்ள உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் கூறியிருக்கின்றனர், அந்த உரிமைகளை மீட்டுத்தரும்படி மத்தியஅரசிடம் வற்புறுத்தப்படும் என்றும் வீராசாமி கூறினார்.

 


Posted in Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Jaffna, Landmines, LTTE, mines, Palali, Rameshvaram, Rameshwaram, Ramesvaram, Rameswaram, Seamines, Sri lanka, Srilanka, Tamil Nadu, TamilNadu, Waters | 1 Comment »

Rajeem Mohammed Imam: Tamil National Alliance (TNA) legislator to ‘resettle Muslims’

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.

 


உதயன் செய்தித்தாளுக்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

எனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

 


மன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

கிளேமோர் கண்ணிவெடி
கிளேமோர் கண்ணிவெடி

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Posted in AI, Colombo, Condemn, Eelam, Eezham, Extortion, Freedom, Independence, Islam, Jaffna, journalism, Journalists, LTTE, Mannaar, Mannar, Media, MSM, Muslims, Newspaper, Rajeem Mohammed Imam, Sri lanka, Srilanka, Tamil National Alliance, TNA, Udayan, Udhayan, Uthayan | Leave a Comment »