Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 11th, 2008

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

In search of Buddha – Religious freedom in Tamil Nadu & identifying the roots of Buddhism, Culture, Traditions

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

தேடல்: புத்தரைத் தேடி..!

எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும் மரத்தடிகளிலும் தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து புதைத்துக் கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்துகொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கறை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது?!

தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார்; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள், அட அப்படியா! என வாய் பிளந்துவிட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள்.

முனைவர் பா. ஜம்புலிங்கமும் அப்படிதான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என “சாமர்த்தியமாக’ இல்லாமல் சோழ நாட்டில் பெüத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.

ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு செய்வோம் என்றிருந்த அவரிடம் எங்கிருந்தோ வந்து புத்தர் ஒட்டிக்கொள்ளவும் இப்போது புத்தரைத் தேடி ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.

ஜம்புலிங்கம் சொல்கிறார்: “”என்ன தகவல் கிடைத்தாலும் குறித்து வைத்துக்கொள்வேன். வார விடுமுறை நாள்களில் கிளம்புவேன். பஸ்ஸில், சைக்கிளில், நடையில் எனத் தொடரும் பயணம். புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஊரை ஒட்டியுள்ள வயல்களிலும் மரத்தடியிலும்தான் கிடைக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தாலும் உச்சிக்கொண்டை, நீள செவிகள், ஆடை, தியான நிலை, நெற்றித் திலகம் என ஏதாவது ஓர் அடையாளம் புத்தரைக் கண்டறிவித்துவிடும்.

சில இடங்களில் புத்தர் எனத் தெரிந்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் இன்ன சிலை என்றே தெரியாமல் வழிபடுகிறார்கள். மங்கலம் என்ற ஊரில் மீசை உள்ள புத்தரைக் கண்டறிந்தோம். உள்ளூர் மக்கள் அதை செட்டியார் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இதேபோல் முனிசுவரர், அம்மணசாமி என்ற பெயர்களில் வணங்கப்படும் புத்தர் சிலைகளும் உண்டு. இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் கி.பி. 10, 11-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

தமிழகத்தில் சங்கக் காலத்தில்தான் புத்த சமயம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது; ஆனால், மயிலை சீனி. வேங்கடசாமி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். கி.பி. 6-ம் நூற்றாண்டில் செழித்தோங்கிய புத்த மதத்தின் தாக்கம் 16-ம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது. எனவே, இன்னும் நிறைய சிலைகள் இருக்கக் கூடும். அவையெல்லாம் கண்டறியப்பட்டால் பெüத்த சமய வரலாற்றுக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்” என்கிறார் ஜம்புலிங்கம்.

ஜம்புலிங்கத்தின் ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழகத்திலேயே காவிரி கரையோர – கடலோரப் பகுதிகளில்தான் பெüத்த மதம் செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது தமிழக பெüத்த வரலாற்றுக்கு நல்ல பங்களிப்பாகும்.

சிலைகள் மதம் சார்ந்தவை மட்டுமல்ல; கலை, பண்பாடு, கலாசாரம் எனக் காலம் உறைந்த – புதையுண்டுக் கிடக்கும் வரலாறுகள். ஜம்புலிங்கம் போல் தனித்தனியே வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்த சிலைகள், அவை தொடர்புடைய செய்திகள் எல்லாம் ஒன்றாக தொகுக்கப்பட்டு பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழகப் பெüத்த வரலாற்றில் புதிய கோணம் புலப்படலாம். நம் சமூகத்தில் இதெல்லாம் பெரிய கனவுதான். புத்தரை வேண்டிக்கொள்வோம்!

Posted in Ancient, Archeology, Buddha, Buddhism, Culture, Heritage, Hindu, Hinduism, Hindutva, History, Idols, inscriptions, Religion, Religious, Research, Rural, Saivite, Scriptures, Statues, stones, Tamil Nadu, TamilNadu, Traditions, Vaishnavite, Villages | Leave a Comment »

Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!

அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.

அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…

“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.

அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.

ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.

நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.

அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.

சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.

இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.

மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.

மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.

பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.

எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.

நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.

அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.

“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.

விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.

சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.

இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.

Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »

Dyslexia & Taare Zameen Par – Raman Raja

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நெட்டில் சுட்டதடா..: சிதைந்த சொற்களால் கலைந்த கனவுகள்!


எலிமெண்டரி பள்ளிக் கூட ஆசிரியர்கள் அனைவரும் – வேறு வழியே இல்லாவிட்டால் திருட்டு விசிடியிலாவது – பார்த்தே ஆகவேண்டிய இந்திப்படம் ஒன்று வந்திருக்கிறது. அமீர் கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்’ (மண்ணிற்கு வந்த விண்மீன்கள்) என்ற படம்தான் அது. படத்தின் நாயகன், எட்டுவயதுப் பல் நீண்ட பையன் ஒருவன். சம்பிரதாயமான சினிமாவுக்குத் தேவையான காதல், மோதல், சாதல் எதுவுமற்ற இந்தப் படத்தின் மையக் கரு, டிஸ்லெக்ஸியா ( Dyslexia) என்ற வியாதி பற்றியது.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரையும் போன்ற புத்திசாலித்தனத்துடன்தான் இருப்பார்கள். ஆனால் எழுதப் படிக்க மட்டும் லேசில் வராது. உதாரணமாக “அ’ என்று கரும்பலகையில் எழுதினால் அதன் வரி வடிவத்தையும், மனத்தில் அதன் உச்சரிப்பையும் தொடர்புப்படுத்தி, இதுதான் “அ’ என்று புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும். நிறைய ஸ்பெல்லிங் தப்பு செய்வார்கள். ஒரே மாதிரி தோற்றமளிக்கும் க்ஷ, க் போன்ற எழுத்துக்களை நிரந்தரமாகக் குழப்பிக் கொள்வார்கள். ஒரு வார்த்தையின் பகுதிகள் இடம் வலமாக இடம் மாறும்.

பச்சைக் கிளி என்பது சப்பைக் கிளியாகும். அவர்கள் எழுதிய ஆங்கிலத்தைப் பார்த்தால் அசப்பில் ரஷ்ய மொழி போல இருக்கும். என்னுடன் நாலாம் வகுப்புப் படித்த இப்ராகிம், நடுநடுவே சில எழுத்துக்களைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் உல்ட்டாவாக எழுதுவான். (அன்று அவனுடைய டிஸ்லெக்சிஸியாவைப் புரிந்து கொள்ளாமல் சாமிநாதனுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்ததற்கு இன்று உண்மையிலேயே வருந்துகிறேன். ஸôரிடா இப்ராகிம்!)

டிஸ் என்றால் “சிதைந்த’. லெக்ஸிஸ் என்றால் “வார்த்தை’. தமிழாசிரியர்கள் அனுமதித்தால், டிஸ்லெக்ஸியாவிற்கு “சொற்சிதைவு ‘ என்று வைத்துக் கொள்கிறேன். டிஸ்லெக்ஸியா என்பது மனநோய் அல்ல. இந்தக் கணத்தில் உலகத்தில் நூறு கோடிப் பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டிஸ்லெக்ஸியா குழந்தைகளில் சிலருக்குக் கண்ணும் கையும் ஒத்துழைக்க மறுக்கலாம். வீசி எறியப்பட்ட பந்தை காட்ச் பிடிப்பதில் சிரமம் இருக்கலாம். பந்தின் சைஸ், அதன் வேகம், திசை என்று ஒரே நேரத்தில் மூளையைத் தாக்கும் பல விஷயங்களை அலசிப் புரிந்து கொண்டு கையை நீட்டுவதற்குள் பந்து பவுண்டரியைத் தாண்டிவிடும். சில சமயம் நீண்ட சங்கிலித் தொடரின் ஆணைகளை நினைவு வைத்துக் கொள்வதில் பிரச்சினை. “”வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயி, பொட்டிக் கடையிலே வத்திப் பெட்டியும் மெழுகுவர்த்தியும் வாங்கிட்டு, அப்படியே சிவமணி வீட்டுலேர்ந்து தினமணி வாங்கிட்டு வந்துடு” போன்ற வாக்கியங்களின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்து புரிந்து கொள்வதற்குள் பொழுது விடிந்துவிடும். இதே போன்ற மற்றொரு வியாதி, டிஸ்கால்குலியா ( Dyscalculia). இவர்கள் படிப்பது, எழுதுவது எல்லாம் பண்டிதத்தனமாகச் செய்வார்கள். ஆனால் கணிதம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது!

சொற்சிதைவு ஏன் என்பதற்கு, ஒருவாரம் லீவு போட்டுவிட்டுப் படிக்க வேண்டிய அளவுக்குக் காரணங்கள் சொல்கிறார்கள். எழுதுவது, படிப்பது எல்லாம் மனிதனின் இயற்கையான திறமைகள் அல்ல. பல லட்சம் வருடப் பரிணாம வளர்ச்சியில் , மிகச் சமீபத்தில்தான் அவன் கற்றுக் கொண்ட வித்தைகள் இவை. எனவே பலருடைய மூளைகள் இன்னும் பள்ளிக் கூடத்திற்குப் போகத் தயாராகவில்லை என்பது ஒரு கட்சி. மற்றொரு பக்கம், மரபியல் காரணங்கள், நரம்பியல் நிபுணர் ஒருவர், டிஸ்லெக்ஸியா பையனின் மூளையை ஸ்கான் எடுத்து “”அங்கே பார், இங்கே பார்” என்று குச்சியால் சுட்டிக் காட்டினார். என் பாமரக் கண்ணுக்கு சிவப்பும் பச்சையுமாக ஏதோ பாசிதான் தெரிந்தது.

சொற்சிதைந்த குழந்தைகளுக்கு மிகவும் தேவைப்படுவது, அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். கை நிறைய மார்க் வாங்குவதில்லை என்ற ஒரே காரணத்தால் இந்தக் குழந்தைகளை முட்டாள், தத்தி, சோம்பேறி என்று பெற்றோர்களே சுலபமாக முத்திரை குத்தி விடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கை, தன்மானம் எல்லாவற்றுக்கும் சாவுமணிதான். அதிலும் நன்றாகப் படிக்கும் அண்ணனோ தம்பியோ இருந்துவிட்டால் போச்சு! இதழாகப் பிய்த்துப் போட்டு விட்டுத்தான் மறுவேலை. ஹோம்வொர்க் எழுதவில்லை என்று தினசரி காதுகள் திருகப்பட்டு மணிக்கட்டுகள் நொறுக்கப்படுவதில் , இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கூடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடுவதில் ஆச்சரியமில்லை. தினசரி காலையில் ஸ்கூலுக்குப் போக மறுப்பு, அடம், வகுப்பறை ஜன்னல் வழியே எகிறிக் குதித்துக் காணாமல் போய்த் தெருவில் பாம்பாட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது, சதா கனவு மேகங்களில் சஞ்சரிப்பது போன்றவை டிஸ்லெக்ஸியாவின் பக்க விளைவுகள்.

சொற்சிதைவுக்கு ஆளான குழந்தைகள் எந்த வகையிலும் அறிவிலோ, திறமையிலோ குறைந்தவர்கள் அல்ல. சொல்லப் போனால் பல மனவியல் டாக்டர்கள், “”டிஸ்லெக்ஸியாவை ஒரு வியாதி என்று வகைப்படுத்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஓர் ஊனமோ, குறைபாடோ அல்ல. நாம் எல்லாருமே எல்லாப் பரீட்சையிலுமே முதல் ராங்க்கா எடுக்கிறோம்? படிப்பில் முன்னே பின்னேதானே இருக்கிறோம்? அதே மாதிரி இந்தக் குழந்தைகளுக்கு சற்று ஸ்பெஷல் உதவி தேவைப்படுகிறது. அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆசிரியர்கள் கூட, “”டிஸ்லெக்ஸியா என்ற வார்த்தையே ஏதோ பயங்கரமாக, தமிழ் சினிமாவின் கடைசிக் காட்சியில் கதாநாயகனுக்கு வரும் வியாதி போல இருக்கிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு சாந்தமாக த.ஈ. (  reading disability) என்று கூப்பிடலாமே?” என்கிறார்கள்.

டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சின்னக் கேள்வி. எதிர்காலத்தில் உங்கள் குழந்தை இவர்களைப் போலப் புகழ் பெற்றால் போதுமா பாருங்கள்:

விஞ்ஞானிகள் ஐன்ஸ்டைன், எடிசன்?

பிரதமர் சர்ச்சில்?

எழுத்தாளர் அகதா கிறிஸ்டி?

ஐஸ்வர்யா கணவர் அபிஷேக் பச்சன்?

போதும் என்றால், கவலையை விடுங்கள். மேற்குறிப்பிட்ட அத்தனை பேரும் ஆரம்பக் காலத்தில் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அரசியல்வாதிகள், ஓவிய மேதைகள், தொழிலதிபர்கள் என்று சொற்சிதைவை வென்று புலிக் கொடி நாட்டிய பிரபலங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

டிஸ்லெக்ஸியாவின் பரிதாபத்தையும் தங்களுக்குக் கொழுத்த வியாபாரமாக்கிக் கொண்டுவிட்டவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பிரத்யேகமாகத் தயாரித்த டப்பா உணவுகள், பத்தியங்கள், சூரியகாந்தி சிகிச்சை, முதுகுத் தண்டைப் பிசையும் ஆஸ்டியோபதி வைத்தியம் என்று அப்பாவி அப்பாக்களிடம் சக்கையாகப் பணம் கறப்பவர்கள் இவர்கள். மற்றொருபுறம், சொற்சிதைவை சமாளிக்க ஆசிரியர்களும் டாக்டர்களும் சேர்ந்து பல உபயோகமான பாடத்திட்டங்கள் தயாரித்திருக்கிறார்கள். இவற்றில் பலவற்றை நாமும் பைசா செலவில்லாமல் பின்பற்ற முடியும். எழுத்துக்களை உடல்ரீதியாக உணர்ந்து கொள்வதற்கு, மணலில் விரலால் எழுதிப் பழகுவது முதல் கட்டம். (நம் முன்னோர்கல் தெரியாமலா எழுதி வைத்தார்கள்!) களிமண்ணில் பொம்மை பொம்மையாக எழுத்து வடிவங்களை உருவாக்குவது, ஒரே மாதிரி சப்த அமைப்பு உள்ள வார்த்தைகளை (தகரம், நகரம், நரகம்) ஒன்றாகத் தொகுத்துப் படிப்பது என்று பல வழிகள் இருக்கின்றன. டிஸ்லெக்ஸியா சொûஸட்டியில் கேட்டால் ஆலோசனைகள் நிறையக் கிடைக்கும். பெற்றோர்கள்தான் இதையெல்லாம் பொறுமையாகச் செய்ய வேண்டும். ஐம்பது பிள்ளைகள் படிக்கும் வகுப்பில் ஆசிரியர்களால் இப்படி தனிக் கவனம் செலுத்த முடியாதுதான். ஆனால் அவர்கள் சொற்சிதைந்த குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்டு திட்டாமல் மிரட்டாமல் அரவணைத்துப் போனாலே பெரிய உதவியாக இருக்கும். மற்றபடி குழந்தையிடம் இருக்கக் கூடிய ஓவியம், இசை போன்ற திறமைகளைக் கண்டுபிடித்துத் தூண்டிச் சுடர் விடச் செய்தால் குழந்தையின் சுய மதிப்பீடு உயரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட விண்மீன்கள் படத்தில் அமீர்கான் பேசும் ஒரு வசனம், எதிலும் எப்போதும் தன் குழந்தைதான் முதலில் வர வேண்டும் என்ற வெறியில் அவர்கள் வாயில் நுரைதள்ளும் வரை ஓட வைக்கும் பெற்றோர்கள் பற்றியது: “” இவர்களுக்கெல்லாம் ரேஸ் ஓட விட்டுப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குப் போய் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்? பேசாமல் குதிரை வளர்க்க வேண்டியதுதானே?”

Posted in +2, 10, Aamir, Aamir Khan, Achievements, Achievers, Arts, Biz, Books, Business, Challenged, Child, Children, Cinema, Cognition, Colleges, Commerce, Communication, disability, Dyscalculia, Dyslexia, English, entrepreneurs, entrepreneurship, Fashion, Films, Fun, Games, Grades, IIM, IIT, Innovation, Ishaan, Ishan, Khan, Kids, Learn, Learning, Marks, Maths, Merit, Movies, Painting, Professors, Raman Raja, Rank, Reading, Schools, Shrewd, Sports, Students, Teachers, Value | 2 Comments »

Herbs & Naturotherapy: Nerunjil – How to overcome ‘Excessive leanness’: emaciation

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மூலிகை மூலை: எலும்புருக்கியைப் போக்கும் நெருஞ்சில்!

எதிர் அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடு படர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடு திரும்பும் தன்மை உடையது. முள் உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர், தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவை நிறுத்தும் குணம் உடையது. தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் தரிசு மண்ணில் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள் : அசுவத்தம், உச்சிகம், உசரிதம், திரிகண்டம், கோகண்டம், அசுவசட்டிரம், காமரதி, சாம்பம், செப்பு.

வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்(யானை நெருஞ்சில்)

பெருநெருஞ்சில் : இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன் காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

சிறு நெருஞ்சில் : இது தரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்கு கடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.

செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்.

ஆங்கிலப் பெயர் : Tribulus terretris; linn; zygophyllaceae

மருத்துவக் குணங்கள் : நெருஞ்சில் சமூலம் 2, அருகு ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவாக 3 வேளை 3 நாள்கள் குடித்து வர கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

பெரு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.

நெருஞ்சில் சமூலச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம் போவது நிற்கும்.

சிறு நெருஞ்சில் அல்லது செப்பு நெருஞ்சில் சமூலம் ஒன்றுடன், அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு, வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

நெருஞ்சில் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதேயளவு அருகம்புல் சமூலத்தை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி இரண்டையும் கலக்க வேண்டும். இந்தப் பொடியை அரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்து வர வெட்டை, இரத்தப்போக்கு குணமாகும்.

நெருஞ்சில் வித்தினைப் பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். இதையே இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.

நெருஞ்சில், வாகை, முல்லை, பாதிரி, சிற்றாமுட்டி, பேராமுட்டி, பூவிளம், சிறுவழுதணை, கண்டங்கத்திரி, குமிழ் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி ஒரு சிட்டிகைப் பொடியை 3 வேளையாக வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர உடலின் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி நோய்களிலிருந்து குணமாக்கும்.

நெருஞ்சில் காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர நீரடைப்பு சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி குணமாகும்.

நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடிக்க சிறுநீரைப் பெருக்கும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Consumption, Disease, emaciate, emaciation, Herbs, lean, medical, Medicine, Naturotherapy, Nerunchil, Nerunjil, starvation, Thin | 3 Comments »

Ayurvedha Corner – S Swaminathan: Murungai keerai helps in increasing breast milk

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாய்ப்பாலுக்கு முருங்கைக்கீரை!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

என்னுடைய இரண்டு மாதக் குழந்தை சளி பிடித்து மிகவும் கஷ்டப்படுகிறான். தொண்டையில் கபம் கட்டிக்கொள்வதால் பால் குடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். பாலைச் சங்கில் எடுத்துக் கொடுத்தேன். குடிக்க மறுக்கிறான். என் சாப்பாட்டின் அளவைக் குறைத்தேன். பாலின் அளவு கம்மியாகிவிட்டது. என்ன சாப்பிட்டால் பாலின் அளவு கூடும்? அவனுக்கு ராகி, கோதுமை ஊற வைத்து கூழாகக் கொடுக்கலாமா?

குழந்தையைப் பொதுவாக மூன்று வகையில் பிரிக்கலாம். முதலாவது “க்ஷீராசீ’ என்பது. அதாவது இந்த வயதில் குழந்தை தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளரும். குழந்தைக்கு எந்த நோயும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள அம்மா பத்திய உணவாகச் சாப்பிட வேண்டும். இந்த வயதில் குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் தாயாருக்கு மருந்து கொடுத்து, தாய்ப்பாலின் வழியாக குழந்தைக்கு மருந்து சேர குழந்தையின் நோய் தீருவதும் முறையாகும்.

உங்களுக்குத் தாய்ப்பால் குறைந்துவிட்டது. குழந்தைக்கு தொண்டையில் கபம் கட்டி பால் குடிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்குத் தாய்ப்பால் அதிகரிக்கவும் அதன் வழியாக குழந்தைக்குத் தொண்டை சளி குறையவும் உணவில் அடிக்கடி முருங்கைக்கீரையும் பச்சைப் பயறு சுண்டலும் சேர்க்கவும். இதனால் தாய்ப்பால் வேண்டிய மட்டும் குழந்தைக்குக் குறைவில்லாமல் கிடைக்கும். மேலும் ஒரு பல் பூண்டைக் கொஞ்சம் தண்ணீர் கலந்த பாலில் சேர்த்துக் காய்ச்சி பூண்டை எடுத்து விட்டு பாலை வெதுவெதுப்பாக நீங்கள் காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகக் குடிக்க வேண்டும். வாரத்தில் இருமுறை இதுபோல குடித்தால் போதும். நீங்கள் பூண்டுப்பாலைக் குடித்த மறுநாள், தாய்ப்பாலைப் பருகிய குழந்தையின் வாயில் பூண்டின் மணம் வீசும். பூண்டினால் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் குழந்தைக்கு எளிதில் சீரணமாகக் கூடியதாகும். தொண்டை கபக்கட்டை நீக்கவும் செய்யும். இதற்குக் காரணம் பாலில் கொழுப்பின் அம்சம் குறைந்து எளிதில் செரிக்க உதவும். குழந்தைக்கு வயிற்றில் மப்பு, உப்புசம், புளிப்பு எதுவும் தட்டாது. மலச்சிக்கல் இருக்காது. நல்ல பசியும் ஜீரணமும் ஏற்படும்.

மேலும் வசம்பின் மேல் தோலைச் சீவி, சட்டியிலிட்டுச் சுட்டு சாம்பலாக்கிப் பொடி செய்யவும். ஓர் அரிசி அளவு இந்தப் பொடியை எடுத்து, சிறிது தேனிலோ, தாய்ப்பாலிலோ தினந்தோறும் அல்லது இரண்டு அல்லது மூன்று தினத்திற்கு ஒரு முறையோ குழந்தைக்குக் கொடுக்கவும். சளி ஜலதோஷம் போன்ற நுரையீரல் நோயோ -வயிறு மப்பு, மந்தம், புளிப்பு, ஜீரணக்கோளாறு, உப்புசம், வாந்தி போன்றவையோ வராமல் தடுக்கும். மலச்சிக்கல் இல்லாமலும் இருக்கும்.

நீங்கள் குறிப்பிடும் ராகி, கோதுமைக் கூழ் போன்றவை குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு மாதம் ஆகும்போதுதான் கொடுப்பது நல்லது. கொஞ்சம் உணவைச் சாப்பிட்டு, தாய்ப்பாலையும் நம்பி இருக்கும் இந்நிலையில் அதை “க்ஷீரான்னாசி’ என்பர். இந்த ராகி, கோதுமையைக் காட்டிலும் அரிசியைச் சமைத்துக் கொடுப்பது நலம். சுத்தமான அரிசியை ஓர் ஆவி கொதிக்க விட்டுச் சிறிது வெந்ததும் எடுத்து வெய்யிலில் உலர்த்தி அந்த அரிசியை ரவை கணக்கில் ஒரே சீராகப் பொடித்து, ஒரு சிட்டிகை ஜீரகமோ அல்லது ஓமமோ கூட்டிப் பொடி செய்ய வேண்டும். ஒரே ஒரு மிளகையும் சேர்க்கலாம். தண்ணீர் கொதிக்கும்போது சுமார் 2 டீஸ்பூன் இந்த அரிசி நொய்யை இட்டு வேகவிட்டு கஞ்சியாக்கி, துளி உப்பு சேர்த்து ஒருவேளை குழந்தைக்கு ஊட்டி விடவும். 8 மாதம் 9 மாதம் என்று ஆகும்பொழுது இந்தக் கஞ்சியைக் கூழ்போல கெட்டியாகக் கிண்டிக் கொண்டு, அதில் ஒரு சொட்டு நெய்கூட்டி குழந்தைக்கு ஊட்ட, வயிற்றுக்குள் எளிதாக நழுவிச் செல்லும். அதன் பிறகு சிறிது வெந்நீர் புகட்ட எளிதில் கூழ் செரித்து விடும்.

குழந்தை வளர வளர தாயாரை நம்ப வேண்டிய நிலையும் மாறி உணவை மட்டுமே சாப்பிடும் போது அதை “அன்னாசீ’ என்று அழைப்பார்கள்.

ஆயுர்வேத மருந்துகளில் குழந்தைக்குச் சளி குறையும், நன்றாகப் பசி எடுக்கவும் ரஜன்யாதி சூர்ணம் ஒரு சிட்டிகை எடுத்து, சிறிது தேன் நெய் குழைத்து நாக்கில் தடவி விடவும். காலை மாலை, தாய்ப்பால் பருகும் முன்னர் (சுமார் ஒரு மணி நேரம்) கொடுக்கவும். தாய்ப்பால் வளர ஸ்தன்ய ஜனன ரஸôயனம் எனும் லேஹ்யத்தை காலை மாலை வெறும் வயிற்றில் 5-10 கிராம் வரை நக்கிச் சாப்பிடவும்.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Babies, breast, breastfeeding, Child, Children, Garlic, Herbs, Infants, Keerai, Kids, Medicine, milk, Mom, Mother, Murungai, Natural, Parent, Parenting, Toddlers | 1 Comment »

Sun TV Top 10 Movies & Rights to a Cinema – Collusion, Mixing news with monetary interests

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சர்ச்சை: டாப் 10… 20… 30..!

உலக அதிசயங்களை ஏழு என்று வகைப்படுத்தியதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் “டாப் டென்’ என்று டி.வி. சானல்கள் வரிசைப்படுத்தியதற்கும். அதாவது ஏழு, பத்து என்பதெல்லாம் பழக்க தோஷம்தான். வார வாரம் டாப் டென் நிகழ்ச்சிகள் போக ஆண்டுக்கு ஒருமுறை டாப் டென் தேர்ந்தெடுக்கிறார்கள். சன் டி.வி., இப்போது கலைஞர் டி.வி. இரண்டிலும் இந்த வரிசைப்படுத்தல் நடக்கிறது.

சன் டி.வி.யில் நடக்கிற அரசியல் சுவாரஸ்யமானது. எப்போதும் விஜய் நடித்த படத்தை மட்டுமே டாப் டென்னில் முதலாவதாகக் கொண்டுவருவது அவர்கள் வாடிக்கை. வாரப் பட்டியலிலும் அவர்தான் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பார். அப்படியில்லை என்றால் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரித்த படம் முதலிடத்தைப் பிடிக்கும். அல்லது ரஜினி படம் வெளிவந்தால் அது முதலிடத்தைப் பிடிக்கும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு “ஆட்டோகிராஃப்’ தேசிய விருது பெற்ற போது அதற்கு சன் டி.வி. போதிய விளம்பரம் செய்யவில்லை என்று வருத்தப்பட்டார் சேரன். விளைவு அடுத்த ஆண்டில் அவர் இயக்கிய “தவமாய் தவமிருந்து’ திரைப்படம் ஆண்டு டாப் டென்னில் இடம்பெறவேயில்லை. அடுத்து வெளியான “மாயக் கண்ணாடி’ முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டது. ஒரு வழியாக சேரன் இறங்கிவந்து சன் தரப்பில் பேசி, பிறகு அந்தச் சானலிலும் அவருடைய பேட்டி இடம் பெற்றது. அந்த வகையில் புறக்கணிக்கப்பட்டு இப்போது பேட்டி கொடுக்க வைக்கப்பட்டிருப்பவர் அஜீத்.

விஜய் நடித்த “வசீகரா’ படத்தையும் நிராகரித்திருக்கிறார்கள். காரணம் அதை ஜெயா டி.வி. வாங்கியிருந்தது.

அவர்கள் முடிவு செய்தால் அது பட்டியலில் இடம் பெறும். வேறு சானல்களில் வாங்கப்பட்ட படங்களை அவர்கள் பட்டியலில் சேர்ப்பதில்லை. ரஜினி, விஜய், ஆஸ்கர் ஃபிலிம்ஸ் போக அவர்களுக்குப் படம் விற்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஜெயா டி.வி.யில் இவர்களில் இருந்து விடுபட்ட மற்ற படங்கள் இடம் பெறும். உதாரணத்துக்கு அவர்களுக்கு “பில்லா’, “சென்னை -28′ உள்ளிட்ட படங்கள் அவர்களால் சிலாகிக்கப்பட்ட படங்கள்.

செய்திகளே அப்படி அவரவர் வசதிக்கு ஏற்ப உருவாக்கப்படுவதும் ஒளிபரப்பப்படுவதுமாக இருக்கும்போது டாப்டென்கள் எம்மாத்திரம்.

கலைஞர் டி.வி.க்குத்தான் தர்மசங்கடம் அதிகம். அவர்கள் தற்போது வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் வெளியிடும் உரிமையை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர திரைத்துறையினரை தம் வசம் வைத்திருப்பது அவர்களுக்கு மறைமுக ஆதரவாக நினைக்கிறார்கள். (கடந்த இரண்டாண்டு திரைத்துறை அரசு விருதுகள் பட்டியலிலேயே அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் கெüரவித்தவர்கள் ஆயிற்றே?)

வாங்கிய படங்கள், பெரிய நடிகர்கள்- பெரிய இயக்குநர்களின் படங்கள் என எல்லோரையும் டாப் டென்னில் இடம் பெறச் செய்ய வேண்டும். “பெரியார்’, “ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற “சன்’னால் புறந்தள்ளப்பட்ட படங்களுக்கு இங்கே ஆதரவு காட்ட வேண்டிய நெருக்கடி. கூட்டிப் பார்த்தால் படத்தின் பட்டியல் 17-ஐத் தாண்டியது. என்ன செய்வதென்று புரியவில்லை. எந்த ஏழு பேரை நீக்குவது என்று குழப்பம். இறுதியாக ஒரு உத்தி கண்டார்கள். ஏன் டாப் டென்? அது யார் போட்ட சட்டம்? இனி ஒரு விதி செய்வோம் என டாப்- 20 ஆக்கினார்கள். புத்தாண்டு படப்பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றன. புதிதாக இன்னொரு மூன்று படத்தைச் சேர்ப்பதுதானா கஷ்டம்?

ஆக, டாப் இருபது இப்போது மட்டும்தானா என்பது தெரியவில்லை. தேவைப்பட்டால் “டாப் 25′, “டாப் 30′ என்று பெருகவும் வாய்ப்பு உண்டு.

இறுதியாக ஒரு கேள்வி… கலைஞர்களின் மனம் புண்படாத வண்ணம் இந்த ஆண்டு ரிஸீஸôன திரைப்படங்களின் பட்டியலை வாங்கி அத்தனை டாப்புகளையும் போட்டு புண்ணியம் கட்டிக் கொள்ளப் போகும் சானல் எது?

Posted in Actors, Actress, Ajith, Arrogance, Arts, Business, Cheran, Cinema, Corporate, Critic, Critique, deal, Distribution, Distributors, Economy, Films, Finance, Jaya, Jeya, K, K TV, Kalainjar, Lists, Maran, Media, Monetary, Money, Movies, MSM, News, Raj, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Reviews, Seran, Star, Star Vijay, Sun, Sun TV, Sunday, Top 10, TV, Vijay | 2 Comments »

Mannargudi Halwa – Culinary Specialty

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மன்னார்குடி அல்வா!

அல்வா! இந்தப் பெயரைக் கேட்டாலே திருநெல்வேலி ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால், உலகம் முழுக்க திருநெல்வேலி அல்வா புகழ் பறந்தாலும் யாருக்கும் தெரியாமல் அல்வாவோடு வாழ்க்கை நடத்தும் இன்னொரு ஊரும் தமிழகத்தில் இருக்கிறது அது – மன்னார்குடி.

நாள்தோறும் வீதியோரம் அல்வா கடை வாசல்களில் நின்று, ஒரு கடமையைச் செய்வதுபோல துண்டு இலைகளில் அல்வாவை வைத்து ருசித்துச் சாப்பிடும் கூட்டத்தை எந்த ஊரிலேனும் காண முடியுமா?! போகட்டும். பால் சாதத்துக்கு அல்வா தொட்டுத் தின்னும் ஆட்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா?! மன்னார்குடியில்தான் இதெல்லாம் சாத்தியம்.

மன்னார்குடியில் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. ஊரின் மையமாய் ஒரு நீண்ட வீதி. இந்தக் கடைசியில் ராஜகோபாலசுவாமியும் அந்தக் கடைசியில் கைலாசநாதரும் அருள்பாலிக்கின்றனர். வீதியின் மையப் பகுதியைப் பந்தலடி என்கிறார்கள். “அல்வாவடி’ எனக் கூறலாம். இரு புறமும் உள்ள அல்வா கடைகளில் நின்றுகொண்டே அல்வா சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களை இங்கு எப்போதும் பார்க்க முடிகிறது.

அல்வா மேல் நம் மக்களுக்குத்தான் எத்தனைப் பிரியம்? எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியப் பின்னணியில் உருவான ஒரு பண்டம், நம் வாழ்வில் எப்படியொரு இடத்தைப் பிடித்திருக்கிறது? அது போகட்டும்!

திக்குத் திசையெட்டும் அல்வா விற்றாலும் ஒவ்வொரு அல்வாவும் ஒவ்வொரு பக்குவம்; ஒவ்வொரு ருசி. இதில், மன்னார்குடி அல்வாவுக்கு அப்படியென்ன விசேஷம் என்றால், அந்தக் காலத்து கோதுமை முந்திரி அல்வா அதே ருசியில் இன்றும் இங்கு கிடைப்பதுதான்.

மனிதன் என்றால் ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் முந்திரி அல்வா என்றால், அல்வா பாதி முந்திரி பாதி. ஒரு கடிக்கு முந்திரியும் மறு கடிக்கு அல்வாவும் பல்லில் சிக்கும்; இரண்டும் சேர்ந்து ஒன்றாய் கரைந்து உள்ளே போகும் ருசியே அலாதிதான்!

அந்தக் காலம் தொட்டு மன்னார்குடியில் மட்டும் இந்த ருசி கிடைப்பதற்கு பாமணியாற்றுத் தண்ணீரும் ஒரு காரணம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

மன்னார்குடி அல்வா வரலாற்றில் ஒரு வினோதம் இருக்கிறது. அல்வாவில் அக்காலத்து ருசி அப்படியே இருந்தாலும் அல்வா விற்பவர்கள் ஒரே ஆட்கள் இல்லை என்பதுதான் அது. காலம் மாறும்போதெல்லாம் இங்கு அல்வா கடைக்காரர்களும் மாறுகிறார்கள்.

ஆனால், அந்த ருசி மட்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கடைக்கு வாய்க்கிறது. அதிலும் ஒரு வேடிக்கை – இப்படி பேர் வாங்குகிறவர்கள் வெளியூர்காரர்களாக இருப்பது.

அந்த வகையில் இந்தத் தலைமுறையில் அந்த ருசி “டெல்லி ஸ்வீட்ஸ்’ கடைக்காரர்களுக்குக் கிட்டியிருக்கிறது. ருசியைப் பிடித்தது எப்படி? கடை உரிமையாளர் விழுப்புரம் யுவராஜ் சொல்கிறார்:

“”இரு பங்கு கோதுமை, மூன்று பங்கு ஜீனி, ஒரு பங்கு முந்திரி, அரை பங்கு எண்ணெய், அரை பங்கு நெய், இன்னும் சில இத்யாதிகள். இவை இருந்தால் மன்னார்குடி அல்வாவைச் செய்துவிடலாம். ஆனால், கோதுமைப் பால் எடுப்பதில் தொடங்கி முந்திரியைப் போட்டு கிளறுவது வரை அது அதற்கான பக்குவத்தைக் கையாள வேண்டும். அதில்தான் இருக்கிறது வித்தை.

சரியாக 6 மணி நேரம் கோதுமையை ஊற வைக்க வேண்டும். ஒரு பங்கு கோதுமையில் அரை பங்கு பாலுக்கு மேல் எடுக்கக் கூடாது. அல்வாவில் எண்ணெய் அதிகம் இருந்தால் சுவை கொடுக்காது; முழுக்க முழுக்க நெய்யில் செய்தால் பதம் கொடுக்காது. இந்த இரண்டையும் சரி சமமாய் கலக்க வேண்டும்.

மன்னார்குடி அல்வாவுக்கு நாக்குப் பதம் கிடையாது; கைப்பதம்தான். பாகும் பாலும் சேர்ந்து கூடும்போது அல்வாவை எடுத்து உள்ளங்கையில் போட்டால் உருளைப்போல் உருள வேண்டும். உருண்டால் அது மன்னார்குடி பாணி அல்வா” என்கிறார் யுவராஜ்.

புறப்படுகையில் ஒரு சின்ன இலையில் அல்வா வைத்துக் கொடுத்த கடைக்காரர்கள் சொன்னார்கள்: “”சாப்பிட்டுக்கொண்டே சந்தோஷமாய் போங்கள். இதுவும் மன்னார்குடி பாணிதான்!”.

Posted in Alva, Alwa, cook, Cooking, Culinary, Culture, Halva, Halwa, Heritage, Hunger, Mannaargudi, Mannaarkudi, Mannargudi, Mannarkudi, Recipe, Snacks, Sweets, Tastes | 2 Comments »

Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

“சீசன்’ சிந்தனைகள்

சாருகேசி

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.

கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.

நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.

ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.

கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.

ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.

சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!

இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.

பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.

சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.

இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »

The History of Sarees – Art of wearing saris, Tamil Nadu Heritage & Culture, Textile Commerce

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

நீலக் கலரு ஜிங்கிச்சா.. பச்சைக் கலரு ஜிங்கிச்சா!

தேவி கிருஷ்ணா


புடவைக்கு ஆசைப்படாத பெண்ணும் உண்டா? வாங்குகிறார்களோ, இல்லையோ புடவைகளைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பதற்காகவாவது புடவைக் கடைகளுக்கு விசிட் அடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் கம்மி. புடவை மீது பெண்களுக்கு இருக்கும் ஆசைக்கு சற்றேறத்தாழ மூவாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கிறது என்கிறார் “நூலோர்’. புடவையின் சரித்திரத்தைப் பார்ப்போமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வரலாற்றில் சேலை இடம் பெற்றிருந்தது. சங்க காலத்துக்கு முன்பு தாழையையும் பூவையையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தாழை ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தார்கள். உடைகளை கொடிகளாலும் நொச்சி இலைகளாலும் ஆக்கிக் கொண்டார்கள். விழாக் காலங்களில் நெய்தல் மலர்களால் தாழையுடை செய்தார்கள். இடுப்பிலும் மார்பிலும் மகளிர் தாழையுடை அணிந்தார்கள் என சங்ககால வாழ்வியல் கூறுகிறது. காலம் செல்ல பருத்தி உடையும் பட்டு உடையும் அணிந்தார்கள்.

பருத்தி உடை முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இங்கிருந்து மேல் நாடுகளுக்குப் பரவியது என்றும் வயர்சாண் மார்சல் கூறுகிறார். பால் ஆவி போன்ற மெல்லிய துணிகளும் பாம்பு தோல் போன்ற அழகான துணிகளும் காகிதம் மெல்லிய துணிகளும் சாக்கு போன்ற முரட்டுத் துணிகளும் நெய்யப்பட்டன. இங்கிருந்து மாதூரம் எனப் பெயர் பெற்ற புடவைகள் காசி, பாடலிபுரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது என்று 3-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ரோம் முதலிய நாடுகளுக்கும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

அன்று நெசவு செய்பவர்கள் காருகர் என்று அழைக்கப்பட்டனர். வடகம், பாடகம், கோங்கலம், சித்திர கம்பி, பேடகம் எனப் பல பெயர்களில் ஆடைகளை சூடி மகிழ்ந்தனர். நீலம், சிவப்பு, மஞ்சள், கருப்பு முதலிய நிறங்களில் ஆடைகள் நெய்யப்பட்டன. அவற்றில் நுண்ணிய வேலைப் பாடுகள் இருந்தன. பருத்தியும் பட்டும் கொண்ட துணிகள் துகில் எனப்பட்டன.

நீளமாக நெய்யப்பட்ட துணிகள் பிறகு வெட்டப்பட்டு வேட்டிகளாகவும் துண்டுகளாகவும் பயன்படுத்தினர். இதனால் இவை அறுவை என்றழைக்கப்பட்டது. பருத்திப் புடவைகளுக்கு கலிங்கம் எனப் பெயர். பட்டு ஆடைகள் நூலாக் கலிங்கம் எனப்பட்டது.

நெய்வதில் தேர்ந்த தமிழன் அதற்கு சாயம் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினான். மலர்கள், செடி- கொடிகள், இலைகள் ஆகியவற்றின் சாறுகளில் வண்ணமேற்றினான். அவுரி செடியிலிருந்து ஏற்கப்பட்ட சாயம் ஐரோப்பியர்களின் மனதைக் கவர்ந்தது. இதில் இருந்து கிடைத்த நீல நிறச் சாயத்தை இண்டிகோ என்று அழைத்தனர்.

கடுக்காய், கொன்றைப் பூ போன்றவையும் சாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

நாகரிகம் வளர வளர துணிகளின் ரகங்களும் வண்ணங்களும் மேலும் சிறப்படைந்தன. 18-19 ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். புடவைகள் முப்பாக சிறப்படைந்தன. அதாவது உடல், பார்டர், முந்தி என மூன்று பகுதிகள் உள்ள புடவைகள். ஆட்டுமுழி, புளியங் கொட்டை, சொக்கட்டான், வைரஊசி, பாய் பின்னல் மற்றும் மயில் கழுத்து, கிருஷ்ண மேகவர்ணம் போன்ற இரட்டைக் கலப்பு நிறங்களும் மோஸ்தராக இருந்தது.

முன் காலத்தில் காஞ்சிப்பட்டு சேலைகள் கனமாக இருக்கும். ஒரு புடவை 2 சேர், 3 சேர் (பழைய அளவுகள்) எடை இருக்கும். ஜரிகையையும் வேலைப் பாட்டையும் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது பெண்கள் வெயிட் இல்லாத புடவைகளையே விரும்புகிறார்கள். டெஸ்ட்டட் ஜரிகைப் புடவைகள் என்பவை தாமிரத்தில் தங்க முலாம் பூசுவார்கள். இவை எடை குறைவாக இருக்கும்.

பெரிய விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளை எப்படி பராமரிப்பது?…

புடவைகளை பீரோக்களில் வைக்கும் போது ஒரு மெல்லிய மல்-மல் துண்டில் சுற்றி வைத்தால் ஜரிகை கருக்காமல் புடவை புத்தம் புதிதாக இருக்கும். கொஞ்சம் சூடம் அல்லது நெப்தலின் உருண்டைகளையும் பீரோ தட்டுகளில் போட்டு வைக்க வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் புடவையைக் கட்டிய பிறகு அதை காத்தாட வெளியில் போட்ட பிறகு மடித்து வைக்கவும். மழைக்காலத்தில் பட்டுப் புடவைகளை இளம் வெயிலில் கால் மணி நேரம் போட்டு எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் புடவை 70 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.

பூந்திக் கொட்டையை இடித்து அதைத் தண்ணீரில் போட்டு ஊர வைத்தால் சோப்புத் தண்ணீர் மாதிரி கிடைக்கும். அதைக் கொண்டு கையினால் புடவைகளைக் கசக்கிப் பிழிந்து காய வைத்தால் பட்டின் பளபளப்பும் மென்மையும் காக்கப்படும்.

போதுமா புடவை கதை?
—————————————————————————————————————————————————————————
ஒலையில் நெய்த சேலை!

நாகரீகத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும்விதத்தில் புதுப்புது வகைகளிலும், விதங்களிலும் செயற்கை நூலிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய சேலை வகைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. என்னதான் செயற்கை இழைகளின் மீதான மோகம் நம்மை ஈர்த்தாலும், இயற்கை வழியில் தாவர நாரைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கும் முயற்சிகளும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனை மரத்தின் ஓலைகள் தற்போது நவநாகரீக சேலைகள் நெய்யவும் பயன்படும் என்பது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகச் சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ஏற்கெனவே, சணல், வாழை நார் உள்பட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கிச் சாதனை புரிந்து வரும் இச் சங்கத்தினர் தற்போது பனை ஓலையிலும் சேலை நெய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.

விசைத்தறி, செயற்கை இழை ஆடைகள் என பல்வேறு போட்டிகளுக்கிடையே பாரம்பரிய கைத்தறி நெசவுத் துறையை நம்பி அதனை முன்னிலை படுத்தும் பல்வேறு கட்டங்களில் போராடி வருகிறார் அனகாபுத்தூர் சணல் நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் சேகர். இந்தச் சோதனையான காலகட்டத்திலும் புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் சேகர் “”வாழை நார் உள்ளிட்ட பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி சேலைகளை உருவாக்கி வருவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது கடல்கடந்தும் பல்வேறு வெளி நாடுகளிலும் இவ்வாறு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய புதிய முயற்சிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகளிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சேலை ரகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.

இந் நிலையில் கோவையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி பனை ஓலையில் சேலை நெய்ய முடியும் என நம்பினார். பல்வேறு தாவர இழைகளைப் பயன்படுத்தி வரும் எங்களை அந்த மாணவி அணுகினார்.

வெளிப்படையாகத் தெரியும் சில அம்சங்களால் பனை ஓலையை ஆடை ரகங்களை நெய்ய பயன்படுத்த முடியாது எனப் பலரும் நினைத்தனர். நாங்கள் பனை ஓலையை மிகமிக மெல்லிய இழைகளாகப் பிரித்தோம். பின்னர் பருத்தி நூலிழைகளுடன் பனை ஓலை இழைகளைக் குறுக்காகப் பயன்படுத்தினோம். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

சேலையில் டிசைகள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைந்தது. இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைந்தது. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்தி வருகிறோம். பனை ஓலை இழைகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி மேலும் மெல்லிய இழைகள் எடுத்தால் சேலையில் இதன் அளவை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கு அரசின் தொழில்நுட்ப உதவி அவசியமாகிறது. பனை ஓலையைப் பயன்படுத்தி நெய்யப்படும் சேலைகள் செயற்கை இழை சேலை மோகத்தில் இருந்து மக்களின் கவனத்தைத் தாவர நாரின் பக்கம் இழுக்கும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் சேகர் நம்பிக்கையுடன்.

ஆதி மனிதன் இலையைத்தான் ஆடையாகப் பயன்படுத்தினான் இப்ப… ஓலை சேலை…!

வி. கிருஷ்ணமூர்த்தி

புதுமை பூக்கும் புடவைகள் « Snap Judgment

Posted in Chennai, Commerce, Cotton, Culture, Deepavali, Designer, Diwali, Expensive, Fabrics, Females, Garments, Her, Heritage, History, Ladies, Lady, Rich, Sarees, Saris, She, Shopping, Silk, Tamil Nadu, TamilNadu, Textiles, Women | Leave a Comment »

Tamil Actor Pandiyan passes away: Anjali, Memoirs from Kollywood peers

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

பாண்டியன் ஓர் அப்பாவி!

பாரதிராஜா:

நான் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞன் இவ்வளவு சிறிய வயதிலேயே இறந்ததில் எனக்கு மிகவும் அதிர்ச்சி. பாண்டியன், சினிமா பற்றி ஒன்றுமே அறியாத ஓர் அப்பாவி. ஒரு கலைஞன் என்பதை விட பணிவான ஒரு நல்ல மனிதன்.

பாண்டியராஜன்:

“ஆண் பாவம்’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்தேன். நிழலில் ஏற்பட்ட அந்த உறவு நிஜத்திலும் எங்களுக்குள் தொடர்ந்தது. “ஆண் பாவம்’ படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை. அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் கால்ஷீட் தர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அப்போது பாண்டியன் முன்னணி நடிகராக இருந்தார். நான் நடிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தால் அன்றைய சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் பெருந்தன்மையாக ஒத்துக்கொண்டதோடு இன்னும் அதிக சீன்களில் நடிக்கலாமே என்றும் கூறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் இயக்கிய “கை வந்த கலை’ படத்தில் கூட மீண்டும் பாண்டியன்-சீதா கூட்டணியை “ஆண் பாவம்’ தொடர்ச்சியாக நடிக்க வைத்தேன். அவரைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் சினிமாத்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு வெகுளி. அவருடைய குடும்பத்துக்கு என்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்வேன்.

ரேவதி:

“மண் வாசனை’ படம் மூலம்தான் நாங்கள் இருவரும் தமிழில் அறிமுகமானோம். அப்போது எனக்குத் தமிழ் தெரியாது; அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இருந்தாலும் பாரதிராஜா சொன்னதை வைத்து எங்களுக்குள் ஏற்பட்ட புரிதலால் படத்தில் நடித்தோம்.

அதன்பிறகு “பொண்ணு பிடிச்சிருக்கு’, “புதுமைப் பெண்’ படங்களில் இணைந்து நடித்தோம். அந்தப் படங்கள் வெளிவந்து கிட்டத்தட்ட் 20 வருடங்கள் ஆனாலும், அவருடைய மறைவுச் செய்தி கேட்டபோது எல்லாம் நேற்று நடந்தது போல் இருக்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் சிரித்துக்கொண்டே இருப்பார். அவருடைய குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

எஸ்.வி.சேகர்:

“திருமதி ஒரு வெகுமதி’ படத்தில் நடிக்கும்போதுதான் எனக்குப் பாண்டியனுடன் நல்ல அறிமுகம். இவர் எப்படி சினிமாவில் நீடிக்கிறார் என்று நினைக்கும் அளவுக்கு அப்பாவி. அவருடைய பேச்சில் மதுரை மண்வாசனை மணக்கும். மனதில் பட்டதை உடனே வெளிப்படுத்தி விடுவார். இதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தார்.

ரேகா:

“ஆண்களை நம்பாதே’ படத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். அதன்பிறகு பல ஸ்டுடியோக்களில் படப்பிடிப்பின்போது சந்தித்துக்கொள்வோம்.

மிகவும் பாசமாகப் பழகக்கூடியவர். சின்ன வயதிலேயே இறந்தது மிகவும் சங்கடமாக இருக்கிறது.

அதனால் நாம் வாழும்வரை நமது உடல் நலத்தைப் பாதுகாத்துக்கொள்வது அவசியம் என்பதைத்தான் பாண்டியனின் மரணம் குறித்து என்னால் சொல்லமுடியும்.

Posted in Actors, Actress, Actresses, Cinema, Films, Kollywood, Movies, Paandian, Paandiyan, Pandian, Pandiyan | 1 Comment »

AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி

ஏவி.எம். தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தின் வெள்ளி விழா (ஜன.11) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழா கொண்டாடும் இந்த நேரத்தில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தால் தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாகவும் அதனால் தங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஒரு படத்தின் வெற்றியில் எப்படி விநியோகஸ்தர்களுக்குப் பங்கு உண்டோ அதேபோல தோல்வியிலும் உண்டு என்பது திரையுலகில் அனைவரும் அறிந்ததே. அதையும் மீறி சிலர் நஷ்ட ஈடு கேட்பது ஏன் என்பதுதான் கேள்வி.

தமிழகம் முழுவதும் “சிவாஜி’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருக்கும் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அதேபோல நான்கைந்து மாதங்கள் ஓ(ட்)டிய இந்தப் படத்தின் மூலம் சில திரையரங்கள் தவிர எஞ்சிய அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் புதுவை உரிமையை டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் ரூ.4 கோடியே 65 லட்சத்துக்கு வாங்கினோம். ஆனால் படம் ரூ.3 கோடியே 30 லட்சம்தான் வசூல் செய்தது. டிஸ்ட்ரிபியூஷன் கேரண்டி முறையில் வாங்கியதால் இழப்பு ஏற்பட்டால் அதைச் சரிக்கட்டுவார்கள் என நம்பினேன். ஆனால் ஏவி.எம். நிறுவனம் மறுத்துவிட்டது என்கிறார் இந்தப் பகுதி விநியோக உரிமையை வாங்கிய நாக் ரவி.

சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உரிமையை ரூ.5 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கினோம். படம் வசூலாகாவிட்டால் பார்த்துக்கொள்கிறோம் என்றனர். 4 மாவட்டங்களில் 33 திரையரங்குகளில் வெளியிட்டோம். ஆனால் படத்தின் மூலம் கிடைத்தது ரூ.4 கோடியே 30 லட்சம்தான். இதுபற்றி ஏவி.எம்.நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் இதுவரை பதிலே இல்லை என்கிறார் இந்தப் பகுதி உரிமையை வாங்கிய விகாஷ் பிக்சர்ஸ் சி.பிரகாஷ்.

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 22 சென்டர்களில் வெளியிட ரூ.6 கோடி கொடுத்தோம். ஆனால் படத்தால் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார் இந்தப் பகுதிகளின் உரிமையை வாங்கிய ஆடிட்டர் ரமேஷ்குமார்.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உரிமையை பொன்கனகவல்லி கம்பைன்ஸ் நிறுவனத்தினர் ரூ.3 கோடிக்கு வாங்கி 11 திரையரங்குகளில் திரையிட்டுள்ளனர். நூறு நாள்களைத் தாண்டினாலும் இரண்டு திரையரங்குகளைத் தவிர மற்ற அனைத்துத் திரையரங்குகளுக்கும் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம் 100 நாள்கள் ஓடி ரூ.90 லட்சம் வசூலானால் அதில் எல்லா செலவுகளும் நீக்கி ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் “சிவாஜி’ படம் 150 நாள்கள் ஓடியும் அந்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் என்கிறார் ஒரு திரையரங்க மேலாளர்.

இந்த நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு ஏவி.எம்.நிறுவனத்திடம் ஏற்கெனவே இந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

கோவையைப் பொருத்தவரை பெரிய லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. “சிவாஜி’யின் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் படத்தை இதுவரையில்லாத அளவில் அதிக விலைக்கு விற்றுள்ளனர். அதனால் மிகப் பெரிய லாபம் என்று சொல்வதற்கில்லை.

இன்னும் சொல்லப்போனால் கொடுத்த பணத்துக்கும் எதிர்பார்த்ததற்கும் தொடர்பில்லை. “சந்திரமுகி’ திரைப்படம் ரூ.3 கோடிக்கு வாங்கப்பட்டு ரூ.4.5 கோடி லாபம் ஈட்டித் தந்தது. அது எதிர்பார்த்ததற்கும் மேல். அதனுடன் ஒப்பிடுகையில் சிவாஜியால் லாபம் இல்லை என கோவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பகுதிகளில் “சிவாஜி’ படத்தை வாங்கியவர்களிடம் பட வசூல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, “அப்படி இப்படி என எப்படியோ படத்தின் வெள்ளி விழா வரை வந்துவிட்டார்கள்.

அந்த விழாவிலாவது எங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுவரை எந்தக் கருத்தையும் சொல்லவிரும்பவில்லை” என ஒதுங்கிக்கொண்டனர்.

ஆக… படத்தைப் பற்றி மீடியாக்கள் ஆஹோ ஓஹோ என்று ஒரு மாயத் திரையை உருவாக்கியிருப்பதை அறிய முடிகிறது. “பாபா’ படத்தை ரஜினிகாந்தே தயாரித்ததால் அந்தப் படம் மூலம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்குகளுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை அவரை ஈடுகட்டினார். ஆனால் “சிவாஜி’ படத்தை ஏவி.எம். நிறுவனம் தயாரிததுள்ளது. அந்த நிறுவனம் நஷ்டத்தை ஈடு செய்ய வாய்ப்பில்லை. வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் அடுத்து தயாரிக்கும் திரைப்படங்களின் விற்பனையில் சலுகை காட்டலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த பிரமாண்டப் படமான “ரோபோ’வின் வியாபாரம் எந்த வகையிலும் பாதிக்காது; “சிவாஜி’ படத்தால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அந்தப் படத்தை வாங்கத் தயங்கினால் பன்னாட்டு நிறுவனங்களோ அல்லது அந்தப் படத்தைத் தயாரிக்கும் நிறுவனங்களோ நேரடியாகவே “ரோபோ’ படத்தைத் திரையிடும் நிலை ஏற்படலாம்.

திரையுலகுக்கு பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் “சிவாஜி’ வெள்ளி விழாவில் படத்தால் நஷ்டமடைந்தவர்களுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்டவர்கள் “வாய்ஸ்’ கொடுப்பார்களா?

இப்படி சர்ச்சைகளுக்கிடையே நடைபெறுகிறது ஒரு சாதனை விழா!

முந்தைய சற்றுமுன்:
1. ஒரு படத்தால் 3 மாதம் பீதி : ‘சிவாஜி’ குறித்து நாசர்

2. சிவாஜி’ (இந்தி) படத்துக்காக ரஜினிகாந்த் நடிக்கிறார்

3. உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

நன்றி: தினமணி

Posted in 4053051, AVM, Baba, Balance, Chandramukhi, Chandramuki, Chanthiramuki, Chanthramukhi, Chanthramuki, Cinema, Distribution, Distributors, Economy, Films, Finance, Income, Kollywood, Loss, Movies, Profit, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Return, Risk, Shankar, Shivaji, Sivaji, Sivaji the Boss, The Boss | 1 Comment »

Election to 9 local district bodies in Batticaloa: Sri Lanka Muslim Congress (SLMC) party parts with government

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

மட்டக்களப்பு தேர்தல்களில் முஸ்லீம் கட்சிகள் தனித்து போட்டி

மட்டக்களப்பில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது
மட்டக்களப்பில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெறாமல் இருந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்தல்களில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் பற்று மன்முனைப்பற்று பிரதேச சபைகள் உட்பட 5 சபைகளிலே தமது கட்சி போட்டியட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழுவின் உறுப்பினரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதனிடையே அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து குறிப்பிட்ட சபைகளில் போட்டியிட உத்தேசித்துள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Posted in Batticaloa, District, Eelam, Eezham, Elections, Government, LTTE, Muslim, Muslims, Polls, SLMC, Sri lanka, Srilanka | Leave a Comment »