Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for திசெம்பர் 20th, 2007

Dec 20: Eezham, Sri Lanka, LTTE, Red Cross, EU, War, Murders – Updates & News

Posted by Snapjudge மேல் திசெம்பர் 20, 2007

தமது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இலங்கை அரசிடம் வலியுறுத்தல்.

இலங்கையில் மனித நேய உதவி நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களின் கௌரவம் மற்றும் பாதுக்காப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான சூரியகாந்தி தவராஜா அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்படமை குறித்து தனது கடுமையான கண்டனத்தை தனது மாதாந்த அறிக்கையில் வெளியிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அந்தக் கொலை தொடர்பில் உடனடியாக, சுயாதீனமான மற்றும் பக்கசார்பற்ற புலன் விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாகவும் மனித நேயப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகுந்த கவலையடைந்துள்ளதாக, அந்த அமைப்பின் இலங்கைக்கான குழுவின் தலைவரான டூண் வடன்ஹோவ் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமும் கண்டனம் தெரிவித்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கூட்டம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு கூட்டம்

செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்தப் பணியாளரின் கொலையை ஐரோப்பிய ஒன்றியமும் அறிக்கை ஒன்றில் கண்டித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் மனித நேயப் பணியாளர்கள் மீது இலங்கையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அங்குள்ள சூழ்நிலையில் உதவி நிறுவனப் பணியாளர்கள் பணியாற்றுவதில் சிரமம் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.

மனித நேயப் பணியாளர்களை பாதுகாப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தயும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் கேட்டுள்ளது.

வடக்கில் நடக்கும் மோதல்கள் குறித்தும் கவலை

வடக்கில் மோதல்கள் தொடருகின்றன
வடக்கில் மோதல்கள் தொடருகின்றன

அதேவேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால் அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக தனது அறிக்கையில் கூறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்புத் தாக்குதல்களை அடுத்து பெருமளவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கான சில உதவிகளையும் தாம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், காணாமல் போதல்கள் மற்றும் சிறார்களைப் படைக்குச் சேர்த்தல் போன்றவை நாடங்கிலும் உள்ள மக்களை பாதிப்பதாகவும் அது கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து ஓமந்தை சோதனைச் சாவடிப் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கட்டுப்பாடுகள், நோயாளர் அம்புலன்ஸ் வண்டிகள், மனிதநேய நிறுவனங்களின் பொருட்போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகியவற்றின் போக்குவரத்தையும் பாதித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

கிழக்குமாகாண வெள்ளம் காரணமாக பெருமளவு இடம்பெயர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டமை குறித்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள செஞ்சிலுவைச் சங்கம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 26400 பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாமல், முகாம்களில் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை வடபகுதியில், மன்னார் மாவட்டத்தில் 21900 பேரும், வவுனியா மாவட்டத்தில், 10, 565 பேரும் இடம்பெயர்ந்து இன்னமும் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 


Posted in Eelam, Eezham, LTTE, murders, Red Cross, Sri lanka, Srilanka, War | Leave a Comment »

Row over Priyanka Vadra’s friend getting ‘ultra-special’ profs quarters – Jawaharlal Nehru University

Posted by Snapjudge மேல் திசெம்பர் 20, 2007

தவறான முன்னுதாரணம்!

பெரிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அதனால்தான், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்கிற பழமொழி வழக்கில் இருக்கிறது. மகாத்மா காந்தி உலகுக்கு வாழ்ந்து காட்டிய பாதை அதுதான். அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்களே அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, பொதுவாழ்வு எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

முக்கியமான தலைவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. நேரு குடும்பத்தைப்போல, மிக அதிகமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தரப்படுவது அவசியம்தான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கேள்விப்படும்போது, பாதுகாப்பை விலக்கினால்கூடத் தவறில்லையோ என்று தோன்றுகிறது.

புதுதில்லியைப் பொருத்தவரை, ஏ.கே. 47 ஏந்திய காவலர்களுடன் பவனி வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக, வேண்டுமென்றே போலி அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி பாதுகாப்புப் பெற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, தலைநகர் தில்லியில் மட்டும் பாதுகாப்புத் தரப்படும் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை 391. இதற்காக சுமார் 7000 சிறப்புக் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரை சில அரசியல் தலைவர்கள் நடத்தும் விதம், நாகரிக சமுதாயத்துக்கே ஒவ்வாதது என்று தகவல். தகுதி இல்லாதவர்களுக்கும் தேவை இல்லாதவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகப் பாதுகாப்புக் கொடுப்பதுதான் அத்தனை கேலிக்கூத்துகளுக்கும் காரணம். ஆட்சிகள் மாறுகிறதே தவிர, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பயன்பாடு குறித்த தெளிவான அணுகுமுறை இதுவரை ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

சமீபத்தில் இன்னொரு சம்பவம். இந்தப் பிரச்னையில் சிக்கி இருப்பது பிரதமரின் அலுவலகம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சராசரி விரிவுரையாளருக்கு, அனுபவமிக்க பேராசிரியருக்குத் தரப்படும் இருப்பிடம் வரம்புகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குப் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிகிறது.

பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பித்து ஒரு சாதாரண விரிவுரையாளருக்கு சிறப்பு இருப்பிடம் வழங்க வேண்டிய அவசியம் என்ன? மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் எழுந்த இந்தக் கேள்விக்கு விடை சீக்கிரமே கிடைத்தது. அந்த விரிவுரையாளரின் மனைவி, பிரியங்கா வதேராவின் தோழியாம். பிரியங்கா வதேரா எப்போதாவது தனது தோழியைப் பார்க்க நினைத்தால்? பிரியங்காவின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் அலுவலகம் துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு செய்த ஏற்பாடுதான் இது!

அத்துடன் நின்றதா விஷயம் என்றால், அதுவும் இல்லை. அந்த விரிவுரையாளருக்குத் தரப்பட்டிருக்கும் பங்களா துணைவேந்தரின் பங்களாவுக்கு நிகராக எல்லா விதத்திலும் செப்பனிடப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. எதற்காக? எப்போதாவது தனது தோழியைச் சந்திக்கப் பிரியங்கா வதேரா வருவார் என்பதற்காக!

பெரிய இடத்துத் தொடர்புகள் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதற்கு இது உதாரணமா, இல்லை நமது அரசியல்வாதிகளின் அதிகார துஷ்பிரயோகம் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டா, இல்லை பிரதமர் அலுவலகம் தனது எஜமான விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு இது ஒரு மாதிரியா என்று தெரியவில்லை.

இப்படி ஒரு தவறான முன்னுதாரணத்துக்குப் பிரதமர் அலுவலகமே ஆட்படும்போது, நமது மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும், அதிகார துஷ்பிரயோகத்திற்கான “கின்னஸ்’ சாதனையே படைத்து விடுவார்கள் என்று நம்பலாம். வாழ்க, இந்திய ஜனநாயகம்!

Posted in Arun, Arun Singh, ArunSingh, Bhattacharya, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Education, Gandhi, Gandi, JNU, PMO, Priyanga, Priyanka, Professors, Protection, Security, Sonia, University, Vadhra, Vadra, Vathra, Z | Leave a Comment »