Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for நவம்பர் 24th, 2007

Kamal gets subpoenaed by Supreme Court regarding the export of ‘Kurudhi punal’ Tamil movie

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

நடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.

திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.

வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Posted in 420, Accounting, Accounts, Actor, America, Arjun, Ashok Baan, Ashok Ban, Ashok Bhan, Cinema, Claims, content, Courts, Dasavadharam, Dasavatharam, deductions, Evasion, Exports, Films, Finance, Forgery, Goods, Illegal, Income, Income Tax, IT, Judges, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kurudhippunal, Kurudhipunal, Kuruthippunal, Kuruthipunal, Law, legal, Loss, merchandise, Movies, Nadiadvala, Nadiadwala, Order, Pictures, Producer, Profit, rights, SC, Scam, subpoena, Tax, Taxes, telecast, US, USA | 1 Comment »

Sruthi Kamalhasan to enter Movies – Madhavan’s Next Cinema

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

கமல் மகள் கதாநாயகி!

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி அமெரிக்காவில் இசை குறித்து பயின்று வந்தார். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ருதி, “தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்துக்காக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்கப் பல இந்தியப் பிரபலங்கள் முயற்சித்தும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது… “”மராட்டிய மொழியில் வெளியாகி 27 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளைப் பெற்ற “டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இந்தப் படத்தைத் தமிழில் “எவனோ ஒருவன்’ என்ற பெயரில் மாதவன் தயாரித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நிஷிகாந்த் காமத் -மாதவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு விரும்பியது. கதாநாயகியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ருதி சம்மதிக்கும்பட்சத்தில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றது கமல் வட்டாரம்.

Posted in Cinema, Dasavadharam, Dasavatharam, Dhasavatharam, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Madavan, Madhavan, Mathavan, Movies, Shruthi, Shruti, Sruthi, Sruti, Thasavatharam | Leave a Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

KV Narayanasamy – Carnatic music legends: Biosketch

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

“அரியக்குடி’யின் அரிய “சிஷ்யதிலகம்’

நீலம்

“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.

பிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

கலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.

பாலக்காடு மணி ஐயர் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.

அவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.

முன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.

மற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.

இந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.

அது என்ன யோசனை? ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.

இதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.

தமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.

இத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு!. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்!” என்று தைரியமூட்டினார்.

அவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்!” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.

எப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்!” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.

அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.

“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.

ஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.

வயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா?

கே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.

குறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா!” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக்தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.

கே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.

வாழ்க கே.வி.என். புகழ்.

(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)

Posted in Ariyakkudi, Audio, Biosketch, Carnatic, Faces, Legends, music, names, Naraianasami, Naraianasamy, Naraianaswami, Naraianaswamy, Naranaswami, Naranaswamy, Narayanasami, Narayanasamy, Narayanaswami, Narayanaswamy, Palacad, Palacaud, Palacode, people, Performer, Stage | Leave a Comment »