Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 7th, 2007

International Financial Instituitions and their influence in Indian Govt Policymaking

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

வரலாறு திரும்பிவிடக் கூடாது!

அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என்று ஓர் ஆய்வுக் குறிப்பு கூறுகிறது. இப்படி ஓர் ஆய்வுக் குறிப்பைச் செய்திருப்பது ஏதாவது அரசியல் கட்சியா, அரசியல் ஆய்வாளரா அல்லது பத்திரிகையாளரா என்றால் இல்லை. ஒரு நிதி நிறுவனம், அதிலும் ஒரு சர்வதேச வங்கியின் தனியார் நிதி நிறுவனம்தான் இப்படி ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து, எல்லா நாளேடுகளுக்கும் பத்திரிகைக் குறிப்பாக அனுப்பி இருக்கிறது.

அடுத்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மக்களின் நல்லெண்ணத்தை மன்மோகன் சிங் அரசு பெற முடியும் என்று அந்த அறிக்கை யோசனை கூறுகிறது. தங்களது நல்ல பல திட்டங்களை நிறைவேற்ற இடதுசாரிகளும் எதிர்க்கட்சிகளும் முட்டுக்கட்டை போடுகின்றன என்கிற ஆதங்கத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கருதுவதாகவும் அந்தக் குறிப்பு மேலும் விவரிக்கிறது.

விஷயம் அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனது வளர்ச்சித் திட்டங்களைத் தங்குதடையின்றி செயல்படுத்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பையும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிரான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கையையும் அந்தக் குறிப்பு கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய முதலீடுகளுடன் இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தபோது எழுப்பப்பட்ட முதல் எச்சரிக்கை என்ன தெரியுமா? “அன்னிய நிதி நிறுவனங்களை இங்கே தங்குதடையின்றி செயல்பட அனுமதிக்கும்போது, அவை நமது நாட்டு நிர்வாக விஷயங்களிலும், அரசியலிலும் தங்குதடையின்றி செயல்படும் உரிமையைப் பெற்றுவிடும் என்பதுதான். தங்களது முதலீட்டுக்கான அதிகபட்ச லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படும் வியாபார நிறுவனங்கள் அவை என்பதை மறந்துவிடலாகாது!’ என்கிற எச்சரிக்கையை நாடாளுமன்றத்திலேயே பல முதிர்ந்த அரசியல் தலைவர்கள் எழுப்பியது இப்போது நினைவில் நிழலாடுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பத்து கோடி ரூபாய் என்று நிதி ஒதுக்கி, போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம், பெருவாரியான நாடாளுமன்ற உறுப்பினர்களை வருங்காலத்தில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடாது என்பது என்ன நிச்சயம்? கணிசமான உறுப்பினர்களைத் தங்களது வலையில் வீழ்த்தி, இந்திய அரசையே நமது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஆட்டிப் படைக்க நினைத்தால் அதை எப்படித் தடுக்க முடியும்?

இந்திய அரசியலின் போக்கு எப்படி இருக்க வேண்டும், நமது அரசின் திட்டங்கள் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்திய வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, வியாபாரம் செய்ய வருகின்ற அன்னிய நிதி நிறுவனங்களும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் நிச்சயிக்கும் நிலைமை ஏற்படுவது இந்திய இறையாண்மைக்கே ஏற்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு, அன்னிய முதலாளிகளால் அன்னிய முதலீட்டாளர்களுக்காக நடத்தப்படும் அரசாக மாறிவிடுமோ என்கிற பயத்தை அந்தப் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் சுற்றறிக்கை ஏற்படுத்துகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடத்தை நாம் மறந்துவிட மாட்டோம் என்கிற நம்பிக்கைதான் இப்போதைக்கு ஒரே ஒரு ஆறுதல்!

——————————————————————————————————————

அமெரிக்காவைப் பின்பற்றலாமே…!

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை என்பது பொருளாதார நிபுணர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விஷயமாகி விட்டது.

மற்ற நிதி நிறுவனங்களும், அமைப்புகளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒன்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தாலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி 2007-08-க்கான வளர்ச்சி 8.5 சதவிகிதம் என்றுதான் அறிவிக்கிறது. கடந்த ஆண்டு 9.4 சதவிகிதமும் அதற்கு முந்தைய ஆண்டு 9 சதவிகிதமும் இருந்த வளர்ச்சி 8.5 சதவிகிதமாகக் குறைந்துவிட்டதே என்று வருத்தப்படத் தேவையில்லை. கடந்த நான்கு ஆண்டு சராசரி வளர்ச்சி 8.6 சதவிகிதம்தான் என்பதால், இந்த வளர்ச்சியே நல்ல அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த அறிக்கையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், நமது விவசாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. எண்பதுகளின் தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் 40 சதவிகிதம் இருந்த விவசாயத்தின் பங்கு இப்போது வெறும் 20 சதவிகிதமாகக் குறைந்துவிட்டிருக்கிறது. விவசாய வளர்ச்சி 2.8 சதவிகிதத்திலிருந்து இப்போது 3.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது என்று நாம் பெருமைபட்டுக்கொள்ளலாமே தவிர, அடிப்படையில் விவசாயமும் விவசாயிகளும் மற்ற துறைகளின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது மிகவும் பின்தங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, விவசாயிகளின் பிரச்னைகளை ஆராய சிண்டிகேட் வங்கித் தலைவர் சி.பி. ஸ்வர்ஸ்கர் தலைமையில் அமைத்த குழுவின் அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. விவசாயிகளுக்கு எளிய முறையில் எப்படிக் கடன் வழங்குவது என்பதைப் பரிசீலித்து, வழிமுறைகளை ஏற்படுத்துவதுதான் இந்தக் குழுவின் நோக்கம்.

தற்போதைய நிலையில் உயர்ந்த கூலியும், அதிகரித்த உர விலையும், போதுமான அளவு தண்ணீர் இல்லாததும் விவசாயிகளை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது. விளைபொருள்களுக்குப் போதிய விலை இல்லை என்பது மட்டுமல்ல, அரசுத் தரப்பில் சரியான நேரத்தில், நஷ்டம் ஏற்படாத விலையில் கொள்முதல் நடைபெறாமல் இருப்பதும் விவசாயிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி வருகின்றன.

ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது உணவு உற்பத்தியில் அந்த நாடு தன்னிறைவு அடைவதில்தான் இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், தனது நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கி கடலில் கொட்டுவது, நெருப்பிட்டுக் கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. விவசாயி தனது விளைபொருள்களை விற்க முடியாமல் நஷ்டப்படக் கூடாது என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம். மானியமாக அதிகப் பணம் போனாலும், விவசாய உற்பத்தி குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் முனைப்பாக இருக்கின்றன.

8.6 சதவிகித வளர்ச்சி என்று மேலெழுந்தவாறு பெருமைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. பெருவாரியான மக்கள் விவசாயம் சார்ந்து கிராமப்புறங்களில்தான் இன்றும் வசிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தன்னிறைவும்தான் உண்மையான வளர்ச்சியே தவிர அன்னியச் செலாவணி இருப்பும், மேலெழுந்தவாரியான பொருளாதார வளர்ச்சியும் அல்ல.

தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் அமெரிக்காவையும், வளர்ச்சி அடைந்த நாடுகளையும் பின்பற்றத் துடிக்கும் நமது மத்திய அரசின் பொருளாதார நிபுணர்கள், இந்த விஷயத்தில் அமெரிக்காவைப் பின்பற்ற முயலாதது ஏன்? நல்ல விஷயங்கள் நமக்கு வேண்டாம் என்பதாலா?

——————————————————————————————————————

Posted in Agriculture, Assets, bank, Banking, Banks, Big, City, Commerce, Deflation, Dept, Development, Economy, Farming, Foreign, GDP, Govt, Growth, History, Index, Indices, Inflation, Loans, Metro, nexus, Opportunity, Policy, Poor, RBI, Recession, Rich, Rural, solutions, Stagflation, Suburban, Syndicate, Village, WB, World | Leave a Comment »

3 Rs – Read, wRite & liteRacy: Basic Education is a must

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2007

முன்னேற்றத்தின் முதற்படி எழுத்தறிவு!

உதயை மு. வீரையன்

“”இருட்டைக் கண்டு குழந்தை பயப்படுகிறது; அதை மன்னித்து விடலாம். ஆனால் வெளிச்சத்தைக் கண்டு பயப்படும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை எப்படி மன்னிப்பது?” என்று கேட்டார்~ பிளேட்டோ! அறியாமை இருளை ஓட்டி, எழுத்தறிவு என்னும் வெளிச்சத்தை அடைவதற்கு எவ்வளவு காலம், எத்தனை போராட்டங்கள்! இந்த வெளிச்சத்தை ஏற்றும் விளக்குகளாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்.

கல்வியானது அறியாமை இருளை அகற்றுவது; சிந்தனைத் திரியைத் தூண்டி விடுவது; வளர்ச்சிக்கு வாசல் திறப்பது.

மனித சமுதாயத்தையே மாற்றியமைக்கும் ஆற்றல் அதற்கு மட்டுமே உண்டு என்பதால்தான் கடந்த காலங்களில் கல்வி பலருக்கு மறுக்கப்பட்டது. சிலருக்கு மட்டுமே சொந்தமானது. இந்த நிலை இனியும் தொடர்வதைத் தவிர்க்கவே, விடுதலை பெற்ற நாடு, “”அனைவருக்கும் கல்வி” என்பதைச் சட்டமாக தீட்டியது. இந்திய மக்கள்தொகை 2015-ல் 1224 மில்லியன் ஆகவும், 2030-ல் 1398 மில்லியனாகவும் பெருகும் என பொருளியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். 26 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர்.

மத்திய திட்டக்குழு, 8 சதவிகித வளர்ச்சி இலக்கினை எட்ட, சமுதாய – பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது கண்காணிக்கத் தகுந்த சில இலக்குகளை நிர்ணயித்துள்ளது. அதில், பள்ளி செல்லும் வயதில் உள்ள அனைத்து குழந்தைகளும் 2003-ஆம் ஆண்டுக்குள் கட்டாயம் பள்ளி செல்ல வேண்டும்; 2007-ஆம் ஆண்டிற்குள் 5 ஆண்டுகளாவது குழந்தைகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் எழுத்தறிவு 75 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உலகின் மக்கள்தொகை 630 கோடி. இதில் எழுத்தறிவே இல்லாத மக்கள் 100 கோடி பேர். கல்வியில் பயன்படுத்தப்படாத மொழிகளைப் பேசுவோர் 138 கோடி என்பதால், தாய்மொழிவழிக் கல்வி மறுக்கப்பட்டோரே உலகில் எழுத்தறிவில்லாத மக்களில் பெரும்பாலோராக இருப்பது தெரிகிறது. எனவே கல்லாமை அல்லது எழுத்தறிவின்மை இன்னும் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம், கல்வியில் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

ஐ.நா. குழந்தைகள் நிதியம் – “யுனிசெப்’ 1999-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை, “”மாணவ மாணவிகளுக்கு முதன்முதலாக அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும்போதுதான், அவர்கள் விரைவாகக் கற்றுக் கொள்கின்றனர். கல்வித் திறமைகளை விரைவாகப் பெறுவதும், தாய்மொழி மூலம்தான் என்பதை ஏராளமான ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன…” எனக் கூறியுள்ளது.

இது, இந்தியாவில் – குறிப்பாகத் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தாய்மொழி படிக்காமலேயேகூட பட்டம் வாங்கும் நிலை இன்னும் தொடர்கிறது. இதுபற்றி அரசும், கல்வி நிறுவனங்களும் சீரிய அக்கறை காட்டவில்லை.

அத்துடன் தொடக்கக் கல்வி முதல் தொழிற்கல்வி வரை இலவசக் கல்வி என்பது இல்லாமல் போய், கல்வியே லாபகரமான வணிகமாகிவிட்டது. இதனால் “அனைவருக்கும் கல்வி’ என்பது மறுக்கப்படுகிறது.

கல்வியளிப்பது அரசாங்கத்தின் கடமையாக இருந்தபோதும், அதற்கு உற்ற துணையாக இருக்க வேண்டியது பெற்றோரும் ஆசிரியருமே! ஆனால் கிராமப்புறங்களில் இருக்கும் பல பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையால் மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. தொடக்க நிலையில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 ஆக இருந்ததை, அரசு படிப்படியாக அதிகரித்து தற்போது இது 1:50 என்ற நிலையை எட்டச் செய்துள்ளது.

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் தொடக்கக் கல்வியிலிருந்துதான் தொடங்குகிறது. உறுதியான அடித்தளமில்லாத மாளிகை உருக்குலைந்து போகும். உண்மையான கல்வி தரப்படாத தேசமும் அப்படித்தான். கிராமம், நகரம் என்றும், வளமை, வறுமை என்றும் பிரிந்து கிடப்பது ஆரம்பக் கல்வியை அழித்துவிடும்.

தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வி முறையே பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நர்சரி – மெட்ரிகுலேஷன் என்றும், ஆங்கிலோ இந்தியன் என்றும், ஓரியண்டல் என்றும், மாநில வாரியம் என்றும் ஒரே கல்வித்துறையின்கீழ் வேறுபட்டுக் கிடப்பதுதான் வேடிக்கை! இதனால்தான் சமச்சீர் கல்விமுறை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சமச்சீர் கல்விமுறை வலியுறுத்தப்படுவதன் நோக்கமே, பல பிரிவுகளால் ஏற்படும் சமச்சீரின்மையைப் போக்குவதாகும்!

பாடச்சுமையைப் பற்றிப் பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட யஷ்பால் குழு, தமது 1993 ஆம் ஆண்டு அறிக்கையில், “மத்திய அரசு நேரடியாக நடத்தும் கேந்திரிய வித்யாலயம் மற்றும் நவோதயா பள்ளிகளில் மட்டும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் இருக்க வேண்டும். மற்ற எல்லாப் பள்ளிகளும் மாநில அரசின் பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளது.

எனவே தமிழக அரசு இதனைப் பற்றிப் பரிசீலிப்பதற்காக முத்துக்குமரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தது. இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களைச் சந்தித்து, அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது பற்றிய தமது அறிக்கையை தமிழக முதல்வரிடம் அளித்துள்ளது.

இந்நிலையில் “செயல்வழிக் கற்றல்’ என்ற புதிய பாடமுறையை அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதுவும் எல்லாப் பள்ளிகளுக்கும் என்றில்லாமல் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனத் தேர்ந்தெடுத்து இவ்வாண்டு முதல் நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்துவது தமிழகக் கல்வியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தாதா என்ற கேள்வி எழுகிறது.

சமச்சீரான கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில், இப்போது இருக்கும் பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகத்தையும் விட்டுவிட்டு அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு கற்பிப்பது தரமான பள்ளிகளோடு போட்டி போடுவதற்குத் தடையாக இருக்காதா? இது, அரசு மற்றும் ஒன்றியப் பள்ளி மாணவர்களை மற்ற தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே பெற்றோர்களைத் தூண்டிவிடும்.

“ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியாளர்’ என்னும் தூண்களே கல்வி மாளிகையைத் தாங்குகின்றன. இவர்களுடைய கருத்தறியாமல் செயல்படும் கல்வி சென்று சேர வேண்டிய இலக்கினை அடைய இயலாது.

ஆசிரியர்களிடம் சமுதாயம் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், நமது கல்வியின் ஆரம்பம் குருகுலவாசமாக இருந்ததுதான். ஆசிரியர்களில் சிலர் தங்களை அப் பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாலும் பலர் அவ்வாறு இல்லாதது கவலை தரும் போக்காகும். அவர்களது முழுமையான சேவையை நாடும், நாமும் எதிர்பார்ப்பது நியாயமே!

ஒவ்வொருவரும் முன்னேற பல படிகள் இருக்கின்றன. ஆனால் எழுத்தறிவே முன்னேற்றத்தின் முதற்படி. இதனை நினைவில் நிறுத்துவது இக்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் நல்லது.

(இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்).

Posted in Education, Literacy, Study | Leave a Comment »