Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 5th, 2007

75 Years: Indian Express Group of Publications Anniversary

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

எக்ஸ்பிரஸ் ’75: நன்றியுடன் வாசகர்களுக்கும் நலம் நாடுவோருக்கும்…

இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன், 1932, செப்டம்பர் 5-ம் தேதி “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பிறந்தது. இத்தனை ஆண்டுகால கொந்தளிப்பான வரலாற்று வழித்தடத்தில், “எக்ஸ்பிரஸ்’ சந்தித்ததைப்போல வெற்றிகளையும் வேதனைகளையும் மகிழ்ச்சிகளையும் சோதனைகளையும் இந்தியாவில் வேறு எந்த நாளிதழும் சந்திக்கவில்லை. அத்தனையையும் நாம் கடந்து வந்திருக்கிறோம்; அதற்கு, இந்தியாவில் வேறு எந்த நாளிதழுக்கும் கிடைத்திராத வகையில், வாசகர்களின் அன்பும் ஆதரவும் எக்ஸ்பிரஸýக்குக் கிடைத்ததே காரணம் என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளபடியே, இந்த நாளிதழைக் கட்டியெழுப்பிய முன்னோடிகள், இதை மக்களின் நாளிதழாகவே உருவாக்கினர். கடந்த 75 ஆண்டுகளாகவும் அதே தடத்தில்தான் எக்ஸ்பிரஸ் பயணம் செய்துகொண்டிருக்கிறது. அந்த வரலாற்றின் மைல் கல்லை, வரும் வாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதன் வாயிலாகக் கொண்டாடவிருக்கிறோம்; பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு இணைப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.

முதன்முதலாக சென்னை வாசகர்களின் கரங்களில் எக்ஸ்பிரஸ் தவழ்ந்தபோது, காலனியாதிக்கத்தின் பிடியில் இந்தியா இருந்தது. சுதந்திரப் பாதையில் இந்தியா காலடி எடுத்து வைத்தபோது எக்ஸ்பிரஸýக்கு வயது 15. முதலில் பிரிட்டிஷ் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ்; சுதந்திரத்தால் துளிர்த்த நம்பிக்கைகள், அரசியல் ஊழல்களால் நொறுக்கப்பட்டபோது, சுதேசி ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். 1975-ல் நாட்டின் மீது “நெருக்கடி நிலை’ என்ற கருமேகங்கள் கவிந்தபொழுது, வெற்றிக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தெரியாத நிலையிலும் அதை எதிர்த்துப் போராடியது எக்ஸ்பிரஸ். ஆனால், மக்களின் அமோகமான ஆதரவின் காரணமாக, அந்தக் காலகட்டத்தின் கெடுபிடிகளையும் வெற்றிகண்டது எக்ஸ்பிரஸின் எழுச்சி. எக்ஸ்பிரûஸப்போல வாசகர்களுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கும் வேறு எந்த நாளிதழும் இந்தியாவில் இல்லை.

அண்மை ஆண்டுகளாக வேறுவிதமான யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டின் தெற்கில் நாம் “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆகியிருக்கிறோம். அதே நேரத்தில் பதிப்பகத் துறையைச் சந்தைச் சக்திகள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கொண்டிருக்கின்றன. செய்திகள் பண்டமயமாக்கப்படுவது தவிர்க்க முடியாதது போலத் தோன்றும் சூழலிலும், பத்திரிகை தர்மம் அதற்கு வளைந்து கொடுத்துவிடாமல் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பரந்து விரிந்த எக்ஸ்பிரஸ் வாசகர் குடும்பத்தின் ஆதரவு மீண்டும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தளராது உழைத்துக்கொண்டிருக்கிறோம். எது நடந்தாலும் சரி, தயக்கமின்றி என்னால் ஒன்றைக் கூற முடியும்: நாங்கள் எப்படிப் பிறந்தோமோ அப்படியே என்றும் இருப்போம். ஆம், மக்களின் செய்தித்தாளாக.

அனைவருக்கும் நன்றி.

மனோஜ் குமார் சொந்தாலியா

தலைவர்

Posted in 75, Anniversary, Daily, Dinamani, Dinmani, Express, IE, jubilee, Magazines, Magz, Media, MSM, News, Newspaper, Newspapers, Paper, Platinum, weekly | Leave a Comment »

Teachers Day Special – Radhakrishnan to APJ Abdul Kalam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007

சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம் வரை!

அ. கோவிந்தராஜு

(கட்டுரையாளர்: முதல்வர், டிஎன்பிஎல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கரூர்).

ஓர் ஆசிரியர் தம்மிடம் படிக்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆசிரியரின் நடை, உடை, சிந்தனை, சொல், செயல் அத்தனையும் மாணவர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கூறுகளாகும். பார்த்துக் கற்றல் என்னும் உளவியல் நிகழ்வு மாணவப் பருவம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை ஆசிரியப் பெருமக்கள் உணர்ந்து, தம் அகவாழ்வையும் புறவாழ்வையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

வீட்டுச்சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நன்மாதிரியாக பின்பற்றத்தக்க ஆசிரியர்கள் அமைந்துவிட்டால், சேற்றில் முளைத்த செந்தாமரைபோல மாணவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவார்கள்.

படித்து முடித்து, பணியில் சேர்ந்து, தம் தந்தையின் ஓராண்டு ஊதியத்தை ஒரே மாதத்தில் சம்பாதிக்கும் இளைஞர்கள், அறவாழ்வில் நாட்டமின்றி, மனம்போன போக்கில் வாழும் நிலைகெட்ட மாந்தர்களாக மாறுவதற்குக் காரணம் என்ன? படிக்கும் காலத்தில் பாடஅறிவைப் பெற்ற அளவுக்கு, மனிதநேயக் கல்வியைப் பெறவில்லை அல்லது ஆசிரியர்கள் தரவில்லை என்பதேயாகும்.

“வாடி மனம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள்’ செய்யும் இவர்கள், ஒருகாலத்தில் வகுப்பறையில் பாடம் கற்ற மாணவர்கள்தாம். நாற்றில் கோளாறா, நடப்பெற்ற சேற்றில் கோளாறா? கல்வி நிலையங்கள் எல்லாம் நாற்றங்கால்கள் ஆகும். அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியப் பெருமக்கள். நாற்றங்கால்கள் பழுதுபட்டால் ஒட்டுமொத்த சமுதாயமே பாழ்பட்டுவிடும். இதை நன்கு உணர்ந்தவர் டாக்டர். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன். வாழ்வாங்கு வாழும் வழிமுறைகளை அவர் தம் மாணவர்களுக்குக் கற்பித்தார். வழிமுறைகள் சரியாக இருந்தால்தான் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர் அவர்.

உண்ணும் உணவு, ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என்கின்றனர் உடற்கூறு வல்லுநர்கள். உடுக்கும் உடை ஒருவனுடைய மனப்போக்கை மாற்றும் என உளவியலார் கூறுகின்றனர். இவ்விரண்டிலும் டாக்டர். ராதாகிருஷ்ணன் மிகுந்த கவனம் செலுத்தினார். 1950-ஆம் ஆண்டு ரஷிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டார். சர்வாதிகாரி ஸ்டாலின் ஆண்ட காலம்; கடுமையான குளிர்நிறைந்த அந்நாட்டில் அவர் எப்போதும்போல எளிய, தூய்மையான உடையணிந்து வாழ்ந்தார். ஒருபோதும் மது, மாமிசம் போன்றவற்றைத் தொட்டதும் இல்லை. சொல்லப்போனால் அந்நாட்டு மரபுப்படி, விருந்துகளில் மது அருந்தியாக வேண்டும். ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் பழச்சாறு மட்டும் அருந்துவார். எந்தவொரு தீயபழக்கமும் இல்லாத முன்மாதிரி பண்பாளர் அவர்.

புனிதமான ஆசிரியப் பணிக்குத் தம் தீயநடத்தை மூலம் களங்கம் சேர்க்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற துறைகளில் ஒரு தவறு நடந்தால் அது அந்தத் துறையை மட்டுமே பாதிக்கும்; ஆனால் கல்வித்துறையில் நடக்கும் தவறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே பாதிக்கும். மற்ற துறைகளின் செழுமையும் செயல்பாடும் கல்வித்துறையின் அறநெறிகளைப் பொருத்தே அமையும் என்பார் கல்வி நிபுணர் டர்க்ஹிம். ஆசிரியர் தினத்தையொட்டி, இவற்றையெல்லாம் ஆசிரியர் சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆசிரியப் பணியை முதன்மைப் பணியாகக் கொண்டார். தூதராக, குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். இன்று, ஆசிரியர்களில் சிலர் ஆசிரியப் பணியைத் துணைத்தொழிலாகவும், விவசாயம், வணிகம் போன்றவற்றை முதன்மைத் தொழிலாகவும் கொண்டுள்ளனர். இவர்கள், சக்தி எல்லாம் தீர்ந்துபோய், சக்கையாக வகுப்பில் நுழைந்தால் எப்படி மாணவர் மனம் கவரும் வகையில் பாடம் நடத்த முடியும்? இந்த நிலை அடியோடு மாறும் நாள் எந்நாளோ?

1964-ல் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழு, ஒழுக்கமும் பண்பாடும் உடையவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இது எவ்வளவு இன்றியமையாதது என்பது ஆய்வு மாணவிகளின் சோகக்கதையைக் கேட்டால் புரியும். ஆய்வு ஏட்டில் சில வழிகாட்டிகளின் கையெழுத்தைப் பெறுவதில் சிரமங்கள் பல உள்ளன.

இவர்களை ஆசிரியர்கள் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தம்மிடம் பயிலும் குழந்தைகளுக்கு தாம் இரண்டாவது பெற்றோர் என்பதை எப்போதும் உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

நேர்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு அரசும் சமுதாயமும் உரிய அங்கீகாரத்தை எப்போதும் தரும்; தரவும் வேண்டும். சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியரையும், ராமேசுவரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்ற ஆசிரியரையும் குடியரசுத் தலைவர்களாக அமர வைத்து அழகு பார்த்ததே நம் நாடு. இது சமுதாயம் தந்த அங்கீகாரம்தானே?

ஒரு குக்கிராமத்து ஆசிரியருக்குக் கிடைத்த அங்கீகாரத்தைப் பற்றி அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஈரோடு மாவட்டத்தில் மலையப்பாளையம் என்னும் சிற்றூரில் ஆசிரியப் பணியை அறப்பணியாகச் செய்து ஓய்வு பெற்ற ஓர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு (சொ. அய்யாமுத்து) அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தம் வருவாயில் ஒரு பகுதியை அளித்து, 2400 சதுர அடியில் ஒரு நிலம் வாங்கி நன்றிக் கடனாக வழங்கினார்கள்.

எனவே, பண்டைய குருகுலத்தில் தொடங்கிய ஆசிரியப் பாரம்பரியம் – “சர்வேப்பள்ளி முதல் ராமேசுவரம்’ வரை பேணிப் போற்றப்பட்ட அந்த ஆசிரியப் பாரம்பரியம் – தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். வணங்கத்தக்க நம் ஆசிரியப் பெருமக்கள் இனி இந்த உணர்வோடு, “இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்னும் புத்துணர்வோடு நாளை வகுப்பிற்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். செய்வார்களா?

(இன்று ஆசிரியர் தினம்)

Posted in APJ, class, Classroom, Instructor, Kalam, President, Presidents, Professor, Radha, Radhakrishnan, Student, Teach, Teacher | Leave a Comment »

Yesteryear actress Rukmani passes away – Biosketch

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007


நடிகை லட்சுமியின் தாயார்
பழம்பெரும் நடிகை ருக்மணி மரணம்
உடல் தகனம் இன்று நடக்கிறது

சென்னை, செப்.5-

நடிகை லட்சுமியின் தாயாரும், பழம்பெரும் நடிகையுமான ருக்மணி சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

பழைய கதாநாயகி

பிரபல நடிகை லட்சுமியின் தாயார், ருக்மணி. இவர், ஒரு பழம்பெரும் நடிகை ஆவார். ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார் டைரக்டு செய்து, டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த `ஸ்ரீவள்ளி’ என்ற படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். `ஸ்ரீவள்ளி’ படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. `சிந்தாமணி,’ `லவங்கி,’ `முல்லைவனம்’ உள்பட பல படங்களிலும் ருக்மணி நடித்து இருந்தார். `கப்பலோட்டிய தமிழன்’ படத்தில், சிவாஜிகணேசனுக்கு மனைவியாக நடித்தார்.

ருக்மணியின் கணவர்ஒய்.வி. ராவ், நடிகர்-டைரக்டர் ஆவார். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த `சாவித்ரி’ படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த `சிந்தாமணி’ படத்தை ஒய்.வி.ராவ் டைரக்டு செய்தார். அந்த படத்தில், ருக்மணி ஒருமுக் கியவேடத்தில்நடித்துஇருந்தார்.

`லவங்கி’ என்ற படத்தில் ருக்மணியும், ஒய்.வி.ராவும் ஜோடியாக நடித்தார்கள். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களின் ஒரே மகள்தான் லட்சுமி. இவரும் திரையுலகுக்கு அறிமுகமாகி, பிரபல நடிகையாக உயர்ந்தார்.

“மூன்றுமுகம்’, “உல்லாசப் பறவைகள்’ உள்ளிட்ட 60 படங்களில் நடித்தவர்.

ருக்மணி மரணம் – தினத்தந்தி

81 (தினமணீயில் 83 என்றிருக்கிறார்கள்) வயதான ருக்மணி, கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவாக இருந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லட்சுமியின் வீட்டிலேயே அவர் தங்கியிருந்தார். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. மாலை 5-45 மணி அளவில், ருக்மணி மரணம் அடைந்தார்.

தாயாரின் உடலைப்பார்த்து லட்சுமியும், அவருடைய மகள் நடிகை ஐஸ்வர்யாவும் கதறி அழுதார்கள்.

ருக்மணியின் உடல் தகனம் சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் நடக்கிறது.

Posted in Actress, Aishvarya, Aishwarya, Aisvarya, Aiswarya, Biography, Biosketch, Laxmi, Rukmani, Rukmini, Sivaji, Tamil, Valli | Leave a Comment »

J Jayalalitha vs MK Karunanidhi: ADMK & DMK Politics in Tamil Nadu

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 5, 2007


பீதிïட்டும் குற்றங்களை செய்து வருகிறார்
ஜெயலலிதா மீது வழக்கு
கருணாநிதி எச்சரிக்கை


சென்னை, செப்.5-

`கிரிமினல் பிரிவுகளில் வழக்கை சந்திக்க வேண்டிய பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்’ என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காழ்ப்புணர்ச்சி

கேள்வி:- ஜெயலலிதா அன்றாடம் வெளியிடும் அறிக்கைகளை கையெழுத்திட்டுத் தான் ஏடுகளுக்கு அனுப்புகிறார். அதிலிருந்து அவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம். திருமுட்டம் பேரூராட்சியில் மருத்துவமனை ஒன்று கட்ட அவர் ஆட்சிக் காலத்தில் 2004-ம் ஆண்டு பணம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பிறகும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறாரே?

பதில்:- அந்தப் பேரூராட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு 2004-ம் ஆண்டே நிதி ஒதுக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறிக் கொள்கிறார். அதற்குப் பிறகு இரண்டரை ஆண்டுக் காலம் அவர்தான் ஆட்சியிலே இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றும் கோடிக் கணக்கிலே அல்ல. லட்சக்கணக்கிலே நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட வேண்டியதுதான். எனவே அவரது ஆட்சியிலேயே அதனைக் கட்டி முடித்து திறந்திருக்கலாம் அல்லவா? அதுமாத்திரமல்ல, அறிக்கை விடுவதற்கு முன்பு, முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தவர், இப்போதும் சில நாட்களில் பதவிக்கு வந்துவிடுவேன் என்று மக்களையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருப்பவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொண்டுவிட வேண்டாமா? திருமுட்டத்தில் உள்ள மருத்துவமனையை கடந்த 30-ந் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் நானே திறந்து வைத்த உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் ஜெயலலிதா கதை அளந்திருப்பது எப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.

அ.தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள்

கேள்வி:- திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கூறி அதற்காகவும் ஒரு போராட்டம் நடத்தும்படி ஜெயலலிதா விடுத்த அறிக்கை பற்றி?

பதில்:- திண்டிவனத்திலே உள்ள அ.தி.மு.க.வினரில் சிலரே அதிகாரிகளிடம் கூறும்போது இதைப்பற்றி சிரித்து விமர்சனம் செய்தார்களாம். ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து அந்த நகராட்சியின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு விசாரித்தால், அந்த ஆணையாளரே 1.9.2007 தேதியிட்டு கடிதம் எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்தில் “திண்டிவனம் நகரின் குடிநீர் விநியோகம் தென்பெண்ணை ஆறு கண்ரக்கோட்டை மற்றும் புளிச்சப்பள்ளம் ஆகியவைகளை நீர் ஆதாரமாக கொண்டதாகும். நகரில் தற்போதைய மக்கள் தொகை 67 ஆயிரத்து 737 ஆகும். தினசரி 35 லட்சம் லிட்டர் குடிநீர் ஒருநாள் விட்டு, ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது நீர் ஆதாரத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குடிநீர் விநியோகத்தில் முந்தைய நிலையைவிட நகராட்சியால் முழு கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒரு சிலர் தேவையற்ற போராட்டத்தை தற்பொழுது அறிவித்துள்ளனர்” என்று எழுதியிருப்பதில் இருந்தே, இந்த அறிக்கை பற்றிய உண்மையையும் புரிந்து கொள்ளலாம்.

பயிர்க்கடன்

கேள்வி:- தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்று கூறி, அதற்காக போராட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்:- கடந்த 17.8.2007 அன்று இதே காரணத்தைக் கூறி, நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்துமாறு கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு விவரமாகவும், தெளிவாகவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கூட்டுறவுத்துறை பொறுப்பை வகிப்பவருமான கோ.சி.மணி புள்ளிவிவரங்களோடு பதில் அளித்தார். ஆனால் ஜெயலலிதா அறிக்கைவிட்டதோடு தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்தப் பதிலையே படிக்காமல், தற்போது தஞ்சை மாவட்டத்திலே அதே காரணத்திற்காகப் போராட்டம் நடத்துமாறு அறிக்கை விடுத்துள்ளார்.

7 ஆயிரம் கோடி கடன் ரத்து

அவர் தற்போது விடுத்துள்ள அறிக்கையிலே விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் நன்மைகளைச் செய்யவில்லை என்றும், பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கறிவார்கள். ஓரளவிற்கு பத்திரிகை படிப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் விவசாயிகள் வாங்கியிருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்து ஆணையிட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த பல விவசாயிகளே அந்தச் சலுகையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவ்வாறு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இயலாது என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தி.மு.க. அரசின் இந்தச் சலுகைக்குப் பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. மாறாக ஓராண்டு கழித்து இப்போது பயிர்க்கடன் வழங்க வில்லை என்கிறார். அதுவாவது உண்மையா?

ஜெயலலிதா போராட்டம்

தி.மு.க. ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-07-ம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு முழுவதிலும், கூட்டுறவு வங்கிகள், 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு 1,251 கோடி ரூபாயை பயிர்க் கடனாக வழங்கியுள்ளது.

மீண்டும் இந்த ஆண்டு 2007-08-க்கு 1,360 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் புதிதாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் காலாண்டுக்காக, பங்குத் தொகை உதவியாக 188 கோடி ரூபாயும், வட்டியாக 58 கோடி ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.

இதுவரை இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 791 விவசாயிகளுக்கு 255 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா கூட்டுறவு பயிர்க்கடனே வழங்கப்பட வில்லை என்றும், விவசாயிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 2005-06-ம் ஆண்டு அவரது ஆட்சியில் அளித்த கூட்டுறவுக் கடன் 66 கோடி ரூபாய் மட்டும்தான்.

2006-07-ம் ஆண்டுக்கு இந்த மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தி.மு.க. ஆட்சியில் 167 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு விவசாயிகளைப் பற்றி அறிக்கைவிட எந்தத் தகுதியும் கிடையாது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே கூறும்.

தாமதம் இல்லை

கேள்வி:- ஜெயலலிதா விவசாயிகளுக்காக விடுத்த அறிக்கையில் விதை நெல் மற்றும் உரம் போன்றவை வழங்கப்படவில்லை என்கிறாரே?

பதில்:- நடப்பாண்டிற்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 15 ஆயிரத்து 116 மெட்ரிக் டன் விதை நெல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 33 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் விதை நெல் தமிழகம் முழுவதும் இருப்பில் உள்ளது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதோடு, 58 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. அதனால் உரப் பற்றாக்குறை என்பதே இல்லை. விவசாயிகளுக்கு தேவையான உரமும், தரமான விதை நெல்லும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எந்த விவசாயிக்கும் விதை நெல் வழங்குவதிலும் உரம் வழங்குவதிலும் தடையோ, காலதாமதமோ இல்லை என்பதை விவசாயிகள் அனைவரும் நன்கறிவார்கள்.

பயங்கரவாத எச்சரிக்கை

கேள்வி:- இவ்வாறு ஜெயலலிதா வெளியிடும் அன்றாட அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- “தமிழக காவல் துறை தலைவரை அணுகி, மத்திய உளவுப் பிரிவிடம் இருந்து பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் அந்த அதிகாரி, “நான் பொறுப்புக்கு வந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இது போன்ற தகவல்கள் என் கவனத்துக்கு வரவில்லை” என்றும் பதிலளித்திருக்கிறார். இவர் இதுவரை காவல் துறையில்தானே இருந்தார்? தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் வரும் தகவல்களைக் கண்டு மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். உன்னிப்பாக இருக்கிறார்கள். கவனிக்கிறார்கள். ஆனால், காவல் துறைத் தலைவரோ விழிப்பாக இல்லை. முதல்-அமைச்சர் கருணாநிதியும் விழிப்பாக இல்லை. அப்படி என்றால் பொதுமக்கள் கதி என்ன? எண்ணிப் பார்க்கையில் அது பயங்கரமாக இருக்கிறது” என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை ஒரு பத்திரிகையில் வந்துள்ளது.

ஆனால் அதற்கு நேர்மாறாக மற்றொரு பத்திரிகையில் தீவிரவாதிகள் குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் திங்கட்கிழமை கூறியதாவது:-

“சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவில் வாகனங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து செல்லவும், சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. இதுகுறித்து எந்த விதமான தகவல் கிடைத்தாலும் போலீசார் மிகவும் முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுவர். போலீசாரின் பட்டியலில் உள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் போலீசார் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்று வந்துள்ளது.

சட்டத்தை மீறும் செயல்

காவல் துறை தலைவர் ராஜேந்திரன் பற்றிய இரண்டு செய்திகளும் -இரண்டு பத்திரிகைகளில் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக வருவதற்குக் காரணம் என்ன?

இன்னொரு அபாண்டமானதும்

இட்டுக்கட்டியதுமான செய்தி!

“உளவுப் பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு, அந்தத் தகவல் அறிக்கைகளாக வெளிவரும்போது, அதனை முதல்-அமைச்சருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்பதாகும்.

இவ்வாறு கிரிமினல் பிரிவுகளில் வழக்கைச் சந்திக்க வேண்டிய, பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்- இப்படிச் செய்திகள் பரப்புவதும்; அவற்றை வெளியிடுவதும்; சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவற்றை மீறும் செயல்களாகும்.

ஆட்சியில் இல்லாத ஆத்திரம்

கேள்வி:- “ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பினை நிகழ்த்த 3 அல்லது 4 பயங்கரக் குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்கும் என்றும், அந்தக் குழுக்கள் தங்கள் மேலிடத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் தகவல்கள் வந்து மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையில் கேட்டு – அந்த அறிக்கை பத்திரிகைகளில் எடுப்பாக வெளியிடப்பட்டுள்ளதே?

பதில்:- யானையின் மீது உட்கார்ந்து கொண்டு “ஈ” நினைத்துக் கொள்ளுமாம், அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக! அப்படித்தான் ஜெயலலிதாவும் நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்; எல்லாவற்றிலும் தலையிட்டு “குட்டு” பெறுகிறார்; பாவம்-ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை! ஆதங்கம்! ஆத்திரம் -அதனால்தான் அன்றாடம் அறிக்கை!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in ADMK, DMK, J, J Jayalalitha, J Jeyalalitha, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Politics, Tamil Nadu, TamilNadu | Leave a Comment »