Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 9th, 2007

Corrections required for the Correctional Force – Prison Reforms

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

தேவை, சிறைத்துறையில் மாற்றங்கள்

குற்றவாளிகளும் மனிதர்கள்தான் என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமா? வாக்குரிமை பெற்றுள்ள அவர்களும் இந்தியக் குடிமக்கள்தானே? அப்படியானால், அவர்கள் ஏன் விலங்கினும் கீழாக நடத்தப்பட வேண்டும்? சிறைச்சாலைகள் ஏன் மாட்டுக் கொட்டகைகளைவிட மோசமான நிலையில், கவனிப்பாரற்று இருக்க வேண்டும்? ~ இதுபோன்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களால் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

சிறைச்சாலைகளை நவீனப்படுத்தவும், புதிய சிறைச்சாலைகளை நிறுவவும் மத்திய அரசு 75 சதவிகித மானியம் வழங்குகிறது. தனது பங்குக்கு வெறும் 25 சதவிகிதம் செலவு செய்தால் போதும் என்கிற நிலைமையிலும் பெருவாரியான மாநிலங்கள், சொல்லப்போனால் அத்தனை மாநிலங்களுமே, அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

உலகிலேயே சிறைத்தொகை விகிதம் குறைவான நாடு இந்தியாதான்; லட்சம் பேரில் வெறும் 30 பேர்தான் சிறைகளில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் விகிதம் 737. ரஷியாவில் 613 பேர். குற்றம்புரியும் மனப்பான்மை இந்த அளவுக்குக் குறைவாக இருந்தும், நமது சிறைகள் நிரம்பி வழிகின்றன. மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரமே முழுமையாகச் சரியானது என்று சொல்லிவிட முடியாது. காரணம், நமது சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளில் பலர், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் காத்திருக்கும் அப்பாவிகள். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் காராகிரகத்தில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

அது ஒருபுறம் இருக்க, சிறைகள் இருக்கும் நிலைமையைப் பற்றிக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எந்தவித அடிப்படைச் சுகாதார வசதிகளும் கிடையாது; துர்நாற்றமும், பராமரிப்பின்மையும் இணைபிரிக்க முடியாமல் இணைந்திருப்பவை; குண்டர்கள் மற்றும் ரௌடிகளின் அட்டகாசத்திற்குக் கணக்கு வழக்கே இல்லை; சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உதவியோடு தடைசெய்யப்பட்ட எல்லாமே தங்குதடையின்றி சிறையில் புழங்குதல் – இப்படி நாம் கேள்விப்படுவதெல்லாமே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோமே, நமது நாட்டில் சட்டதிட்டங்கள்தான் அதற்குக் காரணம். 1894-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டம்தான் இப்போதும் அமலில் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை? காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்றப்பட்ட சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர இந்தியச் சிறைகள் செயல்படுகின்றன.

காலனி ஆதிக்கம் பிறப்பித்த சட்டம் என்பதால், சிறை என்பது பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணைக்கு உட்படாத பகுதியாக இப்போதும் இருந்து வருகிறது. சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. எழுத முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது வெளியே வராது, தெரியாது என்கிற நிலைமை தொடர்ந்தால், சீர்திருத்தம் எப்படி நிகழும்?

இந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநலவாதிகளான சில அதிகாரிகளுக்கும் சௌகரியமாக இருக்கிறது. அதேபோல, காவல்துறையினருக்கும் இந்த நிலைமை தொடர்வது வசதியாக இருக்கிறது. வெளியே காவல்நிலையங்களில் தங்களால் பழி வாங்க முடியாத, பழிதீர்த்துக் கொள்ள முடியாதவர்களை ஏதாவது காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால், அவர்களை வழிக்குக் கொண்டு வருவது காவல்துறையினருக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், காவல்துறையினர் மறந்துவிடும் விஷயம் என்னவென்றால், இதுவே சமூக விரோதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் நட்புறவை வளர்த்துக் கொள்ளப் பயன்படுகிறது என்பதை.

நீதிமன்ற மேற்பார்வை நடப்பதில்லையா என்று கேட்கலாம். நடக்கிறது. ஆனாலும், சிறைகளின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நாம் யாரிடம் போய் கேட்பது? மேற்பார்வை சரியாக இருக்குமானால், இந்தச் சீர்கேடுகள் நிலவுவானேன்? இத்தனை விசாரணைக் கைதிகள், தாங்கள் எதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்கிறோம் என்று மறந்துபோன நிலையில் சிறைப் பறவைகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடருவானேன்?

தேர்தல் சீர்திருத்தம் பற்றி, நிர்வாகச் சீர்திருத்தம் பற்றி, பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி, சமுதாயச் சீர்திருத்தம் பற்றியெல்லாம் நாளும் பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறோமே, நாம் மறந்துவிட்ட முக்கியமான விஷயங்கள் சில உண்டு. அவற்றில் தலையாயவை காவல்துறை, நீதித்துறை மற்றும் சிறைத்துறைச் சீர்திருத்தங்கள்.

மக்களாட்சியில் மக்களின் பார்வையிலிருந்து யாரும் எதையும் மறைத்து வைப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு இழுக்கு!

————————————————————————————-

காவல் துறை சீர்திருத்தங்கள்

என். ரமேஷ்

பொதுமக்களின் நியாயமான புகார்களைப் பதிவு செய்ய மறுப்பது; முதல் தகவல் அறிக்கை தராமல் இருப்பது, காவல் நிலையச் சாவுகள், ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, போலி “மோதல் சாவுகள்’, வாக்குமூலம் பெற கொடுமையான வழிமுறைகள் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, காவல் துறையின் மீது பல புகார்கள்.

காலனியாதிக்க அடக்குமுறையை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1861-ஆம் ஆண்டு காவல் துறைச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே, இன்றைக்கும் செயல்படுகிறது காவல் துறை.

இந்நிலையை மாற்றும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஆளுநர் தரம் வீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய காவல் ஆணையம் (National Police Commision்) எட்டு அறிக்கைகளை அளித்தது. ஆனால், இந்த அறிக்கைகள் அளிக்கப்பட்டு 27 ஆண்டுகளாகியும், இதன் அடிநாதமான அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் தேசிய காவல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 1996-ல் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான பெஞ்ச் 22-9-2006-ல் முக்கியத் தீர்ப்பை அளித்தது. இதில், ஜனநாயக அமைப்புக்கு உகந்த காவல் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றும்வரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவற்றை 6 அம்சங்களாகப் பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வெளிப்படைத்தன்மை, மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமை, சட்ட அடிப்படையிலான காவல் துறையின் செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதல்வர் அல்லது உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில காவல் துறை தலைமை இயக்குநரைச் செயலராகக் கொண்டும் செயல்படும் இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தகுதி அடிப்படையில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமிக்கப்படவும், ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அப் பதவி வகிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மண்டல ஐ.ஜி, எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரது பதவிக்காலமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்குப் பிரிவு, விசாரணைப் பிரிவு ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். காவல் துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றை முடிவு செய்ய, மேல்முறையீடுகளை விசாரிக்க பணிநிலை வாரியம் அமைக்க வேண்டும். டி.எஸ்.பி. வரையிலான காவல் துறை அலுவலர்கள் மீது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட நிலையில் ஓர் ஆணையமும், எஸ்.பி. முதல் உயர்நிலை அதிகாரிகள் வரையிலானோர் மீதான புகார்களை விசாரிக்க மாநில ஆணையமும் அமைக்கப்பட வேண்டும். இவற்றுக்கு முறையே ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும். இவற்றை 2006 டிசம்பர் 31க்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர், இக் காலக்கெடு 2007 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக அரசு இந்த ஆணைகளில் மிக முக்கியமானவற்றை அமல்படுத்த முடியாது எனக் கூறிவிட்டது. காவல் துறையை, அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்க வேண்டிய மாநில பாதுகாப்பு ஆணையத்தை (State Security Commision) அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைக் காப்பது என்ற கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, காவலர்கள் புகார் ஆணையம் (Police Complaints Authority) அமைப்பது குறித்தும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது. புதிய அமைப்பு மற்றொரு “இணையான அதிகார மையமாக’ செயல்படுவதால் இரட்டிப்புச் செலவு ஏற்படும் என மாநில அரசு கூறியுள்ளது. இது ஏற்க முடியாத வாதம்.

புதிய காவல் துறை சட்டத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. சோலி சோரப்ஜி தலைமையிலான குழு உருவாக்கித் தந்துள்ள மாதிரி காவல் சட்டம், மாநில பாதுகாப்பு ஆணையத்துக்கு இணையான, மாநில போலீஸ் வாரியம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.

மிக முக்கியமாக, காவல் துறையினர் மீதான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கவும், துறை சார்ந்த விசாரணைகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு மாவட்ட, மாநில ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாதிரிச் சட்டம் பரிந்துரைத்துள்ளது. எஃப்ஐஆர் பதிய மறுப்பது, சட்டவிரோத கைது- பிடித்து வைத்தல்- தேடுதல் உள்ளிட்ட சில “வழக்கமான’ போலீஸ் அத்துமீறல்களுக்கு கிரிமினல் தண்டனை வழங்கவும் மாதிரிச் சட்டம் வகை செய்கிறது.

புதிய காவல் சட்டத்தில் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை மட்டுமல்ல; குடிமக்களின் கடமையும்கூட

Posted in Analysis, Citizens, Civil, Correctional, Courts, Criminal, HC, Jail, Judges, Justice, Law, National Police Commision, Op-Ed, Order, Police, Police Complaints Authority, Prison, reforms, SC, Society, solutions, State Security Commision, Suggestions | Leave a Comment »

The High Cost Of Living in Chennai

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நகரம்: சென்னை – 133!

ரவிக்குமார்

தலைப்பைப் பார்த்துவிட்டு “133′-ஐ ஏதோ தபால்துறையில் பயன்படுத்தப்படும் பின்கோட் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். உலக அளவில் வாழ்வதற்கு அதிகமான செலவு பிடிக்கும் நகரங்களில், நமது சென்னை மாநகரம் 133-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. “காஸ்ட் ஆஃப் லிவிங் பெங்களூர்ல ரொம்ப அதிகம்பா’ன்னு யாராவது கூறினால்… நம்பாதீர்கள். ஏனென்றால், பெங்களூர் இந்த வரிசையில் நமக்கு அடுத்துதான் வருகிறது!

மாஸ்கோ, லண்டன், சீயோல், டோக்கியோ, ஹாங்காங், கோபன்ஹெகன் வரிசையில் நம்முடைய சென்னையும். அமெரிக்காவின் புகழ்பெற்ற “மெர்சர்ஸ்’ நிறுவனம் தான் உலகளாவிய இந்தச் சர்வேயை ஆறு கண்டங்களில் எடுத்திருக்கிறது. சென்னைவாசிகள் தங்களின் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் வகையில், அந்தச் சர்வேயில் இருக்கும் இதர விவரங்களைப் பற்றியும், அது தொடர்பாக சிலரின் கருத்துகளும் இதோ:

  • கல்வி,
  • பொருளாதாரம்,
  • அன்னியச் செலாவணியை கவரும் வகையிலான திட்டங்கள்,
  • போக்குவரத்து,
  • உடை,
  • உணவு வகையிலான மாற்றங்கள்,
  • மக்களின் வாங்கும் திறன்,
  • அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,
  • தனிமனித வருவாய்,
  • வீட்டு உபயோகப் பொருள்கள்,
  • பொழுதுபோக்கு அம்சங்கள்…

இப்படி 200 வகையான அளவுகோல்களின் மூலம், வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களை தரப்படுத்தியுள்ளனர். இந்த அடிப்படையில் உலகிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவு பிடிக்கும் நகரமாக தேர்வாகியிருப்பது

  • மாஸ்கோ நகரம்.
  • சீயோல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆசியாவின் எட்டு நகரங்கள் 50-வது இடத்தைப் பிடித்திருக்கின்றன.
  • மும்பை 52-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
  • புதுதில்லி 62-வது ரேங்கில் இருக்கிறது.

அமெரிக்காவின் மெர்சர்ஸ் நிறுவனம் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நகரங்களாக 143 நகரங்களை ஆறு கண்டங்களில் அறிவித்திருக்கிறது. இதில் 133-வது இடத்தை சென்னை பெற்றிருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும்?சென்னையைப் பொறுத்தவரை நகரத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது. வியாபாரம், தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் போன்ற காரணங்களுக்காகவும் ஒருநாளில், அதிகமான எண்ணிக்கையில் சென்னை நகரத்துக்கு வந்து போகும் மக்கள் தொகை (Floating Population) நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது.

“”சென்னை ஒரு காஸ்ட்லியான நகரமாக இருப்பதற்கு, பரவலாக அதிகரித்திருக்கும் தனிநபர் வருமானமும் ஒரு காரணம். மற்ற நகரங்களைப் போல மக்கள் இங்கிருந்து புறநகர்களுக்கு இடம்பெயர்வதற்கு விரும்புவதில்லை” என்கிறார் மத்திய வணிக வளர்ச்சிக் குழுமத்தின், தமிழ் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ரஃபிக் அகமத்.

“”தங்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைப்பதற்காக, பணி செய்யும் இடத்திற்கு அருகாமையில் வாடகை வீட்டிலாவது இருந்து நிலைமையைச் சமாளிப்போம்” என்ற யோசனையோடு நாளுக்கு நாள் புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

“”கும்மிடிப்பூண்டியில இருந்து நான் மட்டும் வேலைக்கு வந்துட்டிருந்தேன். அப்போது அங்கேயே ஒரு சின்ன ஸ்கூல்ல குழந்தைங்களைப் படிக்க வச்சிட்டிருந்தேன். இப்போ என் மனைவியும் வேலைக்குப் போறாங்க. அதனால தைரியமா சென்னைக்கு வந்துட்டோம். குறைஞ்ச வாடகைக்கு கும்மிடிப்பூண்டியில இருக்கிற எங்க வீட்டை விட்டுட்டு இங்க குடித்தனம் இருக்கிறோம். கஷ்டப்பட்டாலும் பிள்ளைங்கள நாங்க நினைச்சா மாதிரி நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கிறோம்கிற திருப்தி இருக்கு” என்கிறார் சென்னை, சாலிக்கிராமத்திலிருக்கும் கல்யாணராமன்.

சென்னை நகரத்திற்குள் இடம் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில் ஏற்கனவே இருக்கும் பழைய வீடுகளின் மதிப்பும், ஃபிளாட் வகையான வீடுகளுக்கும் கூட இன்றைக்கு மிகப் பெரிய டிமாண்ட் இருக்கின்றது.

நாளுக்கு நாள் சென்னை நகரத்தில் பெருகிவரும் ஐ.டி. தொழில்நுட்ப வளாகங்களும், தொழிற்சாலைகளும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஏறுமுகத்தில் கொண்டு செல்வதற்குக் காரணமாக இருக்கின்றன. “”பெங்களூரோடு ஒப்பிடுகையில் நில வியாபாரம் சென்னையில் கடந்த சில மாதங்களில் விலை அதிகம் உயர்ந்திருக்கின்றது” என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் சிலர்.

சென்னை-133 எஃபெக்டுக்கு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ்நாடு அரசாங்கத்தின் அணுகுமுறையும் ஒரு காரணம். கடந்த 12 மாதங்களில் 6,985 கோடி ரூபாய் பெருமானமுள்ள தொழிற்சாலைகளையும், பன்னாட்டு தொழில் நிறுவனங்களையும் சென்னையில் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) தமிழ்நாடு அரசு, சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே ஆட்டோ-மொபைல், எலக்ட்ரானிக் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கு ஏற்ற நகரம் என்ற அங்கீகாரத்தை சென்னை பெற்றிருக்கிறது.

உலக அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகச் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் “நாஸ்காம்’ என்னும் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முதலீடுகளைச் செலுத்துவதற்கு தகுதியான ஒன்பது நகரங்களில், சென்னைக்கு மூன்றாவது ரேங்க் கொடுத்திருக்கின்றது.

-என்ன இருந்தாலும் பாரீஸ் போல வருமா… என்று இழுக்கும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். நமக்கும் கீழே பத்து நகரங்கள் லிஸ்ட்டில் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுங்கள்!

Posted in 133, America, Analysis, Bombay, Boston, Chennai, Compensation, Consumer, Customer, Dress, Economy, Education, Exchange, Expenses, Finance, France, GDP, Homes, Household, Houses, Income, India, Inflation, Interest, job, Korea, LA, London, Madras, Moscow, Moskva, MoU, Mumbai, NYC, Paris, Price, Prices, Purchasing, Rates, Recession, Rent, Russia, Salary, Schools, Seoul, Stagflation, UK, US, USA, USSR, Work | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to overcome diabetics?

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் தேன்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 59. கடந்த 10 வருடங்களாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் துன்பப்படுகின்றேன். சாப்பாட்டுக்கு முன்பாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 330 மி.கி./க்ப் என்ற அளவில் உள்ளது. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நெருப்பில் சுட்டது போல் எரிச்சல், உணர்ச்சியற்ற தன்மையுடன் மரத்துப் போய் உள்ளது. ஆண்மைக் குறைவும் மலச்சிக்கலும் உள்ளது. என் உடல் உபாதை மாற ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.

சர்க்கரை வியாதிக்கான சிகிச்சைமுறை இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல ஆயுர்வேதம் கூறவில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர் நல்ல பலசாலியாக இருந்தால் கடுகெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் அல்லது புங்கெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை உடலுக்குத் தகுந்தவாறு பருகச் செய்து உடலின் உட்புறத்தில் குடல் மற்றும் ரத்தக் குழாய்களில் நெய்ப்பை உருவாக்கச் செய்வார்கள். நெய்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிகுறிகள் மூலம் அறிந்ததும் குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வாந்தி மற்றும் பேதி மூலம் வெளியேற்றி உடலின் உட்புறச் சுத்தியை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு தோஷநிலைகளை நன்கு அறிந்து ஆசனவாய் வழியாக மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட கஷாயத்தைச் செலுத்தி குடலைச் சுத்தமாக்குவார்கள். இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் உடல் சோர்வை நீக்க வறண்ட பிரதேசத்தைச் சார்ந்த பிராணிகளின் மாமிச சூப்பைப் பருகச் செய்து உடலுக்குத் தேவையான புஷ்டியை ஏற்படுத்துவார்கள்.

சர்க்கரை நோயால் மிகவும் மெலிந்து எந்நேரமும் உடலில் சோர்வை உணர்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளால் மேலும் உடல் தளர்வடையும் என்பதால் அதைச் செய்யாமல் அவர்களுக்குச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்துகளை மட்டும் கொடுப்பார்கள். அந்த வகையில் –

நெல்லிக்காயை இடித்துப் பிழிந்த ஸ்வரஸம் 2 அவுன்ஸ்(60 மிலி), தேன் 1 அவுன்ஸ், மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன் இவற்றை ஒன்றாய்க் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. (தேன் நாக்கில் பட்டதும் இனிப்பாகத் தெரிந்தாலும் ஜீரண இறுதியில் அது காரமாக மாறுவதால் சுத்தமான தேன் சர்க்கரையை குறைக்கத்தான் செய்யும்)

உணவில் சம்பா கோதுமையை முக்கிய உணவாக அமைத்து பாகற்காய், கோவைக்காய் போன்றவற்றைப் பொரியலாகவும், புளிக்கு பதில் நெல்லி முள்ளியையும் வறுத்த உப்பையும் சேர்ப்பார்கள். நாள் முழுவதும் இனிப்பே கிடையாதா? என்ற ஏக்கத்தைத் தவிர்க்க சீனாக் கற்கண்டை உபயோகிப்பார்கள். பசு, குதிரை ஆகியவற்றின் சாணத்திலிருந்து எடுத்த பார்லி அல்லது மூங்கில் விதையின் மாவினால் அப்பம், சத்துமாகஞ்சி முதலியவற்றைத் தயாரித்து உண்ணக் கொடுப்பார்கள். சாமை, பயறு, பழைய அரிசி, எள்ளு, கடுகு, நாவல் பழம், கசப்பான கீரைகள், கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் எனப்படும் திரிபலை, தர்ப்பை நீர், தேன்கலந்த நீர் ஆகியவற்றை உணவாக ஏற்றார்கள்.

வறட்சியான பொருள்களால் உடம்பை அழுத்தித் தேய்த்தல், தேகப் பயிற்சி, இரவு கண்விழித்தல் ஆகியவற்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார்கள். எங்கு சென்றாலும் குடை, பாதரட்சை இன்றி நடந்தே செல்லுமாறு சர்க்கரை நோயாளியை வற்புறுத்தினார்கள்.

மேற்குறிப்பிட்ட அத்தனை வகை சிகிச்சையாலும் குறையாத சர்க்கரை வியாதியை வேங்கை, கருங்காலி வைரக் கட்டைக் கஷாயத்தில் மூழ்கி வைத்த 100 பலம் சிலாஜதுவை அதே வைரக் கட்டைக் கஷாயத்துடன் உட்கொண்டு மாமிச சூப்பைச் சாதத்துடன் உண்ணச் செய்தார்கள்.

இதன்மூலம் சர்க்கரை வியாதி மட்டுமல்ல, தைராய்டு, கேன்சர் கட்டிகள், முடிச்சு நோய், உடற்பருமன், குஷ்டம், பவுத்திரம், கிருமி, யானைக்கால் வீக்கம் போன்ற நோய்களையும் நீக்கச் செய்தார்கள்.

நிசோசீராதி தைலத்தை மேலுக்குத் தடவி வருவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் நீங்கிவிடும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆண்மைக் குறைவு உபாதையும் நீங்கும். நெல்லிக்காய்ச் சாறு குடிப்பதால் மலச்சிக்கல் உபாதையும் குறைந்துவிடும்.

இடிந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டை, கம்புகளால் முட்டுக் கொடுத்து அதைத் தாங்கிப் பிடிக்கச் செய்து வீட்டைக் காப்பதுபோல நடைப்பயிற்சி – உணவுக் கட்டுப்பாடு – மருந்து எனும் கம்புகளால் சர்க்கரை வியாதியால் இடிந்து கொண்டிருக்கும் நம் மனித உடல் மேலும் சரியாது பாதுகாக்கப்படுகிறது.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, BP, Cialis, cure, diabetics, Diet, Doctor, Dysfunction, ED, Erectile, Exercise, Health, Healthcare, insulin, Medicine, Penis, Research, Sodium, solutions, Sugar, Suggestions, Viagra | Leave a Comment »

Reading e-books in Cell phone – Mobile Technology for Tamil

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

இது புதுசு: செல்போனில் கலந்த “செம்புலப் பெயல்நீர்’!

அருவி

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே’

-“குறுந்தொகை’ பாடலான இதில் வரும் “செம்புலப் பெயல்நீர்’ என்கிற உவமைநீர் தரும் ஈரம் மட்டும் இன்னும் காய்ந்தபாடில்லை. வற்றாத ஜீவநதியாய் ஊற்றெடுத்து பலவற்றோடு கலந்து ஓடிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியவாதிகளின் இதயங்களோடு கலந்து, கட்டுரை, கவிதை எனப் பலவற்றிலும் ஓடி, இப்போது கலந்திருப்பது செல்போனில்!

சங்கப் பாடல்களைப் படித்துப் புரிந்தவர்கள் பலாச்சுளையைச் சுவைத்ததுபோல மகிழ, புரியாதவர்கள் ஊமத்தங்காயைச் சாப்பிட்டதுபோல வருந்தி நிற்பதுதானே இன்றைய நிலை?

இது சற்று பெரிய அரிய விஷயம்தான். ஆனால் ஒன்றும் புரியாத விஷயமில்லை. செல்போனிலும் புத்தகங்கள் படிக்கிற வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது “மொபைல்வேதா’ நிறுவனம். கோயமுத்தூர் உடுமலைபேட்டையைச் சேர்ந்த கே.ஆர்.கணேஷ்ராம்தான் இதன் நிறுவனர். முதலில் சங்கப் பாடல்களை எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொடுத்து இருக்கிறார்கள். போகப் போக வாரஇதழ், மாத இதழ், நாளிதழ், நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என எல்லாப் புத்தகங்களையும் வெளிக்கொண்டு வரவும் இருக்கிறார்கள்.

இதைப்பற்றி முழுவிவரத்தையும் சொல்கிறார் கணேஷ்ராம்:

“பி.காம் படித்திருக்கிறேன். முதலில் கோவை பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை மட்டும் தெரிவிக்கும் வெப்சைட் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் வேலைவாய்ப்பு வெப்சைட்டைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டேன். இந்தத் தருணத்தில்தான் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் புதுமை தொழில்நுட்ப ஆய்வுகளைக் கண்டறியும் முகாம் ஒன்றை நடத்தியது. இருநூறுக்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டோம். இதில் பதினைந்து பேரின் ஆய்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெப்2.0 மற்றும் செல்போன் தொடர்பாக நான் செய்த ஆய்வும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெப்சைட்டில் வெப்1.0-தான் இப்போது இருக்கிறது. இதற்கு மாற்றாக வெப்2.0-வெர்ஷனை அமைப்பது குறித்து ஆய்வு செய்திருந்தேன்.

இதனையடுத்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் அடைகாப்பு மையம் சார்பில் நாலு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு லோனாகக் கொடுக்கப்பட்டது. இதைக் கொண்டு “மொபைல்வேதா’ நிறுவனத்தைத் தொடங்கினேன். பல்கலைக்கழக வளாகத்திலேயே இது இயங்கி வருகிறது. மொபைல் மதிப்பு கூட்டு சேவைத் துறையில் (value added services) புதிய தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இந்நிறுவனத்தின் பணி. முதல் பணியாகத்தான் செல்போன் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களுடையது என்று சொல்ல முடியாது. செல்போன் புத்தகங்கள் ஜப்பான், சீனாவில் அமோக வரவேற்புப் பெற்று, புத்தகங்கள் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியைப் படித்துப் பார்த்துவிட்டு நான் முயற்சித்தேன். முடிந்தது.

பெரியார் இயக்கத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தைத்தான் முதலில் செல்போனில் வெளியிட்டோம். இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இதனையடுத்து “பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ என்ற தமிழ்ப் புத்தகத்தை வெளியிட்டோம். இதற்கும் கிடைத்த வரவேற்பையடுத்துதான் சங்க இலக்கியங்களை செல்போன் புத்தகங்களாக மாற்றித் தருகிறோம்.

குறுந்தகவல் சேவை போன்றுதான் இதுவும் என இதனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 165 வார்த்தைகள்தான் குறுந்தகவல் சேவையில் இருக்கும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களையும் இதில் கொண்டு வரமுடியும்.

செல்போனில் புத்தகங்களை வடிப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய ஜாவா தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் புத்தகமாக்குகிறோம். செல்போனில் கேம்ஸ் அமைப்பதற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சாதாரணமாக நாம் படிக்கிற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அட்டை, அழகான படங்கள் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

சங்க இலக்கியத்தை முதலில் நாங்கள் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் பழந்தமிழரின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இரண்டாவது, ராயல்டி இல்லாமல் வெளியிடக்கூடிய ஒன்றாக இருப்பதும் ஒரு காரணம். தற்போது சங்க இலக்கியப் பாடல்களுக்குப் பொழிப்புரை தருவதற்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகங்களைப் பெறுவது சிரமமான காரியம் ஒன்றுமில்லை. இதற்காகவே www.thinnai.info ் என்ற வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன் வைத்திருப்பவர்கள் அப்படியே செல்லிலேயே இன்டர்நெட் ஓப்பன் செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து நேரடியாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். இன்டர்நெட் வசதி இல்லாமல் ப்ளூ டூத், இன்ஃபராரெட், டேட்டாகேபிள் வசதி உள்ளவர்கள் கணிப்பொறியில் எங்கள் வலைத்தளத்திற்குள் நுழைந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இலவசமாகவே இதை வழங்கி வருகிறோம். இந்தச் செல்போன் தமிழ்ப் புத்தக வெளியீட்டை கடந்த 22-ந்தேதிதான் தொடங்கினோம். அதற்குள் 250-க்கும் மேற்பட்டோர் சங்க இலக்கியப் புத்தகத்தை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

இதன் அடுத்தகட்டமாக நாவல், சிறுகதை தொகுப்புகள், கட்டுரை புத்தகங்கள் என எல்லாவகையான புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இதைப்போல பரபரப்பாக விற்கும் வார இதழ், மாத இதழ், நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம். இது தொடர்பாக எல்லாப் பத்திரிகை நிறுவனங்களோடும் எழுத்தாளர்களோடும் பேச இருக்கிறோம். இதை இலவசமாக வழங்க முடியாது.

ஓர் உதாரணத்துக்கு “ஹிந்து’ ஆங்கில நாளிதழை அவர்கள் அனுமதியுடன் வெளியிடுகிறோம் என்றால், அதற்கான கட்டணத்தை செல்போன் ரீடர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள திட்டம் வைத்திருக்கிறோம். ஒரு சினிமாப் பாடலை ரிங்டோனாக வைத்துக்கொண்டால் செல்போன் ஆபரேட்டார் அதற்காகும் கட்டணத்தைப் பிடித்துக் கொள்வதுபோல நாளிதழுக்காகும் கட்டணத்தையும் ஆபரேட்டார்களையே பிடித்துக்கொள்ள சொல்லலாம். வார இதழ்கள், மாத இதழ்கள், பெரிய எழுத்தாளர்களின் நாவல் என எல்லாப் புத்தகங்களையும் இந்த முறையில் வெளியிடுவது பற்றி யோசித்து வருகிறோம். எழுத்தாளர்களுக்கு முழுப் பணமும் கிடைக்கும். செல்போன் வழியாக சிற்றிதழ்கள் நடத்த விரும்புகிறவர்களும் நடத்தலாம்.

கம்ப்யூட்டரிலேயே படித்தால் கண் கெட்டுப் போய்விடும் என்ற கவலையும் இல்லாதளவு செல்போனிலேயே “கூல் டெக்ஸ்ட்’ தொழில்நுட்பமெல்லாம் வந்திருக்கிறது. இதனால் கண் கெட்டுப் போகாததுடன், செல்போன் புத்தகமும் தெளிவாகத் தெரியும்” என்கிறார் கணேஷ்ராம்.

செல்போன் புத்தகம் பற்றி பேசியபோது ஒரு கல்லூரி மாணவி சொன்னாள்:

“”ஐ… பரீட்சைக்குப் புத்தகத்தையே செல்போனில் கொண்டு போயிடலாமே”

“”என்ன கொடுமை சார் இது”

Posted in Author, Books, Cellphone, Display, Fonts, iPhone, Magazines, Magz, Mobile, Newpapers, News, Reader, service, SMS, SOA, Software, Tamil, Technology, Tools, Unicode, Utility, Zines | 1 Comment »

Mooligai Corner: Herbs & Naturotherapy – How to remove Dandruff

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

மூலிகை மூலை: பொடுகு நீங்க… பொடுதலை!

விஜயராஜன்

பற்களுடன் ஆன நான்கு, நான்கு இலை அடுக்குகளையும், கதிரான மிகச் சிறிய வெள்ளை நிறப் பூக்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி இனமாகும். செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும், கோழையை அகற்றவும் உடலிலுள்ள தாதுவை வலுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் ஈரமான இடங்களில் தானாகவே வளர்கின்றது.

வேறு பெயர்கள்:

பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடாரசோதித்தா.

ஆங்கிலத்தில்: Lippianodiflora, Mich, Verbeneceae.

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:

பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து அத்துடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு கூட்டி நெய்யில் வதக்கி உண்டால் சீதபேதி, வயிற்று இரணம், 3 நாளில் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர ரண குன்மம் குணமாகும்.

பொடுதலை இலையுடன் சீரகம் அதேயளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் அல்லது சங்களவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வெட்டைச் சூடு, வெள்ளை குணமாகும்.

பொடுதலை இலையைக் கைப்பிடியளவு எடுத்து பருப்பு சேர்த்து நெய்யில் வதக்கி துவையல் செய்து பகல் உணவுடன் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம், இரத்த மூலம், பெüத்திரம் குணமாகும்.

கைப்பிடியளவு பொடுதலை இலையுடன் சிறிது இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக்கிச் சுடு சோற்றில் சிறிது நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர மார்புச் சளி, சுவாசக் காசம் குணமாகும்.

பொடுதலை சமூலச் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இரண்டு முறை தலைமுழுகி வர, தலையில் வருகின்ற தோல் நோய், பொடுகு குணமாகும்.

பொடுதலைக் காயும், மஞ்சளும் சம அளவாக எடுத்து அரைத்து புண்களின் மீது வைத்துக் கட்ட 6 நாளில் குணமாகும்.

பொடுதலையை வதக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க, மாந்தம், இருமல், சூளை, வெள்ளை குணமாகும். பொடுதலையை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து 1 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி, ஒரு சங்களவு குழந்தைகளுக்குக் கொடுக்க கழிச்சல் நிற்கும்.

பொடுதலை இலையுடன் சீரகம் சிறிது சேர்த்து அரைத்து எலுமிச்சம் பழ அளவு காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை குணமாகும். பொடுதலை இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர உள் மூலம் தணியும். இந்த இலையை அரைத்துக் கட்டி, கொப்புளம் மீது பற்றுப் போட்டுவர, பழுத்து உடையும். மேலும் புண், அக்கி புண், நெறிக் கட்டி, வீக்கம் இவைகள் மீது பூசி வர குணமாகும். பொடுதலைக் காயை பழைய அரிசியுடன் சேர்த்து உலையிலிட்டு முதற் கொதி வந்தவுடன் வெறும் அரிசியை உலர்த்தி நெய்யாக்கி, அதை மாந்தமுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பொடுதலை இலை, காய் இவற்றை சாறு பிழிந்து அதனுடன் மிளகு, எண்ணெய் கூட்டி வெயிலில் வைத்துச் சாறு சுண்டி எண்ணெய் மட்டும் தங்கிய பின் அதை தலையில் தேய்த்து தலை முழுகி வர, தலையில் காணும் பொடுகு நீங்கும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Dandruff, Herbs, Mooligai, Moolikai, Naturotherapy, Poduku, Poduthalai, Potuku, Potuthalai | 1 Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »

Sujatha – Vaaram oru Paasuram (Kalki) : 39

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வாரம் ஒரு பாசுரம் – 39

சுஜாதா

கல்கி ஜூலை 15, 2007 

வழக்கொழிந்து போன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு இலேசான பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன.

‘திறம்புதல்’ என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலையடித்துச் சலிக்காத கடல். திறம்பாத உலகம் – சலியாதிருக்கிற உலகம், திறம்பாது – நான் சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்… இப்படித் தீர்மானிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது. நம்மாழ்வார்
திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே பாசுரத்தில் பயன்படுத்தியுள்ளார்.

“திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்;
திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்;
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ
திறம்பாத உலகத் தீர்க்கு என் சொல்லுகேன் –
திறம்பாது என்திரு மகள் எய்தினவே?”

ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ
பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின்
வடிவில் ஆழ்வார், பகவத்கீதையின் 18ஆவது அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.

இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான் மலையைத் தூக்கினேன் என்கிறாள். அசுரனைக் கொன்றேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத (திறம்பாத) கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு செய்யாத (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன். என் மகளுக்குத் தப்பாது (திறம்பாது) இது வந்துவிட்டதே. ஏழுமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார் – ஏழு முறையும்
திறம்பாமல்.

Posted in 4000, Aalvar, Aalwar, Aazhvar, Aazhwar, Azhwar, Dictionary, Kalki, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Paasuram, Pasuram, Sujatha, Thiruvaaimozhi, Thiruvaimozhi, Vocabulary, Words | Leave a Comment »