Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 3rd, 2007

Facts: How Hong Kong has and hasn’t changed – Progress Report under China

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

டிராகன் புகுந்த நாடு!

எம். மணிகண்டன்

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதையொட்டி ஹாங்காங்கில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சிகளில், பிரிட்டன் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஐபிகள் கலந்து கொண்டு பொருளாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் விரிவாகப் பேசினர், ஒன்றைத் தவிர. அந்த ஒன்று, ஜனநாயகம். ஹாங்காங் மக்கள் கேட்கும் முழுமையான “மக்கள் ஆட்சி’.

1997-ல் ஹாங்காங்கின் இறையாண்மையை சீனாவின் கையில் ஒப்படைத்தபோது, அடிப்படை அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. முழுமையான மக்கள் ஆட்சி படிப்படியாக ஏற்படுத்தப்படும் என்பதே அதில் கூறப்பட்டிருக்கும் முக்கிய அம்சம்.

ஹாங்காங்கின் பாதுகாப்பு, அயல்நாட்டு விவகாரம் தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சீனா தலையிடக் கூடாது என்ற அடிப்படையில்தான் பிரிட்டிஷ் அரசு ஆட்சியை ஒப்படைத்தது. ஹாங்காங்கின் கலாசாரம், நாகரிகம், பொருளாதார அமைப்பு உள்ளிட்ட அடையாளங்கள் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்த உடன்பாட்டுக்கு முக்கியக் காரணம்.

ஆனால் இந்த எல்லையைக் கடந்து ஹாங்காங்கின் உள்விவகாரங்களில் சீனா மூக்கை நுழைக்கிறது என்பதுதான் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் கூறும் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக அடிப்படை அரசமைப்புச் சட்டப்படி, ஹாங்காங் அரசின் செயல் தலைவர் (பிரதமர்) மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் சீனா நியமிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த 800 பேர் கொண்ட தேர்தல் செயற்குழுதான் செயல் தலைவரைத் தேர்ந்தெடுத்து வருகிறது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் யாருக்கு ஆதரவாகச் செயல்படுவார் என்பதைக் கண்டுபிடிக்க உளவுத்துறையின் உதவியை நாட வேண்டியதில்லை. இது தவிர ஹாங்காங்கின் 60 உறுப்பினர் சட்டப்பேரவையில் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமே மக்களிடம் உள்ளது. மீதி 30 பேருக்கு மறைமுக வாக்கெடுப்பு. இப்படிப் பல்வேறு வழிகளிலும் ஹாங்காங் மீதான பிடியை சீனா இறுக்கியிருக்கிறது.

“ஒரு நாடு, இரு அமைப்பு’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் சீனா-ஹாங்காங் இடையேயான உறவுப்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு அமைப்புகளும் அடிப்படையிலேயே வெவ்வேறானவை. ஒன்று பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டது. மற்றொன்று முதலாளித்துவ தத்துவத்தை செயல்படுத்தி வருவது. “மக்காவோ’ பகுதியைப் போல ஹாங்காங்குக்கும் சிறப்பு நிர்வாகப் பகுதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் எழுத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்னை.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம், பொருளாதாரச் சுதந்திரத்தில் முதலிடம், முதல்தர சரக்குக் கப்பல் தளம் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ஹாங்காங். சீனாவின் தற்போதைய படுவேகமான பொருளாதார வளர்ச்சிக்கு சோதனைக் களமாகப் பயன்பட்டது ஹாங்காங்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் ஷென்சென் நகரம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் பேர் வசித்த குக்கிராமமாக இருந்தது. தற்போது அங்கு மக்கள்தொகை 1 கோடியே 30 லட்சம். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஹாங்காங் தொழிலதிபர்களின் முதலீடுகளால் இன்று அந் நகரத்தின் அபார வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. ஹாங்காங் மீதான பிடியைத் தளர்த்த சீனா யோசிப்பதற்கு இவைதான் முக்கியக் காரணங்கள்.

சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்த 10 ஆண்டுகளில் ஹாங்காங் சில சமரசங்களைச் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. ஹாங்காங் பகுதிக்குப் போட்டியாக ஷாங்காய் நகரை சீனா வளர்த்து வருகிறது.

பல்வேறு புதிய நிறுவனங்களை ஷாங்காய் நகருக்குக் கொண்டுபோய், கிட்டத்தட்ட சீனாவின் வர்த்தகத் தலைநகராகவே அதை மாற்றிவிட்டது.

ஹாங்காங்கை விட சீனாவில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதால் ஹாங்காங் நிறுவனங்கள்கூட தங்கள் கடைகளை சீன நகரங்களில் பரப்பியிருக்கின்றன. பாதி நிறுவனங்கள் சிங்கப்பூரை நோக்கிப் படையெடுத்து வருகின்றன.

இதனால் ஹாங்காங்கின் சிறு தொழில் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதால் ஹாங்காங் மக்கள் இதுபோன்ற செயல்களை நேரடியாகக் குறைகூற முடியாது என்றாலும், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

இவை ஒருபுறம் இருக்க, சீனாவுடன் இணைந்திருப்பதால் ஹாங்காங் பகுதிக்கும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. 2003-ல் ஹாங்காங்கில் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோது, சீனாவின் உதவி இல்லாமல் போயிருந்தால் ஹாங்காங் மீண்டு வந்திருக்க முடியாது. சீனாவின் சரக்குகளைக் கையாளுவதால் ஹாங்காங் துறைமுகம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது தவிர, 1997-க்கு முந்தைய கணக்கை ஒப்பிட்டால் சுற்றுலாப் பயணிகளின் வருகை பல மடங்காகி இருக்கிறது. சீனாவிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ஹாங்காங் மாறிவிட்டது என்பதை இவை உணர்த்துகின்றன.

சீனாவின் எரிச்சல்களுள் ஒன்றாகக் கருதப்படும் தைவான், சீனாவுடன் சேர்வதற்குத் தயக்கம் காட்டுவதற்குக் கூறப்படும் காரணங்களுள் ஒன்று முழுமையான மக்களாட்சி மறுக்கப்படும் என்பதுதான். எனினும், முன்புபோல் அல்லாமல் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களை சீனா சகித்துக் கொண்டிருப்பதே மிகப்பெரிய மாற்றம்தான்.

பொருளாதாரத்தில் ஹாங்காங்கை சோதனைக் களமாகப் பயன்படுத்தி நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சீனா, ஹாங்காங்கில் முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவந்து, அதையும் நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே. செய்வீர்களா தோழர்களே?

Posted in AP, Arts, Arunachal, Autocracy, Beijing, Bejing, Biz, Blair, Britain, Brown, Business, Cabinet, Casinos, Cathay Pacific, CathayPacific, Censor, China, Commerce, Communism, Communist, Communists, Country, defence, Defense, Democracy, Economy, England, Federal, Finance, Freedom, Gordon, Govt, Hongkong, HSBC, Independence, Industry, London, Macau, Manufacturing, Market, Marx, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Marxists, Peking, PM, Politics, Power, Regime, Republic, Ruler, Shangai, Shanghai, Shares, Stocks, Taiwan, Tianamen, Tiananmen, Tianmen, Tibet, UK, World | Leave a Comment »

Thiruvengimalai Saravanan – Soolamangalam Sisters (Rajalakshmi): Notable Women Series in Kumudam

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

‘‘சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’’

நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் கந்த சஷ்டிகவசத்தை அதிகாலையில் கேட்கும்போது அந்த முருகனே நம்மை நேரில் வந்து தட்டி எழுப்புவது போன்று ஒரு சிலிர்ப்பான உணர்வு ஏற்படும். வரிகள் மட்டுமல்ல, கவசத்தை உச்சரிக்கும் அந்தத் தேன் குரல்களும் நம்மை இனம்புரியாத ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்வது நிஜம்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம் காதுகளில் ஒலிக்கும் அமுதகீதம் அது. பாடலைக் கேட்கும்போதே சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் மின்னலாக நம் நினைவிற்கு வருவார்கள். சமயத்தில் அது இரண்டு குரலா அல்லது ஒரே குரலா என்ற சந்தேகம் கூட ஏற்படும். அத்தனை ஸ்ருதி சுத்தம். அத்தனை புரிந்துகொள்ளுதல்! அது கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் சரி, மெல்லிசை பக்திப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் குரலில் ஒரு தெய்வீகத் தன்மை இருக்கும்.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் சூலமங்கலம்! அந்த ஊர் கர்ணம் ராமசாமி ஐயர் _ ஜானகி தம்பதிக்குப் பிறந்த சகோதரிகள்தான் ராஜலட்சுமியும், ஜெயலட்சுமியும். மூத்தவர் ஜெயலட்சுமி. இளையவர் மறைந்த ராஜலட்சுமி. சகோதரிகளில் கடைக்குட்டி சரஸ்வதி! தங்கள் சங்கீத வாழ்க்கையில் இவர்கள் குடும்பம் சந்தித்த கடுமையான போராட்டங்களும், சோகமான நெருக்கடிகளும் ஏராளம்! ஆனால், எந்தக் கட்டத்திலும் அவர்கள் தாங்கள் நேசித்த சங்கீதத்தை விட்டுவிடவில்லை. எட்டு வயதில் குடும்பச் சுமையை சுமக்கப் போகிறோம் என்பது சின்னப் பெண் ராஜலட்சுமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

மாயவரம் பக்கத்திலுள்ள திருச்செம்பொன்பள்ளி மாரியம்மன் இவர்கள் குலதெய்வம். அங்கு சின்ன வயதில் ராஜலட்சுமி கூட்டத்தில் காணாமல் போய்விட்டாராம். உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலையில் தேடியபோது, ஒரு கிராமத்தின் வயல் பரப்பில் ஒரு பெண், குழந்தை ராஜலட்சுமியை கையில் பிடித்து கொண்டிருந்தாராம். ஓடி குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டபோது அந்த அம்மாளைக் காணவில்லை. மாரியம்மனே தன் குழந்தையைக் காப்பாற்றியதாக உணர்ந்த அவர்கள், குழந்தை ராஜலட்சுமியை ‘மகமாயி பிச்சை’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

சூலமங்கலம் கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை ராதா கல்யாண உற்சவம் பத்து நாட்கள் அமர்க்களமாக நடக்கும். இந்த விழாவில் பாட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரிய பெரிய சங்கீத மேதைகள் வருவார்கள். இவர்களது கச்சேரிகளைக் குழந்தைகள் ஜெயலட்சுமியும், ராஜலட்சுமியும் தனது பெற்றோருடன் சென்று கேட்பது வழக்கம். இதனால் இவர்கள் சின்ன வயதிலேயே இசையால் ஈர்க்கப்பட்டார்கள். பெற்றோர் குழந்தைகளின் இசை ஆர்வத்தைப் பார்த்து கிராமத்தில் இருந்த வைத்தியநாத பாகவதரிடம் சங்கீதம் கற்க அனுப்பி வைத்தார்கள்.

குட்டிப் பெண் ராஜலட்சுமியின் இசை ஞானத்தை அப்போதே பலர் பிரமிப்புடன் பார்த்தனர். ஏழு வயதிலேயே மேடை ஏறி கச்சேரி செய்தார். சுற்று வட்டாரங்களில் குழந்தையின் பாடலைக் கேட்க பலர் ஆர்வத்தோடு வந்தார்கள். எட்டு வயது இருக்கும்போது ராஜலட்சுமியின் தந்தை மரணம் அடைந்தபோது, அந்தக் குடும்பம் நிலை குலைந்துபோனது. வீட்டில் எல்லாருமே சின்னஞ்சிறுசுகள்! ராஜலட்சுமியின் தங்கை சரஸ்வதிக்கு ஆறு வயது. தம்பி சேதுராமனுக்கு மூன்று வயது. நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு, என்ன செய்வதென்று புரியாமல் ராஜலட்சுமியின் தாயார் ஜானகிஅம்மாள் தவித்துப் போனார். அந்த நேரம் அவருடைய சகோதரர் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்தார். குழந்தைகளை வைத்துக்கொண்டு தனது சகோதரி தடுமாறுவதைப் பார்த்து சகோதரர் தனது வேலையை ராஜினாமா செய்தார். உடனே சூலமங்கலத்திலுள்ள வீடு, நிலங்களை விற்று தன் சகோதரி குடும்பத்தாரை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். சென்னை மைலாப்பூரிலுள்ள நாட்டு சுப்புராய முதலி தெருவில் குடியேறினார்கள்.

இதனால் ராஜலட்சுமிக்கு ஸ்கூல் படிப்பு பாதியோடு நின்றது. சென்னையில் வைத்தியநாத அய்யர், நாரதர் ஸ்ரீனிவாசராவ் ஆகிய இருவரும் அந்தக் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்தனர். சகோதரிகள் இருவரையும் பத்தமடை கிருஷ்ணனிடம் (பாரதியார் மருமகன்.) முறைப்படி சங்கீதம் கற்க வைத்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கற்றுக்கொண்டனர். மாலை நேரங்களில் சின்னச் சின்ன கோயில்களில் ராஜலட்சுமியின் கச்சேரி நடக்கும். கூடவே அக்காள் ஜெயலட்சுமியும் சேர்ந்து பாடுவார். சிறுமி ராஜலட்சுமி பாடியது அனைவரையும் கவர்ந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கச்சேரிகளில்கூட பாடும் வாய்ப்புக் கிட்டியது. கச்சேரிகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றினார்கள். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் புகழ் பரவ ஆரம்பித்தது. குழந்தைகளின் பாட்டைக் கேட்டு பாராட்டாதவர்களே இல்லை.

ஒருமுறை நாரதர் சீனிவாசராவ் நடத்திய கண்காட்சியில் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். அப்போதுதான் சிறையிலிருந்து வெளியே வந்திருந்த தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் இவர்களின் கச்சேரியைக் கேட்க வந்திருந்தார்கள். சகோதரிகள் பாடும் திறமையைக் கண்டு அசந்து போய்விட்டார்களாம். பாகவதர், சிறுமி ராஜலட்சுமியை அழைத்து பல தீட்சிதர் கிருதிகளைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்டார். பி.யூ.சின்னப்பா தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளின்போது சிறுமி ராஜலட்சுமியை அழைத்து, அவரைப் பாடச்சொல்லி, தான் கஞ்சிரா வாசிப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.

லேனா செட்டியார் தயாரித்த ‘கிருஷ்ணபக்தி’ (1948) படத்தில் வரும் ‘கடவுளைக் கண்டேன், கண்ணன் மேல் காதல் கொண்டேன்’ என்ற பாடல்தான் ராஜலட்சுமி பாடிய முதல் சினிமா பாடல். அப்போது அவருக்கு வயது பன்னிரண்டு. அந்த வயதில் அவருக்கிருந்த ஞானமும் மனோதைரியமும் பலரைக் கவர்ந்தது. இதைத் தொடர்ந்து பல பாடல்களுக்குப் பாடும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன.

‘கொஞ்சும் சலங்கை’யில் ‘காணக் கண் கோடி வேண்டும்’, ‘படிக்காத மேதை’யில் ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா…’ ‘குங்குமம்’ படத்தில் ‘குங்குமம், மங்கள மங்கையர் குங்குமம்..’ என்று நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி தமிழ்த் திரை இசை உலகிற்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தார்.

1957_ல் ராஜலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. அப்போது சினிமா துறையில் உதவி இயக்குநராக இருந்த பாலகிருஷ்ணனைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையனின் பெயர் முரளி.

பழனியில் பங்குனி உத்திரம் தங்கத்தேர் அன்று இவர்கள் கச்சேரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ‘பழனி என்னும் ஊரிலே பழனி என்னும் பேரிலே, பவனி வந்தான் தேரிலே, பலனும் கண்டான் நேரிலே…’ என்று பாடும்போது தங்கத்தேரில் சரியாக முருகன் உலா வருவாராம். பக்தர்கள் இவர்கள் பாடலையும் முருகனையும் ஒரு சேர தரிசிப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள்.

‘முருகனுக்கொரு நாள் திருநாள்’ உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் சகோதரியோடு பாடியிருக்கிறார் ராஜலட்சுமி. ‘தேவரின் தெய்வம்’ படத்தில் ‘வருவான்டி, தருவான்டி’ பாடல்தான் ராஜலட்சுமி பாடிய கடைசி சினிமா பாடல்.

கந்தசஷ்டி கவசத்தை ராஜலட்சுமி, தன் சகோதரி ஜெயலட்சுமியுடன் பாடிப் பதிவு செய்து வெளியிடவேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், பல கிராமபோன் ரிக்கார்டு கம்பெனிகள் முதலில் மறுத்தன. ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் வீண் முயற்சி’’ என்றார்கள். ஆனால் ராஜலட்சுமி விடவில்லை. அக்கா ஜெயலட்சுமியுடன் சேர்ந்து இந்த கந்தசஷ்டி கவசத்திற்கு எப்படி டியூன் போட்டுப் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்து முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’. இப்படி நான்கு ராகத்தில் பாடல் பாடப்பட்டு 1970_ல் ரிக்கார்டு செய்யப்பட்டது. முதலில் 500 எல்.பி. ரிக்கார்டுதான் போடப்பட்டது. பிறகு, அதுவே ரிக்கார்டு விற்பனையில் மிகப் பெரிய சாதனையாக மாறிவிட்டது.

1992_ல் ஜூன் மாதம் மஞ்சள் காமாலை நோய் வந்து சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராஜலட்சுமி. சிகிச்சை பலனளிக்காமல் தனது 54 வயதில் ராஜலட்சுமி மரணம் அடைந்தார்.

மந்தைவெளியில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில்தான் இன்றைக்கும் ராஜலட்சுமியின் அக்காள் ஜெயலட்சுமியும், தங்கை சரஸ்வதியும் வாழ்கிறார்கள். ‘‘தங்கை ராஜலட்சுமி இறந்தபிறகு நான் பாடுவதையே நிறுத்திவிட்டேன். சின்ன வயசிலிருந்தே அவளுக்கு அவ்வளவு இசைஞானம். சகோதரிகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டதே இல்லை. அவள் அடிக்கடி என்னைப் பார்த்துச் சொல்லுவாள், ‘நீ இராமனாக நடந்துகொண்டு இருக்கிறே… நான் சீதையாகப் பின் தொடர்வேன்’ என்பாள். இப்போது எனக்கு முன்னால் சென்றுவிட்டாள்’’ என்றபோது குரல் கரகரத்தது. ‘‘கந்த குரு கவசம்’ ரிக்கார்டு செய்து கொண்டு இருந்தோம். இது கேசட்டில் கந்த சஷ்டி கவசத்திற்கு அடுத்த பக்கம் வருவது. இருவரும் ஒரு பத்து பன்னிரண்டு வரி பாடியிருப்போம். திடீரென்று ராஜலட்சுமிக்கு வீரஆவேசம் வந்துவிட்டது. தனியாகவே பாட ஆரம்பித்தாள். நான் பாடுவதை நிறுத்திக்கொண்டேன். இறுதியில் முடிக்கும்போது சேர்ந்தே பாடிமுடித்தோம்’’ என்று பழைய நினைவலைகளில் மூழ்கிவிட்டார் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் குழந்தை பிராப்தம் இல்லை. ராஜலட்சுமியின் மகன் முரளியைத்தான் தங்கள் மகனாக நினைக்கிறார்கள். முரளி_ வசந்தி தம்பதியருக்கு ஒரே பையன் விஷால். இன்ஜினீயரிங் படிக்கிறார்.

நாம் விடைபெறும் நேரம் ஜெயலட்சுமியிடம், ‘‘ராஜலட்சுமியுடன் சேர்ந்து பாடிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலை எங்களுக்காகப் பாடுங்களேன்’’ என்றபோது சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாடினார். பல்லவியை முடித்துவிட்டு, அனுபல்லவியில் ‘‘பழனியிலே இருக்கும் கந்தப்பழம்! உன் பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்!’’ என்கிறபோது அவர் குரல் உடைகிறது. ‘‘ராஜலட்சுமி இந்த இடத்தில் என்னமாய் பாடுவா!’’ என்று சொல்லும்போது, ஜெயலட்சுமியின் கண்களில் நீர் முட்டுகிறது. அதற்குமேல் அவரால் பாட முடியவில்லை. அவர்கள் மட்டுமே உணரக்கூடிய பாசம் அது.

Posted in Audio, Biography, Biosketch, Cinema, Faces, Jayalakshmi, Kandar, Kandha, Kavacam, Kavacham, Kavasam, Kumudam, Lady, Movies, music, people, Playback, Rajalakshmi, Refer, Reporter, Saravanan, Sashti, Series, She, Singer, Sisters, Soolamangalam, Soolamankalam, Sulamangalam, Sulamankalam, Talent, Thiruvengimalai, Women | 4 Comments »

Carbon emissions are confused with Carbon dioxide – Environment, Backgrounders

Posted by Snapjudge மேல் ஜூலை 3, 2007

உலகை மிரட்டும் வாயு!

என்.ராமதுரை

அண்மையில் அறிவியல் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் (வானொலியிலோ அல்லது தொலைக்காட்சியிலோ என்பது நினைவில்லை) கரியமிலவாயு ஒரு “”நச்சுப்புகை” என்று வருணிக்கப்பட்டது. இது ஒரு நச்சு வாயுவே அல்ல. அது நம்மைச் சுற்றிலும் இருப்பது. நமது மூச்சுக் காற்றுடன் வெளியே வருவது. நாம் சாதாரணமாக அருந்தும் சோடா போன்ற பானங்களில் அடங்கியுள்ளது. (பீர் பானத்திலும் உள்ளது) செடி கொடிகள் மரங்கள் கரியமில வாயுவை பகல் நேரங்களில் கிரகித்து தமது உணவைத் தயாரித்துக்கொள்கின்றன.

கரியமிலவாயுவுக்கு ஒரு “தம்பி’ உண்டு. அதுதான் மோசமான வில்லன். அதன் பெயர் கார்பன் மோனாக்சைட். அண்மையில் சென்னையில் காரை நிறுத்திவிட்டு கண்ணாடி ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே ஏ.சி. போட்டுக்கொண்டதன் விளைவாக காருக்குள் இருந்தவர்கள் உயிரிழந்த இரு சம்பவங்கள் நடந்தன. இந்த இரண்டிலும் உயிரைப் பறித்தது கார்பன் மோனாக்சைட் ஆகும்.

ஆனால் கரியமிலவாயு அப்படி உயிரைப் பறிக்கின்ற வாயுவே அல்ல. அதற்கு நிறம் கிடையாது. வாசனை கிடையாது. அது கண்ணுக்கே தெரியாதது. பலரும் கரியமிலவாயுவையும் புகையையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை.

கரியமிலவாயு, மீத்தேன் வாயு, ஆவி வடிவிலான நீர் ஆகியவை காற்றுமண்டலத்தில் எப்போதும் வெவ்வேறு விகிதாசாரத்தில் இருக்கின்றன. இவைதான் பூமியில் உயிரினத்தைக் காத்து வருவதாகவும் கூறலாம். பூமியில் அனைத்தும் கடும் குளிரால் உறைந்து விடாமல் இவைதான் தடுக்கின்றன. அதாவது பகல்நேரத்தில் சூரியனிலிருந்து பெறுகின்ற வெப்பத்தை, பூமி பின்னர் முற்றிலுமாக இழந்துவிடாதபடி காப்பது இந்த வாயுக்களே.

ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவுகின்ற இடங்களில் வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களே இருக்கும். அதுமட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர்கள், கூரை ஆகிய அனைத்தும் கண்ணாடியால் ஆன கட்டுமானங்களும் காணப்படும். இவற்றுக்குள் செடிகொடிகளை வளர்ப்பர். பகல் நேரங்களில், செடிகளுக்கு கண்ணாடிகள் வழியே சூரிய ஒளிக்கதிர் கிடைக்கும். ஆனால் இரவு நேரங்களில் வெளியே உள்ள குளிர், செடிகளைப் பாதிக்காதபடி கண்ணாடிப் பலகைகள் தடுத்துவிடும். இதன் மூலம் கண்ணாடி கூடாரத்துக்குள் செடிகளுக்கு இதமான வெப்பம் தொடர்ந்து இருக்கும். அதாவது பகலில் சூரிய ஒளிக்கதிர் மூலம் கிடைத்த வெப்பம், வெளியே போய்விடாதபடி கண்ணாடி தடுக்கிறது. இவ்வித கண்ணாடிக் கட்டடத்துக்கு பசுமைக்குடில் என்று பெயர். இக் கட்டடத்தில் ஏற்படுகின்ற விளைவுக்கு பசுமைக் குடில் விளைவு என்று பெயர்.

பூமியைப் போர்த்தியுள்ள காற்று மண்டலத்தில் அடங்கிய கரியமிலவாயு, மீத்தேன், ஆவி வடிவிலான நீர் போன்றவை கிட்டத்தட்ட கண்ணாடி போல செயல்பட்டு பூமி, தான் பெறுகின்ற வெப்பத்தை இழந்துவிடாதபடி தடுக்கின்றன. ஆகவே இந்த வாயுக்களுக்குப் பசுமைக் குடில் வாயுக்கள் என்று பொதுவான பெயர் உண்டு.

காற்றுமண்டலத்தில் சேரும் கரியமிலவாயு அளவு அதிகரித்துக்கொண்டே போனால் பூமியில் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகுமே என்று கேட்கலாம். ஆனால் காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருகின்ற அதே நேரத்தில் அந்த வாயு காற்றுமண்டலத்திலிருந்து தொடர்ந்து அகற்றப்பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள செடி, கொடி, மரம் அனைத்தும் பகல் நேரத்தில் இந்த வேலையைச் செய்கின்றன. கடலில் மிதந்தபடி வாழும் பிளாங்கட்டான் என்ற நுண்ணுயிரிகளும் இதைச் செய்கின்றன. காற்று இயக்கம் காரணமாகவும் கடலில் கரியமிலவாயு கரைகிறது. இதை கார்பன் சுழற்சி என்று சொல்வர். கடந்த பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றுமண்டலத்தில் கரியமிலவாயு சேருவதிலும் அகற்றப்படுவதிலும் ஒருவித சமநிலை காணப்பட்டு வந்துள்ளது.

ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தோன்றிய தொழிற்புரட்சியைத் தொடர்ந்து -மனிதனின் செயல்களால் காற்றுமண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக, நிலக்கரியைப் பயன்படுத்துகிற அனல் மின்நிலையங்கள், எரிவாயுவைப் பயன்படுத்தும் ஆலைகள், பெட்ரோல், டீசல் போன்றவற்றைப் பயன்படுத்தும் எண்ணற்ற வாகனங்கள் போன்றவற்றின் மூலம் கரியமிலவாயு பேரளவில் காற்று மண்டலத்தில் சேர்ந்து வருகிறது. இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை உயரலாயிற்று. இப்படி சராசரி வெப்பநிலை உயர்ந்து கொண்டே போனால் உலகில் விபரீதங்கள் ஏற்படும். தென், வட துருவங்களில் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்களும் இமயமலை போன்ற உயர்ந்த மலைகள் மீதுள்ள உறைந்த பனிக்கட்டிகளும் உருக ஆரம்பிக்கும். கடலில் நீர் மட்டம் உயரும். உலகில் பல இடங்களில் கடல் ஓரமாக அமைந்த நகரங்கள் கடலில் மூழ்க ஆரம்பிக்கும். பருவநிலை மாறும். புயல்கள் அதிகரிக்கும். கோதுமை விளைந்த இடங்களில் நெல் சாகுபடி செய்கிற நிலைமை ஏற்படும். சில பகுதிகள் பாலைவனமாகிவிடும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இயற்கையால் இயல்பாக ஜீரணிக்க முடியாத அளவில் கரியமிலவாயு சேர்மானம் அதிகரித்துக்கொண்டே போகிறது. கரியமிலவாயு சேர்மான அதிகரிப்பு குறிப்பாக 1950-களிலிருந்து நன்கு காணப்படுகிறது. இப் பிரச்னை குறித்து உலக நாடுகள் கவலை அடைந்து அவ்வப்போது உலக அளவிலான மாநாடுகளை நடத்தி விவாதித்தன. கடைசியாக ஜப்பானில் கியோட்டோ என்னுமிடத்தில் 1997-ல் ஐ.நா. சார்பில் நடந்த மாநாட்டில் உடன்பாடு ஏற்பட்டது.

கரியமிலவாயு உள்பட பசுமைக் குடில் வாயுக்கள் காற்றுமண்டலத்தில் மேலும் மேலும் சேருவதைக் கட்டுப்படுத்தி 1990 வாக்கில் இருந்த நிலையை எட்ட வேண்டும் என்பது மாநாட்டின் முக்கிய முடிவாகும். இதுவரை 160க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டின் முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளன. முதலில் இதை ஏற்பதாகக் கூறிய அமெரிக்கா, பின்னர் 2001-ல் பல்டி அடித்தது. இந்த உடன்பாட்டை ஏற்பதனால் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் என்பதால் இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தது. அத்துடன் நில்லாமல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் வயல்களிலிருந்தும் அத்துடன் கால்நடைகளின் வயிற்றிலிருந்தும் நிறைய மீத்தேன் வாயு காற்றில் கலப்பதாக குதர்க்கம் பேச முற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டுதோறும் காற்றுமண்டலத்தில் கூடுதலாகச் சேரும் கரியமிலவாயுவில் 21 சதவிகிதம் அமெரிக்காவினால் தோற்றுவிக்கப்படுவதாகும்.

எனினும் அண்மைக் காலமாக அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலகம் தழுவிய அளவில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்).

Posted in AC, beer, Carbon, Carbon di oxide, Carbon dioxide, CO, CO2, Colorless, emissions, Environment, Gas, Methane, O3, Odorless, Oxygen, Ozone, Poison, Pollution, Protection, Radiation, Soda, Vapor, Water | Leave a Comment »