Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion
Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771
எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?
இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.
1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?
2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?
3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?
நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.
மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.
இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.
நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.
தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.
சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.
மறுமொழியொன்றை இடுங்கள்