Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 17th, 2007

Space-station computer failure in Atlantis: NASA, Astronauts, International Space Station

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

“அட்லாண்டிஸ்’ ஓடம்: பிரச்னை என்ன?

என். ராமதுரை

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் (ஷட்டில்) வெளிப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு பிரச்னை கவலைப்படக்கூடிய ஒன்று அல்ல என்று அமெரிக்க “நாஸô’ விண்வெளி அமைப்பின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் 2003-ல் கொலம்பியா விண்வெளி ஓடம் பூமிக்குத் திரும்புகையில் தீப்பற்றி வெடித்ததில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர் என்பதால் அட்லாண்டிஸில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னை இயல்பாகக் கவலையை உண்டாக்குவதாக உள்ளது.

அட்லாண்டிஸில் ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன என்பதை ஆராயும் முன்னர் விண்வெளிப் பயணத்தில் உள்ளடங்கிய சில பிரச்னைகளைக் கவனிப்பது உசிதம்.

பார்வைக்கு விண்வெளி ஓடம் விமானம் போலவே இருக்கிறது. விமானத்துக்கும் விண்வெளி ஓடத்துக்கும் உள்ள ஒற்றுமை அத்தோடு சரி. மற்றபடி விமானம் வேறு. விண்வெளி ஓடம் வேறு. பொதுவில் விமானங்கள் சுமார் 13 கி.மீ. உயரத்துக்கு மேல் செல்வதில்லை. விண்வெளி ஓடங்கள் சுமார் 300 முதல் 400 கி.மீ. உயரம் செல்பவை. விமானங்களுக்கு காற்று மண்டலம் நண்பன். விண்வெளி ஓடத்துக்கு காற்று மண்டலம் எதிரி.

எந்த வகை விமானமாக இருந்தாலும் சரி, அது காற்று மண்டலத்துக்குள்ளாகத் தான் இயங்க முடியும். ஆனால் விண்வெளி ஓடமானது காற்று இல்லாத இடத்தில் – பூமியிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் உயரத்தில் இயங்குவது. விண்வெளி ஓடம் என்பது ஒரு வகையில் செயற்கைக்கோள் போன்றதே.

ஆளில்லாத இதர செயற்கைக்கோள்களுக்கும் விண்வெளி ஓடத்துக்கும் இடையே முக்கிய வித்தியாசம் உண்டு. செயற்கைக்கோள்களின் ஆயுள்காலம் – சுமார் 7 ஆண்டுகள்தான். அது முடிந்ததும் சில காலம் விண்வெளியில் இருக்கும். பின்னர் மெதுவாக அவை பூமியை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். பிறகு ஒரு கட்டத்தில் அவை வேகமாக இறங்கும். அக் கட்டத்தில் அவை காற்று மண்டலத்தில் நுழையும்.

காற்று மண்டலம் வழியே அதி வேகத்தில் – மணிக்கு சுமார் 27 ஆயிரம் கி.மீ. வேகத்தில் கீழ் நோக்கிப் பாயும் போது காற்று மண்டல உராய்வு காரணமாக மிகுந்த அளவுக்கு சூடேறித் தீப்பற்றி எரியும். சில சிறிய செயற்கைக்கோள்கள் முற்றிலுமாக எரிந்து இறுதியில் பொடியாகிக் கீழே நிலப்பகுதியில் அல்லது கடலில் விழும்.

விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்து விழுகின்ற எந்தப் பொருளும் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றும். நீங்கள் இரவு வானைக் கவனித்தால் ஏதோ நட்சத்திரம் விழுவதுபோல ஒளிக்கீற்று தென்படும். அனேகமாக அது மிளகு அல்லது சுண்டைக்காய் அளவில் இருக்கிற சிறிய கல்லாக இருக்கலாம். விண்வெளியிலிருந்து இவ்விதம் நிறைய கற்களும் அபூர்வமாகப் பெரிய கற்களும் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.

செயலிழந்த செயற்கைக்கோள்கள் காற்று மண்டலத்தில் நுழையும்போது தீப்பற்றி அழிவதில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு உயரே செல்கின்ற விண்வெளி ஓடம் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியாக வேண்டும்.

ஆகவே அது பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலத்தில் நுழைந்ததும் தீப்பிடித்து அழிந்துவிடாமல் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் தகுந்த வெப்பத் தடுப்பு ஏற்பாடுகள் உள்ளன.

விண்வெளி ஓடம் பூமியை நோக்கி வேகமாக இறங்கும்போது அதன் வெளிப்புறத்தில் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறான அளவில் சூடாகின்றன. அதன் முகப்புப் பகுதி, இறக்கைகளின் முன்புறப் பகுதிகள் ஆகியவை சுமார் 2900 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடேறும்.

அக் கட்டத்தில் விண்வெளி ஓடம் தீப் பிழம்பாகக் காட்சி அளிக்கும். விண்வெளி ஓடம் உயரே சென்றுவிட்டு பூமிக்குத் திரும்புகிற ஒவ்வொரு தடவையும் அது தீக்குளிப்பதாகக் கூறலாம்.

இவ்வளவு வெப்பத்திலும் உருகி விடாமல் அதே நேரத்தில் அந்த வெப்பம் உள்ளே சென்று தாக்காத வகையில் தடுக்க விண்வெளி ஓடத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அதிக வெப்பம் தாக்கும் பகுதிகளில் ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஓடுகள் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை தடிமன் கொண்டவை. இவை பயங்கரமாக சூடேறினாலும் அழிந்துவிடாதவை. வெப்பத்தை நன்கு தாங்கி நிற்கக்கூடியவை.

விண்வெளி ஓடத்தின் வெளிப்புறத்தில் மொத்தம் சுமார் 32 ஆயிரம் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி நம்பர் கொண்டவை. விண்வெளி ஓடம் ஒரு தடவை உயரே சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதும் சில ஓடுகள் இழக்கப்பட்டிருக்கும். வெப்பம் அதிகம் தாக்காத பகுதிகளில் சிறு துண்டுகள் வடிவிலான கனத்த போர்வைகள் விசேஷ பிசின் கொண்டு ஒட்டப்படுகின்றன. விசேஷ பொருள்களால் ஆன இந்தப் போர்வைகளும் வெப்பம் உள்ளே செல்லாதபடி தடுக்கக்கூடியவை.

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் இப்போது ஏற்பட்ட பிரச்னை இதுதான். அந்த விண்வெளி ஓடத்தின் பின்பகுதியில் சுமார் 1000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தாக்கக்கூடிய பகுதி ஒன்றில் பதிக்கப்பட்ட ஒரு போர்வையின் ஓரம் தனியே பிரிந்து புடைத்துக்கொண்டு நின்றது. அதாவது 10 சென்டிமீட்டர் கொண்ட போர்வைப் பகுதி இவ்விதம் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது.

விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை விண்வெளி ஓடத்திலிருந்து வெளியே வந்து அந்தரத்தில் மிதந்தபடி செயல்பட்டு அப் போர்வையின் ஓரப் பகுதியை விண்வெளி ஓடத்தின் வெளிப்புறம் மீது மீண்டும் ஒட்டினர். இதன் மூலம் உள்ளே வெப்பம் தாக்கும் வாய்ப்பு தடுக்கப்பட்டு விட்டதாகக் கூறலாம்.

டிஸ்கவரி விண்வெளி ஓடம் 2005லும் 2006லும் பூமிக்குத் திரும்பியபோது இவ்விதம் வெப்பக் காப்பு போர்வையின் சிறு பகுதிகள் சரியாக ஒட்டிக் கொள்ளாத நிலையில் பூமிக்கு வந்து சேர்ந்தது.

செயற்கைக்கோள்களை உயரே எடுத்துச் சென்று செலுத்தவும். பழுதுபட்ட செயற்கைக்கோள்களைக் கைப்பற்றி கீழே கொண்டு வரவும் மற்றும் விண்வெளியில் சில ஆய்வுகளை நடத்தவும் விண்வெளி ஓடங்களை அமெரிக்கா உருவாக்கியது.

எனினும் இப்போது விண்வெளியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான பொருள்களையும் விண்வெளி வீரர்களையும் கொண்டு செல்ல கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1981-ல் தொடங்கி அமெரிக்க விண்வெளி ஓடங்கள் 100-க்கும் மேற்பட்ட தடவை உயரே சென்று பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளன. அபூர்வமாகவே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in Atlantis, Computer, ISS, Reference, Science, space, Technology | Leave a Comment »

33% Reservation for women in Indian Parliament – Double Standards

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

ஊருக்கு உபதேசம்

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக ராஜஸ்தான் ஆளுநர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் தேர்ந்து எடுக்கப்பட்டிருப்பதை வரவேற்காமல் இருக்க முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகையைத் திறமையும் அனுபவமும் மிக்க ஒரு பெண்மணி அலங்கரிப்பது நமக்குப் பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிரதிபா பாட்டீலின் தேர்வைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களும், இடதுசாரி தலைவர்களும் மீண்டும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்படவேண்டும் என்கிற கோஷத்தில் எந்த அளவுக்கு இந்த அரசியல் கட்சிகளுக்கு உண்மையான ஈடுபாடு இருக்கிறது என்பது சந்தேகத்துக்குரிய விஷயம்.

மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்குவதால், மொத்த இடங்களில் கட்டாயமாக மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருப்பது உறுதி செய்யப்படும் என்பது மகளிர் இடஒதுக்கீடு ஆதரவாளர்களின் வாதம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அப்படியொரு சட்டம் இல்லாத நிலையில், பெண்களால் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் வெற்றி பெற முடியாமல் போகும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு. ஆண் அரசியல்வாதிகளைப்போல, தங்களுக்கு பணபலமும், அடியாள் பலமும் இல்லை என்கிற அவர்களது வாதத்திலும் நியாயம் இருக்கிறது.

கடந்த அறுபது ஆண்டு இந்திய வரலாற்றில், இந்தக் குறைபாடுகளையெல்லாம் மீறி பெண்கள் பிரதமர் பதவியிலிருந்து அரசின் எல்லாப் பொறுப்புகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மை. அத்தனை ஆண்களுக்கு மத்தியிலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பல வெற்றிகளைச் சாதிக்க முடிந்தது என்பதையும், தமிழகத்தில் ஜெயலலிதா, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா, தில்லியில் ஷீலா தீட்சித் என இந்தப் பெண் அரசியல்வாதிகள் தங்களுக்கென அரசியலில் ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு சில தொகுதிகளை “பெண்கள் போட்டியிடும் தொகுதி’ என்று ஒதுக்கி வைப்பது, அவர்களை இன்னமும் சரிசமமாகப் பார்க்க விரும்பாத ஆணாதிக்கம்தான் என்று ஏன் கருதக்கூடாது?. பெண்களுக்கு உண்மையிலேயே அதிக அளவு பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று கட்சித் தலைமைகள் விழைந்தால், இன்றைய பொதுத் தொகுதிகளில் தகுதியும் திறமையும் உள்ள பெண் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய முடியும். அதைச் செய்வதை விட்டுவிட்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது.

மகளிர் இடஒதுக்கீடு பற்றிப் பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள், அவரவர் கட்சியின் தேர்தல் நேர வேட்பாளர் பட்டியலில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்களா என்றால் – இல்லை. தங்களது இரட்டை வேடம் தெரியாமல் இருப்பதற்காக, சில முக்கியமான, ஆனால் அதிகாரம் இல்லாத பதவியில் ஓரிரு பெண்களை அமர்த்துவதும், விரைவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறும் என்று கூறுவதும் வழக்கமாகி விட்டது.

முதலில் இவர்கள் பங்குக்கு அவரவர் கட்சி வேட்பாளர் பட்டியல், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, ஆட்சியில் இருந்தால் அமைச்சரவை என்று எல்லாப் பொறுப்புகளுக்கும் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கைக் கொடுத்துவிட்டு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை சட்டமாக்குவது பற்றிப் பேசட்டும்.

Posted in parliament, Party, Reservation, Women | Leave a Comment »

‘Rasavathy’ Book review – Na Kavitha (Thozhi.com)

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

 

புத்தக அறிமுகம்: பௌலோ கொய்லோவின் ரஸவாதி

– ந. கவிதா

பஞ்சதந்திரக் கதைகள், சிந்துபாத், கன்னித்தீவு என்று நமது குழந்தைமையின் கதைச் சூழலையும் கற்பனையையும் வளப்படுத்திய கதைகள், இன்று புதிய பரிமாணத்தில் தத்துவம் சார்ந்தும் அறம் சார்ந்தும் அணுகும் விதம் கதை சார்ந்த தேடலை இன்னும் அதிகப்படுத்தலாம்.

ரஸவாதியும் அத்தகைய பல பரிமாணங்களைத் தரும் கதைதான். ஸ்பெயின் நாட்டுக் கதை இது. ஆங்கிலத்தில் ‘The Alchemist’ என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்நாவல் நாற்பத்தி இரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்புடையது. உலகில் அதிகம் விற்பனை ஆன நாவல்களின் வரிசையில் நான்காம் இடத்தைப் பிடித்தது இந்தப் புத்தகம்.

1987ஆம் ஆண்டு இந்நாவல் வெளியானபோது, கவனம் பெறவில்லை. பதிப்பகத்தார் இந்தப் புத்தகத்தை வாபஸ் பெற்றுவிடலாமென்று நினைக்குமளவிற்கு இருந்த விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, 18 நாடுகளில் அதிகம் விற்பனையான நாவல்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

ஆடு மேய்க்கும் சிறுவன் சந்தியாகு இயற்கையின் மீது அதீதக் காதல் கொண்டவன். அதே அளவிலான காதல் பயணம் செய்வதிலும் உண்டு. ஆடுகள் தான் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் கூடியவை என்று நம்பும் இந்தச் சிறுவன், தான் வாசிக்கும் புத்தகங்களில் பிடித்த வரிகளை ஆடுகளுக்கும் வாசித்துக் காட்டுவான்.

ஒரு புதையலைப் பற்றி இரு முறை கனவு கண்ட சந்தியாகுவுக்கு அந்தக் கனவின் பலனை ஒரு நாடோடிப் பாட்டி சொல்கிறாள். அதற்குக் கைமாறாக, கிடைக்கவிருக்கும் புதையலில் தனக்கும் ஒரு பங்கைக் கேட்கிறாள்.

சந்தியாகு அதற்குச் சம்மதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்கிறான். வழியில் கிழட்டு ராஜா ஒருவரைச் சந்திக்கிறான். அவரும் புதையலைத் தேடிச் செல்லும் ஆர்வத்தை அவனுக்கு ஏற்படுத்தி எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிப் பயணப்படச் செய்கிறார். இரண்டு சகுனக் கற்களையும் சிறுவனுக்குப் பரிசளிக்கிறார். அதற்கு ஈடாக ஆறு ஆடுகளைப் பெற்றுக்கொள்கிறார். “உண்மையில் நீ ஒன்றை விரும்பினால், இந்தப் பிரபஞ்சமே உனக்கு அதைத் தரும்” என்கிறார் அந்தக் கிழட்டு ராஜா.

எகிப்தியப் பிரமிடுகளை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆட்டு மந்தைகளை விற்கிறான் சந்தியாகு. அந்தப் பணத்தையும் ஏமாந்து இழக்கிறான். ஒரு வேளை உணவிற்காக, பளிங்குக் கடைக்காரர் ஒருவரிடம் உதவியாளாய்ச் சேரும் சந்தியாகு, அவரது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறான். ஓராண்டு பணிசெய்த பின் தன் ஆட்டு மந்தையைத் திரும்ப வாங்குமளவிற்கும் ஊருக்குத் திரும்புமளவிற்கும் அவனிடம் பணம் சேர்கிறது.

சந்தியாகுவுக்குள் பழைய தேடல் மீண்டும் உருப்பெற, பாலைவனப் பயணத்தைத் தொடங்குகிறான். வழியில் ஆங்கிலேயர் ஒருவரைச் சந்திக்கிறான். அவர் ரஸவாதம் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு ரஸவாதியைத் தேடிச் சென்றுகொண்டிருக்கிறார். அவரும் சந்தியாகுவும் நண்பர்களாகிறார்கள்.

பாலைவனப் பயணத்தில் சந்தியாகு, பாத்திமாவைச் சந்திக்கிறான். காற்று தன்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெண்ணின் வாசம் அவளுடையதுதான் என உணர்கிறான் அவன். அவளிடம் காதல் கொள்கிறான். சந்தியாகு பாலைவனச் சோலையில் வாழும் பழங்குடி மக்கள் தலைவனுக்குப் போர் பற்றிய சகுனத்தைச் சொன்னதால் நன்மை விளைகிறது. தலைவன் பரிசும் பதவியும் கொடுத்துக் கௌரவிக்க, அங்கேயே பாத்திமாவுடன் வாழ்ந்துவிடத் தீர்மானிக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் ரஸவாதியைச் சந்திக்கிறான். ரஸவாதி, “உனது இலட்சியம் எகிப்துப் பிரமிடுகளில் இருக்கிறது” என்று இலக்கை நோக்கி அவனைச் செலுத்துகிறார்.

“உன் இதயம் சொல்வதைக் கவனி. அதற்கு எல்லாம் தெரியும். உன் இதயம் எங்கேயிருக்கிறதோ அங்கே உனக்கான புதையலும் இருக்கிறது” என்று ரஸவாதி சொல்ல, சந்தியாகு பிரமிடை அடைகிறான். சந்தியாகு தேடி வந்த புதையல் தொடக்கத்தில் அவன் இருந்த பாழடைந்த தேவாலாயத்தில் இருந்தது. அப்பொழுது அவன் கையில் மண்வெட்டி இருந்தது என்று நாவல் முடிவடைகிறது.

அவனது லட்சியப் புதையல் எகிப்துப் பிரமிடுகளில் இருந்ததா இல்லையா என்பதைவிட, அதற்கென அவன் தீர்மானித்த பயணம், அந்தப் பயணம் அவனுக்குத் தந்த அனுபவப் பாடங்கள், பிரபஞ்சம் கற்றுத் தந்த ஆன்மாவின் மொழி, இவையெல்லாம் இக்கதையில் முக்கியமானவை. சகுனங்களின் மீதுள்ள நம்பிக்கை, விதியின் தீர்மானம், இவற்றை மையச்சரடாகக் கொண்டு அமைந்த இந்த நாவல், தத்துவம் சார்ந்த பல பரிமாணங்களை வாசக மனத்திற்குத் தருகிறது.

உண்மையில் ஒன்றை விரும்பும்போது பிரபஞ்சமே அதைத் தரும் என்ற ரஸவாதியின் வார்த்தைகளை, நாம் அதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சியில், இடைவிடாத் தேடலில் கிடைக்கும் வெற்றியாகப் புரிந்துகொள்ளத் தோன்றுகிறது. இயற்கையைப் புரிந்துகொண்டால் உலகின் மொழியை, பிரபஞ்சத்தின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள முடியும் என்ற வரிகளைத் தத்துவம் சார்ந்தவையாக மட்டுமின்றி யதார்த்தம் சார்ந்தும் அறிவியல் சார்ந்தும்
பொருள்கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது.

வாழ்வின் பாதையில் மிகச் சரியாகப் பயணப்பட வேண்டுமென்றால், இதயம் சொல்வதைக் கவனமாகக் கேள் என்ற இந்நாவலின் கருத்து, சகுனங்களின் மீது நம்பிக்கையற்றவர்கள், சகுணங்களைத் தமது உள்ளுணர்வுகளாகப் புரிந்துகொள்வதற்கான தளத்தைத் திறந்துவைக்கிறது.

மிக அழகிய மொழி நடையில் அமைந்த ரஸவாதி, இயற்கையை அழகியலோடும் தத்துவத்தோடும் இணைத்துக் காட்டுகிறது. தமிழில் மொழிபெயர்த்த பொன். சின்னத்தம்பி முருகேசனின் பணி சிறப்பானது.

கனவுகளையும் அவை தரும் பயணங்களையும் எப்பொழுதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும் கூறுகள் என்னும் ரஸவாதி, கனவாக இருந்தாலும் அதற்கான தேடலையும் நம்பிக்கை இழையோடும் சந்தியாகுவின் அன்பைச் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. விதியின் வழி தீர்மானிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கைப் பயணத்தில், மனித அற்புதங்களை விட இயற்கையின் அற்புதத்தையும் எதிர்காலம் ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது ரஸவாதி.

ரஸவாதி
– பௌலோ கொய்லோ
ஆங்கிலம் வழித் தமிழில்:
பொன். சின்னத்தம்பி முருகேசன்
விலை: ரூ. 80.
வெளியீடு: காலச்சுவடு, நாகர்கோவில்.

Posted in Coelho, Kaalchuvadu, Kalchuvadu, Literature, Paulo, Paulo Coelho, Rasavaathi, Rasavaathy, Rasavathi, Rasavathy, Tamil, The Alchemist, Translation | 3 Comments »

‘Oruthi’ Movie Review: Thozhi.com – Ilamathy

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

அம்ஷன் குமாரின் ஒருத்தி படம் ஓர் இலக்கியப் படைப்பின் நேர்த்தியான திரை வடிவமாகியிருக்கிறது

– இளமதி்

02-06-2007 அன்று மாலை சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் அம்ஷன் குமாரின் ஒருத்தி படம் திரையிடப்பட்டது. 2003ஆம் ஆண்டே வெளிவந்த படமாக இருந்தாலும் திரைப்பட விழாக்கள் தவிர்த்து மிகச் சில இடங்களிலேயே இப்படம் திரையிடப்பட்டது. அம்ஷன் குமார் சிறந்த திரைப்படத்திற்கான புதுவை அரசு விருதை ஒருத்திக்காகப் பெற்றிருக்கிறார். இந்தப் படம் நியூஜெர்ஸி சிந்தனை வட்டத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.

கி. ராஜநாராயணனின் ‘கிடை’ குறுநாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம். ஓர் இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்குவது, திரைக்கதைக்கு ஏற்றவாறு அந்தப் படைப்பில் மாற்றங்கள் செய்து திரை ரசனையை மேம்படுத்துவது என்ற இரண்டு விதங்களில் ஒருத்தி இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

பெண்மீதான பாலின அடிப்படையிலான ஒடுக்குதலையும் அவள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் என்ற ரீதியில் அவள்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் ஒருசேர இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.

விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் கரிசல் கிராமம் ஒன்றில் நடைபெறுவதாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆட்டுக் கிடையைப் பராமரிக்கும் பணியாள் சிவனி, தான் வாழும் ஊரின் மீதும் வளர்க்கும் ஆடுகளின் மீதும் கரிசல் மண்ணின் மீதும் அளவில்லாத காதலும் பரிவும் கொண்டவள். சிவனிக்கும் உயர்சாதி இளைஞன் எல்லப்பனுக்கும் காதல் ஏற்பட, தினசரி மந்தை மேய்ப்பில் இவர்களது சந்திப்பும் ஓர் அங்கம் ஆகிறது.

சாதி வேறுபாட்டால் இவர்களின் காதல் திருமணத்தில் முடியப்போவதில்லை என்று சொல்லும் தோழிகளிடம் சிவனி, “எல்லப்ப சாமி சாதியில ரெண்டு பொஞ்சாதி கட்டிக்குவாகளாம். அவுக சாதியில ஒன்னைக் கட்டிக்கிட்டு என்னையும் கட்டிக்குவாகளாம்” என்று வெகுளித்தனமாக பதில் சொல்கிறாள்.

அடுத்தவர் விளைச்சலை மேய்ந்து கெடுத்த அவளது ஆடுகள், இவர்களது காதலை ஊராரிடம் காட்டிக்கொடுக்கின்றன. எல்லப்பன் கிடைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறான்.

இதற்கிடையே, வரி வசூலிக்க வந்த வெள்ளைக்கார துரைக்கு ஜமீன்தாரரின் ஏமாற்றுத்தனத்தையும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சிவனி புரியவைக்கிறாள். துரையும் ஜமீன்தாரின் தலையீட்டை ஒழித்து அரசிடம் நியாயமான வரியைச் செலுத்த ஏற்பாடு செய்கிறார்.

நன்மை செய்த சிவனிக்கு ஊரார் ஏதேனும் கைம்மாறு செய்ய நினைத்து ஒரு கிடை ஆடுகளைத் தரத் தீர்மானிக்கிறார்கள். ஜமீன்தாரின் தண்டனைக்கு ஆளாகும் சிவனி, தன் காதலை நிறைவேற்றிவைக்கக் கேட்கிறாள். சாதி அவர்களைத் தடுக்க, ஊரார் எல்லப்பனையும் சிவனியையும் ஊரைவிட்டு எங்காவது போய்த் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள்.

தான் நேசித்த மண்ணையும் உயிராக வளர்த்த ஆடுகளையும் தனது சனங்களையும் விட்டுப் போக மறுக்கிறாள் சிவனி. எல்லப்பன் இரண்டு மனைவியரோடு வலம் வருகிறான்.

வெள்ளைக்கார துரை விட்டுச் சென்ற எழுதும் இறகைக் கையில் ஏந்தித் தன்னம்பிக்கையோடு நம்மைப் பார்க்கிறாள் சிவனி. அவள் தன்னம்பிக்கையையும் எழுத்தறிவின் பலத்தையும் பெறப்போவதைச் சொல்லும் கருவியாக அந்த இறகு உதவுகிறது.

கி.ரா.வின் ‘கிடை’யில் வரும் சிவனிக்குப் பேய் பிடித்துவிடும். அம்ஷன் குமாரின் சிவனி, கல்வியோடு நம்பிக்கையைப் பெற யத்தனிக்கிறாள். பெண்ணாக இருப்பதால் எதிர்கொள்ளும் ஆதிக்கச் சவால்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவள் என்பதால் கூடுதலாகின்றன. ஆதிக்க மனோபாவத்தை மீறித் தன் மண்ணையும் ஆடுகளையும் உயிராகப் பாவிக்கும் சிவனியின் நம்பிக்கையும் இயற்கையின் மீது கொண்ட காதலும் ஒருத்திக்கு பலமாக இருப்பதை உணர முடிகிறது. சாதியப் பிரச்சினைகளைப் பேசினாலும் கதை முழுதும் ஒரு பெண்ணின் உணர்வுகள் சார்ந்ததாக இருப்பதைப் பார்க்கலாம்.

கதை நகரும் சூழலும் அந்தச் சூழலின் மனிதர்களும் அவர்களது மொழியும் கரிசல் காட்டுக் கதையொன்றை அப்படியே திரைக்கதைக்குள் வர முடியும் என்பதை அம்ஷன் குமார் காட்டியிருக்கிறார்.

Posted in Alternate, Amshan kumar, Amshankumar, Arts, Awards, Cinema, Films, Ilamathi, Ilamathy, Ki Rajanarayan, Ki Rajanarayanan, Kidai, KiRa, KiRaa, Movies, National, New Jersey, Newjersey, NJ, Oruthi, Oruthy, Reviews, Thozhi.com | 4 Comments »

Bringing caste into equation for the Visually Challenged: Government’s Discrimination with Reservations for the Blind

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

அரசின் “பார்வை’ சரியா?

சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.

கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.

“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’

இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.

பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.

“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.

இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.

இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது என்னங்க நியாயம்?

தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.

அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.

மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.

தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.

1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.

“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.

இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?

Posted in AA, Action, Affirmative, Applicant, Aryan, Autism, BC, Blind, Braille, Caste, Challenged, Colleges, Community, Denial, Development, Disabled, Discrimination, Disease, Disorder, disturbed, Dravidian, Education, EEO, Employment, Equal, Eyes, FC, Forward, Govt, Handicapped, Health, Ill, Jobs, MBC, Mental, Merit, NGO, OBC, OC, Opportunity, PCO, prejudice, psychological, Qualification, Race, Reservation, SC, Schizophrenia, Schools, service, sightless, Society, ST, Students, Study, Treatment, University, Vision, Volunteer | Leave a Comment »