Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 15th, 2007

Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan – Padmasri Ambujammal

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள்
திருவேங்கிமலை சரவணன்

இந்த வாரம் நாம் சந்திக்கப் போகும் மறக்க முடியாத மங்கை ‘பத்மஸ்ரீ’ அம்புஜம்மாள். எல்லோரும் அவரை அம்புஜம்மாள் என்றழைத்தாலும் மகாத்மா காந்திஜி மட்டும் ‘அம்புஜம்’ என்று அன்பாய் அழைப்பார்.

காந்திஜியின் அன்புக்கே பாத்திரமாய் இருந்த அம்புஜம்-மாளுக்கு இளமைப் பருவத்தில் அத்தனை அன்பு கிடைக்கவில்லை. பிறந்ததுமே உற்றார், உறவினர்களால் தூற்றப்பட்ட பெண்தான் அம்புஜம்மாள். காரணம் பெண்ணாகப் பிறந்தது.

1899_ம் வருடம், சென்னை சீனிவாச அய்யங்கார், ரங்கநாயகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் அம்புஜம்மாள், மூன்றாவது பெண் குழந்தையாக. இதில் குடும்பத்தாருக்கு வெறுப்பு. மூன்றும் பெண் குழந்தையாகிவிட்டதே. அதிகம் வளர்ச்சியுறாத காலகட்டம் அது என்றாலும், அம்புஜம்மாள் பிறந்தது சாதாரண குடும்பமல்ல. தாய்வழி தாத்தா சர்.வி.பாஷ்யம் அய்யங்கார் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். சென்னையில் முதல் பெண்களுக்கான பள்ளியை நிறுவியவர். இன்று அந்தப் பள்ளி லேடி சிவஸ்வாமி ஐயர் உயர்நிலைப் பள்ளி என்ற பெயரில் புகழ் பெற்று விளங்குகிறது. அதேபோல், திருவல்லிக்கேணியில் உள்ள மகப்பேறு அவரது முயற்சியில் உருவானதுதான்.

தாத்தா அப்படியென்றால், தந்தை சீனிவாச அய்யங்காரும் லேசுப்பட்டவர் அல்ல. புகழ் பெற்ற வழக்கறிஞர். சென்னை மாநில அட்வகேட் ஜெனரலாகப் பணி புரிந்தவர். இத்தனை பாரம்பர்யம், பின்னணி இருந்தும் இளமையில் அம்புஜம்மாளுக்குப் பிரச்னை. அவர் பிறந்த சில மாதங்களிலேயே அவருக்கு தோல்வியாதி வந்து பார்க்கவே படுபயங்கரமாகி விட்டார். மற்ற குழந்தைகளைப் பாசத்துடன் கொஞ்சுபவர்கள்கூட குழந்தை அம்புஜம்மாளை நெருங்கத் தயங்கினார்கள். இதற்கிடையே, அம்புஜம்மாளின் அக்கா இறந்துவிட அதற்கும் அம்புஜம்மாள்தான் காரணமாக சொல்லப்பட்டார்! ‘பிறந்த ராசி அக்காவை சாப்பிட்டுட்டா’ என்று ஒதுக்கினார்கள்.

சென்னை வெயில் ஒத்துக்கொள்ளாததால்தான் தோல் வியாதி என்று கண்டறிந்து அம்புஜம்மாளை பெங்களூரில் உள்ள உறவினர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அங்குதான் அம்புஜம்மாள் வளர்ந்தார். தோல் நோய் குணமாகியதும் சென்னை கூட்டி வரப்பட்டார். இதற்கிடையே, ரங்கநாயகிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம். அம்புஜம்மாளுக்கும் தம்பி வந்ததில் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. குடும்பத்தின் ஆண் குழந்தையை எல்லோரும் கொண்டாட மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் அம்புஜம்மாள்.

தம்பி பார்த்தசாரதிக்கு ஏழு வயதாகும்போது, அவனை பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால், மூத்தவள் அம்புஜம்மாளை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். அது அவரை மிகவும் பாதித்து விட்டது. படித்தவர்கள், உயர் வகுப்பினர் என்று சொல்லப்பட்டவர்கள்_ ஆனால் அவர்கள் குடும்பத்திலும் ஆண் பெண் பேதமிருந்தது. மகனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய குடும்பத்தினர் மகளின் பிறந்தநாளை மறந்து விடுவார்கள்.

ஆனாலும் அம்புஜம்மாளுக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வம். அம்மா_அப்பாவைக் கெஞ்சினார். தாத்தாவிடம் கேட்டார். மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அனுமதி கிடைத்தது. பள்ளிக்கூடம் போக அல்ல, வீட்டிலேயே படிக்க. அம்புஜம்மாளுக்கு வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்-மணியை வேலைக்கு அமர்த்-தினார்கள்.

இப்படியே போய்க் கொண்டி-ருந்த அம்புஜம்மாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்ந்தது.

அம்புஜம்மாளின் தந்தை சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ் தலைவர்-களிடம் நெருங்கிப் பழகுபவர். ஒருமுறை ராஜாஜி இங்கிலாந்து சென்று திரும்பினார். அவருக்கு ஒரு விருந்துக் கொடுத்தார் சீனிவாச அய்யங்கார். இதையறிந்ததும் அம்புஜம்மாளின் பாட்டிக்குக் கோபம். ‘கடல் கடந்து போய் வந்தவருக்கு விருந்தா? நம் ஆச்சாரமே போச்சு. இனி நான் இந்த வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்’ என்று கிளம்பிப்போய்விட்டார். இது அம்புஜம்மாளின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வீணான மூட நம்பிக்கைகள் மீதும் பழக்க வழக்கங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை இவர்களைப் போல் அமைந்து விடக் கூடாது என்று எண்ணினார்.

ஆனால் அத்தனை சுலபமல்ல. அதுவும் அந்த வயதில் பழக்க வழக்கங்களை மாற்றுவது எளிதாக இல்லை. அந்தக் கால வழக்கப்படிதான் அம்புஜம்மாளுக்குத் திருமணம் நடந்தது. பால்ய விவாகம். அப்போது அவருக்கு பன்னிரண்டு வயதுதான். மணமகன் தேசிகாச்சாரி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். திருமணத்துக்குப் பிறகு, சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கை மாறியது. சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. வீட்டருகே இருந்த பெண்கள் சங்கத்தில் சேர்ந்தார். இந்தச் சமயத்தில் முதல் உலகப் போர் வந்தது. சென்னையிலும் குண்டுகள் விழுந்தன. அந்தச் சமயத்தில் உலகப் போரில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவத்தினருக்கு உதவ பெண்கள் சங்கத்தினர் விரும்பினார்கள். துணிகள், மருந்துகள், போன்ற-வற்றைச் சேகரித்து போர் முனையிலிருக்கும் ராணுவத்-தினருக்கு அனுப்பினர். நிதியும் திரட்டிக் கொடுத்தார்கள். அப்போது அம்புஜம்மாளுக்கு பதினைந்து வயதுதான். இந்தச் சமயத்தில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

சரி, வாழ்க்கை இனிய பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற நேரத்தில் அவருக்குத் திடீர் சோதனைகள் தோன்றின, அம்புஜம்மா¬ காசநோய் தாக்கி-யது. ஒன்பதாம் வகுப்பு படித்துக்-கொண்டிருந்த தம்பி பார்த்தசாரதிக்கு இடுப்பில் அடிப்பட்டு ஒரு பக்கம் சாய்ந்து நடப்பது போல் ஆகிவிட்டது. ஏற்கெனவே, அவனுக்கு லேசான இளம்பிள்ளை-வாதம் உண்டு. தாய் ரங்கநாயகிக்கு இதய நோய் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். தாய் வழி தாத்தா திடீரென மறைந்தார்.

இந்தக் கவலைகள் எல்லாம் அம்புஜம்மாளைத் தாக்கின.

ஒரே ஒரு, சந்தோஷமான விஷயமும் நடந்தது. தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அட்வகேட் ஜெனரல் பதவி கிடைத்தது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த காந்திஜி, விடுதலைப் போராட்டத்தை துவக்கியிருந்தார். சென்னைக்கும் வந்து அம்புஜம்மாளின் இல்லத்தில்தான் தங்கியிருந்தார். காந்திஜியின் எளிமையான பழக்க வழக்கங்களை நேரில் பார்த்த அம்புஜம்மாளுக்கு ஆச்சர்யமாயிருந்தது. காந்திஜியின் கொள்கைகள் மீதும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அவருக்கு ஈடுபாடு வரத் துவங்கியது.

இந்தச் சூழலில் சென்னையில் ‘இந்தியர்களுக்கு சுயாட்சி’ என்ற இயக்கத்தை துவக்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். அந்தக் கூட்டங்களுக்கு தந்தைக்குத் தெரியாமல் அம்புஜம்மாளும் சித்தி ஜானம்மாளும் சென்று வந்தார்கள். தந்தை சீனிவாச அய்யங்காருக்கு அன்னிபெசன்ட் அம்மையாரைப் பிடிக்காது. இங்கிலாந்து அரசுக்கு விரோதமாக செயல்படுவதால் அவரைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. ‘கைது வேண்டாம். ஊட்டியில் வீட்டுக் காவலில் வைக்கலாம்’ என்று அரசுக்கு யோசனை சொன்னார் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச அய்யங்கார். இது அம்புஜம்மாளுக்குப் பிடிக்காமல் மன வேதனையுற்றார். இதே போல் தந்தை மேல் கோபமுற்ற இன்னொரு சம்பவமும் உண்டு.

ஆங்கில அரசு சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தடையுத்தரவு போட்டிருந்த காலம், அம்புஜம்மாளும் அவரது பெண்கள் சங்கமும் மார்கழி மாத பக்தி பாடல்கள் என்று சொல்லி, நாட்டுப்பற்று பாடல்களையும், உரிமை கீதங்களையும் பாடி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சுற்றிவருவார்கள். முதலில் கண்டுபிடிக்காத காவல்துறை பிறகு கண்டுபிடித்துப் பெண்கள் சங்கத்தினரைக் கைது செய்தார்கள். , அம்புஜம்மாளை கைது செய்யவில்லை. காரணம், அவர் தந்தையின் செல்வாக்கு. தன்னை போலீஸ் கைது செய்யாததற்குக் காரணம் தன் அப்பா என்று தெரிந்து விட்டு வீட்டுக்குச் செல்லாமல் சித்தி வீட்டில் தங்கிவிட்டார்.

1932. கள்ளுக் கடை மறியல், அந்நிய துணிக் கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு பலர் சிறைக்குச் சென்றனர். இதில் அம்புஜம்மாளும், ஜானம்மாளும் ஆறுமாத சிறைவாசம் வேலூர் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து விடுதலையான பின் மீண்டும் கதர் விற்பனை, காங்கிரஸ் கூட்டங்களை நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டார் அம்புஜவல்லி. பம்பாய் காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்று காந்திஜியைக் கண்டு மகிழ்ந்த அம்புஜவல்லி அவருக்கு நாள் முழுவதும் பணிவிடை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த சமயத்தில் அம்புஜவல்லி என்ற பெயர் நீளமாக இருப்பதாகக் கூறி அம்புஜம் என்று காந்திஜி அழைக்கத் துவங்கினார். காந்திஜியின் அருகில் அமர்ந்து கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டிருப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதிலும், அம்புஜம்மாளுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி. காங்கிரஸ் மாநாடு முடிந்து சென்னை திரும்பும் போது, நவம்பர் 1_ஆம் தேதி ‘வார்தா’ ஆசிரமத்திற்கு வர முடியுமா? என்று காந்திஜி கேட்டார்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘ஓ கட்டாயம் வருகிறேன்’ என்று கூறிவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் தந்தையிடம் அனுமதி கேட்டபோது, தந்தையார் மறுத்து விட்டார். இதனால் மூன்று நாட்கள் வீட்டிற்குள்ளே உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பெற்றோர் சம்மதித்து ஆசிரமம் சென்றார். தந்தையார் மறைந்த போது சென்னை திரும்பினார்.

அம்புஜம்மாள் பள்ளியில் சேர்ந்து நன்கு படித்து முறையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தமது முயற்சியாலும், ஆர்வத்தினா-லும் புலமை பெற்று விளங்கினார். பல இந்தி கதைகளை தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, துளசி ராமாயணத்தை இசையுடன் பாடினார். வடநாட்டு கிராம மக்களிடையே பிரபலமாகியிருந்த துளசி ராமாயணப் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி அம்புஜம்மாளைக் கூறியிருந்தார் காந்திஜி அவர் சொன்னபடி துளசி ராமாயணத்தின் முதல் இரண்டு காண்டங்களை வசன நடையில் மொழி பெயர்த்தார் அம்புஜம்மாள்.

காந்திஜி விரும்பியபடி சென்னையில் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு, அதற்காக ஏற்கெனவே தமது சொந்த செலவில் தமது சகோதரனின் மனையில் ரூ.15,000 செலவில் கட்டி முடித்தார். சீனிவாச காந்தி நிலையம் அதில் அமைந்தது.

சுமார் 7 ஆண்டு காலம் தமிழ் நாட்டின் சமூக நல வாரியத் தலைவியாக பொறுப்பேற்றிருந்த அம்புஜம்மாள்.

அவரது சாதனைகளுக்காக மத்திய அரசு 1964_ம் வருடம் பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியது. அதன் பிறகும் தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்புஜம்மாள், தனது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார். இந்தியா தனது இனிய புதல்விகளில் ஒருவரை இழந்தது.

Posted in Ambujam, Ambujam Ammaal, Ambujam Ammal, Ambujammal, Biosketch, Congress, Faces, Fighter, Freedom, Gandhi, Independence, Kumudam, Leaders, Liberation, Mahatma, people, Series, Welfare, Women | Leave a Comment »

Vairamuthu Question & Answer – Short Story

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

உலகம் நம்மைப் புரிந்துகொள்ள வில்லையென்றால் உலகுக்கு நஷ்டமில்லை; உலகத்தை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் நமக்குத்தான் நஷ்டம்.

த. ரோதை, ஓட்டேரி.

நீங்கள் ‘ஆகா’ என்று ரசித்த சிறு கதை எது?

நான் கத்தி தீட்டிக் கொண்டிருந்தபோது வந்துவிட்டான் எவனைக் கொலை செய்யவேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தேனோ அவன் தன் கனத்த ராணுவ உடையைக் கழற்றி ஓர் ஓரமாய் வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். அவன் முகத்துக்கு நுரை பூசி விட்டு, தீட்டிவைத்திருந்த கத்தியை எடுத்து அவனுக்குச் சவரம் செய்யத் தொடங்கினேன்.

உள்ளம் கொதித்தது. இவன்தான் என் தாய்கிராமத்தை ஆக்கிரமித்தவன்; என் உறவினர்களையும் நண்பர்களையும் நடுவீதியில் நிறுத்தி நாய்களாய்ச் சுட்டவன். இப்போது வசமாய் மாட்டிக்கொண்டான்.

சரக்… சரக்… சரக்… சரக்…

சவர சுகத்தில் தூங்கத் தொடங்கிவிட்டான்.

கன்னத்தில் பயணப்படும் கத்தி கழுத்துக்கு வரப்போகிறது இப்போது. பலங்கொண்டமட்டும் அழுத்தப்போகிறேன்.

குரல்வளை அறுபடும்; சோப்பு நுரையின் வெள்ளைதாண்டி ரத்தம் வெளியேறும்; செத்தொழிவான்; தப்பித்தோடுவேன்; ராணுவம் துரத்தும்; சுடும்; சுடட்டுமே!

இதோ கழுத்துக்கு வந்துவிட்டது கத்தி.

‘‘அழுத்து!’’ பெருவிரல் துடிக்கிறது.

‘‘நிறுத்து; இது தொழில் தர்மமல்ல;’’ மனச்சாட்சி தடுக்கிறது.

கொல்வதா? வேண்டாமா?

கொலை முயற்சிக்கும் மனச்சாட்சிக்குமான போராட்டம் முடியுமுன்னே சவரம் முடிகிறது.

தாடையைத் தடவிக்கொண்டே மேஜர் எழுகிறான். மீண்டும் தன் ராணுவ உடை தரிக்கிறான். பை துழாவி சவரக் கூலி கொடுத்துக்கொண்டே சொல்கிறான்:

‘‘என்னமோ சொன்னார்களே… நீ என்னைக் கொன்றுவிடுவாய் என்று. இப்போதாவது தெரிந்துகொள். கொலை செய்வது ஒன்றும் அத்தனை சுலபமல்ல.’’

இந்த அமெரிக்கச் சிறுகதையை வாசித்து முடித்ததும் அணிலாடிய கிளையாய் ஆடி அடங்கியது மனசு.

Posted in Answers, Questions, Story, Vairamuthu | Leave a Comment »

Kumudam’s Ilakkiya Cholai – Paavannan

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

திப்புவின் கண்கள் – பாவண்ணன்
இலக்கியச்சோலை

ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போயிருந்தேன். சிதைந்து குட்டிச்சுவர்களாகக் காணப்படும் அதன் பழங்காலக் கோட்டை மதில்களைப் பார்த்தபோது ஒருகணம் மனம் அமைதியிழந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களோடு அந்த ஊரை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை அந்தக் கோட்டையைத் தகர்க்கும் காட்சி கற்பனையில் விரிந்தது. உண்மையில் அந்த முற்றுகைக்கான காரணம் அந்தக் கோட்டையைச் சிதைப்பதோ அல்லது அந்த ஊரைக் கைப்பற்றுவதோ அல்ல எதிர்ப்பின் அடையாளமாக உருவாகி மெல்லமெல்ல வலிமைபெற்று வந்த திப்புசுல்தானைக் கொல்வதுதான் உண்மையான காரணம்.

வீரத்துக்கும் துணிச்சலுக்கும் ஓர் அடையாளமாக நின்றவன் திப்பு. அவன் வீரத்தைப் பறைசாற்றும் கதைகள் ஏராளம் வேட்டையாடச் சென்ற காட்டில் எதிர்பாராத கணத்தில் தன் முன்னால் பாய்ந்துவந்த புலியை நேருக்குநேர் பார்த்துப் போராடி சுட்டு வீழ்த்திய சம்பவம்தான் அவனுக்கு மைசூர்ப்புலி என்ற பெயர் உருவாகக் காரணம்.

ஒரு புலியை, அது வாழக்கூடிய காட்டிலேயே தன்னந்தனியாக ஓர் இளைஞன் எதிர்கொண்டு நிற்கும் காட்சியைக் கொண்ட சித்திரத்தைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. இளம்வயதில் புலியை எதிர்கொண்டவன் நடுவயதில் ஆங்கிலேயர்கள் என்னும் புலியை எதிர்கொண்டான். திப்புவைப் பொறுத்தவரை எதிர்த்து நிற்றல் என்பது உரிமைக்கும் உயிர்வாழ்தலுக்குமான ஒரு போர்.

கோட்டை வாசலைத் தாண்டி வந்து சிறிது தொலைவு நடந்தபிறகு போரில் கொல்லப்பட்ட திப்புவின் உடல் கிடந்த இடம் என்ற அடையாளக்குறிப்புடன் ஒரு சதுக்கம் காணப்பட்டது. ஒரு சின்ன நடுகல் அங்கிருந்தது ஒருகணம் தரையில் அவன் உடலைக் கண்டது என் மனம்.

காலத்தாலும் மண்ணாலும் அழிக்கமுடியாத அந்த மாபெரும் உடல் ஏராளமான வெட்டுக் காயங்களுடன் வெட்டி வீழ்த்தப்பட்ட ஒரு பச்சைமரத்தைப்போல மல்லாந்து கிடந்தது. காயங்களிலிருந்து சொட்டுச்சொட்டாக உதிர்ந்துகொண்டிருந்தன. ரத்தத்துளிகள். மூச்சின் இறுதிக் கணங்களில் அந்தத் தோள்கள் அசைந்தன. கன்னம் அசைந்தது விரிந்த மார்பு ஏறித் தாழ்ந்தது. கூர்மை குன்றாத கண்கள் உற்றுப் பார்த்தன. எண்ணங்கள் முற்றாகக் கலைந்து விலகியதும் உடல் உதற தன்னுணர்வு திரும்பியது. அந்தக் கண்கள் அப்போது ஒரு செடியின் இலைகளாக மாறிவிட்டிருந்தன. எழுச்சிமிகுந்த உணர்வு நிலையில் என்னால் திப்புவின் உடலை ஓர் ஓவியமாகத் தீட்டிவிடமுடியும் என்று தோன்றியது.

ஆதிக்க வேர்கள் பரவி விரிவு-பெறும் முன்னரே வெட்டி-யெறிய வேண்டும் என எழுச்சியுள்ள திப்புவின் வேகம்தான் ஆங்கிலேயர்-களை அச்சுறுத்தியிருக்கவேண்டும். கொள்ளிடத்துப் படுகையில் நடந்த போரிலும் காஞ்சியில் நடந்த போரிலும் திப்புவிடன் அடைந்த தோல்வி அவர்களுடைய பீதியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி-யிருக்கவேண்டும். அதுவே வெறுப்-பாகவும் வெறியாகவும் மாறி ஏராளமான சேனைகளுடன் முற்றுகையிடத் தூண்டி திப்புவைப் பலிவாங்கியது.

மாளிகைக்குள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்தேன். எல்லாமே போர் ஓவியங்கள் முதல் மைசூர்ப்போரிலும் இரண்டாம் மைசூர்ப்போரிலும் திப்பு அடைந்த வெற்றியின் அடையாளங்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. பார்த்த இடங்களிலெல்லாம் வரிசைவரிசையாக செல்லும் காலாட்படைகள். குதிரைப்படைகள் யானைப்படைகள் பீரங்கி வண்டிகள், வெற்றியின் ஆக்கிரமிப்பு மரணத்தின் ஓலம் வெற்றிக்கொண்டாட்டக் காட்சிகளும் தோல்வியுற்றவர்களைக் கைது செய்து அழைத்து வரும் காட்சிகளும் மாறிமாறித் தென்பட்டனய. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் இடம்பெறாத ஓவியமே இல்லை.

இந்தக் கொந்தளிப்புகிகு நேர்மாறாக அமைதி ததும்பிய ஓர் ஓவியம் அக்கால ஸ்ரீரங்கப்பட்டண வீதிகளையும் கோட்டையையும் காட்சிப்படுத்தும் இன்னொரு கூடத்தில் இருந்த ஓவியங்கள் வேறுவகையானவை.

எல்லாமே திப்புவின் குடும்பப்படங்கள். ஒரே வரிசையில் திப்புவின் ஆறு பிள்ளைகளுடைய படங்கள் கோட்டோவியங்களாகத் தீட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. மூத்தவனுக்கு நல்ல வாலிபத் தோற்றம். முறுக்கேறிய உடல் உறுதியான தோள்கள். அவனைவிட சற்றே வயது குறைந்த தோற்றம் இரண்டாம் மகனுடையது. கன்னத்தின் மினுமினுப்பு இளமையின் அடையாளமாகக் குடிகொண்டிருந்தது. அடுத்த மகனுக்கு இன்னும் இளையவயதுத் தோற்றம் அதன் அடையாளமாக சின்ன அரும்புமீசை அதற்கடுத்தவனுடைய தோற்றம் சிறுவனுடையதுமாகவுமில்லாமல் இளைஞனுக்குரியதமாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருந்தது. உதடுகள் சற்றே தடித்து முகத்தில் களைபடிந்த தோற்றம். அதற்கடுத்த பிள்ளைக்கு வளர்ந்த சிறுவனின் தோற்றம். பெண்மைபடர்ந்த முகவெட்டு சற்றே உப்பிய கன்னங்கள் அதற்கடுத்த சிறுவனுக்கு முழுக்கமுழுக்கக் குழந்தைத்தோற்றம். ஓவியனின் திறமையைக் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே படிப்பதற்காக கீழே எழுதிவைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒருகணம் துணுக்குறவைத்தது. கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வேலூ

ர்க் கோட்டையில் சிறைவைக்கப்பட்ட பிள்ளைகளின் படங்கள் அவை சிறை ஆவணங்களாக இந்தப் படங்கள் தீட்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது. சின்னஞ்சிறு பாலகனைக்கூட பகையாக நினைத்து நடுங்கிய ஆங்கிலேயரின் மனநிலை விசித்திரமாக இருந்தது.

அடுத்தபடி அகலமாக இருந்த அறையில் ஏராளமான பொருட்கள் அடுக்கப்பட்டிருந்தன. விதம்விதமான திப்புவின் உடைவாள்கள், கத்திகள், துப்பாக்கிகள் ஆயுதங்கள் போர் அங்கி மார்புக்கவசம் உணவுமேசை. ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே நகர்ந்தபோது இன்னொரு கூடத்தில் ஆளுயரத்துக்கு வைக்கப்பட்டிருந்த திப்புவின் ஓவியத்தையும் பார்த்தேன். கிட்டத்தட்ட திப்புவே எதிரில் வந்து நிற்பதைப்போன்ற தோற்றம். மிடுக்கான தோற்றம் எடுப்பான தோள்கள். உறுதிமிகுந்த கைகள் கலங்காத முகம் கூர்மையான கண்கள் ஒருகணம் அக்கண்கள் என்னையே உற்றுக் கவனிப்பதைப்போலத் தோன்றியது.

காலையில் என் கற்பனையில் கண்ட அதே கண்கள் அதே வெளிச்சம் அதே கூர்மை நுன்றுநுன்று கேள்விகள் படித்த அதே பார்வை என் உடலில் லேசான பதற்றமும் நடுக்கமும் படர்வதை உணர்ந்தேன்.

மெல்ல நகர்ந்து ஓவியத்தை நெருங்கி நின்றேன். திப்புவின் பார்வை என்மீதே படிந்து என்னையே தொடர்ந்தது. ஆச்சரியத்தோடு இடதுபுறம் இரண்டடி நகர்ந்தேன். அந்தப் பார்வை அங்கும் என்னைத் தொடர்ந்து வந்தது. இன்னும் நான்கடி பின்னால் வேறு கோணத்தில் நகர்ந்து ஏறிட்டபோது அப்பார்வை என்மீது நிலைகுத்திச் சிரித்தது முற்றிலும் நேர்எதிராக இடது புறமாக நடந்து நின்றேன். அப்போதும் தொடர்ந்து அப்பார்வை எல்லாமே பிரமைபோலத் தோன்றியது. எந்தக் கோணத்தில் நின்றாலும் அந்தக் கண்கள் விடாமல் என்னைத் தொடர்வதை உணர்ந்தேன். ஆச்சரியம் என்று வாய்விட்டுச் சொன்ன கணத்தில் அருகிலிருந்த காவலர் அது முப்பரிமாணத் தன்மையுடன் தீட்டப்பட்ட ஓவியம் என்றும் இருநூறு ஆண்டுகளுக்கும் முன்பே நிகழ்த்தப்பட்ட இச்சாதனை மிகப்பெரிய அதிசயம் என்றும் சொன்னார்.

ஏராளமானவர்களுடைய கண்கள் மனத்தில் புள்ளிகளாக மாறிமாறி அசைந்தன. காலம்காலமாக அவை பகிர்ந்துகொண்ட சிரிப்புகள், கோபங்கள் கருணை காதல் மயக்கம் சீற்றம் வெறி ஆத்திரம் எல்லாம் படம்படமாக நகர்ந்தன. அவை எதனுடன் இணைத்துச் சொல்லமுடியாத ஓர் உணர்வு ஈரம் மிகுந்த திப்புவின் கண்களில் உறைந்திருந்தது. இந்த மண்ணையும் காற்றையும் செடி கொடிகளையும் கோட்டை கொத்தளங்களையும் குழந்தைகளையும் மக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கும். பேராவலே அந்த உணர்வு திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்திருந்ததை நான் உணர்ந்த அக்கணம் அற்புதமான ஒரு பேரனுபவம். மனத்தை அறியும் விடாமுயற்சிகளில் இடையறாது ஈடுபடுவது கலை என்பதை எனக்கு உணர்த்தியது அக்கணம்.

Posted in Kumudam, Literature, Paavannan, Pavannan | Leave a Comment »

How CBI let Quattrocchi slip away – Thamizhan Express

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

தொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..!

“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.

1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை! பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.

கடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.

அப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.

அதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வமாக, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.

இதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.

ஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.

அதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.

ஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.

இதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.

இதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்!

வர்மா

—————————————————————————————

நிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்!

எஸ். குருமூர்த்தி

“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.

ஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.

“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.

ஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது?

1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்!

இந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” தன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.

ராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும்! இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி!

“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை!

திருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.

இது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா!

இந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.

முதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது! ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.

இந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார்? இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.

1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.

இந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.

இருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று!

இந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.

இந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை!

இத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.

இந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”!

இதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது! அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல!

Posted in abuse, Affiliations, Airforce, Antonia, Antonia Maino, Argentina, Arms, Army, Banks, BJP, Bofors, Bombs, Bribery, Bribes, CBI, Central Bureau of Investigation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Deals, defence, Defense, Express, extradition, Fairfax, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Holland, Indira, Indra, Italy, Judge, Justice, kickbacks, Law, Maino, Maintenance, Meino, Military, Money, Nationality, Navy, Nehru, nexus, Order, Politics, Power, prosecutor, Quatrocchi, Quatrochi, Quattrocchi, Quattrochi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rao, Rich, SC, Sonia, Sweden, Tanks, Weapons | 1 Comment »

State of Tamil Nadu Congress Party – Internal Politics

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

காங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி

சென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்

  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,
  • கட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,
  • மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,
  • கே.வீ. தங்கபாலு,
  • ஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.

அப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.

ஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.

கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

காமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  • மூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,
  • மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,
  • வி.ராஜசேகரன்,
  • சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,
  • காரைக்குடி சுந்தரம்,
  • முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,
  • கிருஷ்ணசாமி வாண்டையார்,
  • சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Posted in Analysis, Backgrounders, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Divisions, Elangovan, Elankovan, Elections, Faction, Fights, Ilangovan, Ilankovan, Internal, Jayanthi, Jayanthy, Jeyanthi, Jeyanthy, Kaarthi, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Karthi, Krishnasaamy, Krishnasami, Krishnasamy, Krishnaswamy, Leaders, Madurai, Manmohan, Members, MLAs, MPs, Party, PC, Petty, PMK, Politics, Polls, Sonia, Thangabaalu, Thangabalu, Thankabalu, TMC | Leave a Comment »