Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 30th, 2007

Right to Information Act – State of Police Force

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

தமிழக போலீஸ் சட்டம் -“பரம ரகசியம்’

ஏ. தங்கவேல்

புதுதில்லி, மே 1: இந்தியாவில், தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டம் பிரபலமடைந்துவரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக அரசு உருவாக்கி வருவதாகக் கூறப்படும் போலீஸ் சட்டம், மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது!

தமிழக அரசு அதிகாரிகளைக் கேட்டால் இப்படித்தான் சொல்கிறார்கள்.

தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டபோது, மாநாட்டின் பிரதிநிதிகள் ஆச்சரியமடைந்தனர்.

ஓய்வு பெற்ற இரு காவல் துறை தலைவர்கள் பிரகாஷ் சிங் மற்றும் என்.கே. சிங் கடந்த 1996-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, போலீஸ் அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டுக்காக மாநில பாதுகாப்பு கமிஷனை உருவாக்குதல், தகுதி அடிப்படையில் மாநில காவல் துறை தலைவர் உள்பட முக்கிய காவல் துறை அதிகாரிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பதவியில் நியமித்தல் உள்ளிட்ட ஏழு உத்தரவுகளை நீதிமன்றம் வெளியிட்டது.

அந்த உத்தரவுகளை நிறைவேற்ற இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரம் உள்பட பத்து மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பட்டியலில் உள்ளன.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான உத்தரவுகள், மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் மனித உரிமை மாநாட்டில் போலீஸ் சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக காவல் துறையிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

தமிழகத்திலிருந்து, கோவை மனித உரிமை அமைப்பின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான வி.பி. சாரதி கலந்துகொண்டார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ள புதிய போலீஸ் சட்டம் தொடர்பான தகவல்களைப் பெற, சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்றபோது தனக்கு நேர்ந்த அனுபவங்களை அவர் விவரித்தார்.

“”தமிழக அரசின் புதிய போலீஸ் சட்ட வரைவு நகலைப் பெறுவதற்காக மார்ச் 16-ம் தேதி சட்ட அமைச்சரை (துரைமுருகன்) அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது என்று கூறிய அவர், மூத்த உதவியாளரை அழைத்து, எனது கோரிக்கை பற்றி கவனிக்குமாறு கூறினார்.

அந்த உதவியாளரோ, இது உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றார். “சட்ட வரைவு உங்கள் துறை தொடர்பானதுதானே’ என்று சுட்டிக்காட்டிய போது, “இந்த விஷயம் முதல்வரின் நேரடிப் பார்வையில் உள்ளது’ என்று சொல்லி கையை விரித்துவிட்டார்.

அடுத்து, சட்ட அமைச்சகத்தின் உதவிச் செயலரைச் சந்தித்தேன். போலீஸ் வரைவுச் சட்டம் “மிகவும் ரகசியமானது’ என்று கூறி, தகவல் தர மறுத்துவிட்டார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்பதாகச் சொன்னபோது “முயற்சி செய்து பாருங்கள்’ என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சொன்னபடி அவர்கள் புதிய போலீஸ் சட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது” என்றார் சாரதி.

இந்தப் பிரச்சினையில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு இயக்கம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சாரதி தெரிவித்தார்.

Posted in Analysis, Andhra, Andhra Pradesh, AP, Correctional, HR, Human Rights, Information, Law, Op-Ed, Order, Parthasarathi, Parthasarathy, Police, RTI, solutions, TN, VP Sarathi, VP Sarathy | Leave a Comment »

Transgender Contests – Winners

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

விழுப்புரத்தில் இன்று மிஸ் கூவாகம் போட்டி

விழுப்புரம், மே 1: அரவானிகளில் ஒருவரை மிஸ் கூவாகம் 2007 ஆக தேர்ந்தெடுக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பிரஜேந்திர நவநீத் செவ்வாய்க்கிழமை (மே 1) தொடங்கி வைக்கிறார்.

மாவட்ட எஸ்.பி. பெரியய்யா, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்படும் அரவானிக்கு பத்திரிகையாளர் கவிதா கணேஷ் பரிசு வழங்குகிறார்.

அரவானிகளுக்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அரவானிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
================================================
அரவானி ராணியாக கோவை பத்மினி தேர்வு

விழுப்புரம், மே 1: விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரவானி ராணியைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் கோவை பத்மினி, அரவானி ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழுப்புரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூவாகம் விழாவில் மிஸ் கூவாகமாக அரவானி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியை தாய் திட்டமும், ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்தின.

கோவை பத்மினி அரவானி ராணியாகவும், இப்போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் பிரியா, சுபிக்ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு ரோட்டரி மற்றும் அரிமா சங்கத்தினரும், விழுப்புரம் நகராட்சித் தலைவர் இரா. ஜனகராஜும் பரிசு வழங்கினர்.

அரவானிகள் ஊர்வலம்

அரவானிகளுக்காக பல்வேறு சலுகைகளை அண்மையில் அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து அரவானிகள் ஊர்வலம் நடத்தினர்.

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே தாய் திட்டத்தின் தலைவர் லட்சுமிபாய் துவக்கி வைத்த ஊர்வலத்தில் அரவானிகள் வண்ண உடையணிந்து கைகளில் பலூன்களுடன் கலந்து கொண்டனர். பல்வேறு இசைக் கருவிகளை இசைத்தபடி வந்த அரவானிகளின் திறமைகளை பொதுமக்கள் பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனத் தலைவர் எ.பக்தவத்சலம் செய்திருந்தார்.

——————————————————————————
அரவானிகளை கண்ணியத்துடன் நடத்துங்கள்: அமைச்சர் ப. சிதம்பரம்

சென்னையில் அரவானிகளுக்கான புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை தொடங்கி வைத்து முதல் பாலிசியை சனிக்கிழமை வழங்குகிறார் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். உடன் வி.எச்.எஸ். கௌரவச் செயலர் என்.எஸ். முரளி.

சென்னை, ஜூலை 29: அரவானிகள் நாட்டின் குழந்தைகள். அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உருக்கத்துடன் கூறினார்.

அரவானிகள்-நலிவடைந்த பெண்களுக்கான ஆரோக்கிய காப்பீட்டு திட்டம், தாய் விழுதுகள் கூட்டமைப்பின் தொடக்க விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திட்டங்களை தொடங்கி வைத்து, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியது:

சமுதாயத்தில் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்வதில் யாருக்கும் தயக்கம் இருக்கக் கூடாது. வறுமை, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு காரணங்களால் அரவானிகளாக உருமாறுகின்றனர்.

உடலின் இயல்புகள், மனத்தின் வேட்கைகள், விருப்பு வெறுப்புகள் இவற்றை முன்பே கணித்து வரையறுக்க முடியாது. படைப்பின் ஆழ்மனத்தில் உள்ளதையும் கண்டுபிடித்து விடமுடியாது.

நாட்டின் குழந்தைகள்: அரவாணிகள் இந்த நாட்டின் குழந்தைகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரவானிகளை மதிப்புமிக்க குடிமக்களாக கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.

சமுதாயத்தின் மாறுபட்ட கண்ணோட்டம் காரணமாக, அவர்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை போக்கி, தலைநிமிர்ந்து நடப்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

இந்தியப் பிரஜைகளில் அரவானிகளும் அடங்குவர் என்பதை நிலைநிறுத்த வழிவகை செய்ய வேண்டும். அரவானிகள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து விடக்கூடாது. சமுதாயம் ஒதுக்கினாலும் அரவானிகள் ஒதுங்கி விடக் கூடாது என்றார் ப.சிதம்பரம்.

தமிழக சுகாதாரத் துறை செயலாளர்: வி.கே.சுப்புராஜ்: எச்.ஐ.வி – எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்காக, ரூ. 100 கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டன.

2001-ம் ஆண்டு கணக்கின் படி, 1.13 சதவீத மக்களுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்தது. இன்றைக்கு இதன் அளவு அரை சதவீதமாகக் குறைந்துள்ளது.

நோயைக் கண்டறிய 280 சோதனை மையங்கள் செயல்பட்டு வந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 500 சோதனை மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் 260 இடங்களில் நோயைக் கண்டறியும் சோதனை மையங்கள் உள்ளன.

ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து அளிக்கும் சிகிச்சை மையங்கள் 19 உள்ளன. குழந்தைகள் உட்பட 21,000 பேருக்கு மேல் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் செயல்பட்டு வரும் மையத்தில் மட்டும் ஆண்டுக்கு 5,000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எய்ட்ஸ் – எச்.ஐ.வி. நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு 18 லட்சம் மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், 55 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அரவானிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கான காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் ரூ. 281 ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

சேலத்தில் இத்திட்டம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகை, குஜராத்தைச் சேர்ந்த “விமோ சேவா’ அமைப்பிடம் அளிக்கப்படும்.

அந்த அமைப்பு ஐசிஐசிஐ – லம்பார்டு வங்கி மூலமாக காப்பீட்டை அளிக்கும்.

Posted in Ali, Aravaani, Aravani, Beauty, Contest, Contests, Koovagam, Koovakam, Miss, Transgender | 2 Comments »

State of the Indian Parliament MPs – The Politics of Corrupt Representatives

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

இதற்காகவா தேர்ந்தெடுத்தோம்?

பி. சக்திவேல்

உலகின் மிகப் பெரிய மக்களாட்சியின் சிறப்பான அமைப்பு நமது இந்திய நாடாளுமன்றம்.

தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், தேசத்திற்குத் தேவைப்படுகிற சட்டங்களை இயற்றுவதற்கும், பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நாடாளுமன்றம்.

சமீபகாலமாக நமது நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நடவடிக்கைகள் அவர்களது மதிப்பையும் கண்ணியத்தையும் இழக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மதிப்பைக் காப்பாற்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக பல தலைவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். “சிறந்த நாடாளுமன்றவாதி’ விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட மாண்புமிக்க நாடாளுமன்றம் ஒரு சில உறுப்பினர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளால் அதன் பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது.

சிலமாதங்களுக்கு முன்புதான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக அவைத்தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்றம் இதை ஆமோதித்து தீர்ப்பை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த மூன்று மாதங்களில் மற்றொரு நிகழ்வாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஏற்கெனவே இதேபோல முறைகேடுகளைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டிலிருந்து 12 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஏற்கெனவே வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியது மற்றும் இரு இடங்களில் வாக்களித்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் தரம்கெட்ட செயலில் இவரைப்போல இன்னும் சில உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளது என்கிற தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காகவா இவர்களை நாம் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தோம்?

இவ்வாறு ஆள்கடத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளது மிகவும் கொடிய குற்றம். இதுதொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரிக்கை விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு குற்றப்பின்னணி உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளில் மட்டும் அல்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் இருப்பது வேதனையான விஷயமாகும். அரசியல் கட்சிகளும் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 10 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் குற்றப்பின்னணி உள்ளவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுசெய்து பரிந்துரை அளிக்க வோரா குழு 1993-ம் ஆண்டு நியமிக்கப்பட்டது. “அரசியல்வாதிகளுக்கும் கிரிமினல்களுக்கும் மிக நெருக்கமான உறவு வளர்ந்து வருகிறது’ என அக்குழு தனது ஆய்வறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

சிறிய குற்றத்தில் இருந்து பெரிய குற்றங்கள் வரை அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பது நீண்டகாலமாகவே இருந்துவந்தபோதிலும் அதைக் களைவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

சிறு குற்றங்கள், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் வழங்குவதில் முறைகேடுகள், பதவியை சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துதல், லஞ்சம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களில் மட்டுமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போதுதான் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு பெண்களை கடத்திச் செல்லும் செயலில் ஒரு சில உறுப்பினர்கள் ஈடுபட்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.

தனிநபர் விமர்சனம், மக்களுக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளை முடக்குவது, தேவையில்லாமல் அடிக்கடி வெளிநடப்பு செய்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் சிலர் அமைச்சர்களாவது போன்ற நிகழ்வுகளால் நாடாளுமன்றத்தின் உயரிய நோக்கங்கள் பாழாகி வருகின்றன.

மக்கள் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டு அவற்றுக்குத் தீர்வு காணப்பட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. நாட்டு மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியதைக் காட்டிலும் மேற்கூறிய பிரச்சினைகளுக்காக முடங்கியதுதான் அதிகம்.

பல்வேறு சலுகைகள் மற்றும் ஊதியத்திற்காக மக்களவை உறுப்பினர்களுக்கு செலவிடப்படும் தொகை ரூ. 800 கோடிக்கும் மேல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து தானே கோடிக்கணக்கில் இதை நாம் செலவிடுகிறோம்?

14-வது மக்களவைத் தேர்தல் நடத்த அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ.1,500 கோடி. மேலும், ஆண்டுதோறும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த சுமார் ரூ.250 கோடி செலவிடப்படுகிறது. இதுவும் மக்களின் வரிப் பணம் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசத்தின் முக்கியமான பிரச்சினைகளையோ அல்லது ஏழை, எளிய மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களையோ விவாதிப்பது குறைந்துவிட்டது. எந்த உயர்ந்த நோக்கத்திற்காக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். நல்ல உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க வேண்டும். மக்களும் மேலை நாடுகளில் உள்ளதுபோல் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் நிலை மாற வேண்டும். சிறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் கூட தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறிழைத்தால் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். கட்சி வித்தியாசம் இன்றி ஒழுக்கமான, நேர்மையான, நன்னெறியுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் உறுதிபூண வேண்டும். சரிவர செயல்படாத உறுப்பினர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அதேசமயம் “மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உயரிய கொள்கை உடையவர்களேயே உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி மகத்துவம் பெறும்; நாடாளுமன்றத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்!

(கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).

Posted in BJP, BSP, Communist, Congress, Corruption, Criminal, Elect, Election, Government, Govt, Janatha, kickbacks, Law, MLA, MP, MPs, Order, parliament, Politics, Polls, SJP, SP, Vote, voter | Leave a Comment »

May Day 2007 – International Child Worker Day

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 30, 2007

ஊரும் தெரியாது; உறவும் புரியாது!

வசீகரன்

நம் ஒவ்வொருவர்க்குள் ஓர் அதிகாரி ஒளிந்து கொண்டிருக்கிறார்.

நாடு முழுக்க வீடுகள் இருக்கின்றன. அவரவர் வசதி, வளமைக்குத் தக்கவகையில் வீடுகள் சிறிதாகவோ, பெரிதாகவோ, ஆடம்பரமாகவோ இருக்கின்றன. வீட்டைப் பராமரிப்பது மிகப்பெரிய பணிதான். எனவே இச்சுமையைக் குறைக்க பணியாள் ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவரோ தேவைப்படுவர். இந்த எடுபிடி வேலைக்கு ஆள் கிடைப்பது மிகவும் சிரமம். கிடைத்தாலும் நம் விருப்பப்படி நடப்பாரா என்பது தெரியாது. எதிர்த்துப் பேசலாம். அதிக சம்பளம் கேட்கலாம்!

இந்தத் தொல்லையெல்லாம் இல்லாதவாறு ஆள் வேண்டுமே? யார் கிடைப்பார்கள்.

அப்படிக் கிடைப்பவர் வறுமையில் உழல வேண்டும். வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டும். ஊதியத்தை மிகக் குறைவாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும். அண்டை அசலில் ஆதரவாளர்கள் யாரும் இருக்கக் கூடாது. அப்போதுதான் சொன்ன பேச்சைக் கேட்பார்கள்.

அவர்கள் யார்? குழந்தைகள்!

வறுமையின் காரணமாக துரத்தப்பட்டவர்கள். விளையாடும் பருவம் அது. ஆனால் விளையாட முடியாது. ஓடியாடும் வயது அது. ஆனால் கால்கள் கட்டப்பட்டிருக்கும். சிரித்து மகிழ அவர்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இழுத்து வரப்பட்டிருப்பார்கள். ஏன் மாநிலம் மாறி கூட கடத்தப்பட்டிருப்பார்கள்.

ஊரை ஒழுங்காகத் தெரியாது. உறவு யாரென்றும் புரியாது. பல குழந்தைகளுக்கு மொழிகூட விளங்காது.

பங்களாக்கள், நடுத்தர இல்லங்கள் என்று அமர்த்தப்பட்டு பணியில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். வியர்வையும் கண்ணீருமாய் ஈரமாக இருப்பார்கள். ஆனால் வயிறு உலர்ந்து போய் இருக்கும்.

அந்த வீட்டின் எஜமானாக நாம் இருக்கிறோம். வேலை செய்ய சேர்ந்திருப்பவள் ஒரு சிறுமி. அந்தச் சிறுமியிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?

அதே வயதுடைய சிறுமி நம் அடுத்த வீட்டுத் தொழிலதிபரின் குழந்தையாகவோ, நம் உறவினர் ஒருவரின் வாரிசாகவோ இருந்துவிட்டால் நம் கொஞ்சலே மிக அழகாக இருக்கும்.

வேலை செய்ய வந்த சிறுமியிடமோ நம் கேள்விகள் நேரெதிராக இருக்கும்.

“”என்ன திருதிருவென்று முழிக்கிறாய். ஒழுங்காக வேலையைப் பார்!” விரட்டுவோம்.

“”சுறுசுறுப்பே இல்லையே . சரியான சோம்பேறி” என மண்டையில் குட்டுவோம்.

போனால் போகிறதென்று அளவுச்சாப்பாடு போடுவோம். இதோடு அல்ல. இன்னும் இருக்கிறது அந்தக் குழந்தைக்குக் கொடுமை.

வீடு என்றால் நாம் ஒருவர் மட்டும்தானா? சிறுசும் பெருசுமாக உருப்படிகள் ஐந்துக்குமேல் தேறாதா? அத்தனை பேர்களுமே அந்த வேலைக்கார சிறுமிக்கு பம்பரக் கயிறுகள்தான்.

ஒருவர் மாற்றி ஒருவர் வேலை சொல்லி ஆட்டுவிப்பர். ஒரே நேரத்திலேயே கூட பலரின் கட்டளைகளை ஏற்றுச் செய்வதறியாது திகைத்து நிற்பாள் அச்சிறுமி. கைக்குழந்தை உள்ள வீடு என்றால் குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் தூக்கிச் சுமந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர வேண்டும்.

அவர்கள் விளையாடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, விளையாட்டை வேடிக்கை பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் கேளிக்கை தேடி வெளியில் சென்றால் வீட்டுக்கு காவலாய் இருக்க வேண்டும்.

அதே வயதுடைய நம் குழந்தை பெரிய பள்ளியில் படிக்கிறது. விதவிதமாய் ஆடை அணிகிறது. பூப்பந்து விளையாடுகிறது. திரைப்படம், கடற்கரை, கேளிக்கைத்தலங்கள் என்று அழைத்துச் செல்கிறோம். சிரித்து மகிழ்கிறது. சிறுவேலைகூட ஏவ மாட்டோம்.

இத்தனை இன்பங்களையும் தொலைத்துவிட்டு அக்குழந்தை நம் உருட்டல், மிரட்டல்களுக்கு அடிபணிந்து மிரளுகிறது. அத்தனைக்கும் ஒரு பாராட்டாவது வழங்குகிறோமா? அப்படியே பாராட்டிவிட்டாலும் கூட அது மேலும் வேலை செய்ய வைக்கும் உத்தியாகவே இருக்கும்.

ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். அங்கும் கூட அதிகாரி தாண்டவமாடும் நிலை உண்டு.

குழந்தைகளை ஏழ்மை வாட்டுகிறது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பசி அரக்கனின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை சோற்றுக்காக அவர்களை வதைக்க நாம் துணியலாமா? நாம் நல்லவர்கள்தான். இது தீமை என்பதை உணராமல் செய்து விடுகிறோம். வேண்டாம் அந்த காட்டு நிர்வாகம்! பிஞ்சுக் குழந்தைகளிடமா நம் மேலாண்மையைக் காட்டுவது!

மற்ற குழந்தைகளைப்போல் அவர்கள் கற்க, விளையாட, நடக்க, சிரிக்க, உண்ண, உறங்க உரிமை உள்ளது.

உண்மையைப் புரிந்து கொண்டவர்களாயின் இனி நாம் குழந்தைகளை வேலைக்கு வைக்க மாட்டோம். ஒருவேளை வாய்ப்புக் கிடைத்தால் அக் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தையையாவது நம் குழந்தையைப் போலவே கருதி மேற்கண்ட உரிமைகளை அக்குழந்தையும் அனுபவிக்க வழிவகை செய்யும் பொறுப்பை ஏற்கலாமல்லவா!

(இன்று சர்வதேச குழந்தைத் தொழிலாளர் தினம்).

Posted in abuse, Child, Children, Concern, Day, Employment, Exploit, Exploitation, Home, Household, International, Kid, Labor, Labour, Poor, Rich, Society, Worker | Leave a Comment »