Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஏப்ரல் 27th, 2007

Raman Raja – Blasphemy on National Symbols, Flag, Anthem

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

நெட்டில் சுட்டதடா…: கொடியைக் கிழித்த குமரன்!

ராமன் ராஜா

தொழிலதிபர் நாராயண மூர்த்தியை அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ஏற்றவர் என்று நேற்றுத்தான் பன்னீர் தெளித்தார்கள்; இன்று அவரையே தேசத் துரோகி என்று வெந்நீர் தெளிக்கிறார்கள். தங்கள் நிறுவன விழாவில் தேசிய கீதத்தை இசைப்பது பற்றி அவர் உச்சரித்த ஒரே ஒரு வார்த்தைதான் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது. நெட் முழுவதும் மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் மிளகாய் பஜ்ஜி விவாதங்கள் நடக்கின்றன. “”மகாகவி தாகூர் இயற்றிய தேசிய கீதத்தின் மாண்பு என்ன, மகிமைதான் என்ன? அதைக் காதில் கேட்டவுடனே ஒவ்வொரு குடிமகனுக்கும் முடியெல்லாம் சிலிர்க்க வேண்டாமா, சிலிர்க்காத மண்டைகளை மொட்டை அடித்துக் கலர்ப் புள்ளி குத்தவேண்டும்” என்கிற ரீதியில் ஓயாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாணாவை நாடு கடத்த வேண்டும் என்றுகூட ஒரு கோரிக்கை எழுந்திருக்கிறது. இதில் கன்னட -அகன்னட சர்ச்சை வேறு. (பாலிடிக்ஸ் விளையாடிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறதே!) மற்றொரு பக்கம், ஜமைக்காவிற்குப் போன சச்சின் டெண்டுல்கர் மீது ஒரு குற்றச்சாட்டு. மூவண்ணக்கொடியின் நிறத்தில் செய்யப்பட்டிருந்த கேக் ஒன்றைக் கத்தியால் வெட்டினார் என்று வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிரிக்கெட்டில் சப்பை அடி வாங்கியிருக்கிறார்கள்; போதாததற்கு இது வேறு.

தேசியச் சின்னங்கள் -அவற்றின் அவமதிப்பு -அதற்காகக் கடும் தண்டனை என்பது மோசிகீரனார் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. ஏழைப் புலவர் பாவம், வெயிலில் நடந்து வந்த களைப்பில் முரசு வைக்கிற கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீர முரசுக்கு இப்படி ஓர் அவமதிப்பா என்று கோபித்த மன்னன், உடை வாளை உருவியே விட்டான். நல்ல வேளையாகத் தூங்கினவர் தமிழ்ப் புலவராக இருந்து, மன்னனும் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் கீரனார் கீறப்படாமல் தப்பினார்.

வருடம்: 1862. அமெரிக்காவில் உள் நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். நியூ ஆர்லீன்ஸ் மாநிலம், தனி நாடு போர்க்கொடி தூக்கியிருந்தது. கலகத்தை அடக்குவதற்கு மத்திய அரசு தன்னுடைய ஆள் படை அம்பு எல்லாவற்றையும் அனுப்பியது. ராணுவம் வந்ததும் முதல் வேலையாக முனிசிபாலிட்டி, நாணய சாலை போன்ற அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றி அவற்றின் உச்சியில் அமெரிக்க தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதைக் கண்டு பொறுக்காத மக்கள் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதில் வில்லியம் மம்ஃபோர்ட் என்பவர் உணர்ச்சி வேகத்தில் கட்டடத்தின் மீது ஏறி அமெரிக்கக் கொடியைக் கீழே இறக்கினார். நிமிஷ நேரத்தில் கொடி கூட்டத்தின் கையில் சிக்கிச் சுக்கு நூறாகிவிட்டது. குச்சிதான் பாக்கி! கொடியின் மாண்பைக் குலைத்த குற்றத்துக்காக ராணுவ கோர்ட் ஒரு சட்டு புட்டு விசாரணை நடத்தி, மம்ஃபோர்டை அதே இடத்தில் தூக்கில் போட்டது. ஆனால் பிறகு மக்கள் மம்ஃபோர்ட்டை விடுதலைப் போராட்டத்தின் சின்னம், கொடியைக் கிழித்தெறிந்த குமரன் என்று தியாகிப் பட்டம் கட்டி மலர்வளையம் வைத்தார்கள்.

அறுபதுகளில், வியட்நாமின் உள் நாட்டுச் சண்டையில் வீம்புக்காகத் தலையிட்டு குண்டு மழை பெய்து கொண்டிருந்த அநியாயத்தை எதிர்த்து அமெரிக்காவிலேயே பலர் போராட்டம் நடத்தினார்கள். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பற்பல தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களில் கொடியைச் சேதமாக்கினால் சிறைத் தண்டனை கொடுக்கச் சட்டம் உண்டு.

அப்படியே ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து 1984-க்கு வருவோம். ஜனாதிபதி ரீகனின் கொள்கைகளை எதிர்த்து டல்லாஸ் நகரில் ஓர் அரசியல் பேரணி. வழக்கமான வீர உரைகள், வசவு உரைகள் எல்லாம் முடிந்ததும் மங்களம் பாடும் விதத்தில் ஓர் அமெரிக்கக் கொடியைக் கொளுத்தினார் ஜோயி ஜான்சன் என்பவர். கையும் கொடியுமாக அவரைப் பிடித்துக் கொண்டு போய் கேஸ் போட்டார்கள். கீழ்க் கோர்ட்டில் ஜான்ஸனுக்கு ஒரு வருடம் சிறை, இரண்டாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பிறகு ஜான்சன் வழக்கு ஹை கோர்ட்டுக்கு வந்ததும் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது: தேசியக் கொடியை எரிப்பதும் குடி மக்களின் கருத்து சுதந்திரத்தில் ஒரு பகுதிதான் என்று கூறி அங்கே ஜான்சனை விடுதலை செய்துவிட்டார்கள்!

இதைக் கேட்டு தேச பக்தர்கள் வெகுண்டெழுந்து சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனார்கள். சுப்ரீம் கோர்ட்டும், இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது மக்களுடைய பேச்சுரிமையின் ஒரு பகுதிதான் என்று சொல்லிவிட்டது. அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் (ஊண்ழ்ள்ற் ஹம்ங்ய்க்ம்ங்ய்ற்) இதைத்தான் வலியுறுத்துகிறது: இந்தச் சட்ட விதியின் கம்பீரமான எளிமையைக் கவனியுங்கள்: “”பொது மக்களின் பேச்சுரிமையைக் குறைக்கும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றாது.” அவ்வளவுதான்!

அரசியல்வாதிகளின் -அதாவது அமெரிக்க அரசியல்வாதிகளின் -வழக்கம் என்னவென்றால், சுப்ரீம் கோர்ட் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தால் அதை கான்சல் செய்யும் விதமாக அரசியல் சட்டத்தையே மாற்ற முற்படுவது. அன்று முதல் இன்று வரை அவ்வப்போது கொடி எரிப்புத் தடுப்பு சட்டம் கொண்டு வர அவர்களும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் நிறைந்த கீழ் சபையில் சட்டம் பாஸôகிவிடுகிறது. அறிவு ஜீவிகள் நிரம்பிய செனட் மேல் சபை ஒத்துக் கொள்ளாததால் இந்த முயற்சியில் காற்று இறங்கிவிடுகிறது. பழமைவாதிகள், புதுமை விரும்பிகள், மிகவும் புதுமைவாதிகள் என்று பல பேர் இதில் தலையிட்டுக் குட்டையைக் குழப்பி மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன மேற்கத்திய நாகரிகத்தில் தனி மனித சுதந்திரம்தான் கடவுளாக மதிக்கப்படுகிறது. “”ஒரு துணிக் கொடியை விடப் புனிதமானது தனி ஒருவனின் சுதந்திரம். அமெரிக்கக் கொடியே அந்தச் சுதந்திரத்தின் அடையாளச் சின்னம்தான். கொடியை அவமதித்தார் என்ற காரணத்துக்காக ஒரு குடிமகனைச் சிறையில் போட்டால், அந்தக் கொடியே அவமானத்தில் கண்ணீர் வடிக்கும்” என்கிறார்கள் புதுமைவாதிகள். “”அமைதியான முறையில் நடத்தப்படும் பேச்சு, எதிர்ப்பு, எரிப்பு எல்லாம் பிரஷர் குக்கரில் இருக்கும் பாதுகாப்பு வால்வு மாதிரி. அதை அடைத்துவிட்டால் தீவிரவாதம்தான் வெடிக்கும். தேசபக்தி உள்பட எதையும், யார் மீதும் திணிக்காமல் இருப்பதுதான் உண்மையான சுதந்திரம்”என்பது அவர்கள் வாதம்.

1990-ல் சில மாநிலங்களில் வேறு ஒரு விவகாரமான சட்டம் கொண்டு வந்தார்கள்: பப்ளிக்கில் நாலு பேர் சேர்ந்து ஒருவனுக்கு தர்ம அடி போட்டால், சாதாரணமாக அது கிரிமினல் குற்றம். ஆனால் அடிக்கப்பட்டவன் தேசியக் கொடியைக் கொளுத்தியதற்காக மக்கள் உணர்ச்சி வேகத்தில் அவனை அடித்துவிட்டால், வெறும் ஐந்து டாலர் அபராதத்துடன் விட்டுவிடலாம் என்பது இந்தச் சட்டம். “கொடியை எரிக்கிறானா, அடி சாத்து!’ என்று குறிப்பிடப்படும் இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பலர் கொடியை எரித்தார்கள். அவர்கள் அடி வாங்கினார்களா இல்லையா என்று தகவல் இல்லை.

ஆஸ்திரேலியாவில் சில மாணவர் இயக்கங்கள், கொடியை எரிக்க நினைப்பவர்களுக்கு வசதியாக அட்டை டப்பாவில் டான்டெக்ஸ் பனியன் ஜட்டி விற்பது மாதிரி ஒரு பாக்கெட் தயாரித்திருக்கிறார்கள். ஒரு தேசியக் கொடி, கற்பூர வில்லை, வத்திப் பெட்டி எல்லாம் கொண்ட திடீர் கொடி எரிப்பு கிட்! இந்த மாதிரியெல்லாம் தேசத் துரோகத்தை ரெடிமேடாக டப்பாவில் அடைத்து விற்கக் கூடாது என்று போலீஸ் வந்து பிடுங்கிப் போனார்கள். உடனே ஆஸ்திரேலிய அறிவு ஜீவிகளும் கலைஞர்களும் கூட்டாகச் சேர்ந்து “”இது என்ன காட்டுமிராண்டித்தனமான சென்சார்?” என்று சர்க்காரைக் கண்டித்தார்கள்: “”நான், என் ஊர், என் தாய் நாடு என்பதெல்லாம் ஒரு விதத்தில் ஜாதி மதச் சண்டை மாதிரிதான். குறுகின கண்ணோட்டத்தில் வரும் வியாதிகள். நாட்டுப்பற்று என்பது கொஞ்சம் பெரிய ரேஞ்சில் நடக்கிற ஜாதி வெறி; அவ்வளவுதான். உலகமே ஒரு நாடு, எல்லாரும் ஓர் இனம் என்ற பரந்த பார்வை வர வேண்டுமென்றால் முதலில் நம் அசட்டு தேச பக்தியைத் துடைத்து எறிய வேண்டும்…” என்ன இது, சிந்திக்க வைத்து விட்டார்களே!

இராக்கில் தினம் தினம் யாராவது ஒரு கோஷ்டி அமெரிக்கக் கொடியைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது அன்றாடச் காட்சி. ஆனால் அரசியலில் தீவிர எதிர்க் கட்சியினர் கூட இராக்கின் தேசியக் கொடியை அவமதிக்கத் துணிய மாட்டார்கள். காரணம், கொடியில் அல்லாவின் புனிதப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதுதான். (தன் கைப்பட இந்த வாசகங்களைச் சேர்த்துக் கொடியின் டிசைனை மாற்றியவர் சதாம் ஹுசேன்.) இதே மாதிரி காரணத்தால், சவூதி அரேபியாவிலும் கொடியைக் கிழித்தால் கையே இருக்காது!

இப்போது லேட்டஸ்ட்டாகக் கொடி அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர் வேறு யாருமல்ல, ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்தான்! ஆஸ்திரியாவுக்குப் போயிருந்த போது அங்கே ஆட்டோகிராப் கேட்டவர்களுக்கெல்லாம், அவர்கள் கையில் வைத்திருந்த சின்னஞ் சிறிய அமெரிக்கக் கொடியின் மீது ஜோராகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். கொடியின் மீது கிறுக்குவதும் சட்டப்படி குற்றம்தான். இதற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி இருக்கிறது. ஆனால் புஷ்ஷுக்கு எப்போதுமே அவ்வளவாக விவரம் பற்றாது என்பதால், இதுவும் அவருடைய தினசரி சொதப்பல்களில் ஒன்று என்று எல்லாரும் மன்னித்துவிட்டார்கள்.

Posted in Anthem, Bush, Dinamani, Flag, Infosys, Islam, Kathir, Narayana Murthy, Narayanamoorthy, Narayanamurthy, National, President, Raman Raja, Symbols, USA | Leave a Comment »

No Smoking – Healthcare advisory & Law

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

புகைக்கப் புகைக்க…

உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.

புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.

இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.

Posted in Anbumani, cancer, Cigar, Cigarette, Enforcement, Freedom, Govt, Healthcare, Law, Passive, pipe, Public, Rajini, Rajni, smoking | Leave a Comment »

Experienced Intelligence – Basis, Facts, Research, Analysis, Observations

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்


எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?

பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.

பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.

அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.

மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.

இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.

ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).

Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »

Saudi Arabia arrests 170 suspected Al Qaida militants

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

சௌதியில் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் கைது

 

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 170க்கும் அதிகமானோரைத் தாம் கைது செய்துள்ளதாக சௌதி அரேபியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கான விமான ஓட்டிகளாக பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சில வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான, இந்தச் சந்தேக நபர்கள், சௌதியின் பெற்றோலிய கிடங்குகள், முக்கியஸ்தர்கள் மற்றும் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற இராணுவத் தளங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று சௌதி அரேபிய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

இந்த தீவிரவாதிகள் விமான ஒட்டிக்கான பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

ஆயுதங்களும் பல மில்லியன் டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாகக் குறைந்திருக்கின்ற போதிலும், கடந்த பல வருடங்களாக சௌதி அரேபியா அல் கைதாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.


முக்கிய அல் கைதா சந்தேக நபரைக் கைது செய்ததாக அமெரிக்கப் படைகள் அறிவிப்பு

இராக்கில் அமெரிக்கப் படையினர்
இராக்கில் அமெரிக்கப் படையினர்

இரானில் இருந்து தனது சொந்த நாடான இராக்குக்குத் திரும்பிவர முயற்சித்த, முக்கிய அல் கைதா செயற்பாட்டாளர் ஒருவரைத் தாம் பிடித்துள்ளதாக அமெரிக்க இராணுவ நிர்வாகம் கூறுகிறது.

அப்ட் அல் ஹதி அல் இராக்கி என்னும் அந்த நபரைத் தாம், குவாண்டனாமா தடுப்பு முகாமுக்கு மாற்றியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அவர் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், பாகிஸ்தானின் அதிபர் முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிக்காக திட்டமிட்டார் என்றும் பெண்டகன் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தின் சார்பில் பேசவல்ல் ஒருவர் தெரிவித்தார்.

இவர் குறித்த தகவல்களுக்காக அமெரிக்கா ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானமும் அறிவித்திருந்தது.


இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை

இராக்கில் தேடுதல் வேட்டைகள்
இராக்கில் தேடுதல் வேட்டைகள்

இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க தாம் மிகப்பெரும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ள்து.

தலைநகரின் வடக்கேயும், மேற்கேயும் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் வேட்டைகளில் வன்மைவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 72 பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

இன்னொரு வேட்டையில் நைட்ரிக் அமிலம் கொண்ட பெரிய பீப்பாய்கள் இருபதும் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன.


இராக்கில் உள்ள அல் கைதா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது என்று இராக் உள்துறை அமைச்சு கூறுகிறது

இராக்கில் உள்ள அல்கைதா அமைப்பின் தலைவரான, அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இராக்கிய உள்துறை அமைச்சு கூறுகிறது.

இது பற்றி பிபிசியிடம் பேசிய பேச்சாளர் ஒருவர், அமைச்சின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆதாரம் ஒன்று களத்தில் இருந்து இதனை உறுதி செய்கின்ற போதிலும், அமைச்சின் அதிகாரிகள் எவரும் சடலத்தையோ அல்லது ஏனைய ஆதாரங்களுக்கான பொருட்களையோ பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பாக்தாதிற்கு வடக்கே தீவிரவாதிகளுக்கு இடையிலான மோதல் ஒன்றில் அபு அயூப் அல் மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டனர் என் அமைச்சுக்குக் கூறப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும், சடலம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

அபு முஸாப் அல்- சர்காவி அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டதை அடுத்து, அல் கைதாவின் தலைவராக வந்த அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டொலர்கள் சன்மானம் அறிவித்திருந்தது.


Posted in Al Arabiya, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, grenades, Gulf, Iran, Iraq, Militants, Saudi, Saudi Arabia, Terrorism, terrorist, Weapons | Leave a Comment »

Russia Rebukes Estonia for Moving Soviet Statue

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

எஸ்டோனிய ஞாபகார்த்த சின்னம் அகற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை என்கிறது ரஷ்யா

ரஷ்ய இன ஆர்ப்பாட்டக்காரர்கள்
ரஷ்ய இன ஆர்ப்பாட்டக்காரர்கள்

எஸ்டோனியாவின் தலைநகர் டலினில் உள்ள செஞ்சேனையின் இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னத்தை அங்கிருந்த நகர்த்த அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கான பதிலாக, கடுமையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜை லாவ்றோ கூறியுள்ளார்.

அந்தச் சிலை அங்கிருந்து நகர்த்தப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக, பெரும்பாலும் ரஷ்ய இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பால்டிக் நாடான எஸ்டோனியாவுடனான இராஜதந்திர உறவுகளை ரஷ்யா முறித்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை, அதிபர் பூட்டினைக் கேட்டுள்ளது.

ரஷ்யா தனது பிரதிபலிப்பை நியாயமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்தக் கூடாது என்றும் எஸ்டோனிய வெளியுறவு அமைச்சர் உர்மாஸ் பாயிட் கூறியுள்ளார்.

Posted in Estonia, Memorial, Nazi, Nazism, Protest, Russia, Soldier, Soviet, Statue, Talinn, USSR, Violence, War, war memorial | Leave a Comment »

SC’s nod to Maharashtra for barrage across Godavari

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.

கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

————————————————————————————–

சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி

ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.

புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.

நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Conflict, Court, Dam, Districts, Drought, Environment, Famine, Floods, Forests, Garbage, Godavari, Godavari Water Disputes Tribunal, GWDT, Irrigation, Issue, maharashtra, Mountains, Narmada, Narmadha, Pollution, Rain, River, SC, Scarcity, Sriram Sagar, Supreme Court, Telengana, Telungana, Tribunal, Waste, Water | 1 Comment »

Mahindra and Mahindra plans to shift its manufacturing plant from AP to TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

ஆந்திரத்தில் தொடங்கவிருந்த மோட்டார் ஆலையை தமிழ்நாட்டுக்கு மாற்றுகிறது மஹீந்திரா நிறுவனம்

சங்கா ரெட்டி, ஏப். 27: ஆந்திரத்தின் மேடக் மாவட்டத்தில் சஹீராபாதில் அமைக்கவிருந்த மோட்டார் வாகன தயாரிப்பு ஆலையை, தமிழ்நாட்டின் ஸ்ரீ பெரும்புதூருக்கு மாற்ற மஹீந்திரா மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

இந்த ஆலையை ஆந்திரத்திலேயே தொடங்குமாறு ஆலை நிர்வாகத்திடம் மன்றாடி கேட்டுக் கொள்வது என்ற முடிவை ஆந்திர தொழில்துறை அமைச்சகம் எடுத்திருக்கிறது.

2004-ல் ஆந்திரத்தில் காங்கிரஸ் அரசு ஏற்பட்டவுடன், மஹீந்திரா ஆலை நிறுவனம் கனரக, நடுத்தர ரக எடையுள்ள மோட்டார் வாகனங்களைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்தது. அதற்காக சில அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டது.

ஆந்திர அரசும் அதனுடன் பேசி, அது கேட்ட எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தது. ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் முக்கிய வசதிகளை அதனால் செய்து தர முடியாமல் இருப்பதால் ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகிலேயே ஆலையைத் தொடங்க முடிவு செய்திருக்கிறது.

கேட்ட வசதிகள் என்ன?

1. ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் வீதம் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலவசமாக தண்ணீர்,

2. விற்பனை வரிச் சலுகைகள்,

3. ஒரு யூனிட் 2 ரூபாய் என்ற விலையில் தரமான, தடையற்ற மின்சார சப்ளை,

4. 4 வழிச்சாலை,

5. சஹீராபாதுக்கும் ஹைதராபாதுக்கும் இடையில் உயர் வேக புறநகர் மின்சார ரயில் வசதி,

6. இப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துதல்,

7. தொழிலாளர்கள், அதிகாரிகளின் குழந்தைகள் படிக்க தரமான பள்ளிக்கூடங்களை நிறுவுதல் ஆகியவை அந் நிறுவனம் முன்வைத்த கோரிக்கைகளாகும்.

ஆந்திர அரசுடன் கையெழுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம்கூட தயாராகிவிட்டது. ஆனால் ஆந்திர அரசு ஒப்புக்கொண்டபடி வசதிகளைச் செய்துதருவதில் தாமதமும் அதனால் சிக்கலும் ஏற்பட்டது. கோதாவரியிலிருந்து தண்ணீர் பெற்றுத்தருவதாக அரசு கூறியிருந்தது. அதற்கு வாய்ப்பு சுருங்கிவிட்டதால் பிரச்சினை தோன்றியது. எனவே மஹீந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனம் நெருக்குதலைத் தந்து, இந்த உடன்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டது. எனவே தமிழ்நாட்டில் ஆலையை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது.

Posted in Andhra, AP, Auto, Exports, Factory, Hyderabad, Incentives, Industry, infrastructure, Jeep, M&M, Mahindra, Mahindra and Mahindra, Manufacturing, Medak, Motor, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, State, TN, Zaheerabad | Leave a Comment »